search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைபராமரிப்பு"

    • சில விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • குழந்தைகளின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.

    கார் வைத்திருப்போர் குழந்தைகளுக்கான இருக்கையை தொடர்ந்து உபயோகிக்க நேர்ந்தால் இருக்கை சரிவர பொருத்தப்பட்டு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இவ்விதம் பொருத்தவில்லை எனில் குழந்தைகளின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக முதுகுத்தண்டுவடம் பாதிப்பு சிறு குழந்தையாக இருக்கும்போதே ஏற்படுவதற்கு கார்களின் இருக்கை முக்கியக் காரணம் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

    அதிலும் சில குழந்தைகளுக்கு மிகவும் மோசமான உடல் பாதிப்பு ஏற்பட காரணமாகிறது. குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையில் இருந்து தாயையும் சேயையும் வீட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்வதில் மிகுந்த அக்கறை செலுத்துவர். ஆனால் இந்த விஷயத்தில் அறிவுப்பூர்வமாக சில விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக காரின் இருக்கைகள் மிகவும் கடினமானவையாக உள்ளன.

    இந்த குறையை சரிசெய்ய தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகளை வைத்து எடுத்துச் செல்வதற்கான இருக்கையை காரில் பொருத்தித்தர ரோபோ எந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை கன கச்சிதமாக எவ்வித மனிதத் தவறும் இன்றி பொருத்துகின்றன. இதன் மூலம் குழந்தைக்கு எவ்வித உடல் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    இந்தியாவில் உள்ள கார்களில் குழந்தைகளுக்கான இருக்கைகளை சரிவரப் பொருத்தும் நுட்பம் பெரும்பாலான நிறுவனங்களில் வரவில்லை. ஆனால், விரைவில் வரலாம். இருந்தாலும், இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

     குழந்தைகளுக்கான இருக்கை என்பது கை குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமாக, கூடுதலாக வழங்கப்படும் இருக்கை ஆகும். கூடுதல் குஷின்களுடன் வழங்கப்படும் இந்த பிரத்யேக இருக்கை அமைப்பானது முன் இருக்கையின் பின்னால் பின் இருக்கைக்கு நேரெதிராக வழங்கப்படுகிறது.

    விபத்து ஏற்பட்டாலும், சாலை பயணம் முழுவதும் உங்கள் குழந்தை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை இது உறுதி செய்கிறது. இந்த இருக்கைகள் சீட்பெல்ட்களை பயன்படுத்தி இருக்கையில் கட்டப்படுகின்றன. குழந்தைகள் இருக்கைகள் விற்பனைக்கு கிடைகிறது. வேண்டுபவர்கள் தங்களது காருக்கு ஏற்ப வாங்கி பொருத்தி கொள்ளலாம். தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தை இருக்கைக்கையை பொருத்தி கொள்வதற்கான கொக்கியை வழங்குகிறது.

     அதுமட்டுமின்றி, குழந்தைகள் இருக்கைகள் பொருத்தப்படும் முன்பும், அதற்கு பின்னரும் இருக்கைகளுக்கு மத்திய பகுதி எந்தவொரு காரிலும் விபத்தின்போது குறைவாகவே பாதிப்பை சந்திப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. புள்ளிவிவரப்படி, இத்தகைய இருக்கைகள் விபத்துகளின்போது சுமார் 54 சதவீதம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான அபாயங்களை குறைப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
    • தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

    இது பள்ளி இறுதித்தேர்வுக்கான காலகட்டம். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. சாதாரண மாணவர்களைப் போல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

     மாற்றுத்திறனாளி மாணவர்களை 18 வகையாக வகைப்படுத்தி உள்ளனர். மெல்ல கற்போர், செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வை திறன் குறைபாடு உடையோர், ஆட்டிசம் குறைபாடு உள்ளோர், போலியோவால் பாதிக்கப்பட்டோர், வாய் பேச முடியாதோர் போன்றவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதுவதிலும், செய்முறைத்தேர்வு எழுதுவதிலும், சில சலுகைகளையும், விலக்குகளையும் அளிக்கிறது. அவை...

     1. தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது.

    2. சொல்லுவதை எழுதுவதற்கு தனியாக ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்தல்.

    3. மொழித்தாள்களான ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மாணவனின் விருப்பத்தின் பேரில் விலக்கு அளித்தல்.

    4. செய்முறைத் தேர்வுகளுக்கு விலக்கு கோருதல்.

    5. தேர்வின்போது உபயோகப்படுத்தப்படும் கால்குலேட்டர், அச்சடிக்கப்பட்ட அட்டவணைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்.

     6. தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக (ஸ்கிரைப்) தன்னுடைய தாய் அல்லது தந்தை அல்லது தனக்கு தனியாக கற்பித்த ஆசிரியரை நியமித்துக்கொள்ள உரிமை.

    7. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் எளிதில், தேர்வு எழுதும் அறையை அடைய சாய்தள வசதி.

    8. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே அவர்களின் பதிவெண் வருமாறு அமைத்துக் கொடுத்தல்.

