search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • சேப்பாக்கம் மைதானம்போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன்.

    விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர்.

    தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
    • இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

    விக்கிரவாண்டி:

    உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த புகழேந்தி எம்.எல்.ஏ. உடல் தகனம் செய்யப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் விழுப்புரம் அறிவாலயத்தில்பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் திண்டிவனம் வழியாக புதுச்சேரி சென்றடைந்தார் . மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் புகழேந்தியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை 6 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் அத்தியூர் திருவாதி வந்து புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காலை 9 மணி அளவில் புகழேந்தியின் சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் அமைச்சர் பொன்முடி தலைமையில் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்.எல்.ஏ. மறைவையொட்டி விக்கிரவாண்டி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பும், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

    பின்னர் எம்.எல்.ஏ புகழந்தியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

    இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, கவுதம சிகாமணி எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணை சேர்மன் பாலாஜி, குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி,ரவிதுரை, ஜெயபால், முருகன், நகர தலைவர் தண்டபாணி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பிரசாந்த், மாணவரணி யுவராஜ் , சிவா,இளைஞர் அணி கார்த்திக்,ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

      புதுச்சேரி:

      புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பொதுகூட்டத்தில் பிரசாரம் செய்தார்.

      அப்போது அவர் பேசியதாவது:-

      புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் மண்ணுக்கு வந்துள்ளேன். விடுதலை இயக்க தளபதி மக்கள் தலைவர் வ.சுப்பையாவை போற்றி பாதுகாத்த புரட்சி மண்ணுக்கு வந்துள்ளேன். கடல் அழகும், இயற்கை அழகும் கொஞ்சும் புதுவைக்கு வந்துள்ளேன். புதுவை காங்கிரஸ் வேட்பாளராக, இந்தியா கூட்டணி வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. புதுவை மக்களின் நலனுக்காக பாடுபட்ட விடுதலை போராட்ட குடும்பத்தை சேர்ந்தவர்.

      இப்போது 2-ம் விடுதலை போராட்டத்துக்காக வேட்பாளராக நிற்கிறார். 8 முறை எம்.எல்.ஏ., 40 ஆண்டு காங்கிரஸ் உறுப்பினர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், சபாநாயகர், 2 முறை முதலமைச்சர் என பழுத்த அரசியலுக்கு சொந்தமானவர். 2-ம் முறையாக பாராளுமன்ற செல்ல ஆதரவு கேட்டு இருகரம் கூப்பி ஆதரவு கேட்டு நிற்கிறார். கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற வைப்பீர்களா? ஸ்டாலின் தூதுவனாக உங்கள் பகுதி மக்களிடமும் வாக்கு சேகரியுங்கள். அப்புறம் என்ன? வைத்திலிங்கம் வெற்றி உறுதி.

      தமிழ்நாட்டில் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்ட போது, துணிச்சலாக கவிஞர் புதுவை சிவம் வெளியிட்ட மண். கலைஞர் அரசியல்வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய மண் புதுவை. எனவே கலைஞருக்கு தமிழகமும், புதுவையும் ஒன்றுதான். அந்த உணர்வோடு ஸ்டாலினும் புதுவை மக்கள் மீது தனி பாசம் கொண்டவன்.

      இங்குள்ள சிவா, சிவக்குமார், நாஜிம் போன்ற திராவிட முன்னேற்ற உடன் பிறப்புகளும் புதுவைமக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுகின்றனர். அந்த உணர்வோடுதான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். புதுவை வளர்ச்சிக்கு தி.மு.க.வும், காங்கிரசும் பாடுபட்டால் மாநிலத்தை எப்படி பின்னோக்கி கொண்டுசெல்லலாம் என பா.ஜனதா செயல்படுகிறது.

