search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    தவக்கால நாட்களில் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம் அவர் நமக்கு ரட்சிப்பின் வாழ்வை தர வல்லவராய் இருக்கிறார். ஆமென்.
    இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தைதான் ‘புனித வெள்ளி’ என்று கூறுகின்ற னர். இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகின்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கிய போது ஏழு வார்த்தைகளை அவர் கூறுகிறார். அந்த வார்த்தைகள் குறித்து தியானிக்கலாம். பொதுவாக நம்முடைய குழந்தைகள் தவறு செய்தால், ஏதோ தெரியாமல் குழந்தை செய்து விட்டது மன்னித்து விடு என்று கூறுவோம். அதே போல தான் சிலுவையில் அறைந்தவர்களை இயேசுவும் மன்னித்தார். ஆனாலும் சிறு குழந்தை செய்தால் தெரியாமல் செய்து விட்டது என்று கூறலாம். ஆனால் ரோம நாட்டின் அதிகாரிகளும், யூத மக்களும் தானே இயேசுவை கொலை செய்ய சிலுவையில் அறைந்தார்கள். இவர்களை என்ன விவரம் தெரியாதா? என்று நம் ஒவ்வொருவருடைய மனதிலும் கேள்வி எழும்பலாம்.

    உண்மை என்னவென்றால், இருளின் சக்திகள் இந்த மனிதர்களுடைய கண்களை குருடாக்கி, தங்களுடைய இருதயத்தை கடினப்படுத்தி, சுயபுத்தியின் படி செய்யவில்லை. இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. எனவே தான் இயேசு சிலுவையில் தொங்கியபடி முதலாம் வார்த்தையாக, ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ (லூக்கா:23-34). என்று கூறுகிறார்.

    இயேசு சிலுவையில் தொங்கிய போது அவருக்கு வலதுபுறம் ஒரு திருடனையும், இடதுபுறம் ஒரு திருடனையும் அறைந்திருந் தனர். அப்போது ஒரு திருடன் வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தவன். ஆனால் அவன் கடைசி நேரத்திலும் கூட இயேசுவை பார்த்து நீர் கிறிஸ்துவானால் இந்த மரணத்திலிருந்து உன்னையும், எங்களையும் இரட்சிக்க முடியுமோ? என்று கூறி இயேசுவை இகழ்ந்து பேசுகிறான். இப்படித்தான் நாமும் இந்த உலகத்தில் கடைசி நேரத்திலும் கூட கடவுளை பார்த்து கேள்வி கேட்கிறவர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மற்றொரு திருடனோ இயேசு நல்லவர், இவருக்கு ஏன் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது , இயேசு குற்றவாளியாக மரிக்கவில்லை. இந்த மனுக்குலத்தின் பாவத்தை போக்கவே மரிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, இயேசுவை இகழ்ந்து பேசிய திருடனை பார்த்து நீ வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்து விட்டு இந்த கடைசி நேரத்திலும் கூட தேவனுக்கு பயப்படுகிறது இல்லையா? என்று கேட்கிறான். மேலும் இயேசுவை பார்த்து ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று கூறுகிறான். இவன் இப்படி கடைசி நேரத்தில் தன் பாவங்களை உணர்ந்து இயேசுவிடம் மன்னிப்பை பெற்றுக்கொண்டான்.

    எனவே தான் இயேசு சிலுவையிலே இரண்டாம் வார்த்தையாக ‘இன்றைக்கு நீ என்னுடனே கூட பர லோகத்தில் இருப்பாய்’ (லுக்கா: 23-43) என்று கூறுகிறார். ஆம் தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனந்திரும்பாமல் இயேசுவை இகழ்ந்து பேசும் திருடனைப்போலவா? அல்லது கடைசி நேரத்தில் தன் பாவங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்றவனை போலவா? என்று சிந்தித்து பார்க்க கடமைப்பட்ட வர்களாய் இருக்கிறோம். எனவே இந்த நாட்களில் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம் அவர் நமக்கு ரட்சிப்பின் வாழ்வை தர வல்லவராய் இருக்கிறார். ஆமென்.

    சகோதரி: சா.சுமங்கலா பீட்டர், காங்கேயம்
    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இன்னும் சில நாட்களில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நாமும் இயேசுவுக்காக பஸ்கா விழாவினை கொண்டாட ஆயத்தமாவோம் ஆமென்.
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக வாழ்ந்து, கடவுளின் கருணையால் அதில் இருந்து மீண்டு வந்ததை பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இதைத்தான் பாஸ்கா விழா என்று சொல்லப்படுகிறது.

    இந்த பாஸ்கா விழாவை கொண்டாடுவதற்காக தனது சீடர்களுடன் எருசலேம் நகருக்கு செல்ல இயேசு திட்டமிடுகிறார். இதை கேள்விப்பட்ட மக்கள், மாபெரும் போதகராக, மெசியாவாக, அற்புதங்கள் நிகழ்த்தும் கடவுளின் மகனாக வருகிறார் என்றும், இனி அவர்தான் தங்களுக்கு உண்மையான ராஜாவாகப் போகிறவர் என்றும் முடிவு செய்தனர்.

    இந்த பாஸ்கா விழாவுக்கு ஒருவார காலத்திற்கு முன்னர்தான், இறந்து அடக்கம் செய்யப்பட்டு 3 நாட்கள் கடந்து விட்ட தனது நண்பர் லாசர் என்பவரை இயேசு உயிருடன் மீண்டு வர செய்தார். இதற்கு சாட்சியாக லாசர் தங்கள் கண் முன்னாள் நிற்பதையும் கண்டு யூத தலைமை சங்கத்தினர் கோபமடைந் திருந்தனர்.

    இந்த வேளையில் தான் யூதமத அதிகார வர்க்கமாக இருந்த பரிசேயர்களும், சதுசேயர்களும், இவர்களால் நிரம்பி வழிந்த யூத தலைமை சங்கமும் கொதித்து எழுந்தது. எப்படியாவது இயேசுவை யூதர்களுக்கு எதிரானவராக சித்தரித்து அவரை கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.

    இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கி சென்று கொண்டிருக்கையில் ஒலிவமலை அருகில் இருந்த பெத்பகு என்னும் ஊருக்கு வந்த போது இரு சீடர்களை அழைத்து, ‘நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் எதேனும் சொன்னால், இவை ஆண்டவருக்கு தேவை எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பி விடுவார்’ என்றார். சீடர்கள் போய் தங்களுக்கு இயேசு சொன்னபடியே செய்தார்கள். பின்னர் கழுதையின் மேல் தங்களின் மேலாடைகளை போட்டு இயேசுவை அதில் அமரச் செய்தார்கள்.

