search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்டு 22-ந்தேதி மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார்.
    • பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த மாதம் 4-வது வாரம் அவர் அமெரிக்கா செல்ல முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது.

    இப்போது வருகிற சுதந்திர தினத்தன்று 15-ந்தேதி கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வது என்று முடிவாகி உள்ளது. அதன்படி ஆகஸ்டு 22-ந்தேதி அவர் அமெரிக்கா புறப்படுகிறார்.

    மாநில முதல்-அமைச்சர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வதற்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசி டம் அனுமதி கோரப்பட்டது. அதன்படி 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அவருக்காக அமெரிக்க தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் தூதரகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர் என ஒரு குழு அமெரிக்கா பயணத்துக்கு தயாராகி வருகிறது.

    அமெரிக்கா செல்லும்போது கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என்று மீண்டும் தகவல்கள் வரத் தொடங்கி உள்ளது.

    சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாடு செல்லும்போது அங்கிருந்தபடி அவரே தமிழக நிர்வாகங்களை கவனிப்பார் என்றும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரியவந்து உள்ளது.

    • கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலி கூறியிருப்பதாவது,

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் குறுவட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னன்னன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்வட்டம், எம். வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் கடந்த 16.07.2024 அன்று LPG டேங்கர் லாரியில் ஓட்டுநர்களாக சென்றபோது கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    • அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது
    • கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும்

    சமீபத்தில் பாஜகவில் இணைந்த சரத்குமார் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில்பாதை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும் கூட, சூழலியல் காரணங்களைக் காட்டி அத்திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. ரயில்வே திட்டங்களுக்கு 2749 ஹெக்டேர் நிலம் தேவையாக இருக்கும் போது, 807 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    அடிப்படைப் பணிகளை தாமதம் செய்துவிட்டு உண்மைக்கு புறம்பாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் போக்கை திமுக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது.

    மேலும், நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. தமிழக மக்கள் நலன் கருதி, நமது உரிமையை பெற வேண்டும் என்றால், கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அமைச்சரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் திமுகவில் யாரும் இதுவரை அதனை மறுக்காதது ஏன்?
    • பாஜகவை திமுக கடுமையாக எதிர்க்கும் முறை இதுதானா?

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாது,

    "திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்" என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவாய் மலர்ந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

    இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஐயா ஈ.வே.ராமசாமி அவர்களின் வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இல்லை 'நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல; பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள்' என்று திமுக அரசின் மிக முக்கிய அமைச்சகப்பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். திமுகவின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை திமுக தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து அக்கருத்தை திமுக முழுமையாக ஏற்றுகொள்கிறது என்பதும் உறுதியாகிறது.

    இராமரை கடவுளாக வணங்கும் மக்கள், இராமரின் ஆட்சி என்பது வறுமை - ஏழ்மை, பசி - பஞ்சமற்ற, கொலை - கொள்ளை வளச்சுரண்டல், வன்புணர்வு அற்ற தூய நல்லாட்சியை, சொர்க்கத்தில் வாழ்வதைப்போன்ற பொற்கால ஆட்சியைத் தந்தார் என்கின்றனர். அப்படி ஒரு ஆட்சிதான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா? பட்டப்பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்துக்கொத்தாக கள்ளச்சாராய மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், பொங்கல் புளியில் பல்லி, சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை சாதிய மோதல்கள் இதெல்லாம்தான் ராமரின் ஆட்சியா? அல்லது சம்பூகனைக் கொன்றது போல் திமுக ஆட்சியிலும் ஈவு இரக்கமற்ற படுகொலைகள் நடைபெறுதால் இது ராமரின் ஆட்சியா?

    "இராமர் எங்களின் முன்னோடி" என்ற பாஜகவின் வர்ணாசிரம குரலை அப்படியே திமுகவும் ஒலிக்கத்தொடங்கியுள்ளதன் மூலம் பாஜகவின் உண்மையான பி டீம் என்பதை ஏற்கிறதா திமுக? திமுக ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பாஜக முதலில் ஏற்கிறதா? இத்தனை ஆண்டுகாலம் திமுக கூறிவந்த சமூகநீதி என்பது சனாதனம்தானா? அமைச்சரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் திமுகவில் யாரும் இதுவரை அதனை மறுக்காதது ஏன்? அமைச்சர் பேசியது திராவிட மாடல் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்றால் அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பாஜகவை திமுக கடுமையாக எதிர்க்கும் முறை இதுதானா?

