search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94543"

    • சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும்.
    • இரண்டு நாட்கள் கழித்து ஊறிய வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

    "குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்" என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக் கற்றாழையின் மற்றொரு பெயர்.

    தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

    கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

    இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

    கற்றாழை மடலைக் கீறி சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

    கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

    சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

    இச்செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச்சிக்கல் தீரும்.

    வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப்புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

    கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

    தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லது கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

    -ப்யாரீப்ரியன்

    சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது.
    குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக்காததால், நம்மை அறியாமலேயே நீர் பருகும் அளவு குறைந்து போய்விடும். குளிர்காலத்தில் குளிர்ச்சி நிலவுவதால் உடலுக்கு குறைந்த அளவிலேயே திரவம் தேவைப்படும் என்று அர்த்தமல்ல.

    குளிர்காலத்தில் வியர்வை குறைவாக சுரக்கும். நம்மைச் சுற்றியுள்ள காற்றும் உலர்ந்து போய்விடும். அதனால் சிறுநீர் மூலம் திரவ இழப்பு அதிகரிப்பதால் உடல் அதிக ஈரப்பதத்தை இழக்கும். அதனை ஈடு செய்வதற்கு நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆதலால் குளிர் காலத்தில் தண்ணீர் உட்கொள்வதை குறைக்காதீர்கள். வெப்பநிலை குறைவாக இருக்கும்போதும் நீரிழப்பு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கு வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவதும் கூடாது. உணவு பட்டியலில் பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி மற்றும் பீச் போன்ற திரவ சத்து நிறைந்த பழங்கள், பிரோக்கோலி போன்ற காய்கறிகளை உட்கொள்ளலாம். இது தினசரி உணவில் அதிக திரவத்தை சேர்ப்பதற்கான வழிமுறையாகும். பருவ கால காய்கறிகள் மற்றும் மூலிகைகளை கொண்டு சூப் தயாரித்து பருகலாம். வீட்டில் தயாரிக்கும் சூப்பை உட்கொள்வது நீர்ச்சத்தை மேம்படுத்த உதவும்.

    குளிர் காலத்தில் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாட உடல் செயல்பாடுகளுக்கு ஏற்ப நீர் உட்கொள்ளும் அளவை தீர்மானிப்பதும் முக்கியமானது. உதாரணமாக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் மற்றவர்களை விட அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். உடலில் நீரிழப்பின் அளவு அதிகரிக்கும்போதுதான் தாகம் எடுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் நாள் முழுவதும் சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும்.

    நம் உடலுக்கு தினமும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்:

    சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் உட்கொள்ளும் அளவு நபருக்கு நபர் மாறுபடும். அது அவரது உடல் செயல்பாடு, வசிக்கும் சூழல் உள்ளிட்ட சில காரணிகளைப் பொறுத்தது.

    தண்ணீர் தரும் பலன்கள்

    சரியான நேரத்தில் தண்ணீர் பருகுவது உடலின் செயல்திறனை அதிகரிக்க உதவும்.

    காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

    அது உள் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு உதவும்.

    சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் பருகலாம்.

    அது செரிமானம் சுமுகமாக நடைபெற வழிவகை செய்யும்.

    குளிப்பதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

    அது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

    தூங்க செல்வதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் பருகலாம்.

    அது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.
    நுரையீரல், இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்களில் 15 சதவீதம் பேருக்கு காற்று மாசுபாட்டுடன் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியைதான் அதிகம் பாதிக்கிறது. நுரையீரல் பாதிப்புக்கு காற்று மாசுபாடும் ஒரு வகையில் காரணமாக இருப்பதால் அவர்களை கொரோனா வைரஸ் தொற்றும் எளிதில் பாதிப்படைய செய்து விடுகிறது.

    ஏற்கனவே நுரையீரல், இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில், காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா மரணம் 19 சதவீதமாக உள்ளது.

    மேலும் வட அமெரிக்காவில் 17 சதவீதமாக இருக்கிறது. அதிலும் கிழக்கு ஆசிய நாடுகளில்தான் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கிழக்கு ஆசியாவில் காற்று மாசுபாடு 27 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    “காற்று மாசுபாட்டுக்கும், கொரோனா இறப்புக்கும் இடையேயான நேரடி தொடர்பை எங்கள் ஆய்வு குறிப்பிடவில்லை. இருப்பினும் மறைமுக தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். சுவாச கோளாறுகளை உள்ளடக்கிய நாள்பட்ட நோய்கள், பிற மருத்துவ நிலைமைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. உதாரணமாக இங்கிலாந்தில் 44 ஆயிரம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருந்தால் அதில் காற்று மாசுபாட்டால் 14 சதவீதம் பேர் மரணமடைந்திருப்பதாக மதிப்பிடுகிறோம்.

