search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளுக்கான பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுகிறது.
    • நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 2-வது சுரங்கம் அருகே 50மெகாவாட் மின் திறன் சூரிய மின்சக்தி மின் திட்டம் அமைக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவி ஏற்றுள்ள பிரதமர் மோடி முதல் 100 நாள் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த தொடங்கி உள்ளார்.

    முதல் கட்டமாக இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு அவர் இன்று நாடு திரும்பி உள்ளார்.

    அடுத்து அவர் பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆலோசனையை தொடங்கி இருக்கிறார். முதல் 100 நாளில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வு செய்து அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வருகிற 18-ந்தேதி பிரதமர் மோடி வாரணாசி தொகுதிக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) அவர் தமிழகம் வர உள்ளார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அன்று காலை 10 மணிக்கு பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் சிறப்புரையாற்ற உள்ளார்.

    சென்னை விழாவில் 2 வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது. அதுபோல மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்னை வழியாக மற்றொரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது.

    இந்த 2 ரெயில் சேவைகளையும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதே சமயத்தில் மதுரை ரெயில் நிலையத்திலும் வந்தே பாரத் ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற உள்ளது.

    நெல்லை மாவட்டம் மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் வரை 102 கிலோமீட்டர் தொலைவுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.1,752 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

    அதில் தற்போது ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம்-நெல்லை இரட்டை வழி தடத்தையும், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையிலான இரட்டை வழி தடத்தையும் பிரதமர் மோடி அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளுக்கான பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுகிறது. இந்த பணிமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் நெய்வேலியில் 3 திட்டங்களை அடிக்கல் நாட்டவும், தொடங்கி வைக்கவும் இருக்கிறார்.

    நெய்வேலி 30-வது வட்டம் ஞாயிறுசந்தை அருகே 10 மெகாவாட் மின்திறன் கொண்ட சூரிய சக்தி மின் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    அதுபோல நெய்வேலி சுரங்கம் 1-ஏ அருகே நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான மேல்மணல் நீக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

    மேலும் நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 2-வது சுரங்கம் அருகே 50மெகாவாட் மின் திறன் சூரிய மின்சக்தி மின் திட்டம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    விழாவில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை தென்னக ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி முதல் முறையாக சென்னை வர இருப்பதால் அவருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து உள்ளது.
    • போலீசார் விழா நடைபெறும் மைதானத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் முத்துசாமி வரவேற்கிறார்.

     இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழாவுக்காக கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இதில் பங்கேற்க வருபவர்கள் அமர வசதியாக இருக்கைகளும் போடப்பட்டு உள்ளன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வருவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்காக விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து உள்ளது. அவர்கள் அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் போலீசார் விழா நடைபெறும் மைதானத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அவர் விழா நடைபெறும் இடத்துக்கு சென்று விழாவில் பங்கேற்கிறார். இதன் காரணமாக கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
    • மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால் தங்கள் பகுதியின் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 25-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த பேட்டியின் விபரம் பின்வருமாறு:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்கக்கூடாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வரை வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆம்னி பஸ்கள் இயக்க முடியாது. இதனை மீறி இயக்கினால் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்.

    தமிழகத்திற்கு ஏற்கனவே 2000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 850 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 2200 புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு புதிதாக 3000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக மொத்தம் தமிழகத்திற்கு புதிதாக 7200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநகர தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, வக்கில்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர். 

    • தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79 ஆயிரத்து 723 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டிருக்கிறது.
    • கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்!

    சென்னை:

    10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசியல் மேடைகளில் தான் ஐம்பெரும் விழாக்கள், முப்பெரும் விழாக்களை நடத்துவோம். ஆனால், இப்போது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்பு மாணவர்களுக்காக நம்முடைய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஒரு பெரிய பட்டியலே வந்தது.


    அதிலும் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகிற மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது. அதுதான் "புதுமைப் பெண் திட்டம்". எனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந்தாலும், இந்த தேர்தல் பிரசாரத்தின்போது நான் சந்தித்த மாணவிகளாக இருந்தாலும், பலரும் இந்த "புதுமைப்பெண்" திட்டத்தை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். மாணவிகள் தங்களின் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை என்றும், இந்த திட்டத்தில் மாதா மாதம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் தங்களின் தேவைக்கு உதவியாக இருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

    அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "தமிழ்ப் புதல்வன் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி சென்றவுடனே வருகிற ஆகஸ்டு மாதத்தில் இருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற வைத்த 1,728 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சாதனையை ஊக்கப்படுத்த அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது. தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குகிறோம் என்றால் அது அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கும் அங்கீகாரம்.

