search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    தேமுதிக மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalHaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும்.

    எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தகுதி உள்ளவர்கள், அவர்களுக்கு தெரிந்த தகுதி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம்.



    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ரூ.10 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம். தே.மு.தி.க., இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. வேறு சிலபேர் எங்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நல்லவர்கள் கூட நிற்பார்கள். எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #kamalHaasan
    தேர்தலில் போட்டியிட நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ParliamentElection
    நெல்லை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் சுகா தலைமை தாங்கினார். நெல்லை மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    நெல்லை என்றால் நினைவுக்கு வருவது அரிவாளும், அல்வாவும் தான். இதுவரை உங்களுக்கு அல்வா கொடுத்தார்கள். இனி நீங்கள் ‘அல்வா’ கொடுக்க வேண்டும். இந்த கூட்டம் சினிமா மோகத்தால் வந்த கூட்டம் அல்ல. நாளைய தமிழகத்தை உருவாக்க வந்த கூட்டம். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கும்போது கிண்டல் அடித்தார்கள். இப்போது வசை பாடுகிறார்கள். நாளை எதுவும் நடக்கலாம்.

    நாங்கள் சாதனை படைக்க விரும்புகிறோம். சாதனை என்பது சொல் அல்ல. செயல். 37 ஆண்டுகளாக எனது நற்பணி மன்றத்தில் பணியாற்றினார்கள். தற்போது அவர்களே நிர்வாகிகளாக இருக்கிறார்கள். நற்பணி மன்றத்தில் எந்த பிரதிபலனும் இல்லாமல் பணியாற்றியவர்கள்தான் தற்போது நிர்வாகிகளாக உள்ளார்கள்.

    காந்தியை நாம் தலைவராக ஏற்றுக் கொண்டோம். அவருடைய அகிம்சை பெரிய வீரம். அதனை கடைபிடிப்பது மிகவும் கஷ்டமானது. காந்தி வழியில் நான் வருவேன். அவர் என் தந்தையை போன்றவர். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது எனது முடிவு. கட்சி தொடங்கவில்லை என்றாலும் எனது கனவையும், கடமையையும் நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருப்பேன்.

    கட்சி தொடங்கியதால் அதன்மூலம் சாதிக்க விரும்புகிறேன். சிலர் வரலாமா, வேண்டாமா என நடுக்கோட்டில் நிற்கிறார்கள். அவர்கள் மக்கள் நீதி மய்யத்துக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    நமது கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்படுகிறது. அந்த விருப்ப மனுவில் உங்கள் பரிந்துரைகள் இருக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களும் மனு செய்யலாம். நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியது உங்கள் கடமை. ஊழலுக்கு எதிரானவர்கள், தகுதியானவர்கள், சுயநலம் இல்லாதவர்கள் போட்டியிட வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதுவரை மக்களுக்கு நல்லது செய்யாதவர்கள் மாறி மாறி வந்துள்ளனர். அதற்கு மாற்றாக இந்த கட்சி.

    தமிழன் என்பது விலாசம் தான். அதை சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள். வாரிசு அரசியலுக்கு எதிராக இருக்க வேண்டும். புதிய தமிழகத்தை உருவாக்கும் முனைப்புடன் நாம் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டு வேட்பாளர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களிடத்தில் நீங்கள் விருப்ப மனுவை கொடுங்கள். சரியானவர்களை நான் தேர்வு செய்வேன்.

    வீரர்களை அரசு பாதுகாக்க வேண்டும். அதுபோல் மக்கள் நலனும் பாதுகாக்க வேண்டும். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்கு கலவரத்தின்போது எந்தெந்த இடங்களில் சுட வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால் ஸ்டெர்லைட் பிரச்சினையில் வேன் மீது ஏறி நின்று நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இது சரியா?. கலவரம் ஏற்பட்டால் ராணுவத்தை அனுப்புவதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். யார் வருவார். சுப்பிரமணியன் போன்ற நமது ராணுவ வீரர்கள் தான் வருவார்கள். அவரால் நம்மை சுட முடியுமா. இதை கேட்டால் நம்மை விமர்சனம் செய்வார்கள். சில அரசியல் கட்சி தலைவர்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சாகும்போது எந்த சொத்துகளும் கூட வருவதில்லை. ஆஸ்பத்திரியில் எந்த பணமும் நம்மை காப்பாற்றுவதில்லை. நமக்காக வெளியே நிற்கும் தொண்டர்களை கவனிக்க தவறி விட்டார்கள். அதை நாம் செய்ய மாட்டோம்.

