search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    “உன்னுடைய கருத்துக்கள் எத்தனை பேருக்கு பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”
    “என் சொல்லைக்கேட்டு கிரேத்தா தீவை விட்டு புறப்படாமல் இருக்க வேண்டியதாய் இருந்தது...”-அப்போஸ்தலர் 27:21.

    நாம் நல்லதை நினைத்தே சொல்கிறோம். நல்ல கருத்தையே கூறுகிறோம். ஆனாலும் அதனை கேட்பவருக்கு அது நல்லதாகவும், நல்ல கருத்தாகவும் இருக்கும் என்று கூறமுடியாது. நம்மால் நல்லதாக பார்க்க முடிந்தவைகளை எல்லாம் பிறராலும் அவ்விதமாவே பார்க்க முடியும் என கூறிவிட முடியாது. எனவே நாம் சொல்லுகின்ற நல்ல கருத்துகளை, கொடுக்கின்ற நல்ல ஆலோசனைகளை மற்றவர்களின் மனம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஒரு பக்குவநிலை வரும் வரை நாம் சாந்தமான ஒரு மனநிலையுடன் பொறுத்திருக்க வேண்டியது அவசியம்.

    பல நேரங்களில் நாம் கொடுத்த நல்ல ஆலோசனைகளை மற்றவர்கள் உடனேயே அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டால் நமக்கு கோபமும், அதிருப்தியும் வந்துவிடுகிறதல்லவா? நல்லதை புரிந்து கொள்ளாத அவர்களின் மனநிலை நமக்கு வெறுப்பூட்டுகிறதல்லவா? எனவே அவர்களை கடிந்து கொள்ளவும், கண்டனம் பண்ணவும் அவசரப்படுகிறோம்.

    இல்லையேல் இனி இவர்களிடம் நல்லதை பேசவும் கூடாது. இவர்களுக்காக நல்லதை நினைக்கவும் கூடாது என்று முடிவெடுக்கக்கூட விரைந்துவிடுகிறோம். ஆனால் அது தவறல்லவா? குழந்தையின் ஆரோக்கியத்திற்காக தாய் அதனை குளிப்பாட்டினால் அது அழுகிறது. அழுக்கில் விளையாடாதே என்றால் அழுகிறது. ஒரு நாள் குழந்தை வளர்ந்து ஏற்ற வயதுகளில் வரும்போது தாய்க்கு எதிர்ப்பு காட்டிய விஷயங்களை எல்லாம், தானாக விரும்பி செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆம். காலங்கள் நல்ல கருத்துகளின் நியாயங்களை புரிந்துகொள்ளும் பக்குவமான மனநிலையை தருகிறது.

    ரோமாபுரியை நோக்கி கப்பல் பயணம் செய்த அப்போஸ்தலனாகிய பவுல் நல்லதென்று கண்டு கொடுத்த நல்ல எச்சரிப்புகளையும், ஆலோசனைகளையும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவன் கடைசிவரை கப்பலில் பயணம் செய்தோரின் நலனுக்காக தொடர்ந்து பிரயாசப்பட தயங்கவில்லை. ஆம். நல்லதை பிறர் புரிந்துகொள்ள தாமதம் ஆனாலும் பொறுமையாக இருப்போமாக.

    “உன்னுடைய கருத்துக்கள் எத்தனை பேருக்கு பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”

    -சாம்சன் பால்
    கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
    இறைமகன் இயேசுகிறிஸ்து தன் சீடர்களிடம் ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ (யோவான் 13:34) என்கிறார்.

    ஆண்டவர் இயேசுகிறிஸ்து, கடவுள் மானிடர் மீது காட்டிய அன்பின் வடிவம் அவர். அன்பின் வழியில் வாழ்ந்தவர். தம் சீடர்களையும் அதே நல்வழியில் வாழ பயிற்றுவித்தவர்.

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அன்பு

    1. அனைத்திலும் முதன்மையான கட்டளை அன்பு: இறைமகன் இயேசுகிறிஸ்து தம்மை அணுகி வந்து, ‘அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?’ என்று கேட்ட மறைநூல் அறிஞரிடம், ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும், உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. இவற்றை விட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை’ என்றார். (மாற்கு 12:29-31)

    2. உயிரைக் கொடுக்கும் அன்பே பெரிதானது: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடத்திலுமில்லை என்கிறார். (யோவான் 15:13)

    3. அன்பு செலுத்துபவரே என் சீடர்: நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் என்றார். (யோவான் 13:35)

    4. அனைத்து காணிக்கைகளிலும் உயர்ந்தது அன்பு: இறைமகன் இயேசு தம்மை சுற்றியிருந்த திரளான மக்களிடம், ‘நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’ என்றார். (மத்தேயு 5:23,24)

    5. பகைவரிடத்திலும் வெளிப்படுத்த வேண்டியது அன்பு: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள். உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள் என்கிறார். (லூக்கா 6:34)

    இறைமகன் இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட அன்பு

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து வார்த்தையிலும், போதனையிலும் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

    துரோகம் செய்தவரிடம் அன்பை காட்டினார்: தம் பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாசு ஆண்டவர் இயேசுவினிடம் வந்து, ‘ரபி வாழ்க’ என்று சொல்லி அவரை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்த பொழுது, அவர் யூதாசிடம், ‘தோழா, எதற்காக வந்தாய்?’ என்று அதே மாறாத பாசப்பிணைப்புடனே அழைக்கின்றார். (மத்தேயு 26:50)

    கைது செய்ய வந்தவரிடமும் அன்பை வெளிப்படுத்தினார்: யூத சமய குருக்களும், மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் ஆண்டவர் இயேசுவைக் கைது செய்ய வந்த பொழுது, அவரோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக்காதைத் துண்டித்தார். அப்பொழுது ஆண்டவர் அவர்களைப் பார்த்து, ‘விடுங்கள் போதும்’ என்று கூறி அந்த பணியாளரின் காதைத்தொட்டு நலமாக்கினார்.

    தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்த ஆண்டவரின் அன்பு: ஆண்டவர் இயேசுவைப் பிடித்து அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரைப் பழித் துரைத்தார்கள், காரி உமிழ்ந்தார்கள், சாட்டையால் அடித்தார்கள், முள் முடி சூட்டினார்கள். இறுதியாக சிலுவையிலே அறைந்தார்கள். அப்போது இயேசு, ‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ என்றார்.

    கிரேக்கத்தில் ‘அன்பு’

    மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு ஆகும். பண்டைய கிரேக்க அறிஞர்கள் ஆறு விதமான அன்பை அடையாளம் கண்டனர். அவை:

    1. பிலியா: உடன்பிறப்புகள், நண்பர்களிடையே இருக்கும் அன்பு

    2. எராஸ்: கணவன்-மனைவி இடையேயான அன்பு

    3. ஸ்டார்கே: பெற்றோர் பிள்ளைகளிடையிலான அன்பு

    4. ப்ரக்மா: உறவினர்களிடத்தில் காட்டுகின்ற அன்பு

    5. பிலௌவ்டியா: தன் மீது காட்டும் தன்னலம் சார்ந்த அன்பு

    6. அகப்பே: இயல் நிலைக் கடந்த தெய்வீக அன்பு, கடவுள் மனிதர்கள் மீது காட்டிய அன்பு. ஆண்டவர் இயேசுவும் மனிதரிடம் காட்டிய அன்பும் இதுவே. இந்த தெய்வீக அன்பு மனிதரில் உருவாகும் இயல்பான அன்பல்ல. இது ஆவியார் மூலமாக மனிதருக்குக் கடவுள் கொடுக்கும் அருட்கொடையிது. இந்த அன்பிற்கு நிகர் எதுவுமில்லை. எதையும் எதிர்பாராதது. எவ்வித நிபந்தனையுமற்றது.

