search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா"

    பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட் கூறியுள்ளார்.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சமீபத்தில் பேசியது. அப்போது இந்தியா மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்தது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட் ஐ.நா.சபையில் பேசியதாவது:-

    இங்கு இந்தியாவின் நிலைப்பாட்டை நான் திட்டவட்டமாக கூற விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருந்திருக்கும்.

    இது பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியது. பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக காலி செய்து வெளியேற வேண்டும்.

    இந்தியாவுக்கு எதிராக தவறான மற்றும் தீங்கிளைக்கும் பிரசாரங்களை பரப்புவதற்கு ஐ.நா. சபை வழங்கிய தளங்களை பாகிஸ்தானின் பிரதிநிதி தவறாக பயன்படுத்துவதும் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் தனது நாட்டின் சோகமான நிலையில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்ப வீணாக முயல்வதும் பாகிஸ்தானுக்கு உகந்தது அல்ல.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் பிரதிநிதி சில அர்ப்பமான கருத்துக்களை ஐ.நா.சபையில் தெரிவித்துள்ளார். அதற்கு நான் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும்.

    பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகள்,அண்டை நாடுகளுடனான உறவுகளை இந்தியா விரும்புகிறது. மேலும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின்படி நிலுவையில் உள்ள பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் இரு தரப்பும், அமைதியான முறையில் தீர்க்க உறுதிபூண்டுள்ளது.

    ஆனாலும் பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் மட்டுமே எந்த அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையும் நடத்த முடியும். அதுபோன்ற சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது.

    அதுவரை இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, உதவி செய்வது, தீவிரமாக ஆதரிப்பது போன்ற கொள்கைகளை பாகிஸ்தான் கொண்டுள்ளது என்பதை ஐ.நா. உறுப்பு நாடுகள் அறிந்திருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதையும் படியுங்கள்...நதி என்றால் இப்படி இருக்கவேண்டும்... டுவிட்டரில் வைரலாகும் புகைப்படம்

    சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி கண்டு வருவதை ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. #UN #IndiaPopulation
    நியூயார்க்:

    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.

    இந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஐ.நா. சபையின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அவை வருமாறு:-

    * 1969-ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள் தொகை 541.5 மில்லியனாக இருந்தது. 1994-ல் இது, 942.2 மில்லியனாக அதிகரித்தது. தற்போது (2019) இந்திய மக்கள் தொகை 136 கோடி ஆகும்.

    * 2010-2019 ஆண்டுகள் இடையே இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.

    * சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. 1994-ல் இது 123 கோடியாக இருந்தது. 1969-ல் 803.6 மில்லியனாக இருந்தது.

    2010-2019 ஆண்டுகள் இடையே சீனாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவுக்குத்தான் வளர்ந்து வந்துள்ளது.

    அதே நேரத்தில் இதே காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1.2 சதவீதம். ஆக சீனாவை விட இரு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது.



    * இந்தியாவில் 1969-ம் ஆண்டில் ஒரு பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம், 5.6 ஆக இருந்தது.

    மக்கள் தொகை வளர்ச்சி விகிதாச்சாரத்தை அப்போது குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது.

    அதன் பயனாக 1994-ல் இந்திய பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம் 3.7 ஆக குறைந்தது.

    தற்போது படித்தவர்கள், வேலை பார்க்கிறவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை என்பதை கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாக ஆக்கிவிட்டனர். இதன் காரணமாக தற்போது ஒரு பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம் 2.3 ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் மனிதர்களின் வாழ்நாள் நீடித்துக்கொண்டே வருகிறது.

    1969-ல் வாழ்நாள் என்பது 47 ஆண்டுகளாக இருந்தது. 1994-ல் இது 60 ஆண்டுகள் என்ற அளவில் உயர்ந்தது. தற்போது அது 69 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்போது 14 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் ஆகும். 10 முதல் 24 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கையும் 27 சதவீதமாகவே உள்ளது. ஆனால் 15 முதல் 64 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை 67 சதவீதமாக உள்ளது.

    65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக உள்ளது.  #UN #IndiaPopulation

    இந்தியாவின் எல்லைதாண்டிய வரம்புமீறல் பற்றி ஐ.நா.வில் புகார் செய்யப்போவதாக பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. #IAFAttack #UN
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் துரிதமான, துல்லியமான வான் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் என அதிக அளவிலான எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.



    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அவசரமாக உயர்நிலை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் மக்கள் சமுதாய தலைவர்கள், ராணுவ தலைவர் ஜெனரல் காமர் ஜாவித் பாஜ்வா உள்ளிட்ட ராணுவ தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி இந்தியாவின் தாக்குதல் குறித்தும், தற்போது அங்குள்ள சூழ்நிலை குறித்தும் விளக்கினார்.