    கூட்டத்திற்கு வந்த கமல்ஹாசன் தொண்டர்களை பார்த்து வணக்கம் தெரிவித்த காட்சி

    மத்திய அரசை பொறுத்தவரையில் தேசிய நீரோடையில் தமிழ் கலக்கவில்லை என்று கூறுகிறார்கள். கொல்கத்தா, பஞ்சாப் போன்ற வடமாநிலங்களுக்கு சென்றால் அங்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரோ, அண்ணா பெயரோ, கக்கன் பெயரோ இருப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், திலக் போன்ற தலைவர்கள் பெயரை நாம் வைத்திருக்கிறோம். தேசிய தலைவர்கள் பெயரை மறக்காமல் வைத்திருப்பவர்கள் தமிழர்கள் தான்.

    மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன? என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன். மக்கள் நலனே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை. தமிழகத்தில் இழந்ததை மீட்போம். சாதிகள் அற்ற சமத்துவத்தை உருவாக்குவோம். மதச்சார்பின்மையை போற்றி பாதுகாப்போம். அரசு எந்திரங்கள் முறைகேடு செய்தால் தடுப்போம். சர்வதேச தரத்தில் கல்வி கொடுப்போம். நீர்வளத்தை பெருக்குவோம். நிலங்களை பாதுகாப்போம். தொழில் வளம் பெருக வேண்டும். ஏழைகளே இல்லாத நிலை உருவாக வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதுதான் எங்கள் கட்சியின் கொள்கை.

    தற்போது 60 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக அறிவித்து இருக்கிறார்கள். வெட்கமாக இல்லையா? இத்தனை ஆண்டுகள் கழித்து அறிவித்திருக்கிறார்கள். நாம் தனியாக நிற்போம் என்றால் வருத்தப்படுகிறார்கள். நாம் தனியாக நிற்கவில்லை. மக்களோடு சேர்ந்துதான் நிற்கிறோம். சீட்டு கேட்டு நிற்கிறார்கள். சீட்டு கேட்டார்கள் என்று சொல்கிறார்கள். நின்று அடிக்க வேண்டிய இடத்தில் இருக்கும்போது நாங்கள் ஏன் சீட்டு கேட்போம்.

    தவறு செய்தவர்களை தட்டிக்கேட்க நாம் வர வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு குதிரை பேரம் நடக்கும். அதற்கெல்லாம் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். தமிழக மக்களின் நலனை பாதுகாக்கின்ற கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். அரசியலை சரிசெய்ய வேண்டிய அவசியம் வந்துவிட்டது. தனித்து நிற்போம் என்றால் பணத்துக்கு எங்கே செல்வார்கள்? என்று கேட்கிறார்கள். மக்களிடம் இருந்து வசூல் செய்து தேர்தலை சந்திப்போம்.

    நான் ரசிகர் மன்றத்தில் இருக்கும்போது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அழுக்குபடிந்த பணத்தை வாங்கித்தான் நற்பணி காரியங்களை செய்தார்கள். அதைத்தான் நாம் செய்ய போகிறோம். குறிப்பாக மக்களிடம் பணம் கொடுத்து தான் ஓட்டு கேட்பார்கள். ஆனால் மக்களிடம் பணம் பெற்று தேர்தலை சந்திக்கிறோம். அவர்கள் கொடுக்கும் பணம் முதலீடு. இந்த பணத்துக்கு உரிய பலனை நாங்கள் செய்வோம். சிலர் என்னை அவதூறாக பேசி வருகிறார்கள். பி.ஜே.பி.க்கு ‘பி’ அணி என்று என்னை சொல்கிறார்கள். இதனை நான் மறுக்கிறேன். என்றுமே நாங்கள் ‘ஏ’ அணி தான்.

    நாளை நமது, நாளை மறுநாளும் நமது. நாளை என்பது டெல்லி செங்கோட்டை. நாளை மறுநாள் என்பது தமிழகத்தின் கோட்டை. இதனை நாம் புரிந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் நிதிக்காக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் உங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கமல்ஹாசனுக்கு வாள், கேடயம், செங்கோல் பரிசளிக்கப்பட்டது. விழா மேடையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 9 மணிக்கு பேச்சை தொடங்கிய கமல்ஹாசன், 9.50 மணிக்கு நிறைவு செய்தார்.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்ரீபிரியா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜான் சாமுவேல், கமிலா நாசர், குருவையா, ரெங்கராஜன், மவுரியா உள்பட பலர் பேசினார்கள். மாநில செயற்குழு உறுப்பினரும், இயக்குனருமான சிநேகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  #KamalHaasan #ParliamentElection


    மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் ரஜினிகாந்த் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். #seeman #rajinikanth #parliamentelection

    சென்னை:

    சீமான், ஆர்.கே.சுரேஷ் இருவரும் இணைந்து அமீரா என்ற படத்தில் நடிக்கிறார்கள். மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பூஜை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சீமான் பேசியதாவது:-

    “இது தமிழ் தலைப்பு அல்ல தான். ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை. அதனால் அமீரா என பெயர் வைத்துள்ளோம். படங்கள் இயக்கினாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத் தான் நம்மை சட்டென அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

    திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமைமிக்க கருவியாக பார்க்கிறோம். அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான் திரைத் துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள்.

