search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து பேசி விட்டு அதன் பிறகு மத்தியக் குழுவினர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
    • வெள்ள சேத மதிப்பு விவரங்களை விரிவாக தயாரித்து மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தனர்.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ.) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் திமான்சிங், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விஜயகுமார், நிதித்துறை சார்பில் ரங்கநாத் ஆடம், மின்சாரத்துறை துணை இயக்குனர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் வந்திருந்தனர்.

    அவர்கள் நேற்று காலை தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு தென்சென்னைக்கு ஒரு குழுவும், வடசென்னை பகுதிக்கு மற்றொரு குழுவினரும் சென்று பார்வையிட்டனர்.

    பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, வியாசர்பாடி, கணேசபுரம், வடபெரும்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளை பார்வையிட்டனர்.

    இன்று 2-வது நாளாக மத்திய குழுவினர் இடம்பெற்றிருந்த சிவ்கரே, விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி அருகே உள்ள கழிவுநீரகற்று பம்பிங் ஸ்டேஷன் கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து வில்லிவாக்கம் அம்பேத்கர் நகர், சிட்கோ நகர், அம்பத்தூர் எஸ்டேட் சிட்கோ தொழிற்பேட்டை பகுதிகளை பார்வையிடுகின்றனர். அதன் பிறகு பாடி, கொரட்டூர் பகுதிகளுக்கு சென்று வெள்ள சேத பகுதிகளை பார்க்கின்றனர்.

    கொரட்டூரில் மழை நீர் புகுந்த வீடுகளை பார்த்ததுடன் வடக்கு அவென்யூ ரோடு, பம்பிங் ஸ்டேஷன், ஏரிக்கரை பகுதிகளுக்கும் சென்றும் பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி உயர் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ள சேதங்களை மறறொரு குழுவில் இடம் பெற்றிருந்த குணால் சத்யார்த்தி, திமான்சிங், ரங்கநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதலில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், நன்மங்கலம் ஏரி, சமத்துவ பெரியார் நகர், மூவேந்தர் நகர், பாரதியார் நகர், குட்வில் நகர் பகுதிகளை பார்வையிட்டனர்.

    இடுப்பளவு தண்ணீரில் மூழ்கிய வரதராஜபுரம்-ராயப்பா நகர், மகாலட்சுமி நகர் பாலம், தாம்பரம்-முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

    இன்று மதியம் குன்றத்தூர் வேல்நகர், பிரிதிவிநகர், செம்பரம்பாக்கம் அமரம்பேடு, மாதா கல்லூரி அருகே உள்ள பகுதிகள், பூந்தமல்லி நசரத்பேட்டை, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பகுதி, திருவேற்காடு, ஐ.சி.எப். காலனி, நூம்பல், முகவலிவாக்கம் திருவள்ளூர் நகர், மணப்பாக்கம் முகலிவாக்கம் சாலை, பெல்நகர் காவ்யா கார்டன், ராமமூர்த்தி அவென்யூ ஆகிய பகுதிகளுக்கும் சென்று பார்வையிட உள்ளனர்.

    இதே போல் மற்றொரு குழுவினர் புழல் ஏரி, சோழவரம் ஏரி, ஆவடி வீட்டு வசதி வாரியம், பருத்திப்பட்டு, பொன்னேரி, திருவேற்காடு, பஞ்செட்டி சாலை, சுப்பாரெட்டி பாளையம், அத்திப்பட்டு, புதூர் நகர், தட்டமஞ்சி, தச்சூர், அத்திப்பட்டு அனுபம்பட்டு, கொசஸ்தலை ஆறு பகுதிகள், சோமஞ்சேரி, பிரளயம்பாக்கம், ஆரணியாறு, பழவேற்காடு புலிகாட் ஆகிய இடங்களை பார்வையிட உள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை (வியாழக்கிழமை) சந்தித்து பேசி விட்டு அதன் பிறகு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். பின்னர் வெள்ள சேத மதிப்பு விவரங்களை விரிவாக தயாரித்து மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

    • ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
    • ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    சென்னை :

    மழை வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்களில் நடுத்தர குடும்பமாக சிலர் இருந்தால் அவர்களும் தங்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வேண்டும் என்று கருதினால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுக்கலாம். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து எழுதி கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    • எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
    • வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

    சென்னையில் மிச்சாங் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த பெரும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    வீடுகள், கடைகள் என எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

    சென்னை வெள்ளம் தொடர்பாக பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கலங்க வைத்து வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க சென்னை வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

    இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    சென்னை அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மீனவர் ஒருவர் வலைவீசி மீன்களை பிடித்தார். அப்போது இதுவரை இல்லாத வகையில் 20 கிலோ எடை கொண்ட மீன் சிக்கியது. இதனை பிடித்த மகிழ்ச்சியில் அதனை படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.

