search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98971"

    • எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர்.
    • திமுகவை வென்று அதிமுக ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்திட உறுதிமொழி ஏற்றனர்.

    முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அப்போது, அதிமுகவுக்கு சசிகலாவை தலைமை தாங்க வைக்கவும், திமுகவை வென்று அதிமுக ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்திட உறுதிமொழி ஏற்றனர்.

    இதன் பின்னர், செய்தியாளர்களிடம் சசிலா பேசியதாவது:-

    அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது. அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக தொண்டர்களில் முடிவு அடிப்படையிலேயே எல்லாம் நடக்கும்.

    ஜெயலலிதா ஆட்சியில் பொங்கலுக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வில் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சிலர் வெளியே போனார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அ.தி.மு.க.வில் அவர்களுக்கு இடமில்லை.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்க சசிகலா யார்? அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் ஒருங்கிணைக்கும் பணியை வேண்டுமானால் சசிகலா செய்யட்டும். ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழக்கூடாது.

    அ.தி.மு.க.வில் இன்று எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இன்று எழுச்சியாக போய்க் கொண்டிருக்கிறது. சசிகலாவின் கருத்தை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சொல்வது தேவையில்லாத கருத்து. அது எள்ளி நகையாடக் கூடிய கருத்தாகத்தான் இருக்க முடியும்.

    அ.தி.மு.க.வில் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சிலர் வெளியே போனார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அ.தி.மு.க.வில் அவர்களுக்கு இடமில்லை. அவர்களை கட்சியிலும், கூட்டணியிலும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கும் இடங்களைத்தான் மற்றவர்கள் பெற முடியும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பூர்வாங்க வேலைகளை தொடங்கி விட்டோம். தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியையும், ஜெயலலிதாவின் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறோம்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கலாம் என்றனர். இப்போது ஏன் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் வருவதால் ரூ.1000 கொடுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம்.
    • நான் பயந்துகொண்டு ஓடி ஒளிகிற ஆள் இல்லை.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் வி.கே.சசிகலா ஆதரவற்ற முதியோர்களுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார்.

    அப்போது, கேக் வெட்டி, முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, 100 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. சசிகலா முதியோருக்கு உணவு பரிமாறினார்.

    பின்னர் நிருபர்களிடம், வி.கே.சசிகலா கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்குள் அனைவரையும் ஓரணியில் இணைப்பேன். என்னால் நிச்சயமாக முடியும்.

    இருவரும் (எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ்) தனித்தனியாக இருப்பதால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்கிறார்கள்.

    நான் எல்லோருக்கும் பொதுவாக தான் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை ஒரு தாய் எப்படியோ அதுபோல தான் செயல்படுகிறேன்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து, வாழ்த்து செய்தி அனுப்பி வருகிறேன். எனக்கென்று தனி ஆட்கள் கிடையாது. ஒருதாய் போல்தான் எல்லோரையும் பார்க்கிறேன். நான் இருக்கும் வரையில் தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள்.

    எல்லோரையும் இணைக்கும் முயற்சியை தொடங்கி விட்டேன். அது நடந்து வருகிறது.

    தனக்கு பிறகு யார் அ.தி.மு.க.விற்கு தலைமை பொறுப்பில் இருந்தால் சரியாக இருக்கும் என்று ஜெயலலிதாவுக்கு தெரியும். அதற்கான முயற்சியும், அப்போதே நடந்துகொண்டு தான் இருந்தது. அதற்குள் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா மறைந்து விட்டார்.

    பெங்களூர் சிறைக்கு நான் செல்லும் முன்பு, அதிமுகவை ஆட்சியில் அமர வைத்து விட்டு தான் சென்றேன். அ.தி.மு.க. கட்சியை யாராலும் அசைக்க முடியாது.

    நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் இருந்து நான் பெங்களூரில் சிறையில் இருக்கும்போது, மூன்று நிபந்தனைகளுடன் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினார்கள். அதில் ஒன்று நேரில் வர வேண்டும் அல்லது வழக்கறிஞர் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

    அதில் ஒன்று எழுத்து பூர்வமாக நான் அனைத்து விளக்கமும் அளித்து விட்டேன். அ.தி.மு.க.வில் எத்தனை பிரிவுகளாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்றிணைவார்கள்.

    வருகிற தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம். நான் பயந்துகொண்டு ஓடி ஒளிகிற ஆள் இல்லை. ஒரு வீட்டில் 10 பிள்ளைகள் இருந்தாலும் வீட்டிற்கு தாய் ஒன்று தானே?