    பின்னர் கூட்டத்தில், “இந்தியாவின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய வரம்புமீறல் குறித்து உடனடியாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நட்பு நாடுகளிடம் புகார் தெரிவிப்பது” என தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச அமைப்புகளிடம் இந்த பிரச்சினையை எழுப்பும் வகையில் அவர்களை தொடர்புகொள்ளும் நடவடிக்கைகளில் வெளியுறவு மந்திரி குரேஷி ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அதோடு பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கூட்டுக்கூட்டத்தை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    உயர்நிலை கூட்டத்தையொட்டி முன்னதாக வெளியுறவு மந்திரி குரேஷி தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் முடிந்ததும் அவர் கூறும்போது, “தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடவும், இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக திருப்பி தாக்கவும் பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது” என்றார்.

    தேசிய பாதுகாப்பு குழுவின் சிறப்பு கூட்டத்தையும் பிரதமர் இம்ரான்கான் கூட்டினார். அந்த கூட்டத்தில் அவர் கூறும்போது, “ஆயுத படைகளும், பாகிஸ்தான் மக்களும் எந்த நடவடிக்கைகளுக்கும் தயார்நிலையில் இருக்க வேண்டும்” என்றார்.

    தேசிய பாதுகாப்பு குழு, இந்தியா அறிவிப்பின்றி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதால், இதற்கு பாகிஸ்தான் உரிய நேரத்தில், உரிய பதிலடி தரும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. #IAFAttack #UN

    காஷ்மீர் தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. #PulwamaAttack #UN #AntonioGuterres
    நியூயார்க் :

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி துணை ராணுவவீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்தியா மட்டும்இன்றி உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. அமெரிக்கா, ரஷியா உள்பட பல்வேறு உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன.

    ஐ.நா.சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்ததோடு, தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்தநிலையில் காஷ்மீர் தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 40 துணை ராணுவவீரர்களை பலி கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமான செயல். இந்த தாக்குதலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலை ஏற்பாடு செய்தவர்கள், அதற்கு நிதியுதவி அளித்தவர்கள், அதனை வழிநடத்தியவர்கள் என அனைத்து தரப்பினரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளும், புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளன. இந்த மோசமான அனுபவத்தில் இருந்து இந்திய மக்களும், அரசும் விரைவில் மீளவேண்டும்.

    உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் ஏற்க முடியாது. எங்கே நடந்தாலும், எதற்காக நடந்தாலும், எப்போது நடந்தாலும் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்க முடியாது.

    பயங்கரவாத நடவடிக்கைகளால் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் போது அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு உட்பட்டு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் ஆசாரின் பெயரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கைக்கு, சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. #PulwamaAttack #UN #AntonioGuterres 
    புல்வாமா தாக்குதலை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டதை இந்தியா வரவேற்றுள்ளது. #PulwamaAttack #UN
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 40 துணை ராணுவவீரர்களை பலிகொண்ட பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது என கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டது. எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் ஏற்க முடியாது என்றும், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்தது.



    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டதை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் டுவிட்டரில் “புல்வாமா தாக்குதலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்மையாக கண்டித்தது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கிறது” என்று கூறி உள்ளார். #PulwamaAttack #UN
    புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்தியா மிரட்டல் விடுத்ததை அடுத்து ஐ.நா.சபை தலையிடும் படி பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி கேட்டுக்கொண்டுள்ளார். #PulwamaAttack
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இது இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டெரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.



    அதில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு காஷ்மீரை சேர்ந்தவரே காரணம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பழி சுமத்தி அப்பகுதியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

    எனவே, இதில் ஐ.நா.சபை தலையிட்டு இப்பகுதியில் அமைதி ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்த வேண்டும்.

    பதட்டத்தை தணிக்க பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சு நடத்த இந்தியாவை வற்புறுத்த வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. #PulwamaAttack #UN
    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
    நியூயார்க்:

    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது.

    இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த மாதம் 28-ந்தேதி துருக்கி சென்றார். அங்கு அவர் கடந்த 3-ந்தேதி வரை பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தினார். அதனை தொடர்ந்து தனது விசாரணை குறித்த முதல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.



    அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை கவலை அளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டுள்ளேன். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்”

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
    பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தின் அருகே அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன 300 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #Brazildamcollapse #BrazildamcollapseToll
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணைக்கட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 

    அப்போது திடீரென அந்த அணை உடைந்தது. உடனே அணையில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது.

