search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    பைபிளின் மிக முக்கியமான நூலான ‘யோசுவா’ நூலை எழுதியவர் யோசுவா என்பது மரபுச்செய்தி. அவரது மரணமும் அதற்குப் பின்பான நிகழ்வுகளும் மட்டும் பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.
    மோசேவின் மறைவுக்குப் பிறகு, இஸ்ரயேல் மக்களை யோசுவா தலைமையேற்று வழிநடத்தினார். எகிப்திலிருந்து கானானை நோக்கி நாற்பது ஆண்டுகள் மோசே வழிநடத்தினார். கானானுக்குள் நுழையும் முன் மோசே இறைவனால் எடுத்துக் கொள்ளப்பட்டார்.

    இப்போது யோசுவா மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அப்போது அவருக்கு வயது 85. மக்கள் மோசேயை மதித்தது போலவே யோசுவாவையும் மதித்தார்கள்.

    யோர்தான் ஆற்றைக் கடந்து கானானுக்குள் செல்ல வேண்டும். நதி கரைபுரண்டு ஓடுகிறது. கடவுளின் அருளினால் யோசுவா, யோர்தானை இரண்டாகப் பிரித்து நடுவில் வழி தோன்றச் செய்தார். அதைக் கடந்து மக்கள் கானான் நாட்டுக்குள் சென்றார்கள்.

    பைபிளின் மிக முக்கியமான நூலான ‘யோசுவா’ நூலை எழுதியவர் யோசுவா என்பது மரபுச்செய்தி. அவரது மரணமும் அதற்குப் பின்பான நிகழ்வுகளும் மட்டும் பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

    முதன்மைக் குரு எலியேசர், அல்லது அவரது மகன் பினகாசு இந்த நூலின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சில ஆய்வாளர்கள், இந்த நூல் யோசுவாவின் காலத்துக்கும், சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது என்கின்றனர்.

    யோசுவா, மோசேயோடு இணைந்து பயணித்தவர். எகிப்தின் அடிமை நிலையை வாழ்ந்து அனுபவித்தவர். மோசேயின் இறைநம்பிக்கையையும், கடவுளை மகிமைப்படுத்தும் செயல்களையும் அருகில் இருந்து அறிந்தவர். செங்கடலை, இறைவன் மோசே மூலம் இரண்டாய் பிளந்ததை நேரில் பார்த்தவர். மோசேயின் நம்பிக்கைக்கும், பிரியத்துக்கும் உரிய நபராக இருந்தவர். அதனால் தான் மோசேக்குப் பின் யோசுவா தலைவர் என்பதை மக்கள் சட்டென ஒத்துக்கொண்டனர்.

    ‘நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான யுத்தம்’ என சுருக்கமாக இந்த நூலைப் பற்றிச் சொல்லி விடலாம். கடவுள் தன்னைவிட்டு விலகிச்சென்று, வேறு தெய்வங்களை வழிபட்ட மக்களை அழிக்கிறார். தன்னை நம்பியிருப்போரைக் காக்கிறார் எனும் செய்திகள் இதில் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையும் பாக்கியத்தை, ஆபிரகாமோ, மோசேயோ பெறவில்லை. ஆனால் அது யோசுவாவுக்குக் கிடைக்கிறது. யோசுவா இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய வாழ்நாளில் இஸ்ரயேல் மக்கள் பல்வேறு வெற்றி களைப் பெற்றனர்.

    யோசுவா மக்களை 25 ஆண்டுகள் வழிநடத்தி தனது 110-வது வயதில் இறைவனை அடைந்தார்.

    யோசுவா நூலுக்கு, ‘வெற்றிகளின் நூல்’ என்றொரு பெயர் உண்டு. இயேசுவின் பெயருக்கு இணையான பெயர் இந்த யோசுவா என்பது.

    மொத்தம் 24 அதிகாரங்கள் கொண்ட இந்த நூலில் 658 வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

    “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24:15) எனும் வசனம் மிகப்பிரபலமான வசனம்.

