search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    தேவதானப்பட்டி அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பாவனா (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் செந்தில் (24) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாவனாவின் தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாவனாவின் இருக்கும் இடம் தெரிந்து அங்கு சென்று தன்னுடன் வருமாறு கூறினார்.

    ஆனால் பாவனா அதற்கு மறுப்பு தெரிவித்து தான் செந்திலை திருமணம் செய்து கொண்டதாகவும் எனவே அவருடனேயே வசிப்பதாகவும் கூறினார். பாவனாவின் தந்தை இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் செந்தில் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூரில் திருமணம் முடிந்து 1½ மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு குழிக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா(23). பனியன் நிறுவன தொழிலாளி.

    இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் வழக்கம் போல் சந்தியா பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக்குள் மின்விசிறியில் மகேந்திரன் வயரால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மகேந்திரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் முடிந்து 1½ மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூரில் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் உறவினரின் பெண்ணுக்கு வாலிபர் தாலிகட்டினார்.
    பண்ருட்டி:

    கடலூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 28), பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆசைமுத்து மகள் ரஞ்சிதம் (வயது 24) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி இரு வீட்டார்களும் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவந்தனர். இவர்களது திருமணம் இன்று கடலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் மணமகள் ரஞ்சிதம் கூறி விட்டு சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் ரஞ்சிதத்தை தேடினர். உறவினர் மற்றும் தோழிகளிடம் விசாரித்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் ரஞ்சிதத்தின் தந்தை ஆசைமுத்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரஞ்சிதத்தை தேடினர். மணமகள் மாயமானதை அறிந்த மணமகன் அழகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இன்று திருமணம் நடைபெற இருந்த கடலூர் தனியார் திருமண மண்டபத்துக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்தனர். மாயமான மணமகள் ரஞ்சிதத்தை இன்று காலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர் ஒருவரிடம் அழகேசனுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்துதர விருப்பமா? என மணமகனின் பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோரும் சம்மதித்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர் மகளும் அழகேசனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து புதுமணப்பெண்ணை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். அழகேசன் அந்த மணப்பெண்ணின் கழுத்தில் குறித்த முகூர்த்த நேரத்தில் தாலிகட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர். திடீரென மணப்பெண்ணாக மாறிய பெண்ணை அனைவரும் பாராட்டினர். #Tamilnews
    நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மணப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சேமக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 24). இவருக்கும் கடலூரை சேர்ந்த அழகேசன் (28) என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இவர்களது திருமணம் நாளை காலை கடலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு ரஞ்சிதம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார். அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரஞ்சிதத்தின் அண்ணன் காசிமுத்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாயமான ரஞ்சிதத்தை தேடி வருகிறார்.

    நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மணப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காதலித்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தவர் திருமணத்திற்கு மறுத்ததால் கைது செய்யப்பட்டார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜோதிலட்சுமி (வயது 23). இவர், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனக்கும், செட்டியார் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜ் (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. தனியார் செல்போன் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வரும் அவரை 3 ஆண்டுகளாக காதலித்தேன்.

    திருமணம் செய்வதாக பாண்டியராஜ் கூறியதை நம்பி பல இடங்களுக்குச் சென்றேன். அப்போது ஆசை வார்த்தை கூறி அவர் என்னிடம் உல்லாசம் அனுபவித்தார்.

    ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். பலமுறை கேட்டும் அவர், திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனவே பாண்டியராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பாண்டியராஜ் கைது செய்யப்பட்டார்.

    இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ததாக ரெடிமேட் நிறுவன உரிமையாளர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியைச் சேர்ந்த பொன்னுத்தாய் (வயது 25), அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    முகவூரில் செயல்பட்டு வரும் பெண்கள் உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தில், கடந்த 3 ஆண்டுகளாக டெய்லராக பணியாற்றி வருகிறேன்.

    அந்த நிறுவன உரிமையாளர் மணிமாறன் (28) என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி நெருக்கமாக பழகினேன். இதனால் நான் கர்ப்பமானேன்.

    இது தெரியவந்ததும் எனது பெற்றோர் சென்று மணிமாறணிடம் பேசினர். அப்போது திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். இதனை நாங்கள் நம்பினோம்.

