search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஸ்து பாதிப்பு"

    • தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின.
    • புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து, நெல்லை மாவட்டம் மணி முத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப் பகுதியான மேல் கோதையாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில்விட்டனர்.

    அதன்பின்னர் அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை புகுந்தது.

    நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின.

    நேற்று அதிகாலையில், குடியிருப்பு பகுதிக்குள் யானைகளின் நடமாட்டத்தை அறிந்த தொழிலாளர்கள் அதி்ர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அரிக் கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இன்று காலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் நிற்பதை வனத்துறையினர் அறிந்தனர்.

    தற்போது அதனை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக ப்ரியா கூறியதாவது:-

    மாஞ்சோலை வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது அரிக்கொம்பன் யானை தான். வேறு யானை கூட்டம் எதுவும் வரவில்லை. தற்போது அந்த யானையின் கண்ணுக்கு மேலே மஸ்து உள்ளது. அது இருக்கும் வரை யானையின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக இருக்கும்.

    அதனால் தான் தற்போது அட்டகாசம் செய்து வருகிறது. இதுபோன்ற பாதிப்பு ஆண்டுக்கு ஒருமுறை வரும். அதனை சரி செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன்பின்னர் முண்டந்துறை அடர் வனப்பகுதிக்கு யானை விரட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×