search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பறை ஊராட்சி"

    • 1½ ஆண்டுகளாகியும் ஜல்ஜீவன் திட்ட பணிகள் முடிவடையவில்லை
    • தற்போது 3.50 லட்சம் தண்ணீர் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிடைக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 5-வது வார்டுக்குட்பட்ட அம்மன்பு தூரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு ஏராளமான பொது மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

    25 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அதன்பின் பொதுமக்களுக்கு முறை வைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சத்தி சாலையில் இருந்து அம்மன்புதூர் கிராமத்தில் குடிநீர்விஸ்தரிப்பு செய்யவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கவும் ரூ.16.25 கோடி மதிப்பில் கடந்த 2020-21 ஆண்டு குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

    இதில் அம்மன்புதூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் பணிகளும், மேல்நிலை தொட்டியும் அமைக்கப்பட்டது. இந்த திட்டபணி தொடங்கி 1½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் பழைய திட்டத்தின் படி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வருகிறது.

    இதிலும் தலா ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு குடம் முதல் 2 குடம் மட்டுமே தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் பயனில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    அம்மன்புதூர் கிராமத்திற்கு அருகாமையில் தான் பவானி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளின் படி பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. ஆற்றின் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் உள்ளோம். ஜல்ஜீவன் திட்டத்தின் படி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தின் படி எடுக்கப்பட்ட திட்டமும் பயனில்லாமல் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தண்ணீரை அதிகரிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். மேலும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு 3ஆம் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதிலிருந்து வழியோர கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் மற்றும் திருப்பூர் மேயரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டிக்கு வர ஏற்பாடு செய்வதாக கூறியதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், ஊராட்சிக்கு தினசரி 7 லட்சம் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 3.50 லட்சம் தண்ணீர் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிடைக்கிறது. இதனால் ஊராட்சி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது என்றார்.

    ×