search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓ.பன்னீர் செல்வமும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனு விசாரணையுடன் சேர்த்து, நாளை மறுநாள் இந்த மனு விசாரிக்கப்படும் என நீதிபதி அறித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அன்று தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என கூறினார்.

    இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வமும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனு விசாரணையுடன் சேர்த்து, நாளை மறுநாள் இந்த மனு விசாரிக்கப்படும் என நீதிபதி அறித்துள்ளார்.

    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
    • இரண்டாம் நாள் முடிவில் மொத்தம் 222 பேரிடம் இருந்து மனுத்தாக்கல் பெறப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் நாளில் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான நேற்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இரண்டாம் நாள் முடிவில் மொத்தம் 222 பேரிடம் இருந்து மனுத்தாக்கல் பெறப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து 221 பேர் எடப்பாடி பழனிசாமி பேரில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது.
    • பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வருகிற 22-ந்தேதி விடுமுறை தினத்தன்று விசாரிக்கப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் மனுதாக்கல் நடைபெறுகிறது.

    பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் வேறு யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித் தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், "அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்குகளில் அ.தி.மு.க. தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அன்று மாலையே அவசர அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ளது.

    பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிக்கப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரையும் போட்டியிட விடாமல் தடுத்துள்ளனர். எனவே இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் மனுதாரர்களின் வக்கீல்கள் முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார்.

    அதன்படி இந்த வழக்கு அவசர வழக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் பரபரப்பான வாதங்களை முன் வைத்தனர்.

    மனோஜ்பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடினார். அவரது வாதம் வருமாறு:-

    வேட்புமனுதாக்கல் நிறைவு என இன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்வு என அறிவிக்கப்படலாம்.

    ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என கூறி விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் அடைய முடியாது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே கடிதம் அனுப்புகிறது.

    தலைமை கழக நிர்வாகியாக அல்லாத அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாதபடி விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் அட்டவணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டு ஞாயிற்றுக்கிழமை மனுதாக்கல் முடிவு என்று அவசரம் காட்டியுள்ளனர். கட்சியில் 1.5 கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதா? நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அவசர அவசரமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

    பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அப்படி என்ன அவசரம்? ஓரிரு நாட்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு அதுவரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உத்தரவிடுங்கள். அ.தி.மு.க. பொதுச்செயலராளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    வைத்தியலிங்கம் சார்பில் மூத்த வக்கீல் மணிசங்கர் வாதாடியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம். அதற்குள் பொதுக்குழு வழக்கை விசாரிக்கலாம்.

    நாளை வந்து ஒரே ஒரு வேட்பு மனுதான் வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி வெற்றி என்று சொல்வார்கள். பொதுச்செயலாளர் தேர்தலில் வேறு யாரையும் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    ஜே.சி.டி. பிரபாகர் சார்பில் மூத்த வக்கீல் ஸ்ரீராம் வாதாடியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நோட்டீசு கொடுக்காமல் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். அதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் நடத்துவது தவறு. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் சட்டப்படி உள்ளது.

    அதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் அறிவிப்பு ஐகோர்ட்டு நடைமுறையை தவறாக பயன்படுத்துவது ஆகும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியலிங்கம் வாதாடியதாவது:-

    1.65 கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் 1.65 கோடி தொண்டர்களின் ஆதரவை பெறவில்லை. அவர்களது ஆதரவும் இவர்களுக்கு இல்லை.

    கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டதால் ஐகோர்ட்டு தலையிட முடியாது. அதில் அநீதி இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு தொடரலாம். பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

    இந்த 3 பேரும் கோர்ட்டுக்கு முதலில் போகவில்லை. கட்சி உரிமையை இழந்தவர்கள் 8 மாதங்களுக்கு பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எந்த தடையும் இல்லை. கோர்ட்டுகள் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய பின்னர் தேர்தல் நடத்தப்படுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்தபோது தேர்தல் நடத்தப்படாது என்று உத்தரவாதம் அளித்தோம். சுப்ரீம் கோர்ட்டு வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு பெறப்படுவது பழைய நடைமுறைதான்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு வாக்கு மையங்களில் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர் அட்டையும் புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. முறைப்படி தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தால் கண்டிப்பாக தேர்தல் நடத்தப்படும்.

    ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இதே நடைமுறைதான் இருந்தது. தேர்தல் அறிவிப்பு வழக்கமான நடைமுறை தான். வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்யவில்லை.

    ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை காரணம் கூறி இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமை உள்ளதாக மனுதாரர்கள் கூற முடியாது. வழக்கு தொடர அவர்களுக்கு உரிமை இல்லை.

    இந்த கட்சியின் அஸ்திவாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். ஜூலை 11-ந்தேதி பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    எனவே எங்களை வெளியேற்றிவிட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று மனுதாரர் கூறுவதே தவறு. அவர்கள் இது போன்ற வழக்குகளை தொடுத்து கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்கின்றனர். கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

    23.6.2022 மற்றும் 11.7.2022 ஆகிய தேதிகளில் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இவர்கள் வழக்கு தொடர முடியாது. அவர்களுக்கு கட்சியில் ஆதரவு உள்ளதா என நிரூபிக்க சொல்லுங்கள். ஜூலை 11-ந்தேதி பொதுக்குழுவில் 2600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் 2100-க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.50 கோடி அடிப்படை உறுப்பினர்களின் விருப்பப்படி ஒற்றை தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பொதுக்குழுதான் கட்சியின் அதிகாரம் கொண்ட மேல் அமைப்பு. ஒற்றை தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்க்கும் ஓ.பி.எஸ். ஆதரவு மனுதாரர்களுக்கு கட்சியில் ஆதரவில்லை.

    எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இப்போது அவர் பொதுச்செயலாளர் பதவிக்கு தொண்டர்களின் விருப்பத்தின்படி போட்டியிடுகிறார். அசாதாரண சூழலில் கட்சியின் எதிர்காலத்தை கருதுகிறோம். தனிப்பட்ட நபர்களின் பாதிப்பை அல்ல. கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுகளின்படி பார்க்கும்போது ஓ.பி.எஸ். தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கற்பனை உலகத்தில் இருக்கின்றனர். தற்போதைய நிலை என்ன என்பதையும், கட்சியின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்துமாறு கூறிய ஓ.பி.எஸ். தரப்பு தற்போது தடைகோருவது ஏன்?

    ஓ.பி.எஸ். இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. 3 பேருமே மறைமுக மனுதாரர்களாக உள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமை இல்லை. கட்சியில் ஓ.பி.எஸ்.சுக்கு 1 சதவீத உறுப்பினர்கள்கூட ஆதரவாக இல்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே உறுப்பினர் பதவி உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன.

    தேர்தல் தொடங்கி விட்டால் அதில் தலையிட முடியாது என்று இந்த ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    பின்னர் அ.தி.மு.க. சார்பில் வக்கீல் விஜய நாராயணன் வாதாடியதாவது:-

    பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு 4 முறை ஐகோர்ட்டு தனி நீதிபதியிடமும், 3 முறை டிவிசன் பெஞ்சிலும் முறையிட்டு தோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. உள்ளது.

    2017-ம் ஆண்டிலும் இதே போன்ற நிலை நிலவியது. அப்போதும் பலர் வழக்கு போட்டனர். பொதுக்குழுவே இறுதி முடிவு எடுத்தது. 23.6.2022 பொதுக்குழு கூட்டத்துக்கு இருவரும் கையெழுத்திட்டனர். ஆனால் 11.7.2022 பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.

    கட்சியின் உறுப்பினர்களுக்கும் கட்சிக்கும் உள்ள ஒப்பந்தம் கட்சியின் விதிகளாகும். அந்த விதிகளை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 2017-ம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை 1.50 கோடி தொண்டர்கள் உருவாக்கினர்.

    அதை மீற முடியாது என்று கூற முடியாது. பொதுக்குழு சர்வ அதிகாரமும் கொண்டது. கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். சூழ்நிலை மாறியதால் விதிகள் திருத்தப்பட்டன.

    பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டது. கட்சி விதி தெளிவாக உள்ளது. விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஜூலை 11-ந்தேதி கொண்டு வரப் பட்ட திருத்தங்கள் சட்ட விரோதமானவை அல்ல.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியின் செயல்பாட்டை அனுமதிக்க வேண்டும். இரட்டை தலைமையில் இருந்து ஒற்றை தலைமைக்கு மாறும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லை.

    அடுத்த தேர்தலுக்கு முன்பு திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் வரும், பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்திட முடியாது.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இப்போது என்ன அவசியம்? பொதுக்குழு தொடர்பான வழக்கு ஏப்ரல் 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானமும் உள்ளது. அதை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இந்த தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது.

    பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கையும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டுள்ள இந்த வழக்கையும் சேர்த்து விசாரித்தால் என்ன? பொதுச்செயலாளர் பதவிக்கு ஒரு வேட்புமனு மட்டும் தாக்கல் செய்திருப்பதால் இன்றே முடிவை அறிவிக்க முடியும். எனவே முடிவை அறிவிக்காமல் நிறுத்தி வைத்தால் என்ன?

    இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள், "தேர்தல் முடிவை அப்படி நிறுத்தி வைக்க முடியாது. இது உள்கட்சி விவகாரம்" என்றனர்.

    இதையடுத்து நீதிபதி குமரேஷ்பாபு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில் அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது. அதற்கு தடை விதிக்கிறேன். இந்த வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வருகிற 22-ந்தேதி விடுமுறை தினத்தன்று விசாரிக்கப்படும். 2 வழக்குகளிலும் 24-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும். எனவே 24-ந்தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது.

    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி இருந்தார்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இருவருமே பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

    • தேர்தல் நடைமுறைகள் தொடரலாம்.
    • 22-ந்தேதி முழுநாள் விசாரணையை நடத்தலாம், 26-ந்தேதி தானே தேர்தல் என நீதிபதி கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் அவர்கள் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார்.

    அதன்படி, இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் பெற்று மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் வாதங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது:- பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓபிஎஸ்-க்கு 1.50 கோடி உறுப்பினர்களில் 1 சதவீதம் கூட ஆதரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இந்த வழக்கு தொடர அடிப்படை உரிமையில்லை. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு நீதிபதி குமரேஷ் பாபு, அ.தி.மு.க.தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். 22-ந்தேதி முழுநாள் விசாரணையை நடத்தலாம், 26-ந்தேதி தானே தேர்தல் என கூறினார்.

    இதற்கு எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    • பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான நேற்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
    • வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட நேற்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான நேற்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது. இதனால் இன்று நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர்.

    இதனிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அவசரப்படவில்லை.
    • இடைத்தேர்தலை வைத்து பொதுத்தேர்தலை கணிக்க முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பான முறையில் வழி நடத்தப்படுகிறது. அதற்கு ஆதரவு கொடுக்கும் எண்ணம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடையாது. கட்சி கேடுகெட்டு போனாலும் அவருக்கு அதைப்பற்றி கவலை இல்லை. அவரை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரக்கூடாது என்பதுதான். கழகத்துக்கு விரோதமான செயல்களை செய்து அ.தி.மு.க. அலுவலகத்தை சூறையாடினார். இதை தமிழக மக்கள் மறக்கவில்லை.

    அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் சர்வ கட்சி தலைவர். அவர் போய் சேர்ந்த எந்த கட்சியும் உருப்பட்டது இல்லை. அவரது ராசி அப்படித்தான். அவர் எடப்பாடி பழனிசாமியையும் தலைமை கழக நிர்வாகிகளையும் மோசமாக விமர்சித்து உள்ளார். அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு சகுனி.

    அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் நடந்தபோது கட்சி ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டனர். அதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி சமுத்திரம் போல இருக்கிறார். அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஆதரவாக உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கூவம் போல இருக்கிறார். கூவமும், சமுத்திரமும் ஒன்றாகி விடுமா? நிர்வாகிகள், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட அவர்கள் அ.தி.மு.க.வி.ன் பெயரை சொல்லக்கூட தகுதி இல்லாதவர்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அவசரப்படவில்லை. தலை இல்லாமல் எத்தனை நாள் கட்சி நடத்த முடியும்? என்று பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க இது உரிய நேரம்தான். இது கட்சியின் முடிவு. அதன் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கிறது.

    ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முரணான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்படி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்தார். பிக்பாக்கெட் என்று சொன்னால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் பொருத்தமாக இருப்பார். அவர் தனது கவுரவத்துக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.

    ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.வின் அதிகார பலம், பணபலம் இருந்தது. ஆனால் நாங்கள் தொண்டர்கள் பலத்தை மட்டுமே நம்பி போட்டியிட்டோம். 44 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி இருக்கிறோம். இதுவே எங்களுக்கு வெற்றிதான். எங்களின் வாக்குவங்கி அப்படியே தான் உள்ளது. இடைத்தேர்தலை வைத்து பொதுத்தேர்தலை கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஆலோசிக்காமல் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாதம்

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக 37 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். எடப்பாடியை எதிர்த்து வேறு யாரும் இதுவரை மனுதாக்கல் செய்யவில்லை. எனவே, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

    ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதுவுமே முறைப்படி இல்லாமல், பிக்பாக்கெட் அடித்து செல்வது போல பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளரான என்னிடம் ஆலோசிக்காமல் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே, இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • விதிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.
    • பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான இன்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். நாளை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம்.

    மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 27ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25000 செலுத்தி விருப்ப மனு பெறலாம். விதிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளான இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. 11.15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான இன்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நாளையுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற உள்ளது.
    • பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது.

    அதி.முக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    இந்நிலையில் விடுமுறை தினமான நாளை காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நாளையுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    • கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிமுக முடிவெடுக்கும்.
    • தேர்தல் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரிகள் அவரது வேட்பு மனுவை பெற்றுக்கொண்டனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம். எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை என கூறினார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுகவுக்கு என்று தனித்தன்மை உள்ளது. குட்டக் குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல. எங்களை யாரும் குட்ட முடியாது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிமுக முடிவெடுக்கும். தேர்தல் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றார்.

    • பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை அ.தி.மு.க. தூண்டி விடுவதாக அமைச்சர் நாசர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
    • மக்கள் விரோத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா முதல் கட்டமாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 6 ஒன்றியம், 2 நகரம், 2 பேரூர் கழக நிர்வாகிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படம் பொறித்த அடையாள அட்டையை 40 ஆயிரம் பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டதாக தெரிவித்தார்.

    பின்னர் பி.வி.ரமணமா நிருபர்களிடம் கூறியதாவது:

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை அ.தி.மு.க. தூண்டி விடுவதாக அமைச்சர் நாசர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

    மக்கள் விரோத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சின்ன தீங்கு ஏற்பட்டாலும், அ.தி.மு.க. விட்டுக் கொடுக்காது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் வெகுண்டெழுந்து வெடி குண்டாக மாறுவோம்.

    இந்த ஆட்சியில் பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    பால் விலையை குறைப்பதாக சொல்லி மக்களையும், பால் உப பொருட்களின் விலையையும் எந்த அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தியதால் பால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் பால் உற்பத்தி பெருமளவு குறைந்திருப்பதால் ஆவின் நிறுவனத்திற்கு பாலை கொடுக்க முடியாத நிலை உள்ளது, தனியார் பால் நிறுவனத்தை ஊக்கு விக்கும் வகையில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் செயல்படுகிறார். பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அது தோல்வி அடைந்ததாக அறிவித்த அமைச்சர் நாசர் தற்போது பால் தட்டுப் பாடின்றி கிடைப்பதாக கூறுவதால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. மாநிலம் முழுவதும் 75 மாவட்டங்களாக செயல்பட்டு வருகின்றன.
    • புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரை, கேரளா, புதுடெல்லி, அந்தமான் ஆகிய இடங்களிலும் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மாவட்டம் வாரியாக எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 9 இடங்கள் உள்பட மொத்தம் 84 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    அதற்கான இடங்கள் என்னென்ன என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தண்டையார்பேட்டையில் உள்ள வடசென்னை வடக்கு (கிழக்கு) அலுவலகம், அயனாவரத்தில் உள்ள வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அலுவலகம், வடசென்னைக்கு தெற்கு (கிழக்கு) மாவட்டத்துக்கு உட்பட்ட ராயபுரத்தில் ஸ்ரீவெக்கா மஹால், புதுபேட்டையில் உள்ள வடசென்னை தெற்கு (மேற்கு) அலுவலகம் ஆகியவை ஓட்டு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்துக்குட்பட்ட நுங்கம்பாக்கம் அவைத் தலைவர் அலுவலகம், நெற்குன்றத்தில் உள்ள தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அலுவலகம், வேளச்சேரியில் உள்ள தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அலுவலகம், விருகம்பாக்கத்தில் உள்ள தென்சென்னை தெற்கு (மேற்கு) அலுவலகம், கந்தன்சாவடியில் உள்ள தென்சென்னை புறநகர் மாவட்ட அலுவலகம் ஆகியவற்றிலும் அ.தி.மு.க. உறுப்பினர்களால் பதிவு செய்யப்படும் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் வேறு சில இடங்களும் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்வு செய்யப்பட்டு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மாநிலம் முழுவதும் 75 மாவட்டங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த இடங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரை, கேரளா, புதுடெல்லி, அந்தமான் ஆகிய இடங்களிலும் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×