    யோசுவாவிடம் காணும் இறைநம்பிக்கையும், அசைக்க முடியாத விசுவாசமும் வியக்க வைக்கிறது. மாபெரும் எரிகோ கோட்டையை ஆர்ப்பரித்தே வீழ்த்தி விடலாம் என இறைவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் யோசுவா. ஆறு ஏக்கர் அளவுக்கு விரிந்து பரந்திருந்த கோட்டை இடிந்து விழுந்தது. இந்த நிகழ்வு பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

    இந்த நூலில் யோசுவா 31 அரசர்களோடு போரிட்டு அவர்களை இறைவனின் அருளால் வென்ற நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. கடவுள், அழிக்கும் தேவன் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், அவர் வாக்கு மாறாதவர், பாவங்களை வெறுப்பவர் என்பதே புரிந்துகொள்ள வேண்டிய பாடமாகும்.

    எகிப்தில் அடிமைகளாய் இருந்த மக்கள் இப்போது கானானிலுள்ள மக்களை வென்று அந்த இடத்தை தங்களுடைய இடமாக மாற்றிக்கொள்கின்றனர்.

    ஒரு யுத்தத்தின் போது சூரியன் மறையாமல் முழுநாளும் ஒளிகொடுத்துக் கொண்டிருந்த அதிசய நிகழ்வும் யோசுவாவின் நூலில் காணப்படுகிறது. யோசுவா நிகழ்த்திய பல்வேறு யுத்தங்களும் அதன் காலங்களும் பின்னர் வரலாற்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    “விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று, கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக்கொண்டதும் நம்பிக்கையினால்தான்” என் புதிய ஏற்பாடு குறிப்பிடும் இராகாப் யோசுவாவின் காலத்தைய பெண்மணி. இஸ்ரயேலருக்கு உதவி செய்தவர். அவருடைய இறை நம்பிக்கை இன்றளவும் வியப்புடன் பார்க்கப்படுகிறது.

    கடவுளால் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டுக்குள் நுழைவதும், அங்கே போரிட்டு நாட்டை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதும், நாட்டைப் பகிர்ந்து அளிப்பதும், மக்களுக்கு யோசுவா போதனைகள் வழங்குவதும், பின்னர் அவர் விடைபெறுவதும் என நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன.
    கிறிஸ்துவில் அன்பானவர்களே, இந்த வருடம் முழுவதும் ஆசீர்வாதத்தின் வருடம். அவர் நடத்தும் வழிகள் யாவும் செழிப்புள்ளதாக அமையும். ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கும் காரியங்களை நீக்கிப்போடுவார்.
    வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர். உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது (சங்.65:11)

    கிறிஸ்துவில் அன்பானவர்களே, இந்த வருடம் முழுவதும் ஆசீர்வாதத்தின் வருடம். அவர் நடத்தும் வழிகள் யாவும் செழிப்புள்ளதாக அமையும். ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கும் காரியங்களை நீக்கிப்போடுவார். நமக்கு நடக்கும் பல காரியங்கள் தீமைபோன்று தோன்றலாம். இறுதியில் நன்மையாகவே முடியும்.

    தேவனிடத்தில் உண்மையாய் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் சம்பூரணமாய்க் கொடுக்கிறார். வானத்திலிருந்து மழையையும், பனியையும், செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தருகிறார். பூமியின் ஆகாரத்தினாலும், தண்ணீரினாலும், காற்றினாலும் ஆசீர்வதித்து, வருடம் முழுவதும் எல்லா ஆசீர்வாதத்திலும் நம்மை நடத்துவார். அவர் நன்மை செய்கிறவராயும், அனைவரின் வியாதிகளை குணமாக்கும்படியாக கிருபை செய்தார்.

    ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத்.6:26)

    ஆகையால் எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று உங்கள் சரீரத்தில் கவலைப்படாதிருங்கள். காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளர்ந்து மலரையும் வாசனையும் கொடுக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். ஆகாயத்து பட்சிகளை போஷிக்கும் தேவன் தினமும் உன்னைப் போஷியாமல் இருப்பாரோ? அவர் பார்வைக்கு ஆகாயத்து பட்சிகளை விட நீ விசேஷித்தவன் அல்லவா?

    எல்லா ஜீவன்களின் கண்களும் இறைவனையே நோக்கிக் கொண்டு இருக்கிறது. பூமியில் உள்ள மிருக ஜீவன்களும், ஜீவராசிகள் அனைத்தையும் போஷிக்கும்விதம் அற்புதம். ஏற்ற வேளையிலே உணவு கொடுக்கிறார். அவர் ஆவியை அனுப்பும்போது அவைகள் அனைத்தும் சிருஷ்டிக்கப்படும். அவர் கொடுக்க, வாங்கிப் புசிக்கும். தம்முடைய கையைத் திறக்க, நன்மையால் திருப்தியாகும்.

    பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். (சங்.104:14)

    கர்த்தர் பூமியை விசாரித்து அதற்கு மழைநீர் பாய்ச்சுகிறார். பூமியிலே தண்ணீரை நிறைத்து செழிப்பாக்குகிறார். மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்களை முளையச்செய்து, தானியத்தை விளைவிக்கிறார்.

    பூமியிலே எல்லாருக்கும் எல்லா விதமான ஆகாரம் உண்டாகும் படி ஆசீர்வதிக்கிறார். எல்லா தானியத்திலிருந்தும் உணவு வகைகளை தருகிறார். உலகத்தில் உள்ள எல்லா ஜனங்களையும் போஷிக்கிறார்.

    நாளைய தினம் போஜனத்திற்காய், உடைக்காய் ஏன் கவலைப்படுகிறாய்? அருள்நாதர் உன் தேவையை முன் கூட்டியே அறிந்திருக்கிறார். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார். உன் நாவில் இருந்து சொல் பிறவாததற்கு முன்னே உன் தேவை எது என்று அறிந்திருக்கிறார்.

    தகப்பனைப் போன்று அன்பு உள்ள பிதா நம்பேரில் கரிசனையுடையவராக இருக்கிறார். தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தவர்களின் காரியங்களை அவரே பார்த்துக்கொள்வார். எல்லா மனிதருடைய இருதயங்களையும் ஆராய்ந்து நமது நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறவர்.

    பரம தேவனின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து எல்லோரையும் பார்க்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறது.

    கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். (உபா.28:8)

    நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். உனக்கு பரிபூரண நன்மை உண்டாகத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார். நீ குடியிருக்கும் இடத்தில் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மிருக ஜீவன்களின் பலனும் ஆசீர்வாதமாக இருக்கும்.

    நீ போகின்ற இடத்தில் எல்லாம் அவர் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. உச்சிதமான எல்லா ஆகாரத்தினாலும் உன்னை போஷித்து திருப்தியாக்குவார். நீ இந்த வருடம் முழுவதும் ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆமென்.

    சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50
    சட்டங்களின் நாயகன் மோசேயும், இறைவாக்குகளின் நாயகன் ஏசாயாவும், இறைவனின் மகனாகிய இயேசுவோடு கலந்துரையாடிய பிரமிப்பு நிகழ்வு அது.
    இந்த நூலின் ஒரிஜினல் எரேபியப் பெயர் ‘எல்லே ஹாடேபாரிம்’ என்பதாகும். ‘இவை தான் அந்த வார்த்தைகள்’ என்பது அதன் பொருள்.

    இதை கிரேக்கத்தில் மொழிபெயர்த்த எழுபதின்மர் இதற்கு ‘டியூட்ரோனோமி’ என பெயர் கொடுத்தனர். அதற்கு ‘மீண்டும் கொடுக்கப்படும் சட்டங்கள்’ என்பது பொருள்.