    ஒருவரை எதிர்க்க வேண்டும் என்றால் நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஒரு பெண் சிங்கமாக இருந்தேன். கருணாநிதி எங்களுக்கு செய்யாத தொந்தரவா? அந்த தொந்தரவுகளை நாங்கள் தாங்கி 2 பெண்மணிகளும் சாதித்து காட்டினோம். எதிர்த்து நின்று நாங்கள் போராடினோம். எங்களுக்கு ஆட்சியை கொடுங்கள் என்று மக்களிடம் போய் கேட்டோம். நாங்கள் சண்டையிடுவதற்கு பயந்து முதுகுக்கு பின்னால் இருந்து போராடியது கிடையாது.

    நானும், ஜெயலலிதாவும் அப்படிதான் இருந்தோம். அதனால் தான் தமிழக மக்களுக்கு நிறைய நல்ல காரியங்களை செய்ய முடிந்தது. இப்போது எனது எண்ணமும் அதுதான்.

    ஜெயலலிதாவுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் நான் தெளிவாக உள்ளேன். அதை தமிழக மக்களும் புரிந்துகொண்டுள்ளனர்.

    எய்ம்ஸ் டாக்டர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் கொடுத்த டாக்டர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்கள், எங்களது அரசு டாக்டர்களும் இருந்தனர்.

    அவர்கள் தினமும் ஜெயலலிதாவின் உடல் நிலையை பற்றி அறிக்கை கொடுத்தனர். அப்படி இருந்த போதும் இதில் மறைக்க ஒன்றுமே இல்லையே.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்த வெளிநாட்டு டாக்டர்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லட்டுமா என்று அவரிடமே கேட்டனர். அதற்கு ஜெயலலிதா வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

    எங்களுக்கு ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஆசை இருந்தது. ஆனால் அவர் ரொம்ப தெளிவாக இங்கே நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள். எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது என்று சொல்லி விட்டார்.

    அவரது சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவர் டி.வி. பார்த்தார். எல்லோரிடமும் நன்றாக பேசினார். நர்சுகளிடமும் அம்மா அன்பாக பழகினார். டிசம்பர் 19-ந் தேதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து செல்ல நாள் பார்த்து இருந்தோம்.

    அதையொட்டி ஜெயலலிதா எல்லோருக்கும் பரிசு கொடுக்க வேண்டும் அதற்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்றார். நாங்கள் நகைக்கடையில் இருந்து வரச்சொல்லி எல்லோருக்கும் நகையை பார்த்து அவரே தேர்வு செய்தார். இத்தனை செட் எங்களுக்கு செய்து கொடுங்கள் என்பது வரை பேசினோம். டிசம்பர் 15-ந் தேதி எங்களுக்கு டெலிவரி கொடுக்க வேண்டும். அதை ஜெயலலிதா கையால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டு இருந்தோம்.

    தி.மு.க. ஆட்சி 20 மாதங்களாக நடக்கிறது. இன்னும் 4 மாதம் வந்தால் 2 வருடங்கள் பூர்த்தி செய்கிறார்கள். இனி பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதில் 3 மாதங்கள் அரசாங்கம் எந்த வேலையையும் செய்ய முடியாது. எந்த திட்டங்களையும் அறிவிக்க முடியாது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 3 மாதங்கள் போய்விடும். மொத்தம் 6 மாதங்கள் போய்விடுகிறது. அப்போது மக்களுக்கு எதை செய்ய வேண்டுமானாலும் 4 வருடத்துக்குள்தான் செய்ய வேண்டும். அதற்கு ஏற்பதான் திட்டம் வகுக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம். நீங்கள் இதை செய்யுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் நீங்களாகவே வாக்குறுதி கொடுக்கிறீர்கள். வாக்குறுதி கொடுத்ததை செய்ய வேண்டுமல்லவா? டிவியில் விளம்பரப்படுத்தினால் அது மட்டும் ஆட்சி கிடையாது. மக்களுக்கு போய் சேர வேண்டும். அதை செய்யவில்லை என்றால் மக்களே முடிவு செய்வார்கள். நான் 1982-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் வந்தேன். அப்போது ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

    அப்போது பெண்கள் வெளியில் வருவது ரொம்ப கஷ்டம். அந்த சமயத்தில் நாங்கள் வாழ்நாள் முழுவதும் பட வேண்டிய கஷ்டத்தை பட்டு விட்டோம். அதையெல்லாம் மீறிதான் ஆட்சிக்கு வந்தோம்.