    பின்னர் இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்த போது பெருந்திரளான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தங்களிடம் உள்ள ஆடைகளை வழிநெடுகிலும் விரித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இப்படியாக இயேசுவுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு வரலாறாக மாறியது என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 முக்கிய நற்செய்தியாளர்களும் வேதாகமத்தில் இயேசுவை பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.

    எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இன்னும் சில நாட்களில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நாமும் இயேசுவுக்காக பஸ்கா விழாவினை கொண்டாட ஆயத்தமாவோம் ஆமென்.

    பாஸ்டர்.ரபிபிரபு, காங்கேயம்,
    ஒரு காலத்தில் ஆண்டவரையே நம்பி விசுவாச வாழ்க்கை நடத்தி விட்டு தற்பொழுது பணத்திற்கும், புகழுக்கும், உலகத்திற்கும் அடிமையாய் இருந்தால் அதுவும் ஒரு தீமை என எபேசியர் 5:5 ல் பவுல் கூறுகிறார்.
    தேவனுடைய கிருபையினாலே ஒவ்வொரு நாளும் ஆசீர்வாதமாய் கர்த்தர் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இம்மட்டும் உங்களை ஆசீர்வதித்த தேவன் தொடர்ந்து வழிநடத்த வல்லவராக இருக்கிறார்.

    தீமைக்கு தீமை செய்யாதிருங்கள் என்ற வார்த்தையை தேவன் எனக்கு உணர்த்தி இந்த தலைப்பில் உங்களுக்காக எழுத கிருபை பாராட்டினார். ஜெபத்தோடே வாசித்து ஆவிக்குரிய நல்ல சுபாவங்களிலே முன்னேறுங்கள். தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும்.

    இவ்வுலகம் பொல்லாங்கன் (சாத்தான்) கையில் இருக்கிறபடியால் எப்பக்கம் திரும்பினாலும் சத்துருவினுடைய அடிமைத்தனத்தில் சிக்கி பலவிதமான தீமையான எண்ணங்களால் நிரம்பியிருக்கிற மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொலைக்கு கொலை, பழிவாங்குதல், கசப்பு வைராக்கியம், தவறான எண்ணங்கள் இவைகள் அனைத்தும் தீமையில் மறைந்திருக்கிற பிசாசின் ஆயுதங்கள்.

    தேவபிள்ளையே, பிறர் உங்களுக்கு தீமை செய்தால் நாமும் அவர்களைப் போலவே தீமைக்கு தீமை செய்தால் தேவனுடைய அன்பு நமக்குள் இல்லை.

    ‘பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை’. III யோவான் 11

    ஆகவே இக்கடைசி நாட்களில் நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து நம் ஆண்டவரின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களை அர்ப்பணியுங்கள்.

    தீமை செய்தோரை ஆசீர்வதியுங்கள்

    ‘நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்’. ஆதி.50:20

    தேவனுடைய சுபாவம் பிறரை மன்னிப்பது மாத்திரமல்ல, மற்றவர்கள் செய்த தீமையை மீண்டும் அவர்களுக்கு விரோதமாய் செய்யாமலிருப்பது. சத்துருவின் போராட்டம் நிறைந்த உலகில் அவனுடைய கையிலிருக்கிற சகல ஆசீர்வாதங்களையும் நாம் சுதந்தரித்து அவற்றை அனுபவிப்பது தான் தேவ சித்தம். ஆனால், இது எப்போது நம் வாழ்வில் நிறைவேறுகிறது என்பது தான் முக்கியம்.

    பழைய ஏற்பாட்டில் யோசேப்பு, உடன்பிறந்த சகோதரர்களால் பலவிதமான பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தான். தம் சகோதரர்கள் தன்னை பகைத்தாலும் யோசேப்பு அவர்களை பகைக்கவில்லை, அன்பு கூர்ந்தான் என்பதற்கு மேலே நான் குறிப்பிட்டிருக்கிற வசனம் ஆதாரமாயிருக்கிறது. இதே சுபாவம் நமக்குள்ளும் வரும்போது நாமும் யோசேப்பைப் போல ‘எனக்கு தீமை செய்ய நினைத்தார்கள், கர்த்தரோ அதை நன்மையாக முடியப்பண்ணினார்’ என்று கூறுவோம்.

    உங்கள் குடும்பத்தில் உறவினர்களால், உடன் வேலையாட்களால், நண்பர்களால் அல்லது உடன் ஊழியர்களால் தீமைகளை நீங்கள் அனுபவித்தால் அவர்களைக் குறித்த கசப்பை உங்கள் இருதயத்திலிருந்து அகற்றுங்கள்.

    ‘தீமைக்குத் தீமையையும், உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்’. 1 பேதுரு 3:9

    மேற்கண்ட வசனம் நம்மை ஆசீர்வாதத்தை சுதந்தரிப்பதற்கு நேராய் வழிநடத்துகிறது. எத்தனை ஆழமான ஆன்மிக அனுபவத்தை பேதுரு நமக்கு உணர்த்துகிறார்.

    பிரியமானவர்களே, இப்படிப்பட்ட உன்னதமான சுபாவம் நமக்குள் வர மாம்சத்தின் கிரியைகளை, எண்ணங்களை அழிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பிறரை (நமக்குத் தீமை செய்தோரை) ஆசீர்வதித்து ஜெபிக்க ஆரம்பியுங்கள். மனதார வாழ்த்துங்கள், நீங்கள் வாழ்த்தப்படுவீர்கள். பிறரை போற்றுங்கள், நீங்களும் போற்றப்படுவீர்கள்.

    தீமையை விலக்குங்கள்

    ‘இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்’. உபா. 17:7

    அன்பானவர்களே, பொதுவாக ஒன்றை விலக்கினால்தான் வேறொன்றைப் பெற முடியும். இருளை வைத்துக் கொண்டிருந்தால் ஒளியைப் பெற முடியாது. அவிசுவாசத்தை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது விசுவாசத்தை பெற முடியாது. அவநம்பிக்கையை அழித்தால் அற்புதங்களை அடையலாம்.

    தீமை செய்தோரை ஆசீர்வதிப்பது ஓர் உன்னத அனுபவம். அதேபோல் நமக்குள் இருக்கும் தீமையை விலக்குவது ஓர் ஒப்பற்ற அனுபவம். இதைத் தான் உபா.17:7 ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம்.

    ஒரு காலத்தில் ஆண்டவரையே நம்பி விசுவாச வாழ்க்கை நடத்தி விட்டு தற்பொழுது பணத்திற்கும், புகழுக்கும், உலகத்திற்கும் அடிமையாய் இருந்தால் அதுவும் ஒரு தீமை என எபேசியர் 5:5 ல் பவுல் கூறுகிறார்.

    எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே, நாம் விலக்க வேண்டிய காரியங்களை நாம் தான் விலக்க வேண்டும்.