    திமுக அரசின் சட்ட அமைச்சர் கூறிய கருத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா கலியன் பூங்குன்றன் கடுமையான அறிக்கை வெளியிடும் நிலையில் திமுக மூத்த தலைவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனித்திருப்பது ஏன்? பகுத்தறிவு, முற்போக்கு, சமத்துவம், சமூகநீதி என்று நீட்டி முழக்கும் திமுகவின் ஊடக ஊதுகுழல்கள், வாடகை வாய்கள் அமைச்சர் ரகுபதியின் "ராமர் எங்கள் முன்னோடி" என்ற கருத்திற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஆழ்ந்த அமைதி காப்பது ஏன்? காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதா? அல்லது நாக்கு அசைய முடியாமல் செயலிழந்து விட்டதா? இதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலுண்டு?

    ஆகவே, தமிழ்நாடு சட்ட அமைச்சரின் "திராவிட ராமர் ஆட்சி" பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப்போக்க தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி என்பது திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா? என்பதை மாண்புமிகு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நாட்டுமக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • ரூ.44.46 கோடியில் புதிய ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு வாகனங்கள்.
    • சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு 1 லட்சம் புத்தகங்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் சீர்மிகு பணிகள் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "1.17 இலட்சம் காவல் பணியாளருக்கு ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி கொரோனா உதவித் தொகை.

    ரூ.44.46 கோடியில் புதிய ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு வாகனங்கள்.

    58 புதிய மகளிர் காவல் நிலையங்கள். 21 புதிய தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள்.

    சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு 1 லட்சம் புத்தகங்கள். தீவிபத்திலும் வெள்ளத்திலும் சிக்கிய 42,224 மனித உயிர்களும் ரூ.605 கோடி மதிப்புடைய உடைமைகளும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசின் காவல்துறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பழைமையான துறை. 1964-68, 1971-76 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறை தலைவராக – ஐ.ஜி.யாகத் திகழ்ந்தவர் எப்.வி.அருள். அக்காலத்தில் டி.ஜி.பி என்னும் பதவி இல்லை. ஐ.ஜி பதவி மட்டுமே இருந்தது.

    ஐ.ஜி-யாக இருந்த எப்.வி.அருள் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்ட; இண்டர்போல் என்னும் பன்னாட்டுக் காவல் நிருவாகத்தில் துணைத் தலைவராக விளங்கித் தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்தவர். இந்திய காவல்துறை வரலாற்றில் முதன் முதல் நவீனமயமானது தமிழ்நாடு காவல்துறைதான்.

    தமிழ்நாடு காவல்துறை தலைவராகத் திகழ்ந்த எப்.வி.அருள் அவர்கள் எழுதிய போலீஸ் டைரி எனும் நூலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969இல் நியமித்த முதல் காவல் ஆணையம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் நிதியுதவிகளால் இந்தியாவிலேயே முதன்முதலாக 1971இல் தமிழ்நாடு காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கின என்று எழுதியுள்ளார். அதன் பிறகுதான் இந்தியாவில் ஒன்றிய அரசிலும், மாநிலங்களிலும் காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகளைத் தொடங்கினார்கள். அப்போது முதல் தமிழ்நாட்டுக் காவல்துறை இந்தியாவிற்கு வழிகாட்டும் துறையாகவே வளர்ந்து திகழ்ந்து வருகிறது.

    சட்டம் ஒழுங்கை காப்பதில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசுத் துறைகள் அனைத்தையும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். தம்முடைய பொறுப்பிலேயே உள்ள காவல்துறையைச் சீராக வளர்த்துத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் சிறப்பாகப் பராமரித்து இந்தியா அளவில் தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களைத் தடுக்கும் துறையாகச் செயல்பபட வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    எனவே, சட்டம் ஒழுங்கை தொடர்ந்து காப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி வந்துள்ளது. 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியது. அதற்காக அந்தப் பகுதி மக்கள் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிப் பாராட்டினார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக விளங்குவதால் மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. எடுத்துக்காட்டாக :

    • 40 இலட்சம் பேர் கூடிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
    • 2 இலட்சம்பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா
    • 8 இலட்சம் பேர் திரண்ட திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
    • 5 இலட்சம் பேர் கூடிய பழனி தைப் பூசத் திருவிழா
    • 12 இலட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா
    • 3 இலட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா
    • 20 ஆயிரம்பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா

    உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது நமது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாகப் பராமரிக்கப்படுவதன் அடையாளமாகும். இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால்தான்.

