search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு"

    • அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 158 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சிபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பாலுசாமி(54) என்பவரது வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும், பாலசுப்பிரிமணியின்(45) வீட்டில் 40 குரோஸ் பட்டாசு திரிகளும், காளிராஜ்(48) வீட்டில் 42 குரோஸ் பட்டாசு திரிகளும், சரவணன்(56) வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ேபாலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    • பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    • 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விருதுநகர்

    திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவபெருமான் (வயது43). இவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரிகள், மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவரிடம் இருந்து 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் பகுதியில் செயல்படும் பட்டாசு ஆலையில் 2 தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு 3 அறைகள் சேதமாகின.

    இதுகுறித்து ஒத்தையால் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் அங்கு ஆய்வு செய்து விருதுநகர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் ஆலையின் உரிமையாளர் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்திய தாயில்பட்டியை சேர்ந்த வினோத், அன்பில் நகரத்தை சேர்ந்த பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலைகளில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய மாணவர்கள் தீர்வு காண வேண்டும் என ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
    • சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 18-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கலந்து கொண்டார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பலர் அறக்கட்டளைகள் தொடங்கி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் காமராஜரே முன்னோடியாக திகழ்கிறார். பட்டம் பெற்ற நீங்கள் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    நீங்களும் தொழில்முனைவோராக மாறி சிவகாசியின் பெயரை உலக அளவில் உச்சரிக்க உதவியாக இருக்கவேண்டும். இந்தியாவில் உள்ள பணிகளை செய்ய அதிகமானவர்கள் தேவைப்படும் நிலையில் பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வதை தவிர்க்கவேண்டும்.

    தமிழகத்தில் போதிய ஆட்கள் இல்லாத நிலையில் தான் வடமாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் நீர்நிலைகளை உருவாக்கி, பாதுகாக்க வேண்டும்.

    பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய தேவையான வழிமுறைகளையும், நிரந்தர தீர்வுகளையும் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் 1,057 மாண-மாணவிகளுக்கு பட்டங்களை நீதிபதி ஸ்ரீமதி வழங்கினார். காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ண மூர்த்தி, காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் வளர்மதி, மாணவர்களின் பெற்றோர்கள், உறவி னர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை துணை முதல்வர் முத்துலட்சுமி செய்திருந்தார்.

    • சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பூமிபூஜை மார்ச் மாதத்தில் பணிகள் முடியும்.
    • இது குறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலைமலரில் வெளியானது.

    சிவகாசி

    நாட்டின் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் சிவகாசி பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி விரைவில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

    இந்த நிைலயில் சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைப்பதன் அவசியம் குறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலைமலரில் வெளியானது. இதன் எதிரொலியாக சிவகாசி அருகே உள்ள ஆனை கூட்டம் கிராமத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் கீழ் இயங்குகி வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் (நீரி)சார்பில் ரூ. 15 கோடியில் பட்டாசு வேதிப்பொருள் ஆய்வு மையம் கட்டிடத்திற்கான பூமி பூஜை பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை துறை இயக்குனர் வேட் பிரகாஷ் மிஸ்ரா, நீரி இயக்குனர் அடுல் வைத்தியா ஆகியோர் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி ைவத்தார் .

    இதில் விஞ்ஞானி சாதனா ராயலு, பட்டாசு மற்றும் கேப் வெடி சங்கத் தலைவர் கணேசன், துணைத் தலைவர்கள் ராஜரத்தினம், அபி ரூபன், பொதுச் செய லாளர் பாலாஜி, பாபநாசம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் விஞ்ஞானி சாதனா ராயலு நிருபர்களிடம் கூறுகையில், ஆனை கூட்டம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நீரில் பதிவு செய்து சான்று பெற்றுள்ளனர். கட்டுமான பணி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டிட பணி நிறைவு பெறும் என்றார்.

    • சிவகாசியில் கிடப்பில் போடப்பட்ட பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனே அமைக்க வேண்டும்.
    • பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    நாட்டில் 90 சதவீத பட்டாசு உற்பத்தி சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் கடந்த ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு, விஞ்ஞானி சரவணன் உள்பட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் சிவகாசியில் பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி கிராமத்தில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிவிப்பு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைவதற்கான எவ்வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.

    பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டால் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றுகளை பயன்படுத்தி வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதும் உள்ள கெமிக்கல் ஆலை மற்றும் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுப்பி வைக்கலாம்.

    மேலும் இந்த மையத்தின் மூலம் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, தரமான வேதிப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க முடியும். எனவே சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனடியாக தொடங்குவதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது.
    • சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

    சிவகாசி :

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 1,070-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கு தேவையான பட்டாசுகளில் சுமார் 60 சதவீதம் மட்டுமே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணர்ந்த சில வடமாநில பட்டாசு வியாபாரிகள் முன் கூட்டியே சிவகாசியில் உள்ள ஆலைகளில் பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    அதனால் வடமாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முழுமையாக அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்ததை போலவே பட்டாசு விற்பனை அதிகமாக இருந்ததால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 12 ஆண்டுகளாக ஒரு சிறிய வெடி கூட வெடிக்காமல், தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • நீர், நிலம்,காற்று உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் ஆறாக்குளம் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு சிறிய வெடி கூட வெடிக்காமல், தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து ஆறாக்குளம் கிராம மக்கள் கூறியதாவது :-