    நாமும் பிறரை அன்புசெய்ய கடமைப்பட்டிருக்கிறோம்

    ‘அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான்’ என்கிறார் மகாத்மா காந்தியடிகள். அன்பு இறைமையோடுத் தொடர்புடையது. ஆதலால் கடவுள் அன்பாகவே இருக்கிறார். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

    அருட்கொடையாம் வாழ்வை இறை அன்பாலே வாழ்ந்து காட்டுவோம்!

    அருட்பணி.ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    சிலுவையில் சுயம் அறையப்படுவதற்கு ஆயத்தப்படாதவரை ஆயிரம் ஆன்மீக கிரியைகள் இருந்தாலும் அவைகளால் பெரிய பிரயோஜனங்கள் இல்லை.
    தன் சிலுவையை எடுத்து கொண்டு என்னை பின்பற்ற கடவன் ( மத்தேயு 10:38 )

    சிலுவை சுமத்தல் என்பது ஒரு முழுமையான அர்ப்பணிப்பிற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் அனுபவமாகும். இந்த அனுபவமாகிய சிலுவையை தினமும் சுமந்தவர்களாக இயேசுவை பின்பற்றினால் தான், அவரால் நமக்கு ஆயத்தமாக்கப்பட்ட ஆசீர்வாதங்களை நாம் அடையமுடியும். ஏனென்றால் சிலுவை சுமந்து இயேசு உருவாக்கிய மேன்மையான ஆசீர்வாதங்களை நாமும் சிலுவை சுமக்க முன்வருவதின் மூலமாக தான் அடைய முடியும். சிலுவைதான் ஆசீர்வாதத்தின் உண்மையான ஏணியாக உள்ளது. இந்த ஏணி வழியாக ஏறிச்செல்லும் சிரமத்தை ஏற்கவிரும்பாதோர் கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களை அடையும் வாய்ப்பு இல்லை.

    அநேகர் நன்றாக ஜெபிக்கின்றனர். நன்றாக தேவ வாக்குறுதிகளை நினைவு கூர்ந்து உரிமையோடு கிறிஸ்துவிடம் கேட்கின்றனர். ஆயினும் அவர்களின் வாழ்க்கையில் தேவஆசீர்வாதங்கள் இல்லை. ஏனென்றால் எவ்வளவு ஜெபித்தாலும், உபவாசித்தாலும், சிலுவையாகிய சரியான அனுதின அர்ப்பணிப்பின் பாதையில் நடக்க மனதை ஆயத்தப்படுத்தாவிடில் ஆசீர்வாதப்பாதை நமக்கு அடைக்கப்பட்டதாகவே இருக்கும்.

    சிலர் எவ்வளவு கிறிஸ்துவுக்குள்ளாக வாழ்ந்தாலும் தங்களை பழைய நிலையிலேயே தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். ஜெபித்தாலும், துதித்தாலும், ஊழியம் செய்தாலும் தாங்களோ அந்த பழைய மனிதனாகவே உள்ளனர். ஜென்ம சுபாவ இயல்புகள் போதுமான அளவு சிலுவையில் அறையப்படவில்லை. சுயத்தின் சாயல் செயல்களிலும், குணங்களிலும் தெரிகிறது. அர்ப்பணிப்பு என்பதும் சிலுவை சுமத்தல் என்பதும் எவ்வளவு ஜெபிக்கிறீர்கள், எப்படி ஆராதிக்கின்றீர்கள், எவ்வளவு ஊழியம் செய்கின்றீர்கள் என்பவைகளால் கணக்கிடப் படத்தக்கவை அல்ல.

    குணம், சுபாவம், இயல்பு ஆகியவை எந்த அளவிற்கு தேவசாயலாக மாறியிருக்கின்றது என்பதின் அடிப்படையிலேயே சிலுவை எந்த அளவு நம்முடைய வாழ்க்கையில் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பதை அறிய முடியும்.

    ஆம். சிலுவை உபதேசத்தை ஏற்காதவரை ஆசீர்வாதங்கள் தூரமாகவே இருக்கும். சிலுவையில் சுயம் அறையப்படுவதற்கு ஆயத்தப்படாதவரை ஆயிரம் ஆன்மீக கிரியைகள் இருந்தாலும் அவைகளால் பெரிய பிரயோஜனங்கள் இல்லை.

    - சாம்சன் பால்
    நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம். நம் கவனத்தை கர்த்தரை நோக்கியும் கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும்.
    உபவாசம் என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகும். உப என்றால் இணை என்றும், வாசம் என்றால் வாழ்தல் என்றும் பொருள். உபவாசம் என்றால் இணைந்து வாழ்தல் என்று அர்த்தமாகும். நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம். நம் கவனத்தை கர்த்தரை நோக்கியும் கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும். உபவாச ஜெபம் என்பது எப்போதோ நடக்கின்ற ஒன்றாக அல்ல.

    மாறாக அது...எப்போதும் நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். தபசு நாட்களில் உபவாசத்தை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. விசேஷ நாட்களில் நாம் சிறப்பு உணவை உண்பது போலவும், சிறப்பான உடையை உடுத்துவது போலவும் இந்த தபசு நாட்களில் அதிகமாக உபவாசம் இருக்க வேண்டும். “தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்” என்ற மதுரை ஆயர் சந்தியாகுவின் பாடலின் அடிக்கேற்ப இந்த தபசு நாட்களில் இன்னும் அதிகமாக கர்த்தரிடம் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.

    இந்த உபவாச நாட்களில் நாம் விட்டு விடுதல், பெற்றுக்கொள்ளுதல் என்ற 2 காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மைப் பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் நிரந்தரமாக விட்டு விட வேண்டும். அதேபோல் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான நற்குணங்களை நிலையாக பெற்றுக் கொள்வதும் மிகவும் அவசியமாகும். மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்புக் கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார்.

    நம் தவறுகளுக்காக நம்மை தண்டிக்க நினைக்கும் கர்த்தரின் மனதை இம்மூன்று செயல்களும் மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது. உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது.ஜெபத்திற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் வளர ஜெபம் தேவை. இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை.