    முதலைமைச்சர் அவர்கள் காவல் பணியாளர்களின்கொரோனா கால சிறப்புப் பணிகளை பாராட்டி ரூ.58.50 கோடி ஊக்கத்தொகை

    கொரோனா தொற்றுத் தடுப்பில் களப்பணியாற்றிய 1.17 லட்சம் காவல் துறையினருக்கு ஊக்கத்தொகையாகத் தலா ரூ.5,000 வீதம் 58.50 கோடி ரூபாய் வழங்கினார்கள்.

    முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ள ஐந்தாவது காவல்ஆணையம்

    காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்திடவும், காவல் பணியாளர்களின் நலன்களைக் காத்திடவும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையம் அமைத்துள்ளார்கள்.

    புதிதாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை நிர்வாக ரீதியாக பிரித்து ஆவடி, தாம்பரம் என இரு புதிய ஆணையரகங்களை உருவாக்கி; அவற்றுக்கு ரூ.44.46 கோடியில் 352 நான்கு சக்கர வாகனங்களையும், 396 இரண்டு சக்கர வாகனங்களையும் வழங்கி அவை மக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யவும், ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களில் புதிதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு, ரூபாய் 1.91 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது.

    முதலமைச்சர் புதியதாக உருவாக்கியுள்ள 58 புதிய மகளிர் காவல் நிலையங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட அனைத்துக் காவல் உட்கோட்டங்களிலும் 39 புதிய மகளிர் காவல் நிலையங்களையும் கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உள்ளிட்ட 19 இடங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்களையும் ஏற்படுத்தியுள்ளார்.

    முதலமைச்சர் கொண்டாடிய காவல்துறை மகளிர் பொன்விழா

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல் துறையில் மகளிர் காவலர்கள் நியமிக்கப்பட்ட 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி 17.3.2023 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்புத் தபால் உறையை வெளியிட்டார்கள். அத்துடன், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'அவள்' (AVAL – Avoid Violence Through Awareness and Learning) திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்கள்.

    முதலமைச்சர் அவர்கள் திறந்த காவலர் குடியிருப்புகள்

    தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை 4.1.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 481.92 கோடி ரூபாய்ச் செலவில் 2,882 காவல்துறை வாடகைக் குடியிருப்புகள் 42.88 கோடி ரூபாய்ச் செலவில் 42 காவல் நிலையங்கள், 84.53 கோடி ரூபாய்ச் செலவில் 14 இதர காவல் துறை கட்டடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் காவல்துறைக்கு வழங்கிய புதிய வாகனங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 22.1.2024 அன்று சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டுக்காக 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா, 20 பொலிரோ ஜீப் வாகனங்கள் வழங்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

    சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை ரூ.2.80 கோடியில் சிறைவாசிகளுக்கான நூலகங்கள் மேம்பாடு

    அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் 14 மாவட்ட சிறைகள், 112 கிளை சிறைகள்/தனிச்சிறைகள்/ திறந்த வெளிச்சிறைகள் ஆகியவற்றில் உள்ள நூலகங்கள் ரூ.2.80 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக இத்துறை பங்கேற்று 1,00,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக நன்கொடையாகச் சேகரிக்கப்பட்டன.

    முதலமைச்சர்கள் சிறைவாசிகளுக்காக வழங்கிய நூல்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் சிறை நூலகங்களுக்கு 1,500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்படத்தக்கது.

    சிறைக் கட்டடங்களும் குடியிருப்புகளும்

    ரூ.45.26 கோடி செலவில் 94 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் அவர்கள் ரூ.26 கோடியில் சிறைவாசிகளுக்கு ஏற்படுத்திய புதிய உணவுமுறை

    முதலமைச்சர் அவர்கள், நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூபாய் 26 கோடி கூடுதல் செலவில் சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறையை மாற்றியமைத்திட ஆணை பிறப்பித்தார்கள். அதன்படி புதிய உணவுமுறை 5.6.2023 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

    2021 முதல் 2023 முடிய இத்துறைப் பணியாளர்கள் 61,288 தீ விபத்து அழைப்புகளிலும், 2,57,209 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி 42,224 மனித உயிர்களையும், ரூ.605.06 கோடி மதிப்புள்ள உடைமைகளையும் காப்பாற்றி அரும்பணி புரிந்துள்ளார்.

