search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, இங்கு எந்த கட்சியினராலும் நுழைய முடியாது.
    • இரட்டை வேடம் போடும் கட்சிதான் தி.மு.க. அ.தி.மு.க. அப்படி அல்ல.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒவ்வொரு இடமாக சென்று வருகிறேன். எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளமாக திரண்டு வருகிறார்கள். அதை பார்த்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால்தான் அவர் ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்.

    கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, இங்கு எந்த கட்சியினராலும் நுழைய முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அந்த மாவட்டத்தில் போட்டியிடும் நமது வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவருடைய வெற்றி அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறாது என்று பேசி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அவர் கண்ட கனவு வேறு. கூட்டணி பலம் அதிகமாக இருக்கிறது, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று நினைத்தார். அது பகல் கனவாக போனது. கூட்டணி அனைத்து கட்சிகளுக்கும் தேவைதான். ஆனால் அ.தி..மு.க.வுக்கு மக்கள் பலம் உள்ளது.

    நீங்கள் கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறீர்கள். ஆனால் அதி.மு.க. மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் பலம்தான் வலிமையானது. அந்த மக்கள் பலத்தால்தான் வெற்றி பெற முடியும். அது எங்கள் பக்கம் இருக்கிறது. அ.திமு.க. உழைப்பாளிகள் அதிகமாக இருக்கும் கட்சி. நாங்கள் உழைப்பு, மக்களை நம்பி இருக்கிறோம். எனவே இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி நிச்சயம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும். எங்கள் கட்சி தொண்டன் பேச ஆரம்பித்துவிட்டால் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. அ.தி.மு.க.வில் அனைவருமே சமம். அனைவருக்கும் பொறுப்பும், உணர்வும், லட்சியமும் இருக்கிறது.

    அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை அறிவித்ததால் அதன் மூலம் மக்கள் ஏராளமான பயன் பெற்றனர். நீங்கள் பொறுப்பேற்று இந்த 3 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் போட்டோம் என்று மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். நீங்கள் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. அதனால்தான் உங்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. அதி.மு.க.வை விமர்சனம் செய்கிறீர்கள்.

    அ.தி.மு.க. இருண்ட ஆட்சி என்று பேசி வருகிறீர்கள். நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தை போடுங்கள், உங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நீங்கள் பேசுங்கள், எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நானே நேரில் வந்து பேசுகிறேன். எந்த இடத்துக்கும் வந்து பேச நான் தயார். 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். வேண்டும் என்று திட்டமிட்டு அவதூறு பரப்பி பொய்யான குற்றத்தை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். அ.தி.மு.க. மீது நீங்கள் கூறும் பொய் பிரசாரம் எடுபடாது.

    நாங்கள் பா.ஜனதாவை கண்டு பயப்படவில்லை. இந்தியாவில் உள்ள எந்த கட்சியை கண்டும் எங்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை. இதனால் யாரையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. தி.மு.க.தான் பா.ஜனதாவுடன் ரகசியமாக கூட்டணி வைத்து உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் கோ பேக் மோடி என போராட்டம் நடத்தினீர்கள். ஆளும்கட்சியான பிறகு வெல்கம் மோடி என்றீர்கள்.

    பிரதமர் மோடியை தமிழகத்துக்கு 6 முறை அழைத்து வந்து, நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உதவி செய்தீர்களே.

    இரட்டை வேடம் போடும் கட்சிதான் தி.மு.க. அ.தி.மு.க. அப்படி அல்ல. தமிழகத்துக்கு நலம் சார்ந்த பிரச்சனை என்றால் அதை எதிர்ப்போம். தமிழகத்துக்கு நன்மை தரும் திட்டம் என்றால் அதை வரவேற்போம். தற்போது நாங்கள் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டோம். நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது தி.மு.க.வுக்கு பிடிக்க வில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் அதைபற்றி பேசி வருகிறார்கள்.

    எங்கள் மீது குறை சொல்ல எதுவுமே இல்லை. இதனால்தான் எங்களை பற்றி மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தற்போது அவர் 23-வது புலிகேசி படத்தில் வடிவேலு வருவதுபோன்று தான் செய்து வருகிறார். எனவே அவருக்கு வெள்ளை குடை பிடித்த வேந்தர் என்று பட்டம் கொடுக்கலாம்.