    கடவுள், மோசே வழியாக ‘விடுதலைப் பயணம்’ நூலில் கொடுத்த சட்டங்களை இந்த நூலில் மீண்டும் ஒரு முறை மோசே மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

    இந்த நூலை மோசே எழுதியிருக்கிறார். ஆனால் முழுவதும் மோசே எழுதியிருக்க வாய்ப்பில்லை. காரணம் அவருடைய மரணம் சார்ந்த விஷயங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் கடவுளின் சட்டங்களும், பத்து கட்டளைகளும் இரண்டாம் முறை வருவதற்கு ஒரு காரணம் உண்டு.

    தொடக்கத்தில் கடவுள், மோசே வழியாக சட்டங்களைக் கொடுக்கிறார். ஆனால் வாக்களிக்கப்பட்ட நாடான கானானுக்குள் இஸ்ரயேல் மக்கள் அச்சத்தினால் நுழையவில்லை. இதனால் கடவுள் இஸ்ரயேல் மக்களை சபித்தார். ‘இந்தத் தலைமுறையிலுள்ள யாருமே அந்த நாட்டுக்குள் நுழையமாட்டீர்கள்’ என்றார். அது நடந்து இப்போது ஒரு தலைமுறை கடந்து விட்டது.

    இதோ கானானுக்குள் நுழையும் காலம் நெருங்கிவிட்டது. பழைய தலை முறையில் உள்ளவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். எஞ்சியிருப்போரும் இறக்கும் காலம் நெருங்கிவிட்டது.

    மோசே இறக்கப் போகிறார். தலைமைப் பொறுப்பு யோசுவாவுக்கு அளிக்கப்படப் போகிறது. இப்போது இருப்பது புதிய தலைமுறை.

    புதிய தலைமுறை நேரடியாக கடவுளின் கட்டளைகளை மோசேயிடம் இருந்து கேட்டதில்லை. இந்தத் தலைமுறைக்கு தன் வாயால் அனைத்து கட்டளைகளையும் ஒரு முறை முழுமையாய் சொல்லி விடுவது உசிதம் என யோசிக்கிறார் மோசே.

    மோவாப் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் வந்து விட்டனர். கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது வாக்களிக்கப்பட்ட நாடு. விடுதலை நாயகன் மோசே, விடை பெறும் கணம் இது.

    அவர் நாற்பது நாட்கள் அங்கே அமர்ந்து அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை கடவுளின் இயல்பை விளக்குகிறார். கடவுள் கொடுத்த கட்டளைகளை விளக்குகிறார். கானான் நாட்டிற்குள் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.

    தொடக்க நூலில் மனிதன் படைக்கப்படுகிறான், இறைவனுக்குப் பிரியமான ஒரு இனத்தைக் கடவுள் பிரித்தெடுக்கிறார். விடுதலைப்பயணத்தில் எகிப்தில் அடிமையாயிருக்கும் தனது மக்களை விடுவிக்கிறார்.

    லேவியர் நூலில் மக்களின் புனிதமும் அவர்கள் கடவுளோடு கொண்டிருக்க வேண்டிய உறவும் விளக்கப்படுகிறது. எண்ணிக்கை நூல் மக்களின் பாலைநில வாழ்க்கையைப் பேசுகிறது.

    இப்போது இணைச்சட்டம் எல்லா சட்டங்களையும் வாழ்க்கை முறைகளையும் மீண்டும் ஒரு முறை மக்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறது. இந்த ஐந்து நூல்களையுமே மோசே எழுதுகிறார்.

    பாலை நிலத்தில் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த மக்கள் இனிமேல் தான் நிலப்பரப்பில் நிம்மதியாக வாழப் போகின்றனர். அங்கே எப்படி வாழவேண்டும், எப்படி இறைவனைப் பற்றிக் கொள்ளவேண்டும், எப்படி பிற மதங்களினால் தூய்மை இழந்துவிடக் கூடாது என்பதெல்லாம் இந்த போதனைகளில் வலியுறுத்தப்படுகின்றன.

