search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாரசாமி"

    • எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை
    • பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் அழைக்கவில்லை

    காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது. இதற்காக 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கர்நாடக மாநிலம் புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில், கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி கூறுகையில் ''எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளத்தை அவர்களின் ஒரு பகுதியாக கருதவே இல்லை. அதனால், மெகா கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் இருக்குமா? என்பதற்கான கேள்விக்கே இடமில்லை'' என்றார்.

    பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு, ''எங்களை அவர்கள் அழைக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்.

    • மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    5 இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்த இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. அதுவும் மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் தருவதாக கூறிவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றுகிறது.

    இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும். மாநிலத்தில் மின் கட்டண உயர்வு விவகாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 தேசிய கட்சிகளும் விளையாடுகிறது. காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம், நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை என்கிறார்கள்.

    பா.ஜனதாவினர் நாங்கள் ஆட்சியில் இல்லை, காங்கிரஸ் தான் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக நாடகமாடுகிறார்கள். மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தன்னை நிதி மந்திரி என்று கூறிக் கொள்ளும் சித்தராமையாவுக்கு சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது குறித்து புரிந்து கொள்ள முடியவில்லையா?.

    சிறு தொழில் நிறுவன அதிபர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து, ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். இலவச வாக்குறுதி அளித்துவிட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலில் வதந்திகள் பரவுவது இயல்பு.
    • எனக்கு தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லை.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சன்னபட்டணாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசியலில் வதந்திகள் பரவுவது இயல்பு. இந்த கூட்டணி விஷயத்தை என்னிடம் யாரும் கூறவில்லை. அதுபற்றி நாங்கள் எங்கும் விவாதிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் குறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். எந்த ரீதியில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

    எனக்கு தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லை. கடந்த முறையே தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இருக்கவில்லை. கட்சி நிர்வாகிகளின் அழுத்தத்திற்கு பணிந்து நான் தேர்தலில் போட்டியிட்டேன். என் விஷயத்தை விடுங்கள், சில எம்.பி.க்கள், தேர்தலில் போட்டியிடுவது போதும் என்று பேசியுள்ளனர். அரசின் 5 உத்தரவாத திட்டங்கள் குறித்து பேச இன்னும் நேரம் உள்ளது.

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். ஆனால் திட்டத்தின் பயன்களை மக்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்பது முக்கியம். வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம் கிடையாது என்று கூறினர். அதன் பிறகு அவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறினர்.

    வாடகை வீடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர், ஒப்பந்தம் செய்து கொள்வது இல்லை. இப்படி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த திட்டத்தை அறிவிக்கும்போது, எனக்கும் இலவசம், உங்களுக்கும் இலவசம் என்று கூறினர். இப்போது இந்த திட்டங்களை செயல்படுத்தி எவ்வாறு நிர்வகிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது.
    • உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    ராமநகர் :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நடைபெற்ற பா.ஜனதா ஆட்சி மீது காங்கிரசார் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இந்த குற்றச்சாட்டை காங்கிரசார் நிரூபித்தார்களா?. லோக்அயுக்தாவில் அவர்கள் புகார் செய்தனரா?. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே 40 சதவீதம் கொடுத்தது போக தற்போது தங்களுக்கு 5 சதவீத கமிஷன் வழங்குமாறு மந்திரிகள் கேட்பதாக நான் கூறினேன்.

    இதுகுறித்து லோக்அயுக்தாவில் புகார் அளிக்கும்படி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சொல்கிறார். தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது.

    40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதில் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களிடம் ஆதாரங்கள் இருக்க வேண்டும் அல்லவா?.

    ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினரும் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். அவர்கள் ஆதாரம் கொடுத்தார்களா?. லோக்அயுக்தாவில் புகார் அளிக்க காங்கிரசாரை யார் தடுத்தனர்?. கடந்த மே மாதம் 8-ந் தேதி பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.675 கோடி பட்டுவாடா செய்யாதது ஏன்?. அதை விடுவிக்காமல் வைத்து கொண்டிருப்பது ஏன்?. இதுகுறித்து டி.கே.சிவக்குமார் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    இதற்கு முன்னதாக சன்னபட்டணாவில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை குமாரசாமி நடத்தினார். இதில் அந்த தாலுகா அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த பகுதியில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி குமாரசாமி உத்தரவிட்டார்.

    • கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்தார்.
    • காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை அறிவித்திருந்தனர்.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை அறிவித்திருந்தனர். அனைவருக்கும் இலவசம் என வாக்குறுதி அளித்தார்கள். தற்போது அந்த இலவச திட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். காங்கிரசின் இந்த இலவச திட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் ஏமாற்று வேலை பற்றி அறிந்து கொள்ள மக்களுக்கு நீண்ட நாட்கள் தேவைப்படாது.