    100 சதவீதம் தேர்ச்சி என்று சொல்லி பாராட்டுவது மூலமாக அந்த இலக்கை அனைவரும் அடைய வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்கு தான் இந்த விழா.

    தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களை பாராட்ட விரும்புகிறேன். எந்த பாடத்தில் நூறு மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டுக்குரியதுதான். ஆனால், நம்முடைய தாய்மொழி தமிழ். அதுவும் உயர்தனிச் செம்மொழி என்பதால், அதில் 100 மதிப்பெண் பெற்றவர்கள் சிறப்பான பாராட்டுக்குரியவர்கள்.


    12-ம் வகுப்பில் 35 பேரும், 10-ம் வகுப்பில் 8 பேரும், தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கின்றனர். அவர்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

    அடுத்ததாக, கடந்த ஆண்டு தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு, 95 தங்கப் பதக்கங்களையும், 112 வெள்ளிப் பதக்கங்களையும், 202 வெண்கலப் பதக்கங்களையும் வென்ற மாணவர்களையும் மனதார நான் பாராட்டுகிறேன்.

    கடந்த 10-ந்தேதி பள்ளிகள் திறந்தபோது, நான் போட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூட மாணவர்களின் மனநலனுடன் உடல்நலனும் முக்கியம் என்று சொல்லி இருந்தேன். அதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்று.

    இந்த பதக்கம் பெற்றவர்கள், அடுத்து, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கவேண்டும். உங்களில் இருந்து பல ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79 ஆயிரத்து 723 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்தி, மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பித்தல் முறைகள் அமையும் என்று நம்புகிறேன்.

    அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள் மனதிற்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றைப் பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும்.

    முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகளை இன்றைக்கு துவக்கி வைத்திருக்கிறேன். என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு.

    மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்... படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

    கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை "நீட்" போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம். அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். "நீட்" போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடுதான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு.

    கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்! அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். "படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்" என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தயாநிதிமாறன் எம்.பி., திண்டுக்கல் லியோனி, பரந்தாமன் எம்.எல்.ஏ. மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
    • மாணவர்களை பார்க்கும்போது எனக்கு இளமை திரும்புகிறது.

    சென்னை:

    சென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் 22,931 வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அவர் கூறியதாவது:-

    * காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

    * மாணவர்களை பார்க்கும்போது எனக்கு இளமை திரும்புகிறது.

    * புதுமைப் பெண் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

    * 'புதுமைப் பெண் திட்டம்' போல வரும் ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படும்.

    * கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

    * பள்ளிக்கல்வித்துறை உலக தரத்தில் கொண்டு செல்ல அமைச்சர் அன்பில் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
    • பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் போட்டியிட்ட 40 இடங்களிலும் இமாலய வெற்றியை பெற்றது.

    இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா லினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகு திகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

    கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மாலை இந்த முப்பெரும் விழாவானது நடக்கிறது.

    இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.


    விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் கோவைக்கு வருகை தருகிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை கோவைக்கு வருகிறார். அவர் முப்பெரும் விழா நடக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    அதனை தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடக்கும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று இரவு கோவையில் தங்கும் அவர் நாளை மாலை கொடிசியாவில் நடக்கும் முப்பெரும் விழாவிலும் கலந்து கொள்கிறார்.

    முப்பெரும் விழாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன.


    நாளை கோவையில் நடக்க உள்ள முப்பெரும் விழாவில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, ம.தி.மு.க சார்பில் கட்சியின் தலைமை செயலாளர் துரைவைகோ எம்.பி., உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இதே போல கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

    முப்பெரும் விழாவையொட்டி விழா மைதானத்தில் 150 அடி நீளத்தில் 40 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இன்று மைதானம் முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதேபோல விழாவுக்கான மேடையில் அலங்காரங்களும், மின் அலங்காரம் செய்யும் பணியும் நடக்கிறது. விழா நடைபெறும் இடம் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன.
    • மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் வரும் 15-ந்தேதி (அதாவது நாளை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். கல்வியிலும், தொழில் துறையிலும் கோலோச்சிய கோவை, தி.மு.க. ஆட்சியில் செயலிழந்து இருக்கிறது.

    கடந்த 30 வருடங்களாக, மறைந்த கருணாநிதி காலத்தில் இருந்து, தி.மு.க.வின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற வரி மட்டும் தவறாமல் இடம்பெறும்.

    ஆனால், திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.

    சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன. ஆனால் தி.மு.க.வுக்கு அவை குறித்து கவலை இல்லை. தி.மு.க. அரசின் மின்கட்டண உயர்வால், விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கி இருக்கிறது.

