search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    சரவண பவ மந்திரத்தை தினந்தோறும் உச்சரித்து அன்பனை வணங்கினால் ஆன்மா ஒருமுகப்பட்டு இறைவனை அடையலாம் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
    இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளையும் குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். சிவனுக்கு ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவாய, திருமாலுக்கு நமோ நாராயணாய என்றும், அம்மனை ஓம் சக்தி என்ற வகையில் பக்தர்கள் நாமத்தை உச்சரிக்கின்றனர்.

    அந்த வகையில் கலியுக கடவுளான சுப்பிரமணியனை சரவண பவ என்னும் மந்திரத்தால் பக்தர்கள் வழிபடுகின்றனர். இதில் ச என்பது மங்கலம் என்பதையும், ர என்பது ஒளிக் கொடை என்ற பொருளையும், வ என்பது சாத்வீகம் என்ற பொருளையும், ண என்பது போர் என்ற பொருளையும், பவ என்பது உதித்தவன் என்பதையும் உணர்த்துகிறது.

    இதன்மூலம் இந்த மந்திரத்தை தினந்தோறும் உச்சரித்து அன்பனை வணங்கினால் ஆன்மா ஒருமுகப்பட்டு இறைவனை அடையலாம் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
    பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து கிராம சாந்தி, அபிஷேக பூஜை, அம்மன் திருவீதி உலா, குதிரை வாகன காட்சி, மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. மேலும் குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்பு கட்டப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது.

    குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக திருப்பூர், ஊத்துக்குளி, குன்னத்தூர், நம்பியூர், அவினாசி உள்பட சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் மாலை முதலே தீச்சட்டி ஏந்தி நடைபயணமாக கோவிலுக்கு வந்தனர்.

    இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்க தொடங்கிய பக்தர்கள் காலை 10.30 மணி வரை குண்டம் இறங்கினார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினார்கள். அப்போது ஒருசில பக்தர்கள் கும்பம், காவடி மற்றும் தங்களது குழந்தைகளுடனும் குண்டம் இறங்கினார்கள். மாற்றுத்திறனாளி பக்தர்கள், போலீசார் சிலரும் சீருடையில் குண்டம் இறங்கினார்கள்.
    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கொண்டத்துக்காளியம்மன் என்ற திருநாமத்தில் எழுந்தருளி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் துயரை துடைத்து அருள்பாலித்து வருகிறார்.
    அகில உலகையும் ரட்சிக்கும் பரம்பொருள் எங்கும் வியாபித்து உள்ளது. அதில் பராசக்தியும் அடங்கும். பரந்து விரிந்த இப்பூவுலகில் தன்னை தரிசிக்கும் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக, கருணையின் வடிவமாக அவர் விளங்குகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற பராசக்தி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கொண்டத்துக்காளியம்மன் என்ற திருநாமத்தில் எழுந்தருளி உள்ளார்.

    முன்னொரு காலத்தில் தாருகன் என்ற அசுரன் கடும் தவம் இருந்து இறைவனிடம் பெண்ணால் இன்றி எந்த ஒரு ஆணாலும் என்னை அழிக்க முடியாத வரத்தை அருளுமாறு வேண்டினான். இறைவனும் அவனது தவத்தை மெச்சி வரம் அருளினார். வரம் பெற்ற தாருகன், தேவர்களை துன்புறுத்தினான். இவனது துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் தாருகனை அழிக்கும்படி பணிந்து வேண்டினர். உடனே சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய சக்தி வடிவமான காளி, சிவனருள் பெற்று, தாருகாசூரனை எரித்து சாம்பல் ஆக்கினார். இதே போல் மகிஷாசூரனையும் அன்னை பராசக்தி காளி வேடம் அவதரித்து அழித்தது புராண வரலாறு.

    முன்னொரு காலத்தில் பெருமாநல்லூர் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் ஒரு மரத்தடியில் துர்க்கை அம்மனை எழுந்தருள செய்து வழிபட்டனர். அந்த அம்மன் நாளடைவில் கொண்டத்துக் காளியம்மனாக திருநாமம் பெற்றார். அவர் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் துயரை துடைத்து அருள்பாலித்து வருகிறார்.

