search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    ஒவ்வொருவருக்கும் தினசரி தேவைகளில் அத்தியாவசியமானது உணவு. எந்த உணவை எந்தக் கிழமையில் சாப்பிட்டால் நல்லது என்பது பற்றி ஜோதிட ரீதியாக சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.
    ஒவ்வொருவருக்கும் தினசரி தேவைகளில் அத்தியாவசியமானது உணவு. நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். எந்த உணவை எந்தக் கிழமையில் சாப்பிட்டால் நல்லது என்பது பற்றி ஜோதிட ரீதியாக சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

    * ஞாயிறு- (சூரியன்): கோதுமை அல்வா, கோதுமை பாயசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப், பரங்கிக்காய் சாம்பார்.

    * திங்கள் - (சந்திரன்): பால், பால்கோவா, பால் பாயசம், லஸ்ஸி, மோர், பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பம், இட்லி, தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

    * செவ்வாய் - (அங்காரகன்): துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பீட்ரூட் அல்வா, பேரீச்சை பாயசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை, மிளகாய் துவையல்.

    * புதன் - (புதன்): கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாகற்காய் தொக்கு, முருங்கைக்காய் சூப், பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்தமல்லி சட்னி, வாழைப் பழம், கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

    * வியாழன் - (குரு): சுக்கு காபி அல்லது கசாயம், சோளம் சூப், கடலைப்பருப்பு கூட்டு, கடலைப்பருப்பு வடை, தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல், சாத்துக்குடி, மாம்பழ ஜூஸ், பொங்கல், தயிர், எலுமிச்சை சாதம், மாதுளை, முந்திரி, திராட்சை, பேரீச்சை கலந்த தயிர் சாதம்.

    * வெள்ளி - (சுக்ரன்): பால் இனிப்புகள், பால் பாயசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணெயில் செய்த பிஸ்கட், முலாம்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், கோஸ் சாம்பார், பூண்டு ரசம், வாழைத்தண்டு பொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.

    * சனி- (சனீஸ்வரன்): ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம், புளியோதரை, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சை, பிஸ்தா கலவை.

    இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் அடிப்படை பொருட்களை பார்த்தால், அவை எல்லாமே அந்தந்த கிரகங்களுக்கு உரிய தானியங்களே. இவற்றில் உங்கள் வசதிக்கு தக்கபடி ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
    சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் அந்தந்த மாதங்களில், கர்நாடகா சாரதாம்பாள் ஆலயத்தில் உள்ள ராசிக்கான அதிபதிகளின் உருவத்தின் மீது சூரிய ஒளிபடுகிறது.
    கர்நாடக மாநிலம் சிருங்கேரி என்ற இடத்தில் சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மூலவர் கருவறையின் முன்பாக ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தின் 12 தூண்களிலும், 12 ராசிகளுக்கான அதிபதிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆலயத்தில் என்ன விசேஷம் என்றால், சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் அந்தந்த மாதங்களில், ஆலயத்தில் உள்ள ராசிக்கான அதிபதிகளின் உருவத்தின் மீது சூரிய ஒளிபடுகிறது. இதனைக் காண்பதற்காகவே இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர்சோலை ஆகிய இடங்கள் தான் முருகப்பெருமானின் அறுபடை வீடு என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர்சோலை ஆகிய இடங்கள் தான் முருகப்பெருமானின் அறுபடை வீடு என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. முருகப்பெருமான் அசுரன் பதுமனுடன் போர்புரிவதற்கு தங்கிய இடம் திருச்செந்தூர். வெற்றி கொண்டபிறகு தெய்வானையை மணந்துகொண்டு தங்கிய இடம் திருப்பரங்குன்றம்.

    இறைக்கு பிரணவ மந்திரத்தைப்போதித்த இடம் திருவேரகம் என்னும் சுவாமி மலை. அயனை சிறைவிடுக்க அருளிய இடம் திருஆவினன்குடி. முருகன் விரும்பித்தங்கிய இடம் குன்றுதோராடல் என்னும் திருத்தணி தலமாகும். அங்கு தங்கி அருள்பாலிக்கும் முருகப்பெருமான் மனித உள்ளங்களில் இருக்கும் அறியாமை என்னும் இருளை போக்கும் ஒளியுடையவன். அவனுடைய அங்கங்களில் மேன்மையுடையது அடியவர்களை தாங்கும் தாள் (திருப்பாதம்).