    உபவாசம்,ஜெபம்,விசுவாசம் இம்மூன்றும் ஒன்று சேரும் போது அற்புதம் நிகழ்கிறது. இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்று நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வேதத்தில் மாற்கு.9:29 ல் கூறி உள்ளார். இதுவரை நடக்காத நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்றால், நம் வாழ்வில் ஒரு நல்ல அற்புதம் நிகழ வேண்டும் என்றால் நாம் உபவாசம் இருந்து விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கொலோ.4:5 அப்போஸ்தலர் தூய பவுல் மூலம் ஆண்டவர் நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு கீழ்படிந்து நாம் இந்த உபவாசக் காலங்களை பயன்படுத்திக் கொள்வோமாக. அதற்கு எல்லாம் வல்ல ஆண்டவர் தாமே தம்முடைய தூய ஆவியானவர் மூலமாக நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.

    சகோதரி. கேத்ரின் ஜூலியா,

    கருமாரம்பாளையம், திருப்பூர்
    லெந்து நாட்கள் என்பது சாம்பல் புதன் நாளில் இருந்து ஈஸ்டர் எனப்படும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் வரை உள்ள நாட்களை உள்ளடக்கியது ஆகும்.
    லெந்து நாட்கள் என்பது சாம்பல் புதன் நாளில் இருந்து ஈஸ்டர் எனப்படும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் வரை உள்ள நாட்களை உள்ளடக்கியது ஆகும். சாம்பல் புதன் முதல் ஈஸ்டர் வரை 46 நாட்கள் வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த நாள் என்பதினால் இடைப்பட்ட 6 ஞாயிற்றுக்கிழமைகள் வந்தாலும் அதை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மீதமுள்ள 40 நாட்கள் உபவாச நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. லெந்து காலம் என்பதற்கு வசந்த காலம் என்று பொருள்.

    எபிரேய வருட கணக்குப்படி சேபாத் (சக:1:7), ஆதார் (எஸ்:3:7), நிசான் (நெகே:2:1) மாதங்களும், ஆங்கில வருட கணக்குப்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களும், தமிழ் மாத கணக்குப்படி மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களும் வசந்த காலமாக கணக்கிடப்படுகிறது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலை பெற்ற அன்று பஸ்கா பண்டிகையை முதன்முறையாக ஆசரித்தனர். முதல் பஸ்கா நாளானது முழு நிலவு நாளாக இருந்தது. (இஸ்ரவேலரின் எல்லா பண்டிகைகளுமே நிலவை மையமாக வைத்தே கணக்கிடப்படுகிறது. ஏனெனில் நிலவை மையமாக கொண்ட ஆண்டை பின்பற்றினார்கள்.

    பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்ட அந்த வாரத்தில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வாரத்தின் கடைசி நாளாகவும், ஓய்வு நாளாகவும் (யூதர்களுக்கு) இருந்தது. அடுத்த வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கி.பி.125-ம் ஆண்டின் நைஸியா கூட்டத்தின் தீர்மானத்தின்படி தான் ஈஸ்டர் பண்டிகை கணக்கிடப்படுகிறது.

    அன்று முதல் மார்ச் மாதத்தில் 21-ந் தேதிக்கு பின்வருகிற முழு நிலவு நாளுக்கு அடுத்த ஞாயிறு தான் உயிர்த்தெழுந்த பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிலும் மார்ச் 21-ந் தேதிக்கு பின்வரும் முழு நிலவானது ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வருகிறது. ஏப்ரல் 19-ந் தேதி புனித வெள்ளியாகவும், முழு நிலவு நாளுக்கு அடுத்த ஞாயிறு அதாவது ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறு என்று கொண்டாடப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு தினத்திற்கு 40 நாட்களுக்கு முந்தைய புதன் கிழமை சாம்பல் புதன் என அனுசரிக்கப்பட்டு அன்று முதல் லெந்து நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாள் உங்களுக்கு நினைவுகூறுதலான நாளாய் இருக்கக்கடவது. அதை கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக. அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள் (யாத்:12:14). பஸ்கா பண்டிகையைக் குறித்து ஆண்டவர் சொல்லும்போது அதை தலைமுறை தலைமுறையாக நினைவுகூரும்படியாக சொல்லியிருந்தார்.

    ஒரு வேளை பழைய ஏற்பாடு பஸ்காவானது இஸ்ரவேலருக்கானதாக இருக்கலாம். ஆனால் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் இதை அனுசரிக்க வேண்டும் என்றும் பரிசுத்த வேதாகமம் நமக்கு பதிலளிக்கிறது. நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. (1கொரி:5:7). நமக்காக பலியிடப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசுவை நினைவுகூர்ந்து இந்த லெந்து காலத்தில் நம்மை பரிசுத்தமாக காத்துக்கொள்ள, தேவனை அண்டிக்கொள்ள ஆண்டவர் நமக்கு கிருபை தருவாராக.

    போதகர்.அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை.திருப்பூர்

    விவிலியத்திலுள்ள மாபெரும் இறைவாக்கினர்களில் ஒருவரான எலியாவின் வியப்பூட்டும் வாழ்க்கையை அரசர்கள் முதல் நூல் நமக்கு விளக்குகிறது.
    இப்போது இரண்டு பிரிவுகளாக இருக்கும் ‘அரசர்கள்’ நூல் தொடக்கத்தில் ஒரே நூலாக இருந்தது. எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதை ‘மிலாகிம்’ என அழைத்தனர். ‘அரசாங்கம்’ என்பது இதன் பொருள்.

    அதை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்த போது வசதிக்காக இரண்டுபிரிவுகளாகப் பிரித்தனர். அப்படி மொழிபெயர்த்தவர்களை ‘செப்டுவஜின்ட்’ எனஅழைக்கிறார்கள். அதற்கு ‘எழுபது’ என்பது பொருள். எழுபது பேர் சேர்ந்து இந்த மொழிபெயர்ப்பைச் செய்ததால் இந்த பெயர் அவர்களுக்கு வந்தது.

    பழைய ஏற்பாட்டு இஸ்ரயேலரின் தலைமை ஆட்சியை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது ஆபிரகாம் முதல் யோசேப்பு வரையிலான இறைமனிதர்களின் காலம். அடுத்தது மோசே முதல் சாமுவேல் வரையிலான இறைவாக்கினர்களின் காலம். மூன்றாவது சவுல் முதல் செதேக்கியா வரையிலான அரசர்களின் காலம். நான்காவது யோசுவா முதல் காய்பா வரையிலான குருக்களின் காலம்.

    அரசர்கள் நூல், இஸ்ரயேலின் அரசர்களைப் பற்றிப் பேசுகிறது. சாலமோன் மன்னன் முதல் ஆகாப் வரையிலான மன்னர்களைப் பற்றி முதல் நூலும், ஆகாப் முதல் செதேக்கியா வரையிலான மன்னர்களைப் பற்றி இரண்டாவது நூலும் பேசுகிறது.

    இந்த நூலை எழுதியவர் யார் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மரபுப்படி இந்த நூலை எழுதியவர் எரேமியா. ஆனால் நூலின் சில பாகங்களை அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதை எசேக்கியேல் அல்லது எஸ்ரா எழுதியிருக்கலாம் என இறையியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இறைவன் வரலாற்றை எழுதுவதற்கும், மனிதர்கள் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை அரசர்கள் நூலின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லா அரசர்களுக்கும் சமமான முக்கியத்துவம் இந்த நூலில் கொடுக்கப்படவில்லை என்பது முதல் செய்தி.