    தற்போது கச்சத்தீவு குறித்த பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. அந்த கச்சத்தீவு குறித்து பேச அ.தி.மு.க.வுக்குதான் தகுதி இருக்கிறது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததில் இருந்து அதை மீட்டெடுக்க அ.தி.மு.க. போராடி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.

    2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. உடனே பிரதமர் மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேர்தல் வந்துவிட்டதால் கிடப்பில் போடப்பட்ட கச்சத்தீவை கையில் எடுத்து உள்ளனர்.

    கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருந்து வருகிறது. ஆனால் அந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. அப்படி பதில் மனு தாக்கல் செய்து, ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மறுபரிசீலனை செய்வோம் என்ற வாக்கியத்தை சேர்த்து மனு தாக்கல் செய்தால் தானாகவே கோர்ட்டு மூலம் அந்த கச்சத்தீவை நாம் பெற முடியும்.

    ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. மீனவர்களின் வாக்குகள் தேவை என்பதால் தற்போது அந்த பிரச்சனையை பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்களே அப்போது அவர்கள் எங்கே சென்றார்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவது தொடர்பாக ஏதாவது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணினாரோ?, இல்லையே.

    மத்தியில் ஆட்சி செய்த பா.ஜனதாவுக்கும், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வுக்கும் மீனவ மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. மீனவ மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, கோர்ட்டு மூலம் கச்சத்தீவை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த தீவை மீட்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.
    • விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

    சென்னை:

    சென்னை தங்க சாலை, அரசு அச்சகம் அருகில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய இரண்டு அணிகள் நம்மை எதிர்க்கிறார்கள் என்று மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது தோன்றும். இரண்டு அணிகளும் ஒன்றுதான். ஒரு அணிதான்.

    காரணம் இல்லாமல் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். காரணத்தோடுதான் அவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு முன்னால் வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி நாள்தோறும் நரேந்திர மோடியுடனும், அமித்ஷாவுடனும் பேசிக் கொண்டிருந்தார். கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இப்பொழுது கூட்டணி இல்லை போன்று தோற்றமளிக்கிறது.

    தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்று நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    அ.தி.மு.க. மேடையிலே குறிப்பாக பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியை விமர்சிப்பது கிடையாது, பாரதிய ஜனதா கட்சி மேடையிலும் அ.தி.மு.க.வை விமர்சிப்பது கிடையாது.

    இரண்டு திசையிலிருந்து அம்பை எய்கிறார்கள் ஒழிய, அந்த இரண்டு அம்புகளும் நம் மீதுதான் பாய்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. ஆக தேர்தலுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள்.

    எடப்பாடி பழனிசாமிக்கு நான் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். மோடி உங்களை தழுவுவார், அது மரணத் தழுவல், உங்களை தழுவியவுடன் கூரு கூராக, உங்கள் கட்சி உடைந்து விடும். இதுதான் நடக்கும்.

    மாயாவதி கட்சி இருந்த இடம் தெரியாமல் போச்சு. தெலுங்கானாவில் சந்திர சேகர் ராவ் கட்சியைத் தழுவினார். அந்த கட்சி படுதோல்வி அடைந்து இப்போ அந்த கட்சி சின்னாபின்னமாகி விட்டது.

    "மரணத் தழுவல்" என்று தமிழ்ச்சொல் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேடல் எம்பிரேஸ். பாரதிய ஜனதா கட்சி யாரை தழுவினாலும், அவர்கள் பஸ்பம் ஆகிவிடுவார்கள். அந்த விளைவு தான் அ.தி.மு.க.வுக்கும் காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னாடி அந்த கட்சி ஏற்கனவே 2-3 கூறுகளாக பிரிந்து இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்த பிறகு, இன்னும் மோசமாகிவிடும். அதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.

    பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.

    பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமெல்லாம் கட்சியை முடக்க வேண்டும். கட்சி கணக்குகளை முடக்க வேண்டும். ஒடுக்க வேண்டும். பிறகு அழிக்க வேண்டும். எத்தனை கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து அழிந்து போயிருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சி பீகாரில் எண்ணற்ற கட்சிகள். ஆந்திராவில் சந்திர சேகர் ராவ் கட்சி எல்லாம் அழிந்து போய்விட்டன.