    நான் எனது ரசிகர்களை சந்தித்து அவர்களை தொண்டர்களாக மாற்றி கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு. கமல் ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள்.

    தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்கு தெரிந்ததா? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினிகாந்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் சென்று சந்திக்கவில்லை எனக் கேட்டால் நான் இன்னும் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்கிறார்.

    அப்படியானால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு எதற்காக சென்றார்? எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன் ஆனால் சட்டமன்ற தேர்தலில் நின்று நேராக முதல்-அமைச்சர் நாற்காலியில் தான் போய் உட்காருவேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

    தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓட்டு போடுங்கள் என்றுசொல்லும் ரஜினிகாந்த் அதை யார் தீர்ப்பார் என தன் பின்னால் இருப்பவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா? அப்படி செய்தால் தான் அவருக்கு பெயர் வழிகாட்டி. அவருக்கு பெயர்தான் தலைவன்.


    உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்துவிட்டுப் போங்கள் என்று சொல்வதற்கு ஒரு தலைவன் தேவை இல்லை. நடுநிலை வகிக்கிறேன் என இப்படிக் கூறுவது ஒரு மேம்போக்கான அறிவிப்பு.

    அதைத்தான் நாம் விமர்சிக்கிறோம். அடுத்ததாக நான் சிலம்பரசனை வைத்து எடுக்கப்போகிற படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதனால்தான் நான் சினிமாவை ஒரு துப்பாக்கி போல, ஒரு கோடாரி போல, ஒரு அரிவாள் போல பயன் படுத்துகிறேன்.

    நாங்களும் பேசாமல் இருந்து விடுகிறோம். தேர்தலில் தனியாக நிற்கிறீர்களே என்கிறார்கள். நான் தனியாக நிற்பதால் யாருக்கு நட்டம்? மற்ற கூட்டணிகளுக்கு நட்டம் என்றால் அதை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இப்போது அவர்கள் அமைப்பது கூட்டணியா? இல்லை. வெறும் நோட்டணி.. சீட்டணி.. என்னையாவது விடுங்கள்.. அப்படி என்றால் மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யார் தான் என சொல்லுங்கள்.. தனியாக நின்று விட்டுப் போகிறேன்’.

    இவ்வாறு அவர் பேசினார். #seeman #rajinikanth #parliamentelection

    இந்த தேர்தலில் வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். #nanjilsampath #vaiko #parliamentelection

    நாகர்கோவில்:

    தமிழக அரசியலில் அதிரடி கருத்துக்களை தெரிவித்து அடிக்கடி பரபரப்பை கிளப்புபவர் நாஞ்சில் சம்பத். வைகோவின் ம.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகியாக இருந்த நாஞ்சில் சம்பத், பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வகித்தார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி. தினகரனை ஆதரித்தார். அவர், கட்சி தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை என்று கூறி அரசியல் அரங்கில் இருந்து வெளியேறினார்.

    இனி இலக்கிய மேடையில் மட்டுமே பேசுவேன் என்று கூறி வந்த நாஞ்சில் சம்பத் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் பதிவு செய்தார். இது அவர் மீண்டும் அரசியல் மேடையில் பேசுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் பிரசார மேடைகளில் வலம் வர தயாராகி வருகிறார்.

    வைகோ மற்றும் தி.மு.க. கூட்டணியை புகழ்ந்து பேசுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறி வருகிறார். இது தொடர்பாக நாஞ்சில் சம்பத், மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க- பாரதீய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து விட்டன. இந்த தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெறுமா?

    பதில்:- இப்போது நடக்கும் தேர்தல் இக்கூட்டணியின் அஸ்தமனமாக அமையும். இனி இவர்கள் வெற்றி பெற போவதில்லை.

    கே:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை அ.தி.மு.க. நிற்கும் தொகுதிகளே 21-க்கும் கீழ் வந்து விடும்போல் இருக்கிறதே?

    ப:- அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே இதை கருதுகிறேன். அ.தி.மு.க. தென்தமிழகத்தின் கவுரவத்தை விட்டுக் கொடுத்து விட்டது.

