search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயக்குமார் தனசிங்"

    • மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது.
    • 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்

    தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட் டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டனர்.

    நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. கியாஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். அதுவும் அப்படியே இருக்கிறது. பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்கான விலையை குறைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.

    மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த 2 ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது. அதுதான் உண்மையான கள நிலவரம். தி.மு.க. ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

    நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? அழுத்தமா? என்று தெளிவாக தெரியவில்லை.

    புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது.

    3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். தமிழகம் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது. தற்போது போலீசார் ஜெயக்குமார் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இரும்பு பிரசின் பிளாஸ்டிக் கவர் அவரது வீட்டின் உள்ளே உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம்.
    • எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.

    தூத்துக்குடி:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல்துறையினர் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

    நண்பர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர். அவருடைய மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் நடந்திருக்கக்கூடாது. இதைபற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன்.

    தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது. நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம்.

    விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.

    • ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார்.
    • விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார். அந்த கடிதங்களில் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை எழுதி யாரெல்லாம் தனக்கு பணம் தர வேண்டும், மிரட்டல் விடுத்தவர்கள் யார், யார் என குறிப்பிட்டு இருந்தார்.

    அந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்த நிலையில், விசாரணைக்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படையினர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.

    இந்த நிலையில், நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு தொடர்பாக நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

    • ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது
    • கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    பல்வேறு கோணங்களில் விசாரணையை நகர்த்தி வரும் சூழ்நிலையில் கொலையா? அல்லது தற்கொலையா? என்று உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் இருந்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது. அதில் ஒன்று கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எனவும், மற்றொரு கடிதம் 27 மற்றும் 30-ந்தேதி என குறிப்பிடப்பட்டு அவரது மருமகனுக்கும், குடும்பத்தாருக்கும் என்றும் எழுதியதாக வெளிவந்தது

    இந்த 2 கடிதங்களையும் அவர், தன் கைப்பட எழுதினாரா அவரது கையெழுத்து தானா என்று போலீசார் உறுதி படுத்துவதற்காக அதனை தடய அறிவியல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கடிதத்தை ஆய்வு செய்த நிலையில், அவரது பழைய கடிதங்களில் உள்ள எழுத்துக்களை இந்த கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.

    அதில் 2 கடிதங்களையும் ஜெயக்குமார் தனது கைப்பட எழுதியுள்ளார் என்று தடய அறிவியல் அலுவலர்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    • ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

    பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும்.

    இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதனிடையே ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.

    முன்னதாக, 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மேலும் மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது.
    • ஜெயக்குமார் வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றபோது தனது காரை எடுத்துச்சென்றுள்ளார்.

    அப்போது அவர் தனது 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அவரது தோட்டத்திற்கு சற்று தொலைவில் நின்ற அவரது காரை போலீசார் கண்டுபிடித்த நிலையில் அவரது செல்போன்கள் இதுவரை போலீசாரின் கையில் சிக்கவில்லை.

    அந்த செல்போன்கள் எங்கே மாயமானது என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அதனை கைப்பற்றினால் தான் அவரது செல்போனுக்கு கடைசியாக யார் தொடர்பு கொண்டார். அவர் மாயமான 2-ந்தேதி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் யாருக்கெல்லாம் அவர் தொடர்பு கொண்டு பேசினார் என்ற விபரம் தெரியவரும் என்பதால் அதனை தேடி வருகின்றனர்.

    அதே நேரத்தில் அவரது வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.

    இதனால் யாரேனும் கேமராவை திட்டமிட்டு பழுதாக்கினார்களா? அல்லது கேமரா வேலை செய்யவில்லை என்பதை நன்கு தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

    • விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.
    • ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 2 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

    ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதங்கள் வெளியான நிலையில், நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    புகார் அளித்த கடந்த 3ம் தேதி அன்றே உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன், இந்த கடிதத்தையும் கொடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடிதத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாக நெல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.

    ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சடலமாக மீட்கப்பட்டதால், இயற்கைக்கு மாறான மரணம் என தற்போது வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    • கொல்லப்பட்ட ஜெயக்குமார் மாவட்ட தலைவர் என்பதால் நெல்லை தொகுதி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
    • தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை விசாரித்தால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், அவருக்கு சொந்தமான தோட்டத்திலேயே எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதில் இருந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

    இந்த படுகொலையை சாதாரணமான கொலை சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. கொல்லப்பட்டவர் அப்பகுதியில் செல்வாக்கானவர். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர். நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு நன்கு தெரிந்தவர். கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. அத்தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி இருந்தது. கடைசி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளன.

    கொல்லப்பட்ட ஜெயக்குமார் மாவட்ட தலைவர் என்பதால் நெல்லை தொகுதி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ராகுல்காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்ட வரவு-செலவு கணக்குகள் மற்றும் தேர்தல் நிதி விவகாரங்களில் அவருக்கு முக்கிய தலைவர்களுடன் முன் விரோதம், கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எந்த வழக்காக இருந்தாலும், குறிப்பாக அரசியல் தொடர்பான வழக்குகளாக இருந்தால் தி.மு.க.வினர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் காவல்துறையினர் செயல்படுத்துவார்கள்.

    எனவே, தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை விசாரித்தால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை. எனவே, இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன?

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமே கொலைகார நகரமாக மாறிவிட்டது. நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

    புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்து விட்டு தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உயிர் பறிபோன பிறகு கொலையாளியை பிடிக்க தனிப்படை என்று அரசு கூறி வருகிறது.

    அது மட்டுமல்ல மணல் கடத்தலை தட்டி கேட்ட வி.ஏ.ஓ. படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக தான் கூறியதால் எனக்கு பாதுப்பு வேண்டும் என்று ஆடு மேய்க்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்ததால் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக மக்களே அச்சத்தில் உறைந்து உள்ளனர். மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

    இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். கும்பகர்ணன் கூட ஆறு மாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்து விடுவான். ஆனால் இந்த அரசு விழிக்காமல் காவல்துறையே கோமா நிலையில் உள்ளது.

    நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடைபடிப்பிற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

    கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள். நீட் தேர்வு எழுத முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிறபோது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சதவீதம் தான் உள்ளது.

    ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன? நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கே.பி.கே. ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தற்போது தலைமறைவு ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், இன்று மாலைக்குள் வழக்கின் முழு விவரம் வெளியாகும் எனவும் போலீஸ் மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

    கொலையா? அல்லது தற்கொலையா? என்பதில் தொடர்ந்து முரண்பாடான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில் ஓரிரு நாட்களில் வழக்கின் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்குவதற்காக கே.பி.கே. ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தற்போது தலைமறைவு ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் விவரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    இதற்கிடையே, ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், இன்று மாலைக்குள் வழக்கின் முழு விவரம் வெளியாகும் எனவும் போலீஸ் மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
    • போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் இன்று 2-வது நாளாக ஆய்வு செய்தார்.

    மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையிலான குழுவினரும் இன்று 2-வது நாளாக சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    அப்போது போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்கள் அங்கேயே விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×