      இதை மக்கள் பார்த்து வருகிறார்கள். வைத்திலிங்கம் சபாநாயகராக இருந்தபோது, துணைநிலை கவர்னர் மோதினார். பா.ஜனதா கட்சி பொறுப்புகளை சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமித்து சட்டமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கினர். ஆட்சியில் இருந்த அரசை புறக்கணித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

      கவர்னரால் பிரச்சினை

      மக்கள் அடிப்படை வசதிகளை செய்யாமல், வசதிகள் இல்லை என காரணம் காட்டி ரேஷன்அரிசியை தடை செய்தனர். பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை ஏன் என கேள்வி கேட்டனர். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு, ஒத்துழைக்காமல் அரசியல் சட்ட கடமையை காற்றில் பறக்கவிட்டு புதுவை நிர்வாகத்தை சீர்குலைத்தது பா.ஜனதா. கவர்னர் கிரண்பேடி.

      அவர் ஐபி.எஸ். ஆக இருந்தவர். ஆனால் துணைநிலை ஆளுநராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார். தமிழகத்திலும் ஒரு கவர்னர் உள்ளார். அவரும் ஐ.பி.எஸ். படித்தவர். அவரிடம் மாட்டி முழித்துக்கொண்டு இருக்கிறோம். அவரே இருக்கட்டும் என நாம் சொல்கிறோம். அவர் இருந்தால் தி.மு.க.வுக்கு பெரிய பிரசாரமே நடக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்தவுடன், இவர்களை கவர்னராக்கி அரசியல் சட்டத்தை மீறி பா.ஜனதா ஏஜெண்டுகள் போல விளம்பரத்துக்காகவே செயல்படுகின்றனர். கவர்னர்கள் தொல்லை கொடுப்பது எதிர்கட்சி மாநிலம் மட்டுமல்ல.

      புதுவையில் ஆளும் கூட்டணியில் உள்ள ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி. பா.ஜனதாவை பொறுத்தவரை புதுவை மக்களின் முன்னேற்றம், வளர்ச்சி பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதுதான் பா.ஜனதாவின் கொள்கை.

      தமிழகம்போல மாநிலம் இருந்தால் நகராட்சியாக மாற்ற வேண்டும். புதுவை போல யூனியன் பிரதேசத்தை கிராம பஞ்சாயத்தாக மாற்ற வேண்டும். ஒட்டுமொத்தாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதுதான் பா.ஜனதாவின் தீர்மானம். அதனால்தான் கூட்டணி அரசு இருந்தாலும், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காமல், தன் கைப்பிடியில் பா.ஜனதா வைத்துள்ளது. அவர்களுக்கு கைப்பாவையாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி உள்ளார். இந்த அவலங்கள் தீர இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயக பாதையில் கம்பீரமாக நடை போட வேண்டும்.

      மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேச உரிமைகளும் பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணியை நாடு தழுவிய அளவில் அமைத்துள்ளோம். புதுவை முன்னேற வேண்டும். புதுவை மக்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.

      பா.ஜனதா ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும். இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சியில் அமர வேண்டும்.

      ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும்போது சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளை கூறியுள்ளோம். அதில் முக்கிய வாக்குறுதியாக புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம்.

      இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்துள்ளது. புதுவை மக்களின் பல நாள் கனவான மாநில அந்தஸ்து ஜூன் 4-ந் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேறப்போகிறது.

      மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. தி.மு.க. சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளோம்.

      சிறுபான்மையினர் எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். தேசியநெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

      பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். காரைக்கால், நாகை, தஞ்சை இரட்டை ரெயில்பாதை, கிழக்கு கடற்கரை சாலையில் கன்னியாகுமரி வரை புதிய ரெயில்பாதை அமைக்கப்படும்.

      மாநில கவர்னர் அதிகாரம் குறைக்கப்படும். ஆர்.எஸ்.எஸ். பிடியில் சிக்கியுள்ள சர்வதேச நகரமான ஆரோவில், அரவிந்தர், அன்னை கனவுப்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக்கொள்கை புதுவையில் நீக்கப்படும். ஜிப்மரில் மீண்டும் இலவச மருத்துவம், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காரைக்கால் ஜிப்மர் கிளை முழு அளவு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

      10 ஆண்டு மோடி ஆட்சியில் புதுவைக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்க சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

      மின் கட்டண விலையை கேட்டால் ஷாக் அடிக்கிறது. துணை நிலை ஆளுநர் மூலம் அரசியல் கூத்துகளை அரங்கேற்றி வருகின்றனர்.