    கருவறையில் அமர்ந்த கோலத்தில் கொண்டத்துக் காளியம்மன் காட்சி தருகிறார். எட்டுத்திருக்கரங்களில் பல்வேறு ஆயுதங்கள் ஏந்தி இருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில் முன்பு 60 அடி நீள குண்டம் உள்ளது. இங்கு விரதம் இருக்கும் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தன்னை தரிசித்த பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை வழங்கி அருள்பாலிக்கிறார். இத்தகைய சிறப்பு பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் இன்று(செவ்வாய்க்கிழமை) குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
    சிலருக்கு சில எண்களைக் கண்டாலே பயம் வரும். அப்படி சிலருக்கு பயம் தரும் எண் ‘13’ ஆகும். தாக்கத்திற்கும், தேக்கத்திற்கும் உரிய எண் என்று இதைச் சொல்வார்கள்
    சிலருக்கு சில எண்களைக் கண்டாலே பயம் வரும். அப்படி சிலருக்கு பயம் தரும் எண் ‘13’ ஆகும். தாக்கத்திற்கும், தேக்கத்திற்கும் உரிய எண் என்று இதைச் சொல்வார்கள்.

    வெளிநாட்டில் உள்ள பெரிய ஓட்டல்களில் அறை எண் 12-க்கு அடுத்ததாக, 13 என்று எழுதாமல் ‘13A’ என்று எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் 13-ம் எண் அப்படி ஒன்றும் பயப்படத்தக்க எண் கிடையாது.

    ஒருவர் தனுசு, மீன ராசியில் பிறந்து, அவரது சுய ஜாதகத்தில் குருவும், சூரியனும் இணைந்திருந்தால், அவருக்கு 13 என்ற எண் யோக எண்ணாக அமையும். குரு வீட்டில் சூரியன் அமைந்த ஜாதகருக்கும் அந்த எண் யோகத்தை வழங்கும்.

    அவர்களுக்கென்று வாழ்க்கை வளம்பெற சில பரிகார தலங்கள் இருக்கிறது. இல்லத்தில் வழிபடுபவர்கள், ‘ஸ்ரீராம்.. ஜெயராம்.. ஜெய ஜெய ராம்’ என்ற 13 எழுத்து கொண்ட ராம நாமத்தை உச்சரித்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
    பழங்காலத்து ஆலயங்களில் சில கோவில்களில் சில விஷயங்கள் சிறப்பு அம்சம் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    பழங்காலத்து ஆலயங்களில் ஒவ்வொரு சிறப்புகள் அடங்கியிருப்பதை நாம் காண முடியும். திருவாரூரில் தேர் சிறப்பு அம்சம் கொண்டது என்பது போல, இன்னும் சில கோவில்களில் சில விஷயங்கள் சிறப்பு அம்சம் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    தஞ்சாவூர் - கோபுரம்

    திருவலஞ்சுழி - பலகணி

    திருவீழிமிழலை - வவ்வால் நத்தி மண்டபம்

    ஆவுடையார் கோவில் - கொடுங்கை

    கடாரம் கொண்டான் - மதில்சுவர்

    கோடைக்காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பானகாரம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த வழிபாடு 60 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடைக்காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பானகாரம் படைத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாடு மொத்தம் 60 நாட்கள் நடைபெறும்.

    இதையொட்டி தினமும் மாலை 4 மணிக்கு நடை திறந்ததும், எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலக்காய், சுக்கு, புளி போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானகாரம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும். பின்னர், அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இந்த பானகாரம் அருந்தினால், வெப்பம் சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், இந்த பிரசாதத்தை பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பானகாரம் வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து 60 நாட்கள் இந்த வழிபாடு நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர்.

    இந்து கோவில்களில் உள்ள சில அரிய வழிபாட்டு முறைகளையும், தவல்களையும் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    காவி உடையில் விநாயகர்

    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த அம்மன் சன்னிதியின் பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த விநாயகர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகப்பெருமான், பிரம்மச்சாரி என்பதால் இப்படி காவி உடை அணிவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

    மும்மூர்த்திகளின் இசை

    கடலூர் மாவட்டம் திருத்திணை தலத்தில் நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு கீழே திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மதேவர் மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார்கள். இருவரது இசைக்கும் ஏற்ப, இறைவன் நடனமாடும் வகையில் அந்த அமைப்பு இருக்கிறது. இசையில் சிறந்த இடத்தைப் பிடிக்க நினைப்பவர்கள், இந்த சன்னிதியில் வந்து நடராஜரையும், பிரம்மதேவரையும், திருமாலையும் வணங்கி வழிபட்டுச் செல்லலாம்.

