search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • 48 நாட்கள் விரதமிருந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
    • லட்சுமி கடாட்ச யோகம் கிடைக்கும்.

    வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

    வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம். நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும்.

    பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.

    தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.

    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் எழுந்தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமியில் வழிபட துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.

    • இன்று காலை 10.25 மணி முதல் நாளை காலை 8.47 மணி வரை பூராட நட்சத்திரம்.
    • இன்று விரதம் இருந்து விஷ்வக்சேனரை வழிபட மறக்காதீர்கள்.

    பகவான் விஷ்ணுவின் நெருங்கிய தொண்டர்களாக அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் ஆகிய 3 பேரை சொல்வார்கள். பெருமாள் படுத்து தூங்கும் ஆதிசேஷ பாம்பணையை அனந்தன் என்பவார்கள். கருடன், பெருமாள் ஏறிச் செல்லும் வாகனமாக கருதப்படுகிறது. அது போல விஷ்வக்சேனரை பெருமாளின் முதன்மைத் தளகர்த்தர் என்று சொல்வார்கள்.

    பெருமாள் கோவில்களில், விஷ்வக்சேனர் சந்நிதி நிச்சயமாக இருக்கும். தமிழில் அவரை சேனை முதலியார், சேனாதிபதி ஆழ்வான் என்று அழைப்பார்கள். அவருடைய அனுமதியின்றி பகவான் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை என்றும் சொல்வது உண்டு. பொதுவாக எந்த பூஜையோ, வழிபாடோ, உற்சவமோ செய்வதாக இருந்தாலும், முதலில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்து விட்டுதான் மற்ற பூஜைகளைச் செய்வார்கள்.

    ஆனால் வைணவத்தில், விஷ்வக்சேன ஆராதனையை முடித்து விட்டுத்தான் திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவம், திருவீதிவலம் செய்வார்கள்.

    பெருமாள் வீதி உலா வருவதற்கு முன் விஷ்வக்சேனர் வலம் வந்து, அனுமதி தந்த பிறகுதான் பெருமாள் வீதிகளில் எழுந்தருள்வார். விஷ்வக்சேனருடைய நட்சத்திரம் ஐப்பசியில் பூராடமாகும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐப்பசி பூராடம் வருகிறது. இன்று காலை 10.25 மணி முதல் நாளை காலை 8.47 மணி வரை பூராட நட்சத்திர நேரமாகும். இன்று விரதம் இருந்து இந்த நேரத்தில் அவரைப் போற்றி வணங்க எம்பெருமானுடைய அருள் பூரணமாக கிடைக்கும். எந்த முயற்சிகள் செய்தாலும் அவை அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எனவே இன்று விரதம் இருந்து விஷ்வக்சேனரை வழிபட மறக்காதீர்கள்.

    • கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருவிழா தொடக்கம் முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்நிலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள், ஏற்பாடுகளை நேற்று கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. தங்கி விரதம் இருக்கும் ஒவ்வொரு தற்காலிக கொட்டகைகளுக்கு சென்று பக்தர்களிடம் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டு, உங்களுக்கு வேண்டிய வசதிகளை கூறுங்கள் உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்கிறோம் எனவும் கூறினார்.

    பின்னர் அன்னதான மண்டபத்திற்கு சென்று பக்தர்களிடம் அன்னதானம் குறித்து கேட்டறிந்தார்கள். கோவில் வளாகத்தில் அமைக்கப்படுள்ள மருத்துவ முகாம், தற்காலிக கழிப்பறைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்த போது ஏராளமான பெண்கள் அவருடன் செல்பி எடுத்தனர். அவருக்கு, விரதம் இருக்கும் கிராமத்து பெண்கள் குலைவையிட்டு தங்களுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.

    • நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள்.
    • அன்று மாலை, முருகன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள்.

    சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

    அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றி கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

    பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகைய செய்து நறுமணம் கமழ செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில் வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்கு தெரிந்த துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

    ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்கு தெரிந்தபடி சரணங்களை சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

    • இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    • ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும்.

    முருகனை வழிபட செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள், கிருத்திகை நட்சத்திரம் சஷ்டி திதி உகந்தவை. கந்த சஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம்.

    வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் எந்த கெட்ட சொற்களையும் பேச கூடாது. கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோவில் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு புற வெளிபிரகாரத்தில் மூலவர் கும்ப விமான தரிசனம் காணும் வகையில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியாக பார்த்தால் மூலவர் கும்ப விமானத்தை காணலாம். இங்கு அமைக்கப்பட்ட படியில் ஏறி நின்று பக்தர்கள் மூலவரின் கும்ப கலசத்தை பார்த்து வணங்கி செல்கிறார்கள்.

    • சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.
    • மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு.

    நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்... சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்!

    சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.

    இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது.

    தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.

    இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.

    ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.

    ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.

    கந்த சஷ்டி வேளையில் விரதம் இருந்து கந்தனை வணங்கி மகிழ்வார்கள் முருக பக்தர்கள்.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

    • ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை விரதம் மேற்கொள்வர்கள்.
    • 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    வீரபாண்டி :

    ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். இன்று முதல் சஷ்டி விரதம் ஆரம்பநாள். அதன்படி திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் ஸ்ரீ காளிகுமாரசுவாமி கோவிலில் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று பின்பு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட பின்பு தீபாராதனை நடைபெற்ற பின்பு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டார்கள்.

    உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இங்கு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா இன்று தொடங்குகிறது. மாலை 6:30 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை அபிஷேகம், யாகசாலை வேள்வி பூஜை ,திருவிழா பிரசாதம் வழங்கும் விழா நிகழ்ச்சியும் நடக்கிறது.

    நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை யாகசாலை வேள்வி பூஜை அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நிகழ்ச்சிகளும் மாலை 6:30 முதல் மணி முதல் 7-30 மணி வரை உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் ,அலங்காரம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தீபா மற்றும் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

    • கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம்.
    • நாளை விரதம் இருப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

    கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும், பார்வதியையும், அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதுபற்றி பார்வதி தேவி, சிவபெருமானிடம் கேட்டதற்கு அவர், "தேவி.. பிருங்கி முனிவருக்கு எந்த பாக்கியங்களும் தேவையில்லை. அவருக்கு மோட்சம்தான் விருப்பம். எனவேதான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்" என்றார்.

    அந்த வார்த்தையில் திருப்தி இல்லாத பார்வதி தேவி, பிருங்கி முனிவரிடம் "உன் தேகத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் நான் வழங்கியவை. ஆனால் என்னை வழிபட மறுக்கிறாய். அப்படியானால் சக்திக்கு தேவையான ரத்தம், தசை, நரம்பு போன்றவற்றை திருப்பிக்கொடு" என்றார்.

    பிருங்கி முனிவரும் அப்படியே செய்தார். இதனால் எலும்பும், தோலும் மட்டும் கொண்டு வலுவிழந்து தடுமாறினார். சிவபெருமான் அவருக்கு கைத்தடி ஒன்றை வழங்கி நிற்கச் செய்தார்.

    இதனால் கோபம் கொண்ட பார்வதி, கயிலாயத்தை விட்டு பூமிக்கு வந்தார். அங்கு ஒரு நந்தவனத்தில் எழுந்தருளினார். அந்த நந்தவனம், 12 ஆண்டுகளாக மழையின்றி வறண்டு காணப்பட்டது. பார்வதி தேவி வந்ததும் மழை பெய்து, அந்த நந்தவனம் புத்துயிர் பெற்றது. பல அரிய பூக்கள் பூத்தது. அதன் வாசத்தை நுகர்ந்து அங்கு வந்த வால்மீகி முனிவர், அம்பிகையை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

    அப்போது பார்வதி தேவி, "முனிவரே.. நான் மீண்டும் ஈசனுடன் சேருவதற்கு, அனைத்து விரதங்களையும் விட மேலான விரதம் ஒன்று வேண்டும். அப்படியொரு விரதம் இருக்கிறதா?" என்று கேட்டார்.

    அதற்கு வால்மீகி முனிவர், "தாயே.. இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதம் உண்டு. அந்த விரதத்திற்கு 'கேதாரீஸ்வரர் நோன்பு' என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்" என்றார்.

    அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தார். இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது 'கேதார கவுரி விரதம்' என்று அழைக்கப்படுகிறது.

    விரதம் இருப்பது எப்படி?

    கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது. தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிபடப்படுகின்றது. இந்த விரதம் இருப்பவர்கள், தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து அக்கம் பக்கத்தினருடன் சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.

    இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது. ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங்களைச் சொல்லி தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

    பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து அதற்கும் பலவித அலங்காரங்களை செய்து வில்வம், தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள் நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.

    • இன்று செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.
    • இன்று விரதம் இருந்து சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம்.

    பிரதோஷ அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் மிக்கது.

    விரதம் இருந்து சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.

    விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.

    சனிப் பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்களாம். நந்திதேவரையும் சிவனாரையும் அபிஷேகித்து,ஆராதித்து தரிசித்தார்களாம். பிரதோஷ பூஜைக்கு நாமும் அபிஷேகப் பொருட்களையும் பூக்களையும் வழங்குவோம்.

    நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே ஈசன் திருநடனம் புரியும் தருணம் பிரதோஷம் என்கிறது புராணம். விரதம் இருந்து பிரதோஷ நாளில், நமசிவாயம் என்று ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து, சிவ பூஜையை தரிசித்தாலோ சிவ பூஜை செய்தாலோ, நம் முன்னோர்கள் செய்த ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கும் என்கிறது சிவபுராணம்.

    இன்னொரு விஷயம்... மற்ற நாட்களில் வரும் பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வதாலும் சிவ பூஜை செய்வதாலும் என்னென்ன பலன்கள் கிடைக்கிறதோ... சனிப் பிரதோஷ நாளில் செய்தால், மும்மடங்கு பலன்கள் கிடைக்கும்.

    பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வரும். பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில், சிவ பூஜை செய்யவேண்டும். குளித்துவிட்டு, சுவாமி படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, 'நமசிவாயம்' என்று ஜபித்துக் கொண்டிருந்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும். புண்ணியம் பெருகிவிடும்.

    மற்ற பிரதோஷம் வழிபட சனிப்பிரதோஷ முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சிவ ஆலயத்தில் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் காரணம். ஒருவர் பிற நாட்களில் கோயிலுக்கு செல்வதை விட இந்த சனிப் பிரதோஷ நாட்களில் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களை எண்ணி வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணிய காரியங்களில் எண்ணியவாறு அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முக்கியமாக சிவாலயங்களுக்கு நீங்கள் சென்று வழிபடுவது ஐந்து வருட வழிபாட்டிற்கு சமமாக இந்த ஒரு நாள் வழிபாடும் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    என்ன வகைப்பட்ட தோஷங்கள் ஒருவரை ஆட்டிப் படைத்தாலும், அவர்கள் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலமாக அந்தப் ஒரு தோஷங்களில் இருந்து விலகுவதாக ஐதீகம் உள்ளது. சாதாரண தினங்களில் ஏற்படும் வழிபாடுகளை விட சனிக்கிழமை பிரதோஷம் செய்யும் வழிபாடு ஆயிரம் மடங்கு நன்மைகளை வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து, பால் ஆகாரம் மட்டும எடுத்துக் கொண்டு, மாலையில் சிவன் கோயில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.

    வீட்டில் விளக்கு ஏற்றி சிவன்பெருமான் புகைப்படத்தின் முன்பு அவருடைய மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக இந்த நாளில் சிறப்பு பயன்களை நீங்கள் முழுமையாக அடைய முடியும்.

    இன்று (22ம் தேதி) சனிப் பிரதோஷம். மாலையில் சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றையெல்லாம் பெறுவோம்.

    நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!

    • இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம்.
    • இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.

    'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள். பொதுவாக, ஒவ்வொரு மாதத்துக்கும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி (வளர்பிறை ஏகாதசி) என்றும்; பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி (தேய்பிறை ஏகாதசி) என்றும் பெயர். சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு 'பாப மோசனிகா ஏகாதசி' என்று பெயர். பாவங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி என்ற பொருளில் இந்த ஏகாதசிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். தவறவிடக் கூடாத விரத நாள் இது. இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம். மேலும், இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும்.

    பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து சாபம் நீங்கப் பெற்ற மஞ்சுகோஷை என்ற தேவகன்னியின் கதையை அறிந்துகொள்வோம்.

    சைத்ரதம் என்பது ஓர் அழகிய வனம். அங்கு முனிவர்கள் பலர் தனிக் குடில் அமைத்துத் தவம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது மஞ்சுகோஷை எனும் அழகிய தேவகன்னி வானுலகில் வலம் சென்றுகொண்டிருந்தபோது, சைத்ரதத்தின் வனப்பைக் கண்டு கீழே இறங்கினாள். அங்கு தவம் செய்துகொண்டிருந்தவர்களில் மேதாவி எனும் முனிவரைக் கண்டாள். அழகிய முகம், திரண்ட தோள், அடர்ந்த கூந்தல் ஆகியவற்றுடன் விழிகளை மூடித் தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைப் பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டாள்.

    மஞ்சுகோஷை, தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைத் தனது இனிமையான குரலில் அழைத்தாள். யாழின் இசையையும் பழிக்கும்படி ஒலித்த அவளுடைய குரலில் மயங்கிய மேதாவி, மெள்ள விழிகளைத் திறந்தார். அவளுக்கு முன் நின்றுகொண்டிருந்த மஞ்சுகோஷையின் அழகிய வனப்பில், பார்த்ததுமே சொக்கிப்போனார். ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் மயங்கியபோது, மேதாவியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன. மஞ்சுகோஷையின் பேரழகில் மனதைப் பறிகொடுத்தவர், தவம் செய்வதை விடுத்து, அவளுடன் சேர்ந்து தனது குடிலிலேயே வசிக்கத் தொடங்கினார். ஆண்டுகள் பல கடந்தன. தான் தேவருலகம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டபடியால், மேதாவியின் பாதங்களைப் பணிந்து வணங்கி, "தான் மேலுலகம் செல்ல வேண்டும். விடைகொடுங்கள் சுவாமி" என்று வேண்டினாள். ஆனால், அவளுடைய அழகிலும் அவளிடம் கொண்டிருந்த மோகத்திலும் சிக்குண்ட மேதாவி காலம் கடந்ததை உணராதவராய், "நீ இப்போதுதானே வந்தாய், அதற்குள் என்ன அவசரம்? இன்னும் சிறிது காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ" என்று தெரிவித்தார் .