    தன்னை சரண் அடைந்தவர்களின் அறியாமை எனும் இருளை அகற்றி துன்பங்களை போக்கும் முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் அவதார வடிவங்களாக வீற்றிருக்கின்றார். பழனியில் எழுந்தருளியிருக்கும் தண்டாயுதபாணி தவறு செய்யும் அசுரர்களை திருத்தும் அவதாரமாக விளங்குகிறார். முருகன், ஆட்டுகிடாவை (தகர்) அடக்கிய புராண நிகழ்ச்சி, அஞ்ஞானத்தை ஞானத்தால் அடக்கவேண்டும் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது. வள்ளியை மணம் முடிப்பதற்கு முருகப்பெருமான் வேடன், வேதியன், வேங்கைமரம், செட்டி என பல்வேறு வேடங்களில் செல்கின்றார்.

    இந்நிகழ்வு ஆன்மாவை உய்விக்கும் பொருட்டு தாழ்வு கருதாது ஆட்கொண்ட முருகனின் கருணையை குறிக்கின்றது. முருகனின் பன்னிரு விழிகளிலும் அருள்வெள்ளம் பொழிகிறது. அந்த அருட்பார்வைப்பட்டு துன்பங்கள் தொலைந்தோடும். அகத்திய முனிவருக்கு அருள் செய்ததினால் பொதிகையில் எழுந்தருளி உலகை சமன் செய்ய வைத்தவர் முருகன். எல்லா காலத்தும் எவ்விடத்தும் முருகனை நினைத்து அன்புருகி வேண்டும் போது பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும்.
    12 ஆழ்வார்கள் பாடிய 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
    தமிழ் மொழியில் திருமாலின் புகழை வாயார பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரம் ஆகும். இந்த 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

    தொண்டரடிப் பொடியாழ்வார் - 55 பாசுரங்கள்

    திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள்

    திருமங்கையாழ்வார் - 1361 பாசுரங்கள்

    குலசேகராழ்வார் - 105 பாசுரங்கள்

    மதுரகவியாழ்வார் - 11 பாசுரங்கள்

    ஆண்டாள் - 173 பாசுரங்கள்

    பொய்கை ஆழ்வார் - 100 பாசுரங்கள்

    பூதத்தாழ்வார் - 100 பாசுரங்கள்

    பேயாழ்வார் - 100 பாசுரங்கள்

    திருமழிசையாழ்வார் - 216 பாசுரங்கள்

    பெரியாழ்வார் - 473 பாசுரங்கள்

    நம்மாழ்வார் - 1296 பாசுரங்கள்
    முத்தங்கி அணிவித்து நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக திருமணம் நடை பெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க கவசம் அலங்காரமும் முத்தங்கி அலங்காரமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு அடையும்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் வித்தியாசமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.3ஆயிரம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முத்தங்கி அணிவித்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக திருமணம் நடை பெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள். மணமக்கள் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.
    திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள். இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காக செய்தார்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. வாழையடி வாழையாக நாம் இந்த சடங்கை செய்து வருகிறோம். மணமக்கள் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

    முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

    இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

    மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

    நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

    ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.

    ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

    ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
    முருகப்பெருமான் அருளும் ஆலயங்களில் ‘திருப்பரங்குன்றம்’ திருத்தலம், அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்துள்ளது.
    முருகப்பெருமான் அருளும் ஆலயங்களில் ‘திருப்பரங்குன்றம்’ திருத்தலம், அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் சூரபதுமனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமானுக்கு, தேவேந்திரனின் மகளான தெய்வானையை மணம் முடித்துக் கொடுக்க முடிவானது.

    அந்த விருப்பத்தை தேவேந்திரன், முருகப்பெருமானிடம் கூறினார். அதற்கு முருகப்பெருமான், “திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று கூறியதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் முருகன்-தெய்வானை திருமணம் நடந்தது. சிவபெருமான், முருகனுக்கு முதன்மை ஸ்தானத்தை திருப்பரங்குன்றத்தில் வைத்து கொடுத்தார். இதனால் திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக திகழ்கிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருவிழாவையொட்டி தினமும் விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகர் வீதி உலா வருகிறார்கள்.

