search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96529"

    தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜயகாந்த் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சென்னையில் 3 தொகுதிகளிலும் அவர் வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். #DMDK #Vijayakanth
    சென்னை :

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். சாலிகிராமம் வீட்டில் ஓய்வில் இருந்த அவரை அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதிலும், நாடாளுமன்ற தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும், கூட்டணி விஷயத்திலும் விஜயகாந்த் கவனம் செலுத்தினார்.

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில், தன்னால் பேச இயலவில்லை என்பதை நிருபர்களுக்கு கை சைகை மூலம் விஜயகாந்த் வெளிப்படுத்தினார்.

    அதேநேரத்தில், தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விஜயகாந்த், பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளாதது தே.மு.தி.க.வினர் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் விஜயகாந்த் சார்பாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.



    இந்தநிலையில், தான் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாகவும், இந்த தேர்தல் தர்மத்துக்கும்-அதர்மத்துக்கும் இடையே நடப்பதாகவும், இதில் தர்மம் வெற்றி பெறும் என்றும், 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தே.மு.தி.க. தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் விஜயகாந்த் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இருப்பினும் விஜயகாந்த் எப்போது தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்? என்ற எதிர்பார்ப்பு மட்டும் தே.மு.தி.க.வினர் மனதில் இருந்து நீங்காத குறையாக இருந்தது. தேர்தல் பிரசாரம் நாளை ஓயும் நிலையில், விஜயகாந்த் சென்னையில் 3 தொகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பை தே.மு.தி.க. நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்டு தே.மு.தி.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அதன்படி, வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் சாம்பால் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

    3 தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் விஜயகாந்த் வேன் மூலம் பிரசாரம் செய்ய இருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் பகுதியில் விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர், மூலக்கடை, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். #DMDK #Vijayakanth
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளையும் நாளை மறுநாளும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையின் சில பகுதிகளில் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Vijayakanth #Vijayakanthcampaign
    விழுப்புரம்:

    பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் சென்னை திரும்பினார்.

    அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தபோது உடன்பாட்டில் கையொப்பமிட வந்த விஜயகாந்த் தன்னால் பேச முடியவில்லை என்று நிருபர்களிடம் சைகை மூலம் கூறிய சம்பவம் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

    அவர் பூரண நலமடைந்து தனக்கே உரித்தான அந்த கம்பீர பாணியில் பொதுக்கூட்டங்களில் மீண்டும் பேச வேண்டும் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.



    இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘நமது தலைவர் கேப்டன் நாளையும் நாளை மறுநாளும் நமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையின் சில பகுதிகளில் பிரசாரம் செய்வார்’ என்று தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Vijayakanth #Vijayakanthcampaign

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவது குறித்து இன்னும் 2 நாளில் அறிவிப்பு வரும் என பிரேமலதா தெரிவித்தார். #Premalatha #Vijayakanth
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் சென்று உள்ளேன். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. 40 தொகுதிகளையும் வென்று எடுப்போம். கடைசியாக வடசென்னையில் பிரசாரத்தை முடிப்போம்.

    கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்பு. உறுதியாக 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். வருமான வரி சோதனை உள்பட பல இடங்களில் பல சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சட்டம் தனது கடமையை செய்யும். எதிர்க்கட்சிகள் என்பதால் சோதனைகள் மூலம் யாரையும் பழிவாங்கவில்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது.

    என்னுடைய பிரசாரம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதா இல்லாததால் எல்லோரும் என்னுடைய பிரசாரத்தை கவனிப்பதால் அவருடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.



    கடந்த காலத்தில் நடந்த பிரசாரங்களும் இதுபோல்தான் இருந்தன. எனக்கு என்று ஒரு பாணி உள்ளது. விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். இன்னும் 2 நாளில் அதற்கான அறிவிப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Premalatha #Vijayakanth
    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரேமலதாவின் சர்ச்சை பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. #LoksabhaElections2019 #PremalathaVijayakanth
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்னும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

    அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்கிறார். ஆனால் அவர் பிரசாரத்தின்போது சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார்.


    கோவையில் பிரேமலதா பிரசாரத்தில் பேசும்போது, புல்வாமா தாக்குதலை நடத்திய தைரியமிக்க பிரதமர் மோடி என்றார். பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலை மோடி நடத்தினார் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாகிஸ்தானில் உள்ள பாலாகோட்டில் இந்திய விமானப்படை புகுந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. அதை அவர் சுட்டிகாட்டி பேசும்போது பாலாகோட் என்று சொல்வதற்கு பதில் புல்வாமா என்று கூறிவிட்டார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் அருகில் இருந்தபோதே ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என்று கூறினார்.