    இந்த நிலையில் மணிமாறன் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து ராஜபாளை யம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    துபாயில் திருமணம் செய்துகொண்ட 15 நிமிடத்தில் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
    துபாய்:

    துபாய் மணமகன் ஒருவர்  20,000 பவுண்ட்ஸ் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்துகொள்கிறேன் என மணமகளின் தந்தையுடன் கூறியுள்ளார்.

    இதற்கு மணமகளின் தந்தை சம்மதம் தெரிவித்ததையடுத்து, அனைவர் முன்னிலையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடனேயே பணத்தை தருமாறு மணமகளின் தந்தை கேட்டுள்ளார்.

    அப்போது மணமகன் பேசிய தொகையை கொடுக்காமல் பாதி தொகையான 10,000 பவுண்ட்ஸ் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட அவர், பொறுமையிழந்து அனைவர் முன்னிலையிலும் சண்டைபோட்டுள்ளார். இந்த சம்பவத்தால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறி, மணமகன் திருமணமான 15 நிமிடத்திலேயே தலாக் சொல்லி மணமகளை விவாகரத்து செய்துள்ளார்.
    பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#Ronaldinho
    பிரேசிலியா:

    பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம் பவான் ரொனால்டினோ.

    2002-ம் ஆண்டு பிரேசில் அணி உலககோப்பையை வெல்ல இவரது ஆட்டம் முக்கியமாக இருந்தது.

    38 வயதான ரொனால் டினோ ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். உலக கால்பந்து வீரர் விருதை பெற்ற அவர் பிரிசிலா, பெட்ரிஸ் சவுசா ஆகிய இரண்டு பெண்களை காதலித்து வந்தார்.

    கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த 2 பெண்களும் ரொனால்டினோவுடன் ஒன்றாக வசித்து வந்தனர். தற்போது அவர்களை அவர் திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார்.

    ரொனால்டினா இந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் மணக்கிறார். ஆகஸ்ட் மாதம் சான் டோமானிகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த திருமணம் நடக்கிறது.

    ரொனாடில்னோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 பெண்களும் 2015-ம் ஆண்டு முதல் ரொனால்டினோவை காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.#ronaldhino
    இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்கலே திருமணத்தில் கலந்துகொண்ட சில முக்கிய பிரபலங்கள் யார் என்பதை காண்போம். #Royalwedding #PrinceHarry #MeghanMarkle

    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தை ஒட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

    இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். இவர்கள் தவிர திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள ஒரு திடலில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டது.

    இந்திய நேரப்படி மாலை 5.10 மணியளவில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டனர். 

    பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரே மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோர் முதன்முதலாக அந்த இடத்திற்கு வந்த பிரபலங்களில் முக்கியமானவர்கள். பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தில் கலந்து கொண்டார்.

    பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரே


    அமெரிக்காவை சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தொழிலதிபரான ஜார்ஜ் க்லூனி - மனைவி அமல் உடன்


    இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க நடிகை அபிகெயில் ஸ்பென்சர்


    பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் - மனைவி விக்டோரியா உடன்


    பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் - கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் உடன்


    அமெரிக்க தொலைகாட்சி மற்றும் திரைப்பட நடிகை சாரா ராபெர்டி - கணவர் சாண்டு செப்பாலா உடன்


    முன்னாள் இங்கிலாந்து ரக்பி வீரர் மற்றும் பயிற்சியாளர் சர் கிளைவ் உட்வார்ட் - மனைவி ஜேன் வில்லியம்ஸ் உடன்


    இங்கிலாந்து முன்னாள் ரக்பி வீரர் வில் கிரீன்உட் - மனைவி கரோலின் கிரீன்உட் உடன்


    கனடா நடிகர் பாட்ரிக் ஜே ஆடம்ஸ் - மனைவி மற்றும் அமெரிக்க நடிகையான டொரியன் பெல்லிசாரியோ உடன்


    இளவரசர் ஹாரியின் முன்னாள் பெண் நண்பர் செல்சி டேவி (ஜிம்பாப்வே)


