search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • அலங்காநல்லூர் அருகே விநாயகர், முத்தாலம்மன் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டியில் விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார், அம்மச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. 4 கால யாக பூஜையுடன் கணபதி, மஹா சுதர்சன ஹோமம், விநாயகர், மஹாலட்சுமி, கோ பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித தலங்களில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட நீர் கோவிலை வலம் வந்தது. பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தகவல்
    • மின்வயர்களை, புதைவடங்களாக மாற்றும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    திமுக தணிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி யான செய்தி வந்துள்ளது. 23.08.2022 அன்று மின்வாரியத்திற்கு நான் அளித்த புகார் மனுவை அடிப்படை யாகக்கொண்டு, கடந்த 27.10.2022 அன்று தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலா ஜியை தலைமை செயலகத் தில் நேரில் சந்தித்து குமரி மாவட்டத்தில் இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களின் தேர் பவனி செல்லும் பகுதிக ளில் அமைந்துள்ள மின்வ யர்களை, புதைவடங்களாக மாற்றுவது தொடர்பாக கோரிக்கைமனு அளித்திருந் தேன். மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை தமிழ் நாடு அமைச்சர் செந்தில்பா லாஜி தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக் கும்படி கேட்டுக்கொண்டார். தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்து றையின் கீழ் இயங்கி வரும் நாகர்கோவிலில் அமைந் துள்ள நாகராஜா கோவில், கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசு வாமி கோவில், வடிவீஸ்வ ரத்தில் அமைந்துள்ள அழ கம்மன்கோவில் மற்றும் பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேர் ஓடும் பகுதியில் உள்ள மின்வயர்களை, புதைவடங் களாக மாற்றும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுமதிக் காக சமர்ப்பிக்கப்பட்டுள் ளது. அனுமதி பெற்ற உடன் வாரிய விதிமுறைப்படி பணிகள் தொடங்கப்படும் என்பதை அரசாங்க தரப் பில் இருந்து கடிதம் மூல மாக தெரிவித்துள்ளனர்.

    பக்தர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு என்னுடைய கோரிக்கையின் அடிப்ப டையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழ் நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • திருமணத்தடை அகலும்.
    • ஏவல், பில்லி, சூனியம் விலகும்.

    திருவனந்தபுரம் அருகே தொழுவன்கோடு என்ற இடத்தில் சாமுண்டிதேவி கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் அன்னை, மக்களுக்கு அருள்வழங்கி காத்து வருகிறார். இந்த தலத்தில் அந்தணர் அல்லாதவர்களும், அம்மனுக்கு பூஜை செய்யும் சிறப்பு மிக்க வழக்கம் உள்ளது. அன்னை சாமுண்டிதேவியானவர் பொன்னிற தகடுகளால் பொதியப்பட்ட கருவறைக்குள் வீற்றிருந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி வருகிறார்.

    தல வரலாறு :

    தொழுவன்கோடு ஆலய வரலாறு பற்றி கூறும் முன்பு, அதோடு தொடர்புடைய பண்டைய கால திருவிதாங்கூர் மன்னர் குடும்ப வரலாற்றையும் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. அபூர்வ சக்திமிக்க சாமுண்டி தேவி ஆலயம் தோன்றிய முக்கிய காரணமாக திகழ்ந்தவர், மன்னர் மார்த்தாண்டவர்மா. அவர் வீர பராக்கிரமசாலியாகவும், திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரிந்து வரும் பத்மநாப சுவாமியின் பரம பக்தனாகவும் இருந்ததும், திருவிதாங்கூர் நாட்டை விரிவுபடுத்தி வலிமை மிக்கதாக மாற்றியமைத்தவர்.

    ஆதி காலம் முதல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில், மருமக்கள் தாயகம் என்னும் வழக்கம் நிலை கொண்டிருந்தது. ஒரு மன்னர் ஆட்சி காலத்தின் பின்னர், மன்னரின் தங்கை மகன்தான் (மருமகன்) ஆட்சிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் மார்த்தாண்டவர்மா ஆட்சிக்கு வரும் முன், அவரின் தாய்மாமன் ராமவர்மா மன்னராக இருந்தார்.

    ஒரு முறை மன்னர் ராமவர்மா, சுசீந்திரத்தில் நடைபெறும் தேரோட்டத்தைக் காணச் சென்றார். அப்போது கோவிலில் அழகே உருவான அபிராமி என்றப் பெண்ணைச் சந்தித்தார். அவள் மீது மையல் கொண்ட மன்னர், அவளைத் திருமணம் செய்ய நினைத்து, தனது மனதைத் திறந்து அபிராமியிடம் சொன்னார்.

    அபிராமி ஓர் நிபந்தனையை முன்வைத்தாள். 'திருமணம் செய்திட எனக்கு சம்மதமே. ஆனால் என் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்குதான் அரசு உரிமை வழங்க வேண்டும். மக்கள் தாயத்தை நிலை நிறுத்த வேண்டும்' என்றாள்.