     இதுபோன்ற பல சலுகைகளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட மாற்றுத் திறன் அலுவலகத்தை அணுகி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவக் குழு பரிந்துரைத்த மருத்துவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். இச்சான்றுகளை வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதி அனுப்பினால் அதற்கான அனுமதி பெற்று தரப்படும்.

    பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்போ, தேர்வு நடக்கும்பொழுதோ விபத்து நடந்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டாலும் அந்த மாணவர், மருத்துவரின் சான்றிதழின் பேரில் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பித்து, தான் சொல்லுவதை எழுதுகின்ற ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்து தேர்வு எழுதலாம்.

    • படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
    • குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும்.

    இது தேர்வுக்கான காலகட்டம். மற்ற சமயங்களை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருசில பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்ற வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு வாழ்நாள் மூலம் கற்றல் மீதான நாட்டத்தை மெருகூட்ட செய்யலாம். அதற்கான வழிமுறைகள்...

    தேர்வு சமயங்களை தவிர்த்து தினமும் குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. `இது படிப்புக்கான நேரம்' என்பது மனதில் ஆழமாக பதிய வேண்டும். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து படிப்பதன் மூலம் கற்றலை வலுப்படுத்தும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

     அமைதியான இடம்

    கவனச்சிதறல்கள் மாணவர்களை தடம் புரளச் செய்யும். எனவே இடையூறு ஏதும் இல்லாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய அமைதியான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அமைதியான சூழல் கவனத்தை ஒன்றிணைக்கும் திறனை வலுப்படுத்தும். புரிதலை மேம்படுத்தும்.

    கற்றல் நுட்பங்கள்

    எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்து படிக்கக்கூடாது. ஒரு பாடத்தை படிப்பதற்கு முன்பு அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை குறிப்பெடுக்க பழக வேண்டும். பின்பு அந்த குறிப்புகளில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கி எழுத வேண்டும்.

    அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆசிரியரிடமோ, சக மாணவர்களிடமோ கேள்வி எழுப்பி தெளிவு பெற வேண்டும். இத்தகைய செயல்முறை கற்றல் நுட்பங்களை பின்பற்றுவது பாடம் மீது ஆழமான புரிதலை ஏற்படுத்தும். சிந்தனை திறனை வளர்க்கும். திறம்பட தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும்.

    சிறிது நேர ஓய்வு

    தினமும் குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காக ஒதுக்கி, தொடர்ந்து படிக்கும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். படிப்புக்கு இடையே 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மீண்டும் படிப்பை தொடர்வது மன ரீதியாக புத்துணர்ச்சி பெற உதவும். படிப்பின் மீது முழு கவனத்தையும் திருப்புவதற்கு வித்திடும்.

    ஊட்டச்சத்து உணவு

    நாள் முழுவதும் இடை இடையே போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும். படிப்புக்கு இடையே சத்தான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக அமைய வேண்டும். அவை மூளைக்கு ஊட்டமளித்து அதன் செயல்திறனை மேம்படுத்த உதவும். அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகப்படுத்தும்.

    போதுமான தூக்கம்

    நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆழ்ந்த தூக்கம் இன்றியமையாதது. மாணவர்கள் தினமும் போதுமான நேரம் தூங்கி எழ வேண்டும். நன்கு ஓய்வு எடுக்கும் மனம் கற்றல் விஷயங்களை மறக்காமல் நினைவில் தக்கவைத்துக்கொள்ளும்.

    பாராட்டு

    நேர்மறை எண்ணங்கள் ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் உருவாக்கும். எனவே பிள்ளைகளின் முயற்சிகளை அங்கீகரித்து கொண்டாடுங்கள். அவர்கள் படிப்பில் அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை சாதனையாக கருதி பாராட்டுங்கள்.

    யாரும் நிர்பந்திக்காமலேயே சுயமாக படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தெடுக்க அது உதவும். அவர்களாகவே குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்கு ஒதுக்கி விடுவார்கள். நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.

     பாடங்களை பிரித்தல்

    முழு ஆண்டுத்தேர்வுக்கு பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதிகளாக படித்து முடிப்பதை பெரிய பணியாக உணரலாம். அதில் கடினமான பகுதிகளை படிப்பது சிரமமானதாக, சவாலானதாக சில மாணவர்களுக்கு அமையலாம். ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்து, அதில் எளிமையான பகுதிகளை முதலில் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    கடினமான பகுதிகளை அதிகாலை வேளையில் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி தரம் பிரிப்பதன் மூலம் விருப்பமான பாடங்களை விரைவாக படித்து முடித்துவிட முடியும். அதனால் படிப்பது பெரும் சுமையாக தோன்றாது. இந்த அணுகுமுறை மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும். தினமும் படிக்க தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே படித்த பகுதிகளை மீண்டும் ஒருமுறை வாசிப்பது நினைவில் ஆழமாக பதிய உதவும். தேர்வை எளிமையாக எழுதுவதற்கு வழிவகுக்கும்.

    • இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    • 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    நாளை உடல் பருமன் தினம். இந்தியாவில் 1¼ கோடி இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    உலக அளவில் விஞ்ஞானிகளை கொண்ட `என்.சி.டி.' என்ற அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வில் ஈடுபட்டன. அதன் முடிவுகள், `லான்செட்' பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

    கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே உடல் பருமனும், குறைந்த எடை பாதிப்பும் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும். 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் இளம் வயதினராகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர்.

    இந்தியா உள்பட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் 1,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். எடை, உயரத்தை பயன்படுத்தி, `பாடி மாஸ் இன்டெக்ஸ்' கணக்கீடு அடிப்படையில், உடல் பருமன் கணக்கிடப்பட்டது.

    அதன்படி, 2022-ம் ஆண்டு உலக அளவில், 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரும், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது, 100 கோடிக்கு மேற்பட்டோர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர்.

    1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை, 2022-ம் ஆண்டில், 1 கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமனுடன் இருந்தனர். இவர்களில், 73 லட்சம்பேர் ஆண்கள், 52 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

    மேலும், இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 4 கோடியே 40 லட்சம் பெண்களும், 2 கோடியே 60 லட்சம் ஆண்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    1990-ம் ஆண்டில், 1.2 சதவீதமாக இருந்த உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், 0.5 சதவீதமாக இருந்த ஆண்கள் எண்ணிக்கை 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜித் எஸ்சாடி கூறியதாவது:-

    உடல் பருமனும், குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதலானவை. இந்த ஆய்வு, கடந்த 33 ஆண்டுகளில் இருவகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

    கடந்த 1990-ம் ஆண்டில், பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், இப்போது, பள்ளி செல்லும் சிறுவர்களும், இளம்வயதினரும் உடல் பருமன் கொண்டவர்களாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது.

    இருப்பினும், ஏழை நாடுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் கையாள ஆரோக்கியமான, ஊட்டச்சத்து கொண்ட உணவு தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரியசஸ் கூறியதாவது:-

    குழந்தை பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க வேண்டும். இதில், அரசுகளுக்கு மட்டுமின்றி தனியார் துறையினருக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அச்சமின்றி தங்களை வெளிப்படுத்தக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள்.
    • குழந்தைகளின் மகிழ்ச்சியிலும் வெற்றிகளிலும் கலந்து கொள்ளுங்கள்.

    உங்கள் குழந்தையுடன் ஒரு வலுவான, வெளிப்படையான உறவை உருவாக்குவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பதும் அவசியம். எனவே உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த நண்பராக இருப்பது எப்படி.? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    உங்கள் குழந்தை உங்களிடம் அச்சமின்றி தங்களை வெளிப்படுத்தக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள். அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுங்கள், அவர்களின் மகிழ்ச்சியிலும் வெற்றிகளிலும் கலந்து கொள்ளுங்கள். ஆனால் சில நேரங்களில் வேலை உள்ளிட்ட பல காரணங்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடைவெளி உருவாகலாம்.

    ஆரம்பத்தில், உங்கள் குழந்தையின் கருத்துக்கள், உணர்ச்சிகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை பற்றி கூறும்போது முன் கூட்டியே நீ இப்படித்தான் செய்திருப்பாய் என்று கருத்து சொல்லாமல், அவர்கள் கூறுவதை கவனமாக கேளுங்கள்.

     பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை உறுதிசெய்ய வேண்டும். இது குழந்தை பெற்றோர் இடையே சிறந்த தொடர்பை வளர்க்கிறது, பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை அனுமதிக்கிறது.

    அன்பாகவும் அனுதாபமாகவும் இருப்பது நேர்மையான உரையாடலை ஊக்குவிக்கும். உங்கள் குழந்தைக்கு நம்பகமானவராக இருப்பதன் மூலமும், தொடர்ந்து உதவி வழங்குவதன் மூலமும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் பாதுகாவலராக இருக்க முயற்சியுங்கள், அவர்களுக்கு தேவைப்படும்போது உங்கள் ஆதரவையும் அக்கறையையும் தயங்காமல் காட்டுங்கள்.

    உண்மையான ஆர்வத்துடன் உங்கள் குழந்தையின் பொழுதுபோக்கு மற்றும் விருப்பமான செயல்களில் அவர்களுடன் ஈடுபடுங்கள். இது உங்கள் பிணைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு தெரிவிக்கும். தேவைப்படும் போது வழிகாட்டுதலை வழங்கும் போது அவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நம்பகமான நபராக குழந்தைகளுக்கு அவர்களின் உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும், நம்பிக்கை மற்றும் உணர்ச்சி நுண்ணறிவை வளர்ப்பதற்கும் ஒரு இடத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தை தவறு செய்தால், உடனடியாக ஆலோசனை வழங்காமல், அவர்கள் தரப்பு கருத்தை கூறும் போது பெற்றோர் கவனமாக கேட்க வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒன்றாக இருக்கும் போது தரமான நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சிரித்துப் பேசி, கதைகளை பகிர்வதன் மூலம் நீடித்த நினைவுகளை உருவாக்குங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பது என்பது அவர்களைப் பற்றி அறிந்திருப்பது, அவர்களின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த ஒரு முயற்சியை மேற்கொள்வதையும் குறிக்கிறது. இது உறுதியான பெற்றோர்-குழந்தை உறவை உருவாக்குவதுடன், இந்த நட்பை வளர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆதரவாகவும் நம்பகமானதாகவும் இருக்கும் உறவுக்கான அடித்தளத்தையும் நீங்கள் அமைக்க முடியும்.