    ஜெயலலிதா, திறமையாக ஆட்சி செய்தார். கட்சியை வழி நடத்தினார். இப்போது சுரண்டி, சுரண்டி கொள்ளை அடிக்கும் நிலையே காணப்படுகிறது.

    கே:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்துள்ளதே?

    ப:- பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்ததால் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மட்டுமல்ல, மக்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தின் புது வாக்காளர்கள் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.

    இந்த கூட்டணிக்கு தேர்தலில் ஒருபோதும் வெற்றி கிடைக்காது. ராமதாசின் மகனுக்கு மத்திய மந்திரி பதவி பெறவே அவர் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். அவரது ஆசை நிறைவேறாது.

    கே:- அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவார்களா?

    ப:- தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் சேரவே வாய்ப்புள்ளது. இங்கு சேர்ந்தால்தான் நலம் பயக்கும்.

    கே:- நடிகர் கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும்?

    ப:- கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தலில் தொகுதிக்கு 500 வாக்குகள் கிடைக்கவே வாய்ப்புள்ளது. கமல்ஹாசன் அறிவார்ந்த அரசியல் செய்வார் என்று எதிர்பார்த்தேன். அவர், இப்படி தனக்குதானே சுவரில் போய் முட்டிக் கொள்வதன் மூலம் தன்னை தானே காயப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

    திராவிடம் பற்றி கமல்ஹாசன் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அதை அலட்சியப்படுத்த வேண்டியது திராவிடத்தின் கடமை.

    கே:- ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தனது ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் கூறி இருக்கிறாரே?

    ப:- ரஜினியின் படங்கள் வெளிவரும் போது அவர், அரசியல் கருத்துக்கள் பேசுவார். சீன் போடுவார். படம் வெளியாகும். அது வெற்றி பெறும். அதன் பிறகு அவரும் அமைதியாகி விடுவார். அரசியல் பேச்சும் காணாமல் போய் விடும்.

    ரஜினி தன்னை குழப்பி, ரசிகர்களையும் மட்டுமின்றி தமிழக மக்களையும் குழப்பி வருகிறார்.

    கே:- மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமையுமா? மோடி பிரதமராக வாய்ப்புள்ளதா?

    ப:- பாரதீய ஜனதா வெற்றி பெற வாய்ப்பே இல்லை. வட இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் 3 முறை ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா, அம்மாநில மக்களால் அகற்றப்பட்டு விட்டது.

    இதுபோல சத்தீஷ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாரதீய ஜனதா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து விட்டது. அவர் மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை.

    கே:- பாரதீய ஜனதா வெற்றி பெறாவிட்டால் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா?

    ப:- இந்த தேர்தலில் காங்கிரஸ் நிச்சய வெற்றி பெறும். பிரதமராக ராகுல்காந்தி பதவி ஏற்பார்.

    கே:- இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமானவர்கள் காங்கிரசார் என்ற பழிச்சொல் இருக்கும்போது தமிழகத்தில் அவர்களை ஆதரிக்க முன் வருவது ஏன்?

    ப:- இலங்கை தமிழர் கொல்லப்பட்ட விவகாரத்தை மறக்க முடிய வில்லை என்பது உண்மைதான். அந்த பழியை துடைக்க காங்கிரஸ் முன் வந்துள்ளது. ராகுல்காந்தி இதற்கு பிரயாசித்தம் தேடுவார் என்று நம்புகிறேன்.

    கே:- தி.மு.க., காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறும் நீங்கள், அவர்களை ஆதரித்து இந்த தேர்தலில் பிரசாரம் செய்வீர்களா?

    ப:- தி.மு.க. பொது மேடைகளில் எனக்கு உரிய மரியாதை கொடுத்தால் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன்.

    பாரதீய ஜனதா கட்சியை எதிர்ப்பதே எனது பிரதான இலக்கு. அ.தி.மு.க. எனது முதல் எதிரி, முக்கிய எதிரி பா.ம.க. இப்போது இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்திருப்பதால் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்ய விரும்புகிறேன்.

    கே:- டி.டி.வி. தினகரன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக கூறி இருக்கிறாரே?

    ப:- டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை 2 ஆக பிளப்பார். அதை தவிர வேறு எதையும் அவரால் சாதிக்க முடியாது. இந்த தேர்தலில் சந்திக்கும் வீழ்ச்சிக்கு பின்னர் அவரால் எழுந்து நிற்கவே முடியாது.

    கே:- 21 தொகுதி இடைத்தேர்தல் நிலை என்னவாகும்?

    ப:- 21 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். இடைத்தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க. ஆட்சி கவிழும். தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்பார்.