    பெண்களுக்கு அம்மா நல்லது செய்வார். நான் தீபா உள்பட யாரையும் திட்டுவதில்லை. அறிவுபூர்வமான விஷயங்களை எடுத்து செல்லுவேன். உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். இதை செய்யுங்கள் என்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.
    • அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன்.

    சென்னை :

    சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பங்கேற்றார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன்.

    * நான் இருக்கும் வரை அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள்.

    * அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன்.

    * அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது

    * ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

    * தனக்கு பின்னால் யார் வந்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும்.

    * சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் சொன்னார்.

    * பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க அரசு முன்வரவேண்டும்.

    இவ்வாறு சசிகலா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதாவுக்கு துணையாக மட்டும் தானே நீங்கள் இருந்தீர்கள்.
    • சசிகலா அரசியல் வேண்டும் என்று ஏன் இப்போது ரோடு ரோடாக அலைகிறார்.

    சென்னை:

    ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கும், சசிகலாவுக்கும் மோதல் வலுத்து வருகிறது. சசிகலாவுக்கு எதிராக தீபா பரபரப்பான ஆடியோ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தீபா புதிதாக வெளியிட்டு உள்ள ஆடியோவில் கூறி இருப்பதாவது:-

    ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொள்வது போல் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டார்கள். அது அப்பல்லோ மருத்துவமனையே கிடையாது என்று பலரும் பல தடவை சொல்லி இருக்கிறார்கள்.

    குறிப்பாக அது 2016-ம் ஆண்டு எடுத்த போட்டோ கிடையாது. கமிஷன் விசாரணை நடக்கும்போது அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குள் நான் சென்றேன். அங்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையை காண்பித்தார்கள். அது ரொம்ப பெரிய அறையாக இருந்தது. அது போட்டோவில் இருப்பது போன்று சிறிய அறை அல்ல. ஜன்னல் வழியாக ஒரு மரம் இருப்பது போல் காட்டுகிறார்கள். அது கிடையாது. இதுவும் ஒரு அப்பட்டமான பொய்.

    அந்த வீடியோ வெளியிட்ட அப்போதைய அ.தி.மு.க. பிரமுகர் சசிகலா தரப்பை சேர்ந்தவர். சசிகலா சொல்லி தான் பழைய வீடியோவை தயார் செய்து கொடுத்து வெளியிட்டுள்ளனர். போலி வீடியோ தயார் செய்வதில் சசிகலாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்கள். அது தான் அவர்கள் தொழிலே. அதை நல்லா ரெடி பண்ணி இருக்கிறார்கள்.

    அவர்களின் சொந்த குடும்பத்தினர் எல்லோருமே அதிகாரத்தை விரும்புவார்கள். டி.டி.வி. தினகரனை அரசியலை விட்டு விலக சொல்லுங்கள். உங்களுக்கு எதற்கு அரசியல். நீங்கள் எப்போதும் நல்லவர்கள் தானே. உங்களுக்கு எதுவும் வேண்டாம் தானே. ஜெயலலிதாவை பாதுகாத்தவர்கள் தானே. அரசியல் வேண்டாம் என்று விலகி விடுங்கள். எதற்கு அதில் இருக்கிறீர்கள்?

    ஜெயலலிதாவுக்கு துணையாக மட்டும் தானே நீங்கள் இருந்தீர்கள். சசிகலா அரசியல் வேண்டும் என்று ஏன் இப்போது ரோடு ரோடாக அலைகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொள்கிறார்.

    மக்களால் விரட்டியடித்து துரத்தப்பட்ட நீங்கள் அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளரா? அப்போது என் வீட்டு வாசலில் எதற்காக வந்து நின்றார்கள். நீங்கள் வேண்டாம் என்று தானே மக்கள் வந்தார்கள். நீங்கள் தியாகத்தலைவி தானே. எல்லாவற்றையும் விட்டு செல்லுங்கள். இப்போது எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் உங்களை எல்லோரும் நம்புவார்கள்.