      கிரண்பேடிக்கு பிறகு சகோதரி தமிழிசை வந்தார். புதுவையில் உட்கார்ந்துகொண்டு, தமிழக அரசியலை பேசினார். தேர்தல் வந்தவுடன் பா.ஜனதாவுக்கு திரும்ப சென்றுவிட்டார். புதுவை வரலாற்றில் கவர்னர் மாளிகையில் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுதான் புதுவைக்கு பா.ஜனதா செய்த சாதனை.

      ரங்கசாமியை தங்கள் பேச்சை கேட்க சொல்லி பாடாய் படுத்துகிறார்கள். ரங்கசாமி தனி கட்சி தொடங்க காரணமே நமச்சிவாயம் தான்.

      இப்போது அவருக்காக ரங்கசாமி ஓட்டு கேட்டு வருகிறார். நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறினார் என்று கணக்கு போட்டால் தலையே சுற்றுகிறது.

      இவ்வாறு அவர் பேசினார்.

      • பா.ஜனதா ஆட்சியில் இடஒதுக்கீடு தத்துவத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது.
      • 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பா.ஜனதா மத்திய அரசின் கேபினட் அமைச்சகத்தில் வெறும் 3 சதவீத அளவுக்கே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.

      சென்னை:

      தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், கோர்ட்டுகள் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகமாக பெண்கள் பணிபுரிகிறார்கள்.

      உள்ளாட்சி நிறுவனங்களைக் கவனித்தால், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மேயர்கள் என எங்கும் பெண்கள் அமர்ந்து ஜனநாயக கடமையாற்றுவதைப் பார்க்கலாம். இவை எல்லாம் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திகழ்ந்து வரும் அதிசயங்கள்.

      1989-ம் ஆண்டில் கருணாநிதி ஓர் ஆயுதத்தை கையில் எடுத்தார். இடஒதுக்கீடு என்ற ஆயுதம்தான் அது. தி.மு.க. தேர்தலில் வென்றால், அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 1989-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார்.

      அதன்படி அவர் வெற்றிபெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றபிறகு முதல் அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட முடிவெடுக்கப்பட்டது. 3.6.1989-ல் கருணாநிதி பிறந்த நாளில், அரசாணை வெளியிடப்பட்டு, பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அரசு பணிகளில் வழங்கும் பணி தொடங்கியது.

      அதனால்தான், எல்லா அலுவலகங்களிலும் மகளிர் 100-க்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். அதேபோல, கருணாநிதி, 1996 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார்.

      அந்த தேர்தலில் வென்ற 1 லட்சத்து 16 ஆயிரத்து 747 மக்கள் பிரதிநிதிகளில் 44,143 பெண்கள் வெற்றி பெற்று வார்டு உறுப்பினர்கள் முதல் மாநகராட்சி மேயர்கள் வரை பொறுப்பேற்ற ஒரு மாபெரும் ஜனநாயக புரட்சி தமிழ்நாட்டில் அரங்கேறியது.

      இவை மட்டுமல்ல, 1989-ல் அரசு பணிகளில் மகளிருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு கருணாநிதி வழங்கினார். இதனால் எல்லா அரசு அலுவலகங்களிலும் அதிக எண்ணிக்கையில் மகளிர் பணிபுரிகின்றனர்.

      குரூப்-1 பணிகள் மூலம் அரசு பணிகளில் சேரும் மகளிர் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் தலைமைப் பதவிகளில் வீற்றிருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

      இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் 323 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெண்கள் மட்டும் 96 பேர். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் செயலாளர்கள், முதலமைச்சரின் செயலாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்களாக பெண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

      38 மாவட்ட கலெக்டர்களில் 17 பேர் மகளிர் கலெக்டர்களாக வீற்றிருந்து மாவட்ட நிர்வாகங்களை மிகச்சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் கருணாநிதி நடைமுறைப்படுத்திய இந்த மகளிர் இடஒதுக்கீட்டுச் சலுகையை தற்போதுதான் சில மாநிலங்கள் பின்பற்ற தொடங்கியுள்ளன.


       

      இப்படி மகளிர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடுகள் மூலம் கருணாநிதி வழியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்ற பின் சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

      2021 தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கி பெண்குலம் போற்றுகிறார்கள். கல்லூரி மாணவிகள் 4 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி அவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கிறார்.