    பிரிட்டன் பாடகி ஜோஸ் ஸ்டோன்


    அமெரிக்க பாடகர் மார்கஸ் மம்போர்ட் - மனைவி மற்றும் பிரிட்டன் நடிகையான கேரி முல்லிகன் உடன்


    இதுதவிர, எங்கிருந்து மணவிழாவை வசதியாக பார்க்க முடியுமோ, அந்த பகுதியில் உள்ள சாலைகளில் நேற்று முதல் லட்சக்கணக்கான மக்கள் நடைபாதைகளில் இடம்பிடித்து காத்திருந்தனர். பிரிட்டன் அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை உலகில் உள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர். #Royalwedding #PrinceHarry #MeghanMarkle
    கேரளாவில் முதல் முறையாக சிறப்பு திருமண திட்டத்தின் கீழ் திருநம்பியும்- திருநங்கையும் சட்டப்பூர்வ திருமண பந்தத்தில் இணைந்தனர்.#LGBT #LGBTQ #trans
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது கபீர். இவரது மனைவி ‌ஷனிபா. இவர்களின் மகள் இஷான். திருநங்கையான இஷான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆபரே‌ஷன் மூலம் ஆணாக மாறினார்.

    இதுபோல திருவனந்தபுரம் பாட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன்-உஷா தம்பதியின் மகன் சூர்யா. திருநங்கையான இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார்.

    கேரள டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா காமெடி வேடங்களில் தோன்றி நடித்தார். இதுதொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அப்போது பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி இஷானை சந்தித்தார்.

    இதில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் சாதாரண மனிதர்களைபோல திருமண வாழ்க்கையில் நுழைய விரும்பினர். இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்றாலும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

    பெற்றோர் சம்மதம் கிடைத்ததும் இஷான்-சூர்யா இருவரும் திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி, இவர்களின் திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள மன்னம் கிளப் அரங்கில் நேற்று நடந்தது.

    இஷான் மணமகனுக்குரிய கோட்-சூட் அணிந்து கம்பீரமாக வந்தார். சூர்யா, பட்டுச்சேலை கட்டி ஆபரணங்கள் அணிந்து மணப்பெண்ணாக வந்தார். அவர், மணமேடைக்கு வந்த போது, கூடியிருந்தவர்களும், மணமக்களின் நண்பர்களும் பாட்டு பாடியும், நடன மாடியும் வரவேற்றனர்.



    மணமேடையில் மணமக்கள் அமர்ந்ததும் திருமண சடங்குகள் நடந்தது. மத சடங்குகள் போல் இல்லாமல் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டும் சடங்கு மட்டும் நடந்தது. சூர்யா கழுத்தில் இஷான் தாலிகட்டியதும் அங்கு கூடியிருந்தவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    திருமணம் முடிந்ததும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    கேரளாவில் இதுபோன்ற திருமணம் முதல் முறையாக நடந்ததால் கேரள சுற்றுலாத் துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் வி.கே. பிரசாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி. சீமா உள்ளிட்ட பிரமுகர்களும், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    நாங்களும், மனிதர்கள் தான். இயற்கையோடு இணைந்து வாழ விரும்பு கிறோம். சாதாரண மனிதர் களைபோல நாங் களும் திருமண வாழ்க்கை நடத்த லாம் என்பதை எங்களை போன்றவர்களுக்கு எடுத்துக் காட்டவே இந்த திருமணத்தை விமரிசையாக நடத்தினோம். இது, பிற திருநங்கையர்- திருநம்பியருக்கு முன் உதாரணமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருநம்பி-திருநங்கை இஷான்-சூர்யா ஜோடியுடன் திருமணத்திற்கு வந்தவர்கள் செல்பி எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.#LGBT #LGBTQ #trans
    கர்நாடகாவில் தனது திருமண நாளன்றும் தேர்வை கைவிடாமல், தேர்வு எழுதிவிட்டு திருமணம் செய்து கொண்ட மாணவிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன. #karnatakagirlmarriage
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் மாண்ட்யா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து வருபவர் காவியா. இவருக்கும், லோகித் என்பவருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயித்திருந்தனர்.

