search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    கோவை அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் மதன்லால். இவர் இடையர் பாளையம் அருகே உள்ள ஒரு குடோனில் பழைய பொருட்களை சேர்த்து வைத்து இருந்தார்.

    இந்த குடோனில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. குடோனில் கழிவு பிளாஸ்டிக் பொருட்களும் இருந்ததால் பெரும் கரும் புகை உருவானது.

    குடோன் அருகே மரக்கடைகள் உள்ளதால் அக்கடைகளுக்கு தீ பரவும் நிலை ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தான் தீயை அணைக்க முடிந்தது.

    தீப்பிடித்த பழைய பொருட்கள் குடோன் அருகில் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடந்தது. அதற்கு யாரோ தீ வைத்த போது அந்த தீ குடோனுக்கும் பரவி இருக்கலாம் என தெரிகிறது.

    சேத மதிப்பு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் அதன்படி செயலாளர்ராக சிங்காரம், பொருளாளராக வி.கே.ஜி.கந்தசாமி, துணை செயலாளர்களாக நந்தகோபால், சந்திரசேகரன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலை காரணமாக லாரி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. எனவே அதன் விலையை குறைக்க மத்திய&மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சுங்கசாவடி கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஆடிட்டர் என்.கே.எம். நல்லசாமி உள்பட லாரி உரிமை யாளர்கள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கடந்த 58 நாட்களுக்கு முன்பு அக்‌ஷயா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தது.

    இதற்காக குழந்தையை அவரது பெற்றோர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. நேற்று திடீரென குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து குழந்தையை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 4 பேரும், பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 61 பேரும் என மொத்தம் 79 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதே போல கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்புடன் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை வருகிறார். #ADMK #EdappadiPalaniswami
    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை வருகிறார்.

    விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து ஈச்சனாரி செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை(சனிக்கிழமை) காலை கொடிசியாவில் நடைபெற உள்ள ‘உயிர்’ அமைப்பு தொடக்க விழாவில் பங்கேற்கிறார். தமிழ் நாட்டில் விபத்து உயிரிழப்பு நடைபெறும் நகரங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை நகரம் உள்ளது.

    விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும், விபத்தினால் உடல் ஊனம் ஏற்படுவதை தவிர்க்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை நகரின் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களால் ‘உயிர்’ அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘உயிர்’ அமைப்பை தொடங்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொள்கிறார்கள்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகள், உக்கடம் பெரியகுளம் உள்பட ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை பார்வையிடுகிறார்.

    பின்னர் கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். மாலையில் பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர் இரவு கோவை திரும்பி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கோவை நகரின் பல இடங்களில், முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் அவரை வரவேற்று அ.தி.மு.க. கொடி, தோரணங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். #ADMK #EdappadiPalaniswami
    கோவை அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 46). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் போத்தனூர்- கிணத்துக்கடவு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சர்புதீன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்த சர்புதீனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கரூரை சேர்ந்த 69 வயது முதியவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    திடீரென முதியவரின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அப்போது முதியவரின் ரத்த மாதிரியை டாக்டர்கள் சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதே போல ஈரோட்டை சேர்ந்த 6 வயது சிறுமி காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிறுமியை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமியின் ரத்த மாதிரியை டாக்டர்கள் சோதனை செய்து போது சிறுமிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமியை சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் , வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேரும் என மொத்தம் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஜெயில்களில் சோதனை நடத்துவது காலம் கடந்த நடவடிக்கை என்று நல்லக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TNPrisons #Nallakannu

    நாகர்கோவில்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புழல் ஜெயிலில் கைதிகள் அறையில் பயன்படுத்தப்பட்ட டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் துணை இல்லாமல் ஜெயிலுக்குள் டி.வி. கொண்டு செல்ல முடியாது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது தமிழகம் முழுவதும் ஜெயில்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனை காலம் கடந்து நடத்தப்படும் நடவடிக்கை ஆகும்.

    தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாக கூறி வருகிறார்கள். ஆனால் மின்சாரம் தட்டுப்பாடு உள்ளது. இதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    27 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதில் சட்ட சிக்கலும் இல்லை. மக்கள் ஆதரவும் அளித்துள்ளனர். எனவே அவர்களை தாமதம் இல்லாமல் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

    தமிழக அமைச்சர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயபாஸ்கர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

    ஆட்சியை தக்க வைக்க வேண்டும், வரும் தேர்தலை அதிகாரத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டே அவர்கள் செயல் படுகிறார்கள். மக்களை பற்றி கவலைப்பட வில்லை. ஜனநாயக விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

    அ.தி.மு.க. அரசு பாரதிய ஜனதாவின் கை பொம்மையாக உள்ளது. எச். ராஜா உள்பட ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் வரைமுறை இல்லாமல் பேசுகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தூத்துக்குடிக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் வந்தபோது, அதே விமானத்தில் வந்த மாணவி சோபியா பாரதிய ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டதால் அவர் கைது செய்யப்பட்டும், அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கிய பிறகு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பிரதமர் மோடியும் காலம் கடந்து வந்தே இங்கு பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, மலை வாழ் மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.