    காங்கிரசின் 5 இலவச திட்டங்கள் பற்றி பேசவோ, விமர்சனம் செய்யவோ எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளுக்கும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு இலவசங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் வேதனை அளிக்கிறது.

    கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்தார். அவரது தலைமையில் தான் ஆட்சி நடைபெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் அரசு பணி இடங்கள் 2¾ லட்சத்திற்கும் மேல் காலியாக இருந்தது. அப்போது காலியாக இருந்த அரசு பணி இடங்களை நிரப்பவோ, வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கவோ சித்தராமையா முன்வரவில்லை.

    சித்தராமையா ஆட்சியில் பட்டதாரிகளுக்கு வேலை வழங்காமல், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். பட்டதாரிகளிடம் இருந்து வாக்குகளை பெற்றுவிட்டு, அரசு துறைகளில் உள்ள 2¾ லட்சம் காலி பணி இடங்களை நிரப்பாமல் தற்போது ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார்கள். அதற்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். 24 மாதம் மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இலவச திட்டங்களுக்காக விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
    • இந்த விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    பெங்களூரு:

    தலைநகர் டெல்லியில் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று பல கட்சிகள் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

    இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் இந்த விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இது நாட்டின் சொத்து. யாருடைய தனிப்பட்ட விஷயமும் அல்ல என தெரிவித்தார்.

    இதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள், பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த 18 கட்சிகள் என மொத்தம் 25 கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

    மேலும், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், நாங்கள் ஒன்றும் காங்கிரசின் அடிமை இல்லை எனவும், பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பது எங்கள் கட்சியின் முடிவு என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் ஒன்றும் காங்கிரசுக்கு அடிமை இல்லை. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பது கட்சியின் சொந்த முடிவு. நாங்கள் காங்கிரசை ஏன் பின்தொடர வேண்டும் என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது.
    • காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல.

    ராமநகர் :

    ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததாக நினைக்க வேண்டாம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எந்த கவலையும் வேண்டாம். பா.ஜனதா கொள்ளையடித்த வழியில் தான் காங்கிரஸ் கட்சியும் கொள்ளையடிக்க போகிறது. அதில் புதியதாக எதுவும் நடக்கப்போவதில்லை. யாரை எங்கே எப்படி தடுப்பது என்பது எனக்கு தெரியும். நான் போராட தயாராக இருக்கிறேன். நான் யாரிடமும் உதவி கேட்க மாட்டேன்.

    காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. அவர்களுக்கு எப்படி அந்த நிதி கிடைக்கும்?.

    இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினால் எப்படி சாலைகள், நீர்ப்பாசனம், உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும். காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளை எப்படி மேற்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆட்சியில் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்பதை எதிர்பார்க்க வேண்டாம்.

    ஜனதாதளம் (எஸ்) கட்சி இந்த முறை 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சிலரின் சதி மற்றும் பொய் குற்றச்சாட்டுகளால் சமுதாயத்தின் 3 சதவீத வாக்குகள் நமது கட்சிக்கு கிடைக்கவில்லை. பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கைகோர்க்கும் என்று தவறான தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பரப்பினார்கள். பா.ஜனதா தலைவர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை அழிக்க திட்டமிட்டனர்.

    எங்கள் குடும்பம் இதை விட பல அதிர்ச்சிகளை தாங்கியுள்ளது. கடவுள், மக்களின் அருள் எங்களுக்கு உள்ளது. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம். வரும் காலத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கர்நாடகத்தில் நவம்பர் மாதத்திற்குள் அரசியல் மாற்றம் நிகழும். பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் கட்சி எங்களை விட பெரிய கட்சி.
    • ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் உண்மையாகியுள்ளது.

    ராமநகர்

    ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவுக்கு வந்த ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சிக்கு தோல்வி என்பது புதியதல்ல. எச்.டி.தேவகவுடா தலைமையில் இருமுறை தேர்தலில் தோல்வியை தழுவிய போதும் ஜனதாதளம் (எஸ்) கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதுபோல் மீண்டும் ஆட்சியை பிடிப்போம். கடந்த 6 மாதங்களாக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் எனது எதிர்பார்ப்பு பொய்யானது. ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் உண்மையாகியுள்ளது. தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து வரும் நாட்களில் கட்சியினருடன் சேர்ந்து கட்சியை பலப்படுத்துவோம்.