      ஆனால், பா.ஜனதா ஆட்சியில் இடஒதுக்கீடு தத்துவத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மூலமாக மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடுகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவனம் செய்தார்.

      ஆனால், 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பா.ஜனதா மத்திய அரசின் கேபினட் அமைச்சகத்தில் வெறும் 3 சதவீத அளவுக்கே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். 27 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இனியும் பா.ஜனதா ஆட்சி தொடர்ந்தால் இடஒதுக்கீடுகள் மத்திய அரசில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் கூட நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும்.

      தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி முடக்கப்படும். பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகி விடும். அந்த நிலையை இப்போதே முயன்று தடுத்திடல் வேண்டும். பா.ஜனதா ஆட்சி மத்தியில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய ஒவ்வொருவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டிய தருணமிது. இதைத் தவறவிட்டால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும்.

      மாநிலங்களின் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும். விழிப்புடன் இருப்போம். இந்தியா கூட்டணி ஆட்சியை அமைப்போம். நாடும் நாமே நாற்பதும் நாமே என்ற நிலையை உருவாக்குவோம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
      • மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா போட்டியிடுகிறார்.

      சிதம்பரம்:

      பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

      இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடந்து வரும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

      2, 3 தலைமுறைகளாகத்தான் நம் வீடுகளில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வருகிறார்கள். முன்பெல்லாம் அத்திபூத்தார்போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உருவாவார்கள். இப்போது அப்படியல்ல. இப்போது நிறைய பேர் பதவிக்கு வருகின்றனர்.

      இதெல்லாம் பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. 'இந்த வேலைக்கு இவர்களெல்லாம் வந்துடறாங்களே' என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா... அந்த ஃபேனை போடு'என கதறுவார்கள்.

      இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க, என்ன என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜகவுடன்தான் - பாமக கூட்டணி அமைத்துள்ளது

      இந்தியா கூட்டணி, மக்களுக்கான கூட்டணி. இந்தியா கூட்டணிதான், சமூக நீதி கூட்டணி.

      வளர்ச்சி அடைந்த நாடு உருவாக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

      மோடிக்கும், சமத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. பலரின் தியாகத்தால் கிடைத்தது தான் சமூக நீதி. இட ஒதுக்கீட்டை பறிக்க பா.ஜ.க பல வழிகளில் முயற்சித்து வருகிறது.

      மதச்சார்பின்மை பற்றி மோடி பேசுவதில்லை. பன்முகத்தன்மையை மாற்ற நினைக்கும் மோடி வேண்டாம். பா.ஜ.க-பா.ம.க சந்தர்ப்பவாத கூட்டணி.

      மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. மோடி மீண்டும் பிரதமரானால் மக்களை சிந்திக்கவிட மாட்டார்கள்.

      பா.ஜ.க.வின் திட்டங்கள் மிகவும் மோசமானது, ஆபத்தானது.

      இரண்டாம் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்த வாய்ப்புதான் இந்தியா கூட்டணி என தெரிவித்தார்.

      • அ.தி.முக. என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா?
      • அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அ.தி.மு.க!

      சென்னை :

      தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

      தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.

      53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்திற்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என நமது சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்!

      கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு ஒன்றிய அரசுக்கு இணையான - ஒன்றிய அரசு உயர்த்துகிற அகவிலைபடி உயர்வை அப்படியே வழங்கி வருகிறது நமது அரசு.

      அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடியபோது, போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளான வழக்குகள், துறைரீதியான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் ரத்து செய்து, போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கி இருக்கிறோம்.

      நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையான, தொடக்கக் கல்வித்துறையைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட ஆணை பிறப்பித்து இருக்கிறோம். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று பல ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வந்து வந்திருக்கிறோம். ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது, 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது, பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதிநிலை நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியது என அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ள அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.


      ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடும் பழனிசாமியின் வரலாறும் – அ.தி.மு.க.வின் வரலாறும் எப்படிப்பட்டது?

      ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து - அசிங்கப்படுத்தி - எள்ளி நகையாடி- அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி.

      இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

      தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதலமைச்சராக இருந்துகொண்டே மிக மோசமாகக் கிண்டலடித்து மேடையில் பேசி, அவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டு, இப்போது கபட நாடகமாடி ஏமாற்றத் துடியாய் துடிப்பது யார்? பழனிசாமிதான்!

      அ.தி.முக. என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா? அ.தி.மு.க.வால் அரசு ஊழியர்கள் அனுபவித்த வேதனைகளும் – துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறதே! அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அ.தி.மு.க!

      எஸ்மா - டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும் - அடக்குமுறை செய்ததும்தானே அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலம்! அந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்பது வரலாறு!

      இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சி நடத்திவிட்டு உத்தமபுத்திரன் போல் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?

      ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து விட்டுப் போனார். ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனார்? இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும் – துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறதே தவிரே; அரசு ஊழியர்களின் மீதான அக்கறை எள்முனையளவும் இல்லை!

      பழனிசாமியும் அவரது கட்சியும், தமிழ்நாட்டை வஞ்சித்து – கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்நாட்டை மீட்டெடுத்து – நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அப்படிச் செய்யப்பட்ட திட்டங்களைத்தான் பட்டியலிட்டேன்.

      மீதியுள்ள கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் அழைத்துப் பேசுவதும் – ஏன், நானே அழைத்துப் பேசி தீர்வு காண்பதும் - தீர்வு காணப்படும் என உறுதியளிப்பதும் என அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

      அதனால்தான், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசு ஊழியர்களின் நண்பனாகத் திகழ்கிறது. தங்கள் கோரிக்கைகளை அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.

      அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கி விட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான்!

      "உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தருவேன்" என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேசிச் சொல்லியிருக்கிறேன்.

      இதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை.

      எனவே, தி.மு.க.வின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம் – பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம்!

      அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்…

      நிச்சயம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன்- தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.

      எனவே, "திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்" என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட நமது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

      இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

      • அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் புகழேந்தி உயர்ந்தார்.
      • புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

      சென்னை:

      தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

      விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.

      கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

      1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

      1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி - மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

      ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர்.

      • தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
      • கோவைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் இந்தியா கூட்டணி கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

      கோவை:

      தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

      ஆளும் கட்சியான தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டுகள், கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

      தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

      அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமியை ஆதரித்து வருகிற 12-ந்தேதி கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

      இந்த பிரசாரத்தின் போது முதலமைச்சருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

      அன்றைய தினம் மாலையில் கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலை செட்டிப்பாளையம் அருகே பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தி எம்.பியும் ஒன்றாக இணைந்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசுகிறார்கள்.

      இந்த பொதுக்கூட்டத்திற்காக எல் அண்ட் டி புறவழிச்சாலை செட்டிப்பாளையம் அருகே 150 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்போது பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்படுகிறது.

      இதுதவிர கூட்டத்திற்கு வரும் கட்சியினர், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யும் பணி தற்போதே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், வி.சி.க உள்பட கூட்டணி கட்சியினர் என 1½ லட்சம் பேர் திரள்கிறார்கள்.

      முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தி எம்.பியும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பது இந்தியா கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

      கோவைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் இந்தியா கூட்டணி கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

      முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட உள்ளது.

      • மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
      • இரவு பிரசாரத்தை முடிக்கும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.

      கடலூர்:

      பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

      அதன்படி நேற்று கடலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் அருகே வி.சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

      தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, அங்கிருந்து கார் மூலம் கடலூர் வந்தடைந்தார். அவருக்கு மாவட்டசெயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர் இரவு கடலூரில் தங்கி ஓய்வு எடுத்தார். 

      சிதம்பரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்ட மேடை.

      சிதம்பரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்ட மேடை.

      இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இரவு பிரசாரத்தை முடிக்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.

      அங்கு அவர் அக்கார்டு ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், சிதம்பரம் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

      • தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
      • மாநில அரசிடம் இருந்த வரி வருவாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை மத்திய பா.ஜனதா அரசு பறித்துக்கொண்டுவிட்டது.