    இதைதொடர்ந்து அடுத்த மாதம் 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சித்திரை வீதிகளில் வலம் வந்து காட்சி அளிக்கின்றனர். மார்ச் 1-ந்தேதி கணக்கு வாசித்தல் நிகழ்ச்சி நடந்து திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா போன்ற விஷேச நிகழ்ச்சிகள் பதிவு செய்ய முடியாது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    இந்திரன் முதலிய தேவர்களுக்காக முருகப்பெருமான் எடுத்த பேருருவை கண்ட தேவர்கள் முருகப்பெருமானது முழு அளவையும் காண முடியவில்லை. முழுவடிவத்தையும் தங்களுக்கு காட்டுமாறு முருகனையே தேவர்கள் பலரும் வேண்டினர்.
    இந்திரன் முதலிய தேவர்களுக்காக முருகப்பெருமான் பேருருவம் எடுத்தார். அந்த பேருருவத்தில் எட்டு திசைகள் இருந்தன. பதினான்கு உலகங்கள் அடங்கின. எட்டு மலைகள் தோன்றின. ஏழுகடல்கள் இருந்தன. திருமால் உள்ளிட்ட தேவர்களும் அதில் தோன்றினர். திருவடிகள் பாதாளத்தை எட்டின. திக்கின் முடிவுகள் திருத்தோள்கள் ஆயின. விண்ணில் திருமுடிகள் விளங்கின.

    சூரியன், சந்திரன், நெருப்பு முதலியன திருக்கண்கள் ஆயின. முடி முதல் திருவடி வரை பேருடல் காட்சி அளித்தது. வாய் மறைகளாயின, அறிவுகள் காதுகள் ஆயின. பேருருவின் திருவுள்ளம் இறைவியாருடையது. இறைவன் ஆன்மாவாகினார். இத்தகைய பேருருவை கண்ட தேவர்கள் முருகப்பெருமானது முழு அளவையும் காண முடியவில்லை. முழுவடிவத்தையும் தங்களுக்கு காட்டுமாறு முருகனையே தேவர்கள் பலரும் வேண்டினர்.

    தேவர்களுக்கு முருகக்கடவுள் அறிவுக் கண் தந்தார். அனைவரும் முருகனின் பெருவடிவம் முழுவதையும் கண்டு பேரின்பம் அடைந்தனர். இந்திரன் அசுரர்களை அழித்து, தனது பதவியை தனக்கு அளிக்க வேண்டும் என்று முருகப்பெருமானை வேண்டினான். முருகப்பெருமான் அப்படியே அருளுவதாக கூறினார். மேருமலையில் இருந்து புறப்பட்டு முருகப்பெருமான் கைலாயத்தை அடைந்தார். தேவதச்சன் அமைத்த அரியணையில் அமர்ந்தருளினார். அவர் எழுந்தருளிய மலை ‘கந்தவெற்பு’ என்ற நற்பெயரை அடைந்தது.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    கேது பகவான்

    புராணத்தின் படி ‘சந்திர கிரகணம்’ என்பது கேது பகவானால் ஏற்படும் ஒரு நிகழ்வாகும். அது சந்திரனை சில நேரங்களில் விழுங்கவும் செய்யும். இதனாலேயே சந்திரனுக்கும் கேதுவுக்கும், சமுத்ரா மந்தனின் போது பிரிவு ஏற்பட்டது. பாற்கடலில் இருந்த அமிர்தத்தை, தேவர்கள் பருகும்போது அசுரர்களின் ஒருவன் ரகசியமாக பருக வந்தான். அப்பொழுது மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிடம், சூரிய பகவானும் சந்திர பகவானும் இந்த விஷயத்தைக் கூறினர். விஷ்ணு தன் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தின் மூலம் அசுரனின் தலையை துண்டித்தார். அதில் ஒரு பகுதி ராகு எனவும், மறுபகுதி கேது எனவும் அழைக்கப்பட்டது.