    பரம்பரை வழக்கமான மருமக்கள் தாயக வழக்கத்தை மாற்றுவது கடினம். உரிமை மருமகனுக்கு என்ற வழக்கத்தை மீற முடியாது. வேறு எதுவாயினும் கேள்' என்றார் மன்னர் ராமவர்மா.

    ஆனால் அபிராமி ஒத்துக்கொள்ளவில்லை. 'மன்னா! எந்த நாட்டிலும் தந்தையின் சொத்துக்கு உரிமை பிள்ளை செல்வங்களுக்கல்லவா? வரலாறுகளிலும் புராணங்களிலும் அதுவே கூறப்பட்டிருக்கின்றன. தங்களுடைய நாட்டில் மட்டும் இதென்ன வழக்கம்?' எனக்கூறி மருமக்கள் தாயகத்தை அபிராமி புறக்கணித்தாள். தன் கருத்தில் பிடிவாதமாக நின்றாள்.

    மன்னரும் வேறு வழியின்றி, அவள் மீது கொண்ட மையல் காரணமாக நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மணம் முடித்து வாழ்ந்து வந்தனர். ராமவர்மா- அபிராமி தம்பதியருக்கு பப்பு தம்பி, ராமன்தம்பி, உம்மணி தங்கை என்ற மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்தனர். அதே போல் ராமவர்மாவின் சகோதரி உமா தம்பதியருக்கு மார்த்தாண்டவர்மா பிறந்து வளர்ந்து வந்தார்.

    மருமக்கள் தாயகம் நிலை நாட்ட மன்னர் குடும்பத்தினர் முயன்றனர். மக்கள் தாயகத்தை நிலை நாட்ட அபிராமியும், அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் மார்த்தாண்டவர்மா, தனது முறைப்பெண் உம்மணி தங்கையுடன் காதல் கொண்டிருந்தார். இதனை அவளது சகோதரர்கள் கண்டித்தனர். அவர்களின் காதலை பல வழிகளில் தடுத்தனர்.

    மக்கள் தாயகத்தை நிலை நாட்டும் பிரிவில் எட்டு வீட்டுப் பிள்ளைகள் என ஒரு குழு தீவிரமாக ஒத்துழைத்தது. எட்டு வீட்டு பிள்ளைகளில் வீரபராக்கிரமசாலியாகவும், சதி திட்டங்கள் வகுப்பதில் வல்லவராகவும் இருந்த கழக்கூட்டத்து பிள்ளை என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஒரு முறை மார்த்தாண்டவர்மா படைவீரர்கள், கழக்கூட்டத்தப் பிள்ளையைப் பிடிக்க முயன்றனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை ஒரு காட்டில் சென்று மறைந்தார். மார்த்தாண்டவர்மா படையினரும் அவரை காட்டுக்குள் விரட்டிச் சென்றனர். பிள்ளையைக் காணவில்லை. அங்கு ஒரு பெரிய நாகப்பாம்பு படமெடுத்து, படைவீரர்களை தடுத்து நின்றது. இதனால் படைவீரர்கள் திரும்பி வந்து விட்டனர்.

    மற்றொரு முறை விரட்டி வரும் படைவீரர்களுக்கு பயந்து, மேனம் குளம் என்ற இடத்தில் உள்ள மீன குடிசைக்குள் புகுந்தார் கழக்கூட்டத்துப் பிள்ளை. வீரர்களும் அந்த குடிசைக்குள் புகுந்தனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை அங்கு இல்லை. இதனால் படைவீரர்கள் குடிசையை உடைத்தெறிந்தனர். யாரும் இல்லாத வீட்டுக்குள் இருந்து வயதான மீனவப் பெண் ஒருத்தி, தலையில் கூடையை சுமந்தபடி வெளிப்பட்டாள். இதனைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்த மார்த்தாண்டவர்மா, தன் பக்கம் துணைபுரியும் ராமைய்யன் என்பவரிடம் இதற்கு காரணம் கேட்டார்.

    அவரோ, 'கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் (சண்டை பயிற்சி வழங்கும் இடம்) ஓர் அரிய சக்தியாக ஆதிபராசக்தி குடியிருக்கிறாள். கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் பயிற்சி ஆசானாக 'பணிக்கர்' என்னும் திறமைசாலி இருக்கிறார். அங்கே சாமுண்டி வடிவில் அன்னை புவனேஸ்வரியும் அமர்ந்திருக்கிறாள். தேவியையும், குருவான பணிக்கரையும் அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் கழக்கூட்டத்துப் பிள்ளையை வெற்றிபெற முடியாது' என்றார்.

    இதனைக் கேட்ட மார்த்தாண்டவர்மா, அரண்மனை ஜோதிடரை வரவழைத்து ஜோதிடம் கணித்துப் பார்க்கச் சொன்னார்.