    “ஆகையால் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள்” என மோசே திரும்பத் திரும்ப இந்த நூலில் கூறுவதை, இயேசுவும் தனது போதனைகளின் முதன்மையாகக் கொண்டிருந்தார். “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து” என இயேசு போதித்தார்.

    நாற்பது ஆண்டுகள் பாலை நிலத்தில் உணவும், நீரும், பாதுகாப்பும் வழங்கிய இறைவனை நம்பி இனிவரும் வாழ்க்கையையும் நடத்தவேண்டும். பிற தெய்வங்களை நாடுவதோ, மற்ற இனத்தோடு கலந்து தங்களை கறைபடுத்திக் கொள்வதோ கூடாது, எதிர்ப்பவர்களை கடவுள் அழிப்பார் போன்ற சிந்தனைகள் மோசேயின் உரையின் மையமாக இருந்தன.

    போதனைகளை எல்லாம் முடித்தபின் தனது நூற்று இருபதாவது வயதில் மோசே பிஸ்கா மலையில் ஏறினார். வலிமையும், கூர்மையும், தெளிவும் உடைய மனிதராக மலையேறினார். அங்கிருந்து வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டைப் பார்த்தார். அதற்குள் போகமுடியவில்லையே எனும் ஏக்கம் அவரிடம் இருந்தது.

    இறைவன் அவரை எடுத்துக்கொண்டார். அவரது உடலை இறைவன் அடக்கம் செய்கிறார். அதனால் அவருடைய உடலைக் கூட யாரும் அதன் பின் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பல நூற்றாண்டுகளுக்குப் பின் இயேசுவின் காலத்தில் கானான் நாட்டு எர்மோன் மலையின்மேல் மோசேயும், எலியாவும் இயேசுவின் முன்னால் தோன்றினர். இயேசுவின் சீடர்கள் மூன்று பேர் அவர்களோடு இருந்தனர்.

    இயேசு உருமாறிய நிகழ்வாக அது விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சட்டங்களின் நாயகன் மோசேயும், இறைவாக்குகளின் நாயகன் ஏசாயாவும், இறைவனின் மகனாகிய இயேசுவோடு கலந்துரையாடிய பிரமிப்பு நிகழ்வு அது.

    வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் விடுதலை வீரர் மோசே நுழைந்த முதல் நிகழ்வாகவும் அது அமைந்தது.

    சேவியர்
    யாராவது தீமை செய்துவிட்டால், மிகப் பொறுமையாக நடந்துகொண்டு, பதிலுக்கு தீமை செய்யாமல், நன்மையைச் செய்யும் முடிவோடு காத்திருந்தால், மற்றொரு கட்டத்தில் மிகப்பல நன்மைகளுக்கு பக்தன் சொந்தக்காரன் ஆகலாம்.
    உலக வாழ்க்கையில் நீந்தும் ஒவ்வொரு வருக்குமே தடைகள், இன்னல்கள், இழப்புகள் வருகின்றன. ஒவ்வொன்றில் இருந்தும் நன்மை, தீமைகளை அறிவதோடு, வாழ்க்கையை இறைப்பாதையை நோக்கி திருப்பிக் கொள்வதற்கான அழைப்பாகவும் அந்த சம்பவங்கள் அமைகின்றன.

    எந்தவித நன்மை - தீமை என்றாலும் அது இறைவனின் கவனத்துக்கு வராமல் மனிதனை அணுகுவதில்லை என்று வேதம் கூறுகிறது.

    மனதை கசக்கிப்பிழியும் ஒவ்வொரு துயர சம்பவங்களில் இருந்தும் புதிய பாடங்களை இறைவன் நமக்குக் கற்றுத் தருகிறார். நமது மன எண்ணங்களில் அதற்கான சிந்தனைகளை இறைவன் ஏற்படுத்துகிறார். ஆனால் அவற்றை பெரும்பாலானோர் பிற்காலங்களில் மறந்துவிடுவதுண்டு. அதை ஆராய்ந்து பின்பற்றுவதில்லை. ஏதோ வினைப்பயனாக அந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டதாக நினைக்கின்றனரே தவிர, அது தந்த படிப்பினைகளின்படி வாழ்க்கையை சீர்படுத்திக்கொள்வதில்லை.

