search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி"

    • கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தக்காளி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஏழைகளுக்கு எட்டாத கனிகளில் ஒன்றாக மாறியிருந்தது. ஆப்பிள், மாதுளை பழங்கள் இடையே போட்டி போடும் அளவிற்கு தக்காளி விலை கடும் உச்சத்தை தொட்டது.

    தங்கத்தின் விலை போல தக்காளி விலையை தினசரி கேட்டு வாங்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ஆசியாவில் மிகப்பெரிய தக்காளி சாகுபடி பகுதியாக உள்ளது.

    இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, மும்பை, ஒரிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.

    இதனால் தக்காளி விலை கிலோ 200-க்கு மேல் விற்பனையானது. தக்காளி விவசாயிகள் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறினார்கள். இதனால் தக்காளி விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆட்டம் போடும் அளவிற்கு நிலைமை இருந்தது.

    தக்காளி விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு வந்த வியாபாரிகளிடம் வழிப்பறி மற்றும் கொலை சம்பவங்களும் அரங்கேறின. கடையில் புகுந்து தக்காளி திருட்டு தோட்டத்திற்குள் புகுந்து தக்காளிகளை பறித்து கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தற்போது அன்னமய்யா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிகளவு உற்பத்தியாகி மார்க்கெட்டுகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. சித்தூர் பலமனேர் புங்கனூர் பகுதிகளில் இருந்தும் அதிகளவு தக்காளி வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 90 டன்னுக்கும் குறைவாக வரத்து இருந்த தக்காளி தற்போது தினமும் 300 டன்னுக்கு அதிகமாக வரத்தொடங்கி உள்ளது. இதனால் தற்போது கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.

    ஆந்திராவின் அன்னமய்யா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது தக்காளி காய்களாக உள்ளன. இன்னும் 2 வாரத்தில் இந்த தக்காளிகள் பழமாக மாறிவிடும்.

    கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது தக்காளி கிலோ விலை ரூ.2-க்கும் குறைவாக இருக்கும் என கணித்துள்ளனர். இது விவசாயிகளை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:-

    இந்த காரி பருவத்தில் அதிக அளவில் தக்காளிகளை பயிரிட்டுள்ளோம். இந்த மாத இறுதியில் அதிக அளவு தக்காளி அறுவடை செய்யப்படும். அப்போது தக்காளி விலை மிக குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டுவிடுவது தவிர வேறு வழியில்லை என்றார்.

    மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    கொஞ்ச ஆட்டமாடா போட்டீங்க... இப்போ உங்க நிலைமையை பார்த்தீர்களா என்ற வசனங்களுடன் சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாகி வருகிறது.

    • தக்காளியை கொள்முதல் செய்து மானிய விலையில் கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்தது.
    • தக்காளி 10 ரூபாய்க்கு விற்று விவசாயிகள் நஷ்டம் அடையும்போது சமூகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த நான்கு மாதங்களாக எல்லா தரப்பிலும் உச்சரிக்கப்பட்ட பெயர் தக்காளி. தக்காளியின் விலை உயர்ந்து கிலோ 100 ரூபாய் தாண்டி விற்பனையாகியது, ஆனால் விவசாயிகளிடம் தக்காளி இல்லை.ஒரு சில விவசாயிகள் மட்டுமே அதனால் பயன் பெற்றனர்.

    தக்காளி விலை உயர்ந்த போது பொதுமக்களும், அரசியல்வாதிகளும் தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்று தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு மகாராஷ்டிராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், மத்திய பிரதேசத்திலிருந்தும் தக்காளியை கொள்முதல் செய்து மானிய விலையில் கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்தது.

    பொதுமக்களை காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தக்காளி விளைவித்த விவசாயிகள் கிலோ ரூபாய் 10க்கு விற்பதால் மிகக் கடுமையாக நஷ்டத்தில் உள்ளார்கள். விவசாயிகள் நஷ்டப்படும் போது மத்திய,மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    தக்காளியை மட்டுமல்ல அனைத்து விவசாய பொருட்களுக்குமான இந்த கோரிக்கை தொடர்ச்சியை நிறைவேற்றப்படாமல் இருந்து கொண்டே இருக்கிறது. தக்காளி 100 ரூபாய்க்கு விற்ற போது கவலைப்பட்ட சமூகம் தக்காளி 10 ரூபாய்க்கு விற்று விவசாயிகள் நஷ்டம் அடையும்போது இந்த சமூகம் கண்டு கொள்ளாமல் இருப்பது விவசாயிகளுக்கு கடுமையான வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுமக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்து கொடுக்கும் அரசு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து தக்காளியை கொள்முதல் செய்யாமல் இருப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது.விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.தற்போது விவசாயிகள் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள்.