    உங்கள் குழந்தையின் சிறு முயற்சிகளை பாராட்டுவது, அவர்களின் வளர்ச்சி மனப்பான்மையை வளர்க்கிறது, விடாமுயற்சி மற்றும் வெற்றி மற்றும் தோல்விக்கான ஆரோக்கியமான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது. குழந்தைகள், குழந்தைகள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் நடத்தைக்கு உடனடி எதிர்வினைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

    அதே நேரத்தில் உங்கள் குழந்தைக்கான உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை வழங்குங்கள். இது நெகிழ்ச்சியான மற்றும் செழிப்பான பெற்றோர்-குழந்தை உறவுக்கு அடித்தளமாக அமைகின்றன என்பதில் சந்தேகமில்லை.

    • குழந்தைகள் முதல் பருவ வயது குழந்தைகள் வரை காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர்.
    • காய்கறிகளில் சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.

    பலவித வண்ணங்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பற்றிய விளம்பரங்களை நிமிடத்திற்கு ஒரு தரம் இடைவிடாது ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் கைவண்ணத்தில் சிறு குழந்தைகள் முதல் பதின் பருவ குழந்தைகள் வரை சத்தான காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர். இது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. இதில் இத்தனை சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.

    சத்து இல்லாத பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கும் குப்பை உணவுகளை உண்டு அந்த ருசிக்கு அடிமையான பின்பு காய்கறிகள் மற்றும் பழங்களின் சுவை பிள்ளைகளுக்கு பிடிக்காமலேயே போய் விடுகிறது. ஆனால், அதற்காக அப்படியே அவர்களை விட்டுவிட முடியாது. உறுதியான உடலுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் அவசியம். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

     1. முதலில் பிள்ளைகளை சாப்பிட வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும். தனக்கு பசி இல்லை என்று சொன்ன பின்பு அவர்களை வற்புறுத்த வேண்டாம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    2. சாப்பிடும்போது, முக்கியமாக டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டோ அல்லது செல்போனை பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை முதலில் இருந்தே ஊக்கப்படுத்தக் கூடாது. தட்டை பார்த்து சாப்பிடும்போதுதான் உணவின் சுவை தெரியும்.

    3. இரண்டு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு தனி தட்டு கொடுத்து குடும்பத்தினருடன் சேர்த்து அமர வைத்து உணவு தர வேண்டும். அப்பா, அம்மா மற்றும் பெரியவர்களின் தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் காய்கறிகளை பார்த்து குழந்தையும் சாப்பிட ஆரம்பிக்கும்.

     4. சில காய்களின் சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காது. காய்களின் வண்ணங்கள் மற்றும் அவை செய்திருக்கும் முறையை பார்த்தாலே அவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். கேரட், பீட்ரூட் போன்ற இனிப்பான காய்கறிகள் மற்றும் சுவையான உருளைக்கிழங்கு போன்றவற்றை சுலபமாக பிள்ளைகள் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால், புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான முறையில் அது இருக்க வேண்டும்.

    5. தட்டில் காய்களை பரிமாறும்போது நிறைய அளவு வைக்காமல் கொஞ்சமாக முதலில் வைக்க வேண்டும். அவற்றை சாப்பிட்டு முடித்த பின்பு அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

    6. சில அம்மாக்கள், 'நீ இந்த காய் சாப்பிட்டா சாக்லேட் தருகிறேன். பாப்கார்ன் தரேன். பிஸ்கட் தரேன்' என்று அவர்களை தவறான வழியில் ஊக்குவிப்பார்கள். கடமைக்கு அந்த காய்கறிகளை விழுங்கி விட்டு நொறுக்கு தீனிக்கு ஆசைப்பட்டு குழந்தைகள் நிற்கும். அந்த காய்களை பிடிக்காமல் போய்விடும்.

    7. சரியான நேரத்திற்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த நொறுக்கு தீனியும் குளிர்பானங்களும் கொடுக்கக் கூடாது. சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.

    8. காய்கறிகள் கூட்டு போன்றவற்றை பரிமாறும்போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை வைக்கக் கூடாது. அவற்றை எடுத்து உண்டு விட்டு காய்கறிகள் வேண்டாம் என்று பிள்ளைகள் தவிர்ப்பார்கள். எனவே அவற்றை தனியாகத் தருவதுதான் நல்லது.