    பின்னர் பொள்ளாச்சி பகுதியில் பேசியபோது, பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா பேசும்போது, எம்.ஜி.ஆர் பாடல்களை மட்டுமே விஜயகாந்த் பாடுவார் என்றும் ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ என்ற பாடலை விஜயகாந்த் விரும்பி பாடுவார் என்றார். ஆனால் அந்த பாடல் சிவாஜிகணேசன் நடித்த ‘பச்சைவிளக்கு’ படத்தில் இடம் பெற்றதாகும்.

    இதைகேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் திகைப்படைத்தனர். பிரேமலதாவின் இந்த பிரசார சர்ச்சை பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அ.தி.மு.க- தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது நிருபர்களுக்கு பிரேமலதா பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களை ஒருமையில் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #LoksabhaElections2019 #PremalathaVijayakanth
    ராமேசுவரம்– ஏர்வாடி வரை பசுமை வழித்தடம் அமைக்கப்படும் என சாயல்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா கூறினார். #premalatha #admk #dmdk
    சாயல்குடி:

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க–பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சாயல்குடி மும்முனை சந்திப்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:–

    நமது கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வெற்றி உறுதியாகிவிட்டது. வெற்றியினை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். ராமேசுவரம்–ஏர்வாடி வரை பசுமை வழித்தடம் அமைக்கப்படும். கடற்கரை சாலை வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும். தி.மு.க. எங்களை அ.தி.மு.க. கூட்டணியில் சேர விடாமல் செய்தவற்கு பல வழிகளை கையாண்டது.

    முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது. 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் தான் இந்தியா உலக அரங்கில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. 18 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு தே.மு.தி.க. உறுதுணையாக நிற்கும். வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் பெறப்போவது உறுதி.

    தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின் வெட்டு இருந்தது. அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான் தமிழகத்தினை மின் மிகை மாநிலமாக மாற்றியது. இலங்கை படுகொலைக்கு முழு முதல் காரணமாக இருந்த தி.மு.க. வை அனைத்து தொகுதிகளிலும் பொது மக்கள் புறக்கணித்து அ.தி.மு.க.விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். #premalatha #admk #dmdk
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கனவுப்படி திருச்சியை 2-வது தலைநகராக்க எல்லா விதத்திலும் முயற்சிகள் எடுப்போம் என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #Loksabhaelections2019 #DMDK #PremalathaVijayakanth
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆண்டாள் வீதியில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருச்சி பாராளுமன்ற தொகுதியை அனைத்து விதத்திலும் மேம்படுத்த முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருச்சிக்கு அரசு கலை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி கொண்டு வருவோம். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுப்போம்.

    உலக பொருளாதார வீழ்ச்சியால் வீழ்ந்த தனியார் நிறுவனங்களை மீட்கவும், வேலை வாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஸ்டார்ட் அப் மையம்’ மற்றும் தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும்.


    அதேபோல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கனவுப்படி திருச்சியை 2-வது தலைநகராக்க எல்லா விதத்திலும் முயற்சிகள் எடுப்போம்.

    திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தி, அனைவருக்கும் தொழில் முனைவோர் ஆவதற்கு பயிற்சி வழங்குவோம். வெற்றி பெற்றதும் திருச்சியை அனைத்து விதத்திலும் முன்னேற்ற பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #DMDK #PremalathaVijayakanth
    தக்கலை அருகே பிரசாரத்தின் போது ஹாரன் ஒலித்து இடையூறு செய்ததால் பிரேமலதா ஆவேசமாக ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்று கூறினார். #premalatha #dmdk

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நேற்று பிரேமலதா பிரசாரம் செய்தார்.

    அவர் தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பில் திறந்த வேனில் நின்றபடி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு சேகரித்தார். பிரேமலதா தேர்தல் பிரசாரம் செய்த இடம் 4 சாலைகள் சந்திக்கும் பகுதி என்பதால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

    நேரம் செல்லச் செல்ல அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்தது. இதனால் 4 சக்கர, இரு சக்கர வாகனங்களில் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்துக்கிடந்ததால் பொறுமை இழந்த சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் ஹாரனை ஒலிக்கச் செய்தனர்.

    அவர்கள் தொடர்ந்து ஹாரனை ஒலித்தபடி இருந்த தால் பிரேதமலதா பேசுவதற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அவர் ஆவேசம் அடைந்தார்.