    அமிர்த கலசத்துடன் கருடன்

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருத்தண்கால். இங்கு அமிர்த கலசம், நாகம் ஏந்திய கைகளுடன் கருட பகவான் காட்சி தருகிறார். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும். தன்னுடைய தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்காக, இந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தை கொண்டு வந்து நாகர்களிடம் கொடுத்தார் கருடன். அந்த கதையை நினைவு கூரும் வகையில் இந்த வடிவம் இருப்பது சிறப்புக்குரியதாகும்.

    கொடி மரத்தின் வெளியே நந்தி

    பொதுவாக அனைத்து ஆலயங்களிலும், கொடிமரத்தின் அருகிலேயே நந்தி பகவான் வீற்றிருப்பார். ஆனால் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் திருத்தலத்தில் கொடிமரத்திற்கு வெளிப்பகுதியில் நந்தி இருக்கிறார். பக்தர் ஒருவரின் உயிரை எடுக்க வந்த எமதர்மனை, இத்தல நந்தி விரட்டியதாக தல வரலாறு சொல்கிறது. மீண்டும் எமதர்மன் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான், நந்தியம்பெருமான் கொடிமரத்திற்கு வெளிப் பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    ருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இங்கே காணலாம்.
    சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள், தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவ சின்னம் ‘ருத்ராட்சம்.’ ‘ருத்திரன்’ என்பது சிவபெருமானையும், ‘அட்சம்’ என்பது கண்களையும் குறிப்பதாகும். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளே ‘ருத்ராட்சம்’ என்று கூறப்படுகிறது. ருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இங்கே காணலாம்.

    ஒரு முகம்

    * பெரும்பாலும் உருண்டை வடிவமாக இருக்கும்.
    * நேபாள ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவமாகவும், இந்தோனேசிய ஒரு முக ருத்ராட்சம் நீள வடிவமாகவும் காணப்படுகிறது.
    * இது சூரியனின் ஆதிக்கம் பெற்றதாக இருப்பதால், மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    * ஒரு முக ருத்ராட்சத்தை மாலையாகவோ, ஜெப மாலையாகவோ பயன்படுத்தி வந்தால், ஜாதகத்தில் சூரியனால் ஏற்பட்ட பாதகங்கள் நீங்கும்.
    * பிரம்மஹத்தி தோஷம் போக்கும் சக்தி படைத்தது.
    * ஆன்மிக தன்மை அளிக்கும் ஆற்றல் உண்டு.

    இரு முகம்

    * அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டது. இந்த ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிது.
    * சந்திரனின் ஆதிக்கம் பெற்றது.
    * பத்ம புராணம் இதை அக்னியின் ஆதிக்கம் பெற்றதாக கூறுகிறது.
    * பசுவை கொன்ற பாவத்தை போக்கும்.
    * குடும்பம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடத்தில் நல்ல உறவை விரும்புபவர்கள், இரு முக ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம்.
    * ஆன்மிக முன்னேற்றத்தை அளிக்கக் கூடியது.
    * இருமுக ருத்ராட்சத்தால் ஆன மாலையை அணிந்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    மூன்று முகம்

    * மூன்று முக ருத்ராட்சம் செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது.
    * இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் உடலில் உள்ள சோர்வு, பலவீனம் நீங்கும்.
    * இது சிவனுடைய மூன்று கண்களாக விளங்கும் சோம, சூரிய, அக்னி என்ற 3 அம்சங்களுடைய வடிவங்களைக் குறிப்பதாகும்.
    * இதன் அதிபதிகள் சூரியன், சுக்ரன், அக்னி தேவன்.
    * கருக்கலைப்பு செய்த பாவத்தைப் போக்கும் சக்தி இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.
    * ஸ்ரீமத் தேவி பாகவதம் என்ற நூல், இந்த ருத்ராட்சத்தை அணிவதால் கொலை பாதகம் செய்த பாவம் விலகும் என்று சொல்கிறது.
    * செவ்வாய் கிரகத்தின் பாதிப்பால் ஏற்படும் துர்மரணம். விபத்து, விஷ ஜந்துக்களால் உண்டாகும் அபாயம் ஆகியவை நீங்கும்.