    9. காய்கறி வாங்க கடைகள் அல்லது மார்க்கெட்டுக்கு செல்லும்போது உடன் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களையே காய்கறிகளை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம். காய்கறிகளை கண்களால் பார்க்கும்போது குழந்தைகளுக்கு அவற்றின் மீது ஒரு ஈர்ப்பு, விருப்பம் உருவாகலாம்.

    10. ஏழெட்டு வயது குழந்தை என்றால் அதை காய்கறிகள் நறுக்கும்போது உதவிக்கு அழைக்கலாம். மேல் தோல் சீவி விட்டு சிறிது சிறிதாக நறுக்கச் சொல்லி ஊக்கம் தரலாம்.

    11. கதை சொல்வது போல அதில் உள்ள சத்துக்களை பற்றி எடுத்துச் சொல்லலாம். கேரட் சாப்பிட்டால் நல்லா கண்ணு தெரியும். உன் முகம் பளபளப்பாகும். கீரை சாப்பிட்டால் மூளை நல்லா வேலை செய்யும், முடி வளரும் என்பது போல சொல்லலாம்.

    12. காய்கறிகள் செய்யும்போது இரண்டு விதமான காய்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு காய் பிடிக்காவிட்டால் கூட, இன்னொன்றை சாப்பிடச் சொல்லி சொல்லலாம்.

    13. காய்கறிகள் சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர காய்கறிகளை அவர்கள் உண்ணும் உணவில் சேர்த்து விட வேண்டும். பீட்ரூட், கேரட், கீரை பொரியல்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவற்றை சாதத்தில் கலந்து கொடுக்கலாம். தோசை ஊற்றும்போது பீட்ரூட் பொரியலையோ கேரட் பொரியலையோ தூவி தோசை செய்து கொடுக்கலாம். பார்க்க வண்ணமயமாக இருக்கும். சுவையாகவும் இருக்கும். அவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.

    14. வெரைட்டியாக காய்களை செய்து கொடுக்கலாம். காய்களை சூப்பில் போட்டுத் தரலாம். சப்பாத்தி ரோலில் காய்களை வேகவைத்துக் கொடுக்கலாம்.

    • பெற்றோர்கள் குழந்தைக்கு இடதுகை பழக்கம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள்.
    • குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள்.

    பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடதுகை பழக்கம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள். அதை தவறானது என கருதி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள். குழந்தைகளை வலுக்கட்டாயமாக இடதுகை பழக்கத்தில் இருந்து வலதுகை பழக்கத்துக்கு மாற்ற முயற்சிப்பது நல்லது அல்ல. இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல், உணர்ச்சி சமநிலை மற்றும் நடத்தை சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்பட நேரிடும். இதை பற்றிய மேலும் சில தகவல்கள் இதோ...

    உலக அளவில் 85 சதவீதம் பேர் வலதுகை பழக்கம் கொண்டவர்களாகவும், 15 சதவீதம் பேர் இடதுகை பழக்கம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

    இடதுகை பழக்கம் என்பது ஒரு சாதாரண மாறுபாடாகும். இடதுகை பழக்கம் உள்ள குழந்தைகளை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றும்போது கைகளை பயன்படுத்தி செய்யும் செயல்களில் அவர்களின் திறன் குறையும். குழந்தைகள் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறார்களோ, அதே கையால் குறிப்பிட்ட வேலைகளை செய்யும்போது விரைவாகவும். திறமையாகவும் செய்து முடிப்பார்கள்.

     இடதுகை பழக்கம் உள்ளவர்கள் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்திக்கவும், தங்களுடைய சூழ்நிலைகளை மாற்றியமைக்கவும் விரைவாக கற்றுக்கொள்கிறார்கள். படைப்பாற்றல், புத்திக்கூர்மை ஆகியவை இடதுகை பழக்கம் கொண்டவர்களிடையே இருக்கும் பொதுவான பண்புகளாகும்.

    பெரும்பாலான இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் ஏற்படுவது இல்லை. மரபியல் மூலமாகவே இடதுகை பழக்கம் உண்டாகிறது. இது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியதாகும். இதை அடிப்படையாகக் கொண்டே மூளையின் வளர்ச்சி வேறுபாடு அடைகிறது.

    வலது பக்க மூளையானது இடதுபக்க உடல் இயக்கத்தையும், இடதுபக்க மூளையானது வலதுபக்க உடல் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதன் அடிப்படையில் இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு அல்சர், மூட்டு வலி மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் அல்லது விரைவாக குணமடையலாம்.

    எழுதுவதைத் தவிர மற்ற வேலைகளுக்கு நாம் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே நம்முடைய பழக்கம் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் மற்ற வேலைகளை இரண்டு கைகளையும் சரிசமமாக பயன்படுத்தி செய்கிறீர்கள் எனில் நீங்கள் கலப்பு கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம்.