    அவர்கள் நோக்கம் என்ன? இந்தியாவுல நாடு முழுவதும் தடம் பதித்த காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டால் பிறகு மற்ற கட்சிகளெல்லாம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மாநில கட்சிகள் தானே? திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டின் முதல் கட்சி வலிமையான கட்சி, யாரும் மறுக்க முடியாது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக நண்பர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

    ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியிலேயே வந்ததால் ஜனநாயகம் நிலைத்திருந்தது. ஜனநாயகத்துக்காக போராடியவர்கள் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் நம்மை தலைமை ஏற்று நடத்தியதால் ஜனநாயகம் இருந்தது. அந்த ஜனநாயகத்துல தான் மோடி தப்பித்தவறி பிரதமராக வந்துவிட்டார்.

    விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

    இந்த மூன்று ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த முத்தான திட்டங்களை நான் சொல்கிறேன். 1,15,00,000 குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை. எங்களையும் நெகிழ வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அன்று கேலி பேசினார்கள். ஆனால் இன்று நாடு முழுவதும் மதிய உணவு திட்டம் கட்டாயத்துக்கானது. அதே அளவுக்கு புகழும் பெயரும், இன்றைய தேதியை குறிச்சிக்குங்க, நேரத்தை குறிச்சிக்குங்க. பெருந்தலைவர் காமராஜருடைய மதிய உணவு திட்டம், அவருக்கு நாடு முழுவதும் புகழையும் பெயரையும் பெற்றுத் பெற்றுத் தந்ததோ அதைப்போல் காலை சிற்றுண்டி திட்டம், ஒரு நாள் நாடு முழுவதும் பரவும். நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் பெயரும், புகழும் ஓங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மேயர் பிரியா ராஜன், இந்தியா கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், வருகையால் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கணேசன் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    இதற்காக விழுப்புரம் வி.சாலை பகுதியில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமிட்டல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பாதுகாப்பு பணியில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 30 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், வருகையால் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவையில் வரும் 12ம் தேதி பிரமாண்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அப்போது,

    அண்ணாமலைக்கு எதிராக ஆதரவு திரட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி வருகிற 12ம் தேதி தமிழகம் வருகிறார். அன்று காலையில் நெல்லையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து பேசும் ராகுல்காந்தி மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து 12ம் தேதி மாலையில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    கோவையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், அண்ணா மலைக்கு எதிராகவும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் பேச உள்ளனர்.

    இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., இணைந்து வருகிற 12-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி 6-வது முறையாக வருகை தரும் நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரபல தலைவர்கள் யாருமே பிரசாரத்துக்கு வராமலேயே இருந்தனர்.

    இந்த நிலையில் தான் ராகுல்காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ராகுல்காந்தி வருகையை யொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார்.
    • விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

    இதற்காக வி.சாலை பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    இக்கூட்டத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமிட்டல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பொதுக்கூட்ட மைதானம் மற்றும் முதலமைச்சர் வருகை தரும் வழிநெடுகிலும் என 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    விழுப்புரம் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு தங்கும் அவர், மறுநாள் 6-ந் தே தி (சனிக்கிழமை) சிதம்பரம் லால்புரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
    • மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

    சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

    சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

    இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.

    இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான்.
    • இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது; இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான்.

    இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    ஜனநாயக போர்க்களத்தில் மனசாட்சியும் மக்களுமே என்றும் எஜமானர்கள். இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

    பா.ஜ.க. ஆண்டதும் போதும்.. மக்கள் மாண்டதும் போதும். சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

    தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி.

    அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

    உத்தர பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும்போதே, பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.

    இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்.

    10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.

    மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இதுமாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை பிரதமர் மோடி மந்திரியாக வைத்திருக்கிறார்.

    சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார்.

    மிக்ஜம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார்.

    மக்களை தப்பு கணக்கு போடாதீர்கள்; நீங்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்தார்.

    • 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.
    • ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது.

    பாஜகவின் 'வாஷிங் மெஷின்' பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க.வின் 'வாஷிங் மெஷின்' பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!

    பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

    10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

    "பேச நா இரண்டுடையாய் போற்றி" எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

    மோடியின் குடும்பம் என்பது 'E.D – I.T. – C.B.I.'தான்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள்.
    • உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

    மாநிலங்களவையில் 33 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து தாங்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காகத் தி.மு.க.வின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள். உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.