    ப:- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்திருக்கிறது. இது வைகோவால் வந்தது. எனவேதான் அவரை பாராட்டினேன். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு எந்தவித சமரசத்திற்கும் ஆட்படாமல், பணம் பாதாளம் வரை பாயும் என்பதை பொய்யாக்கிய முதல் தலைவராக வைகோ என் கண்ணுக்கு தெரிகிறார்.

    எனவேதான் தமிழர்கள் அவருக்கு விழா எடுக்க கடமைப்பட்டு இருக்கிறார்கள் என்று கருத்து பதிவிட்டேன். இந்த தேர்தலில் வைகோவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யவும் தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #vaiko #parliamentelection

    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஒரு குழந்தை என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். #kpmunusamy #kamal #admk

    திருவாரூர்:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (22-ந் தேதி) திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடி மணமக்களின் திருமண விழா நடைபெற்றது.

    விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் நாகை கே.கோபால் தஞ்சாவூர் கு.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருமண நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தமிழக அமைச்சர்களான திண்டுக்கல் சி.சீனிவாசன், இரா.துரைக்கண்ணு, வெல்ல மண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டுப்புடவை, வேட்டி உள்ளிட்ட 70 வகையான திருமண சீர்வரிசை பொருட்கள் மாவட்ட அ.தி.மு.க.வின் சார்பில் வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது. விரைவில் யார்- யார் எங்களுடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்.

    தேர்தல் சமயத்தில் கொள்கை அடிப்படையிலும், வெற்றி நோக்கத்தின் அடிப்படையிலும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். அ.தி.மு.க , பா.ஜனதா இடையே கொள்கை வேறுபாடு இருந்தாலும் மக்கள் நலன் கருதியும், வெற்றி நோக்கம் கருதியும் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா, பா.ம.க. வுடன் எண்ணிக்கை அடிப்படையிலான கூட்டணியை வைத்துள்ளோம்.

    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஒரு குழந்தை. அவர் பேசுவதெற்கெல்லாம் பெரியவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.


    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூருக்கு வந்ததும் தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் எண்ணிப் பார்த்தேன்.

    பிரதமர் நரேந்திர மோடி தினகரனின் குடும்பத்தார் பாக்கெட்டில் இருப்பது போல் நாடகமாடினார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வரமாட்டார்கள் என்று தி.மு.க.வினர் சொன்னார்கள். ஆனால் எங்களுடன் பா.ம.க. வந்த விட்டது. இப்போது காசு கொடுத்து கூட்டணி வைத்ததாக கூறி வருகிறார்கள்.

    தி.மு.க.விடம் காசு இல்லையா. ஆசியாவிலேயே பணக்கார குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். நீங்களும் காசை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டியது தானே?. இது காசுக்காக சேர்ந்த கூட்டணி அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #kpmunusamy #kamal #admk 

    ரஜினி, சீமான் ஆதரவு தனக்கு இருக்கும் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    நான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருந்தது. மக்களின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒத்துப்போனது.

    இதே போல் பல இடங்களில் உள்ள மக்களின் கருத்தும் ஒத்துப்போக ஆசையாக இருக்கிறது. இதுவரையில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். நாங்கள் ஒரு அணி. எங்களிடம் நேர்மையானவர்கள் சேரலாம். இதுவெறும் அழைப்பு தானே தவிர, சுயநலமோ, யுக்தியோ கிடையாது.



    ரஜினி, சீமான் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு என்பது அவர்கள் விரும்பி தர வேண்டும். நான் 3-வது அணி என்று சொல்லவில்லை.

    வேட்பாளர் தேர்வு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. விருப்ப மனுக்கான அறிவிப்பு நாளை வெளிவரும். டாக்டர் தமிழிசைக்கு நான் பேசுவது திரைப்பட வசனம்போல் இருக்கிறது என்பதற்கு காரணம் என்னையும் திரைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பதுதான்.

    எங்களுடைய தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்காது. நாங்கள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. நேர்மைக்கும் உணர்ச்சிக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

    அதை நோக்கிதான் எங்கள் தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் அறிக்கைக்கு ஒன்றும் அவசரமில்லை. கூடிய சீக்கிரம் அறிவிப்போம். செய்யப்போவதை தான் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக கொடுப்போம்

    எங்களுடைய பலம் மக்கள் தான். நாங்கள் அதை நோக்கி பயணிக்கிறோம். யாருடன் கூட்டணி சேர்ந்தால் காசு வரும், ஓட்டு கிடைக்கும் என்று நினைக்காமல் மக்கள் நலன் கருதி செயல்படுவோம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவேண்டும் என்றால் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்கலாம். வந்தால் ஒரு சிறிய நன்றி சொல்லலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் பரீட்சை என்றுதான் சொன்னேன். சோதனை என்று சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அ.தி.மு.க. அதனால் ரஜினி ரசிகர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு தான் என்று ஒரு நாளிதழில் செய்தி வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டபோது, “எந்த தண்ணீர் என்று தெரியவில்லை” என்று கமல் பதில் அளித்தார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
    விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. #KamalHaasan #Vijayakanth
    சென்னை:

    சினிமாவில் இருந்து அரசியல் களத்துக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றனர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். இவர்களுக்கு பின்னர் பல சினிமா நட்சத்திரங்கள், அரசியலில் குதித்திருந்தாலும் யாரும் நிலைக்கவில்லை.