    பட்டாசு வெடிப்பதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பட்டாசு வெடிப்பால் ஜீவராசிகள் மக்களிடமிருந்து விலகி சென்று விடும். நீர்,நிலம்,காற்று உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது. பறவை இனங்கள் இல்லாவிட்டால் வேளாண்மை பாதிக்கும். இதனால் கடந்த 12 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி வீடு தோறும் தீபங்களை ஏற்றி வீட்டிலும்,கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தி உற்றார்,உறவினர் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு இனிப்பு பலகாரங்களை வழங்கி மனம் விட்டு பேசி மகிழ்ந்து மதியம் குடும்பத்தினர்,நண்பர்களுடன் விருந்து உண்போம். ஏழை மக்களுக்கு எங்களால் முடிந்த தான,தர்மங்கள் செய்திடுவோம்.குழந்தைகள், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகைக்கு முன்பு 17-ந்தேதி பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களில் காற்று மாசு பதிவிடப்பட்டது.
    • காற்று மாசுவை பொறுத்தமட்டில் சவுகார்பேட்டையில் அதிகளவு பதிவாகி இருந்தது.

    சென்னை :

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை கண்டறிய சென்னை பெசன்ட்நகர், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த இடங்களில் தீபாவளி தினத்தன்று குறைந்தளவு ஒலி மாசு பெசன்ட்நகரிலும், அதிகளவு ஒலி மாசு திருவொற்றியூரிலும் கண்டறியப்பட்டது.

    பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களிலும் பதிவான ஒலி மாசு, தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலி மாசுபாட்டின் அளவுகளை விட மிக அதிக அளவானதாகும்.

    காற்று மாசுவை பொறுத்தமட்டில் அன்றைய தினம் பெசன்ட்நகரில் குறைந்தளவும், சவுகார்பேட்டையில் அதிகளவும் இருந்தது பதிவாகி இருந்தது.

    பெசன்ட்நகர், தியாகராயநகர் ஆகிய இடங்களில் மிக மோசமான அளவும், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 5 இடங்களில் அபாயகரமான அளவும் காற்று மாசு பதிவாகி இருந்தது.

    தீபாவளி பண்டிகைக்கு முன்பு 17-ந்தேதி பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களில் காற்று மாசு பதிவிடப்பட்டது. அதன்படி, தீபாவளி தினத்தன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 7 இடங்களில் குறைந்தளவு காற்று மாசு பதிவான பெசன்ட்நகரில் வழக்கத்தை விட 8 மடங்கு அதிகமாகவும், அதிகளவு காற்று மாசு பதிவான சவுகார்பேட்டையில் 11 மடங்கு அதிகமாகவும் காற்று மாசு பதிவாகி இருந்தது.

    காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மை, காற்றின் மிகக்குறைந்த வேகம் ஆகிய வானிலை அமைப்பு பட்டாசுகளை வெடித்ததால் ஏற்பட்ட புகையை வான்வெளியில் விரவுவதற்கு ஏதுவான சூழ்நிலையாக அமையவில்லை. இதுவே, சென்னை மாநகர பகுதியில் தீபாவளி தினத்தன்று காற்று மாசு அதிகமானதற்கு காரணம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
    • தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா உள்ளிட்ட பாதிப்புக்களுக்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசுகள் அதிக அளவு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதனை மீறி பட்டாசு வெடிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர். பலர் அரசு அனுமதித்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்தனர். ஆனால் அரசு அனுமதித்த நேரத்தையும் மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்த்து, 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    • மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
    • அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

    இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: -

    ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகை அனைவரும் கொண்டாடி மகிழும் முக்கிய திருநாளாகும். இந்த நாளில் வண்ணவண்ண மத்தாப்புகளை கொளுத்தி மகிழும் வழக்கம் உள்ளது. நாம் கொளுத்தி மகிழும் மத்தாப்புகளுடன், ஒலி எழுப்பும் பட்டாசுகளால் ஒலி மாசு ஏற்படவும், நம் காதுகளின் கேட்கும் திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, பட்டாசுகளை வெடிக்கும்போது வெளியாகும் புகையால், காற்று மாசு ஏற்படவும், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது.

    நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்த மாவட்டமும் உயிா்கோளப் பகுதி என வரையறுக்கப்பட்ட மிக மென்மையான சூழலை கொண்டப் பகுதியாகும். பல்வேறு வகையான வனவிலங்குகளுக்கும், அரியவகை தாவரங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

    இச்சூழலில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படின், அது மாவட்டத்தின் மென்மையான சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். எனவே, அவற்றைத் தவிா்த்து, வனங்களில் காணப்படும் விலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட மக்களாகிய அனைவருக்கும் உள்ளது.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கும்படியும், அதிக ஓசை எழுப்பக்கூடிய தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறுவோா் மீது காவல் துறையினா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வா்.

    இதுபோன்றே, பட்டாசு விற்பனையாளா்களும் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. மீறும் விற்பனையாளா்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, அபராதமும் விதிக்கப்படும் .

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
    • 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். சுமார் 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு மழைகாலங்களில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.

    இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள் ஒலி எழுப்பினால் அச்சமுற்று வேறு இடத்திற்கு சென்றுவிடும் என்பதால் சரணாலயத்திற்கு அருகில் வசிக்கும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்கள் ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிப்பதில்லை. திருமணம், திருவிழாக்கள், தீபாவளி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தலைமுறையாக பறவைகளின் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் சிறு மகிழ்ச்சியை தியாகமாக செய்வதை போற்றும் வகையில் சிவகங்கை வனக்கோட்டம், திருப்பத்தூர் வனச்சரக அதிகாரிகள் ஆண்டு தோறும் தீபாவளிக்கு முன்பு கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி கவுரவிப்பார்கள். அது போல் இந்த ஆண்டும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    ×