    நாகர்கோவிலில் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான அடிப்படை வசதி பற்றி அரசு கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPrisons #Nallakannu

    கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும், வருவாய்த் துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராணி மற்றும் அலுவலர்கள் நேற்று மாலை மதுக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது பஸ் நிறுத்தத்தின் அருகே சாக்கு மூட்டைகள் கிடப்பதை கண்டனர். இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள் சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் ரே‌ஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    அங்கு சிறு, சிறு மூட்டைகளில் 400 கிலோ அரிசி இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது ஒத்த கால்மண்டபம் பகுதியில் இருந்தும் ரே‌ஷன் அரிசி மூட்டைகளை மர்மநபர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதாக அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்றனர்.

    ஒத்தகால்மண்டபம் சந்திப்பு அருகே பெரிய சாக்கு மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது. 2 இடங்களில் இருந்தும் மொத்தம் 1 டன் ரே‌ஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

    இந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகளை மர்மநபர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    அலுவலர்கள் வருவதை அறிந்ததும் மர்ம நபர்கள் அரிசி மூட்டைகளை கீழே போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்-யார்? என அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் மேலும் 25 இடங்களில் ‘வைபை’ வசதியுடன் ஸ்மார்ட் மரம் அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
    கோவை:

    கோவை மாநகராட்சி சார்பில் வ.உ.சி. மைதானத்தில் இலவச ‘வைபை’ வசதியுடன் தங்க நிறத்திலான ஸ்மார்ட் செயற்கை மரம் அமைக்கப்பபட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஸ்மார்ட் மரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பட்டனை அழுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பொது மக்களின் வசதிக்காக வ.உ.சி. மைதானத்தில் ‘வைபை’ வசதியுடன் கூடிய ஸ்மார்ட் மரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. கோவையில் மேலும் 25 இடங்களில் ‘வைபை’ வசதியுடன் ஸ்மார்ட் மரங்கள் அமைக்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடை பெற்று வருகிறது. கோவைக்கு எந்த திட்டம் கேட்டாலும் அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த ஸ்மார்ட் மரம் மூலம் மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தனியார் பங்களிப்புடன் இந்த மரம் அமைக்கப்பட்டு உள்ளதால் மாநகராட்சிக்கு செலவு கிடையாது. விளம்பர பலகைகள் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.

    இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

    கோவை வ.உ.சி. மைதானத்தில் ரூ.30 லட்சம் செலவில் ‘வைபை’ வசதியுடன் தங்கநிறத்தில் ஸ்மார்ட் மரம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உட்காருவதற்காக இருக்கை வசதி, செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. 350 மீட்டர் சுற்றளவுக்கு ‘வைபை’ வசதி கிடைக்கும்.

    சூரிய சக்தி மூலம் மின்சக்தி கிடைக்கவும், மழைநீர் சேகரிப்பு வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. ஜே.சி. மீடியா மாநகராட்சியுடன் இணைந்து இதை செயல்படுத்தி வருகிறது. மாநகராட்சி இடம் அளித்து உள்ளது. இதற்காக மாநகராட்சிக்கு ஆண்டு வருமானமாக ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் தனியார் நிறுவனம் மூலம் கிடைக்கும். அரசுக்கு ஆண்டு வருமானமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஆறுக்குட்டி, மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி, உதவி கமிஷனர் செந்தில் ரத்தினம், என்ஜினீயர் லட்சுமணன், நகர திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், முன்னாள் மண்டல தலைவர் ஆதிநாராயணன், காட்டூர் செல்வராஜ், பகுதி செயலாளர் வக்கீல் விமல்சோமு, பப்பாயா ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கோவையில் பழங்கால நாணய கண்காட்சி தொடங்கி உள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
    கோவை:

    கோவை நாணய சங்கம் சார்பில், நாணய கண்காட்சி காந்திபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தொடங்கியது. இதை சங்க தலைவர் ஜம்புகுமார் ஜெயின் தொடங்கி வைத்தார்.

    கண்காட்சியில் கோவை மட்டுமின்றி சென்னை, ஆமதாபாத், டெல்லி, டேராடூன், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பெங்களூரு, கொச்சி, பாலக்காடு, புதுச்சேரி மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சேகரித்து வைத்த பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்கள், மன்னர் கால தங்க நாணயங்கள் உள்பட பல்வேறு அரிதான பொருட்களை பார்வைக்கு வைத்து உள்ளனர்.