    இந்நிலையில், திருமண தேதியில் தேர்வு அறிவிக்கப்பட்டது. திருமணத்திற்காக தேர்வை கைவிட மனமில்லாத காவியா, தான் நிச்சயம் தேர்வு எழுத வேண்டும் என தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, காலை 9.15 மணிக்கு மணக்கோலத்தில் தேர்வறைக்குச் சென்ற காவியா, 11 மணிக்குள் தேர்வை முடித்துவிட்டு, குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் திருமணமும் செய்துகொண்டார்.


    ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான தினமாக கருதப்படும் திருமண நாளிலும், தனது படிப்பின் மீது இருந்த ஆர்வம் மற்றும் மரியாதையால் தேர்வு எழுத வந்த காவியாவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. #karnatakagirlmarriage
    திருமணமான ஆரம்ப காலத்தில் கணவருடைய குடும்பத்தினருடன் உறவை பேணுவதில் புதுப்பெண்களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
    புதிதாக திருமணமான தம்பதியர்களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும். காதல் திருமணமாகவோ, நிச்சயித்த திருமணமாகவோ இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் ஒன்றிணைந்து செயல்படும்போது ஒருவித தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கொருவர் சரிவர புரிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அப்படியிருக்கையில் கணவருடைய குடும்பத்தினருடன் உறவை பேணுவதில் புதுப்பெண்களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. புகுந்த வீட்டில் அடியெடுத்துவைக்கும் புதுப்பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

    * கணவர் குடும்பத்தினருக்குள் பிரச்சினை ஏற்படும் விதத்தில் புதுப்பெண்ணின் தலையீடு இருக்கக்கூடாது. தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புதுப்பெண்ணின் குணாதிசயங்களை கணவரின் குடும்பத்தினர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் அது அவளுக்கு பாதகமாகவே அமையும். கணவரை அவருடைய குடும்பத்தினர் வசைபாடுவதாகவே இருந்தாலும் பிரச்சினையின் வீரியத்தை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். அதிலும் அவருடைய பெற்றோர் மகனின் தவறுகளை கண்டிக்கும்போது அமைதி காப்பதே நல்லது.

    * கணவர் வீட்டினர் தன்னை 'என்ன நினைப்பார்களோ' என்று நினைத்து புதுப்பெண் தன்னுடைய இயல்பான சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப் படியே மாற்ற முயற்சித்தாலும் அது நீண்ட நாட்களுக்கு கைக்கொடுக்காது. அவள் அவளாகவே இருப்பதுதான் அவளை பற்றி கணவர் குடும்பத்தினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். தனக்கு தெரியாத விஷயங்களை தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கக்கூடாது. அவள் வெளிப்படையாக பேசுவது அவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும்.

    * திருமணமான புதிதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும், நேசத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்கும் ஆர்வம் காண்பிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரை பற்றியும், அவர்களுடைய சுபாவங்கள் குறித்தும் கணவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கணவரே தனது குடும்பத்தில் உள்ள சிலரை பற்றி குறை கூறினாலும், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அனைவரிடமும் அன்புடன் பழக முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே ஒதுங்கி இருக்க முயற்சிப்பது புதுப்பெண்ணை பற்றி தவறான அபிப்பிராயத்தை விதைத்துவிடும்.



    * கணவரின் உடன் பிறந்தவர்களிடம் சகஜமாக பழகுவது என்பது சிக்கலான விஷயம்தான். அவர்களும் புதுப்பெண்ணிடம் பழக தயங்கத்தான் செய்வார்கள். அதிலும் நாத்தனாரிடம் நல்ல நட்புறவை ஆரம்பத்திலேயே வளர்த்து கொள்ளாவிட்டால் இருவருக்குமிடையே தவறான புரிதல் உருவாகிவிடும். தோழியிடம் பழகுவது போல சகஜமாக சிரித்து பேசி உறவை வலுப்படுத்தி கொண்டால் அது கடைசி வரை சுமுகமாக நீடிக்கும்.

    * கணவர் வீட்டில் இருக்கும் மற்ற பெண்களிடம் குழந்தைகள் மூலமாகவே உறவை வளர்த்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செல விடும்போது அது வீட்டில் உள்ளவர்களுடனும் நெருக்கத்தை அதிகப்படுத்தும். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கு உணவு ஊட்டி விடுவது, பாடம் சொல்லிக்கொடுப்பது, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது என நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம். சமையல் வேலைகளை பகிர்ந்து கொள்வதும் உறவை மேம்படுத்த உதவும்.