    ‘இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக’. உபா.13:5

    மேற்கண்ட தேவனுடைய வார்த்தைகளை வாசித்த சகோதரனே! சகோதரியே! நீங்கள் அவரை அறிய வேண்டிய பிரகாரம் அறிந்த பிறகும் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், மேலே நாம் குறிப்பிட்ட தீமைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தால் உங்கள் நடுவிலிருந்து அவைகளை விலக்குங்கள். உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் அளவில்லாமல் ஊற்றப்படும். அல்லேலூயா!

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    நம் ஒவ்வொருவரையும் கருவிலே அறிந்திருக்கிற தேவனிடத்தில், தேவனே நீர் என்னில் தங்கும் ஆலயமாக என் சரீரத்தையும், உள்ளத்தையும் மாற்றும் என்று ஜெபிப்போம்.
    நம்மை படைத்த தேவன் நம் உள்ளத்தை ஆராய்ந்திருக் கிறார். கடந்த காலத்தை குறித்து நமக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம். நிகழ்காலத்தை குறித்து அறிந்திருக்கலாம். ஆனால் ஏன் நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது? எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நம்முடைய தேவன் நமது முக்காலத்தையும் அறிந்தவராய் இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.

    நாம் நோய்வாய்பட்டால் பல்வேறு மருத்துவ மனைக்கு சென்று மருத்துவர்களை பார்த்து வியாதியில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்கிறோம். இப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ நம்மை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் தேவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

    அப்படி செய்யும் போது தேவன் நமக்கு நிறைவான வெற்றியுள்ள வாழ்வை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய தேவன் நம்மை முற்றிலும் அறிந்தவர். தேவனே என்னை முற்றிலும் அறிந்து கொள்ளும் என்பதே தேவபக்தனின் வேண்டுதலாக உள்ளது. எனவே தூய்மையான வாழ்வு வாழ, நம்முடைய சிந்தனைகள் நல்ல சிந்தனையாக மாற தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

    கெட்ட சிந்தனை இருதயத்தில் பாவம் செய்ய தூண்டுகிறது. இருதயம் கேடுள்ளதுமாயிருக்கிறது என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நம்முடைய இருதயத்தை தேவனுடைய ஆலயமாக பரிசுத்தமாக வைத்திருந்தால் இருதயத்தில் நல்ல சிந்தனை உருவாகும்.

    இப்படி இருதயத்தில் நல்ல சிந்தனையுடனும், நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு பிரியமானதாக உள்ளதா? சரியான பாதையில் தான் செல்கிறோமா? என்று தேவ சமூகத்தில் அனுதினமும் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    வேதாகமத்தில் சங்கீதம் 139-ம் அதிகாரம் 23, 24 வசனங்களில் தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் என்று எழுதப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் தேவ சமூகத்தில் நம்மை ஆராய்ந்து பார்க்கும் போது வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ இயலும். நம் ஒவ்வொருவரையும் கருவிலே அறிந்திருக்கிற தேவனிடத்தில், தேவனே நீர் என்னில் தங்கும் ஆலயமாக என் சரீரத்தையும், உள்ளத்தையும் மாற்றும் என்று ஜெபிப்போம். அப்போது தேவன் நம்முடைய இருதயத்தில் நல்ல சிந்தனை களை சிந்திக்க உதவி செய்வாராக ஆமென்.

    சகோ.ஜோசப், பல்லடம்.
    இந்த நூல் வரலாற்றையும், ஆன்மிகத்தையும் ஒருசேர நமக்கு அள்ளித்தரும் அற்புதமான ஒரு நூல். ஒரு பரபரப்பான நாவலைப் போல இது சுவாரசிய மூட்டுகிறது.
    திருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா.

    ‘எஸ்ரா’ என்பதற்கு ‘கடவுள் உதவுகிறார்’ என்பது பொருள். பத்து அதி காரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவாகி யிருக்கிறது.

    இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் கடவுளை நாடி வந்தார்களோ அப்போதெல்லாம் வளமும், வெற்றியும் அவர்கள் வசம் வந்து விடுகிறது. எப்போதெல்லாம் அவர்கள் கடவுளை விட்டு விலகிச் செல்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுடைய வாழ்க்கை அழிவுக்குள் தள்ளப்படுகிறது.

    கடவுளின் தண்டனை மக்களிடம் வரும்போது, படிப்படியாக வருகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் எச்சரிக்கை வருகிறது. அழிவு வரும் என சொல்லப்படுகிறது. மனம் மாறாவிடில் ஏதோ எதிரிகள் வந்து நாட்டை முற்றுகையிட்டு செல்வங்களை எல்லாம் கொண்டு செல்கின்றனர்.

    அப்போதும் மனம் மாறாவிடில் பசி, பஞ்சம் போன்றவை வந்து வாட்டுகின்றன. அப்போதும் கண்டுகொள்ளாவிடில் நோய்கள் வருகின்றன, உடல்நிலை வலு விழக்கிறது. அப்போதும் மனம் திருந்தாவிடில் வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்தே அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

    அப்படி இரண்டு முக்கியமான ‘வெளியேற்றல்கள்’ நடக்கின்றன. ஒன்று வட நாடான இஸ்ரயேல் அசீரியர்களின் கையில் பிடிபட்டு கொண்டு போகப்பட்ட நிகழ்வு. அது கி.மு. 721-ல் நடந்தது. அதன் பின் சுமார் 140 ஆண்டுகளில் இரண்டாவது நாடு கடத்தல் நடந்தது. இப்போது வெளியேறியது தென் நாடான யூதா, பாபிலோனியர்களின் வசம் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

    பாபிலோனியர்கள் யூதாவை கைப்பற்றியதும் மக்கள் அனைவரையும் ஒரே யடியாக பாபிலோனுக்கு இழுத்துச் செல்லவில்லை. அதை மூன்று கட்டமாகச் செய்தார்கள். மூன்று நிகழ்வுகளின் போதும் நெபுகத்நேசரே பாபிலோனிய மன்னராக இருந்தார். முதலில் கி.மு. 606-ல் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவர்கள் கைதிகளாக இழுத்துச் சென்றனர்.

    அரச பரம்பரை இல்லையேல் யூதாவை தாங்கள் ஆளலாம் என்பது அவர்களின் எண்ணம். அந்த கூட்டத்தில் சென்ற ஒருவர் தான் விவிலியத்தின் சிறப்பு மிக்க மனிதர்களில் ஒருவரான தானியேல்.