    எனது தாயாரை பற்றி பேச நீங்கள் யார்? உங்கள் அண்ணி இளவரசி அண்ணியா? யாருக்கு அண்ணி? உங்களுக்கு தானே? எனது தாயார் பெயரை விஜயலட்சுமி என்று சொல்ல நீங்கள் யார்? எனது தம்பியை கெடுத்து, எனது குடும்பத்தை அழித்து, எனது அப்பாவை கொன்று, எனது அத்தையை கொன்று, என் வாழ்க்கையை அழித்து, என் வயிற்றில் வளர்ந்த குழந்தையை அழித்து, பணத்துக்காகவும், அதிகார ஆசைக்காகவும், எவ்வளவு செய்வீர்கள்? நாங்கள் என்ன தவறு செய்தோம். ஏதோ ஒரு மூலையில் தானே வாழ்ந்து கொண்டிருந்தோம். எனது தாயார் சாவுக்குகூட அத்தையை வரவிடாமல் தடுத்து ஏமாற்றியவர் தானே நீங்கள். நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று எனக்குத்தான் தெரியும். என் தம்பி எப்படி உண்மையை சொல்லுவான். நீங்கள் தான் அவரை கைக்குள் வைத்திருக்கிறீர்களே? முதலில் அவரை விடுங்கள்.

    சசிகலா நீங்கள் அரசியலை விட்டு விலகுங்கள். டி.டி.வி. தினகரன், உங்கள் குடும்பம் எல்லோருமே விலகுங்கள். ரூ.5 லட்சம் கோடியை எங்கிருந்து சம்பாதித்தீர்கள். எங்கள் அத்தை தங்க முட்டையிடும் வாத்தா? இப்படித்தானே சொல்லிக்கொண்டு சுற்றுகிறீர்கள். உங்களுக்கு தங்க முட்டை இடுவதற்காக ஜெயலலிதாவை அடிமையாக வைத்திருந்தீர்களா?

    தைரியம் இருந்தால் நீங்கள் என்னிடம் வந்து பேசுங்கள். வாருங்கள் உட்கார்ந்து பேசலாம். நாங்கள் என்ன செய்தோம், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பேசுவோம். எனது அப்பாவுக்கும், அத்தைக்கும், எனக்கும், எனது தாயாருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எப்படியெல்லாம் நல்லுறவு என்று நான் காட்டுகிறேன்.

    அந்த வீட்டுக்குள் இருக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எதிரில் வீடு கட்டுகிறீர்களா? எப்படி வந்தது பணம். இதையெல்லாம் எல்லோரும் கேட்க வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரும் கேட்க வேண்டும். தமிழக மக்கள் கேட்க வேண்டும். தமிழக அரசு அவர்கள்மீது நடவடிக்கைகளை தள்ளிப் போடாமல் யாருக்கும் கட்டுப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை.

    சசிகலா மற்றும் அவரை சேர்ந்தவர்களால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் நிச்சயமாக ஆபத்து இருக்கிறது. அதற்கு பயந்து தான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். எனது குடும்பத்துக்கு தெய்வம் எனது தாயார். அவர் எனது உயிர். எங்கள் குடும்பத்துக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனது தாயாரை பற்றி பேசினால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    இவ்வாறு அந்த ஆடியோவில் தீபா கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அத்தைக்கு என்னை பிடிக்காது என்று சொல்வதும், சகோதரர் தீபக்கை மட்டும் பிடிக்கும் என்று சொல்வதும் பொய்.
    • எனது குடும்பத்தை பற்றியும், எனது அம்மா பற்றியும் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் ஜெ.தீபா பற்றியும், அவரது தாய் பற்றியும் அவர் பல தகவல்களை கூறி இருப்பதாக தெரிகிறது.

    ஜெயலலிதாவுக்கும் தீபாவுக்கும் இணக்கமான சூழல் இருந்ததில்லை என்றும், ஜெயலலிதாவால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவின் தாய் விஜயலட்சுமி புகார் தெரிவித்து இருந்ததாகவும் சசிகலா கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    சசிகலா உண்மை விரும்பியாக இருந்திருந்தால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்கிற கேள்வியே எழுந்திருக்காது.

    எனது தாய் விஜயலட்சுமி பற்றி பேசுவதற்கு சசிகலா என்ற 3-வது நபருக்கு எந்த அருகதையும் இல்லை. இதனை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் எனது தாய் அத்தையை பற்றி புகார் கூறியதாக சசிகலா கூறி இருப்பதில் உண்மை இல்லை. எனது அத்தைக்கு சசிகலாவால் ஆபத்து உள்ளது என்றே அப்போது புகார் அளிக்கப்பட்டது.

    வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் சசிகலா அவர் மீதுள்ள தவறுகளையெல்லாம் மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கூறியுள்ளார்.

    சசிகலா கூறுவது போல எனது அம்மா விஜயலட்சுமி, கருணாநிதியையோ, வாழப்பாடி ராமமூர்த்தியையோ போய் சந்தித்து பேசியதே இல்லை.

    சசிகலாவுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து பேசட்டும். எனது அம்மாவை பற்றி பேசினால் நன்றாக இருக்காது. உங்கள் மரியாதையை கெடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லையென்றால் போலீசிடமும், கோர்ட்டிலும் நிரூபிக்க வேண்டும். மக்களிடமும் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எனக்கு காழ்ப்புணர்ச்சி என்றும், அத்தையை பற்றி எனது அம்மா தவறாக பேசினார் என்றும் தப்பு தப்பாக விமர்சிப்பது சரியாக இல்லை. இதற்காக சசிகலா மீது சட்டரீதியான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.

    அத்தைக்கு என்னை பிடிக்காது என்று சொல்வதும், சகோதரர் தீபக்கை மட்டும் பிடிக்கும் என்று சொல்வதும் பொய். எங்கள் அத்தை அப்படிப்பட்ட ஆள் இல்லை. 1997ல் மத்திய சிறைச்சாலையில் நானும் தீபக்கும் தான் சென்று பார்த்தோம். இதுபோல் பலமுறை சந்தித்துள்ளோம். அதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆனால் சசிகலாவின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. சுதாகரன் திருமணம் நடந்து முடிந்ததும் எனது தந்தை இறந்து போனார். அதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல்தான் உள்ளது.

    இதேபோல் எத்ததையோ சந்தேகங்கள் அவர் மீது உள்ளது. எனது அத்தைக்கு ஏற்பட்ட அனைத்து களங்கங்களுக்கும் சசிகலாவே காரணமாகும்.

    அத்தையின் மரணத்தில் அவர்களது செயல்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எந்த தவறும் செய்யவில்லை என்றால் அத்தையை பார்க்க என்னை அனுமதிக்காதது ஏன்? கேமராக்களை அணைத்து வைத்ததற்கு காரணம் என்ன? அவர்களின் ஆதாயத்துக்காக அத்தையை தவறாக பயன்படுத்தினர். எல்லா உண்மைகளும் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும். எத்தனை காலம்தான் மறைத்து வைக்க முடியும். எனது குடும்பத்தை பற்றியும், எனது அம்மா பற்றியும் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. சசிகலா இதோடு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

    எனது தம்பியை கெடுத்து... எனது அப்பாவை கொன்று... எனது அத்தையை (ஜெயலலிதா) கொன்று எனது வாழ்க்கையை அழிச்சி, எனது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் சசிகலா அழித்துள்ளார். எனது அம்மாவின் சாவுக்குகூட அத்தையை வரவிடாமல் ஏமாற்றியவர்தான் சசிகலா. எனது தம்பியை பிடித்து கைக்குள் வைத்திருக்கிறீர்கள். முதலில் அவனை விடுங்கள். அவனை பிடித்த சனியனாவது ஒழியட்டும்.

    அரசியலை விட்டு நீங்கள் (சசிகலா) விலக வேண்டும். எங்கிருந்து சம்பாதித்தீர்கள் இத்தனை கோடிகளை? தைரியமிருந்தால் என்னிடம் வந்து பேசுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாங்கள் என்ன செய்தோம் என பேசலாம்.

    இத்தனை கோடிகள் எப்படி வந்தது என்பது பற்றி அ.தி.மு.க. தொண்டர்களும் தமிழக மக்களும் கேட்க வேண்டும். தமிழக அரசு, 'சசிகலா மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் எனக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும் நிச்சயமாக ஆபத்து உள்ளது. அதற்கு பயந்துதான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன். எனது அம்மாவை பற்றி பேசியதற்கு சசிகலா பதில் சொல்லியே தீர வேண்டும்.

    இவ்வாறு தீபா ஆடியோவில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    • தி.மு.க.வுக்காக உழைத்தவர்கள் கடைகோடியில் நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.
    • ஜனநாயகத்தில் மன்னராட்சியை கொண்டுவந்த பெருமை தி.மு.க.வையே சாரும்.

    சென்னை

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு கருத்து தெரிவித்து, சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    புயல், மழை, வெள்ளத்தால் விவசாயிகள் படும்பாடு, மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. வீடு, வாசலை இழந்து தங்குவதற்கு இடம் இன்றி மக்கள் தவித்து வருகிறார்கள். மக்கள் பணிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவசரகால பணியாக முடிசூட்டு விழா நடந்திருக்கிறது. தி.மு.க.வினர் அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? முடிசூட்டும் விழாவா? என்று தெரியவில்லை. தங்கள் ஆட்சி முடிவதற்குள் வரிசையில் உள்ள அடுத்த வாரிசின் முடிசூட்டு விழாவும் நடந்தேறும்.