    மீண்டும் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். மேலும் பல ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் அவளுடைய மடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டிருந்தபோதுதான் ஞானோதயம் ஏற்பட்டது மேதாவிக்கு. ஓடிச்சென்று, சந்தியாவந்தனம் செய்துகொண்டு வந்தார். மஞ்சுகோஷைக்கு எதுவும் புரியவில்லை. அவள், "இத்தனை ஆண்டுகளாக எதையும் கடைப்பிடிக்காத தாங்கள் இப்போது அவசரமாகச் சந்தியாவந்தனம் செய்கிறீர்களே" என்று வினவியபோதுதான் மேதாவிக்குப் புரிந்தது.

    தனது தவம் கலைந்தமைக்கும் இத்தனை ஆண்டுகளாகச் சுயநினைவை இழந்து வாழ்ந்தமைக்கும் காரணம் மஞ்சுகோஷைதான் என்று நினைத்த மேதாவி, "உன் அழகிய உருவம் மறைந்து பேயாக மாறுவாயாக..." என்று கோபத்தில் சபித்துவிட்டார். அதன் பிறகு, இதில் தனது தவறும் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், "சித்திரை மாதம் தேய்பிறை சர்வ ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் உனது சாபம் விலகும்" என்று அருள்புரிந்தார்.

    மஞ்சுகோஷையும் தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவற்றைப் பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து போக்கி, சுய உருவத்தை அடைந்தாள். தவற்றினால் தனது தவ வலிமையை இழந்துவிட்டதைத் தன் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டார் மேதாவி. அவருடைய தந்தையும், இதே பாப மோசனிகா ஏகாதசி விரதத்தின் பெருமையைக் கூறி அதையே உபாயமாகத் தெரிவித்தார். மேதாவியும் அந்த விரதத்தை மேற்கொண்டு தனது தவ வலிமையை மீண்டும் பெற்றார்.

    நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த ஏகாதசி விரதம்.

    ஏகாதசி விரதத்துக்கு பாவங்களைப் போக்கும் சக்தி எப்படியுண்டோ, அதே மாதிரி எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள் முதல் நாளான தசமியன்று ஒரு பொழுது மட்டுமே உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதமிருந்து நாராயண நாமத்தைப் பாடியபடி, பெருமாளுக்குத் துளசி மாலையிட்டு வழிபட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்துக்குள் நீராடி துளசி தீர்த்தத்தை அருந்த வேண்டும். அதன் பிறகு 'பாரணை' என்னும் பல்வகை காய்கறிகளுடன்கூடிய உணவை உண்ண வேண்டும். உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இருப்பது அவசியம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்து அதை ஒரு ஏழைக்குத் தானம் செய்த பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மை ஏற்படும் என்பது ஐதிகம்.

    • தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி.
    • கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

    நவகிரகங்களில் ஒருவரான குரு எனப்படும் வியாழ பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி குருவின் பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வச்சிறப்பு ஆகியவை ஏற்படும். ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலோ, கோசார ரீதியாகக் கெட்டவரானாலோ குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். வியாழன் தோறும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    தட்சிணாமூர்த்தியை தரிசித்து பூஜித்து தியானித்து அர்ச்சனை முதலியவை செய்தால் குரு தோஷம் விலகும் என்று சூரியனார் கோவில் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி. குருதோஷத்துக்கு ஆலங்குடி பரிகாரத்தலம் என்று அதன் தலபுராணமும் குறிப்பிடுகிறது.

    குருபகவானுக்கு வியாழக்கிழமையில் விரதம் இருந்து அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவானை வணங்க வேண்டும். அரசமர சமித்துகளால் ஹோமம் செய்து கடலைப்பொடி அன்னத்தால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும். கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். குரு கீர்த்தனைகளை அடாணா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவற்றால் குரு தோஷம் நீங்கும்.

    • ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது.
    • ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நாளில்தான் அரிச்சந்திரன் விரதம் இருந்து தாம் இழந்த நாடு , மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க கூடாது. அதில் மட்டும் கவனமாக இருங்கள்.

    ×