    நான்கு முகம்

    * பிரம்ம தேவனின் அருள் பெற்றது, இந்த ருத்ராட்சம்.
    * இதன் ஆதிக்க கிரகம் புதனாக இருப்பதால், இதனை அணிபவர்களுக்கு 4 திசைகளிலும் புகழை உண்டாக்கும்.
    * பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற 4 நிலைகளையும் இந்த ருத்ராட்சம் குறிக்கிறது.
    * இதை மாலையாகவோ, ஜெப மாலையாகவோ உபயோகிப்பவர்களின் பாவங்கள் ஒழிந்து, புதிய பிறவியில் வாழ்வது போல் இருக்கும்.
    * மாணவர்கள் நான்கு முக ருத்ராட்சம் அணிய கல்வியில் சிறந்து விளங்குவர்.
    * இந்த ருத்ராட்சம் மனதை ஒருமுகப்படுத்தும்.



    ஐந்து முகம்

    * இந்த ருத்ராட்சம் குருவின் ஆதிக்கம் பெற்றது.
    * அகோரம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் என்னும் சிவனின் ஐந்து முகங்களையும் இந்த ருத்ராட்சம் குறிக்கிறது.
    * ஐந்து முக ருத்ராட்சத்தை அணிபவருக்கு, அகால மரணம் கிடையாது.
    * பாலுறவிலும், உணவிலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஐந்துமுக ருத்ராட்சம் அணிவதால் விலகும்.
    * பஞ்சமுகனான சிவபெருமானின் அம்சமான, காலக்கி ருத்ரர் அருள் நிறைந்தது இந்த ருத்ராட்சம்.
    * இந்த ருத்ராட்சத்தை வீட்டில் உள்ள விளக்குகளுக்கு மாலையாக பயன்படுத்தினால், செல்வம் பெருகும்.

    ஆறு முகம்

    * சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற ருத்ராட்சம் இது.
    * உடல் நலம், வாழ்க்கை வசதி, மகிழ்ச்சி அனைத்தையும் கொடுக்கும்.
    * இது முருகப்பெருமானின் அருளையும் பெற்றது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
    * ஆறுமுக ருத்ராட்சத்துடன், கவுரி சங்கர ருத்ராட்சத்தை இணைத்து அணிந்தால் குழந்தைபேறு உண்டாகும்.
    * பதிமூன்று முக ருத்ராட்சத்திற்குரிய பலன்கள் அனைத்தும், ஆறுமுக ருத்ராட்சத்தின் மூலம் கிடைக்கும்.
    * ஆறுமுக ருத்ராட்சத்தை நான்கு முக ருத்ராட்சத்தோடு இணைத்து அணிந்தால், பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
    * அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இந்த ருத்ராட்சத்தை அணியலாம்.

    ஏழு முகம்

    * சனி கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற ருத்ராட்சம் இது.
    * ஏழு பெண்களைக் கொண்ட சப்தமாதர்களின் அருளும் கொண்டது.
    * சூரியன், சப்த மாதாக்கள், ஆதிஷேசன், காமதேவன், முருகன் ஆகியோரின் அருளையும் பெற்றது.
    * பணப்பெட்டி, பணப்பை போன்றவற்றில் இந்த ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டால் செல்வம் பெருகும்.
    * இந்த ருத்ராட்சத்தோடு எட்டு முக ருத்ராட்சத்தையும் சேர்த்து அணிய வேண்டும்.

    எட்டு முகம்

    * எட்டு என்பதற்கு ‘அஷ்டம்’ என்று பொருள்.
    * அஷ்ட கர்மங்கள், அஷ்டமா சித்திகள், அஷ்ட துர்க்கைகள், அஷ்ட பைரவர்கள், அஷ்ட மாதர்கள் அனைவரின் அருளையும் பெற்றது இந்த ருத்ராட்சம்.
    * எட்டு முக ருத்ராட்சம் விநாயகப்பெருமானின் அருளையும், ராகுவின் ஆதிக்கத்தையும் பெற்றது.
    * சனி தோஷம் உள்ளவர்கள் இந்த ருத்ராட்சத்தோடு, எட்டு முக ருத்ராட்சத்தை இணைத்து அணிய வேண்டியது அவசியம்.
    * இந்த ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு பகுத்தறிவு, புத்தி, எழுத்தாற்றல், புகழ், செல்வம் கூடும்.

