search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேந்திரன் வாழைத்தார்"

    • நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.
    • இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

    இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.

    சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், மேட்டுப்பாளையம் நால்ரோடு பகுதியில் செயல்படும் ஏல மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.

    இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு உயிரிழப்புகளால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

    இதனால் மேட்டுப்பாளையம் ஏல மையங்களுக்கு கேரள வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து நேந்திரன் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, வழக்கமாக ஓணம் பண்டிகை காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கி செல்லும் கேரள வியாபாரிகள் வராததால் வாழைத்தார்கள் தேங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைத்தார் ரூ.45 முதல் ரூ.55 வரை விலை போகும்நிலையில், தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை கிடைக்கிறது என்றனர்.

    • நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 22 வரையும், கதளி கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரையும் விற்பனையானது.
    • நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் அதனை கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலையில் உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    அதனை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வியாபாரிகளும் மொத்த விலைக்கு வாங்கி செல்வது வழக்கம். இம்மையத்தில் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி, பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகளால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 22 வரையும், கதளி கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரையும் விற்பனையானது. மேலும் பூவன் ரூ.500 வரையும், தேன் வாழை ரூ.600, ரஸ்தாளி ரூ.400, ரோபஸ்டா ரூ.400, செவ்வாழை ரூ.600 வரையும் ஏலம் போனது. குறிப்பாக நேந்திரன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ ஒன்றிற்கு ரூ.35 வரை விற்பனையான நிலையில் தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனிடையே நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் அதனை கால்நடைகளுக்கு எடுத்து சென்று போடும் நிலையில் உள்ளது. இதனால விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.

    இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் சின்னராஜ் மற்றும் வெள்ளியங்கிரி கூறுகையில் நெல்லை, திருச்சி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கேரள வியாபாரிகள் நேரடியாக சென்று விவசாயிகளிடம் விலை பேசி எடுத்துச் செல்கின்றனர். இதனால் மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கேரளா வியாபாரிகள் வருவதே இல்லை. இதனால் நேந்திரன் வாழைத்தாரின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறினர்.

    ×