    எனவே தமிழ்நாடு அரசு தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.20 விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்து, விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்வது என்பது தெரிந்தே தற்கொலை செய்வதற்கு சமமானது. ஏனென்றால் விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருளுக்கு, அவர்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது. தக்காளியோ, வெங்காயமோ, விலை உயர்ந்தால் உடனே மத்திய, மாநில அரசுகள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விலை உயராமல் கட்டுப்படுத்துகின்றன.

    தக்காளி விலை உயர்ந்து விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் நியாயமான விலை கிடைத்த போது அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் என அத்தனை பேரும் குடி முழுகி போய்விட்டதாக, குதித்தார்கள். அதே தக்காளியின் விலை இன்று அதல பாதாளத்தில் உள்ளது. இன்று அதே அரசும், அமைச்சர்களும் எங்கே போனார்கள்.

    தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்த போது வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி கூட்டுறவுத்துறை மற்றும் ரேசன் கடைகளில் நியாயமான விலைக்கு தக்காளி விற்ற அரசு, இன்று விவசாயிகளிடம் அதே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்து ஏன் ரேசன் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.

    நுகர்வோர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் அரசு, விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கூடாதா. தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்ற விளை பொருட்கள் சீரான விலையில் விற்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசுக்கு நுகர்வோரை காப்பாற்றுவதில் உள்ள அக்கறை, விவசாயிகள் மீது துளி கூட இல்லை என்பதை இது காட்டுகிறது.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை உழவர் உழைப்பாளர் கட்சி வரவேற்கிறது. காரணம் ஜாதி, மத வேறுபாடுகள் களையப்படும். எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வு மேலோங்கும், உதாரணமாக ஒரு ஊரில் பல சாதியினர் இருப்பார்கள். ஆனால் வெளியில் செல்லும்போது நான் இந்த ஊர்காரன் என்று தான் சொல்வார்கள்.

    இந்த சாதிக்காரன் என்று சொல்ல மாட்டார்கள். அது போல் இனி தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா என்று சொல்லாமல் இந்தியா என்ற எண்ணம் மேல் ஓங்குவதற்கு இது வழிவகுக்கும். இதனால் இந்தியா மென்மேலும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது.
    • தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.

    தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.

    தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.

    பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

    அதேபோல் தங்காளி ஜூஸ் 3 ஸ்பூன், உருளைகிழங்கு ஜூஸ் 2 ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

    • 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.
    • தக்காளி விலை சரிந்து பழையநிலைக்கு திரும்புவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை சரியத்தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் கடந்த மாதத்தில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. அதிகபட்சமாக சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200வரை விற்கப் பட்டது.

    இந்நிலையில் தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.

    தக்காளி வரத்து பழைய நிலைக்கு வந்து உள்ளதால் அதன் விலையும் வேகமாக குறைந்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை சரிந்து பழையநிலைக்கு திரும்புவதால் இல்லத்த ரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி விலை உச்சத்தில் இருந்த போது, அறுவடை செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து பலர் லட்சத்தில் சம்பாதித்தனர்.

    இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகரிக்கவே இங்கிருந்து ஏற்றுமதியான தக்காளி குறையத்தொடங்கிய நிலையில் தற்போது 15 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி ரூ. 400-க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த தக்காளி மொத்த வியாபாரி எஸ்.ஆர்.எம். ரவி கூறும்போது, தக்காளி விலை படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது ஒரு டிப்பர் தக்காளி நல்ல ரகம் ரூ. 400-க்கு விற்பனையாகிறது. ரூ. 28 முதல் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்படும் தக்காளி, தற்போது வெளிச்சந்தையில் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது. 2 மற்றும் 3-ம் ரக தக்காளிகள் ஒரு டிப்பர் ரூ. 200க்கு கொள்முதல் செய்யப்பட்டு, வெளிச்சந்தைகளில் ரூ. 20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் விலை உச்சத்தில் இருந்தபோது, விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு இங்கிருந்து சென்ற தக்காளி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அறுவடை தொடங்கிவிட்டதால், இங்கு பற்றாக்குறை இல்லை. ஆகவே விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
    • மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    போரூர்:

    தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.200வரை விற்கப்பட்டது.