    ஜனநாயகத்தில் மன்னராட்சியை கொண்டுவந்த பெருமை தி.மு.க.வையே சாரும். தி.மு.க.வுக்காக பாடுபட்ட எத்தனையோ அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள், திறமையானவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் வாய் திறக்கமுடியாமல் மவுனமாக இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தி.மு.க.வுக்காக உழைத்தவர்கள் கடைகோடியில் நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான். இதைத்தான் திராவிட மாடலாக பார்க்க முடிகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வாக்காளர் முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது,

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி உயர்வை வைத்தே மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். ஆவின்பால் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்திவிட்டனர். மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி போன்ற அனைத்தையும் உயர்த்திவிட்டனர்.

    தி.மு.கவுக்கு வாக்களித்த மக்களும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று தி.மு.கவினர் கூறிவருகின்றனர். மழைநீரே இல்லை என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சென்னை மழைநீரில் தத்தளிக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 4ஆக உடைந்துவிட்டது. இவர்கள் ஒன்றுசேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

    இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.கவின் 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் 70 பேர் உள்ளனர். 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்ளனர். தி.மு.க ஆட்சியின் அவலத்தை மக்கள் தற்போது நன்றாக உணர்ந்து உள்ளனர். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவது உறுதி. இதற்காக அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அவர் தெரித்தார். இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அபார வெற்றிபெறும். இந்த கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோருக்கு இடமில்லை. அவர்கள் வருவதால் அ.தி.மு.கவுக்கு எந்த லாபமும் இல்லை. தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை கைது செய்யும் போலீசாரை ஆளும்கட்சியினர் மிரட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாம்களில் கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, அபிராமி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
    • தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.

    தேசிய கட்சியான பா.ஜனதாவுக்கு இரு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் பலம் என்பது தொடர்ந்து வரும் அரசியல் வரலாறு. முதல் முதலாக 1998 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இடங்களில் வெற்றியும் பெற்றது.

    அந்த தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததால் மறு ஆண்டே தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உருவானது. அப்போது பா.ஜனதாவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு 4 இடங்களில் வெற்றிபெற்றது.

    மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி 2014 பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா சந்தித்தது. அந்த தேர்தலில் இரு திராவிட கட்சிகளின் ஆதரவும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.

    நாடுமுழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தனித்து நின்ற அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் அ.தி.மு.க.வுக்குள் குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை மோடி சமரசப்படுத்தினார். அதன் விளைவாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் 4 ஆண்டுகளையும் நிறைவு செய்தார்கள்.

    2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து நின்ற டி.டி.வி. தினகரனையும் இணைத்துக்கொள்ளும்படி பா.ஜனதா வற்புறுத்தியது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஏற்கவில்லை.

    தேர்தலில் தி.மு.க. வென்றது. ஆனால் 50 தொகுதிகளுக்கு மேல் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. அப்போது பா.ஜனதாவின் வேண்டுகோளை அ.தி.மு.க. நிராகரித்ததே தோல்விக்கு காரணம் என்று பா.ஜனதா கூறியது.

    அ.தி.மு.க. கூட்டணியால் சட்டமன்றத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சென்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பிளவு அந்த கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

    நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிக அளவில் இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. இரட்டை தலைமைதான் வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.

    2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூர்வாங்க பணிகளை பா.ஜனதா தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்களை பா.ஜனதா மேலிடம் கண்காணித்து வருகிறது. அதில் பா.ஜனதாவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத தமிழகத்தில் வரும் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது.

    இதில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை பா.ஜனதா மேலிடம் சரிகட்ட விரும்புகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைப்பதற்காக பலமுறை முயற்சி எடுத்தும் பலன் அளிக்கவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை வந்த பிரதமர் மோடியை வழியனுப்ப இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் அருகருகே நின்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை கூட தவிர்த்தனர்.

    மறுநாள் சென்னை வந்த அமித்ஷா சமரச முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. ஓ.பன்னீர் செல்வம் மட்டும் அமித்ஷா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்படியும் பா.ஜனதா தலையிட்டு சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்.

    இதற்கிடையில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷாவை ஆடிட்டர் குரு மூர்த்தி தனியாக சந்தித்து 10 நிமிடங்களுக்கும் மேல் பேசி இருக்கிறார்.