    அதாவது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் காற்று மாசுபாட்டால் ஏற்பட்டிருக்கக்கூடும். காற்று மாசுபாட்டிற்கான நீண்டகால வெளிப்பாடு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஆகிய இரண்டும் ஒன்றிணைந்தால், பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக இதயம், ரத்த நாளங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும்” என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
    வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவும்.
    இருமல், சளி:

    மாதுளை பழத்தை போலவே, இலைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுபவை. சளி மற்றும் இருமல் இருந்தால், மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். இந்த செயல்முறை எளிதானதுதான். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் வடிகட்டி பருகலாம். இந்த தண்ணீரை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் தணியும். தொண்டையில் இருக்கும் நோய்த்தொற்றை அகற்ற உதவும். மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.

    வயிற்று வலி:

    மாதுளை இலைகள் செரிமான செயல் முறைக்கு நன்மை பயக்கும். வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவும். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அத்துடன் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருக வேண்டும். இருமல், சளி தவிர பிற நோய் பாதிப்புகளுக்கு மாதுளை இலை சாற்றை வாரம் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மாதுளை இலைகளை அதிகம் உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.

    தூக்கமின்மை:

    மாதுளை இலைகள், தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரக்கூடியவை. ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மி.லி. தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். 50 மி.லி. குறையும் வரை கொதிக்கவைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனை இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வரலாம். அது ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

    தோல் அழற்சி:

    நாள்பட்ட அரிப்பு, தோல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. தடிப்பு, வீக்கம், சருமம் சிவத்தல் போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். இந்த நோயை குணப்படுத்த மாதுளை இலைகளை பயன் படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து பாதிப்புக்குள்ளான இடத்தில் தடவி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.
    கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.

    இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

    ஒரு ஆராய்ச்சியின் கூற்றுப்படி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பல் பிரச்சனை என்பது குறைப்பிரசவத்துடன் கூடிய குறைவான எடையை தருகிறதாம். இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் காது பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?

    1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.
    2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
    3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள்.

    பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.

    பல் பிரச்சனை வர என்ன காரணம்?

    1. கிருமி பிரச்சனை.
    2. வாந்தி எடுப்பதால் பல் இடுக்கில் அழுக்கு சேர்வது.
    3. இனிப்பு சாப்பிட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பது.

    கர்ப்ப காலத்தில் கால்சியத்தை அதிகரிக்கும் உணவு:

    1. பால்.
    2. பாலாடைக்கட்டி.
    3. இனிப்பு இல்லாத தயிர்.
    4. சோயாப்பால் (கால்சியம் கொண்டது)

    கால்சியம் நிறைந்த வைட்டமின் D:

    வைட்டமின் Dஇல் தேவையான அளவில் கால்சியம் இருக்கிறது.

    1. பாலாடைக்கட்டி
    2. செறிவூட்டிய வெண்ணெய்.
    3. சால்மன் போன்ற மீன்.
    4. முட்டை.

    நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.
    நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள்.

    இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

    சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்கு சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் ‘மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாக சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் மேம்படும்.

    சிலர், வேலை காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.

    பேஸ்புக்கில் அப்லோடு செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமெண்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்சினைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை.

    இந்தபிரச்சினையை மருத்துவ ஆலோசனை யின் பேரில் சில வகை தெரபி, மெலட்டோனினை சுரக்கவைக்கும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு செல்போனை தள்ளி வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்.
    தற்போதைய பெருந்தொற்று காலங்களில் பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன என்று தேடி தேடி படித்து அதை நாடி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
    தொழிலில் வெற்றி பெறுவதற்கு மனிதனின் உடல் ஆரோக்கியம் என்பது தான் சக்கரம் போன்றது. சக்கரம் சரியாக இல்லையென்றால் வண்டி ஓடாது என்பது ஏற்ப, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டால் தொழிலிலும் கவனம் செலுத்த முடியாது. அதிலும் தற்போது பெருந்தொற்று காலம் என்பதால், உடல் ஆராக்கியத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.