    உதாரணமாக ஓம்ரி மன்னன் இஸ்ரயேலை ஆண்டவன். வரலாறு இவரைப் பற்றி அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது. ‘நாட்டை செல்வச் செழிப்புக்கு கொண்டு சென்ற மன்னன்’ என வரலாறு இவரைக் கொண்டாடுகிறது. ஆனால் விவிலியம் இவருக்குக் கொடுத்திருக்கும் இடம் எட்டு வசனங்கள். காரணம் இவன் தேவனுடைய பார்வையில் தீமையைச் செய்தவன்.

    இரண்டாம் எரோபவாம் உலக பார்வையில் நல்லாட்சி செய்த இன்னோர் மன்னன். அவனுக்கு விவிலியம் கொடுத்திருப்பது ஏழு வசனங்கள். அதே நேரம் எசேக்கியா மன்னனுக்கோ மூன்று முழு அதிகாரங்கள். எலியா எலிசா எனும் இறைவாக்கினர்களுக்கு அரசர்கள் நூலில் மூன்றில் ஒரு பங்கு இடம். அவர்கள் அரசர்கள் கூட இல்லை. இது தான் இறைவன் எழுதும் வரலாற்றின் சிறப்பம்சம்.

    அரசர் இறைவன் பார்வையில் நல்லவனாக இருக்கிறாரா? உண்மைக் கடவுளை வழிபடுகிறாரா? பிற வழிபாடுகளை வெறுக்கிறாரா?, நல்ல குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறாரா? நீதியும், நேர்மையும், இறையச்சமும் கொண்டிருக்கிறாரா? என்பதே கேள்வி.

    அரசர்கள் நூலை அலசிப்பார்த்தால் நல்ல அரசர்கள் சுமார் 33 ஆண்டுகளும், கெட்ட அரசர்கள் 11 ஆண்டுகளும் சராசரியாய் ஆண்டிருக்கிறார்கள். சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இறைவனே மண்ணுலக ஆட்சியையும் நிர்ணயிக்கிறார் என்பதன் விளக்கமாக இதைக் கொள்ளலாம்.

    எருசலேமின் மாபெரும் சக்கரவர்த்தியான தாவீது மன்னனின் இறுதிக்கணங்களோடு இந்தஅரசர்கள் முதல் நூல் தொடங்குகிறது. தாவீது மன்னன் இறக்கிறார். அவருக்கும் பத்சேபாவுக்கும் பிறந்த மகன் சாலமோன் அரசராகிறார்.

    இந்த நூலில் சாலமோன் மன்னனின் நீதியும், செயல்பாடுகளும், ஞானமும், செல்வமும், ஆட்சித்திறமையும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

    இந்த நூலின் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று எருசலேம் தேவாலயம் கட்டி எழுப்பப்படும் வரலாறு. தனக்கான ஆலயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தாவீது மன்னனிடம் இறைவன் தெரிவித்தார். ஆனால் தாவீது ரத்தக்கறை படிந்த கையுடையவன் என்பதால், ஆலயத்தை அவர் கட்டவேண்டாம், அவரது மகனே கட்டவேண்டும் என இறைவன் ஆணையிட்டார். அதன்படி கடவுளுக்கான ஆலயத்தை சிறப்புறக் கட்டி முடித்தார், சாலமோன் மன்னன்.

    எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் வெளியேறி சரியாக 480 ஆண்டுகளுக்குப் பின்பு அந்த ஆலயம் கட்டப்பட்டது. ‘அந்த ஆலயத்தில் வசிப்பேன்’ என இறைவன் சாலமோன் மன்னனுக்கு வாக்களித்திருந்தார்.

    ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாட்டின் கடைசி மன்னனாக சாலமோன் இருந்தார். அதற்குப் பின் கி.மு. 931-ல் இஸ்ரயேல் நாடு கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரிந்தது. பன்னிரண்டு கோத்திரங்கள், பத்து, இரண்டு என பிரிந்துவிட்டன.

    விவிலியத்திலுள்ள மாபெரும் இறைவாக்கினர்களில் ஒருவரான எலியாவின் வியப்பூட்டும் வாழ்க்கையை அரசர்கள் முதல் நூல் நமக்கு விளக்குகிறது.

    இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்களினம் எப்படியெல்லாம் உருமாற்றம் அடைந்து, எப்படி பெரு வீழ்ச்சியடைந்தது எனும் சோக வரலாறே அரசர் நூலின் முடிவில் நாம் புரிந்து கொள்ளும் விஷயம். இறைவன் தனது வாக்குறுதிகளை மீறுவதில்லை. ஆனால் மனிதன் அந்த வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடந்துகொள்வதில்லை. இந்த சிந்தனையே அரசர்களின் வாழ்க்கை வாயிலாக நமக்குக் கிடைக்கின்ற செய்தியாகும். 

    சேவியர்.
    கடவுள் தனது அளப்பறிய இரக்கத்தினால் திருமுழுக்குப் பெற்ற பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு ஒப்புரவு என்னும் அருள் அடையாளத்தை நிறுவியுள்ளார்.
    தவக்கால சிந்தனை: புதிய தொடக்கம்

    “உன் குற்றங்களை கார்மேகம் போலும், உன் பாவங்களை பனிப்படலம் போலும் அகற்றி விட்டேன். என்னிடம் திரும்பி் வா, நான் உனக்கு மீட்பளித்து விட்டேன்”(எசா:44:22).

    கடவுள் தனது அளப்பறிய இரக்கத்தினால் திருமுழுக்குப் பெற்ற பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு ஒப்புரவு என்னும் அருள் அடையாளத்தை நிறுவியுள்ளார். இவ்வருள் அடையாளம் ஒரு உயிர்ப்பு அனுபவம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் இறந்து போயிருந்தோம். இப்போது உயிர்பெற்றுள்ளோம். மீண்டும் கடவுளை நோக்கி நமது புனிதப்பயணம் தொடர்கிறோம். “அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த் தெழுவோம்”(உரோ:6:5).

    “பாவத்தில் விழும் வருந்தத்தக்க நிலை ஒரு ஆன்மாவுக்கு ஏற்்பட்டால் வெட்கமும் திகிலும் அடைந்து உடனே தன்னையே தூய்மையாக்கிக் கொள்ள முயற்சி செய்யவேண்டும்” என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார். ஆண்டவரிடம் திரும்பிச் செல்ல காலம் தாழ்த்தாமல், நாட்களை தள்ளிப்போடாமல், இறைவனோடு உறவை புதுப்பித்துக்கொள்ள பாவத்தை அறிக்கை செய்து மன்னிப்பு பெறுவோம்.

    ஆண்டவரின் பரிவு எல்லையற்றது. பாவம் என்ற நோயினால் நீண்டநாட்களாக பாதிக்கப்பட்டு அது தொற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அதன் பாதிப்பிலிருந்து வெளியேற இவ்வருள் அடையாளம் உதவுகிறது. ஒப்புரவு என்னும் அருள் அடையாளம் நாம் கடவுளின் அருளுக்குள் புகவும் கல்வாரியின் கொடையை அதிகப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. இது ஆன்மாவை சுகப்படுத்துவதற்கும், காயங்களை குணப்படுத்துவதற்கும், பாவவாழ்வை கடந்து மீண்டும் இறைவனின் இல்லம் திரும்புவதற்கும் பயன்படும் மருந்தாகும். இது புதிய வாழ்வை தொடங்குவதற்குரிய வாய்ப்பாகும். இது ஒரு இரண்டாம் திருமுழுக்காகும்.

