search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎஸ்எல்வி சி56"

    • ‘டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ள ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட்டுக்கு தகவல் தொடர்பு சேவை இடையூறு இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல் ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

    இதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்- சாட்' என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதனுடன், மேலும் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட், ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட 'சி-55' ராக்கெட் போன்று 'கோர்-அலோன்' என்ற நவீன பயன்பாட்டு முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு ஏஜென்சிகளின் செயற்கைக்கோள் பட தேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. அத்துடன் எஸ்.டி. என்ஜினீயரிங் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மல்டி-மாடல் மற்றும் துல்லியமாக பெறக்கூடிய படங்கள் மற்றும் 'ஜியோஸ்பேஷியல்' என்ற தொழில்நுட்ப துறைக்கு இதைப் பயன்படுத்த முடியும்.

    'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் ஆனது 'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கைத் துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அனைத்து வானிலை தகவல்களை பகல் மற்றும் இரவு நேரங்களில் வழங்க முடியும். துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டதாகும்.

    23 கிலோ எடை கொண்ட 'விலேக்ஸ்- ஏஎம்' என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், 'ஆர்கேட்' என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், 'எக்ஸ்ப்ளோரர்' என்ற ஒரு சோதனை செயற்கைக்கோள், 'ஸ்கூப்-2' என்ற 3யு நானோ செயற்கைக்கோள், கலாசியா-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் 6 செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ள 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட்டுக்கு தகவல் தொடர்பு சேவை இடையூறு இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். இஸ்ரோவின் அனைத்து முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். ஆப்டிகல் பைபர் கேபிள்கள் வழியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கேபிள்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை வழியே செல்கிறது.

    எனவே வரும் 26-ந்தேதி வரை சென்னை, பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட இஸ்ரோவுக்கான இணைப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். கேபிள் செல்லும் நெடுஞ்சாலைகளில், சாலை பராமரிப்பு பணி உட்பட எந்தப்பணிக்கும் பள்ளம் தோண்டுதல் தொடர்பான பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ராக்கெட் ஏவுவதற்கு எந்த தடையும் இல்லாத தகவல் தொடர்பு சேவையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களுக்கு இஸ்ரோ கடிதம் அனுப்பியுள்ளது.

    ×