    இதனால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியை குறைந்த அளவே பயன்படுத்தும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டனர்.மேலும் தக்காளி விலை உயர்வு காரணமாக பல ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி ரசம் ஆகியவை அதிரடியாக நிறுத்தப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 55 முதல் 60 லாரிகள் வரை தினசரி தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்தமாதம் மழையால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து 25 லாரிகளாக குறைந்ததால் விலை திடீரென அதிகரித்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

    இதனால் கடந்த வாரத்தில் தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. இந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 43 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. இதனால் தக்காளியின் விலை மேலும் சரிந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அரியலூரில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது குறைந்து வருகிறது
    • தக்காளி விலை குறைந்து வருவதையொட்டி பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது

    அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளிகளை விற்க நடவடிக்கை எடுத்தது. இருந்த போதிலும் தரமான தக்காளி கிடைக்காமலும், விலை அதிகமாக இருந்ததாலும் இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் அரியலூரில் கடந்த ஒரு வாரமாக தக்காளியின் வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அரியலூர் வாரச்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.

    சிறிய அளவிலான தக்காளிகளை வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் வைத்து விற்பனை செய்தனர். இதேபோல் ரூ.150-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் படிப்படியாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று அரியலூரில் பெய்த லேசான மலையில் வாரச்சந்தையில் மழை நீர் தேங்கி வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும் பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்த படி காய்கறிகளை வாங்கி சென்றனர்.

    • காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50, விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50, கத்தரிக்காய் ரூ.55, பீர்க்கங்காய் ரூ.50,பெரிய வெங்காயம் ரூ.25 ,சின்ன வெங்காயம் ரூ. 55, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.60, புடலங்காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.200, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.60, பச்சை மிளகாய் ரூ.80, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
    • தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் அதன் விலை ஒரு கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மே மாதம் வரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்தது.

    மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக அந்நேரத்தில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.15-க்கு என குறைந்த விலையில் விற்பனையானது.

    பின் கோடை மழைப்பொழிவு போதியளவு இல்லாததால், பல கிராமங்களில் தக்காளி சாகுபடி குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட மிகவும் குறைவாக இருந்தது.

    இதனால் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.120 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில், சில வாரத்துக்கு பிறகு, மார்க்கெட்டில் தற்போது தக்காளி வரத்து சற்று அதிகரித்தது. இதனால், அதன் விலை குறைய தொடங்கியது.

    உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.500 முதல் ரூ.600-க்கு ஏலம் போனது. சராசரியாக ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது. சில வாரத்துக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    • தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது
    • தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி, இஞ்சி, மிளகாய்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளிலும் தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனையானது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. தக்காளியின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிக மாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் சரிய தொடங்கியுள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு ஏற்கனவே பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், நெல்லை மாவட்டம் பணக்குடி, வள்ளியூர் பகுதி யில் இருந்தும் அதிகளவு தக்காளி அப்டா மார்க்கெட டில் விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளியின் விலை தினமும் குறைந்து வருகிறது.

    நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.10 சரிந்து ரூ.70 ஆக குறைந் துள்ளது. மேலும் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரி வித்துள்ள னர். தக்கா ளியின் வரத்து அதிகரிக்க தொடங்கியதால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் இஞ்சி விலையும் குறைய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.300 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.250 ஆக சரிந்துள்ளது. புதிதாக வரக்கூடிய இஞ்சி கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை ஆகிறது. இதேபோல் சிறிய வெங்காயத்தின் விலையும் சரிய தொடங்கியுள்ளது. கிலோ ரூ.120 வரை விற்கப்பட்ட சிறிய வெங்காயம் இன்று ரூ.90 ஆக குறைந்துள்ளது.

    இதேபோல் அனைத்து காய்கறிகளையும் விலை குறைந்துள்ளது. நாகர்கோ வில் மார்க்கெட்டில் விற்ப னையான காய்கறிகளின் விலை விபரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.80, மிளகாய் ரூ.60, சேனை ரூ.65, வெள்ளரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.30, தடியங்காய் ரூ.40, பூசணிக்காய் ரூ.30, கத்திரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சவ்சவ் ரூ.40, பீட்ரூட் ரூ.40, உள்ளி ரூ.90, பல்லாரி ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.30 விற்பனையானது.

    • தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையானது.
    • தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது.

    சேலம்:

    சேலம் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வரை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்க ளுக்கு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையா னது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளி வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்க ளில் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் தக்காளியை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். 

    • சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்துள்ளது.

    கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 3 நாட்களில் வருகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தையான மதனபள்ளியில் இருந்து சந்தைகளுக்கு அதிக அளவில் தக்காளி வருவதால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் சித்தூர் மாவட்டத்திற்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து சந்தைகளில் இருந்தும் தினமும் சுமார் 35 முதல் 40 லாரிகள் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் தமிழகத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×