    - அருட்தந்தை. அல்போன்ஸ், பூண்டி.
    தேடி வரும் இறைவனோடு இணைய நமது மனித இயல்புகளை களைந்து ஆவிக்குரிய இயல்பை பெற பாவங்களுக்காக மனவருந்துவோம்.
    காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்(மாற்.1:15). இயேசுவின் நற்செய்தி பணியின் தொடக்க முழக்கமே மனமாற்றத்திற்கான அழைப்பாகவே இருக்கிறது. ஏனெனில் இறையாட்சி இவ்வுலகில் மலர வேண்டுமாயின் மனவருத்தமும், பாவமன்னிப்பும் மிகவும் அவசிமாகிறது.

    எனவேதான் கடவுள் வடிவில் விளங்கிய அவர் கடவுளுக்கு  இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாக கருதாமல் மனிதரானார். அவரது வருகை இறையாட்சி வருகையாக இருந்தது. பாவத்தை போக்கும் ஆட்டுக்குட்டி ஆனார்(யோவா (1:29). மனிதருக்காக தமது ரத்தத்தை சிந்தினார். தன்னையே பரிகார பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். (உரோ 5:6-8). சிலுவை சாவில் வழியாக பாவத்தின் மீதும் அதன் விளைவாக ஏற்படும் சாவின் மீதும் வெற்றிக்கண்டார். இறைவனோடு நம்மை ஒப்புவாக்கினார்(உரோ5:10).

    காணாமல் போன ஆட்டை தேடியதை போல காணாமல் போன மகனை ஏக்கத்தோடு தேடியதை போல இறைவன் நம்மை தேடி வருகின்றார். தேடி வரும் இறைவனோடு இணைய நமது மனித இயல்புகளை களைந்து ஆவிக்குரிய இயல்பை பெற பாவங்களுக்காக மனவருந்துவோம். எழுந்து என் தந்தையிடம் போவேன் என கூறிச்சென்ற ஊதாரி மகனைப்போல தந்தை இறைவனிடம் திரும்புவோம். கடவுளே உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும், உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களை துடைத்தருளும் (திபா.51:1) மன்றாடுவோம்.

    அருட்தந்தை. அல்போன்ஸ், பூண்டி.
    அற்புதமான ஒரு சிறுகதையை வாசிக்கும் உணர்வை இந்த பரபரப்பான நூல் நமக்குத் தருகிறது. இதன் பழமைக்காகவும், அதில் தெறிக்கும் இலக்கிய புலமைக்காகவும் இந்த நூலை வாசிப்பவர்களும் உண்டு.
    விவிலியத்தில் மூன்று நூல்கள் பெண்களின் பெயரால் வருகின்றன. அவற்றில் ரூத்து, எஸ்தர் போன்றவை பழைய ஏற்பாட்டிலும், யூதித்து எனும் நூல் இணை திருமறையிலும் வருகிறது.

    ரூத்து நூல் எபிரேய மொழியில்‘ மெஹில்லாத் ரூத்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு ‘ரூத்து பற்றிய சுருளேடு’ என்று பொருள்.

    மேலோட்டமான வாசிப்புக்கு எளிமையான ஒரு இனிய கதை போலத் தோன்றினாலும் இந்த நூல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

    இந்த ரூத்துதான் தாவீது மன்னனின் முப்பாட்டி. அந்தத் தாவீது மன்னனின் வழிமரபாக வந்தவர்கள்தான் இயேசுவின் மண்ணுலகத் தந்தையர் யோசேப்பும், மரியாவும்.

    இயேசுவின் வழிமரபோடு இணைந்திருப்பதாலேயே இந்த நூல் பல ஆன்மிக அர்த்தங்களை உள்ளடக்கியதாய் மதிக்கப்படுகிறது.

    இதை எழுதியவர் யார் என்பது தெளிவாக இல்லை. இறைவாக்கினர் சாமுவேல் எழுதியதாக சிலர் சொல்வதுண்டு. ஆனால் சாமுவேலின் காலத்திற்குப் பிந்தைய செய்திகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது அந்த வாதத்தை வலுவிழக்கச் செய்கிறது.

    ஆனால் இது நீதித் தலைவர்களின் காலத்தில் எழுதப்பட்ட நூல் என்பதில் மட்டும் மாற்றுக் கருத்து இல்லை.

    நகோமிக்கு இரண்டு மகன்கள், ஓர்பா, ரூத்து என இரண்டு மருமகள்கள். காலம் வலிகளை அவளுக்குப் பரிசளிக்கிறது. மோவாபு எனும் அன்னிய நாட்டில் வாழ்கின்றனர். கணவன் இறக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின் மகன்களும் இறந்து விடுகின்றனர்.

    இரண்டு மருமகள்களோடு நிராயுதபாணியாகும் நகோமி மருமகள்களை அனுப்பி விடுகிறார். இரண்டு மருமகள்களும் இஸ்ரயேல் குலத்தைச் சாராத அன்னிய பெண்கள்.

    ஓர்பா மாமியாரின் சொற்படி அவரை விட்டு விலகிச் செல்கிறார். ரூத்தோ அவரை ஓர் அன்னையைப் போலப் பற்றிக் கொண்டு விலக மறுக்கிறார். இனிமேல் உங்கள் தேசமே என் தேசம், உங்கள் கடவுளே என் கடவுள் என அவர் நகோமியோடு பெத்லேகேமுக்குப் பயணிக்கிறார்.

    இந்த பெத்லேகேம்தான் தாவீது பிறந்த ஊர். இந்த பெத்லேகேம்தான் இயேசு பிறந்த ஊர்.

    அந்நாட்களில் கைம்பெண்கள் கவனிப்பாரின்றி விடப்பட்டனர். அவர்களுக்குரிய பாதுகாப்பு கிடைப்பதும் கேள்விக்குறியாய் இருந்தது. ஆனால் ஆண்டவரை நம்பி வரும்போது அனைவரையும் அவர் பரிவுடன் ஆதரிக்கிறார்.

    அந்நாட்களில் வயல்களில் அறுவடை நடக்கும் போது சிந்துகின்ற கதிர்களைப் பொறுக்க ஏழைகள் வருவதுண்டு. கிடைக்கின்ற சொற்ப தானியத்தைக் கொண்டு அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஓட்டுவார்கள். அவர்களுக்கு பல இன்னல்கள் நேரவும், பணியாளர்களால் தொந்தரவு நேரவும் வாய்ப்புகள் உண்டு.

    ரூத்து தன்னையும், மாமியாரையும் காப்பாற்ற கதிர் பொறுக்கச் செல்கிறார். உழைப்பின் தேவையை ரூத்தின் செயல் விளக்குகிறது. புதிய தேசம். புதிய நிலம். புதிய மனிதர்கள். எனினும் துணிச்சலாய் செல்கிறார் ரூத்து.