    வாழ்வில் புதிய கட்டத்தை நோக்கித் தாங்கள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்திய ஒன்றியத்துக்கும் இந்திய மக்களுக்கும் நீங்கள் ஆற்றிய பெருந்தொண்டினை எண்ணிப் பெருமை கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    தி.மு.கழகம் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் தாங்கள் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழவும், அடுத்து தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் மனநிறைவெய்தவும் விழைகிறேன். தங்களது அறிவாற்றலாலும், தொலைநோக்குப் பார்வையாலும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிப்பீராக.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
    • பெண் வியாபாரி ஒருவர் முதலமைச்சருக்கு ஆர்வமுடன் பூ கொடுத்தார்.

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை அருகே உள்ள சோ.காட்டுக்குளத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருவண்ணாமலை, ஆரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதில் பங்கேற்க நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    நேற்று இரவு அருணை கல்லூரி வளாகத்தில் தங்கினார். இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் வந்தார்.

    கோவில் மாடவீதி, கல்லை கடை சந்திப்பு அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    நடைபாதை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகள் சேகரித்தார். பின்னர் மாடவீதியில் நடந்து சென்று, சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் வாக்குகள் கேட்டார்.

    ஜோதி பூ மார்க்கெட் சென்றார். வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்குகள் கேட்டார்.

    மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்போது அனைத்து வியாபாரிகள் சார்பில் மலர்மாலை, சால்வை அணிவித்து, மலர் தூவி வரவேற்றனர். நடந்து சென்ற முதலமைச்சர் மீது மலர் தூவினர்.

    அப்போது பெண் வியாபாரி ஒருவர் முதலமைச்சருக்கு ஆர்வமுடன் பூ கொடுத்தார். அதனை சிரித்தபடி முதலமைச்சர் வாங்கிக் கொண்டார். அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு சென்று கற்பூரம் விற்பனை செய்யும் பெண்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு கேட்டார்.

    இதனை தொடர்ந்து ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதிக்கு நடந்து சென்றார். அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது முதலமைச்சருடன் ஏராளமானோர் 'செல்பி' எடுத்துக்கொண்டனர். பள்ளி மாணவிகள் அவருடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியில் உற்சாகமாக சென்றனர்.

    கடைசியாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள டீ கடையில் மு.க.ஸ்டாலின் இஞ்சி டீ குடித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தால் மாடவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பிரசாரத்தின்போது பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • வேலூர், அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
    • அப்போது பேசிய அவர், தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றார்.

    வேலூர்:

    வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் வாக்காளர்களான நீங்கள் 'அவர்களை' தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    தி.மு.க.வின் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைகிறார்கள். இன்று காலை, சமூக வலைதளத்தில் கனடா நாட்டின் பள்ளிகளில் உணவுத்திட்டம் வழங்கப்படுவதாக செய்தியைப் பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'ஒன்றிணைவோம் வா' என உங்களுக்காக பணியாற்றுவோம். ஆட்சியில் இருந்தால் திட்டங்களை நிறைவேற்றி 'நீங்கள் நலமா?' என உங்களிடம் கேட்போம்.

    பொய்களையும், அவதூறுகளையும் துணையாக அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. தேர்தல் முடிந்ததும் அவர்கள் தமிழ்நாட்டின் பக்கமே வர மாட்டார்கள்; நிதி கேட்டா தர மாட்டார்.

    பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?

    இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய என் மீது, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

    தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

    • தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்’ இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது
    • தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தற்போது 6500000 உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

    கனடா நாட்டிலும் 'காலை உணவுத் திட்டம்' நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' இந்தியா முழுவதும் வரவேற்பை பெரும் நிலையில், வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுக பெருமிதமாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "மாண்புமிகு தமிழ்நாடு அவர்களின் கனவுத் திட்டமாக முதலமைச்சர் திரு.மு.கூ.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110 ன் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் அறிவித்தார்.

    நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது என்றும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள்.

    இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான 15.92022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தார்கள். மேலும், 258.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார்கள். அதன் மூலம் 31000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகின்றனர்.

    இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே தெலுங்கானா மாநிலத்தில் தற்போது உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இன்று கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்" என திமுக தெரிவித்துள்ளது.

    ×