    இதில் சென்னை மாநகரம்-புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளித்ததால் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    ஏராளமானோர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உடமைகள் அனைத்தும் தண்ணீரில் சேதம் அடைந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

    வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

    இது மட்டுமின்றி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கிடவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தவிர கால்நடைகள், பயிர்கள், படகுகள் உள்ளிட்ட பல்வேறு சேதங்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் இப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.



    இதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்தது என்ற விவரங்களை மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

    கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 16-ந்தேதி முதல் டோக்கன் வினியோகிக்க அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகளில் பணம் வினியோகித்து விடலாம் என்று அரசு கருதுவதால் நாளை முதல் டோக்கன் வினியோகிக்க அரசு இப்போது முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களும் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அனைத்து பகுதிகளுக்கும் பெரும்புதூர் தாலுகாவில் மேவலூர் குப்பம், சிவன்தாங்கல், கட்சிப்பட்டு ஆகிய 3 கிராமங்களுக்கும் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இங்குள்ளவர்களுக்கு டோக்கன் வழங்கியதும் ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகள் வெள்ளம் பாதிக்காத பகுதிகளாக இருப்பதால் இங்குள்ளவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் கிடைக்காது.

    குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது.

    இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், வசதி படைத்தவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

    வருமான வரி செலுத்துபவர்கள், அரசு அதிகாரிகளில் ஏ.பி. வகையான அதிகாரிகள், மிகப்பெரிய தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பிரிவில் உள்ளவர்கள் வைத்துள்ள ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

    • குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இதற்காக கோவை வந்த அப்பாவு, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என 2 இடங்களில் கருத்தரங்கம் நடக்கிறது.

    சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர்.

    இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி, விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
    • அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பாதித்தது. மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்ட பகுதியிலும் வெள்ளம் நீர் சீராக செல்லவில்லை. ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதால் 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கி நின்றது.

    இதுவரையில் இல்லாத அளவிற்கு பல பகுதிகளில் தண்ணீர் வடிய பல நாட்கள் நீடித்தது. குறிப்பாக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் விரைவாக வடியாமல் சிறிது சிறிதாக வடிந்தது.

    இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளானார்கள். மழைநீர் வடிகால் இருந்த போதிலும் பரவலாக வெள்ளம் சூழ்ந்து நின்ற பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

    தண்ணீர் தேங்கியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். 363 பகுதிகளில் 2 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றுள்ளது. அந்த பகுதிகளை ஆய்வு செய்து மழை நீர் இனி தேங்காமல் இருக்க என்ன வழிமுறைகள், மாற்று திட்டங்களை கொண்டு செயல்படுத்தலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.


    நகரின் மையப் பகுதிகளில் பல நாட்களாக வெள்ளம் தேங்கி நின்றது. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் நிறைவு பெற்றாலும் கூட இந்த மழையால் தண்ணீர் தேங்கி நின்றததற்கான காரணம் என்ன? மழை கால்வாய்கள் இணைப்பு முறையாக உள்ளதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுபற்றி மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 363 பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இருந்துள்ளது. அந்த பகுதிகளில் மழை நீர் வடியாமல் நின்றதற்கான காரணம் என்ன?

    எவ்வளவு நேரத்தில் எத்தனை செ.மீ. மழை பெய்தது என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி மழைக்காலம் முடிந்த பிறகு தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை என்ஜினீயர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    மழை நீர் வடிகால்வாய்கள் மற்றும் ஆறுகளில் உள்ள அடைப்புகள், கால்வாயின் அளவு, அதன் ஆழம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். கோடம்பாக்கத்தில் உள்ள அஜிஸ்நர், டெமெல்லோஸ் சாலை, புளியந்தோப்பு அருகில் உள்ள தெருக்கள், ரெட்டேரி ஏரிக்கு பின்புறம், மாதவரம், எம்.ஜி.நகர் சாலை, மணலியில் உள்ள சி.பி.சி.எல். நகர் உள்ளிட்ட சில பகுதிகள் இதில் அடங்கும்.

    அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அடுத்த வாரம் பெய்யும் மழை தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரிக்கு பிறகு தான் சில பகுதிகளில் வெள்ளம் ஏன் புகுந்தது என ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகரப் பகுதியில் பல பூங்காக்கள் கட்டப்பட உள்ளன.
    • சென்னை நகரில் சுற்றுலாவுக்காக பல கடற்கரைகளை உருவாக்கப்படும்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிச்சாங் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தற்போது புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

    இந்த பணிகளை 15 கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மிச்சாங் புயலுக்கு பிறகு சென்னை மாநகரத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை கருத்தில் கொண்டு 3-வது கட்ட பணிகளில் திருத்தம் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக மாநகரப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள வளர்ச்சியை ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    திருத்தப்பட்ட திட்டத்தில் வெள்ள தடுப்பு மற்றும் புயல் பாதுகாப்பு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

    பெருவெள்ளம் புயலால் பாதிப்பு ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில் 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பான பணிகளை தொடங்கினர். அது தற்போது 5904 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் துணை நகரங்களாக கண்டறியப்பட்டுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மீஞ்சூர், திருவள்ளூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மழை புயல் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் வகுக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த சென்னை மாநகர வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    மேலும் சென்னை மாநகரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சிங்கார சென்னை 2.0 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மிக உயரமான கட்டிடங்கள் புதிய சாலைகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளது . மாநகரப் பகுதியில் பல பூங்காக்கள் கட்டப்பட உள்ளன.