    'குருவையும், அம்மனையும் அங்கிருந்து அகற்ற, பத்மநாப சுவாமியின் அருளைத் தேடுங்கள்' என்றார் ஜோதிடர்.

    அதன்படி மார்த்தாண்டவர்மா பத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்று மனமுருக வேண்டினார்.

    மும்மூர்த்திகள் தரிசனம் :

    வழிபடுவோரை கைவிடாத பரந்தாமன், மார்த்தாண்டவர்மாவை காத்திட முன்வந்தார். தன் செயலுக்கு பிரம்மதேவனையும், சிவபெருமானையும் துணைக்கு சேர்த்துக்கொண்டார். மூவரும் இரவு நேரத்தில் பணிக்கர் நித்திரையில் இருக்கும் போது, சாமுண்டியைச் சந்தித்தனர். 'தேவி இந்த வேணாட்டிற்காகவும், பக்தர்களின் நலன் காக்கவும் வேண்டி, இந்த களரியை விட்டு வேறிடம் சென்று குடியிருக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.

    அன்னையும், 'நல்லது. தங்கள் சித்தப்படியே ஆகட்டும். ஆனால் எனது அருள்வடிவம், இனி எங்கே பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ, அங்கு மும்மூர்த்திகளான நீங்கள் மூவரும் முன்னிலை வகிக்க வேண்டும். மேலும் பிரதிஷ்டை வருடாந்திர தினத்தில் மூவரும் வருகை தந்து அருள்பாலிக்க வேண்டும்' என்றாள்.

    அதற்கு திருமூர்த்திகளும் ஒப்புதல் தெரிவித்து மறைந்தனர். இதையடுத்து சாமுண்டி தேவியான, புவனேஸ்வரி தனது பரம பக்தரான குரு பணிக்கருடன், கழக்கூட்டத்துப் பிள்ளையிடம் கூட தெரிவிக்காமல் அங்கிருந்து பயணமானாள். தேவியின் உபதேசப்படி, பணிக்கர் மேடு பள்ளங்களையும், நீர்நிலைகளையும் கடந்து, சாமுண்டி சிலையுடன் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தார். மும்மூர்த்திகளும் அசரீரியாக குறிப்பிட்ட இடத்தில், சாமுண்டியை குடியிருத்தினார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தொழுதபடி நிற்கும் இந்தக் காடு, காலப்போக்கில் தொழுவன்காடு என்று மாறி புனித தலமாக உருவெடுத்தது.

    பணிக்கர் வழக்கப்படி சாமுண்டி தேவியை பூஜித்து வந்தார். பொழுது புலரும் நேரத்தை காட்டிலிருந்த ஒரு கோழி உணர்த்தியது. அதனையே தேவிக்கு சமர்ப்பித்தார் பணிக்கர். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. பக்தர்கள் அன்னைக்கு கோழியை சமர்ப்பித்து வேண்டுதல் செய்கின்றனர்.

    கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் இருந்து சாமுண்டிதேவி மாற்றிடம் சென்றதும், மார்த்தாண்டவர்மா எட்டு வீட்டு பிள்ளைகளையும் வென்று சிறந்த ஆட்சியை தொடர்ந்தார். தொழுவன்காடு என்பது தொழுவன்கோடு என்றானது. அந்த இடத்தில் இருந்து அன்னையானவள், மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    இந்த ஆலயத்தில் உள்ள அன்னையை மனமுருக வேண்டினால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் தீராத நோய்கள் தீரும். ஏவல், பில்லி, சூனியம் விலகும். திருமணத்தடை அகலும். இந்த ஆலயத்தில் திருவிழாக்காலங்களின் போது 'ஔடத கஞ்சி' வழங்கப்படுகிறது. இது நோய் தீர்க்கும் பிரசாதமாக உள்ளது.

    இந்த ஆலயத் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவில், இறுதிநாளான 12-ந் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அதிகாலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடைதிறந்திருக்கும்.

    நவக்கிரக சன்னிதி :

    தொழுவன்கோடு சாமுண்டி தேவி ஆலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, கந்தர்வன், அனுமன், நாகராஜா, நாகயட்னி, துர்க்காதேவி ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. தேவியின் கருவறைக்கு அருகில் கருங்காளி தேவிக்கு தனிக் கோவில் இருக்கிறது. கணபதி மற்றும் நாகராஜா சிலைகள் பஞ்சலோகத்தால் ஆனவை என்பது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரக சிலைகள் பெரிய உருவத்தில் தங்கள் வாகனங்களுடன் இருப்பதைக் காணலாம். இங்கு வந்து சனி தோஷத்திற்காக வழிபட்டு நிவாரணம் பெற்றுச் செல்பவர்கள் ஏராளம்.

    அமைவிடம் :

    திருவனந்தபுரம் கிழங்கு கோட்டையில் இருந்து வடகிழக்காக 7 கிலோமீட்டர் பயணித்தால் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவிலை அடையலாம்.

    • மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது
    • ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார்.

    மூலவர் - சுப்பிரமணிய சுவாமி/தண்டாயுதபாணி/மருதாசலமூர்த்தி (மருதப்பா)

    அம்மன்/தாயார் - வள்ளி, தெய்வயானை

    தல விருட்சம் - மருதமரம்

    தீர்த்தம் - மருத தீர்த்தம்

    பழமை சுமார் - 800 ஆண்டுகள்

    ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார். இதில் கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

    இந்த கோவில் கோவை நகரில் இருந்து வடமேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில், தரை மட்டத்தில் இருந்து 500 அடி உயரத்தில் மலையில் அமைந்து உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்த மருதமலை கோவிலின் 3 புறங்களிலும் மயில் தோகை போல விரிந்து மலை காட்சி அளிக்கிறது. இதனால் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து அருள்பாலிப்பது போன்ற காட்சி மனக்கண் முன் தோன்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

    மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் மருத மால் வரை, மருத வரை, மருத வேற்பு, மருதக் குன்று, மருதலோங்கல், கமற் பிறங்கு, மருதாச்சலம், வேள் வரை, என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.

    மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் மருத மரங்கள் நிறைந்த மலைக்கு தலைவன் என்பதாகும். மருத மலையான், மருதப்பன், மருதாச்சல மூர்த்தி போன்ற பெயர்களாலும் இந்த மருதமலையில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

    புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.

    இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

    மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

    மருதமலையில் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பிரதிஷ்டை செய்த லிங்கம்

    கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பழனி அருகே உள்ள இடும்பன் மலையில் அமர்ந்து இடும்பன் சுவாமிகளை வழிபட்டு வருவார். இவர், கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் உள்ள இடும்பன் சுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இப்படி வழிபாடு செய்ய வரும் போது தான் மருதமலையில் உள்ள இடும்பன் கோவிலின் பின்புறம், இடும்பனை சுற்றி வரும் பிரகாரத்தில் மருதமரத்தார் மருந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.

    இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நோய்களை தீர்த்து அனைத்து நலங்களையும், வளங்களையும் வழங்குவதற்காக இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக பக்தர்களிடம் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் தெரிவித்துள்ளார். தற்போது மருதமலையில் இவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த லிங்கத்தை பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.

    தினமும் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழிபாடு செய்யலாம். மருதமலைக்கு வரும் பக்தர்கள் முதலில் அங்குள்ள தான் தோன்றி விநாயகர், இடும்பன் சுவாமிகள், மருந்தீஸ்வரர் லிங்கத்தை தரிசித்து விட்டு தான் முருகப்பெருமான், பாம்பாட்டி சித்தரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதன் மூலம் மருந்தீஸ்வரர் லிங்கம் பக்தர்களின் மனங்களில் பக்தியை சித்தியாக்கி பரவசம் கொள்ள செய்வதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மருதமரத்தார் மருந்தீஸ்வரர் லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • கோவிலின் கொடிமரம் சாய்ந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
    • 2001-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், பேராவூரணியில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் அமைந்துள்ளது புராதனவனேஸ்வரர் கோவில்.

    கி.பி 7-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் கால கட்டிட பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை போன்றவை உள்ளன. இக்கோவிலில் திருச்சுற்று மாளிகை காணப்படுவது கூடுதல் சிறப்பு. முன்மண்டபத்தில் இரு சிற்பங்கள் அஞ்சலி முத்திரையுடன் காணப்படுகிறது.

    கல்வெட்டு செய்திகள்

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் பாண்டியர், சோழர், நாயக்கர் கால கல்வெட்டுகளும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் காலத்தால் முதன்மையானது பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனின் கல்வெட்டு ஆகும். இதன் காலம் கி.பி.878 ஆகும். இக்கல்வெட்டு வரிகள் மிகவும் சேதமடைந்துள்ளது. இருப்பினும் மன்னன் பெயரும், ஊரின் பெயரும் தெளிவாக உள்ளது. இதில் ஊரின் பெயர் திருச்சிற்றேமம் என காணப்படுகிறது.

    அடுத்ததாக முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டு காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 936 ஆகும். இதுவும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதில் இறைவனை திருச்சிற்றேமத்து மகாதேவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது. பராந்தக சோழனின் மற்றொரு கல்வெட்டில் நக்கநாச்சி என்பவர், தன் மகளின் சார்பாக கோவிலுக்கு 95 ஆடுகளை தானமாக வழங்கிய செய்தியை கூறுகிறது.

    நிலம் கொடை

    முதலாம் ராஜராஜனின் கல்வெட்டும் இக்கோவிலில் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 995. இக்கல்வெட்டு இறைவனுக்கு திருஅமுது படைக்க நிலம் தானம் வழங்கப்பட்டது பற்றி கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு வாழ்வூரை சேர்ந்த பூடி உத்தமன் இறைவனுக்கு திருஅமுது படைக்க நிலம் கொடையளித்த செய்தியை காட்டுகிறது.