    காவிரி நதி

    தென் இந்தியாவில் புனித நீராக கருதப்படுவது காவிரி நதி. குறுமுனி என்று அழைக்கப்பட்டாலும், தன்னுடைய தவ வலிமையால் மாமுனிவராக விளங்கியவர் அகத்தியர். சிவனிடம் இருந்து தமிழ் மொழியைக் கற்று, அதன் மூலம் தமிழில் இலக்கணம் படைத்தவர் என்று புராணங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட அகத்தியர் ஒரு முறை சிவபெருமானிடம் இருந்து புனித நீரை, தன்னுடைய கமண்டலத்தில் பெற்றுக்கொண்டு தென்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தென் பகுதி நீரின்றி, வறட்சியால் தவித்தது. இதனால் விநாயகர் காக்கையின் வடிவம் கொண்டு, அகத்தியரின் கையில் இருந்த கமண்டலத்தை தட்டிவிட்டார். இதனால் அதில் இருந்த நீர் பெருக்கெடுத்து நதியாக பாயத் தொடங்கியது. அதுவே காவிரி நதி என்று அழைக்கப்படுகிறது.

    கந்தவ காடு

    யமுனை நதிக்கரையில் இருந்த கந்தவ காட்டை ஒரு முறை அக்னி தேவன், தன் தீ ஜூவாலையால் எரித்துக் கொண்டிருந்தார். அந்த தீயில் நாகர்களில் முக்கியமானவரான தச்சன் உள்ளிட்ட நாகங்கள் பல சிக்கிக் கொண்டன. இதனைக் கண்ட இந்திரன், தன்னுடைய நண்பர்களான தச்சன் மற்றும் பிற நாகங்களை காப்பாற்றும் பொருட்டு, மின்னலை உண்டாக்கி மழையை பெய்ய வைத்தான். இதையடுத்து அக்னி தேவன், கிருஷ்ணனிடமும், அர்ச்சுனனிடமும் முறையிட்டார். கிருஷ்ணர், அர்ச்சுனனிடம் இதற்கு தீர்வு காணும்படி சொல்ல, அர்ச்சுனன் தன்னுடைய காண்டீபம் என்னும் வில்லில் இருந்து அம்புகளை சிதறச் செய்து, அதனை குடையாகப் பிடித்தான். இதனால் இந்திரன் தருவித்த மழை தடுக்கப்பட்டது. அதன்பின்னர் அக்னி கொழுந்து விட்டு எரிந்து, கந்தவ வனத்தை அழித்தது.

    கிருதயுகம்

    உலகத்தின் கால அளவுகள் 4 யுகங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகும். இதில் கிருத யுகம் முதன்மையானதான உள்ளது. இந்த யுகத்தில் வாழும் மனிதர்கள் அனைவருமே அறநெறியுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த கிருத யுகமானது 17 லட்சத்து 28 ஆயிரம் வருடங்கள் கொண்டதாகும். அதே போல் திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் வருடங்கள் கொண்டதாகவும், அதில் வாழ்பவர்கள் நான்கில் மூன்று பகுதியினர் அறத்துடனும், ஒரு பகுதியினர் அறமின்றியும் வாழ்வார்கள். அடுத்ததாக உள்ள துவாபர யுகத்தில் சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபாதி மக்கள் அறம் இன்றியும் வாழ்வர். இந்த யுகத்தின் கால அளவு 8 லட்சத்து 64 ஆயிரம் வருடங்கள். கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் வருடங்களைக் கொண்டது. இதில் நான்கில் மூன்று பகுதி மக்கள் அறமின்றியும், ஒரு பகுதி மக்கள் அறத்துடனும் வாழ்வார்கள். இந்த நான்கு யுகங்களும் அடங்கியது மகா யுகம் அல்லது சதுர்யுகம் என்று அழைக்கப்படுகிறது.
    எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும்.
    விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது, கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் கூட கணபதியை வணங்கிய பிறகே, எந்த செயலையும் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் தான், இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்ததாக சொல்லும் இடமே தற்போது ‘அச்சிறுபாக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு அருகே இந்த ஊர் இருக்கிறது.

    எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பாகவும் கணபதி ஹோமம் செய்வார்கள். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் கூட கணபதி ஹோமம் செய்யலாம்.