    கட்டாயப்படுத்தி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றும்போது சமநிலையற்ற உணர்ச்சிகள், மோசமான கையெழுத்து, படுக்கையில் சிறுநீர் கழித்தல், நகங்களைக் கடித்தல், கூச்சம், எதிர்மறையான நடத்தைகள், வாசிப்பதில் சிரமம், கற்றல் திறன் குறைபாடு, சுயக்கட்டுப்பாடு மற்றும் நினை வாற்றல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

    அதுமட்டுமல்லாமல் நரம்பியல் கோளாறுகள், மூளையின் அசாதாரண செயல்பாட்டுக்கும் வழி வகுக்கலாம். ஆகையால், சிறுவயதில் குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றுவதைவிட இரண்டு கைகளிலும் சமமாக அனைத்து வேலைகளையும் செய்யும்படி பழக்கலாம். கலப்பு கை பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். இது அவர்களின் ஆரோக்கியத்துக்கும். எதிர் காலத்துக்கும் நல்லது.

    • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.
    • குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்...

    * வைட்டமின் `ஏ' குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் `பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும், பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், ரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

    • பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும்.
    • காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பது நல்லதல்ல.

    குழந்தைகளுக்கு அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும். ஆனால் பல குழந்தைகள் பழங்கள் சாப்பிட ஆர்வம் காட்டமாட்டார்கள். பழத்துண்டுகளாக நறுக்கி கொடுத்தாலும் கூட சாப்பிட அடம்பிடிப்பார்கள்.

    எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் பலர் ஜூஸாக தயாரித்து கொடுப்பார்கள். பழங்களாக சாப்பிடுவதை விட ஜூஸாக பருகுவதற்கு குழந்தைகளும் விரும்புவார்கள். ஆனால் பழங்களுக்கு மாற்றாக எப்போதும் ஜூஸ் மட்டுமே கொடுக்கக்கூடாது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பது நல்லதல்ல.

    சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுப்பதும் தவறான பழக்கம். குழந்தைகள் ஜூஸ் பருகுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா?

    காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுப்பதுதான் சரியானது. குறிப்பாக காலை 11 மணி, பிற்பகல் 3 மணி அளவில் ஜூஸ் கொடுக்கலாம். தினமும் ஒரே வகையான பழ ஜூஸ்களை கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    சில வகை பழங்களை குழந்தைகள் சாப்பிட விரும்பாது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது.

    அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் பிடிக்காத பழங்களையும் சேர்த்து ஜூஸாக தயாரித்து கொடுக்கலாம். இரவில் ஜூஸ் கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழ ஜூஸ்களை இரவு நேரங்களில் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

    அதிலும் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது. அத்துடன் ஜூஸ் ரொம்ப குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு 10 மாதத்தில் இருந்தே ஜூஸ் கொடுக்கத் தொடங்கலாம். வயது அதிகரிக்க, அதிகரிக்க ஜூஸ் கொடுப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு பழங்களாக சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.

    • தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
    • நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கலாம்?

    ஆரோக்கியமாக, தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.

    குறிப்பாக, அவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும். அவர்களின் பச்சிளங்குழந்தைகள், ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரிப்புடன் இருக்க வேண்டும்; குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, போதுமான அளவு தாய்ப்பால் சுரத்தல் இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கக் கூடாது?

    புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகையிலைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் மற்றும் நிகோட்டின் மாற்று சிகிச்சையில் (Nicotinereplacement therapy) உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள், கடந்த 12 மாதங்களில் உறுப்புதானம் அல்லது ரத்ததானம் பெற்றவர்கள், மார்பகங்களில் முலையழற்சி (mastitis), பூஞ்சைத் தொற்று, ஹெர்பெஸ் (herpes simplex) அல்லது வேரிசெல்லா (varicella zoster) நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது.

    தாய்ப்பால் தானமளிப்பவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று ரத்தப் பரிசோதனை எடுத்த பிறகு, தாய்ப்பால் சேகரிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கே, தாய்மார்கள் தங்கள் விரல்களைக் கொண்டு Manual எஸ்பிரஸின் முறையிலோ, பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியோ, தாய்ப்பாலை அதற்குரிய கொள்கலனில் சேகரிப்பர். கொள்கலன் லேபிள் ஒட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேகரிக்கப்படும்.

    தானமளித்தவருக்கு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் சிபிலிஸ் நோய்த்தொற்று இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்த பிறகு, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால், Pasteurization-க்கு உட்படுத்தப்படும்.

     பாஸ்டுரைசேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலில் நுண்ணுயிர்க்கிருமிகள் உள்ளனவா என்பதை அறிய வளர்சோதனை (culture) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தாய்ப்பால் கொள்கலனில் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு, உறைவிப்பானில் 20 டிகிரி செல்சியசில் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 3 - 6 மாதங்கள் வரை, இவ்வாறு உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை உபயோகப்படுத்தலாம்.