    ஒன்பது முகம்

    * ஒன்பது என்பதற்கு ‘நவ’ எனப் பொருள்படும்.
    * நவக்கிரகங்கள், நவ துர்க்கைகள், பைரவர்கள் அனைவரின் அருளைப் பெற்றது.
    * ஒன்பது வித சக்திகளை உள்ளடங்கியது இந்த ருத்ராட்சம்.
    * இதன் ஆதிக்க கிரகம் கேது என்பதால், இந்த ருத்ராட்சத்தை அணிய மரண பயம் நீங்கும்.
    * ஒன்பது முக ருத்ராட்சத்தோடு 10 அல்லது 11 முக ருத்ராட்சத்தை சேர்த்து அணிந்தால் சகலவித பாதுகாப்பும் உண்டாகும்.
    * இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் கணவன்- மனைவி பிரச்சினை விலகும்.

    பத்து முகம்

    * மிகவும் சக்தி வாய்ந்த இந்த ருத்ராட்சம், எமதர்மனின் அருளைப் பெற்றது.
    * இதை அணிபவர்களுக்கு பில்லி, சூனியம், மந்திர, தந்திரங்களால் வரும் கெடுபலன்களை தடுக்கும் சக்தி இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.
    * வாழ்வில் சரியான பாதையை காட்டும் ஆற்றல் இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.
    * இந்த ருத்ராட்சத்தோடு ஒருமுக ருத்ராட்சத்தை சேர்த்து அணிந்தால், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி நிச்சயம்.
    * இதை அணிபவர்களிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது. ஆனால் இந்த ருத்ராட்சம் மிக அரிதாகவே கிடைக்கும்.

    பங்குனி மாதத்தில் அம்பிகையின் ஆலயங்களில், நடக்கும் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு, அம்பிகையை வழிபாடு செய்வதால், நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன.
    பங்குனி மாதத்தில் ஊர் தோறும் அம்பிகையின் ஆலயங்களில், பூச்சொரிதல் விழா நடைபெறும். வாசமுள்ள மலர்களையும், வண்ண வண்ண பூக்களையும் கூடைகளில் கொண்டு வந்து, அம்பிகையின் மீது தூவி பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.

    அம்பிகையின் மீது தூவி வழிபடப் படுவதால் இதற்கு ‘பூச்சொரிதல்’ என்று பெயர். இந்த பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு, அம்பிகையை வழிபாடு செய்வதால், நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. தேனைச் சுமக்கும் பூக்களை அம்பிகைக்கு அர்ப்பணிக்கும் பொழுது, தேனான வாழ்க்கை நமக்கு அமையும்.

    அதைச் சுமந்து கொண்டு பாதயாத்திரையாக செல்லும் பொழுது, ‘ஓம்சக்தி’ என்று உச்சரிப்பதால், நாம் சிறப்பான பலன்களைப் பெறுகிறோம். அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும். மழை வளம் பெருகும். “மாரியல்லால் ஒரு காரியமில்லை” என்ற பழமொழிப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால், மகத்தான பலன் நமக்குக் கிடைக்கும். சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெருக வைக்கும் மாரியம்மனை, பங்குனி மாதத்தில் மலர் தூவி வழிபடுவோம். புகழ் குவிய வழி காண்போம்.
    ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் வைக்கும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
    ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் பூசும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பெண்கள் ‘நெற்றியில் பொட்டு’ அல்லது குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப் படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடமான அப் பகுதியை யோக முறையில், ஆக்ஞா சக்கரம் என்று சொல்லப்படும்.