    மனிதனின் முயற்சிகளின் வழியில்தான் இறைவனின் அருள் வழங்கப்படுகிறது. சோம்பேறி களின் வாசலில் இறையருள் பொழியப்படுவதில்லை.

    இறைவனின் அருளால் அவர் செல்வது போவாசு எனும் ஒருவருடைய வயலுக்கு. அவர் நகோமியின் நெருங்கிய உறவினர். ரூத்தை மணந்து கொள்ள தகுதி யுடைய உறவினர்.

    அந்நாட்களில் கணவர் இறந்தால், கணவனின் சகோதரர் அல்லது நெருங்கிய உறவினர் அவளை மணந்து, வாழ்வு கொடுக்கலாம் எனும் சட்டம் இருந்தது.

    போவாசு, ரூத்தின் நல்லெண்ணத்தையும், இறை பக்தியையும், மாமியாரை நேசிக்கும் இதயத்தையும், சுயநலமற்ற சிந்தனையையும் கண்டு அவரை மணந்து கொள்கிறார் என கதை அழகாக நகர்கிறது.

    போவாசு காட்டிய பரிவு, போவாசை மணந்து கொள்ள நகோமி சொன்ன யோசனை, ரூத்தின் துணிச்சல் என பல செய்திகள் இந்த நூலில் மிக அற்புத இலக்கியச் சுவை யுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    பழங்கால செவி வழிச்செய்திகளும், மரபுக் கதைகளும் போவாசு-ரூத் வாழ்ந்த இடமே பின்னர் இயேசு பிறந்த இடம் என்கின்றன. போவாசும், ரூத்தும் மணமுடிப்பது அந்த பரம்பரையில் இறைமகன் இயேசு எனும் மீட்பரின் வரவுக்கான மறைவுச் செய்தியாய்ப் பார்க்கப்படுகிறது.

    பெத்லேகேமுக்குக் கிழக்கே ஒரு மைல் தொலைவில் ஒரு நிலப்பரப்பு உண்டு. அது “போவாஸ் நிலப்பரப்பு” என அழைக்கப்படுகிறது. இங்கேதான் ரூத்து கதிர் பொறுக்கினார் என்கிறது மரபுச் செய்தி.

    இதே நிலப்பரப்பில்தான் இயேசுவின் பிறப்பை தூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தார்கள் எனும் சுவாரசியச் செய்தியும் காணக்கிடைக்கிறது.

    இறைவனின் மீது அன்பு கொள்கின்ற யாரையும் அவர் அரவணைத்துக் கொள்கிறார். யாரையும் கைவிடுவதில்லை. அவர் எந்த இனமாய் இருந்தாலும், எந்த தேசமாய் இருந்தாலும் அவர்களை அரவணைக்கிறார்.

    அற்புதமான ஒரு சிறுகதையை வாசிக்கும் உணர்வை இந்த பரபரப்பான நூல் நமக்குத் தருகிறது. இதன் பழமைக்காகவும், அதில் தெறிக்கும் இலக்கிய புலமைக்காகவும் இந்த நூலை வாசிப்பவர்களும் உண்டு.

    எனினும் இது இலக்கியச் சுவையைத் தாண்டி மீட்பின் செய்தியையும், இறைவனின் அன்பினையும் சொல்லும் நூல் என்பதே உண்மையாகும்.

    - சேவியர்
    உங்களுக்குள் இருக்கும் எந்த பிரச்சினைக்காகவும் உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாமல், உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு ஆவியில் நிறைந்து கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்.
    ‘அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. எரே.1:19

    பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்கு இச்செய்தியின் மூலம் பலத்த ஆசீர்வாதங்களை தருவார்.

    ஒருவர் கப்பலில் பயணம் செய்ய பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்து பயணத்தைத் ெதாடங்கினார். ஒவ்வொரு உணவு உட்கொள்ள வேண்டிய வேளை வந்தபோது அனைத்துப் பயணிகளும் உணவு பரிமாறுகிற இடத்திற்கு சென்று தங்களுக்கு விருப்பமான உணவை உட்கொண்டார்கள்.

    இந்த மனிதரோ காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவு அந்நாள் முழுவதும் ஒன்றும் உட்கொள்ளாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார்.

    இவர் ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறதை அறிந்து கப்பல் பணியாளர் ‘ஏன் ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?’ என வினவியபோது, ‘பயணச்சீட்டிற்கு மட்டும் தான் கையில் பணம் இருந்ததே தவிர உணவிற்கு என்னிடம் பணம் இல்லாததினால் நான் ஒன்றும் சாப்பிடவில்லை’ என்றார்.

    ‘நீங்கள் கொடுத்த பணம் பயணச்சீட்டிற்கு மட்டுமல்ல உணவிற்கும் சேர்த்து தான்’ என விளக்கி கூறினார் அந்தப் பணியாளர். அதுவரை இந்த தகவல் அந்த மனிதருக்குத் தெரியாமலேயே கப்பலில் பயணம் செய்தார்.

    கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது, ‘உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்’ (1 யோவான் 4:4), மட்டுமல்ல ‘ஆவியானவர் தமது சித்தத்தின்படியே வரங்களை பகிர்ந்து கொடுக்கிறார்’ என 1 கொரி. 12:11 கூறுகிறது.

    கிறிஸ்தவ மார்க்கத்தில் இணைந்திருக்கிற ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் யுத்தங்கள் உண்டு, போராட்டங்கள் உண்டு, பிரச்சினைகள் உண்டு. ஆனால் அவைகள் ஒருபோதும் உங்களை பாதிக்காது.

    ஏனெனில், எப்போது ஆண்டவராகிய இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களோ, அப்போதே பிசாசின் சகல வல்லமைகளை மேற்கொள்ளுகிற அதிகாரத்தை கர்த்தர் உங்களுக்குக் கொடுத்துவிட்டார்.

    அதே நேரத்தில் சாத்தானை மேற்கொள்ளவும், முறியடிக்கவும் வேதம் நமக்கு சொல்லுகிற வல்லமையான ஆலோசனைகளை நீங்கள் கவனித்துப் பாருங்கள்.

    கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்

    ‘மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள், அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்’. (யாத்.17:11)

    பொதுவாக ஜெபம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் வேதாகமத்திலுள்ள தேவனுடைய மனிதர்கள் ஒவ்வொரு விதமான போராட்டங்களின் மத்தியிலும் எப்படி ஜெபம் பண்ணி சத்துருவை ஜெயித்தார்கள் என்று நாம் கவனிக்க வேண்டும்.

    அன்றைக்கு 430 ஆண்டுகள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவர் விடுவித்து, மோசேயின் மூலமாக வனாந்தர வழியாக வழிநடத்திக் கொண்டு வரும்போது, ரெவிதீம் என்ற இடத்தில் இஸ்ரவேலரோடு அமலேக்கியர் யுத்தம் பண்ணினார்கள்.