    துரிதமாக வளரும் இந்த உலகில் துரித உணவான பீட்சா, பர்கர் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான் உடலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து கொரோனா என்னும் கொடிய அரக்கனின் பிடிக்குள் அகப்பட்டு வருகிறோம்.

    உணவு, மருந்தாக செயல்பட்டு, ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தரும் பழங்களை நம்மில் பலர் மறந்து விட்டனர். அதனால் தான் நம் ‘பழ’ந்தமிழர்கள் பழங்களை கொண்டாடினார்கள்.

    ஆனால், பழங்களை தினசரி உணவில் எடுத்து கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். அதனால் தான் தற்போதைய பெருந்தொற்று காலங்களில் பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன என்று தேடி தேடி படித்து அதை நாடி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பல்வறேு பழங்களின் சத்துக்கள் என்ன என்பது குறித்த ஒவ்வொரு தொகுப்பாக பார்க்கலாம் வாங்க...

    பழங்களில் பொதுவாக அதிக அளவில் நார்ச்சத்தும், மிக குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்க விடாமல் இவை தடுக்கிறது.

    கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க கிர்ணி, தர்ப்பூசணி என்று அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி தருகிறது இயற்கை. இவை மட்டுமின்றி தினமும் தொடர்ந்து பழவகைகளை சாப்பிடுவதே சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    மாம்பழம்

    முதலில் முக்கனிகளின் முதன்மையான கனியாக இருக்கும் பாம்பழம் குறித்து பார்ப்போம்:-

    மாம்பழம், பழங்கின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட உதவும் கனி இதுவாகும். இதில் வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியன நிறைந்துள்ளது. மேலும் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலிபீனாலிக் பிளவனாய்ட், ஆன்டிஆக்சிடன்ட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

    100 கிராம் மாம்பழத்தில், 765 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ, பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அதேபோன்று வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

    மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாம்பழத்தில் உள்ள சிலவகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கும்.

    மாம்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாமிரம் உள்ளதால், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து நிறைந்தது. எனவே, பெண்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

    பலா

    முக்கனிகளில் 2-வது இடம் வகிக்கும் கனி பலா. நமது கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு பெயர்பற்றது இந்த கனி. வைட்டமின்கள், நார்ச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த பழமாகும்.

    100 கிராம் பலாப் பழத்தில், 95 கலோரிகளே உள்ளது. இது மிகவும் எளிதில் செரிமானத்தைக் கொடுக்கும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. குறைந்த அளவில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் பி உள்ளிட்ட பிளவனாய்ட் உள்ளதால், பார்வைத் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    பலாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான பி5, நியாசின்,, போலிக் அமிலம் போன்றவை அதிக அளவில் உள்ளன. மேலும் இயற்கையான முறையில் கிடைக்கும் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின்கள், நுரையீரல் மற்றும் சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.

    தாது உப்புக்களில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம். பலாவில் வோ், இலை, காய் பழம் என அனைத்துமே ஆரோக்கியம் நிறைந்தவை ஆகும்.

    வாழைப்பழம்

    முக்கனிகளில் 3-வதாக அங்கம் வகிக்கும் கனி வாழைப்பழம், ஆண்டு முழுவதும் கிடைக்ககூடியதாகும். வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த கனி.

    வாழையில் உள்ள பரக்டோஸ் போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான உடனடி எனர்ஜி கிடைக்கும். 100 கிராம் பழம் 90 கலோரியை இது தருகிறது. அதேபோல் 100 கிராம் வாழைப் பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் இருப்பதால் இதய துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.

    பொட்டாசியம் சத்து அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதயத் துடிப்பைப் பாதிக்கச் செய்யும். எனவே, இதை நினைவில் கொண்டு

    இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் கவனமுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் குழந்தைகளை பொறுத்தவரை உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

    இதில் உள்ள வைட்டமின் பி 6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும். இதயப் ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    தாது உப்புக்களைப் பொறுத்தவரையில், தாமிரம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.
    குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.
    நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனே சியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

    தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

    குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.

    குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். அதேபோல மழைக்கால சரும பாதிப்புகளில் இருந்து விடுபடவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நட்சத்திர பழம் உதவுகிறது.

    இந்த ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகிறது.
    டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம்.
    கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வராத நிலையில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. உடல் நடுக்கம், காய்ச்சல், பசியின்மை, கடுமையான உடல்வலி, தலைவலி உள்ளிட்டவை டெங்குவின் அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம்.