    கோவை மாநகருக்கு உடனடி தேவை, சாலை வசதிகளும், தண்ணீர்ப் பஞ்சத்துக்கான தீர்வுகளும்தான். அதுபோக, மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.

    இதில் முப்பெரும் விழா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து, கோவையை மேலும் குப்பைக் கிடங்காக ஆக்குவதுதான் இந்த விழாவின் விளைவாக இருக்கப் போகிறது.

    உண்மையிலேயே தி.மு.க.வுக்கு, கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கோவை மக்களின் அறுபது ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். கோவை பகுதி நீர்நிலைகளை சீரமைத்து, தண்ணீர் பஞ்சத்தை தடுத்திருக்க வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள கம்யூனிஸ்டு அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுத்திருக்க வேண்டும்.

    கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு, தமிழக பா.ஜனதா சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், பத்தில் ஒரு பங்கை தி.மு.க. அரசு நிறைவேற்ற முன்வந்தாலே, கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும். ஆனால், அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீட் தேர்வில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
    • நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வலியுறுத்தல்.

    நீட் தேர்வில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மத்திய தேர்வு முகமை (NTA) ஊழலில் ஈடுபட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தேர்வு முகமை சார்பில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் இல்லாமல் தேர்வில் சரியான பதில் அளிக்கப்பட்டதற்கான மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் சமீபத்திய நீட் ஊழலில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சிப்பது அவர்களின் சொந்த திறமையின்மையிக்கான மற்றொரு ஒப்புதலாகும்.

    மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகள் மற்றும் துறைக்கு தொடர்பில்லாதவர்களால் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது.

    அவர்களின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையில் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.

    • தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
    • சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 12.6.2024 தலைமைச் செயலகத்தில், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


    உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன்


    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    • அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.
    • மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் 'உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி' என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-

    உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி..

    நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் நீங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்தவொரு நீர்நிலையில் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம்!

    இதற்கான அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.

    மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • பிரமாண்ட மேடையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒரு பகுதியிலும், 40 எம்.பிக்கள் ஒரு பகுதியிலும் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறது.
    • விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தின் முகப்பில் இருந்து விழா நடைபெறுகிற இடத்தை சுற்றிலும் தி.மு.க. கொடிகள் கட்டும் பணியும் நடக்கிறது.

    கோவை:

    கோவை கொடிசியாவில் நாளை மறுநாள் (15-ந்தேதி) தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சிறப்பான வெற்றிக்கு கட்சியை வழி நடத்தி சென்ற முதலமைச்சருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடக்கிறது.

    முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

    விழாவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதனையொட்டி முப்பெரும் விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இரவு, பகலாக ஊழியர்கள் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மைதானத்தில் இதுவரை இல்லாத அளவாக விழா மேடையானது 40 அடி அகலத்தில், 150 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

    மேடையின் முகப்பில் உதயசூரியன் சின்னம், தி.மு.க. கொடி, அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவம் பொறித்த படங்களும் இடம்பெற உள்ளதாக தெரிகிறது.

    இதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த பிரமாண்ட மேடையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒரு பகுதியிலும், 40 எம்.பிக்கள் ஒரு பகுதியிலும் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறது.

    மைதானம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, இரு பகுதியாக பிரிக்கப்பட்டு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    நடுவில் முக்கிய பிரமுகர்கள் நடந்து செல்லும் வகையில் தனிபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், தி.மு.க.வில் மாநில அளவில் கட்சி பொறுப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் முன்பகுதியில் அமரும் வகையில் தனித்தனி இருக்கைகளும் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    இதுதவிர விழா நடைபெறும் இடத்தில் தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவதால் மாவட்ட வாரியாக பிரித்து, அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவற்கு வசதியாக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    இதுதவிர விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தின் முகப்பில் இருந்து விழா நடைபெறுகிற இடத்தை சுற்றிலும் தி.மு.க. கொடிகள் கட்டும் பணியும் நடக்கிறது.

    விழாவை தொண்டர்கள் கண்டு ரசிப்பதற்கு வசதியாக ஆங்காங்கே மிக பிரமாண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பணிகள் நடந்து வரும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நிலையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. விழா நடைபெறும் இடம் மற்றும் மாநகர எல்லைகள் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • குவைத் தீவிபத்து தொடர்பாக முகாம் அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
    • அயலக தமிழர் நலத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே, தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும், மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், குவைத் தீவிபத்து தொடர்பாக முகாம் அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    அயலக தமிழர் நலத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    இதனிடையே குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

    கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், முகமது ஷெரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.

    ×