    அந்த யுத்தத்திற்கு மோசே, யோசுவாவையும் மற்ற மனிதரையும் அனுப்பிவிட்டு மலை உச்சியிலே ஏறி தன் இரண்டு கைகளையும் வானத்திற்கு நேரே ஏறெடுத்தான் என வாசிக்கிறோம்.

    மோசேயின் கரம் உயர்த்தப்படும்போது யோசுவா ஜெயமெடுத்தான். அதே வேளையில் மோசேயின் கரம் தாழ விழுகையில் அமலேக்கியர் ஜெயமெடுத்தார்கள். அந்நாட்களில் மோசே வயது முதிர்ந்த நிலையில் இருந்ததால், ஆரோனும், ஊரும் நிரந்தரமாய் மோசேயின் கையை உயர்த்திப் பிடித்தார்கள். அப்போது அமலேக்கியர் முற்றிலும் சங்கரிக்கப்பட்டார்கள்.

    தற்போது நீங்கள் சந்தித்து வருகிற பிரச்சினை என்ன? ஒருவேளை அது நீண்டகால போராட்டமாக இருக்கலாம் அல்லது வியாதி, வறுமையாக இருக்கலாம்.

    எதுவானாலும் சரி இவைகள் உங்களை மேற்கொள்ள முடியாது. நீங்கள் கர்த்தருடைய சமூகத்தில் முழங்கால்படியிட்டு உங்கள் கைகளை உயர்த்தி ஆவியில் நிறைந்து ஜெபித்துப் பாருங்கள்.

    ‘பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலும் ஜெபம் பண்ணுங்கள்’. (1 தீமோ.2:8)

    ‘இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருக்கிறது’. (சங்.77:2)

    ‘உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறேடு’. (புலம்.2:19)

    மேற்கண்ட வசனங்கள் எல்லாம் நாம் கைகளை உயர்த்தி ஜெபம் பண்ணி போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்துகிறது.

    ஆகவே, உங்களுக்குள் இருக்கும் எந்த பிரச்சினைக்காகவும் உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாமல், உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு ஆவியில் நிறைந்து கைகளை உயர்த்தி ஜெபியுங்கள். எந்த போராட்டங்களும் உங்களை மேற்கொள்ளாது. உங்களை இரட்சிக்கும்படி கர்த்தர் உங்களோடு கூட இருப்பார். அல்லேலூயா.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    வாசிப்புக்கு பரபரப்பும் சுவாரசியமும், வியப்பும், அதிர்ச்சியும் தரக்கூடிய ஒரு அற்புதமான நூலாக இந்த நீதித்தலைவர்கள் நூல் இருக்கிறது.
    விவிலிய நூல்களில் ஏழாவதாக வருகின்ற நூல் இந்த நீதித்தலைவர்கள் எனும் நூல். இது பழைய மொழிபெயர்ப்பில் ‘நியாயாதிபதிகள்’ என அழைக்கப்பட்டு வந்தது.

    தலைப்புக்கு ஏற்ப இந்த நூலில் நீதித்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆன்மிகப் பார்வையில் குறிக்கப்பட்டுள்ளது. பதினைந்து நீதித் தலைவர்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நீதித்தலைவர்கள் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தியவர்கள்.

    இந்த நூலை எழுதியவர் இறைவாக்கினர் சாமுவேல் என்பது மரபுச்செய்தி. ஆனால் முழுமையாக அவர் எழுதியிருக்க முடியாது என்றும், நூலின் சில பாகங்களை அவர் எழுதியிருக்கலாம் எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இஸ்ரயேலர்களின் வரலாற்றின் நானூற்று எண்பது ஆண்டு கால வாழ்க்கை இந்த சுருக்கமான நூலில் காணக்கிடைக்கிறது. இந்த நூலில் 21 அதிகாரங்களும் 618 வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

    இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டைக் கைப்பற்றிய காலம் தொடங்கி, அவர்களிடையே அரச வரலாறு தொடங்கியது வரையிலான நிகழ்வுகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

    இந்தக் காலகட்டத்தில் இறைவனே மக்களை நேரடியாக வழிநடத்தி வந்தார். அவர் களுக்கு அரசர்கள் இல்லை. நீதித் தலைவர்கள் எனும் ஆன்மிக வழிகாட்டிகள் மூலமாக மக்களை இறைவன் வழி நடத்தி வந்தார்.

    இந்த நீதித்தலைவர்களில் பலர் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். நாற்பது என்பது விவிலியத்தில் ஒரு சிறப்பான எண். தெபோராள், பாராக், கிதியோன், ஒதானியேல், ஏகூத் என எல்லோரும் நாற்பது ஆண்டுகள் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.

    இந்த ஆன்மிகத் தலைவர்கள் ஞானம் நிறைந்தவர்களாகவும், இறைவனோடு நேரடித் தொடர்பு கொண்டவர்களாகவும், சிலர் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.

    இந்த நூலின் காலகட்டத்தில் சுமார் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு பயந்து அவருடைய வழியில் நடந்தார்கள். மிச்ச காலத்தில் இறைவனை விட்டு விலகிச் சென்றார்கள்.

    இறைவனை விட்டு மக்கள் விலகிச் செல்லும்போது இறைவன் அவர்களைக் கண்டித்தும், தண்டித்தும் திருத்துகிறார். மனம் திரும்பி இறைவனிடம் வருகையில் அவர் பகையை மறந்து பரிவுடன் அரவணைக் கிறார். இந்த செய்திகளே இந்த நூலின் மையமாக அமைந்துள்ளன.

    ஆண்டவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதும், கடவுள் அவர்களை எதிரி களிடம் ஒப்படைப்பதும், மக்கள் மனம் திருந்தி இறைவனை வேண்டுவதும், அவர்களை மீட்க இறைவன் ஒரு தலைவரை எழுப்புவதும், மீட்பிற்குப் பின் மீண்டும் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதும்… என இந்த வட்டம் சுழன்று கொண்டே இருப்பதை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

    உண்மை இறைவனை விட்டு விட்டு பாகால் மற்றும் அஸ்தரோத்துகள் எனும் தெய்வங்களை மக்கள் நாடிச்செல்கின்றனர். ‘பாகால்’ என்பது அன்னியக் கடவுளுக்கான ஒரு பொதுப் பெயர் தான். பெரும்பாலும் மழையின் கடவுளை அது குறிப்பிட்டது. ‘அஸ்தரோத்துகள்’ நிலம் மற்றும் வளமைக்கான பெண் தெய்வங்களாக இருந்தன. இந்த தெய்வங்களை மக்கள் நாடிச் சென்றது தான் இறைவன் பார்வையில் மிகப் பெரிய பிழையாய் இருந்தது.

    தெபோராள், சிம்சோன், கிதியோன், அபிமெலேக்கு, யப்தா உட்பட முக்கியமான பல தலைவர்களின் வரலாற்றை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. அதில் தெபோராள் பெண். ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணை இறைவன் நீதித்தலைவியாக ஏற்படுத்தி, அவர் மூலமாக இஸ்ரயேல் மக்களை மீட்ட செய்தி விவிலியத்தின் மிக முக்கியமான பகுதியாகும். அவர் இறைவாக்கு உரைத்தார், தலைமை ஏற்றார், நீதி வழங்கினார், போரை முன்னின்று நடத்தினார் என அவரது வரலாறு அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளது.