    சென்னை நகரில் சுற்றுலாவுக்காக பல கடற்கரைகளை உருவாக்கப்படும். இது தொடர்பாக திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும் பணிகள் நடக்கின்றன. அதேபோல மாநகரில் சாதி பெயருடன் கூடிய தெருக்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்கள் பொதுவாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக புத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழை வெள்ளத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொருட்கள், உடமைகள் என அனைத்தும் சேதம் அடைந்தன. தாழ்வான ஒரு சில பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் படிப்படியான வெள்ளநீர் வடிய தொடங்கியதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் ஒரு சில பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் திறக்க முடியவில்லை.

    மேலும் மாணவர்களின் பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், பை போன்றவை சேதம் அடைந்து இருந்தால் புதிதாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பள்ளி திறந்த அன்று பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் பற்றிய விவரங்கள் எடுக்கப்பட்டன. அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக புத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    அதன்படி சென்னை மாவட்டத்தில் 12 ஆயிரம் மாணவர்களின் பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் 3000 பேரின் பை சேதம் அடைந்து இருந்தது தெரியவந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், பை போன்றவை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். திறக்கப்படாமல் இருந்த பள்ளிகளும் தற்போது செயல்பட்டு வருகின்றன.

    • வங்கக்கடல் பகுதியில் வருகிற 18-ந்தேதி அல்லது அதற்கு பிறகு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
    • தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கண்டிப்பாக மழை இருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை பெய்தது.

    அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் (டிசம்பர்) தொடக்கத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. அதிலும் சமீபத்தில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த மழை சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை துவம்சம் செய்தது.

    இன்னும் அந்த வடு மறையாத நிலையில், மீண்டும் சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    வங்கக்கடல் பகுதியில் வருகிற 18-ந்தேதி அல்லது அதற்கு பிறகு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அதன் காரணமாக தமிழ்நாட்டில் 18-ந்தேதியில் இருந்து 20-ந் தேதி வரையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும், அதன்பிறகும் மழை தொடருவதற்கான சூழல் இருக்கிறது என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அந்தவகையில் தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கண்டிப்பாக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கிடையே வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 2 நாட்களை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் பெரிய அளவுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை. ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடைக்கால நிதியாக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதம்.
    • மத்திய அரசு சுமார் 400 கோடி ரூபாய் ஒதுக்கியது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. கடந்த 3 மற்றும் 4-ந்தேதி பெய்த கனமழையால் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

    இன்னும் சில இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில்தான் உள்ளது. போர்க்காள அடிப்படையில் தமிழக அரசு மீட்புப்பணியை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டது.

    இந்த புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    முதல்வர் கடிதத்திற்குப் பிறகு மததிய அரசு சுமார் 450 கோடி ரூபாய் நிதி வழங்கியது. முதலமைச்சர் ஐந்தாயிரம் கோடி ரூபாய் கேட்ட நிலையில், மத்திய அரசு அதில் 10 சதவீதம் கூட ஒதுக்கவில்லை என திமுக-வினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் "ஐந்தாயிரம் கோடி ரூபாய் கேட்டால், 400 கோடி ரூபாய் தந்தால் எப்படி போதுமானதாக இருக்கும். நாங்கள் அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை கேட்கிறோம்.

    ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் கிடைக்கக் கூடிய நிதியில் நாம் கடைசியாக இருக்கிறோம். இதுதான் வருத்தமாக உள்ளது. ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு 400 கோடி ரூபாய் என்பதை நியாயப்படுத்தவே முடியாது. இதனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு" என்றார்.

    • வெள்ளம் சூழ்ந்ததால், பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.
    • மைதா மாவு தூவப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சென்னை முழுக்க வெள்ளம் சூழ்ந்ததால், பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.

    புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து நான்கு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் தூய்மை பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மற்ற பகுதிகளை போன்றே இங்கும் தூய்மை பணிகளுக்கு பிறகு, இறுதியாக ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

     


    செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மைதா மாவு மூட்டையின் கவர்கள் இடம்பெற்று இருப்பதை பார்த்து அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்படி தூய்மை பணிகளின் அங்கமாக ப்ளீச்சிங் பவுடர் தூவுவதற்கு மாற்றாக சாலையோரம் மைதா மாவு தூவப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படவில்லை என அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர், மைதா மாவு பையில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கலந்த பவுடரையே சாலையோரம் தூவியதாக தெரிவித்துள்ளார்.

    • பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி திரளானோர் விவசாய கருவிகளுடன் பேரணியாக சென்று பொன்னேரி சார் ஆட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    ×