    ரூ.55.60 கோடியில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தீயணைப்புப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ரூ.55.62 கோடி செலவில் தலைக்கவசம் மற்றும் காலணியுடன் கூடிய 1850 தீ பாதுகாப்பு உடைகள், 650 மூச்சுக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய 3500 மீட்பு உடைகள் வாங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

    ரூ.86.83 கோடியில் நவீன வாகனங்கள் மற்றும் உபகரணங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.72.82 கோடி வழங்கி, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறைக்காக 75 புதிய நீர்தாங்கி வண்டிகள், 12 அவசரகால சிறிய மீட்பூர்திகள், 44 பெரும் தண்ணீர் லாரிகள், ஒரு வான்நோக்கி நகரும் ஏணி கொண்ட ஊர்தி, 7 அதி உயரழுத்த நீர்தாங்கி வண்டி, 1 சிறிய நுரைநகர்வு ஊர்தி, 50 ட்ரோன்கள், 4 புகைவெளியேற்றும் கருவி, 21 கோம்பி கருவிகள், ஆட்களை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் 4 முதலியன கொள்முதல் செய்யப்படுகின்றன.

    ரூ.92.40 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.45.82 கோடி செலவில் காஞ்சிபுரம், தேனாம்பேட்டை, திருவையாறு, கடமலைக்குண்டு, இராஜபாளையம், செங்குன்றம், மணலி, வண்ணாரப்பேட்டை, சேலம் திருவரங்கம் ஆகிய தீயணைப்பு – மீட்புப் பணி நிலையங்களுக்கும், காஞ்சிபுரத்திற்கும் மற்றும் அம்பத்தூரில் சென்னை புறநகர் மாவட்ட அலுவலகத்திற்கும் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஆணையிட்டுள்ளார்கள்.

    மேலும், ரூ. 40.63 கோடி செலவில் செங்குன்றம், போடிநாயக்கனூர், துறையூர், இராணிப்பேட்டை, சிவகாசி, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு 173 குடியிருப்புகள் கட்டவும் ரூ.5.95 கோடி செலவினத்தில் திருவல்லிக்கேணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களுக்குப் புதிய கட்டடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

    ரூ.69.43 கோடியில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்

    பொதுமக்களின் சிறப்பான சேவைக்கென ரூ. 62.18 கோடி செலவில் திங்கள்நகர், கோவைபுதூர், சின்னமனூர், வாய்மேடு, தெள்ளார், அன்னியூர், திருப்பரங்குன்றம், ஏழாயிரம்பண்ணை, கொளத்தூர், காலவாக்கம், கண்ணமங்கலம், ஆட்டையாம்பட்டி, ஊத்துக்குளி, இளையாங்குடி, வையம்பட்டி, குமராட்சி, நயினார்பாளையம், ஒரகடம், திருவெறும்பூர், இராதாபுரம், ரிசிவந்தியம் ஆகிய 21 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்ளும் சிவகாசி, ஓசூர், தாம்பரம், இராணிப்பேட்டை ஆகிய 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்கள் ரூ.1.06 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன.

    ரூ.39.30 கோடி செலவில் மாநில பயிற்சிக் கழகம்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தீயணைப்பு மீட்புப் பணித்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்தும் விதமாக ரூ. 39.30 கோடி செலவில் மாநிலப் பயிற்சிக் கழகம் மற்றும் உலகத்தரத்திலான நிகழ்நேர மாதிரி கூடம் ஆகியவற்றை காலவாக்கத்தில் அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

    இவற்றின் வாயிலாக – தமிழ்நாட்டின் காவல்துறை – சிறைத்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் அனைத்தும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் சீர்மிகு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றபோது அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌத் அல்மரி ஆலோசனை மேற்கொண்டார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தலைமைச் செயலகத்தில் இன்று ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் எச்.இ.அப்துல்லா பின் தௌத் அல்மரியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அவர் தமிழ்நாட்டின் சிறந்த நண்பர் மற்றும் நலம் விரும்பி ஆவார். மார்ச் 2022ல் நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றபோது அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

    எங்கள் சந்திப்பின் போது, MSMEகள் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி, தளவாடங்கள், சில்லறை விற்பனை, மலிவு வீடுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் வணிகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மை பற்றி விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது.
    • எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது.