    மனித உடலில் உள்ள இயக்கங்கள் காரணமாக ‘எலக்ட்ரோ மேக்னடிக்’ என்ற மின் காந்த அலை வடிவத்தில் சக்தி வெளிப்படுகிறது. நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க விதத்தில் மின் காந்த அலைகள் வெளிப்படுகின்றன. மன அமைதி பாதிக்கப்படும் சமயத்தில் அப்பகுதிகளில் வலி ஏற்படுவதை உணரலாம். சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பொருளாகும். குங்குமம் என்பது இயற்கை கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அதன் அடிப்படையில் நெற்றியில் இடும் குங்குமம் அல்லது சந்தனம் மூலம் நெற்றிப்பகுதி குளிர்ச்சி அடைகிறது.

    புருவ மத்திக்கு பின்புறம் ‘பினியல் கிளாண்ட்’ என்ற சுரப்பி அமைந்துள்ளது. ‘ஆக்ஞா சக்கரம்’ எனப்படும் அதை, ‘மூன்றாவது கண்’, ‘ஞானக்கண்’ என்று குறிப்பிடுவார்கள். சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரம் நெற்றிக் கண்ணாக இருப்பதை கவனித்திருப்போம். திபெத்தில் உள்ள லாமா புத்த துறவிகளுக்கு ஞானக்கண் திறப்பு என்ற சடங்கின் மூலம் புருவ மத்தி பகுதிக்கு நெருப்பால் சூடு வைக்கப்படுகிறது. சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுவதால் உடல் மற்றும் மனோசக்தி ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. முகம் பிரகாசம் அடைகிறது. பொட்டு வைப்பதை ஆன்மிக ரீதியாகவும், உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்கமாகவும் ஆன்மிக சான்றோர்கள் ஏற்படுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.



    பாரம்பரிய முறைப்படி பெண்கள் முன் வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் இட்டுக்கொள்வார்கள். ஆண்கள் பெரும்பாலும் புருவ மத்தியில் அவற்றை அணிவது வழக்கம். பொதுவாக, குங்குமம் என்பது மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றாக கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும். குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதியில் மகாலட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.

    அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அப்பகுதியில் இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமான மூளையின் பின்பகுதியில் எண்ணங்களின் பதிவிடமாக உள்ள ‘ஹிப்போகேம்பஸ்’ என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை அனுப்புகிறது.

    இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிந்தனை நரம்புகள் ஒன்று கூடும் இடம் என்ற நிலையில் அங்கு மெதுவாக ஆட்காட்டி விரலால் தொட்டால், மனதில் உண்டாகும் ஒரு வித உணர்வு, தியான நிலைக்கு அடிப்படையாக அமைகிறது. மன ஒருமை மற்றும் சிந்தனையில் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில், குளிர்ந்த சந்தனத்தை அங்கே அணிவதன் மூலம் குறிப்பிட்ட கால அளவு வரை மன ஒருமை ஏற்படுவதும் அறியப்பட்டுள்ளது.

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    நடராஜர்

    அண்டம் முழுவதும் நடனத்துக்காக போற்றி புகழப்படுபவர் நடராஜர். சிவபெருமான் 64 வடிவங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த வடிவமாக இது போற்றப்படுகிறது. இந்த கோலத்தில் நடனமாடும் போது உலக உயிர்கள் அனைத்தும் அழிந்து அடுத்த புது உலகம் தோன்றும். அப்ஸமார புருஷா என்னும் குள்ளனை, காலில் விழச் செய்து, அவன் ஆணவத்தை அழிக்க, அவன் மீது நிற்பது போல் நடராஜர் தோற்றம் இருக்கும். நடராஜரின் தோற்றமான உலக உயிர்களின் உருவாக்கத்தை உணர்த்தும் விதத்தில் இருப்பதாக விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    மந்திரா

    பிரபஞ்சத்தின் தலைமை சிற்பியாக புராணங்கள் விஸ்வகர்மாவை சித்தரிக்கின்றன. இவருடைய மனைவிகளில் ஒருவர்தான் மந்திரா. இவர்களது மகன் நளன், ராமாயண காவியத்தின் போது, வானர வீரர்களில் ஒருவனாக இருந்து, ராமபிரானுக்கு உதவி செய்தவன். முனிவர் ஒருவரிடம் பெற்ற சாபத்தின் நளனுக்கு வரமாக அமைந்து விட்டது. அதாவது எதை நீரில் தூக்கிப் போட்டாலும், அது மூழ்காமல் தண்ணீருக்கு மேலே மிதக்கும் என்பது நளனுக்கு கிடைத்த சாபம். அதுதான் ராமாயண யுத்தத்திற்காக இலங்கைக்குச் செல்ல கற்களைக் கொண்டு பாலம் அமைக்க நளனுக்கு உதவிகரமாக இருந்தது. அந்த சிறப்பு மிக்க பிள்ளையைப் பெற்றெடுத்த தாய் தான் மந்திரா.