    கணபதி ஹோமத்தை `விநாயகர் வேள்வி' என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் சொல்லி, அவரை புகழ்ந்து பக்திப் பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி, மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பு.
    ஒரு ஆலயத்தின் மகிமையும், சிறப்பும் அதன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. அத்தகைய பேறு பெற்ற தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஆகும்.
    ஒரு ஆலயத்தின் மகிமையும், சிறப்பும் அதன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மூன்றும் ஒரே தலத்தில் ஒருங்கிணைந்து சிறப்பாக இருப்பது என்பது மிக மிக அரிது. அத்தகைய பேறு பெற்ற தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஆகும். இங்கு மூர்த்திக்கு நிகரான சிறப்பு தீர்த்தங்களுக்கும் இருக்கிறது.

    திருவண்ணாமலையில் கிரிவல பாதையிலும், மலையின் பல்வேறு பகுதிகளிலும் 300-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆதிகாலத்தில் நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள், மன்னர்கள் தங்களது தோஷங்களையும், பாவங்களையும் நீக்கிக் கொள்ள தனித்தனி தீர்த்தங்களை உருவாக்கி அதில் தினமும் நீராடி அண்ணாமலையாரை வழிபட்டு பலன்களை பெற்று உள்ளனர்.

    இத்தகைய சிறப்புடைய தீர்த்தங்களில் நீராடினால் நமது தோஷங்களை நீக்கி பலன் பெற முடியும் என்பது ஐதீகமாகும். இதில் பக்தர்களுக்கு உதவும் வகையில் அண்ணாமலையாரும் புனித குளங்கள் மற்றும் நதிகளில் நீராடி அருள்பாலிப்பது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. இறைவனின் நீராடலே தீர்த்தவாரி என்று அழைக்கப்படுகிறது. கோவில் குளங்கள், ஆறுகளில் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை ஆலயத்தில் நடத்தப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் தமிழ் நாட்டில் எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளன.

    பொதுவாக ஆலயங்களில் உற்சவ விழாக்கள் நடக்கும்போது பத்தாவது நாளன்று உற்ச வரை புனித நீராட செய்வார்கள். இந்த தீர்த்தவாரி பெரும்பாலான ஆலயங்களில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைதான் நடைபெறும். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் ஆண்டுக்கு 7 உற்சவம் நடைபெறுவதால் அந்த 7 தடவையும் குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி மேற்கொள்கிறார்.

    ஆடிப்பூரம் உற்சவத்தின்போது சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும். கார்த்திகை தீப திருவிழா வின்போது பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடத்துவார்கள். இதுதவிர சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நாட்களிலும் அண்ணாமலையார் ஆலயத்து உற்சவரான சந்திரசேகரர் பிரம்ம தீர்த்தத்தில் நீராடுவார். தைப் பூச விழாவின்போது அவர் கிரிவல பாதையில் உள்ள ஈசானிய தீர்த்தத்திற்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வார்.

    திருவண்ணாமலை ஆலயம் அருகே உள்ள அய்யங் குளம், தாமரை குளம் ஆகியவற்றிலும் தீர்த்தவாரி நடத்தப்படுவது உண்டு. கோவில் குளங்களில் நடத்தப்படும் இந்த தீர்த்தவாரிகள் தவிர சந்திரசேகரர் திருவண்ணாமலை அருகே உள்ள ஆறு களில் நடக்கும் தீர்த்தவாரிகளிலும் பங்கேற்கிறார். கலசப்பாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆறு, பள்ளிகொண்டாபட்டு கிராமத் தில் உள்ள கவுதம ஆறு ஆகிய ஆறு களில் நடக்கும் தீர்த்தவாரிகளிலும் அருணாச லேஸ்வரர் கலந்து கொள்கிறார்.

    இந்த தீர்த்தவாரிகளில் மணலூர் பேட்டையில் நடக்கும் தீர்த்தவாரி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் பண்டிகையின் நிறைவாக ஆற்று திருவிழா நடத்துவார்கள். தென்பெண்ணை ஆறு தட்சிணாபினாகினி என போற்றப்படுகிறது. இந்த புண்ணிய நதியில் தை மாதம் முதல் நாளில் இருந்து 5-ந்தேதி வரை 5 நாட்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளும் கலப்பதாக ஐதீகம். அதாவது மற்ற நதிகள் அனைத்தும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள தை மாதம் முதல் 5 நாட்கள் தென்பெண்ணை ஆற்றில் சேருகிறது என்று சொல்கிறார்கள். அந்த சமயத்தில் தென் பெண்ணை ஆற்றில் புனித நீராடினால் பல் வேறு பலன்களை பெற முடியும்.