    கிறிஸ்தவ பாதையை பின்பற்றிச் செல்வோருக்கு இயேசு அளித்துள்ள கட்டளைகள், பெரும்பாலும் இயல்பு நிலைக்கு ஒத்துப்போவதாக இருப்பதில்லை. ‘அடித்தவனை திருப்பி அடிக்காமல் பொறுத்துக்கொள்; எதையாவது பறித்துக்கொள்ள நினைத்தால் அதை அவனிடமே விட்டுக்கொடுத்துவிடு; துன்புறுத்துவோர் மீது புகார், வழக்கு கொடுக்காதே; துரோகியையும் மன்னித்துவிடு’ என்று இயல்பு வாழ்க்கைக்குப் பொருந்தாத கட்டளைகளை இயேசு பிறப்பித்துள்ளார்.

    இதை வாழ்க்கை நடைமுறையில் பின்பற்று வதற்கு மலைப்பாகவே பலருக்கும் தோன்றும். ஆனால் இயேசு நடந்துகாட்டியுள்ள இந்தப் பாதையில் செல்ல ஒருவன் முழுமனதோடு முடிவு செய்துவிட்டான் என்றால், அந்த கட்டளைகளை வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய பலத்தையும் அவரே அளிக்கிறார்.

    எனவேதான் மரணத்துக்கு உட்படுத்துபவனையும் உண்மைக் கிறிஸ்தவன் தனது இறுதி நிமிடங்களில்கூட மன்னிக்கிறான். பல்வேறு கொள்கைக்காக சாவுக்கும் அஞ்சாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்கள் உலகத்தில் பலர் இருக்கலாம். ஆனால் கொலை செய்பவனையும் மன்னிப்பதற்காக நெஞ்சை நிமிர்த்துபவன் உண்மைக் கிறிஸ்தவன் மட்டுமே.

    இயேசுவின் கட்டளைகளை இறுதிவரை பின்பற்றுகிறானா என்பதற்கான சோதனைகளை பக்தன் கடந்து செல்ல வேண்டியதுள்ளது. அந்த வகையில் அலறவைக்கக் கூடிய சில சம்பவங்கள், அவனது வாழ்க்கையில் அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, உண்மைக் கிறிஸ்தவனுக்கு திடீரென்ற இழப்புகள், சோதனைகள், உபத்திரவங்கள் வந்து சேருவதை தவிர்க்க இயலாது.

    அதுபோன்ற உபத்திரவங்கள், உறவினர்களாலோ, நண்பர்களாலோ, உடன் பணியாளர்களாலோ, அருகில் வசிப்பவர்களாலோ நேரிடலாம். அந்த நேரங்களில் பக்தியை காப்பாற்றிக்கொள்வதற்காக எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதை இறைவன் தெளிவுபடுத்தியுள்ளார். அதை ரோமர் 12:19,20,21-ம் வசனங்களில் காணலாம்.

    அந்த வசனங்களில், “யாரையும் பழிவாங்கக்கூடாது. உன்னை எதிரியாக கருதுபவன் பசி, தாகத்தில் இருந்தால் அவனுக்கு தேவையான போஜனம், பானங்களைக் கொடு. அப்படிப்பட்ட நன்மைகளைச் செய்தால், தீமையினால் வெல்லப்படாமல், தீமையை வென்றுவிடலாம்” என்ற கருத்துகளை வகுத்தளித்துள்ளார்.

    இந்த வசனங்கள் பல கேள்விகளை உருவாக்கும் (ரோமர் 10:17). யாராவது நமக்கு ஏதாவது தீமையைச் செய்துவிட்டால், அவனை பதிலுக்கு எதிர்த்தால்தானே மீண்டும் அவனால் ஏற்படும் இழப்புகள், தீமைக்குள் சிக்காமல் இருக்கலாம் என்ற எண்ணங்கள் தோன்றும்.