    ராமநகர் தொகுதியில் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தது பற்றி எந்த விவாதமும் செய்யவில்லை. அது முடிந்துபோன அத்தியாயம். இன்று தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், வருங்காலத்தில் வெற்றி பெறுவார்கள். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பழைய மைசூரு பகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை பா.ஜனதா தனது அதிகார பலம், பண பலத்தால் அழிக்க முயன்றது. இதனால் இந்த தேர்தலில் எங்கள் கட்சி தோற்றுவிட்டது.

    காங்கிரஸ் கட்சி எங்களை விட பெரிய கட்சி. அவர்கள் உத்தரவாத திட்டங்கள் இலவசம் என கூறினர். இப்போது அவர்கள் உத்தரவாத திட்டங்களுக்கு நிபந்தனை என கூறுகிறார்கள். அடுத்து என்ன சொல்ல போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    எங்கள் சமுதாயத்திற்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும். முதல்-மந்திரி பதவியை யார் வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த மக்களின் முதல்-மந்திரியாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
    • எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட தோல்வி குறித்து குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் முடிவே இறுதியானது. வெற்றி-தோல்வியை நான் சமமாக எடுத்து கொள்கிறேன். ஆனால் இந்த தோல்வி இறுதி அல்ல. எனது போராட்டம் இத்துடன் நின்றுவிடாது. நான் எப்போதும் மக்களுடன் இருப்பேன்.

    எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனக்கும், எனது குடும்பத்திற்கும் வெற்றி-தோல்வி புதிது அல்ல. இதற்கு முன்பு தேவகவுடா, எனது சகோதரர் ரேவண்ணா, நான் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளோம். வரும் நாட்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்வோம்.

    கர்நாடகத்தில் அமைய உள்ள புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். இந்த தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    • கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை.
    • காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    பெலகாவி :

    கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். குமாரசாமி எங்கள் கட்சிக்கு ஆதரவு தருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகத்தில் கடந்த 2004 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் இரு முறையும் கூட்டணி ஆட்சி பாதியிலேயே கலைந்துபோனது குறிப்பிடத்தக்கது.

    • தனது நண்பர்கள் மூலம் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்க அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு போல் கூட்டணி ஆட்சி அமையலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதனால் தற்போதே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்காக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் தேவேகவுடா, குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தின் போதே தேவேகவுடா, பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி தொடர்பாக தன்னுடன் பேசியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என கூறுகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்க அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், சுயேச்சைகள், மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி நடத்தவும், இது முடியாவிட்டால் ஜனதாதளம் (எஸ்) கட்சி துணையுடன் கூட்டணி அமைக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்களும், பா.ஜனதா தலைவர்களும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதுபோல் சுயேச்சைகள், மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

    இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், கூட்டணிக்கு எந்த கட்சி சம்மதம் தெரிவித்தாலும் எங்களின் கோரிக்கைகள், நிபந்தனைகளை உடன்படுபவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்றும் தனது நண்பர்கள் மூலம் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது முதல்-மந்திரி பதவியுடன், நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் எந்த கட்சி மேலிடமும், தலைவர்களும் தலையிடக் கூடாது. கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கக் கூடாது. எந்த கொள்கை முடிவையும் எடுக்க தடை இருக்க கூடாது. ஜனதாதளம் (எஸ்) கட்சி கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்.

    ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வாக்கு வங்கிகள் அதிகமுள்ள பழைய மைசூரு பகுதிகளில் கூட்டணி கட்சியினர் தலையிடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை குமாரசாமி விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் குமாரசாமி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இன்று (சனிக்கிழமை) நடைபெறும் தேர்தல் முடிவை பொறுத்தே 3 கட்சிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி நகரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்த 10-ந்தேதி நள்ளிரவே குமாரசாமி சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் இன்று காலை பெங்களூருவுக்கு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ‘கிங் மேக்கர்' ஆகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
    • ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மீது திரும்பியுள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. சில நிறுவனங்களின் கருத்து கணிப்பில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 'கிங் மேக்கர்' ஆகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. அதாவது ஜனதா தளம் (எஸ்) கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும். அதனால் கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மீது திரும்பியுள்ளது.

    இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி தேர்தல் முடிவடைந்ததும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவர் கடந்த 6 மாதங்களாக ஓய்வின்றி தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், பெங்களூருவில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். நாளை (சனிக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே குமாரசாமி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

    குமாரசாமிக்கு 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவருடன் தனது தனி உதவியாளர் மற்றும் சில நண்பர்களுடன் குமாரசாமி சிங்கப்பூர் சென்று இருப்பதாகவும், அங்கு இன்று ஓய்வு எடுத்துவிட்டு நாளை (சனிக்கிழமை) காலை பெங்களூரு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் குமாரசாமி ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

    ×