    பப்பாளி இலை சாறு: பிளேட்லெட் எனப்படும் ரத்தத்தட்டுகள், சிறிய செல்கள் வடிவிலானவை. உடலில் சிறிய காயம் ஏற்பட்டால் உடனே ரத்தத்தை உறைய வைப்பதற்கு இவை அவசியம் தேவை. அதிகப்படியான ரத்த இழப்பை தடுப்பதில் பிளேட்லெட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு காய்ச்சல் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பப்பாளி இலை சாறு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. அதனால் பப்பாளி இலைகளை சாறு பிழிந்து பருகி வரலாம்.

    வைட்டமின் சி: இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்ற வைட்டமின் சி நிரம்பிய உணவு பொருட்களை சாப்பிட்டுவது நல்லது.

    துத்தநாகம்: இதுவும் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும். முழு தானியங்கள், பால் பொருட்கள், செர்ரி பழங்கள், வேகவைத்த பீன்ஸ், கொண்டைக்கடலை, முந்திரி, பாதாம், சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றில் துத்தநாகம் அதிகம் நிரம்பியுள்ளது. அவற்றை சாப்பிடலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஜிங்க் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

    போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12: இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக அதிகரிக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவை.

    இரும்பு: இரும்புச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கும். நோயெதிர்ப்பு செல்கள் பெருக்கம் அடைவதற்கு இரும்பு அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகலாம். மது அருந்தக்கூடாது. எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், காபின், கார்பனேற்றப்பட்ட பானங்கள், காரமான உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும் சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
    உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்வதும் பலன் இல்லாமல் கவலைப்படுபவர்கள் அதிகம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருமே உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். எடையை குறைத்து தொப்பை இல்லாத ஜீரோ சைஸ் வயிறு என்பது பலரது கனவாக இருக்கிறது. இந்த நோக்கத்தில் பல முயற்சிகளை மேற்கொள்ளும் போது நம்மை அறியாமலே ஒரு சில தவறுகளை செய்கிறோம். அதுவே எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது.

    முதலில் மனது தயாரானதும், எடைக்குறைப்புக்கு உடல் தயாராகுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தான் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும் சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

    சிலர் உண்ணும் உணவை குறைப்பதற்காக வழக்கமாக சாப்பிடும் அளவில் நான்கில் ஒரு பங்கு சாப்பிடுவார்கள். இதனால் பசி அதிகரித்து அவதிப்படுவார்கள். ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் பிடித்த உணவை அதிகம் உண்ணாமலும் அதிகம் தவிர்க்காமலும் அளவாக சாப்பிடுங்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக பழச்சாறு அருந்துவார்கள். ஆனால் பழச்சாறுகள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதை காட்டிலும் அதிக அளவு பசியை தூண்டிவிடும்.

    உடல் எடையை வேகமாக குறைப்பதற்காக தொடர்ந்து அதிவேக உடற்பயிற்சியில் ஈடுபடுவ்தும் தவறு. இது உடல் எடை குறைப்புக்கு பதிலாக சோர்வை உண்டாக்கும். மாடிப்படிகளில் ஏறி இறங்குதல், குனிந்து நிமிர்தல், தோப்புக்கரணம் போடுதல் என தினசரி அரைமணி நேரம் எளிமையான பயிற்சிகள் செய்தாலே போதும்.

    துரித கொழுப்பு உணவுகளை உடனடியாக தவிர்க்கலாம். உடல் எடையை குறைப்பதற்காக சிலர் உணவை குறைத்துவிட்டு நொறுக்கி தீனிகள் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார்கள். இதுவும் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாகும்.

    உணவுக்கட்டுப்பாட்டை ஓரிரு நாட்கள் பின்பற்றிய பிறகு இடையில் இரண்டு நாட்கள் பின்பற்றாமல் இருந்து மீண்டும் தொடர்வது எந்த பலனையும் கொடுக்காது.

    எடையை குறைப்பதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்

    7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். இரவு உணவு அளவாக இருக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்காமல் அவ்வப்போது எழுந்து நடக்கலாம்.