    சென்னை:

    சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சட்டமன்றப் பொதுத்தேர்தலை கருத்திற்கொண்டு, முதலமைச்சர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

    தி.மு.க. அரசின் முதலமைச்சருடைய அம்மா உணவகம் பற்றிய எக்ஸ் வலைதள செய்தியைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, மேயரோ, எவரேனும் நேரில் சென்று அம்மா உணவகங்களை ஆய்வு செய்தனரா என்று கேள்வி எழுப்பி இருந்தார். எடப்பாடி பழனிசாமி அறிக்கையிலே இருந்த உண்மை, முதலமைச்சரையும், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளையும் உறுத்தியவுடன், ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விடுகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களுக்கு முறையாக பதில் சொல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து ஆதாயம் தேடி தி.மு.க.வுக்கு சென்றவர்களை வைத்து அறிக்கை விட வைப்பது வாடிக்கையாகி விட்டது.

    முதலமைச்சரின் நடவடிக்கையால், அ.தி.மு.க. காணாமல் போய்விடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருக்கிறார்.

    'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா'' என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளை சிரமேற்கொண்டு, அரசியலில் வீரநடை போடுபவர் எங்கள் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து வீண்வம்பு வளர்த்தால், அவர்கள் பாணியிலேயே எசப்பாட்டு பாட எங்களுக்கும் தெரியும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த அம்மா உணவகம் ஒன்றே 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதைக் கூறி, இனியாவது உங்கள் மூளையில் உதித்த நல்ல வளர்ச்சித் திட்டங்களை தமிழக மக்களுக்குத் தாருங்கள், வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தை அடித்து உடைத்தனர்.
    • ஒரே சாதனை கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    3 வேளையும், குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயி ராற சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், அம்மா 2013-ம் ஆண்டு அம்மா உணவங்களை தொடங்கி மலிவு விலையில் தரமான உணவு வழங்கினார்கள்.

    ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஏகோபித்த ஆதரவு காரணமாக தமிழகம் முழுவதும் அம்மா உணவுகள் தொடங்கப்பட்டன.

    ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சியிலும், அம்மா உணவங்கள் தரமான, சுவையான உணவு மக்களுக்கு அளித்து வரப்பட்டன. குறிப்பாக கொரோனா பெரும் தொற்று காலகட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிய போது, தமிழக முழுவதும் அம்மா உணவுகளுக்கு வருகை தரும் அனைவருக்கும் விலையில்லாமல் 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டது. இதை மக்கள் இன்னும் மறக்க வில்லை.

    அம்மா என்ற சொல்லை கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போல் பதறும் இந்த விடியா தி.மு.க. அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழக முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நெருக்கியும், பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையை 3-ல் ஒரு பங்காகக் குறைத்தும் படிப்படியாக அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்தினர்.

    அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் 90 சதவீதம் குறைக்கப்பட்டது, பழுதடைந்த உபகரணங்கள் சீர் செய்யப்படவில்லை, சென்னையில் சுகாதாரத் துறை மற்றும் நகராட்சிக்கு இடம் தேவை என்று பல அம்மா உணவகங்கள் மூடப்பட்டன.

    உண்மை நிலை இவ்வாறு இருக்க, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலை கருத்திற்கொண்டு, நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சர் கடந்த 19-ந்தேதி அன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வளைதளத்தில் அம்மா உணவகங்களை மூடி விடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலை கண்ணீர் வடித்துள்ளார். அம்மா உணவகங்கள் மீது திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்டுவது ஏன்?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது என்று, கடந்த 3 ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஒரே குரலில் பேசிய பொய்யை நம்பி, பருவ மழையின் போது பெய்த சிறு மழைக்கே சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீராலும், ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாமலும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பருவமழை காலங்களில் இப்படி பொய் கூறி சென்னை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியவர் தான் இந்த சேகர் பாபு.

    இந்த விடியா தி.மு.க. அரசு செய்த ஒரே சாதனை, ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சுமார் 3.50 லட்சம் கோடி அளவில் கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது தான்.

    இந்த 3.50 லட்சம் கோடி கடனில் எவ்வளவு மூலதனச் செலவு செய்திருக்கிறார்கள் என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரும், சேகர்பாபுவும் தமிழக மக்களிடம் விளக்கத் தயாரா? தற்போது அமைச்சர் சேகர்பாபு தவறான தகவல்களை கூறி சூழ்நிலையை மடைமாற்ற பார்க்கிறார். இது தமிழக மக்களிடம் எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப்பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

    மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், தி.மு.க.வினர் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது?

    பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    சென்னை:

    புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்த திட்டத்தின் பயன்களை எப்படி பெற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

    இந்நிலையில் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    • ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.
    • அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள்

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.

    ஆனால், மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் விமர்சனம் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், அரசை பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்" என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களே…

    "தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்" என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

    அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

    அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×