    ஆனால், அந்த திட்டம் பலிக்கவில்லை. யூதா மக்கள் பாபிலோனியரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். எனவே, இரண்டாவதாக நாட்டிலுள்ள வியாபாரிகள், கலைஞர்கள் போன்றவர்களை இழுத்துச் சென்றனர். நாட்டில் வளமை இல்லையேல் சுதந்திர உணர்வு மங்கிவிடும் எனும் சிந்தனையே அதன் காரணம். கி.மு. 597-ம் ஆண்டு அது நிகழ்ந்தது. அந்த கூட்டத்திலும் மிக முக்கியமான ஒரு நபர் இடம்பெற்றிருந்தார். அவர் தான் எசேக்கியேல்.

    இருந்தாலும், மக்கள் கலக மனநிலையுடனே இருந்தனர். எனவே மூன்றாவது முறையாக கி.மு. 587-ல் முழுமையான அழிவும், வெளியேற்றலும் நடைபெற்றது. அப்போது தான் எருசலேம் தேவாலயம் தரைமட்டமானது. யூதா வெற்றிடமானது. இறைவாக்கினர் எரேமியா உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி வெளியேறுதல் நிகழ்ந்தது.

    மூன்று முறை வெளியேற்றப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மூன்று குழுக்களாக பின்னர் நாடு திரும்பினர். இரண்டாவது குழுவுடன் நாடு திரும்பியவர் தான் எஸ்ரா, இந்த நூலின் ஆசிரியர். முதலில் ஐம்பதாயிரம் பேர் திரும்பினர். ஆனால் எஸ்ராவுடன் திரும்பியவர்கள் வெறும் 1800 பேர் தான். ஆனால் அவர்கள் எல்லோரும் லேவியர்கள். எஸ்ரா குருவாக இருந்ததால் லேவியர்களை அழைத்து வந்து நாட்டை மீண்டும் ஆன்மிக வழியில் கொண்டு வரவேண்டும் என விரும்பினார்.

    மூன்றாவது குழுவுடன் திரும்பியவர் தான் நெகேமியா. பைபிளின் அடுத்த நூலை எழுதியவர் அவர் தான். இந்த மூன்று திரும்புதல்களும் மூன்று சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்தன.

    முதலாவது குழுவின் வருகை சமூக வாழ்க்கையை மீண்டெடுக்கும் முயற்சி, இரண்டாவது குழு ஆன்மிக பலவீனத்தை சரி செய்யும் முயற்சி. மூன்றாவது, கட்டுமானங்களை சரிசெய்து நாட்டை வலுப்படுத்தும் முயற்சி.

    நாடு திரும்புவதற்கு பலர் விரும்பவில்லை என்கிறது வரலாறு. சுமார் 1500 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். பாபிலோனுக்குச் சென்ற மக்கள் அங்கே வர்த்தகங்களில் ஈடுபட்டு செழிக்க ஆரம்பித்திருந்த கணம் அது. அவர்களுக்கு திரும்புதல் என்பதே தண்டனையாய் தெரிந்தது.

    எஸ்ரா நூல் முதல் இரண்டு நாடு திரும்புதலைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்கிறது. எபிரேயம் அராமிக் எனும் இரண்டு மொழிகளில் இந்த நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார் எஸ்ரா. நாடு திரும்புதலும், ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளும் இந்த நூலின் முக்கிய அம்சங்கள் எனலாம்.

    நாடு திரும்பிய மக்கள் மீண்டும் பாவ வாழ்க்கைக்குத் திரும்பிய சோக நிகழ்வுகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. எழுபது ஆண்டுகள் அன்னிய நாட்டில் வாழ்ந்தாலும் மக்கள் திரும்பி வந்தபின் இறைவனைப் பற்றிக்கொள்ளவில்லை. பாவத்தைப் பற்றிக் கொண்டார்கள்.

    இந்த நூல் வரலாற்றையும், ஆன்மிகத்தையும் ஒருசேர நமக்கு அள்ளித்தரும் அற்புதமான ஒரு நூல். ஒரு பரபரப்பான நாவலைப் போல இது சுவாரசிய மூட்டுகிறது.

    - சேவியர்.
    நமக்கு தேவன் கொடுத்த இந்த வாழ்வை இப்போதே ஆயத்தப்படுத்தி நமக்கு நித்தியமான வாழ்வு தரும் வழியை இப்போதே பயன்படுத்திக்கொள்வோம். ஆமென்.
    காலம் கண் போன்றது, பொன் போன்றது, விலையேறப்பெற்றது என்று காலத்தை குறித்து நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த காலத்தில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்றைய காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வேலைகளை செய்ய வேண்டுமானால் சோம் பேறிகளாக இந்த வேலையை நாளை செய்யலாம், அப்புறம் செய்து கொள்ளலாம் என்று நாட்களை கடத்திக்கொண்டே செல்கிறோம்.

    இதே போல்தான் ஒரு பேராசிரியரிடம் மாணவன் ஒருவன் வந்து நான் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதை எவ்வளவு காலம் தள்ளிப்போடலாம் என்று கேட்டுள்ளான். உடனே அந்த பேராசிரியர் அந்த மாணவனை பார்த்து உன்னுடைய மரண நாளுக்கு முந்தைய நாள் வரை அதை தள்ளிப்போடலாம் என்று விநோதமான பதில் கூறியுள்ளார். உடனே அந்த மாணவன் நான் எப்போது மரிப்பேன் என்று தெரியாதே? என்று கூறியுள்ளான். உடனே பேராசிரியர் நம்முடைய மரணம் எப்போது? என்று யாருக்குமே தெரியாது அது உண்மைதான். எனவே இன்றே இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள தீர்மானம் செய் என்று கூறியுள் ளார்.

    எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே காலத்தை தேவன் நமக்கு கொடுக்கும் தருணம் கடந்து விட்டதென்றால் திரும்பவும் பெற முடியாது. வாழ்க்கை வாழ்வதற்கே என்று மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டு இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளனைப்போன்று கடைசி நிமிடத்தில் நாம் மனந்திரும்பிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருக்கலாம்.

    ஆனால் எத்தனையோ மக்கள் எதிர்பாராத வேளையில் தங்கள் மரணத்தை சந்திக்கின்றதை நாம் அனுதினமும் காண்கிறோம். இதைத்தான் வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 6-ம் அதிகாரம் 2-ம் வசனத்தில் இதோ இப்பொழுதே அனுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சண்ய நாள் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நமக்கு தேவன் கொடுத்த இந்த வாழ்வை இப்போதே ஆயத்தப்படுத்தி நமக்கு நித்தியமான வாழ்வு தரும் வழியை இப்போதே பயன்படுத்திக்கொள்வோம். ஆமென்.