    இச்சம்பவத்தில் இரும்புதாது சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த மற்ற பணியாளர்களை மீட்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில் மீட்புப் பணிகளில் உதவி செய்வதற்காக இஸ்ரேல் நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    பிரேசில் அதிபர் ஜைர் மோல்சோனாரோ ஹெலிகாப்டர் மூலம் சென்று விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட்டார்.

    இன்று மாலை நிலவரப்படி இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன சுமார் 300 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கோர விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ், ரஷியா பிரதமர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Brazildamcollapse #BrazildamcollapseToll 
    இந்தியாவில் இருந்து ரோகிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது தொடர்பாக ஐநா அகதிகள் முகமை விளக்கம் கேட்டுள்ளது. #UNHCR #RohingyaRefugees
    நியூயார்க்:

    மியான்மரில் இருந்தும் வங்கதேசத்தில் இருந்தும் ரோகிங்கியா முஸ்லிம்கள் ஏராளமானோர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து தங்கியிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகமையின் தரவுகளின்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் ரோகிங்கியா முஸ்லிம்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இவர்கள் அனைவரும் ஐ.நா. அகதிகள் முகமையில் பதிவு செய்துள்ளனர். கைது நடவடிக்கைகள் மற்றும் நாடு கடத்தல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக இவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.



    இந்த அகதிகள் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என இந்திய அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக நுழைந்ததாக  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ரோகிங்கியா முஸ்லிம்கள் 7 பேர் கடந்த ஆண்டு இறுதியில் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது மியான்மரின் ரக்கினே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஐநா கவலை தெரிவித்துள்ளது.

    இதுபற்றி ஐநா அகதிகள் முகமையின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், “அடைக்கலம் கேட்டுள்ள ரோகிங்கியா முஸ்லிம்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு 2013ம் ஆண்டில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வந்தவர்கள் இப்போது நாடு கடத்தப்பட்டிருப்பதாக ஐநா அகதிகள் முகமை கூறியுள்ளது.

    “தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரோகிங்கியா அகதிகளை சந்தித்து, அவர்களின் சூழ்நிலைகளை அறிந்துகொள்ளவும், தாய் நாட்டிற்கு திரும்புவது தொடர்பான அவர்களின் விருப்பத்தை கேட்கவும் அனுமதிக்கும்படி தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. ஆனால், இந்திய அதிகாரிகளிடம் இருந்து பதில் வரவில்லை. அகதிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும். மேலும், எந்த சூழ்நிலைகளில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என ஐநா அகதிகள் முகமை வலியுறுத்தி உள்ளது. #UNHCR #RohingyaRefugees
    மதநிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீவியின் வழக்கறிஞரை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியதாக ஐ.நா. மறுத்துள்ளது. #AsiaBibi #UN #LawyerSaifulMulook
    நியூயார்க்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்புகிறது.



    இற்கிடையே ஆசியா பீவி தரப்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் சைபுல் மாலூக் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.

    பாகிஸ்தானில் இருந்து நெதர்லாந்தின் தி ஹேக் நகருக்கு சென்றடைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, தனக்கு ஐநா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் பாதுகாப்பு அளித்ததாகவும், பின்னர் தனது விருப்பத்திற்கு மாறாக வெளிநாடு செல்லும்படி விமானத்தில் ஏற்றி அனுப்பியதாகவும் கூறினார்.

    இந்த குற்றச்சாட்டை ஐநா செய்தித் தொடர்பாளர் எரி கனேகோ மறுத்துள்ளார். வழக்கறிஞர் சாய்புல் முலூக் கேட்டுக்கொண்டதால் பாகிஸ்தானில் உள்ள ஐநா அலுவலகம் அவருக்கு உதவி செய்ததாகவும், நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் ஐநா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். #AsiaBibi #UN #LawyerSaifulMulook
    வருங்காலத்தில் இந்தியாவை கடுமையான வெப்பம் தாக்கும் என்று பருவ நிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #climatechange #indiahitweaves #hitweaves
    புதுடெல்லி:

    சூரிய ஒளி பூமியை நேரடியாக தாக்காமல் இருக்க பூமி கோளத்தை சுற்றி குடை போல ஓசோன் படலம் இருக்கிறது.

    நாம் எரிக்கப்பயன்படுத்தும் பொருட்களால் கார்பன் வெளியேறி அவை ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன. இதனால் சூரிய வெப்பத்தின் தாக்குதல் பூமியில் அதிகமாகிறது. இது பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தி, பல்வேறு பாதிப்புகளை உருவாக்குகிறது.

    பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்காக ஐ.நா.சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக ஐ.நா.சபையின் மேற்பார்வையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட பருவ நிலை மாற்றக்குழு செயல்பட்டு வருகிறது.