    * புகுந்தவீட்டு உறவையும், பிறந்த வீட்டு உறவையும் சரிசமமாக பேண வேண்டும். ஒரேடியாக பிறந்த வீட்டு உறவை பற்றி பெருமை பேசுவதும், புகுந்த வீட்டினரின் செயல்பாடுகளை தனது வீட்டினருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவதும் கூடாது. புகுந்த வீட்டினருடன் நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிறந்த வீட்டு உறவை உதாசீனப்படுத்துவதும் கூடாது. இரு குடும்பத்தினரும் உறவை வளர்த்துக்கொள்வதற்கு இணைப்பு பாலமாக புதுப்பெண் செயல்பட வேண்டும்.

    * புகுந்த வீட்டினருடன் சுமுக உறவை பேணுவதில் மாமியார்-மருமகள் இடையேயான பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாமியாரை அன்னிய நபராக அணுகுவது அல்லது அவரிடம் இருந்து ஒதுங்கி இருக்க முயற்சிப்பதுதான் பிரச்சினையின் தொடக்கமாக அமையும். ஆரம்பத்திலேயே அவரையும் தன்னுடைய குடும்ப உறவுகளில் ஒருவராக பாவிப்பது இடைவெளி தோன்றுவதற்கு இடம் கொடுக்காது. அவரையும் தாயார் ஸ்தானத்தில் வைத்து தக்க மரியாதையுடன் பழக ஆரம்பித்தாலே போதும். உறவு வலுப்பட்டு விடும்.



    * புதுப்பெண் கணவருடனான பந்தத்தையும் சுமுகமாக தொடர வேண்டும். அவருடைய அன்றாட நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள், அவருடைய குடும்ப உள் விவகாரங்கள் போன்றவற்றில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அது கணவன்-மனைவி இடையேயான உறவில் பங்கத்தை ஏற்படுத்திவிடும். தன்னுடைய சுதந்திரம் பறிபோய்க்கொண்டிருப்பதாக உணரும் நிலையை கணவருக்கு ஏற்படுத்திவிடக்கூடாது. அதற்காக கணவரின் நடவடிக்கைகளை கண்டும், காணாமல் இருந்துவிடவும் கூடாது. அவருடைய போக்கிலேயே சென்று நிறை, குறைகளை மனம் நோகாமல் எடுத்துக்கூறலாம்.

    * குடும்ப பட்ஜெட்டை நிர்வகித்து அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது கணவரின் குடும்ப உறவுகளுக்குள் புகைச்சலையோ, மனக்கசப்பையோ ஏற்படுத்திவிடக்கூடாது. அவர்களுடைய வழக்கமான பழக்க வழக்கங்கள், செலவுகளில் தலையிட முயற்சிப்பது வீண் சச்சரவுகளையே ஏற்படுத்தும். குடும்ப வரவு-செலவுகளில் கணவரிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையை மற்றவர்களிடமும் காண்பிக்க நினைப்பது உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும்.

    * கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கூறும் ஆர்வத்தில் மனதில் தோன்று வதையெல்லாம் அப்படியே கொட்டிவிடக்கூடாது. அது பிரச்சினையில் தானாகவே மாட்டிக்கொள்வதற்கு வழிவகுத்துவிடும். வாழ்க்கைப் பயணத்தில் கூடவே வரும் துணையுடன் மனம் விட்டு பேசுவதற்கு காலங்கள் காத்திருக்கின்றன. பிரச்சினையை உண்டாக்குபவை எவை, அவசியம் பேசிய ஆக வேண்டிய விஷயங்கள் எவை, பேசக்கூடாத விஷயங்கள் எவை என மனத்திரையில் அசைபோட்டு அதன் பிறகு தேவைப்பட்டால் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். அனுசரித்து போவதும், அநாவசிய பேச்சை தவிர்ப்பதும் இல்லறம் என்றும் நல்லறமாக அமைய வித்திடும்.
    ×