search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    • 1,008 சங்காபிஷேகம் நடந்தது.
    • பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வந்தது. அதன்படி தினமும் உச்சிக்காலத்தில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மண்டல பூஜையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதனால் திருவிழாவைப்போல் கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவில் கார்த்திகை மண்டபத்தில் விநாயகர் பூஜை, பிரதான கலசம் வைத்து சிறப்பு யாகம், புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கலசபூஜை, சங்கு பூஜை நடைபெற்றது.

    2-வது நாளாக நேற்று காலை சிறப்பு யாகம், பூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசம் மேளதாளம் முழங்க உட்பிரகாரம் வலம் வந்தது. பின்னர் உச்சிக்கால பூஜையில் சுவாமிக்கு கலசநீரால் சிறப்பு அபிஷேகம், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மண்டல பூஜை நிறைவு நாளில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் ராஜசேகரன், சுப்பிரமணியன், மணிமாறன், சத்யா, கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடா்ந்து கோவில் மண்டபத்தில் கும்பாபிஷேக பணிக்கு உதவிய உபயதாரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது கோவில் சார்பில் அவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    • கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நண்பகல் 11 மணிக்கு பூர்ணாகுதி நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவுபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கலசபூஜை, 1,008 சங்காபிஷேகம், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி இன்று காலை 2-வது காலபூஜை, பாராயணம் நடைபெறுகிறது. நண்பகல் 11 மணிக்கு பூர்ணாகுதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து உச்சிகால பூஜையில் சங்காபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்படுகிறது.

    • வெயில் சுட்டெரித்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.
    • பக்தர்களின் வரிசை வெளிப்பிரகாரம் வரை இருந்தது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட பிரதான பாதைகள் வழியாக சென்று ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகியவற்றின் மூலமும் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்குள்ள நிலையங்களில் கவுண்ட்டரை கடந்தும் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேபோல் கோவிலின் தரிசன வழிகளிலும் கூட்டம் அதிகம் இருந்ததால் பக்தர்களின் வரிசை வெளிப்பிரகாரம் வரை இருந்தது. இதனால் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே பழனியில் நேற்று கடும் வெயில் சுட்டெரித்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர். இருப்பினும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    பழனியில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவரவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. கிழக்கு கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் சேவை இயங்கி வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்தால் அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று பகல் முழுவதும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ரோப்கார் இயக்கப்பட்டது. இதனால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    • ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 16-ம்தேதி 1,008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அந்த வகையில் பழனி கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரை பூஜை நடைபெறுகிறது.

    அப்போது உச்சிக்கால பூஜைக்கு முன்பு மலைக்கோவிலில் உள்ள சண்முகர் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 12 புண்ணிய கலசங்கள் வைத்து வேத மந்திரங்கள் முழங்க மண்டல பூஜை செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையின்போது 12 கலசங்களில் உள்ள புண்ணிய நீரில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் 16 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்படுகிறது.

    பழனி முருகன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருவதால் பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் வருகிற 16-ந் தேதியுடன் 48 நாள் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பிறகு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    • பல்வேறு இடங்களில் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
    • பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று மாசி மாத கார்த்திகை உற்சவ நாளாகும். இதையொட்டி பழனி முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜையில் சுவாமிக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணி சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீக அலங்காரம் நடந்தது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை, தங்கரத புறப்பாடு நடைபெற்றது. அப்போது 200 பேர் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரதத்தை இழுத்து வழிபாடு செய்தனர்.

    பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.

    அந்தவகையில் நேற்று வார விடுமுறை மற்றும் மாசி மாத கார்த்திகை உற்சவம் என்பதால், பழனி முருகனை தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் அதிக அளவில் வந்ததால், பல்வேறு இடங்களில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்க பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து சீரான வரிசையில் அனுப்பப்பட்டனர். படிப்பாதை தவிர்த்து இதர வழிகளான ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்திலும் கூட்டம் காரணமாக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    இதேபோல் மலைக்கோவிலில் பொது மற்றும் கட்டண தரிசன வழிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து, முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழனியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் அவதியடைந்தனர்.

    சமீபத்தில் நடந்து முடிந்த தைப்பூச திருவிழாவையொட்டி பழனி வடக்கு கிரிவீதி, சன்னதி வீதியில் பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. தற்போது அவை பிரிக்கப்படாமல் உள்ளன. இதனால் பழனிக்கு வரும் பக்தர்கள் அந்த நிழற்பந்தலில் இளைப்பாறி நிம்மதி அடைகின்றனர்.

    • திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி நடக்கிறது.
    • ஏப்ரல் 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழாவின் போது திண்டுக்கல், ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்துமுருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 29-ந்தேதி பழனி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி மாலை 5 45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் நடக்கிறது. ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி தந்தப்பல்லக்கு, தங்ககுதிரை, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவை முன்னிட்டு குடமுழுக்கு நினைவரங்கில் தினந்தோறும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏப்ரல் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை மலைக்கோவிலில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இருக்காது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தனர்.
    • பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர்.

    பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தைப்பூசத்திருவிழா முடிவடைந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    அதன்படி நேற்றும் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக பஸ்நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், தேன், தினைமாவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில்நார் கூடைகளில் பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தனர். பின்னர் பாதவிநாயகர் கோவில் முன்பு சீர்வரிசை பொருட்களுடன் குறவர் கூத்து, வேலன் ஆட்டம், காவடி ஆட்டம் உள்பட பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். இது, அங்கு வந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து முருகன் கோவிலுக்கு சென்று சீர்வரிசை பொருட்களை படைத்து வழிபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குறவர் மகள் வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால் தாய் வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தரிசனம் செய்தோம். பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

    • வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும்.
    • சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரியொட்டி, பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பழனி மலைக்கோவிலில் இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால பூஜையுடன் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    இதேபோல் பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், சன்னதி வீதி, மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள சிவன் சன்னதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    • எடப்பாடி காவடிக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுக்கள் சார்பில், தைப்பூச திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகப்பெருமானுக்கு படைத்து தரிசனம் செய்வது வழக்கம்.

    இவர்களில் அன்னதான குழு, அலங்கார குழு, காவடிக்குழு, பஞ்சாமிர்த குழு என பல குழுக்கள் உள்ளன. இந்த ஆண்டு பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந்தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி எடப்பாடி பக்தர்கள் குழுவினர் கடந்த 7-ந்தேதி எடப்பாடி பகுதியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர். இதில் பஞ்சாமிர்த குழுவினர் கடந்த 9-ந்தேதி பழனிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் பழனி மலைக்கோவில் மற்றும் அடிவார பகுதியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். இதற்கிடையே எடப்பாடியில் இருந்து பால், மயில், இளநீர் உள்ளிட்ட காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை மானூர் சண்முகநதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் மகா பூஜை நடத்தி வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 11 மணி அளவில் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் பகுதிக்கு வந்தனர்.

    பழனி கோவில் நிர்வாகம் சார்பில் மேள, தாளம் முழங்க எடப்பாடி காவடிக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் காவடிகளுடன் வலம் வந்து பெரியகடை வீதி, திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடு, சன்னதிவீதி வழியாக பழனி மலைக்கோவிலை அடைந்தனர். பின்னர் அவர்கள் சாயரட்சை கட்டளை பூஜை, ராக்கால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதையடுத்து எடப்பாடி குழுவினர் தயாரித்த பஞ்சாமிர்தம் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் குழுவினருக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில் பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் எடப்பாடி பக்தர்கள், பூக்களால் 'ஓம்' வடிவில் ஓவியம் வரைந்தனர்.

    இந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து மலைக்கோவிலில் எடப்பாடி பக்தர்கள் குழுவினர் நேற்று இரவு முழுவதும் தங்கி இருந்தனர். பழனி மலைக்கோவிலில் இரவு தங்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • ரெயில்நிலையத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    அறுபடைவீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை, முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் தைப்பூச திருவிழா முடிவடைந்த பின்னரும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பழனி பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலை தவிர்க்க பிரதான பாதையான படிப்பாதை வழியே சீரான முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுப்பப்பட்டனர். அதேபோல் தரிசனம் முடித்த பின்னரும் சீரான அளவில் கீழே இறக்கப்பட்டனர். படிப்பாதையை தவிர்த்து அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் இதர வழிகளான ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    அதேபோல் கோவிலில் பொது, கட்டண வழி என அனைத்து தரிசன வழிகள், அன்னதானக்கூடம் செல்லும் இடம் உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அந்த வகையில் நேற்று சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பழனியில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் நிலவியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    • தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தபோது வாண வேடிக்கை நடைபெற்றது.
    • தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் காலை, மாலையில் தந்தப் பல்லக்கு. புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 3, 4-ந்தேதிகளில் நடைபெற்றது.

    வெகுவிமரிசையாக நடைபெற்ற பழனி தைப்பூச திருவிழாவின் 10-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையை தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்துக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு 6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஓதுவார்கள் பண்பாடி மகா தீபாராதனை நடைபெற்றது.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா அரோகரா' என்று சரண கோஷம் எழுப்பினர். பின்னர் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தபோது வாண வேடிக்கை நடைபெற்றது. இதனையடுத்து தெப்பத்தேர் நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளினார். பிறகு இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

    தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் பழனி தெப்ப உற்சவ விழா கமிட்டி ஆகியோர் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    தைப்பூச திருவிழா நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருஆவினன்குடி, பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் காலை 6 மணி முதலே தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    இதேபோல் பாதவிநாயகர் கோவில் பகுதியில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு நேற்று 3 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தி கிரிவீதியை சுற்றி வந்தனர்.

    • கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் 16 ஆண்டுகள் பிறகு பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தைப்பூசத் திருவிழா முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது.

    கடந்த 3 நாட்களில் (3,4,5 ஆகிய தேதிகளில்) பழனி கோவிலில் 3 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    ×