      சென்னை:

      தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தி.மு.க. 21, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 2, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 1 என போட்டியிடுகின்றன.

      மேலும், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதிமய்யத்துக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் (மார்ச்) 23-ந் தேதி முதல் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 11 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையே 'தினத்தந்தி' சார்பில் அவரிடம் கேட்கப்பட்ட விறுவிறுப்பான கேள்விகளுக்கு சுறுசுறுப்பாக பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

      கேள்வி:- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக நீங்கள் எல்லா தொகுதிகளுக்கும் சென்று வருகிறீர்கள். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவது மட்டுமல்லாமல், நடைப்பயிற்சியின்போதும் பொதுமக்களை சந்தித்து வருகிறீர்கள். மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எந்த வகையில் உள்ளது?

      பதில்:- 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தி.மு.க. 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிலேயே தொடங்கிவிட்டது. 'நாற்பதும் நமதே! நாடும் நமதே!' என்ற இலக்கு அந்த நிகழ்வில்தான் முன்னெடுக்கப்பட்டது. அதற்கேற்ப பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழுக்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. எப்போதும் மக்களுடன் இருக்கும் இயக்கமான தி.மு.க., கடந்த 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, மாணவர்களுக்கு செய்த திட்டங்களால் பயன்பெற்றவர்களை நேரில் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகிறது.

      களப்பணியில் தி.மு.க. தொண்டர்கள் தங்கள் அடிப்படையான பணியை முழுமையாக மேற்கொண்ட நிலையில்தான், தேர்தல் களப் பிரசார பணிகளில் தி.மு.க. தலைவரான நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்து வரும் திராவிட மாடல் ஆட்சி என்பதால் தி.மு.க.வுக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது.

      10 ஆண்டுகால பா.ஜனதா அரசு தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதையும், அதற்கு அ.தி.மு.க. முழுமையாக துணை போயிருப்பதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள். காலையில் அடுப்பை பற்ற வைக்கும்போது கியாஸ் விலை அவர்கள் மனதில் அனலாக கொதிக்கிறது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், பா.ஜனதா அரசின் துரோகங்களும் தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணிக்கு முழுமையான வெற்றியைத் தரும்.

      கேள்வி:- கச்சத்தீவு பிரச்சனை தற்போது பா.ஜனதா மூலம் விசுவரூபம் எடுத்துள்ளதே. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டதாக கூறி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். கச்சத்தீவு தொடர்பான இந்த புதிய தகவல்கள் தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு முகத்திரையை கிழித்துவிட்டது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?.

      பதில்:- கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் பிரதமர் மோடி தலைமையிலான இதே பா.ஜனதா ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தார். இப்போது அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக உள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவை நேரு, இந்திராகாந்தி போன்ற முன்னாள் பிரதமர்கள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாகவும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதனை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இதில் இருந்து கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது பா.ஜனதாதான் என்பதும், திட்டமிட்டே தேர்தல் நேரத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரம் விசுவரூபமும் எடுக்கவில்லை. வேறு எந்த ரூபமும் எடுக்கவில்லை.

      10 ஆண்டுகால சாதனைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்வதற்கு ஒற்றைச் செங்கல்லை தாண்டி வேறு எதுவும் இல்லாத பா.ஜனதாவில் பிரதமர், நிதி மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரி தொடங்கி கத்துக்குட்டிகள் வரை கச்சத்தீவு பற்றிய வதந்திகளை பரப்பிக் கதறுகிறார்கள். இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது பாராளுமன்ற விவாதங்களிலும், சட்டமன்றத் தீர்மானத்திலும், மத்திய மந்திரிகளுடன் கருணாநிதி நடத்திய ஆலோசனைகள் பற்றிய குறிப்புகளிலும் தெளிவாக உள்ளது.

      கடந்த 2022-ம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவிலும் பிரதமர் முன்னிலையில் கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை வைத்தேன். 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் இம்மியளவில்கூட செயல்படவில்லை. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற அந்நாட்டு அரசின் மந்திரி சபை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அந்நாட்டு மந்திரி பந்துல குணவர்த்தனே, "கச்சத்தீவு விவகாரம் குறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்த பிரச்சனை ஒருபோதும் எழுப்பப்படவில்லை" என்று தெரிவித்திருந்ததை 'தினத்தந்தி' முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.