    இதை கருத்தில் கொண்டே பக்தர்களுக்கு அருள் பாலிக்க திரு வண்ணாமலையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணலூர்பேட்டையில் உள்ள தென் பெண்ணை ஆற்றுக்கு அண்ணாமலையார் செல்கிறார். அவர் வருவதால் சப்தநதிகளும் அவரை தரிசிக்க வருகின்றன என்பது மரபாக உள்ளது. அண்ணாமலையார் புனித நீராடும்போது தாங்களும் நீராடினால் தங்களுடைய பாவங்களை, தோஷங்களை நிவர்த்தி செய்துக் கொள்ள முடியும் என்பது பக்தர்களிடம் நம்பிக்கையாக உள்ளது.

    பொதுவாக ஆறுகளின் எல்லையை சுவாமி கடப்பது இல்லை. அதற்கேற்ப அண்ணாமலையார் பல்வேறு கிராமங்கள் வழியாக மணலூர்பேட்டை செல்வார். அப்போது பக்தர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் திரண்டு நின்று மண்டகபடி நடத்தி அண்ணாமலையாரை வழிபடுவார்கள். அண்ணாமலையார் தங்களது வீட்டுக்கே வந்து விட்டது போன்ற உணர்வுடன் கிராம மக்கள் இந்த மண்டகபடியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

    தென்பெண்ணை ஆற்றுக்கு சென்ற பிறகு சந்திரசேகரர் தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அப்போது நமச்சிவாய மந்திரங்களை பக்தர்கள் முழங்குவார்கள். இதையடுத்து சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஒரே இடத்தில் பல்வேறு ஆலயங்களின் சுவாமிகள் ஒன்றாக இருப்பது கோலாகலமாக இருக்கும். இந்த விழாவில்தான் அண்ணாமலையாரின் பிரதியான சந்திர சேகரர் கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு இந்த தீர்த்தவாரி விழா வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை வரை அண்ணாமலையார் அங்கிருந்து அருள்பாலிப்பார்.

    அடுத்து வருகிற 21-ந்தேதி (திங்கட் கிழமை) தைப்பூசம் தினத்தன்று சந்திர சேகரர் கிரிவல பாதையில் உள்ள ஈசானிய குளத்துக்கு சென்று தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அன்று அதிகாலை ஆலயத்தின் அபிஷேகம் முடிந்ததும் மேளதாளத்துடன் அண்ணாமலையாரை ஈசானிய குளத்துக்கு அழைத்து செல் வார்கள். அங்கு தீர்த்தவாரி நடைபெறும். அருணாசலேஸ்வரர் சூலத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அன்று மாலைவரை அண்ணாமலையார் அந்த தீர்த்த கரையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அதன்பிறகு ஆலயத்துக்கு அண்ணாமலையார் புறப்பட்டு வருவார். அறிவொளி பூங்கா அருகே வரும்போது பணியாளர் ஒருவர் வந்து வல்லாள மகாராஜா இறந்து விட்டார் என்ற தகவலை தெரிவிப்பார். இதனால் வேதனை கொள்ளும் அண்ணாமலையார் மேளதாளம் இல்லாமல் ஆலயத்துக்கு திரும்புவார். இது வல்லாள மகாராஜா மீது அண்ணா மலை யார் கொண்டுள்ள பாசத்தை வெளிப் படுத்துவதாக இருக்கும்.

    கோவில் வரலாற்றுபடி திருவண்ணாமலையை ஆண்டு வந்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை இல்லாததால் அண்ணாமலையாரே அவருக்கு குழந்தையாக இருந்து வந்தார். ஒரு தடவை போர்களத்தில் வல்லாள மகாராஜா நயவஞ்சகமாக கொல்லப்பட்டதும் அண்ணாமலையாரே அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததாக குறிப்புகள் உள்ளன. இதை பிரதிபலிக்கும் வகையில்தான் ஈசானிய தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு திரும்பும் போது அண்ணாமலையாரிடம் வல்லாள மகாராஜா மரண செய்தி தெரிவிக்கப்படுகிறது. அதை கேட்டதும் மேளதாளம் இல்லாமல் அண்ணாமலையார் ஆலயம் திரும்புகிறார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திரு வண்ணாமலையில் நடத்தப்பட்டு வருகிறது.

