search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி"

    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
    • நிர்மலா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (வயது63). அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இவரது மனைவி நிர்மலா. இவர்களது ஒரே மகள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.

    இன்று காலை கணவன்-மனைவி இருவரும் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரில் மகளை விட்டு விட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை ரவிக்குமார் ஓட்டினார். மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் ரவிக்குமாரும், நிர்மலாவும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நிர்மலா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான ரவிக்குமார் 1991-96-ம் ஆண்டில் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவரது மனைவி நிர்மலாவும் அதே ஆண்டில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார். ரவிக்குமாரின் சொந்த ஊர் மணலிபுதுநகர் அடுத்த நா.பாளையம் ஆகும். அவர் நெஞ்சுவலிக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து உள்ளார். ரவிக்குமார் கடைசியாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடப்பெரும்பாக்கத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×