    முதலாம் ராஜேந்திரன் காலத்து கல்வெட்டு ஒன்றும் கோவிலில் உள்ளது. இதன் காலம் கி.பி.1016 ஆகும். இதில் கோவிலில் அந்தி விளக்கு ஏற்பாடு செய்த செய்தி காணப்படுகிறது.

    முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 1216. இதில் புராதனவனேஸ்வரருக்கு தேவதானமாக 100 பணத்திற்கு சாமந்த மழவராயன் என்பவன் நிலம் விற்ற செய்தி காணப்படுகிறது.

    மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டில், திருச்சிற்றேமம் குளத்துக்கு நீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்க நிலம் வழங்கிய செய்தியும், மற்றொரு கல்வெட்டில் இறைவிக்கு அமுது படைக்க நிலம் வழங்கிய செய்தியும் உள்ளது. இதில் நிலம் வழங்கிய நபர், மலை மண்டலத்து குலமுக்கிலை சேர்ந்த குதிரை வியாபாரி குலோத்துங்க சோழன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1253 ஆகும்.

    மற்றொரு கல்வெட்டில் நெடுவாசலை சேர்ந்த உடையான் அறங்காவலர்(என்ற) குதிரை ஆண்டார் என்பவர் நிலம் தானம் வழங்கிய செய்தி காணப்படுகிறது. இக்கோவிலின் ஒரு தூண் கல்வெட்டில் அந்த தூண் தானம் வழங்கியவா் மிட்டான் ராமன், மடையால் புரையூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாடல் பெற்ற தலம்

    திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் சிற்றேமம் உடைய என பாடியுள்ளார். இது இத்தலமான திருச்சிற்றம்பலத்தையே குறிக்கும். ஆனால், இப்பதிகத்துக்கு உடைய கோவில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள சித்தாமூரில் அமைந்துள்ள பொன்வைத்தநாதர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இக்கோவிலில் உள்ள சோழர் கால கல்வெட்டில் அவ்வூரின் பெயர் சிற்றாய்மூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் இல்லை என்பது உறுதியாகிறது.

    மேலும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ஊரின் பெயர் திருச்சிற்றேமம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகம் இக்கோவிலையே குறிக்கிறது என்றும் இத்தலம் பாடல் பெற்ற தலம் என்பதும் உறுதியாகிறது.

    திருமண தடை நீக்கும்

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் பூ விழுங்கி விநாயகர் மிகவும் சிறப்பு உடையவர். இங்கு பிரதோஷ வழிபாடு, சிவராத்திரி, வைகாசி விசாக 12 நாள் திருவிழா, மாசி மகம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற விழாக்கள் சிறப்பான முறையில் நடைபெறுகிறது. திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது இஷ்ட தெய்வமாக பெரியநாயகி அம்மனையும், புராதனவனேஸ்வரையும் வணங்கி வருகின்றனர்.

    ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் இக்கோவிலில் நடைபெறுகிறது. இதுவே ஒரு கோவிலின் சிறப்பை அனைவருக்கும் பறைசாற்றும். திருமணத்தடை நீக்கும் தலமாகவும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

    குடமுழுக்கு

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரா் கோவில் தமிழக இந்து சமய அறநிலைய துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது. அதன் பிறகு குடமுழுக்கு நடைபெறவில்லை. கோவிலில் இருந்த திருத்தேர் சேதம் அடைந்ததை தொடர்ந்து கிராம மக்களின் பங்குத்தொகை மற்றும் அரசு வழங்கிய நிதி உதவியுடன் சேர்த்து தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தேர் இன்னும் வெள்ளோட்டம் விடப்படாமல் கடந்த 6 வருடங்களாக அப்படியே நிலைத்தடத்தில் உள்ளது. மேலும் கோவிலில் உள்ள சுதை சிற்பங்கள் சேதமடைந்து வருவதுடன், கோவிலின் வர்ண பூச்சுகளும் பொலிவிழந்து காணப்படுகிறது. கோவிலின் கொடிமரம் சாய்ந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நாள் வரை வேறு கொடிமரம் நடப்படவில்லை.

    திருப்பணிகள்

    இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் கடந்த சில வருடங்களாக வைகாசி விசாக பெருந்திருவிழா நடைபெறவில்லை. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்குளக்கரையில் பக்தர்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தமிழக அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்த நிதி போதுமானதாக இல்லாததால், அதனை உயர்த்தி வழங்கி திருப்பணி வேலைகளை தொடங்கி முடித்து குடமுழுக்கு விழாவையும், திருத்தேர் வெள்ளோட்டமும் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து 15 கி.மீ்ட்டர் தொலைவில் உள்ள திருச்சிற்றம்பலத்தை அடைந்து புராதனவனேஸ்வரர் கோவிலை அடையலாம். அல்லது சென்னையில் இருந்து ரெயில் அல்லது பஸ் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

