என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சந்திர பிரியங்கா"
- சந்திர பிரியங்கா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு துறைகளில் திருப்திகரமாக செயல்படாததால்தான் நீக்கப்பட்டதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
- கோவையில் நடந்த ஒய் 20 மாநாட்டில் பங்கேற்ற புதுவை கவர்னர், நான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மேடையிலேயே பாராட்டி பேசி சான்றளித்தார்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சந்திர பிரியங்கா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு துறைகளில் திருப்திகரமாக செயல்படாததால்தான் நீக்கப்பட்டதாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தது முதலில் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்திருந்த சந்திர பிரியங்கா முதலமைச்சருக்கு திருப்தி அளிக்கும் வகையில் செயல்படாததால் அவரை நீக்க எனக்கு பரிந்துரைத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சந்திர பிரியங்கா தனது துறைகளில் செய்த வளர்ச்சிப்பணிகள், சாதனைகள், மாற்றங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு 9 பக்க கடிதத்தை இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு துறைகளிலும், தான் செய்த வளர்ச்சி, மாற்றங்களை தனித்தனியாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசில் நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் சார்ந்து நான் மேற்கொண்ட பணிகளில் சிலவற்றை பொதுமக்கள் பார்வைக்கும், அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்களின் கவனத்திற்கும் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த ஒய் 20 மாநாட்டில் பங்கேற்ற புதுவை கவர்னர் தமிழிசை, நான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மேடையிலேயே பாராட்டி பேசி சான்றளித்தார்.
புதுவை அரசு துறைகளில் சிறப்பாக செயல்படும் ஒரு துறைக்கு வழங்கப்படும் விருதும் கடந்த 2022-ம் ஆண்டு சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட துறை என எனது தொழிலாளர் துறைக்கு கிடைத்தது என கூறியுள்ளார்.
இதுதவிர ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்டு, அதில் தான் செய்த மாற்றங்கள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார்.
- சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவி ஏற்க இருப்பது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை பணிகளில் தொய்வு இருந்ததால் முதலமைச்சர் அவரை நீக்க கோரினார் என துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சந்திர பிரியங்காவிற்கு பிரச்சினைகள் ஏதும் இருந்திருந்தால் என்னை சந்தித்து இருக்கலாம்.
சந்திர பிரியங்கா கூறியுள்ள காரணங்கள் வருத்தம் அளிக்கிறது. சாதி ரீதியான பிரச்சினை எதுவும் கிடையாது.
அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை பணிகளில் தொய்வு இருந்தால் முதலமைச்சர் அவரை நீக்க கோரினார்.
புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவி ஏற்க இருப்பது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
அமைச்சரவையில் இருந்து தான் நீக்கப்பட உள்ளதை அறிந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்.
- காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா தொகுதி மக்களுக்கு ஒரு கடிதம் வெளியிட்டார்.
அந்த கடிதத்தில், மறைமுகமாக காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், முதலமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுவையில் பெரும்பான்மையாக உள்ள 2 சமூகங்களான வன்னியர், தலித் சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், புதுவை மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர்.
அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத்திமிராலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்காலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் சமூகங்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதன்மூலம் காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
ஏனெனில் திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்தில் காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார்.
- புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அமைச்சரவை நடக்கிறது.
என்.ஆர்.காங்கிரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்களும், பா.ஜனதாவுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
இவர் நேற்று தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தான் தலித் என்பதாலும், பெண் என்பதால் பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
அதோடு, தனது பணி தொகுதி மக்களுக்கு தொடரும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் தனித்தனியாக அமைச்சர் சந்திர பிரியங்கா அனுப்பியுள்ளார்.
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு புதுவை சட்டமன்றத்தில் ஒரு பெண் அமைச்சராக இருந்தார்.
அதோடு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.எல்.ஏ.வும் சந்திர பிரியங்காதான். அவரும் ராஜினாமா செய்துள்ளது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார். சுமார் 10 நிமிடம் பேசிவிட்டு அவர் திரும்பி விட்டார்.
அப்போதே ரங்கசாமி, தனது அமைச்சரவையை மாற்றுவதற்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இதில் சந்திர பிரியங்காவுக்கு பதிலாக காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனை அமைச்சராக்க பரிந்துரை செய்துள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக கவர்னர் தமிழிசை மத்திய உள்துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதே நேரத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னர் தமிழிசை தேர்தல் நடைபெறும் தெலுங்கானா சென்றுவிட்டார். திருமுருகன் அமைச்சர் ஆவதற்கு மத்திய உள்துறையிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கவர்னர் தமிழிசை இன்று சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) மாலை திருமுருகன் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
புதுவை மாநிலம் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. இதில் மாகி, ஏனாமில் தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு காரைக்கால் வடக்கு தொகுதியில் திருமுருகனும், நெடுங்காடு தனி தொகுதியில் சந்திரபிரியங்காவும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். காரைக்கால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். காரைக்கால் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
இதனிடையே திருமுருகன் நேற்று மாலை கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை திருமுருகனுக்கு வழங்கினார்.