    அதே நேரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், அரசியல் களத்தில் வேகமாக முன்னேறினார். கட்சியை தொடங்கிய அடுத்த ஆண்டே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தனி ஆளாக விஜயகாந்த் களம் இறங்கினார். அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. கணிசமான ஓட்டுகளை அள்ளியது. விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி அனைவரின் புருவங்களையும் உயரச் செய்தார்.

    முதல் தேர்தலிலேயே தே.மு.தி.க. வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று ஆச்சரியப்படுத்தினர். இதுவே 2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்ததாக கூறப்பட்டது.

    இதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தார்.

    இதன் மூலம் தே.மு.தி.க., 2-வது தேர்தலிலேயே 16 அடி பாய்ந்தது.

    இதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி உதயமான மக்கள் நலக் கூட்டணி மண்ணை கவ்வியது. 2 தேர்தல்களில் ஏறுமுகமாக இருந்த விஜயகாந்தின் செல்வாக்கு 2016-ம் ஆண்டு தேர்தலில் அடியோடு சரிந்தது. அதில் இருந்து மீள்வதற்கு விஜயகாந்த் போராடிக் கொண்டிருக்கிறார்.

    கட்சியை தொடங்கி ஓராண்டில் விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது போல கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்கிறார்.



    தேர்தல் களத்தில் கமலின் இந்த முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கமல்ஹாசனை பொறுத்த வரையில், புதிய கட்சியை தொடங்கிய பின்னர் கிராமப்புறங்கள் தொடங்கி, நகர்ப் பகுதிகள் வரையில் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளார். இது அவருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

    புதிய வாக்காளர்களான இளைஞர்கள் நிச்சயம் மாற்றத்தை விரும்பி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதே கமலின் நம்பிக்கையாக உள்ளது. இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.

    இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசவும் கமல் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளையும் ஊழல் கட்சி என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் கமல், தேர்தல் களத்தில் அதனை வேகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

    விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தல் சட்டமன்ற தேர்தல். ஆனால் கமல் சந்திப்பதோ பாராளுமன்ற தேர்தல். மாநில கட்சியாக இருக்கும் மக்கள் நீதி மய்யம், பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் அதே வேளையில் புதிய மாற்றத்துக்காக எங்களை ஆதரியுங்கள். “நாளை நமதே” என்கிற கோ‌ஷத்துடன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    மத்தியில் யாருக்கு ஆதரவு? யார் பிரதமர்? என்பது போன்ற வி‌ஷயங்களை பற்றி பிரசாரத்தின் போது கமலால் பேச முடியாது என்பது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    எது எப்படி இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் களம் நிச்சயம் கமலுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் முன்னுக்கு வந்ததை போல கமலும் கவனிக்கப்படும் புதிய அரசியல்வாதியாக அவதாரம் எடுப்பாரா? இந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Vijayakanth
    40 தொகுதியிலும் மோதிப்பார்க்க தயார் என்றும் மக்கள் பலத்துடன் தனியாக நிற்பதாகவும் கமல்ஹாசன் பேசியுள்ளார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆளும் அ.தி.மு.க அரசை விமர்சித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக தீவிர அரசியலுக்கு வந்து கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ந்தேதி மக்கள் நீதி மய்யம் பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கமல்ஹாசனும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    மேலும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் அரசியல் குறித்து கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றது.


    இதையொட்டி இரண்டாம் ஆண்டு கட்சி தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக்கொடியை ஏற்றி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் எங்கும் மக்கள் நீதி மய்யம் என்னும் குடும்பம் பரவியுள்ளது. முதலில் தனியாக நின்றேன். இப்போது கூட்டம் கூடியிருக்கிறது. பெண்கள் ஆற்றும் உதவி, வியத்தகு உதவி.

    ‘கடந்த ஆண்டு இதே நாளில் தான் கொடியேற்றி கட்சியை தொடங்கினோம். நாம் பேராசைப்பட்டோம். அந்த பேராசையையும் விஞ்சி இன்று நம் கட்சி பெரிதாகி இருக்கிறது.