    சகோ.சாம் கிப்ஸ்டன், காங்கேயம்.
    இதை வாசிக்கின்ற ஒரு நபராவது தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து குடும்பமாய் அவர்களுக்கு பாசமழை பொழிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
    இந்த நவீன யுகத்தில் வாழ்கின்ற மக்களிடையே பெற்றோர்களை மதிப்பதும் அவர்கள் சொற்கேட்டு வளர்வதும் மிகக் குறைந்து விட்டது என்றே கூறலாம். ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று பழஞ்சொல் உண்டு. பண்டிகை நாட்களில், பிறந்த நாளில் பெற்றோர்களின் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது என்றால் அது மிகையாகாது.

    பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்கிற இந்த விஷயத்தைக் குறித்து திருமறை இவ்வாறாகக் கூறுகிறது. ‘உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக’ (யாத்திராகமம் 20:12), மேலும், ‘உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ (எபேசியர் 6:2,3) என்றும் வேதம் கூறுகிறது.

    ஆக, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தீர்க்காயுசோடும், ஆசீர்வாதத்தோடும் வாழ்வதற்கு அவன் தன் தகப்பனையும், தாயையும் மதித்து நடக்க வேண்டும். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் தன் பெற்றோர்களை மதிக்கத் தவறிய மாந்தர்கள் எத்தனை? எத்தனை?

    தங்கள் வேலை ஸ்தலங்களில் தங்கள் மேலதிகாரிகளை கனம் பண்ணுகின்றனர், தங்கள் அப்பார்ட்மென்டில் அருகில் குடியிருக்கும் குடும்பத்தினரை கனம் பண்ணுகின்றனர், அதிலும் குறிப்பாக அவர் ஒரு உயர்ந்த அதிகாரியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இருந்தால் மிகவும் அதிகமாக கனம் பண்ணுகின்றனர்.

    ஆனால் தன்னைப் பெற்றெடுத்து ஆளாக்கி தன் ரத்தத்தை பாலாக ஊட்டிய தாயையும், தன் உழைப்பை ரத்தமாக ஊற்றிய தகப்பனையும் மதிக்கத் தவறிய பிள்ளைகள் இந்த தேசத்தில் மலிந்து கிடக்கின்றனர் என்றால் மிகை யாகாது.

    திருமறை மிகவும் அழகாக ஒரு மகன் தன் பெற்றோரிடத்தில் எப்படி ஜீவிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறது. ‘உன்னை பெற்ற தகப்பனுக்கு செவி கொடு, உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே’ (நீதிமொழிகள் 23:22)

    இன்றைக்கு இப்படி ஜீவிக்கின்ற பிள்ளைகள் எத்தனை பேர். நம் முடைய பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இல்லாத ஒரு புதிய பழக்கம் இன்றைய காலங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. அது என்னவென்றால் முதியோர் இல்லம். இந்த முதியோர் இல்லத்திலே தங்கள் தகப்பனையும், தாயையும் கொண்டு போய் சேர்த்து விட்ட பிள்ளைகள் ஏராளம்.

    நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம், ஆகவே அங்கே கொண்டுபோய் பத்திரமாய் இருக்கும்படி சேர்த்து விடுகிறோம் என்கின்றனர். தன் மகனைப் பார்க்க மாட்டோமா? தன் பேரப்பிள்ளைகளைப் பார்க்க மாட்டோமா? என்று ஏக்கப் பெருமூச்சோடு, கலங்கின கண்ணீர்களோடு வாழும் பெற்றோர்கள் எத்தனை? எத்தனை?

    இவர்கள் முதியோர் இல்லத்தில் கொடுக்கும் பணத்திலே ஒரு வேலைக்காரியை அல்லது வேலைக்காரனை சம்பளத்துக்கு அமர்த்தி வைத்து கொள்ளலாமே? இவர்களால் இயலாது காரணம் இவர்கள் நெஞ்சங்கள் கல்லாகி விட்டன.

    இவர்களைக் குறித்து வேதம் இப்படியாக கூறுகிறது, ‘தன் தகப்பனைக் கொள்ளையடித்து தன் தாயைத் துரத்திவிடுகிறவன் இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்’ (நீதிமொழிகள் 19:26).

    இப்படிப்பட்டவர்களுக்கு பெற்றோர்களுடைய சொத்து வேண்டும். ஆனால் பெற்றோர் வேண்டாம். இப்படி வாழ்கிறவர்களுக்கு வேதம் ஒரு எச்சரிக்கையும் விடுகிறது. ‘மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்’ (கலாத்தியர் 6:7)

    ஆம், இன்றைக்கு நாம் பெற்றோருக்கு செய்வது நாளை நமக்கும் நடக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    ஆகவே நாம் பெற்றோர்களை மதிக்க கற்று கொள்வோம். அப்பா சாப்பிட்டிங்களா?, அம்மா சாப்பிட்டிங்களா? என்றாவது ஒரு வார்த்தை கேட்க மாட்டானா என் பிள்ளை என்று ஏங்கும் பெற்றோர் எத்தனை? அவர்களோடு பேசுவோம்.

    செல்போனிலும், கம்ப்யூட்டரிலும், முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும், தொலைக்காட்சியிலும் நேரத்தை செலவிடுகிற மக்களே, உங்களை பெற்றெடுத்த தகப்பனோடு, தாயோடு நேரத்தை செலவிடுகின்றீர்களா என்று சற்றே யோசித்துப் பாருங்கள். தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கிறவர்களே உங்களுக்கும் ஒரு முதியோர் இல்லத்தை இறைவன் கட்டிக் கொண்டிருக்கிறான் என்பதை மறவாதேயுங்கள்.

    ‘தங்கள் தகப்பனைப் பரிகாசம்பண்ணி, தாயின் கட்டளைகளை அசட்டை பண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்’ (நீதிமொழிகள் 30:17) என்கிறது வேதம்.

    இந்த கட்டுரையை வாசிக்கும் நாம், நம் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணி இறைவன் அருளும் ஆசியைப் பெற்றுக்கொள்வோம். இதை வாசிக்கின்ற ஒரு நபராவது தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து குடும்பமாய் அவர்களுக்கு பாசமழை பொழிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

    முதியோர் இல்லங்கள் மூடப்படட்டும், பிள்ளைகளின் உள்ளங்கள் திறக்கப்படட்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

    சகோ சி. சதீஷ், வால்பாறை
    ‘நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்’ (ஏசா.25:4).
    அகில உலகத்தையும் படைத்த கர்த்தர் பரலோகத்தின் சிங்காசனத்திலிருந்து மனுபுத்திரை கண்நோக்கி பார்க்கிறார். அவரிடத்தில் வாஞ்சையாய் இருக்கிற மனிதனின் எல்லா இக்கட்டான காலத்திலும் விடுவித்து அவனை உயர்ந்த ஸ்தானங்களில் வைக்கிறார்.