    அதிக அளவில் கஞ்சா புகையை உட்கொள்ளத் தொடங்கும்போது வானில் பறப்பது போன்றும், உல்லாச வானில் மிதப்பது போன்றும் சிறிது நேரத்துக்கு இருக்கும்.
    நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் சூப்பிரண்டும், மனநல மருத்துவத்துறை பேராசிரியருமான டாக்டர் அருள்பிரகாஷ் கஞ்சா போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறியதாவது:-

    கஞ்சா பழக்கத்தை பொறுத்தவரையில் வளர் இளம் பருவம், மாணவர்கள் பருவம் ஆகிய பருவத்தில்தான் தொடங்குகிறது. இவர்கள் முதலில் பரீட்சார்த்த முறையில் இந்த பழக்கத்தை தொடங்குகிறார்கள். அதில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்? என்ற ஆர்வமும், உடன் இருக்கும் நண்பர்களின் அழுத்தமும், எளிதாக கிடைப்பதும் இந்த பழக்கம் தொடங்குவதற்கான முதல் காரணங்களாகும். முதலில் தொடங்கும்போது அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது போன்றும், சிறு, சிறு உடல் வலிகள், மன வலிகள் தெரியாமல் இருப்பது போன்றும் உணர்வுகள் ஏற்படும்.

    அதிக அளவில் கஞ்சா புகையை உட்கொள்ளத் தொடங்கும்போது வானில் பறப்பது போன்றும், உல்லாச வானில் மிதப்பது போன்றும் சிறிது நேரத்துக்கு இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தும்போது அது மூளையில் பதிந்து, கஞ்சா இருந்தால்தான் அன்றாட பணிகளை, அலுவல்களை கவனிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையில் தொடர்ந்து கஞ்சாவை பயன்படுத்தினாலே இம்மாதிரியான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். குறைந்தது ஒரு மாதம் எடுத்தாலே கஞ்சாவுக்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகிறது.

    ஒரு சிலருக்கு கஞ்சாவை பயன்படுத்த தொடங்கும்போதே சில உடல் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடும். சிலருக்கு தூக்கக் குறைவு, பசியின்மை, தலைவலி, எரிச்சல், கோபம், போன்ற ஆரம்ப கட்ட அறிகுறிகள் வரலாம். சிலருக்கு ஆரம்ப கட்ட மனநிலை பாதிப்பும், மன அழுத்தமும் ஏற்படலாம். தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தும்போது வேறு எந்த காரியத்திலும் ஆர்வம் இல்லாத நிலையும் வரும். உதாரணமாக படிப்பு, வேலை ஆகியவற்றில் ஆர்வம், நாட்டம் இருக்காது. தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால்கூட அதைக்கூட பொருட்படுத்தாமல் கஞ்சாவை பயன்படுத்துவதில்தான் சம்பந்தப்பட்ட நபர் ஆர்வம் காட்டுவார். அதற்காக திருட்டு போன்ற சிறு, சிறு குற்றச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கி விடுவார் அந்த நபர்.

    கஞ்சா கிடைக்காதபோது அந்த நபர்கள் தூக்கம் இல்லாமல் இருப்பார்கள். தலைவலியுடன் அலைந்து திரிவார்கள். பிறரிடம் எரிச்சலடைவது, தேவையில்லாமல் கோப்படுவது, பதற்றத்துடன் காணப்படுவது, அங்கலாய்ப்புடன் அலைவது, கட்டுப்படுத்த முடியாத ஆசையைக் கொண்டிருப்பது போன்ற செயல்கள் அவர்களிடம் காணப்படும், எதைச் செய்தாவது கஞ்சாவை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடம் இருக்கும்,

    பாதிப்புக்குள்ளாகும் நபர்களில் சில குறிப்பிட்ட சதவீதத்தினர் எந்த உந்துதலும் இல்லாமல் சோர்வான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன்பிறகு அவர்களால் படிக்க முடியாது. வேலையில் அக்கறை இருக்காது. குடும்பத்தினர் மீதான பாசம், அக்கறை எதுவும் அவர்களிடம் காண முடியாது. எனவே அவர்கள், குடும்பத்துக்கு தேவையில்லாத நபராகவும், பயனற்ற மனிதராகவும் மாறுவார். இன்னும் அதிகமாகும்போது கஞ்சா எடுப்பதால் ஏற்படும் மனநோய்கள் உருவாகும். அவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாயக்குரல்கள் கேட்பது போல் இருக்கும். தவறான சிந்தனை ஓட்டம் ஆரம்பிக்கும். இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நம்புவார். எப்போது பார்த்தாலும் தன்னுடைய எதிரி யாரோ இருப்பது போன்றும், போலீஸ் தன்னை தேடி வந்துவிடுவார்களோ? என்பதைப் போன்ற மன பயம் அவர்களுக்கு இருந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட அந்த நபர் மனநோயாளிபோல் மாறிக் கொண்டிருப்பார். ஒரு சிலருக்கு கை, கால் நடுக்கம், தனக்கு எதுவும் ஏற்பட்டு விடுமோ? என்ற கவலை, மன பதற்றம் ஏற்படும். அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

    போதை பழக்க வழக்கங்களில் ஈடுபடுபவர்களில் கஞ்சா போதை பழக்கத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் குறைந்தது 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 12 சதவீதம் வரை இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பழக்கம் அதை பயன்படுத்தும் நபரை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தொடர்ச்சியாக பயன்படுத்தும் நபருக்கு கஞ்சா கிடைக்காதபோதுதான் அவர் வன்முறையில் ஈடுபட்டாவது அதைப்பெற வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. சிந்திக்கிற திறன் அந்த நபருக்கு போய்விடுவதால் அந்த நபர் குற்றச்செயலில் ஈடுபடுகிறார். கஞ்சா பயன்படுத்தும் நபருக்கு உடல் வலிமை அதிகமாகும் என்று சொல்வது தவறு. இதனால் அவர் வலு குறையத்தான் செய்யும். இந்த தவறான போதை பழக்கத்தால் ஒரு தனி மனிதனின் உற்பத்தித் திறன் குறைவதோடு, நாட்டின் உற்பத்தி திறனும் பாதிக்கப்படுகிறது.

    இவ்வாறு கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை மனநல மருத்துவம் மூலம் சரிசெய்ய முடியும். அதற்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் அவசியம். அவர்கள் மனதளவில் இந்த பழக்கத்தைவிட்டு வெளியே வரவேண்டும், சமூகத்தில் தானும் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட வேண்டும். முதலில் இம்மாதிரியானவர்களுக்கு கவுன்சிலிங்தான் எங்களின் முதல் கட்ட மருத்துவமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெருஞ்சீரகத்தில் உள்ள கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
    உடல் எடைக் குறைப்பு முயற்சியில், உடற்பயிற்சிக்கு அடுத்தபடியாக இருப்பது தேநீர். அதிலும் சாதாரணத் தேநீரை விட மூலிகைத் தேநீர் அதிக பலன் கொடுக்கும். மன அழுத்தத்தை குறைத்து, தினசரி வாழ்வை சீராக்க உதவும், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

    உடல் எடையை சீராக்கும். உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

    இதில் பலரும் விரும்புவது கிரீன் டீ. குறைந்த நாட்களில் மிதமான எடைக் குறைப்புக்கு உதவும். தினமும் இரண்டு வேளை பருகலாம். இதில் உள்ள மூலக்கூறுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். கொழுப்பைக் கரைக்கும். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும்.

    லெமன்கிராஸ், இஞ்சி, லவங்கப்பட்டை கலந்த டீயை பகல் வேளையில் குடிக்கலாம். இது உணவை எளிதில் செரிக்க உதவும். லெமன்கிராஸில் உள்ள வேதிப்பொருட்கள் மனச்சோர்வை நீக்கி, உற்சாகத்தை ஏற்படுத்தும். மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    ஆவாரம் இலைகள், பெருஞ்சீரகம், இஞ்சி, லவங்கப்பட்டை, மிளகுக் கீரை மற்றும் பச்சை தேயிலை சாறு கலந்து மூலிகை தேநீர் குடிக்கலாம். பெருஞ்சீரகத்தில் உள்ள கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினையைச் சீராக்கும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.  

    செம்பருத்தி, லவங்கப்பட்டை, துளசி, இஞ்சி, கொத்தமல்லி விதைகள், மஞ்சள், சோம்பு, வெந்தயம், அன்னாசி பூ மற்றும் ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களைக் கலந்து தேநீர் தயாரித்துப் பருகலாம். சுவையும் மணமும் உள்ள இந்த தேநீர் ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்புக்கு உதவும்.

    செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து, உடலின் திசு சிதைவை கட்டுப்படுத்தி புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். இதில் உள்ள கொலாஜன் மற்றும் இரும்புச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு உதவும். மேலும், உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்றி, வெப்பத்தைக் குறைக்கும்.

    இது உடலில் உள்ள இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தி, இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
    ×