    தை மாதம் ரதசப்தமி தினத்தன்று அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதும் தனித்துவம் வாய்ந்தது. கலசப்பாக்கத்தில் திருமா முடீஸ்வரரர் ஆலயம் உள்ளது. அங்கு இறைவனின் முடி இருப்பதாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் ஓடும் செய்யாற்றில் ஒரு தடவை கலசம் ஒன்று மிதந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த கலசத்தை இறைவனே அனுப்பி வைத்ததாக அப்பகுதி மக்கள் நினைத்தனர். இதையடுத்து அந்த கலசத்தை எடுத்து மக்கள் பூஜித்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊர் கலசப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த பகுதி செய்யாற்றுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. இந்த ஆறுக்கு சேயாறு என்ற பெயரும் உண்டு. இது முருகப்பெருமான் உருவாக்கிய ஆறு ஆகும். ஈசனுக்கு சேயாக அதாவது மகனாக முருகப்பெருமான் உள்ளதால் அவருக்கு உருவாக்கிய ஆறு சேயாறு என்று அழைக்கப்படுகிறது. அவர் ஏன் இந்த ஆற்றை உருவாக்கினார் என்பதற்கும் வரலாறு உள்ளது. ஈசனின் சாபத்துக்கு உள்ளான பார்வதி பூமிக்கு வந்து தவம் இருந்தார். பிறகு அவர் ஈசனிடம் இடப்பாகம் பெறுவதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நடந்து சென்றார்.

    வழியில் அவருக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. இதை அறிந்த முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் பூமியை கிழிக்க ஆறு உருவானது. அம்பாள் அதில் நீர் அருந்தி தாகத்தை தணித்தார். அந்த ஆறுதான் சேயாறு. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவூடல் நடந்து அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மனும் ஊடல் துறந்து மகிழ்ச்சி பொங்க இந்த செய்யாற்றுக்கு வந்து தீர்த்தம் ஆடுவதாக சொல்கிறார்கள்.

    செய்யாற்றுக்கு செல்லும்போது ஆற்றை கடக்கக்கூடாது என்ற ஐதீகம் இருப்பதால் மேட்டுப்பாளையம் கிராமம் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெறும். வழிநெடுக மக்கள் மண்டகப்படி நடத்தி அண்ணாமலையாரை வழிபடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சிறப்புமிக்க இந்த தீர்த்தவாரி திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி நடைபெற உள்ளது.

    அதுபோல அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் பள்ளிக்கொண்டா பட்டு தீர்த்த வாரியும் சிறப்பு வாய்ந்தது. மாசிமகம் தினத்தன்று நடைபெறும் பள்ளிக்கொண்டா பட்டு தீர்த்தவாரிக்காக அண்ணாமலையார் கவுதம நதிக்கு புறப்பட்டு செல்வார். கவுதம நதியில் புனித நீராடிய பிறகு அங்கு அவர் தனது தந்தையாக ஏற்றுக் கொண்ட வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுப்பார். தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பு இதுவாகும்.

    அண்ணாமலையாரே தனது பக்தனுக்காக திதி கொடுப்பதால் இந்த தீர்த்தவாரி அதிக பலன் கொண்டது. இதை கருத்தில் கொண்டு அன்றைய தினம் லட்சக்கணக்கானவர்கள் கவுதம நதிகரையோரம் திரண்டு தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கத்தில் வைத்து உள்ளனர்.

    அண்ணாமலையார் பங்கேற்கும் தீர்த்தவாரிகளில் கலந்து கொண்டால் வினைகள் தீர்ந்து ஈசனின் திருப்பாதத்தை அடைய முடியும் என்பது நம்பிக்கையாகும். மேலும் தீர்த்தவாரிகளில் பங்கேற்கும் பக்தர்களின் ஆன்மா அண்ணாமலையாரின் கருணை பார்வையால் குளிர்ச்சி பெறுவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தீர்த்தவாரியை தவறவிடாதீர்கள்.
    ×