    பரீட்ஷித்

    மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் ஐந்து பேரில் அர்ச்சுனனின் பேரன் தான் பரீட்ஷித். இவன் அபிமன்யுவின் மகன். மகாபாரதப் போரின் போது, பரீட்ஷித் தாயின் கருவில் வளர்ந்து வந்தான். அப்போது அஸ்வத்தாமன் ஆயுதத்தை ஏவி, தாயின் வயிற்றில் அடித்தான். இதனால் பரீட்ஷித் பிறக்கும் போதே இறந்து பிறந்தான். ஆனால் கிருஷ்ண பகவானின் அருளால், அவனுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவனே பின்னாளில் அஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்தான்.

    பரீட்ஷித், ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அங்கு ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரை பரீட்ஷித் பல முறை வணங்கியும், அவர் தியானத்தில் இருந்ததால் அவனைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட பரீட்ஷித், முனிவரின் மீது பாம்பு ஒன்றை மாலை போல் போட்டு விட்டுச் சென்றான். சிறிது நேரத்தில் அங்கு வந்த முனிவரின் மகன், தன் தந்தையின் மீது பாம்பை போட்டவன், 7 நாட்களில் பாம்பு கடித்து இறப்பான் என்று சாபமிட்டார். அதன்படியே பரீட்ஷித் பாம்பு தீண்டி இறந்தான்.

    கிருதயுகம்

    உலகின் நான்கு யுகங்களில் முதல் யுகம் கிருதயுகம். இது 17 லட்சத்து 28 ஆயிரம் வருடங்களைக் கொண்டதாகும். கிருத யுகத்தை ‘சத்ய யுகம்’ என்றும் அழைப்பார்கள். ஏனெனில் இந்த யுகத்தில் வாழும் மக்கள் அனைவருமே நேர்மையானவர்களாகவும், தங்கள் கடமையில் இருந்து தவறாதவர்களாகவும் இருப்பார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    பாசுபதம்

    சிவபெருமானின் சக்தி மிகுந்த ஆயுதமாகும். எப் பொழுது தர்மம் அழிகின்றதோ அதை மீட்க இதை பயன்படுத்த வேண்டும். இது அனைத்து படைப்புகளையும் அழிக்கக் கூடியது. பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனது தவவலிமையால் சிவன் அவன் வேண்டும் வரத்தை கேட்குமாறு கூற, அவன் சிவனிடமிருந்து பாசுபதத்தை பெற்றுச் சென்றான்.
    சிவபெருமானுக்கு உகந்த மாதங்களில் அவருக்கு பிடித்த மலர்களால் வழிபாடு செய்தால் நம் விருப்பங்கள் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பார்.
    சித்திரை - பலாசம்,
    வைகாசி - புன்னை,
    ஆனி - வெள்ளெருக்கு,
    ஆடி - அரளி,
    ஆவணி - செண்பகம்,
    புரட்டாசி - கொன்றை,
    ஐப்பசி - தும்பை,
    கார்த்திகை - கத்திரி,
    மார்கழி - பட்டி,
    தை - தாமரை,
    மாசி - நீலோத்பலம்,
    பங்குனி - மல்லிகை.

    மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

    சித்திரை - மரிக்கொழுந்து,
    வைகாசி - சந்தனம்,
    ஆனி - முக்கனிகள்,
    ஆடி - பால்,
    ஆவணி - நாட்டுச்சர்க்கரை,
    புரட்டாசி - அப்பம்,
    ஐப்பசி - அன்னம்,
    கார்த்திகை - தீபவரிசை,
    மார்கழி - நெய்,
    தை - கருப்பஞ்சாறு,
    மாசி - நெய்யில் நனைத்த கம்பளம்,
    பங்குனி - கெட்டித்தயிர்.
    ×