    தீவிர பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படும்போது, உறைய வைக்கபட்ட தாய்ப்பாலுடைய கொள்கலன், குழாயின் மிதமான சுடுநீரில் காட்டப்பட்டு, நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாய்ப்பால், மூன்று மணி நேரத்துக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    சென்ற அத்தியாயத்தில், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தாய்ப்பால் வழியாக ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று ஏற்படக் கூடுமென்ற காரணத்தால்தான், தாய்ப்பால் தானமளிப்பவர்கள் இந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

     இந்த பரிசோதனைகள் நெகட்டிவ்வாக இருப்பின் மட்டுமே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பாஸ்டுரைசேஷன் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு உறைய வைக்கப்படும். பாஸ்டுரைசேஷன் செயல்முறையில், தாய்ப்பாலில் வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால், கொல்லப்பட்டுவிடும். அதன்பிறகு, வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது, உறுதியான பிறகுதான், தாய்ப்பால் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    எனவே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலின் மூலம் பச்சிளங்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைவு. பவுடர் பாலைவிட, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பலமடங்கு மேலானதாகும். எனவே கண்டிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம்.

    • பிலிருபின் என்ற மஞ்சள் நிறமியின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும்.
    • ரத்த சிவப்பணுக்கள் உடையும்போது பிலிருபின் மஞ்சள் நிறமி வெளிப்படுகிறது.

    பிறந்த குழந்தையின் ரத்தத்தில் பிலிருபின் என்ற மஞ்சள் நிறமியின் அளவு அதிகரிப்பதால் குழந்தையின் சருமம் மஞ்சள்நிறமாக மாறுவது 'நியோநேட்டல் ஜாண்டிஸ்' (Neonatal jaundice ) எனப்படுகிறது. நிறை மாதத்தில் பிறக்கும் 60 சதவிகிதக் குழந்தைகளுக்கும், குறைமாதத்தில் பிறக்கும் 80 சதவிகிதக் குழந்தைகளுக்கும் இதற்கான அறிகுறிகள் தென்படலாம்.

    முதிர்ந்த ரத்தச் சிவப்பணுக்கள் உடையும்போது பிலிருபின் என்ற மஞ்சள் நிறமி வெளிப்படுகிறது. இதை கல்லீரல் உருமாற்றம் செய்து மலத்துடன் சேர்த்து குடல்வழியாக உடலைவிட்டு வெளியேற்றுகிறது. மலத்துக்கு மஞ்சள் அல்லது பிளெயின் நிறத்தைத் தருவது இதுதான்.

     குழந்தை, தாயின் கருவில் இருக்கும் வரை தாயின் கல்லீரல் இந்த வேலையைச் செய்கிறது. எனவே குழந்தை பிறந்த முதல் 24 மணி நேரம்வரை பிலிருபின், மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் அளவுக்கு இருப்பதில்லை. குழந்தையின் கல்லீரல் மற்றும் குடல், திறம்பட இந்த வேலையைச் செய்ய சில நாள்கள் ஆகும்.

    குழந்தை பிறந்த 24 முதல் 72 மணி நேரத்தில் ரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகரிக்கும். பிறகு கல்லீரலும் குடலும் நன்கு செயல்பட ஆரம்பித்த பிறகு ஒரு வாரத்தில் இந்த அளவு தானாகக் குறைந்துவிடும். இதற்கு 'பிசியலாஜிகல் நியோநேட்டல் ஜாண்டிஸ்' என்று பெயர்.

    மாறாக மிக வேகமாக பிலிருபின் அளவு அதிகரித்து குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது அதை 'எக்ஸாஜிரேட்டடு பிசியலாஜிகல் ஜாண்டிஸ்' என்கிறோம். இந்த அளவு உடனடியாகக் குறைக்கப்படாவிட்டால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். குழந்தைக்கு மூளை பாதிப்பும், வலிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

     அதிகரித்த பிலிருபின் அளவைக் குறைக்க போட்டோதெரபி என்கிற சிகிச்சை முறை செய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை அதிகமுள்ள குழந்தைகளை மருத்துவ தரமுள்ள நீலநிற ஒளியில் குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து வைக்கும்போது பிலிருபின் சிதைந்து மலத்துடன் உடலைவிட்டு வெளியேறுகிறது. அதனால் மஞ்சள்காமாலை மட்டுப்படுகிறது.

    இந்த சிகிச்சை எளிமையானது, பக்க விளைவுகள் அற்றது. இதை சரியான நேரத்தில் செய்வதால் குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சை போன்றவற்றைத் தவிர்க்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துவிதமான மஞ்சள்காமாலைக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம்.

     பிறந்த 24 மணி நேரத்துக்குள் மஞ்சள் காமாலை ஏற்பட்டாலோ, அது ஒன்றிரண்டு வாரங்கள் தொடர்ந்தாலோ. வேறு காரணங்கள் கண்டறியப்பட்டாலோ, பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதித்து முழுமையான பரிசோதனையும் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

    • குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறை.
    • மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது.

