search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம்"

    நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். இன்று தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயன பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் சென்றடைகிறார். அங்கு திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுல வல்லி தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்ற பகுதியை பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும், பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார்.

    அன்று முதல் சேரகுலவல்லி, ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார். இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது. குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம். இதனால், ஆண்டுதோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுலவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும். இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். பின்னர், சேரகுலவல்லி தாயாருடன் காலை 9 மணி முதல் காலை 11 மணிவரை சேர்த்தி சேவை கண்டருளினார்.

    அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு வசந்த மண்டபம் சென்றடைந்தார். பின்னர் இரவு 9.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    வசந்த உற்சவத்தின் போது கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் நான்கு புறமும் அகழி போல உள்ள பள்ளத்தில் நீர்நிரப்பி அழகிய மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஒய்யாரமாக வீற்றிருப்பார். விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் நாள் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளல், தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது 13-ந் தேதி அன்று விஸ்வரூபசேவை கிடையாது. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை விஸ்வரூப சேவையும், காலை 9 மணிமுதல் 12 மணிவரையும், மதியம் 2 மணிமுதல் 3 மணிவரை மற்றும் மாலை 5 மணிமுதல் இரவு 8.45 மணிவரையும் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உடையவர் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜர் 1002-வது திருநட்சத்திர பெருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் உபன்யாசம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமானுஜரின் 1002-வது திருநட்சத்திர தினமான நேற்று உற்சவர் ராமானுஜர் காலை 6.30 மணிக்கு 4 சித்திரைவீதிகளில் உலா வந்தார். பின்னர் ராமானுஜர் சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மதியம் 2 மணியளவில் பெருமாளிடம் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள் மற்றும் மாலைகளால் ராமானுஜருக்கு உச்சாத்து அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் கோஷ்டி பூஜை நடைபெற்றது. மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவர் வேணுசீனிவாசன். இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அறங்காவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு நம்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 4-ம் நாளான நேற்று காலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார்.

    அங்கிருந்து காலை 4.30 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு மீண்டும் வாகன மண்டபம் வந்தடைந்தார். மண்டபத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.45 மணிக்கு திருச்சி ஆரியவைசியாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 30-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 1-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 2-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள்ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு கொடிமர மண்டபம் வந்தடைந்தார். காலை 4.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    பின்னர் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவையொட்டி கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதன் பின்னர் காலை 9.45 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது. இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 4-30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

    மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 26-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    விழாவின் 2-ம் நாளான 26-ந்தேதி மாலை கற்பக விருட்ச வாகனத்திலும், 27-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 28-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 29-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 30-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 1-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.

    2-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி சப்தாவரணம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி மே 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து 10.15 மணிக்குள் கொடி ஏற்றப்படுகிறது.

    28-ந்தேதி மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். மே 2-ந்தேதி காலை 7 மணிக்கு வண்டுலூர் சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேல் தங்க குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மே 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 5-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார்.

    முன்னதாக சித்திரை திருநாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி மே 2-ந்தேதி காலை 7 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் வஸ்திர பொருட்கள் (பட்டு பரிவட்டம்) மற்றும் மங்கலபொருட்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ரெங்கவிலாச மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர் அவை சகல மரியாதைகளுடன் வீதி வலம் முடிந்த பின்னர் நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் சாற்றப்படும்.

    சித்திரை தேர் திருவிழாவையொட்டி 25-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை மூலவர் விசுவரூப சேவை கிடையாது, என ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சித்ரா பவுர்ணமியையொட்டி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலை அடிவாரத்தில் உள்ள நீரோடையில் துர்வாச முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கந்தர்வன் அந்த நீரோடையில் கந்தர்வ பெண்களுடன் ஜலகிரீடையில் ஈடுபட்டான். இதனால் துர்வாச முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபமான முனிவர், கந்தர்வனை முதலையாக மாற சாபமிட்டார். உடனே கந்தர்வன் சாப விமோசனம் கேட்கும்போது விஷ்ணுவின் சக்ர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.

    இதே போல் இந்திரேதாயும்னா என்ற மன்னன் பெருமாளை வழிபடும் போது ஆச்சார்ய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர், அந்த மன்னனை யானையாக சபித்தார். அவர் கஜேந்திர யானையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கஜேந்திர யானை தடாகத்தில் பெருமாளுக்கு பூஜைக்காக தாமரைப் பூ பறிக்க போனபோது தடாகத்தில் இருந்த முதலை கஜேந்திர யானையின் காலை பிடித்துக்கொண்டு விட மறுத்தது. எவ்வளவோ முயன்றும் அந்த முதலை யானையின் காலை விடவில்லை.

    இதனால் தவித்த கஜேந்திர யானை, பெருமாளை வேண்டி ‘ரெங்கா, ரெங்கா’ என்று தன்னை காப்பாற்ற அழைத்தது. உடனே கருடன் மீது ஏறி அங்கு வந்த பெருமாள், தனது சக்ராயுதத்தால் முதலையை அழித்து கந்தர்வனுக்கும், யானையான கஜேந்திரனுக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம் ஆகும். இந்த நிகழ்ச்்சி சித்ராபவுர்ணமி நாளில் நடந்ததால் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் அம்மாமண்டபம் படித்துறையில் இந்நிகழ்ச்சி நடத்தி காட்டப்படும்.

    அதன்படி ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு எழுந்தருளினார். அங்கு பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.

    பின்னர் ஆஸ்தான மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு காவிரி ஆற்றிற்கு சென்றார். அங்கு நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி 6.15 மணிக்கு நடைபெற்றது. அப்போது ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவு 8.15 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியின் போது அம்மாமண்டபத்தில் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் திருவிழா தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்கள் இத்திருநாள் நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள்(பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் நேற்று மாலை தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்கள் இத்திருநாள் நடைபெறுகிறது. வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார்.

    பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 14-ந் தேதி தொடங்கி 18-ந்் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவையும் நடைபெறுகிறது.

    வெளிக்கோடை, உள்கோடை திருநாளை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி வரை இரவு 8.45 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 19-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் எடுத்து செல்லப்பட்டது.
    சக்தி தலங்களில் புகழ் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். தன்னை நாடிவருவோர் மட்டுமின்றி மண்ணுலகில் உள்ள அனைத்து உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், அனைத்து மக்களுக்கும் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டுள்ளார்.

    பச்சை பட்டினி விரதத்தின்போது கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதனால், அம்மன் உடல் உஷ்ணத்தில் கொதிப்பதை கட்டுப்படுத்தவே பூச்சொரிதல் விழாவின் போது பல்வேறு வகையிலான மலர்களை கொண்டு அம்மன் சிலை உள்ள கருவறை முழுவதும் நிரப்பி வைக்கப்படும். இந்த பூச்சொரிதல் விழாவின் போது திருச்சி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊழியர்கள் சார்பில் நேற்று காலை கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து பூத்தட்டுகளை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பூத்தட்டுகளை கையில் சுமந்து தெற்குவாசல் வழியாக ராஜகோபுரம் வரை ஊர்வலமாக சென்றனர்். பின்னர் அங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை சமயபுரம் கோவிலுக்கு எடுத்து சென்றனர். 
    ×