- யூனியன் பிரதேசமான புதுவையில் அமைச்சர் பதவி உயர்பதவிகளில் ஒன்று.
- சந்திரபிரியங்காவுக்கு சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலை ஏற்படுத்தியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திரபிரியங்கா தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
ராஜினாமா குறித்து தொகுதி மக்களுக்கு அவர் கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், தான் சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்ததாகவும், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்தே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்.
இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவுக்கு சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலை ஏற்படுத்தியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவையில் அமைச்சர் பதவி உயர்பதவிகளில் ஒன்று. அதிலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் புதுவை பெண் அமைச்சர் தனக்கு பாலின தாக்குதல் நடந்திருப்பதாக புகார் கூறியிருப்பது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு.
- பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் மீது ஊழல் புகார் ஏதும் இல்லை. அவர் வகித்த துறைகளுக்கு நியமிக்கப்பட்ட செயலர்கள், தலைவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என முதலமைச்சர், எம்.எல்.ஏ.க்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். எதற்காக அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார் என முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும்.
இது காரைக்காலுக்கான பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட்டது. பட்டியலின அமைச்சர் பதவியை வேறு யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? முதலமைச்சர் பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் என்ற பெருமை கிடைத்திருந்தது. எனவே இதை சிந்தித்து பார்த்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம்:-
அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு. தலித் பெண் என்ற காரணத்தால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். ஆதிக்க சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் அமைச்சராக தொடர முடியவில்லை என கூறியுள்ளது.
என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசுக்கு பெரும் அவமானம். 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி வாய்ச் சவடால் விடுகிறார். பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.
சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் எம்.எல்.ஏ.வுக்கும் வழங்கி அமைச்சர் பதவியை என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசு அதிகார பீடத்திலிருந்து இறக்கியுள்ளது. இது பெண் சமூகத்திற்கு எதிரான ஆணாதிக்க மன நிலையை பிரதிபலிக்கிறது. அமைச்சருக்கு ஏற்பட்ட அநீதி.
இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் தசரதா:-
ஒரு பெண் அமைச்சருக்கே இப்படிப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன? பாராளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்ட நேரத்தில் புதுவையில் 40 ஆண்டுக்கு பின் அமைச்சராக ஒரு பெண் இருப்பதை ஏற்க முடியாத ஆணாதிக்க அரசியல்வாதிகள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.
அமைச்சர் சந்திரபிரியங்காவின் ராஜினாமாவுக்கு காரணமான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்
- தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது.
- சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்கள் உள்ளனர்.
அவர்களில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
இவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன.
இந்த நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள்.
ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன்.
மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.
தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்.
சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா?
கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.
இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
எனக்கு இப்பதவியினைக் கொடுத்த முதலமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இச்சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள்.
அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும்.
மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும் அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியினை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.
எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய அரசுக்கு முழு ஆதரவு அளித்துவரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான எனது நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.
இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை, அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 6 மாத காலமாக தனது துறைகளில் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் புகார்களும் சென்றது. அவர் சந்திர பிரியங்காவை அழைத்து அறிவுரையும் கூறினார்.
ஆனால், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை ராஜ்நிவாஸில் சந்தித்தார். அப்போது கவர்னர் தமிழிசையிடம், அமைச்சர் சந்திர பிரியங்கா செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அவரை நீக்கவும் திட்டமிட்டதாகவும் தெரிகிறது. இதனால், பதவியை பறிக்கும் முன்பு, அமைச்சர் சந்திர பிரியங்கா முன்கூட்டியே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.
- போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைத்து பஸ் சேவையை தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனின் முயற்சியால் காரைக்கால்-கும்பகோணம் வரை செல்லும் தமிழக அரசு பஸ் சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பஸ் சேவை கருக்குங்குடியில் இருந்து தொடங்கப்பட்டது. புதிய பஸ் சேவையை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.
புதுவை அரசு போக்குவரத்து கழகத்தால் பஸ்களை இயக்க முடியாத சூழலில் தமிழக அரசு பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்