    மாண்டிசோரி கல்வி முறை என்பது குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறையாகும், இது 1900-களின் முற்பகுதியில் மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது. மாண்டிசோரி முறையானது கற்றல், தனிப்பட்ட கவனம் மற்றும் குழந்தையின் இயல்பான வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

    இது குழந்தைகளுக்கு கற்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம், மேலும் அவர்கள் சுயமாகச் செயல்படுதல், ஆய்வு செய்தல் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழலைக் கையாளுதல் மூலம் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

    மாண்டிசோரி வகுப்பறைகளில், குழந்தைகள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஆர்வங்களைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட கல்விப் பொருட்களுடன் வேலை செய்கிறார்கள், மேலும் அவர்கள் அறையைச் சுற்றிச் செல்லவும் தங்கள் சொந்த வேகத்தில் வேலை செய்யவும் சுதந்திரமாக உள்ளனர்.

     சுதந்திரம், பொறுப்பு, கற்றல் மீதான காதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக பணியாற்றுகிறார்கள், ஒவ்வொரு குழந்தையையும் கவனித்து, தேவைப்படும்போது ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள்.

    மாண்டிசோரி அணுகுமுறையானது கலப்பு-வயது வகுப்பறைகள், சிறப்புக் கல்விப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியின் வேகத்திற்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

    மாண்டிசோரி கல்வியின் குறிக்கோள், குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் அன்பையும், அத்துடன் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான சமூக, உணர்ச்சி மற்றும் அறிவுசார் திறன்களையும் வளர்ப்பதற்கு உதவுவதாகும்.

    மாண்டிசோரி கல்வி முறையானது முறையான கற்பித்தல் முறைகளைக் காட்டிலும் குழந்தைகளின் இயல்பான ஆர்வங்கள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியது. ஒரு மாண்டிசோரி வகுப்பறை நடைமுறையில் கற்றல் மற்றும் நிஜ-உலகத் திறன்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

     மாண்டிசோரி கல்வி முறை:

    * இதன் கல்வி முறை முழுமையாக செய்முறை தொடர்பானது.

    * குழந்தைகள் தாமாகவே செயல்முறை மூலம் கல்வி கற்பர்.

    * குழந்தைகள் தனித்தனியாகவோ / குழுவாகவோ இணைந்து தாமாக கல்வி கற்பர்.

    நன்மைகள்

    * மாணவர் படைப்பாக்கத் திறன் கூடும்.

    * தாமாகவே புதிது புதிதாக குழந்தைகள் கற்பர்.

    பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்:

    * மொழி

    * கணிதம்

    * நடைமுறை வாழ்க்கை பயிற்சி

    * சமூகத்துடனான அணுகுமுறை

    * கலை

    * இசை-பலப்பல

    வயது முறை:

    * 0–18 வயது வரை

    * 0–3 வீட்டிலேயே இம்முறையில் கற்பிக்கலாம்.

    வகுப்பறைகள்:

    * பொதுவாக சாதாரண பள்ளிகளில் 16 வயது என்றால் 10 வது, 18 வயது என்றால் 12-வது என்ற அடிப்படையில் கற்பிக்கப்படும்.

    * மாண்டிசோரி பள்ளிக்கல்வி முறையில் ஒரே வகுப்பறையில் 3–6 வயதுடையவர்கள், மற்றொரு வகுப்பில் 6–9 வயதுடையோர், மற்றொரு வகுப்பில் 9–12 என்பது போல் வயதுக்கேற்ப பிரித்து கல்வி கற்பிப்பர்.

     பாடங்கள் தேர்வு

    இக்குழந்தை இப்பாடங்களைத்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தமக்கு பிடித்த பாடம் எதுவென்றாலும் அது கணிதமோ, அறிவியலோ, மொழியோ இன்ன பிற அவர்களுக்குப் பிடித்த வகுப்பில் அமர்ந்து அவர்கள் கல்வி கற்கலாம். ஆசிரியர்கள்

    * ஆசிரியர்கள் குழந்தைகளை கண்காணிப்பர்.

    * மாணவர் தாமாக கற்க அவர்களை வழிபடுத்துவர். அதுவும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதுபோல் அன்றி, எதுவாயினும் அதை குழந்தைகள் சுதந்திரமாக செய்ய அவர்களை அனுமதிப்பர். அதாவது கற்பிக்க மாட்டார்கள் ஆனால் அவர்களை செயல்படுத்தவிட்டு அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென நல்வழிப்படுத்துவர்.

    பிற பயிற்சிகள்

    நம் வீட்டில் நாம் ஒரு பொருளை எடுத்தால் அதை மீண்டும் அதே இடத்தில் தான் வைக்க வேண்டும் என்பதை அறிவோம். இம்முறையை அவர்களுக்கு பயிற்சியாக வழங்குவர். அதாவது, ஒரு பொருள் என்றால் அதை இங்குதான் வைக்க வேண்டும், சோப்பு என்றால் குளியலறை, புத்தகம் என்றால் கற்கும் அறை என எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்குதான் வைக்க, அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவர்.

    ×