    இந்த சந்திப்பின் போதும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருப்பது கட்சி ரீதியாக பலம் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பா.ஜனதாவுக்கும் சாதகமாக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    அந்த கருத்துக்களை கேட்ட அமித்ஷா கட்சி நிர்வாகிகளிடம் 'பூத்' அடிப்படையில் இப்போதே பணியை தீவிரப்படுத்துங்கள். குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் வருகிறேன். அப்போது தொடர்ந்து விவாதித்து செயல்திட்டங்களை வகுக்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. ஒன்றுபடாவிட்டால் ஓ.பி.எஸ். தரப்பு எடப்பாடி தரப்பை தோற்கடிப்பதற்கான வேலைகளை செய்யும். சட்ட மன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனால் சில தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றதை போல் பாராளுமன்ற தேர்தலில் நிகழ்ந்தால் அது பா.ஜனதாவுக்குத்தான் பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது.

    சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் கட்சியை பெருமளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவின் வற்புறுத்தலை ஏற்பாரா? வேறு ரூட்டை போடுவாரா? என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

    • வெளிநாடுகளில் இருந்து வந்த மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளும் ஏற்கப்படாதது ஏன்? என்ற கேள்வியையும் ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பி உள்ளது.
    • மிக முக்கியமாக ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் நிலவும் மர்மமும் சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அளித்துள்ள தகவல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருப்பதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெய லலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு அது தொடர்பாக அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை சுற்றியே இந்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    சசிகலா அளித்துள்ள பதிலில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாைவ சேர்த்ததற்கான காரணத்தை விவரித்துள்ளார். ஜெயலலிதாவின் இதயத்திலும், நுரையீரலிலும் பிரச்சினைகள் இருப்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினைகளை கண்டறிய மருத்துவர்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று பரிந்துரை செய்ததை ஏன் ஏற்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

    அதுபோல வெளிநாடுகளில் இருந்து வந்த மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளும் ஏற்கப்படாதது ஏன்? என்ற கேள்வியையும் ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பி உள்ளது. மிக முக்கியமாக ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் நிலவும் மர்மமும் சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது. எனவே இதில் உண்மையை கண்டறிய தமிழக அரசு அமைக்கப் போகும் அடுத்தக்கட்ட விசாரணை சசிகலாவை சுற்றியே அமையும் என்று பேசப்படுகிறது. மீண்டும் சசிகலா விசாரணை வளையத்துக்குள் வரப்போவது தவிர்க்க முடியாது என்கிறார்கள்.

    • ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே.
    • அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேசமாட்டார்கள்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினரும் பொது மக்களும் அவர் இறந்த உடனேயே குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை தற்போது தாக்கல் செய்து உள்ளது.

    அதில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்பட சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க முன் வராதது குறித்தும் பல்வேறு சந்தேகங்களை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் படி தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக மாலைமலர் நிருபருக்கு தீபா அளித்த பேட்டி வருமாறு:-

    எனது அத்தை ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது அவர் மரணம் அடைந்த உடனேயே மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. பொதுமக்களும் இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது எப்படி? எந்த மாதிரி நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் என்ன? என்பவற்றையெல்லாம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் பலர் வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சசிகலா மீதும் ஓ.பன்னீர் செல்வம் மீதும் அப்போது இருந்த அமைச்சர், அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி இருக்கிறது. எனவே இதில் தவறு செய்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

    காவல்துறையை பொறுத்தவரையில் சசிகலாவுக்கு தற்போது இருக்கும் அதிகாரிகள் பலரும் நெருக்கமானவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவரது அதிகாரம் அப்படிப்பட்ட அதிகாரமாக இருந்தது.

    எனவே இதையெல்லாம் ஆலோசித்து நேர்மையான காவல்துறை அதிகாரியை நியமித்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நடத்த வேண்டும்.

    ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே. அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேச மாட்டார்கள். நமது நாட்டில் பல தலைவர்கள் இதற்கு முன்பு உயிர் இழந்து உள்ளனர்.

    எம்.ஜி.ஆர்., கருணாநிதி என அனைவரது மரணமும் இயற்கையாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர். மரணமடைந்த நேரத்தில் இவ்வளவு தகவல் தொழில்நுட்ப வசதி கிடையாது. இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? எந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்தனர்.

    வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அது போன்று சசிகலாவும் அவரால் கோடி கோடியாக சம்பாதித்த அ.தி.மு.க. தலைவர்களும் ஏன் ஜெயலலிதாவை காப்பாற்ற முன்வரவில்லை.

    ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அப்போது இருந்த ஆட்சியாளர்களுக்கும், உடன் இருந்த சசிகலாவுக்கும் உண்டு.

    திட்டமிட்டு சூழ்ச்சி செய்து எனது அத்தை உயிர் இழப்பதற்கு அவரை சுற்றி இருந்தவர்களே காரணமாக இருந்துள்ளனர்.

    ஜெயலலிதாவிடம் அளித்த உறுதி மொழியை மீறி அவரது இருக்கையில் அமர்வதற்கு சசிகலா ஆசைப்பட்டார். இதன் காரணமாகவே ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும்.

    எனவே அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக அரசு வெளிக்கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது எதற்காக? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர்தானே முதல்-அமைச்சராக இருந்தார். எனவே அவரும் ஜெயலலிதாவின் மரணத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    இந்த விஷயத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள் அனைவரும் கடமை தவறி இருப்பது ஆணையத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

    அ.தி.மு.க.வை வளர்ப்பதற்கு ஜெயலலிதா செய்த தியாகங்கள் எதையும் அவரால் பயனடைந்தவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்படி நினைத்து பார்த்திருந்தால் அவரது உயிரை நிச்சயம் காப்பாற்றி இருப்பார்கள்.

    தற்போது சசிகலா தவறு செய்யவில்லை என்று கூறுகிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஏன் எங்களை எல்லாம் பார்க்க விடவில்லை. நாங்கள் அவரை நெருங்க கூட முடியவில்லை. இதற்கு சசிகலாவும் அவருடன் இருந்தவர்களுமே காரணம்.

    எனவே மரணத்துக்கு பதில் சொல்ல வேண்டிய முழு பொறுப்பு சசிகலாவுக்கே உள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வருவது மிகப்பெரிய நாடகமாகும். பன்னீர்செல்வத்தை வெளியேற்றி விட்டு எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து நாடகமாடுகிறார்.

    ஓ.பி.எஸ் வழியே சென்று சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் இருவருமே சேர்ந்து நாடகம் ஆடுவது உறுதியாகியுள்ளது. மக்கள் ஏமாளிகள் அல்ல.

    எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை. முதுகில் குத்தும் இந்த அரசியல் வேண்டாம் என்றுதான் நான் ஒதுங்கி இருக்கிறேன்.

    அத்தையின் மரண விவகாரத்தில் கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆணைய அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். அத்தையின் மரணத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.

    • ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
    • ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.

    75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா உயிரிழந்து விட்டதை அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுபற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்தஅறிவிப்பை வெளியிட்டார்.

    இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தீவிரப்படுத்தினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 159 பேரிடம் விசாரணை நடத்தி நீதிபதி ஆறுமுகசாமி அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றார். இது தவிர அரசு துறை அதிகாரிகளிடமும், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    சசிகலாவின் உறவினர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இப்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி 611 பக்க அறிக்கையை தயாரித்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நீதிபதி ஆறுமுகசாமி 5 ஆண்டுகள் வரை விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினார். இதில் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் இடம்பெற செய்துள்ளார்.

    ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க தேவையில்லை என்றும் சென்னையிலேயே சிகிச்சை அளித்தால் போதும் என்றும் சசிகலா கூறியதாகவும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுபோன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா உயிரிழந்த மரண தேதியிலும் குழப்பம் உள்ளது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் ஒரு டாக்டராக இருந்தும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி, அப்பல்லோ டாக்டர்களையும் விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார். இது தொடர்பாக சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர்கள் எஸ்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    இதையடுத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் சுகாதார முதன்மை செயலாளருக்கு ஆணையத்தின் அறிக்கை அளிக்கப்பட்டு அதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான முன்னெடுப்புகளை துறை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆணையத்தின் பரிந்துரைப்படி குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை விரைவில் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதன்படி சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சுகாதார துறையினர் விரைவில் காவல்துறையில் புகார் மனு அளிக்க உள்ளனர். இதனை பின்பற்றியே சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட உள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார். இவருக்கு கீழ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்திலான அதிகாரிகளும் இடம்பெற உள்ளனர்.

    இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர உள்ளனர்.

    ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

    இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகமும் அச்சமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதனை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே புதிய குழு அமைக்கப்பட உள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடித்து வரும் மர்மம் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது மரணம் இயற்கையானது இல்லை என்பது போன்ற தோற்றத்தையே ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் உரிய பதில் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயலலிதா மரணத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா உள்ளிட்டோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட இருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    ×