    இங்கே இப்போது கொடியேற்றி இருக்கிறோம். தமிழகத்தில் பல இடங்களில் கொடியேற்றிக்கொண்டு இருக்கிறது. அடுத்து எங்கே ஏற்றி வைக்கவேண்டும் என்ற இலக்கு உங்களுக்கு தெரியும். அதை நோக்கி நகர்வோம்.

    குளத்தடி மீனாக ‘மேலே மழை பொழிகிறது, புயல் அடிக்கிறது நமக்கு என்ன?’ என்று இருந்த மக்கள் இன்று வெளியே வந்து இருக்கிறார்கள். அரசியல் உதவாக்கரைகள் உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கு எடுக்கும்போது குளம் வேறு நதி வேறு கிடையாது.

    குளம் ஆறாக பெருக்கு எடுக்கும். அதன் அடையாளம் தான் இங்கே. இதன் உறவு தமிழகம் எங்கும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

    தனியாக நிற்போம் என்று சொன்னது நான் அல்ல. நாம். நாம் எப்படி தனியாக இருக்க முடியும்? நாம் என்று சொல்லும்போதே தனிமை நீங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.

    அந்த தைரியத்தில்தான் கூறுகிறேன். நமக்கு மக்கள் பலம் இருக்கிறது. எந்த கணிப்பு எப்படி சொன்னாலும் மக்கள் என்கையை பிடித்து நாடி பார்த்து இங்கே புத்துயிர் இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

    அவர்கள் வைத்தியர்கள் அல்ல. வருங்காலத்தை சொல்லும் ஜோசியர்கள். அவர்களை நம்பி நான் இங்கே அடியெடுத்து வைத்து இருக்கிறேன். இந்த ஜோசியம் வேறு.

    எதிர்காலத்தை பற்றி கனவு கண்டுகொண்டு இருக்கும் பலர் அவர்களின் நினைவாக நாம் வரவேண்டும் என்று ஆசீர்வதித்து என்னை அனுப்பி இருக்கிறார்கள். நேற்று வரை நான் சொல்வது புரியவில்லை என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் புரியக்கூடாது என்ற பிரார்த்தனையில் இருந்தவர்கள்.

    இன்று அவர்களுக்கு புரிய தொடங்கி இருப்பதற்கு காரணம் நான் என்னுடைய சுருதியை அதிகப்படுத்தி இருக்கிறேன். அதிகம் என்பதை அதிகப்பிரசங்கம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. நியாயமான பிரசங்கங்கள் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இன்னும் அவை வலிமை பெறும். கணக்கு வழக்குகளுடன் அவை வலிமை பெறும்.

    தமிழகத்தையும் தமிழகத்தில் நிலவும் ஊழல்களையும் உலகம் கவனித்துக்கொண்டு இருக்கிறது. எங்கே என்று நம்மை கேட்கும் இவர்களுக்கு பதிலை உலகம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

    பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் நினைவு வருகிறது. எனவே இங்கே அதிக நேரம் நின்று இடையூறு தரக்கூடாது. இது முதல் முறை அல்ல. எல்டாம்ஸ் சாலையில் இப்போது கூடிய கூட்டத்தைவிட பெரிய கூட்டம் எல்லாம் நான் கூப்பிடாமலேயே கூடி இருக்கிறது. இனிமேலும் அவ்வாறாகவே கூடும் என்ற நம்பிக்கையும் எனக்கு கூடி இருக்கிறது.

    நாம் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. கட்சி, அமைப்பு எல்லாம் தயாரா? என்று இன்னமும் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் வந்து பார்க்கட்டும். ருசித்து பார்த்தால் எங்கள் சுவை தெரியும். மோதி என்ற வார்த்தையை உபயோகிக்க விரும்பவில்லை. ஆனால் அதுதான் இதற்கு அர்த்தம்.

    இங்கே நமக்கு நிறைய வேலை இருக்கிறது. குறுகிய நாட்களே இருக்கின்றன. மக்களின் பலம் என்ன என்பதை நீங்கள் நிரூபிப்பதற்கான அரிய வாய்ப்பு ஒன்று உங்கள் முன்னால் இருக்கிறது. அதில் சிறிய கருவியாக நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த கருவியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழகம் மேம்படட்டும். நாளை நமதே’.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    தலைமை அலுவலகத்தில் கொடியேற்றிய பிறகு கமல்ஹாசன் விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றார். அங்கிருந்து வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளபள்ளம் என்ற கிராமத்துக்கு சென்று அங்கு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குகிறார்.