    • காரைக்குடி அருகே 126 ஆண்டுகளுக்கு பிறகு கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா புதுவயல் அருகில் உள்ள சின்ன வேங்காவயல் மற்றும் வலயன்வயலில் கைலாச விநாயகர் கோவில் உள்ளது. கடைசியாக 1897ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 126 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கண்டனூர் வேங்காவயலார் வீடு அழகப்ப செட்டியார் குடும்பத்தார் மற்றும் மணிகண்டன் செட்டியாரால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிறப்புபூைஜகள் நடைபெற்றன. நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மலை சுமார் 4 கி.மி. சுற்றளவு கொண்டது.
    • கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    மூலவர் வேதகிரீசுவரர் (மலைமேல்), பக்தவசலேசுவரர் (தாழக்கோவில்)

    அம்மன் சொக்கநாயகி (மலைமேல்), திரிபுரசுந்தரி (தாழக்கோவில்)

    தல மரம் வாழை மரம் (கதலி)

    தீர்த்தம் சங்குத் தீர்த்தம்

    புராண பெயர் கழுகுன்றம், திருக்கழுகுன்றம்

    ஊர் திருக்கழுக்குன்றம்

    மாவட்டம் காஞ்சிபுரம்

    வேதமே மலையாய் இருப்பதால் இத்திருத்தலம் "வேதகிரி" எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோவிலும், ஊருக்குள் ஒரு கோவிலும் உள்ளது. இவை முறையே திருமலைக் கோவில், தாழக்கோவில் என்றழைக்கப்படுகின்றன.

    மலைக்கோவிலில் இறைவன் வேதபுரீசுவரர் என்ற பெயரிலும், தாழக்கோவிலில் இறைவன் பக்தவத்சலேசுவரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் "அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது".

    மலை சுமார் 4 கி.மி. சுற்றளவு கொண்டது. 500 அடி உயரம் கொண்டு மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச்செல்ல நல்ல முறையில் அமைக்கப்பட்ட படிகள் உள்ளன. மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீசுவரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர்.

    கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து உணவு பெற்றுச் செல்கின்றன.

    திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    கோவில் அமைப்பு

    தாழக்கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் ஏழு நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு நான்கு கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் உள்ள மண்டபத்தில் கோவில் அலுவலகம் உள்ளது. அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நான்கு கால் மண்டபத்தையடுத்து இரண்டாவது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.

    இரண்டாவது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர் சந்நிதி உள்ளது; பாணப்பகுதி இல்லை. இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தல விநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேசுவரர், அருணாசலேசுவரர் முதலிய சந்நிதிகள் தனித்தனிக் கோவில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப் பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்தில் உள்ளது.

    அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சுற்றி வலம்வர வசதி உள்ளது. உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள். அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. ஓராண்டில் மூன்று நாட்கள் மட்டுமே (ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு) திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அம்பாளுக்கு எதிரில் பிரத்யட்ச வேதகிரீசுவரர் சந்நிதி. அதையடுத்து நடராச சபை. பிராகாரம் வலம் வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலதுபுறம் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உள் சென்று, உள் சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், 63 மூவர் மூலத் திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார். மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேசுவரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார். உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் திருவுருவம் பார்த்து மகிழ வேண்டியதாகும்.

    சங்கு தீர்த்தம்

    கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் மிக்க புகழுடைய "சங்கு தீர்த்தம்" உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் தாழக் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. "மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும்" சொல்லப்படுகிறது. இரண்டு நீராழி மண்டபங்களும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, மலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    இந்திரன் வணங்கும் தலம்

    மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வார். இதற்கு ஏற்றாற்போல் கோவில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வார். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.

    வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். வலம்வரும் வழியில் மருந்து மலைச்சாரல் "சஞ்சீவி" காற்று வீசும் இடம் உள்ளது. இங்கு அமர்ந்து மூலிகை காற்றைச் சுவாசித்து பலனடைந்தோர் ஏராளம். நான்கு மலைத்தொடர்களில முலிகைகள் நிறைந்துள்ளதால் அன்றாடம் காலை சங்கு தீர்த்தத்தில் நீராடி இம்மலைத் தொடரை பிரதட்சணமாக வந்தால் மூலிகைக் காற்றுப்பட்டு தீராத வியாதிகள் கூட போய்விடும். முக்கியமாக செவ்வாய்கிழமை திருமலை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

    பிரார்த்தனை: இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

    குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டுஇத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தீராத வியாதிகள் தீருகிறது.

    குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர். இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும், திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

    ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.

    நேர்த்திக்கடன்: சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோவில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

    கோவில் திறக்கும் நேரம்

    மலைக்கோவில் தினந்தோறும் காலை 09:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும் மாலையில் 04:30 மணி முதல் 07:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்,

    திருக்கழுக்குன்றம்,

    திருக்கழுக்குன்றம் – 603109,

    செங்கல்பட்டு மாவட்டம்.

    • திருமங்கலம் அருகே மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கருடன் வானத்தில் வட்டமிட்டு அருள் பாலித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நாராயணசாமி நகர் பகுதியில் அமைந்துள்ள மகா கணபதி கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 30-ந் தேதி அனுக்கை பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. வேத விற்பனர்கள் 9 யாக குண்டத்தில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 3-ம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடு நடந்தது. நாட்டின் பல்வேறு புனித நதிகளில் இருந்து புனித நீர் குடங்களில் கொண்டு வந்து கோபுர கலசங்களில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தினை நடத்தினர். அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டு அருள் பாலித்தார். சிறப்பு அழைப்பாளராக மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் சங்கரநாராயணன் சீனிவாசன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அலங்காநல்லூர் அருகே காளியம்மன்-மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை விட்டங்குளம் மேற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் ஊராட்சி விட்டங்குளம் மேற்கு தெருவில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக 3 கால யாக பூஜையுடன் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாவதி தீபாராதனை நடைபெற்றது. இன்று காலையில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்தது.

    பின்னர் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பா பிஷேத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப் பட்டது.

    விழா ஏற்பாடுகளை விட்டங்குளம் மேற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நாளை இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனி நடக்கிறது.
    • 83 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டது.

    எனது பக்தர்கள் அனைவரும் என் குழந்தைகள், நான் உங்கள் தந்தை, நீங்கள் வணங்கும் தெய்வம் எதுவோ அதையே எப்போதும் வணங்குங்கள். விரைவில் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார். இது பல லட்சம் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கும் ஷீரடி சாயிபாபாவின் ஆசீர்வாத வார்த்தைகள்.

    ஷீரடி சாயிபாபா

    மனித குலம் பல யுகங்களை கடந்து, கடைசியாக கலியுகத்தில் வந்து நிற்கிறது. இந்த கலியுகம் நலமாக வாழ நாமசங்கீர்த்தனமே சிறந்தது என்று யோகிகளும், முனிவர்களும் கூறினர். அந்த வரிசையில் மனிதராய் அவதரித்து, அன்பால் அனைத்து உயிர்களையும் தன் பால் ஈர்த்து, கலியுகத்தின் கருணை கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் ஷீரடி சாயிபாபா.

    கல்லை கரைத்தது, உப்பு தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது, விஷத்தை நீக்கியது என்று சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    முழு உருவ சிலை

    அவ்வளவு மகிமை பொருந்திய ஷீரடி சாயிபாபாவுக்கு, தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் 83 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள ஷீரடி சாயிபாபா கோவிலுக்கு ஸ்ரீ நாகசாயி மந்திர் என்று பெயர் சூட்டப்பட்டது. இக்கோவிலுக்குள் நுழைந்ததுமே நமது மனதில் உள்ள இறுக்கம் விலகி சென்று விடுகிறது. அதன் உச்சமாக முழு உருவ பளிங்கு சிலையில் காட்சி தரும் பாபாவை கண்டவுடன், நம் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைப்பதையும் உணர முடிகிறது.

    முதல் கும்பாபிஷேகம்

    கோவையில் கடந்த 1943-ம் ஆண்டு ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த நிர்வாகத்தின் கீழ் ஸ்ரீ நாகசாயி மந்திர் (சாயிபாபா கோவில்) உள்ளது. உலகோர் அனைவரும் பாபாவை அறிய வேண்டும். அவரது அருளை பெற வேண்டும் என்பதை குறிக்கோளுடன், பூஜ்ய ஸ்ரீ பி.வி.நரசிம்ம சுவாமிஜி மற்றும் சி.வரதராஜா அய்யா இணைந்து, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாயிபக்தி இயக்க அமைப்பையும், சாயிபாபா மிஷனையும் 1939-ம் ஆண்டு தொடங்கினர். தென்னிந்தியாவின் முதல் ஷீரடி சாயிபாபா கோவில், ஸ்ரீ நாகசாயி மந்திர் ஆகும். இக்கோவிலில் முதல் கும்பாபிஷேகம் 10-10-1946 அன்று நடைபெற்றது.

    தங்கரத பவனி

    ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலின் கோபுரம் ஷீரடி சாயிபாபா சமாதி அடைந்த பின்பு, அவருக்காக முதன் முதலாக கட்டப்பட்ட கோபுரம் ஆகும். ஸ்ரீ நாகசாயி மூலவர் சிலையானது உலகிலேயே 2-வது பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டது. 1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி வியாழக்கிழமை சாயிபாபா படத்திற்கு முன் 3 அடி முதல் 4 அடி நீளம் உள்ள நாகரூபத்தில் சாயிபாபா 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து காட்சி அளித்தார்.

    ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. கடந்த 28-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீ நாகசாயி உற்சவ மூர்த்தி வீதி உலாவும், நாளை (வியாழக்கிழமை) இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் என்.சர்வோத்தமன், அறங்காவலர்கள் ஜி.தியாகராஜன், எஸ்.சந்திரசேகர், ஜி.சுகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    வரலாற்று சின்னம்

    இதுகுறித்து ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறும்போது, அறக்கட்டளையின் கீழ் சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி), சாயிதீப் திருமண மண்டபம், இலவச ஹோமியோபதி கிளினிக் மற்றும் மருத்துவ உதவி, கல்வி உதவித்தொகை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று வரை கட்டணமில்லா தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவில் கோவை மாநகரத்தின் வரலாற்று சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் தரிசனத்திற்கு தினமும் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர் என்றார்.

    • இந்த ஆலயத்தில் 5-ந்தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.
    • கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் பொதிகை மலையின் ஒரு பகுதியாக இருக்கிறது, தோரணமலை. தேனினும் இனிய தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் கண்டு வியந்தமலை இது. யானை படுத்து இருப்பதுபோல் காட்சி தருவதன் காரணமாக, இந்த மலை முதலில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி தற்போது 'தோரணமலை' என்று வழங்கப்படுகிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலையின் உச்சியில் உள்ள குகையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். சிவன்-பார்வதி திருமணம் கயிலாய மலையில் நடந்தபோது, அந்த திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்று அனைவரும் கயிலாய மலையில் குவிந்தனர். இதனால் வட பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகம் சமநிலையை அடைவதற்காக அகத்தியரை, தென் பகுதிக்கு அனுப்பினார் சிவபெருமான்.

    அப்படி அகத்தியர் வந்தபோது, அவரைக் கவர்ந்த இடம் இந்த தோரணமலை. இங்கு அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ, மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 'மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான், ஒருவன் முழு மருத்துவனாக முடியும்' என்று கருதிய அகத்தியர், அதற்காக ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்களை வகுத்துள்ளார்.

    அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின்படி பாடத்திட்டங்களை வகுத்தார். பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது. தொடர்ந்து கணிதம், மருத்துவ ஆய்வு வகைகள், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாகடம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், ரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

    மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், ரணவாகடம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்த பின்னர், தோரணமலை பகுதியில் அகத்தியர் பாடசாலையை தொடங்கினார். தோரணமலை பயிற்சிக் கூடத்தில் பயில சித்தர்கள் பலர் வந்தனர். அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன.

    இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி (பழனி), கொல்லிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும். இந்த பாடசாலையில் 6 ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன.

    அகத்தியரும், அவரது சீடர் தேரையரும் தோரணமலையில் இருந்த போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர்.

    அவர்கள் இருவரும் வழிபட்ட முருகப்பெருமான்தான், இன்றும் தோரணமலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தோரணமலை முருகன் கோவில், ஆரம்பத்தில் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டும் அறிந்த ஆலயமாக இருந்தது. 1970-ம் ஆண்டு ஆதிநாராயணன் என்பவர் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்ற பின்னர், தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. பக்தர்களின் வருகைக்குப் பிறகு, இந்த ஆலயத்தில் தினமும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மலையேறிச் செல்வதற்கான பாதைகள், படிகள் நல்ல முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே மலை வழியில் பக்தர்கள் அமர்ந்து செல்ல, அகத்தியர், தேரையர், அருணகிரிநாதர் ஆகியோர் பெயர்களில் மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், முருகப்பெருமான்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

    அகத்தியர், தேரையர், சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முருகன் அருகில் பத்திரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். முருகன் சன்னிதி அருகே ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். தோரணமலை அடிவாரத்தில் வல்லப விநாயகர், குரு பகவான், பாலமுருகன், நவக்கிரகங்கள், சப்த கன்னியர்கள், கன்னிமாரியம்மன் சன்னிதிகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.

    -புலவனூரான்

    • வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    • நாகர்கோவில் கோர்ட்டு இன்று தீர்ப்பு

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 26).

    இவர் கடந்த 2013-ம் ஆண்டு பூதப்பாண்டி பகுதி யில் குத்தி கொலை செய் யப்பட்டார். அவரது நண்பர் தினேஷ் படுகா யம் அடைந்தார். இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் பூதப்பாண்டி மேலரத விடுதியைச் சேர்ந்த வசந்த் (24) உள்பட 5 பேரை கைது செய்தனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் சுபாஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட வசந்த் உள்பட 5 பேரும் ஜாமீனில் விடுதலை செய் யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இன்று வசந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கு விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் குற்றம் சாட்டப்பட்ட வசந்திற்கு கொலை வழக்கிற்கு ஆயுள் தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபாரதம் விதித்து தீர்ப்பு கூறினார். கொலை முயற்சி வழக்கிற்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.இதையடுத்து போலீசார் வசந்தை கைது செய்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் மதியழகன் ஆஜரானார்.

    ×