    அதே போல கிதியோனின் வாழ்க்கையும் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைத்தூதர் கிதியோனைச் சந்திப்பது, அவரை வாழ்த்துவது, கிதியோன் தான் தகுதியற்றவன் என தம்மைத் தாழ்த்துவது, ஆண்டவர் அவருக்கு தெளிவும் வலிமையும் கொடுப்பது, அடையாளங்களைக் கொடுப்பது, அவரை ஒரு மாபெரும் தலைவராக மாற்றுவது என நிகழ்வுகள் சிலிர்ப்பான வாசிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.

    இப்தா எனும் தலைவரின் வாழ்க்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வெற்றியுடன் வருகையில் என் வீட்டு வாசலில் இருந்து என்னை நோக்கி முதலில் வரும் நபரை கடவுளுக்கு எரிபலியாக்குவேன் என நேர்ச்சை செய்கிறார் அவர்.

    வெற்றியுடன் வருகையில் வருவதோ அவருடைய ஒரே மகள். இறைவனின் வாக்கை நிறைவேற்றுகிறார் இப்தா.

    சிம்சோன் எனும் மாவீரன் எதிரிகளை சகட்டு மேனிக்கு அழிக்கும் ஆற்றல் படைத்த நீதித் தலைவன். அவன் எப்படி ஒரு பெண்ணால் வீழ்கிறான் எனும் வரலாறு பரபர திருப்பங்களுடனான ஒரு நாவல் போல இந்த நூலில் விவரிக்கப்படுகிறது.

    வாசிப்புக்கு பரபரப்பும் சுவாரசியமும், வியப்பும், அதிர்ச்சியும் தரக்கூடிய ஒரு அற்புதமான நூலாக இந்த நீதித்தலைவர்கள் நூல் இருக்கிறது. உலகில் யார் ஆட்சியமைத்தாலும் இறைவனே அனைவருக்கும் தலையாய் இருக்கிறார் எனும் ஆறுதலையும் இந்த நூல் தருகிறது.

    சேவியர்
    உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். (மார்க் 11:24)
    இப்பூவுலகில் வாழ்கின்ற மாந்தர் கூட்டம் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு விதமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நேரிடுகிறது.

    ஒவ்வொரு மனிதனுக்கும் துக்கத்தின் நாட்களும் உண்டு, சந்தோஷத்தின் நாட்களும் உண்டு, கண்ணீரின் நாட்களும் உண்டு, களிப்பின் நாட்களும் உண்டு, வியாதிபட்ட நாட்களும் உண்டு, சுகமான நாட்களும் உண்டு. கடன் வாங்கும் நாட்களும் உண்டு, கடன் கொடுக்கும் நாட்களும் உண்டு. இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இப்படிப்பட்ட சூழல்களை ஒவ்வொரு மனிதனும் சந்திக்க நேரிடுகிறது. இதைத்தான் திருமறை கூறுகிறது, ‘ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, நட ஒரு காலமுண்டு, நட்டதை பிடுங்க ஒரு காலமுண்டு. இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு. புலம்ப ஒரு காலமுண்டு, நடனமாடி மகிழ ஒரு காலமுண்டு’.

    ஆம், நம் வாழ்க்கை பயணத்தில் இவைகள் நியமிக்கப்பட்டவைகள். ஆக ஒரு மனிதன் இருளின் காலம், வெளிச்சத்தின் காலம் இந்த இரண்டையும் சந்திக்க நேரிடுகிறது.

    இருளின் காலத்தை உண்டு பண்ணி நம் வாழ்க்கையில் வியாதி, வறுமை, கடன், இழப்பு, வேதனை, உபத்திரவம், தனிமை, சோர்வு, பயம் இப்படிப்பட்ட காரியங்களை கொண்டு வருகிறவன் சாத்தான் அல்லது பிசாசு.

    வெளிச்சத்தின் காலத்தை உண்டு பண்ணி செழிப்பு, சமாதானம், ஆரோக்கியம், ஜெயம், சந்தோஷம், ஐஸ்வர்யம் இவற்றைக் கொடுக்கிறவர் தேவன். அந்த தேவன் மனுக்குலத்தில் சுக வாழ்விற்காக இயேசு கிறிஸ்துவாக பெத்லேகேமில் பிறந்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தார். சிலுவையிலே சாத்தானுடைய தலையை நசுக்கினார்.

    சாத்தானின் வல்லமையை சிலுவையிலே அழித்து அவன் அதிகாரத்தை ஒழித்தார். அவரை நம்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் புதிய வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தார். புது நம்பிக்கையை உருவாக்கினார். சமாதானமற்று கிடக்கும் மனுகுலத்திற்கு சமாதானம் கொடுக்கும் சமாதானப் பிரபு அவர். அவரை நோக்கி வேண்டிக்கொள்ளும் மானிடனின் நோயை போக்கும் பரிகாரி அவர். அவரை நோக்கி பார்க்கும் முகம் பிரகாசமடைகின்றன. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற மெய்யான ஒளி அவர் (யோவான் 1:9).

    இன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்ட காலத்தில் ஜீவிக்கிறீர்கள். கண்ணீரோடும், துக்கத்தோடும், வேதனையோடும் காணப்படுகிறீர்களா? கவலைப்படாதிருங்கள். உங்களுக்கு உதவி செய்ய அருள்நாதர் இயேசு இருக்கிறார். ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று இயேசு திருவுள்ளம் பற்றியிருக்கிறார். (மத்தேயு 11:28).

    ஆம், உங்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும், நம்பிக்கை உண்டாகும். சோர்ந்து போகாதிருங்கள். உங்களுக்கு நன்மை செய்யும் தெய்வம் உண்டு, அவர்தான் இயேசு.

    யவீரு என்னும் மனிதன் தன் மகளின் மரணப்படுக்கை மாற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். அவனுடைய மகள் பூரண சுகம் பெற்றாள். (என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள். (மத்தேயு 9:18)

    அன்னாள் என்பவள் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். ஒரு அழகான ஆண் குழந்தையை கடவுள் ஈவாகக் கொடுத்தார். (மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார், 1 சாமுவேல் 1:17)

    பேதுரு என்னும் பக்தன் கடலில் மூழ்கும் வேளையில் தன் ஆபத்து நேரத்தில் கடவுளை நோக்கி கதறிக்கூப்பிட்டான். அவன் ஆபத்திலிருந்து தேவன் அவரை கை தூக்கி விட்டார்.

    (அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார் மத்தேயு 14:29)

    உங்களையும் கை தூக்கிவிட உங்கள் தேவைகளை சந்திக்க, குறைகளை நிறைவாக்க, உங்களை நேசிக்கிற அன்பு தெய்வம் அருள்நாதர் இயேசு உண்டு. அவர் நிச்சயமாகவே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கட்டளையிடுவார். ஆம், கர்த்தரை நம்புங்கள் அப்பொழுது சித்தி பெறுவீர்கள்.

    “உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். (மார்க் 11:24)

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

    சகோ சி. சதீஷ், வால்பாறை.
    ×