    இன்று மாலை திருவாரூரில் நடைபெறும் பொதுகூட்டத்தில் பேசுகிறார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படம் பற்றி வரும் வதந்திக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். #Indian2 #Kamal #Kamalhaasan
    கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கியது. சில காட்சிகளை படமாக்கியதும் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாமல் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாகவும், பின்னர் கமல் தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது ஷங்கருக்கும், இந்தியன்-2 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் படத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த 2.0 படத்தையும் லைகா பட நிறுவனமே தயாரித்தது.

    அந்த படத்துக்கு திட்டமிட்டதை விட கூடுதல் செலவானதால் தயாரிப்பாளர் தரப்பினர் அதிருப்தியில் இருந்ததாகவும் இந்தியன்-2 படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை தாண்டக்கூடாது என்று நிர்ப்பந்தித்ததாகவும் இதனால் படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. படம் கைவிடப்படும் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.



    இதனை லைகா பட நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, “இந்தியன்-2 படத்தை கைவிட்டதாக பரவும் வதந்திகள் தவறானது. ஆதாரமற்றது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் ஒரு வாரமாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்டமாக ஸ்டுடியோவிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தற்போது பல இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    கமல்ஹாசன் கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு பெறுவதால், முதல் ஆண்டு நிறைவு நாளான நாளை காலை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றுகிறார். #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

    கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னையில் எளிய விழா நடத்த ஏற்பாடு செய்து உள்ளனர்.

    முதல் ஆண்டு நிறைவு நாளான நாளை காலை 7.30 மணிக்கு கமல்ஹாசன் கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றுகிறார். பின்னர் 9 மணிக்கு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் என்ற பகுதிக்கு சென்று மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்குகிறார்.

    அதன் பின்னர் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குவதாகவும், கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்தமானவராக இருந்தால் நாட்டுக்கு நன்மை என்றும் ராதாரவி கூறியுள்ளார். #RadhaRavi #KamalHaasan
    மதுரை:

    நடிகர் கமல்ஹாசன் தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இது குறித்து புதுச்சேரியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்ட போது ‘நான் அரசியலை பற்றி மட்டும்தான் பதில் அளிப்பேன்’ என பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த நடிகர் ராதாரவி மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த அவர் ‘ரஜினி நல்ல மனிதர். ஏற்கனவே கூறியது போல், ‘லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை’ என தெரிவித்துள்ளார். ஆனால் கமல் நன்றாக நடிக்கிறார். நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குகிறோம். இது கமலுக்கு நன்றாகத் தெரியும்.

    கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது. அவர் நல்ல நடிகர். நடித்துக்கொண்டே இருந்து இருக்கலாம்.

    நடிப்பில் முடியாததால், வாய்ப்பு இல்லாததால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார். தி.மு.க.,வை ஊழல் மூட்டை எனக் கூறும் கமல், ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்த ஆவியாக இருந்தால் நாட்டுக்கு நன்மை’.

    இவ்வாறு அவர் கூறினார். #RadhaRavi #KamalHaasan
    தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையில் தொண்டர்களே ஆராய்ந்தால் வழி நடத்த தலைவன் எதற்கு? என்று ரஜினிகாந்த் மீது சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீரில் மத்திய அரசின் மோசமான கவனக்குறைவால் தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது.

    ‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளை கடுமையாக சோதனை செய்தனர். ஆனால் 350 கிலோ வெடி மருந்து ஏற்றி வந்த வாகனத்தை சோதிக்காமல் என்ன செய்தார்கள். பாதுகாப்பு படை வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டியிருக்கிறது.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வெடிகுண்டு வெடிக்கிறது. இதை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய நினைக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்களோ? அவர்களை ஆராய்ந்து வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது தொண்டர்களுக்கு கூறியுள்ளார்.

    தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்கள் என்று ரஜினிகாந்த் தான் தொண்டர்களுக்கு சொல்ல வேண்டும். தொண்டர்களே ஆராய்வதற்கு தலைவன் எதற்கு?. தலைவன் தான் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அந்த வழி இல்லாதது ஒரு கேள்வியாக எழுகிறது.



    சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடட்டும். அப்போது அவர் வந்து தீர்ப்பாரா? என்று பார்ப்போம். போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என ரஜினிகாந்த் கூறினார். தற்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு ரஜினிகாந்த் செல்லட்டும்.

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி என்பது அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தது. அதனால் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கிறது. இல்லையென்றால் எப்போதோ கலைத்திருப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மாநில கட்சிகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

    தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்க இருக்கும் திட்டம் தேர்தலுக்காக தான். நேரடியாக கொடுக்க முடியாது என்பதால் மறைமுகமாக கொடுக்க உள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் முடிவு என்ன என்பது தெளிவாக இல்லை. அ.தி.மு.க., தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டாம் என கமல்ஹாசன் கூறியதை வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
    ×