    இங்கு 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர் கால 5 ரூபாய் நோட்டு, 1915-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு, 1928-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டு, ராஜராஜசோழன் காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை நாடுகளில் பயன்படுத்திய பழங்கால ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இடம்பெற்று உள்ளன.

    1939-1945-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 6-ம் ஜார்ஜ் மன்னரின் தபால் தலை, இங்கிலாந்து இளவரசி மறைந்த டயானாவின் தபால் தலை, 1993-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மலை ரெயில் தபால் தலை உள்பட பழங்கால தபால் தலைகள், தபால் கார்டுகள், பழங்கால விளக்குகள், பழங்கால விளையாட்டு பொருட்கள், கேமராக்கள், சிலைகள் உள்பட பல்வேறு பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். சிலர் தங்களுக்கு பிடித்தமான நாணயம், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்.

    இது குறித்து நாணய சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    நாணய கண்காட்சியை தொடர்ந்து 31-வது ஆண்டாக நடத்தி வருகிறோம். இதில் 1863-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 5 ரூபாய் நோட்டின் இன்றைய மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும். 1970-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 5 பைசா அலுமினிய நாணயத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 முதல் ரூ.80 வரை இருக்கும்.

    மன்னர் மற்றும் ஆங்கிலேயர் கால ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் மட்டுமின்றி தற்போது வெளி யிடப்பட்ட 100 ரூபாய் நாணயமும் இடம்பெற்று உள்ளது. திப்புசுல்தான் காலத்தில் 1789-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட 4 கிராம் தங்க நாணயம் இடம்பெற்று உள்ளது.

    ஆங்கிலேயர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட 100 தபால் தலைகள் ஒரே அட்டையில் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதுபோன்று ஒரே அட்டையில் 100 தபால் தலைகளை பார்ப்பது அரிதாகும். தபால் தலைகள், ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எவ்வளவு பழமையானதாக உள்ளனவோ அந்த அளவுக்கு அதற்கு அதிக மதிப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முதல் நாளான நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்து பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகளை வியப்புடன் பார்த்து சென்றனர். நாணய கண்காட்சி நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறை வடைகிறது. 
    கோவை மாநகரில் கடந்த 2 நாட்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Helmet #Tamilnadu
    கோவை:

    இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலே கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதி என மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

    கோவை மாநகரில் கடந்த 2 நாட்களில் மட்டும் 1400 பேருக்கு ஹெல்மெட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 760 பேர் ஆவர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 640 பேர் ஆவர்.

    மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 600 பேருக்கு ஹெல்மெட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 280 பேர் ஆவர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 320 பேர் ஆவர். மொத்தத்தில் 2 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை முழுவதும் 3-வது நாளாக இன்றும் தீவிர வாகன சோதனை நடந்தது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் சூலூர், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், வால்பாறை என மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

    இதேபோல காரில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காரை ஓட்டுபவரும், டிரைவர் இருக்கை அருகே முன்னால் இருப்பவரும், பின்னால் இருப்பவர்களும் அணிந்திருக்கிறார்களா? என சோதனை நடத்தி வருகின்றனர்.

    காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். #Helmet #Tamilnadu
    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #KeralaRain #Onam
    கோவை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஓணம் பண்டிகைக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பின்னலாடை ஆகியவை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்காக ஆண்டு தோறும் திருப்பூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பின்னலாடைகள் 10 நாட்களுக்கு முன்பு அங்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த வருட ஓணம் பண்டிகைக்காக கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் திருப்பூரில் உள்ள 100 முதல் 150 பின்னலாடை உற்பத்தியாளர்கள் ரூ. 10 கோடிக்கு ஆர்டர் பெற்று இருந்தனர். ஆர்டர் பெறப்பட்ட அனைத்து ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்ப தயாராக உள்ளது. தற்போது அங்கு கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து பின்னலாடைகளும் தேக்கம் அடைந்துள்ளது. ரெயில் மூலம் அனுப்பினாலும் அங்கு விற்க முடியாத நிலை உள்ளதால் பின்னலாடைகளை அனுப்ப முடியாமல் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்துக்கு கோவை மார்க்கெட்டில் இருந்து தினசரி ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஓணம் பண்டிகை காலங்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் டன் காய்கறிகள் கொண்டு செல்லப்படும். தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் காய்கறிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் ரூ. 6 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துக்காக கேரளாவை சேர்ந்த கோவில் நிர்வாகத்தினர், கல்வி நிறுவனத்தினர் கோவையில் உள்ள பூமார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கி செல்வது வழக்கம். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. #KeralaRain #Onam
    ×