search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி தனிமையில் பவித்ர உற்சவம் நடந்தது.
    • பவித்ர உற்சவத்தில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

    திருப்பதியில் கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பவித்திர உற்சவம் நடந்தது. பவித்திர உற்சவத்தையொட்டி வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    கொரோனா தொற்று பரவல்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி தனிமையில் பவித்ர உற்சவம் நடந்தது. இந்த ஆண்டு பவித்ர உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

    பவித்ர உற்சவத்தில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

    மேலும் சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறை ஆகியவற்றையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வைகுந்தம் காம்ப்ளக்ஸ் 25 அறைகளும் நிரம்பி நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். 15 முதல் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

    நேற்று திருப்பதியில் 74,497 பேர் தரிசனம் செய்தனர். 36,244 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • யாகசாலையில் ஹோமம் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று புனித பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக காலையில் யாகசாலையில் ஹோமம் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, ஸ்ரீவாரி மூலவர், உற்சவமூர்த்திகள், கோவில் பரிவார தெய்வங்கள், கொடிமரம், பூவராஹசுவாமி, பேடி ஆஞ்சநேயசுவாமி ஆகியோருக்கு வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க பவித்ரமாலை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் பேத்த ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • புரட்டாசி மாதம் செப்டம்பர் 18-ந்தேதி தொடங்கி அக்டோபர் 17-ந்தேதி முடிவடைகிறது.
    • முக்கிய நாட்களில் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    நாளை (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வார இறுதி நாட்கள் கூட்டமும், திருவிழாவும் வருகிற 19-ந்தேதி வரை நீடிக்கும். மேலும் புனித மாதமான புரட்டாசி மாதம் செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 17-ந் தேதி முடிவடைகிறது.

    இந்த நேரத்தில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே முதியோர்கள், மாற்றுத்திறனா்ளிகள், சிறுகுழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    முக்கிய நாட்களில் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் தயாராக வந்து தரிசனத்திற்கான முறை வரும் வரை கம்பார்ட்மெண்ட்களிலும், வரிசைகளிலும் பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தோஷ நிவர்த்திக்காக ஆண்டு தோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
    • ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடக்கிறது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார்கள். பூஜை முறைகளில் அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆண்டு தோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான 3 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று பவித்ர பிரதிஷ்டை நடந்தது. முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள யாக சாலைக்குக் கொண்டு வரப்பட்டார்கள். அங்கு ஹோமம், காரியக்கர்மங்கள் நடந்தது. சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் சுகந்த வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து மாலை 4 மணியளவில் உற்சவர்களுக்கு சிறப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து பிரத்யேக ஆபரணங்களால் உற்சவர்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 11 மணி வரை யாகசாலையில் காரியக்கர்மங்கள் நடந்தது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய, சின்ன ஜீயர்கள், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பவித்ரோற்சவத்தால் நேற்று கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்த திருவிழா 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. கோவிலில் ஆண்டு முழுவதும் நடந்த அர்ச்சனைகள், திருவிழாவின்போது பக்தர்கள், கோவில் ஊழியர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகின்ற தோஷத்தால், கோவிலின் புனிதம் பாதிக்கப்படாமல் இருக்க பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

    திருமலையில் 15-16-ம் நூற்றாண்டுகளில் பவித்ரோற்சவம் நடந்ததற்கான சான்றுகள் உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை 3 நாட்கள் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை கோவிலின் நான்கு மாட வீதிகளில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 9-ந்தேதி பவித்ர சமர்ப்பணம், 10-ந்தேதி பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    பவித்ரோற்சவத்தையொட்டி 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடப்பதால் சஹஸ்ர தீபலங்கார சேவை, 9-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதன சேவை, 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    • குளிர் காற்று வீசி வருவதால் நடுங்கியபடி தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.

    திருப்பதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.

    வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    தொடர்ந்துமழை பெய்து வருவதால் பக்தர்கள் மழையில் நனைந்தவாறு தரிசனத்திற்கு சென்றனர். அதேபோல் தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களும் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

    மேலும் குளிர் காற்று வீசி வருவதால் நடுங்கியபடி தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.

    இதனால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 62,351 பேர் தரிசனம் செய்தனர். 31,473 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.99 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.

    • திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 5-ந்தேதி வரலட்சுமி விரதம் நடக்கிறது.
    • 31-ந்தேதி திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் விநாயக சதுர்த்தி விழா நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 5-ந்தேதி வரலட்சுமி விரதம், 5-ந்தேதி திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உற்சவர் அஹோபில மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார், 21-ந்தேதி திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் உறியடி உற்சவம், 22-ந்தேதி கோவிந்தராஜசாமி கோவில் அருகில் உள்ள சின்னவீதியில் உறியடி உற்சவம், 23-ந்தேதி கோவிந்தராஜசாமி கோவில் அருகில் உள்ள பெரிய வீதியில் உறியடி உற்சவம், 31-ந்தேதி திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் விநாயக சதுர்த்தி விழா.

    மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

    • பொகடா மரத்துக்கு சடாரி மரியாதை செய்யப்பட்டது.
    • திருமலையில் திருவாடிப்பூர சாத்துமுறை உற்சவம் நடந்தது.

    தமிழகத்தில் பாண்டிய நாட்டில் வாழ்ந்த திருமால் பக்தரான விஷ்ணு சித்தருக்கு சொந்தமான துளசி வனத்தில் பூதேவியின் அம்சமாக தமிழ் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் ஆண்டாள் என்ற கோதாதேவி அவதரித்தார். அவருடைய அவதார தினத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோவிலில் திருவாடிப்பூர சாத்துமுறை உற்சவத்தை நடத்தி வருகிறது.

    அதன்படி நேற்று திருமலையில் திருவாடிப்பூர சாத்துமுறை உற்சவம் நடந்தது. கோவிலில் மாலை சகஸ்ர தீபலங்கார சேவைக்கு பின் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி திருமலையில் உள்ள புரசைவாரி தோட்டத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டார்.

    அங்கு, உற்சவர்களுக்கு நிவேதனம் முடிந்ததும் மேள தாளம் மற்றும் மங்கள இசை முழங்க புரசைவாரி தோட்டத்தில் இருந்து ஊர்வலமாகக் கோவிலுக்குப் புறப்பட்டனர். போகும் வழியில் உள்ள பொகடா (மகிழ மரம்) மரத்துக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து, சிறப்பு அர்ச்சனை செய்தனர். சடாரிக்கு அபிஷேகம் செய்து, பொகடா மரத்துக்கும் சடாரிக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பொகடா மரத்துக்கு சடாரி மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.

    அப்போது பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், "அனந்தாழ்வார் வைபவம்" என்ற நூலை வெளியிட்டனர்.

    • ஜூலை மாதம் 4-ந்தேதி மட்டும் ரூ.6 கோடியே 18 லட்சம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • 34 ஆயிரத்து 436 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் சராசரியாக ரூ.120 கோடியை தாண்டுவதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்ச வருமானமாக 29 நாட்களில் ரூ.131 கோடியே 76 லட்சம் கிடைத்துள்ளது. இது, வரலாற்றுச் சாதனை என்று தேவஸ்தான அதிகாரிகள் பெருமிதத்துடன் கூறினர்.

    மேலும் ஜூலை மாதம் 4-ந்தேதி அன்று ஒரேநாளில் ரூ.6 கோடியே 18 லட்சம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 287 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 436 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 83 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பதியில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது.
    • திருப்பதியில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. இதனால் வருகிற 7, 8, 9, 10-ந் தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் ரூ.300 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    மேலும் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாமி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • 19-ந்தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடக்கிறது.
    • 31-ந்தேதி விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி விழா) நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார்.

    2-ந்தேதி கருடபஞ்சமியையொட்டி கருடசேவை, 6-ந்தேதி தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள், 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம், 9-ந்தேதி நாராயணகிரி பூங்காவில் சத்ரஸ்தாபனோற்சவம், 11-ந்தேதி சிரவண பவுர்ணமி, ரக்‌ஷா பந்தம் பண்டிகை, வைகானச மகாமுனி ஜெயந்தி.

    12-ந்தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, உற்சவர் மலையப்பசாமி வைகானச சன்னதிக்கு எழுந்தருளல், 15-ந்தேதி சுதந்திர தினம், 19-ந்தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம், 20-ந்தேதி உறியடி உற்சவம், 29-ந்தேதி பலராமர் ஜெயந்தி, 30-ந்தேதி வராஹ ஜெயந்தி, 31-ந்தேதி விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி விழா).

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பதியில் ஆகஸ்டு 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது.
    • ஆன்லைனில் ஆகஸ்டு 1-ந்தேதி தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. அதில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது.

    மொத்தம் 600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து பவித்ரோற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம். பவித்ரோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்கள் பாரம்பரிய உடையில் காலை 7 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 1-க்கு வர வேண்டும்.

    தரிசன டோக்கன்களுடன் ஏதேனும் அசல் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tirumala.org அல்லது www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ×