என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஸ்வநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. என்ற இயக்கம் எங்கள் நாடி நரம்புகளில் கலந்துவிட்ட ஒன்று. அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது. அ.தி. மு.க. அமைத்துள்ளது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. அமைத்துள்ளது மங்கிப்போன கூட்டணி. தி.மு.க. கூட்டணி உதிர்ந்து போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. ஒன்றுக்கும் ஆகாத கூட்டணி.
விருதுநகர் மாவட்டத்தை பல்வேறு துறைகளில் முதல் மாவட்டமாக உருவாக்கி உள்ளோம். தற்போது நாட்டில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்துகிறார்கள். 40 வீரர்கள் இறந்ததற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
வீரத்தில் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை நமது இந்திய ராணுவம் அழித்திருக்கின்றது. தேசிய பற்றுடைய மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வர வேண்டும்.
அமிர்தசரசில் இருந்து லாகூர் சில கிலோ மீட்டர் தான். ஒரு குண்டு போட்டால் உங்களது ஊரே காலியாகி விடும். நாட்டின் பிரதமராக மோடி தொடர்ந்து இருக்க வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழக முதலமைச்சராக இருக்க வேண்டும்.
நாட்டு மக்கள் அண்ணா தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள். எம்.பி. தேர்தல், இடைத்தேர்தல்களில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் நலன் ஒன்றே தாரக மந்திரம் என்ற அடிப்படையில் செயல்படும் இந்த ஆட்சிக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் பேசினார். #ADMK #RajendraBalaji #PMModi #Pakistan
கவுண்டம்பாளையம்:
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம் பாளையம் அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் தாமரை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10 அடி நீளத்தில் தாமரை போன்று கோலம் இட்டு அதன்மீது பாரதிய ஜனதா கட்சியின் கலர் போல அமைத்து சுற்றிலும் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மேலும் வேலைக்கு செல்லும் பெண்கள், தனியார் கல்லூரி மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கைகளில் திருவிளக்கு ஏற்றிக்கொண்டனர். கையில் தீபம் ஏற்றியவர்கள் இந்தியாவில் மீண்டும் நரேந்திர மோடியின் ஆட்சி அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கோஷங்கள் இட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பேசினார். இதில் மாவட்ட மகளீர் அணி தலைவி கீதா வசந்த் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், ரத்தினம் குரூப் தாளாளர் ஷீமா செந்தில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் வாசுகி, பி.எம்.என்.டிரஸ்ட் விக்னேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வட்சலா, விஜயா ரவி, ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன், பாக்கியலட்சுமி, கண்ணன் தேவராஜ், மண்டல தலைவிகள் நதியா, ஜிவிதா, மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #bjp #pmmodi
நெய்வேலி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 2-வது நாளாக மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சத்திரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். முத்தாண்டிகுப்பம் கடைவீதி, நெய்வேலி புதுநகர் மெயின் பஜார், வடலூர் ஆகிய இடங்களுக்கு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. பா.ம.க. இணைந்தது கேள்விக்குறியான செய்தியாக உள்ளது. பா.ம.க. இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என கூறியிருந்தனர். ஆனால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இந்த கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க. அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. மக்கள் நம்பிக்கையை இழந்த இந்த அரசை இனிமேலும் தொடரவிடக்கூடாது. எனவே மக்கள் பொறுத்திருந்தது போதும்.
எனவே உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து எங்களை வெற்றி பெற செய்யவேண்டும். தமிழர்கள் தான் இனிமேல் பாராளுமன்றத்தில் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை தமிழர்களுக்கு மட்டுமே தரக்கூடிய எங்கள் அணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் என்னிடம் பலகுறைகளை கூறினார்கள். அதில் மிக முக்கியமாக நடந்து முடிந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் மூலம் நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு தரவேண்டிய புதிய ஊதியத்தை காலம் தாழ்த்தி வருவது தெரியவந்தது.
இதில் மத்திய நிலக்கரி துறை மந்திரி உடனடியாக கவன ஈர்ப்பு கொண்டு வந்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய புதிய ஊதிய மாற்று ஒப்பந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் வீடு, நிலம் இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்
ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #pmk #admk
கரூர் ஏமூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
பயங்கரவாதிகளை ஒழித்து கட்டிய இந்திய ராணுவ வீரர்களின் செயல் பாராட்டுக்குரியது. நாட்டின் மரியாதையை காக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதனை நாட்டில் உள்ள அனைவரும் பாராட்டுகின்றனர்.
கூட்டணிக்காக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போகமாட்டோம். மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டால் அதனை கடுமையாக எதிர்ப்போம். அந்த கொள்கையில் பின் வாங்கப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #BJP
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ஐ.ஜே.கே.யை பொறுத்தவரை எப்போதுமே பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் விருப்பமான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறோம். 2014-ம் ஆண்டு தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை நாங்கள் அவர்களோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்று பல நேரங்களில் சொல்லி இருக்கிறேன்.
ஆனால் இன்னும் பா.ஜனதா தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.
1 மாதத்துக்கு முன்பாக பியூஸ்கோயல் என்னை டெல்லிக்கு அனைத்து பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பேசினார். அப்போது நமது கூட்டணி தொடர்கிறது என்று அவருக்கு சொன்னேன். என்னிடம் எந்த தொகுதி என்றும் கேட்டார். அதை அவருக்கு குறித்தும் கொடுத்திருக்கிறேன். அதன்பிறகு எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.
திருச்சியில் நான் கமல்ஹாசனுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் தங்கியிருந்த ஓட்டலில் அவர் தங்கினார். அப்போது என்னை பார்த்தார். நம் இருவருக்கும் ஒரே கொள்கையாக இருக்கிறது என்பதால் நாம் ஏன் இணைந்து செயல்படக்கூடாது என்று கேட்டார். செயல்படலாமே என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து மீண்டும் பேசலாம் என்று சொன்னார். பேசினோம். அது அந்த நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது.
3-வது அணி அமைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பா.ஜனதா எனக்கு சரியான முடிவு சொல்லாவிட்டால் 3-வது அணியில் நான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Parivendhar
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீரிட்டு எழுந்ததை பார்த்தோம்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது இதுவரை சந்தித்திராத பெரிய தாக்குதல். இந்திய தேசம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருந்த இந்த நேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரவேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார்.
அதன்படி இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல்களை நடத்தி விட்டு வெற்றிகரமாக திரும்பிவிட்டது. இதை யாரும் அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது.
இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடையவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த தேசமே ஆர்த்தெழுந்து பதிலடிதரும் என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய செய்தி மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் அமைந்துள்ளது.
தேசிய அளவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை எடுத்துச்சொல்லி பிரசாரம் செய்து வருகிறார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி தனி நபருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார் என்பதை மறந்து கீழ்த்தரமான வார்த்தைகளால் ராகுல்காந்தி அர்ச்சித்து வருகிறார். இது தரமான அரசியலுக்கும், தரமற்ற அரசியலுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.
இது லோட்டசுக்கும் (தாமரை), லூட்டர்சுக்கும் (கொள்ளையர்கள்) இடையே நடக்கும் தேர்தல். காங்கிரஸ் என்றாலே ஸ்கேம் (ஊழல்) என்று அர்த்தம். மோடி என்றால் ஸ்கீம் (திட்டம்) என்று அர்த்தம். பிரதமர் மோடிக்கு தேசமே சக்தி. ராகுல்காந்திக்கு குடும்பமே சக்தியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Surgicalstrike2 #BJP #LGanesan
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவையை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்டு வாழ்த்து தெரிவித்து கொள்கிறது.
வருகிற தேர்தல் மிக பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் 100 நாளில் கருப்பு பணத்தை மீட்போம் என்றார். தற்போது இந்த வாக்குறுதி குறித்து பேச மறுக்கிறார்.
ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இயற்கை சீற்றத்தால் தமிழ்நாடு தொடர்ந்து பாதிக்கப்பட்ட போது மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கவில்லை.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசினார். ஆனால் அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறது.
அவர்களுடன் தற்போது பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. எங்கள் அணி கொள்கை அடிப்படையிலான அணி. மாநில உரிமைகளை காக்க தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.
கோவையில் நாளை 7 கட்சிகளின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து எங்கள் குழு பேசி உள்ளது. முதல் கட்ட பேச்சு வார்த்தையில் திருப்தி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.வுடன் இணைந்து பல்வேறு போராட்டம் நடத்தி உள்ளோம். இந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. பாரதிய ஜனதாவை தோற்கடிக்க சேர்ந்த கூட்டணி.
மாயமாகி உள்ள சமூக ஆர்வலர் முகிலனை மாநில அரசு தேடி கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்.
இந்தியா-பாகிஸ்தான் போர் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும். எல்லையில் போர் நடந்து இந்தியா தனது பலத்தை காட்டினாலும் பாரதிய ஜனதா வாக்கு வங்கி உயராது. இது தேர்தலில் எதிரொலிக்காது.
தேர்தல் சமயத்தில் இது போன்று பல சாகசங்களை பாரதிய ஜனதா மேற்கொண்டாலும் தேர்தலில் பலிக்காது. அ.தி.மு.க. கூட்டணி மர்ம கூட்டணி. எங்களது கூட்டணி பகிரங்கமான வெளிப்படையான கூட்டணி.
இவ்வாறு முத்தரசன் கூறினார். #Mutharasan #BJP #Surgicalstrike2
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலி மையான கூட்டணி அமைந்து இருக்கிறது. கூட்டணி என்பது பொது திட்டங்களுக்காக அமைக்கப்படுவது. கட்சிகளின் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதற்காக அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் மொழிக்காக, தமிழர்களுக்காக, தமிழகத்தின் உரிமைகளுக்காக இந்த இயக்கத்தை எப்படி பயன்படுத்தி உரிமைகளை பெற்றாரோ? அதனடிப்படையில் எடப்பாடி அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
திராவிட கட்சிகளின் உயிர் மூச்சான சுயாட்சி கொள்கையில் தெளிவாக கொள்கை பிடிப்பாக இருப்போம். அ.தி.மு.க. போன்று பா.ஜ.க.வுக்கும் தனியாக கொள்கை இருக்கிறது. எங்களை பொறுத்த வரை பொது எதிரி காங்கிரஸ்- தி.மு.க.தான். அவர்களை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும்.
18 ஆண்டுகள் மத்தியிலும், 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த ஆட்சியில்தான் கச்சத்தீவு பிரச்சனை வந்தது. இலங்கையில் ஒன்றரை கோடி அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதற்கு இந்திய ராணுவம் துணை புரிந்ததாக ராஜபக்சே ஒப்புக்கொண்டார். தமிழர்களுக்கு துரோகம் செய்த தி.மு.க.வை மத்திய ஆட்சியில் பங்கேற்பதற்கோ, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கோ? எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
மத்தியில் அ.தி.மு.க. எதிர் கட்சியாக இருக்கிறது. மாநிலத்தின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் நானும் குரல் கொடுத்து இருக்கிறேன். பாராளுமன்றத்தின் அவையை முடக்கியதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அதே போன்று மேகதாது அணை கட்ட அனுமதிக்ககூடாது என பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டோம்.
தற்போது மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. கஜா புயல் நிவாரணத்துக்கு கேட்ட ரூ. 15 ஆயிரம் கோடியை மீண்டும் கேட்டு இருக்கிறோம். இப்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது.
நீட் தேர்வினை நடத்தி காண்பித்தது காங்கிரசும், தி.மு.வும் தான். ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார். தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்துக்கு துரோகமும், இடர்பாடுகளும் ஏற்பட்டன. இதை தி.மு.க. எங்கள் மீது திருப்பி விடுகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையை காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி 2011-ல் தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இப்போது அமைக்கப்பட்டுள்ள தி.மு.க-காங்கிரஸ்தான் சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கூட்டணியை மக்கள் முழுவதுமாக புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #PMK #AnbumaniRamadoss
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?
தமிழக மக்களின் எதிர் காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.
கே:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும் என கூறியிருக்கிறீர்கள், 40 தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?
ப:- நம்பிக்கை இல்லாமல் இல்லை. 40 தொகுதிகளையும் எங்கள் கூட்டணி தான் கைப்பற்றும். 35 தொகுதி என எதற்கு கூறினேன் என்றால், சரி 4 பேராவது எதிர்தரப்பில் வெற்றிபெற்று மத்தியில் அமையவுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தை பார்க்கட்டுமே என்றுதான். எதிர்தரப்பே இருக்கக் கூடாது என நினைக்கக் கூடாது அல்லவா.
கே:- தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடு எப்படி உள்ளது?
ப:- கே.எஸ்.அழகிரி அருமையாக செயல்படுகிறார். அனைத்து தொண்டர்களையும் சந்திக்கிறார், நிர்வாகிகளை அரவணைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக விட்டுக்கொடுத்து செல்கிறார். இன்னும் சொல்லப்போனால் நீண்ட நாட்களாக கே.எஸ்.அழகிரி போல் ஒரு தலைவர் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு வர வேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
கே:- தமிழகத்தில் நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் உங்களை அதிகம் பார்க்க முடியவில்லையே?
ப:- ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நான் இப்போதும் கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு தான் வருகிறேன். தமிழகத்தை மட்டும் மனதில் வைத்து கேள்வி கேட்காதீர்கள். பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இதற்கு முன்னர் தலைவராக இருந்தவர் என்னை பொதுக்கூட்டங்களுக்கு அழைத்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் என்னை காணலாம்.
கே:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குஷ்பு மத்திய மந்திரி ஆக வாய்ப்பு இருக்கிறதா?
ப:- (சிரிப்பு) யாருக்கு தெரியும், தேர்தலில் போட்டியிடுவேனா என்பதே எனக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும். யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன கொடுக்க வேண்டும் என்பது பற்றி ராகுல்காந்தி தான் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #Kushboo #Ramadoss #ADMK #BJP
டெல்லியில், இந்தியா கேட் வளாகத்தையொட்டி, 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.176 கோடி செலவில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், பலியான 25 ஆயிரத்து 942 ராணுவ வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் தங்க எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட ஸ்தூபியும், அணையா தீபமும், இந்திய ராணுவம் ஈடுபட்ட முக்கிய போர்களை விளக்கும் 6 சுவர் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி, இந்த போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதை குறிக்கும் வகையில், அவர் தீபத்தை ஏற்றிவைத்தார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா பூக்கள் தூவப்பட்டன.
முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினரின் குறைகளை தீர்க்க ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, அவர்கள் ஒவ்வொரு இடத்துக்கும் அலைய வேண்டியது இல்லை. இந்த நினைவு சின்னம் கட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டும், முந்தைய அரசுகளின் அலட்சியம் காரணமாக தாமதம் ஆனது. இது, உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.
படைவீரர்களின் நலன்களையும், பாதுகாப்பையும் முந்தைய மன்மோகன் சிங் அரசு அலட்சியம் செய்தது. குண்டு துளைக்காத 1 லட்சத்து 86 ஆயிரம் உடைகள் வாங்க 2009-ம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டுவரை மன்மோகன் சிங் அரசு எதுவுமே செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான், 2 லட்சத்து 30 ஆயிரம் உடைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிலர், ‘குடும்பமே முதலில்’ என்று செயல்படுகிறார்கள். ஆனால், நான் ‘இந்தியாவே முதலில்’ என்று செயல்பட்டு வருகிறேன்.
ரபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வர விடாமல் தடுக்க சிலர் கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து பறக்கத் தொடங்கும்போது அவர்கள் வாயடைத்து போவார்கள்.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், “இந்த நினைவு சின்னம், மற்றொரு ஆன்மிக தலமாக இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் இங்கு வந்து, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்” என்று கூறினார்.
சேலத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி:- உங்களை விமர்சனம் செய்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே?
பதில்:- கொள்கை வேறு, கூட்டணி வேறு.
கடந்த முறை தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது கூட்டணி மற்றும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம்.
நாடு முழுவதும் பார்க்கும்பொழுது பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார். #TNCM #EdappadiPalaniswami #ADMK #DMDK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்