      இதில் இருந்தே கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. 'கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு' என்பார்கள். அந்த கெட்டிக்காரத்தனம் கூட இல்லாமல் புளுகிய சில மணி நேரங்களிலேயே அம்பலப்பட்டுப் போய்விடுகிறது பா.ஜனதா.

      கேள்வி:- நீங்கள் குடும்ப அரசியல் செய்வதாக தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

      பதில்:- நான் கருணாநிதியின் மகன் என்பதும் - உதயநிதி என்னுடைய மகன் என்பதும் ஊரறிந்த உண்மை. ஒரு கலைஞர் குடும்பம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொண்டரின் குடும்பமும் தி.மு.க.வைத்தான் முதல் குடும்பமாக நினைக்கிறது. தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குமரி அனந்தனின் மகள் தமிழிசை, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா உள்ளிட்ட பலருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ள மோடி, தமிழ்நாடு வந்ததும் ஞாபகமறதி ஏற்பட்டு, குடும்ப அரசியல் என்று குற்றம்சாட்டுகிறார். கதையை (ஸ்க்ரிப்ட்) மாற்றட்டும்.

      கேள்வி:- புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தும்போது, கடன் வாங்குகிறோம். தற்போதைய நிலையில் ரூ.7.26 லட்சம் கோடி கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. சொந்த வருவாயும் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 814 கோடி என்ற அளவில்தான் இருக்கிறது. உயர்ந்து கொண்டிருக்கும் கடன் அளவைக் குறைக்க சொந்த வருவாயைப் பெருக்கும் வகையில் திட்டம் எதுவும் வகுக்கப்பட்டுள்ளதா?.

      பதில்:- மாநில அரசிடம் இருந்த வரி வருவாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை மத்திய பா.ஜனதா அரசு பறித்துக்கொண்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கு திருப்பி அளிக்கக்கூடிய வரிப்பங்கீடும் மிகக் குறைவாக உள்ளது. அதனால்தான் புதிய திட்டங்களுக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது. அதுவும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள்தான் இருக்கிறது.

      கேள்வி:- 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. அறிவித்தது. ஆனால், இந்த தேர்தலில் யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?

      பதில்:- 'இந்தியா' என்ற பெயர்தான் எங்கள் வேட்பாளர். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு இந்தியாவுக்கு புதிய திறமையான மக்கள் மேல் அக்கறைக் கொண்ட நல்ல பிரதமர் கிடைப்பார்.

      இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

      • விழுப்புரம், கடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
      • பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

      விழுப்புரம்:

      விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

      நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது; இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

      ஜனநாயகம், சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

      இந்தியாவை பா.ஜ.க.விடம் இருந்து மீட்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டிய தேர்தல் இது.

      அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டை போராடி பெறவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. அரசு தள்ளியிருக்கிறது.

      போராடி பெற்ற இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான்.

      பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது.

      சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவர் பிரதமர் மோடி.

      தி.மு.க.விற்கு சமூக நீதி என்பது உயிர்மூச்சான கொள்கை. சமூகநீதி, சமத்துவத்தை நோக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

      பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது.

      பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த பா.ம.க. தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளது.

      நாம் செயல்படுத்திய காலை உணவு திட்டம் கனடா வரை சென்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், கிராம பொருளாதாரம் உயர்கிறது.

      எடப்பாடி பழனிசாமி வாயை திறந்தாலே பொய் தான் வருகிறது. வெள்ளம் வந்தபோது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார் என தெரிவித்தார்.

      • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
      • இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி - மு.க.ஸ்டாலின்

      மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

      காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

      இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

      "அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

      நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை.

      அதனால்தான் சொல்கிறோம். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி" என்று பதிவிட்டுள்ளார்.

      காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

      * கடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் பலவீனம் அடைந்து விட்டது.

      * நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

      * மத்திய அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.

      * அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும்.

      * மத்திய அரசு பணிகளில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும்.

      * பா.ஜ.க. ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

      * மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.

      * மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

      * 2025-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

      * 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

      ×