    இந்த குழு பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    பருவ நிலை மாற்றத்தை எப்படி கட்டுப்படுத்துவது? இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை இந்த குழு தயாரித்துள்ளது.

    வருகிற டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் உள்ள கடோவைஸ் நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது.

    இந்த ஆய்வு அறிக்கை இப்போது வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இந்தியாவை கடுமையான வெப்பம் தாக்கும் என்று அதில் கூறியுள்ளனர்.


    ஏற்கனவே பருவநிலை மாற்றம் காரணமாக 2015-ம் ஆண்டு இந்தியாவை கடுமையான வெப்பம் தாக்கியது. அப்போது 2,500 பேர் உயிர் இழந்தனர். அதே போன்ற வெப்ப தாக்குதல் இனிமேல் இருக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

    கடந்த 150 ஆண்டில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழிற்சாலைகள் வந்த பிறகு அதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களால் கார்பன் வெளியேறி இந்த மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    150 ஆண்டுகளில் டெல்லியின் வெப்ப நிலை 1 டிகிரி அதிகரித்து இருக்கிறது. மும்பையில் 0.7 டிகிரியும், கொல்கத்தாவில் 1.2 டிகிரியும், சென்னையில் 0.6 டிகிரியும் அதிகரித்து உள்ளன.

    தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதால் 2030-ம் ஆண்டு வாக்கில் வெப்பநிலை மேலும் 1.5 டிகிரி அதிகரிக்கும் என்றும் பின்னர் 2052-க்குள் அதற்கு மேல் 1.5 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

    எனவே வெப்ப நிலையை குறைப்பதுடன் 1.5 டிகிரிக்கு மேல் அதிகரித்து விடாமல் தடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்திய துணைக்கண்டத்தை பொறுத்தவரையில் கொல்கத்தா, கராச்சியில் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறுகின்றது. வெப்பநிலை 2 டிகிரி வரை அதிகரித்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற விவரங்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    அதன் படி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கடுமையான வெப்பநிலை நிலவும். மலேரியா, டெங்கு போன்ற கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவும். 2050-ம் ஆண்டு வாக்கில் 35 கோடி மக்கள் கடுமையாக பாதிப்புகளை சந்திக்க நேரிடும். விவசாய உற்பத்தி கடுமையாக பாதிப்படையும், இதனால் விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் இடம் பெயர்வு போன்றவையும் நிகழும். கடலில் வெப்ப நிலை அதிகரித்து உயிர் இனங்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும். காடுகள் தீப்பற்றி எரியும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக பருவ நிலை மாற்றம் நிபுணர் ஆர்தர் வெயின்ஸ் கூறும் போது, பருவ நிலை மாற்றத்தால் பல கோடி மக்கள் உயிரிழப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.

    வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் கார்பன் வெளியீடு 45 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறினார்கள். வெப்ப நிலை அதிகரிக்கும் போது தாவரங்கள் வளர முடியாத நிலை உருவாகியும், அரிசி, கோதுமை, மக்காச்சோளம் தானியங்கள் விளைய முடியாமல் கடும்பாதிப்பை ஏற்படும். இதனால் உணவு பற்றாக்குறையால் பஞ்சம் ஏற்படும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது.

    ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜாய்ஸ்ரீராய் கூறும் போது, நிலக்கரியை மின் உற்பத்திக்கு அதிகமாக பயன்படுத்துவதால் கார்பன் வெளியீடு மிக அதிகமாக இருக்கிறது.

    இந்தியாவில் மட்டும் 92 கோடி டன் கார்பன்கள் அனல் மின்நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதன் மூலம் வெளியேறுகிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. மாசு ஏற்படாத மாற்று மின் உற்பத்திக்கு நாம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்று கூறினார். #climatechange #indiahitweaves #hitweaves
    சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு ’பூமியின் சாம்பியன்’ விருதினை நாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் நாளை வழங்கி கவுரவிக்கிறார். #PMModi #ChampionsoftheEarth
    புதுடெல்லி:

    சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்‘ என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்த ஆண்டு (2018) உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 6 பேரை ஐ.நா.சபை தேர்வு செய்து உள்ளது.

    சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று வழிநடத்துவதற்காகவும், மேலும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பது என்று உறுதி ஏற்று செயல்பட்டு வருவதற்காகவும் இந்த விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் அவருக்கு ‘சாம்பியன் ஆப் தி எர்த்‘ விருதினை வழங்கி கவுரவிக்கிறார்.



    இதற்கிடையில், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். #PMModi #ChampionsoftheEarth  
    ×