    ‘அவன் என்னிடத்தில் வாஞ்சையாய் இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன். என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்’ (சங்.91:14)

    தேவனுடைய நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். வேதத்தை வாசித்து அதன்படி ஜீவிதம் அமையும் போது உன் சத்துருக்களை துரத்தி, தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்.

    ‘மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்’ (நீதி. 29:25)

    யோபு சொன்னார், ‘என்னைக்கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்’ என்று.

    நாம் அவர்மேல் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும். நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள். நம்மை கர்ப்பத்திலிருந்து எடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

    மனுஷன் மேல் நாம் நம்பிக்கை வைத்தால் சமாதானத்தை இழந்து போவோம். மனுஷனை நம்பினால் நமக்கு கெடுதல் செய்வார்கள். நீங்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, நித்திய ராஜியத்தின் மேல் நம்பிக்கை வையுங்கள்.

    ‘என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும். என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்’ (சங்.59:1)

    அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். மான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல உன்னை தப்புவிப்பார். மலைகளின் இடுக்கில் வசிக்கும் முயல்களை தப்புவிக்கும் தேவன் உன்னை தப்புவியாமல் இருப்பாரோ?.

    உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாக எழும்பும்போது, அவர்களால் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் செயல் இழந்து போகும். ஒரு வழியாய் உனக்கு எதிராக புறப்பட்டு வருவார்கள். ஆனால், ஆண்டவர் உனக்கு அடைக்கலமாக இருக்கும்போது ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்.

    இயேசுவை நோக்கிக் கூப்பிடும் போது, நெருக்கப்படுகிற நாளில் பெலனாக இருப்பார். தீங்கு நாளில் அடைக்கலமாக இருப்பார். ஆபத்து நாளில் அரணான கோட்டையாக இருப்பார். நீ சமாதானமுள்ள தேசத்திலே குடியிருப்பாய்.

    ‘ஜனங்களே எக்காலத்திலும் அவரை நம்புங்கள். அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள். தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார்’. (சங்.62:8)

    நீ தனிப்பட்டவனாக வாழ்க்கை நடத்தினாலும், குடும்பத்தாரால் நீ ஒதுக்கப்பட்டாலும், உன்னை அன்பு செய்ய யாரும் இல்லாது இருந்தாலும் உன் இருதயத்தை ஊற்றி தேவன் மேல் நம்பிக்கை வைத்து ஜெபிக்கும் போது, நீ சந்தோஷத்தில் மகிழ்ந்து தேவஅன்பில் நிலைத்திருப்பாய்.

    அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன் என்று சொல்லுவாய். அவர் உனக்கு அடைக்கலம் ஆனதால் நீ அசைக்கப்படுவதில்லை. அவர் மகிமை உனக்கு பெலனாகும். அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள். சிறுமைப்பட்டவர்களுக்கு அடைக்கலமானவர்.

    ‘நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்’ (ஏசா.25:4).

    அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார். ஏழைக்கு நமது கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும். ஏழையின் கூலியை பொழுதுபோகுமுன்னமே கொடுத்துவிட வேண்டும். பகலிலே வெயிலுக்கு நிழலாக இருப்பார். பெருங்காற்றுக்கும், மழைக்கும் அடைக்கலமாய் இருப்பார். ஏழை எளியவர்களுக்கு உன் கையைத் தாராளமாய் திறந்து தான தர்மஞ்செய். உன் தலைமுறை பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் பெருகும்.

    வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான். அவன் நீதி என்றும் நிற்கும். அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர். ஏழைகள் சுகமாய் இருப்பார்கள். ஏழைக்கு இரங்குகிறவன் தேவனுக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். ஏழை எளியவர்களின் கண்ணீரை துடைப்பார். உன் துக்க நாட்கள் முடிந்துபோகும், ஆமென்.

    ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி. பூமணி, சென்னை-50.
    இந்த தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையை மாற்றவும், கடவுளுக்கு ஏற்றதாக நம்முடைய இதயத்தை மாற்றவுமே இந்த நாட்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
    கடவுளுக்கும் நமக்கும் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டு மனமாற்றத்தை நாம் பெற வேண்டி தங்களையே தயார்படுத்திக்கொள்ளக்கூடிய காலம் தான் இந்த தவக்காலம். இந்த மனமாற்றத்தை பெற நாம் என்ன செய்யவேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.

    இந்த தவக்காலத்தில் சிலர் நான் சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறேன். நீங்கள் எப்படி? என்று கேள்வி கேட்டுக்கொள்வார்கள். இன்னும் சிலர் நான் பல்வேறு கெட்ட பழக்கங்களை விட்டு விட்டேன். இந்த 40 நாட்களிலாவது அதை செய்யாமல் இருக்கிறேன் என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் பேசி விட்டு பின்னர் லெந்து நாட்கள் முடிந்தவுடன் தீய பழக்கங்களை மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள்.

    எனவே உபவாசம் இருப்பது என்றால் 3 வேளை உணவை ஒருமுறை, இரண்டு முறை அல்லது மூன்று முறையும் சாப்பிடாமல் இருப்பது, இன்னும் சிலர் தீய பழக்கங்களில் இருந்து விலகி இருப்பது மட்டுமல்ல, ஆத்ம தியாகத்துடன் உபவாசம் இருக்க வேண்டும். இதைத்தான் இயேசுவும் கல்வாரி சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்பு உபவாசம் இருந்து தன் ஆத்மாவை தேவனிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தார் என்று வேதாகமத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே ஆத்ம தியாகம் என்றால் தினமும் வேதம் வாசிக்க வேண்டும். கடவுளிடம் தினமும் நம்முடைய வேண்டுதல்களை ஜெபம் செய்ய வேண்டும். அவர் நமக்காக கல்வாரி சிலுவையில் பட்ட கஷ்டங்கள் குறித்து ஆராய வேண்டும். நம்முடைய இதயத்தை கடவுளுக்கென்று மாற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் கடைபிடித்தால் கடவுள் நமக்கு நல்ல மனமாற்றத்தை தர வல்லவராய் இருக்கிறார்.

    இப்படி செய்யாமல் நான் இந்த 40 நாட்கள் மட்டும்தான் உபவாசம் இருப்பேன், தீய பழக்கங்களை விட்டு விடுவேன். பின்னர் திரும்பவும் பழைய மனிதாக மாறி விடுவேன் என்பது அல்ல. இந்த தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையை மாற்றவும், கடவுளுக்கு ஏற்றதாக நம்முடைய இதயத்தை மாற்றவுமே இந்த நாட்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது. எனவே நம்முடைய மனதில் மாற்றம் அடைந்து கிறிஸ்துவுக்குள்ளாய் வாழ தேவன்தாமே நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.

    சகோ.ஜான்பீட்டர், ராக்கியாபாளையம், திருப்பூர்.
    மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். யாராவது நமக்கு நன்மை செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி கல்லில் எழுத வேண்டும்.
    “கேடு வருவிக்கும் நண்பர்களும் உண்டு; உடன் பிறந்தாரை விட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு (நீதி:18:24)”.

    இரு நண்பர்கள், பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் விவாதம் ஒன்று முளைத்தது. பின்னர் அது சண்டையாக மாறிவிட்டது. கோபம் தாளாத ஒரு நண்பன், மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான். அறை வாங்கியவனோ சற்றும் கோபிக்காமல், மிக அமைதியாக ஒதுங்கிப்போய் மணலில் அமர்ந்ததோடு, தன் விரல்களால், “எனதருமை நண்பன், என் உயிரினும் மேலானவன், இன்று என் கன்னத்தில் அறைந்து விட்டான்” என்று மணலில் எழுதினான். அடி கொடுத்த நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் அமைதியாக நடை பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.

    அப்போது ஒரு பாலைவன ஊற்றில் 2 பேரும் குளித்து கொண்டு இருந்தனர். கன்னத்தில் அறை வாங்கிய நண்பனின் காலை யாரோ பிடித்து இழுப்பது போன்ற உணர்வில் தடுமாறியவன், அடுத்த நொடி அது புதைகுழி என்பதை அறிந்து, தான் சிக்கிக் கொண்டதை நினைத்து அலற ஆரம்பித்தான். அடுத்த நொடி அறை விட்ட அந்த நண்பன் பெரும் முயற்சி எடுத்து அவனை காப்பாற்றி கரை சேர்த்தான்.

    “நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கண்ணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான் (நீதி:17:17)”.

    உயிர் பிழைத்த நண்பன் ஆபத்திலிருந்து மீண்டு வந்த உடன், இன்று எனது ஆரூயிர் நண்பன் என் உயிரை காப்பாற்றினான் என கல்லில் எழுதினான். இதை பார்த்து கொண்டிருந்தவனோ, நான் உன்னை கன்னத்தில் அறைந்தபோது அதை மணலில் தானே எழுதினாய். இப்போது காப்பாற்றியபோது அதை கல்லில் எழுதுகிறாயே? என்றான்.

    அதற்கு அன்பான அந்த நண்பனின் இனிமையான பதில், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிட வேண்டும். மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். யாராவது நமக்கு நன்மை செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி கல்லில் எழுத வேண்டும். வாழ்க்கை என்பது எளிதான பயணம் தான். மனிதர்கள் தான் அதனை பல நேரங்களில் சிக்கலாக்கி விடுகின்றார்கள்.

    - கிளமென்ட்சியா, அம்மாப்பேட்டை.
    லேவி:19:16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக: பிறனுடைய ரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம் நான் கர்த்தர்
    ஒரு பெரிய கிராமம் முழுவதும் ஒரு பெரும் பணக்காரருக்கு சொந்தம். அவருக்கு 2 மகன்கள். இவர் இறக்கும் முன் தனது சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுத்தார். அவருடைய மகன்கள் பல வருடங்கள் ஒற்றுமையாக இருந்தனர். அவர்களின் வீடுகள் மிக அருகில் இருந்தது. ஒரு நாள் ஏற்பட்ட சின்ன வாக்குவாதம் பெரிய கலகத்தில் முடிந்தது. கிராமம் இரண்டாக பிரிந்தது. விவசாயம், தொழில், உற்பத்தி உறவுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன.

    பகை தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்தது. ஒரு அதிகாலையில் மூத்தவரின் வாசலில் ஒரு தொழிலாளி வந்து நின்றார். ஐயா மிகவும் வருமையால் வாடுகிறேன். ஏதாவது வேலை தாருங்கள் என கேட்டார். உனக்கு மர இரும்பு வேலி அமைக்கத் தெரிந்தால் சொல். எனது சகோதரனின் முகத்தை நான் பார்க்க விரும்பவில்லை. எனவே அவன் வீட்டுக்கும் எனது வீட்டுக்கும் இடையே மர இரும்பு வேலி அமைத்து விடு என கூறினார். தொழிலாளி ஒத்துக்கொண்டார். மர இரும்பு வேலி அமைக்க தூண்கள், மரம், இரும்பு கம்பிகள், ஆணிகள் ஆகியவற்றை தொழிலாளி கேட்டார்.

    மறு நாள் வண்டியில் அனைத்து பொருட்களும் வந்து இறங்கியது. அண்ணன் தான் என்ன செய்ய போகிறேன் என்பதை தம்பி நாளைக்கு பார்த்து புரிந்துகொள்வான் என கர்வம் கொள்கிறான். தம்பி தன் அண்ணன் என்ன செய்யபோகிறான் என யோசித்து அவன் என்ன செய்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பேன் என கர்வம் கொள்கிறான்.

    தொழிலாளி நடு இரவில் வேலையை செய்து முடித்துவிட்டு போய் படுத்துக்கொண்டார். காலையில் அண்ணன் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அங்கே வேலிக்கு பதிலாக இரு வீட்டையும் இணைக்கும் ஓர் உறுதியான பாலம் கட்டப்பட்டிருந்தது. இவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாலத்தை தம்பி வந்து எட்டிப்பார்க்கிறான். பார்த்தவுடன் அண்ணன் என்மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் என நினைத்து பாலத்தின் மறு பக்கம் ஏறி நின்று கண்கலங்கினான்.

    அவன் கண்ணீரை கண்ட அண்ணன் பாலத்தின் இப்பக்கம் ஏறி நடந்தான். தம்பியும் கை நீட்டிய வண்ணம் அண்ணனை நோக்கி வந்தான். இருவரும் பாலத்தின் மையத்தில் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு நின்றார்கள். அந்த தொழிலாளியை அண்ணன் நன்றியோடு தேடுகிறான்....

    அந்த தொழிலாளியோ வேலை களைப்பால் இவர்களுக்கு நேர் கீழே பாலத்தின் அடியில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தார்.

    லேவி:19:16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக: பிறனுடைய ரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம் நான் கர்த்தர்

    நீதி மொழிகள் : 16:28 மாறுபாள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான். கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.

    நீதி மொழிகள்: 26:20 விறகில்லாமல் நெருப்பு அவியும், கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்

    ஜேக்கப் மனோகரன் -கும்பகோணம்.
    கடவுளுக்கு பணிந்து அவரது கட்டளைகளின்படி நடந்தால் கிடைக்கின்ற வாழ்க்கையும், அவரது குரலுக்குச் செவிகொடுக்க மறுத்தால் கிடைக்கின்ற அழிவையும் இந்த நூல் விளக்குகிறது.
    அரசர்கள் நூலின் இரண்டாம் பாகம் இது. தொடக்கத்தில் ஒரே நூலாக ‘அரசாங்கம்’ என இருந்த நூல் கிரேக்க மொழிபெயர்ப்புக்குப் பின் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.

    இதை எழுதியவர் எரேமியா என்பது மரபுச்செய்தி. எசேக்கியேல் அல்லது எஸ்ராவின் பங்களிப்பும் இருந்திருக்க வேண்டும் என்பது இறையியலார்களின் கருத்து.

    கி.மு 850-600 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த இந்த நூலின் நிகழ்வுகள், சுமார் கி.மு 560-538-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டது. மிக முக்கியமான பல்வேறு நபர்கள் இந்த அரசர்கள் நூலில் இடம்பெற்றுள்ளனர். எலியா, எலீசா, சூனேமியாள், நாமான், ஈசபேல், ஜோவாஸ், எசேக்கியா, ஏசாயா, மனாசே உட்பட பல்வேறு பிரபலங்கள் இந்த இரண்டாம் நூலில் வருகின்றனர்.

    இஸ்ரேல் மக்களினம் பன்னிரண்டு கோத்திரங்களால் ஆனது. இஸ்ரேல் மக்களை ஆள முதலில் வந்த மன்னன் சவுல். அவர் நாற்பது ஆண்டுகள் அரசாண்டார். அவருடைய ஆட்சி சிறப்பான ஆட்சியாய் இருக்கவில்லை.

    அதன்பின் தாவீது மன்னர் வந்தார். அவரும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையாய் இருந்தது. பலவீனங்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் இறைவனை நாடிச்செல்லும் உன்னத மனம் அவரிடம் இருந்தது.

    அதன் பின் அவரது மகன் சாலமோன் மன்னன் ஆனார். அவரும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஞானத்திலும், செல்வத்திலும் உச்சியில் இருந்த அவர் கடைசி காலத்தில் பாவத்தின் பள்ளத்தாக்கில் விழுந்து மேன்மையை இழந்தார்.

    அதன் பின் பன்னிரெண்டு கோத்திரங்களும் இரண்டாகப் பிரிந்தன. பத்து கோத்திரங்கள் ஒன்று கூடி வடக்கில் ‘இஸ்ரேல்’ என ஆட்சி அமைத்தன. யூதா, பென்யமீன் எனும் இரண்டு கோத்திரங்கள் தெற்கே ‘யூதா’ என ஆட்சியமைத்தன. இவர்கள் தான் பின்னாளில் யூதர்கள் என அழைக்கப்பட்ட மக்களினமாய் மாறினர். அதுவரை இவர்கள் எபிரேயர்கள் என்றோ, இஸ்ரேல் ஜனம் என்றோ தான் அழைக்கப்பட்டு வந்தனர்.

    ஒப்பீட்டு அளவில் யூதா இனம் இறைவனுக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தது. இஸ்ரேலோ தொடர்ச்சியாய் பாவத்தில் விழுந்து கொண்டிருந்தது. அரசர்கள் நூல் இஸ்ரேல், யூதா இரண்டு நாடுகளின் மன்னர்களையும், இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த யுத்தங்களையும், அவர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவையும் பதிவு செய்கிறது.

    வட நாடான இஸ்ரேல் நாட்டின் 130 ஆண்டு கால ஆட்சியையும் அதன் வீழ்ச்சியையும் பதிவு செய்யும் நூல், தென் அரசின் 250 ஆண்டு கால வரலாற்றைப் பதிவு செய்கிறது. இஸ்ரேல் நாடு கி.மு 721-ல் அசீரியர்களின் பிடியில் சிக்கியது. மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அதன் பின் அவர்கள் மீண்டும் இஸ்ரேலில் நுழையவேயில்லை.

    யூதா நாடு எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தது. அவர்கள் சிறிய கூட்டம், ஆனால் அவர்களுடைய அரசர்கள் எல்லோருமே தாவீது மன்னனின் வழி வந்தவர்கள். இறைவனின் வாக்குறுதி அது.

    ஒரே ஒரு பெண் அரசி இந்த பட்டியலில் வருகிறாள். அத் தலியா எனும் அவள் தாவீதின் வழிமரபை அழித்து அரசியாகிறாள். அவளது ஆட்சி ஆறு ஆண்டுகள் நீடிக்கிறது. அவளிடமிருந்து தப்பிப்பிழைத்த யோவாசு பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்று தாவீதின் ஆட்சி மரபைப் தொடர்கிறான்.

    வட நாடான இஸ்ரேல் நாட்டின் கடைசி பன்னிெரண்டு அரசர் களைப் பற்றியும், தென் நாடான யூதா நாட்டின் கடைசி பதினாறு அரசர்களைப் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. இந்த நூலில் 25 அதிகாரங்களும், 719 வசனங்களும், 23523 வார்த்தை களும் இடம்பெற்றுள்ளன.

    எலியா, எலீசா ஆகியோரின் இறைவாக் குரைக்கும் பணி இந்த நூலின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. வட நாடான இஸ்ரேலில் அவர்கள் சுமார் எழுபத்தைந்து ஆண்டு காலம் இறைவாக் குரைத்தனர்.

    சாலமோனை விடப் பெரியவர் இயேசு என்றும், யோனா மீன் வயிற்றில் இருந்ததைப் போல மனுமகன் மூன்று நாள் மண்ணில் இருப்பார் என்றும் புதிய ஏற்பாடு பேசுகிறது.

    எலியாவை உருமாற்றத்தின் மலையில் இயேசு சந்திக்கிறார், எலிசாவைப் போன்ற புதுமைகளை இயேசு செய்கிறார் என புதிய ஏற்பாட்டோடு இந்த நூல் பின்னிப் பிணைந்திருக்கிறது.

    ஆன்மிகமும், வியப்புகளும் நிரம்பியிருக்கும் இந்த நூலில் பல அதிசய நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இறைவாக்கினர் எலிசா இறந்த உடலுக்கு உயிர்கொடுக்கும் நிகழ்வும், எலிசா இறந்தபின் அவரது எலும்பில் விழுந்த பிணம் உயிர்பெற்ற அதிசயமும் இந்த நூலில் காணக்கிடைக்கிறது.

    கடவுளுக்கு பணிந்து அவரது கட்டளைகளின்படி நடந்தால் கிடைக்கின்ற வாழ்க்கையும், அவரது குரலுக்குச் செவிகொடுக்க மறுத்தால் கிடைக்கின்ற அழிவையும் இந்த நூல் விளக்குகிறது.

    ‘மனம் திரும்பு, இறைவனை விரும்பு’ என்பதே இந்த நூலின் வாயிலாக இறைவன் நமக்குச் சொல்லும் செய்தியாகும்.

    - சேவியர்.
    ×