    அதை தனது பேச்சின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். பிரேமலதா பேசும்போது கூறியதாவது:-

    நான் தேர்தல் பிரசாரம் செய்வதை பார்த்து பயப்படுபவர்கள் இதுபோல ஹாரன் ஒலித்து இடையூறு செய்கிறார்கள். இது எல்லாம் என்ன சவுண்டு? இது கேவலமான செயல். நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்ய முறைப்படி அனுமதி வாங்கி உள்ளோம். அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

    நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம். இதை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். எங்களிடம் இது எல்லாம் நடக்காது.

    போர் களம் என்றால் நேருக்கு நேர் மோதுபவர்கள் தான் வீரர்கள். போருக்கு பயந்து பின்னால் நின்று கொண்டு ஹாரன் ஒலிப்பவர்கள் கோழைகள். நான் இங்கு 2 மணிநேரம் கூட பேசுவேன். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

    எதிர்ப்புகளை சந்தித்தே வளர்ந்த கட்சிதான் தே.மு.தி.க. நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். இந்த ஹாரன் ஒலி எங்களை ஒன்றும் செய்துவிடாது. இங்கு நடப்பதை பார்க்கும்போதே எதிர் அணியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது தெரிகிறது. பொன்.ராதா கிருஷ்ணன் வெற்றியும் உறுதியாகி விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரேமலதா தேர்தல் பிரசாரத்தின் போது அவரை பேசவிடாமல் ஹாரன் ஒலித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பிரசாரத்தை முடித்து சென்றபிறகு அந்த வழியாக போக்குவரத்து வழக்கம் போல நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பிரேமலதா அஞ்சுகிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள், ‘கேப்டன் எப்படி இருக்கிறார்?‘ என்று கேட்டனர். அதற்கு பிரேமலதா விஜயகாந்த், ‘கேப்டன் சூப்பராக உள்ளார். அவர் வெகு விரைவில் உங்கள் முன் வருவார். 5 நிமிடம் முன் கூட அவருடன் செல்போனில் பேசினேன். அப்போது அடுத்து எங்கு செல்கிறாய் என்று கேட்டார். நான் அஞ்சுகிராமம் என்றதும், அனைவரையும் கேட்டதாக கூறும்படி சொன்னார்’ என்று பதில் அளித்தார். உடனே அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

    எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது என்று பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பேசினார். #Premalatha #hraja #dmdk






    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, தே.மு.தி.க. கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டார். அப்போது அவர் பெரியகடை வீதியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவிற்கு ஆதரவு கேட்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:– 

    எங்கு பக்தி இருக்கிறதோ, அங்கே பண்பும் இருக்கும், பணிவும் இருக்கும். அதுபோல் பதவி வரும் போது, பணிவும் வேண்டும், துணிவும் வேண்டும். எச்.ராஜா, கேப்டன் விஜயகாந்தை போல் தைரியமானவர். அவர் மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர். தைரியமாக பேசுபவர்களிடம் உண்மை இருக்கும்.

    இந்தக் கூட்டணியில் எந்த குறையும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது, மேலும் சவாலை எதிர்க்கக் கூடிய வல்லமையும் இந்த கூட்டணிக்கு உள்ளது. பதவியோடும், பணிவோடும், தொகுதியையும், அதன் மக்களையும் காப்பாற்ற கூடிய நல்ல வல்லமையானவருக்கு நீங்கள் வாய்ப்பு தர வேண்டும். இந்த தொகுதியில் எச்.ராஜாவை சரித்திர வெற்றியாளராக ஆக்க வேண்டும்.

    உழைக்க தயாராக உள்ள வேட்பாளருக்கு உங்கள் வாக்கை அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த முறை பிரேமலதா கூட்டத்தினரை பார்த்து, எங்கள் கூட்டணி வேட்பாளர் எச்.ராஜாவுக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டளிப்பீர்களா, அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா, சிவகங்கை தொகுதியில் தாமரை வென்றது என்ற சரித்திரத்தை படைப்பீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு கூட்டத்தினர் ஆதரவாக பதில் கூறினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன். ஒன்றிய செயலாளர் வாசு, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், தே.மு.தி.க. தனசேகரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #Premalatha #hraja #dmdk
    காட்பாடியில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்று தி.மு.க.வினருக்கு தெரியும் என்று வேலூரில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். #vijayaprabhakaran #duraimurugan

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்தார்.

    வேலூர் எங்க அம்மாவோட சொந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த் தான். தற்போது ‘டாக் ஆப் தி டவுன்’ என வேலூரை தான் அழைக்கிறார்கள். வேலூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறிவிட்டது. ஏனென்றால் ஆட்சியிலே இல்லாவிட்டாலும் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அது யாருடையது என்று உங்களுக்கே தெரியும்.

    விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை என்றேன். தேவையில்லாமல் துரைமுருகன் சீண்டி பார்த்து விட்டார். அதன் விளைவை தெரிந்து கொண்டிருப்பார். ஸ்டாலின் சொல்கிறார் எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை என்று. இதை விஜயகாந்த் சொன்னால் பொருந்தும். உங்கள் உடல் முழுவதும் கனம் இருக்கிறது. அதனால் தான் மாட்டிக் கொண்டீர்கள். ஏ.சி.சண்முகம் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். அதை அவர் நிறைவேற்றுவார்.

    ஸ்டாலின் எதை எடுத்தாலும் எதிர்க்கிறார். என்னிடம் கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டார்கள். நான் அவர் ஒரு உளறும் புகார் பெட்டி என்று கூறினேன். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம். எதை எதிர்க்கனுமோ அதை தான் எதிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாடு வளரும். மத்தியிலும், மாநிலத்திலும் நம் ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால் தான் நமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், தே.மு.தி.க. மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #vijayaprabhakaran #duraimurugan

    நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என கோபியில் நடத்த தேர்தல் பொதுகூட்டத்தில் பிரேமலதா கூறியுள்ளார். #PremaLatha
    கோபி:

    கோபி பஸ் நிலையம் அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த கூட்டணி அமைய கூடாது என திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்தது. அதையெல்லாம் முறியடித்து வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது.

    கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக, தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. வெற்றி பெற்று செல்லும் எங்கள் கூட்டணி எம்.பி.க்கள் தமிழகத்திற்கான திட்டங்களை மத்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்துவார்கள்.

    மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி தான் அமையும். அப்போது நதிகளை இணைக்க வலியுறுத்துவோம். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை எடுத்துக்கூறி மறுபரிசீலனை செய்ய வலியறுத்துவோம்.

    உலக நாடுகளில் 4-வது வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. இதற்கு காரணமே பிரதமர் மோடி தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #PremaLatha
    அதிமுகவுடன் வருகிற தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். #PremalathaVijayakanth #DMDK #ADMK
    திருப்பூர் :

    தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிரு‌‌ஷ்ணனை ஆதரித்து பல்லடத்திலும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து வெள்ளியங்காடு நால்ரோடு, எம்.எஸ்.நகரிலும் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அதிமுக-தேமுதிக கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக-தேமுதிக கூட்டணியை உடைக்க தி.மு.க. பல்வேறு சூழ்ச்சிகளுடன் கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் மக்கள் போற்றும் கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. கருத்து கணிப்புகளில் இந்தியாவின் அடுத்த பிரதமராக மீண்டும் மோடி வருவார் என்று தெரிவிக்கிறது. நாட்டை காப்பதற்கு பிரதமர் மோடி வர வேண்டும். ஊழல்களின் மொத்த உருவமாக தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் இருந்ததை மக்கள் மறந்து விடவில்லை. மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளார்.

    அதிமுக, தேமுதிக கட்சிகள் ராணுவ கட்டுப்பாடு கொண்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் திரையுலகில் இருந்து வந்தவர்கள். மக்களுக்கு நல்லதை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டுமில்லாமல் வருகிற உள்ளாட்சி தேர்தல், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியுடன் தொடரும்.



    பல்லடம் பகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழில் அதிகம் உள்ளது. பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிரு‌‌ஷ்ணன் வெற்றி பெற்றதும் டெல்லி சென்று நெசவாளர்களின் பிரச்சினையை எடுத்துக்கூறி, ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காடா துணி தயாரிப்பு உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்.

    பின்னலாடை நகரான திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், 4-வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு. அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றால், போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பூரில் மெட்ரோ ரெயில் திட்டம், சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தப்படும்.

    தென்னிந்திய நதிகளை இணைத்தால் நாடு வல்லரசாகும். தமிழக நதிகள் இணைப்பு திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைப்படுத்தப்படும். வேற்றுமைகளை மறந்து தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக பணியாற்றி கொங்கு மண்டலம் அதிமுக வின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. #LSPolls
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்று திருச்சி தொகுதி தேர்தல் பார்வையாளர் அமித்குமார் மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சிவராசு முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

    இதில் தே.மு.தி.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்த முருகானந்தம், மாயக்கண்ணன், ரமணி, சந்தோஷ்குமார், இளங்கோவன், ராஜேந்திர குமார் ஆகியோர் தேர்தல் விதிமுறைகளின்படி உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்காததால் 6 பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #LSPolls
    ×