    உலக இயல்பு வாழ்க்கையில் நடப்போருக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதும், தீமைக்குத் தீமை செய்வது இயல்பானதுதான்.

    அதன்படி, தீமை செய்தவர்கள் மீது அவர்கள் புகார் அளிக்கலாம்; வழக்கு தாக்கல் செய்யலாம்; மற்றவர்களை அழைத்து நியாயம் பேசலாம்.

    இயல்பு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களின் மனச்சாட்சிப்படி அந்த நடவடிக்கைகள் தவறல்ல. உலகமும் அதற்கேற்ற நடைமுறைகளை வகுத்தளித்துள்ளது. (குற்ற ரீதியான நடவடிக்கைகள் தான் தவறு)

    ஆனால் இறைப்பாதையில் இருப்பவர்களுக்கான நடைமுறை அதுவல்ல. தீமை செய்தவருக்கு எதிராக, உலக ரீதியிலான (புகார், வழக்கு போன்ற) நடவடிக்கைகளை மேற்கொண்டாலே அது தீமையாக ஆகிவிடும். பிறர் செய்த தீமையால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டத்தான் புகார், வழக்கு தாக்கல் செய்கிறேன் என்று அதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கிவிட்டால், ஒரு கட்டத்தில் பொய், பகை, பழிவாங்குதல் போன்ற நிலைக்கு பக்தனை அவை இழுத்துச் சென்றுவிடும்.

    அப்படி சென்றுவிட்டால், “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில் செய்வேன்” என்ற இறைவார்த்தையில் இருந்து விலக வேண்டியதாகிவிடும். அது பக்தனுக்கு எதிரான பாவமாக அமைவதோடு, அவன் மேலும் பல பிரச்சினை களுக்குள் மீளமுடியாமல் சிக்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். அவற்றில் இறைவனின் உதவி கிடைக்காது. அந்த நிலையைத்தான், ‘பக்தனை தீமை வென்றுவிடும்’ என்று வேதம் குறிப்பிடுகிறது.

    தீமை செய்தவனுக்கு நன்மையையும் தீமையையும் செய்யும் வாய்ப்புகளை இறைவன் உருவாக்கித் தருகிறார். இவற்றில் நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பது, அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் அளவைக்காட்டும். இதுபோன்ற சம்பவங்களின் மூலமாகத்தான், “வசனத்தினால் கேள்வி எழும், கேள்வியினால் விசுவாசம் வரும்’’ என்ற வசனத்தின் ஆழ, அகலத்தை உணரமுடியும்.

    தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வது என்பது, இயல்பு வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இயலாத காரியம். ஆனால் இறைபக்தர்களுக்கோ, ‘தீமை செய்தவருக்கும் நன்மை செய் என்ற இறைக்கட்டளையை பின்பற்ற முழுமனதோடு விரும்புகிறேன்’ என்று முன்வந்தால், நன்மைகளை செய்ய ஆவியில் பலம் அளிக்கப்படுகிறது. அந்த பலத்துடன் அவன் நன்மையை மட்டுமே செய்கிறான். அந்த வகையில், தீமை மேற்கொண்டுவிடாதபடி அதை நன்மை செய்வதன் மூலம் பக்தன் வெல்கிறான்.

    இப்படி தீமை செய்தோருக்கும் நன்மை செய்வது மற்றொரு வகையான பிரதிபலனை தருகிறது. அதாவது, பக்தனுக்கு செய்யப்பட்ட இழப்பு நீக்கப்பட்டு ஒரு காலகட்டத்தில் அதே நன்மைகளோ அல்லது கூடுதல் நன்மைகளோ வந்து கிடைத்துவிடுகிறது. எனவே யாராவது தீமை செய்துவிட்டால், மிகப் பொறுமையாக நடந்துகொண்டு, பதிலுக்கு தீமை செய்யாமல், நன்மையைச் செய்யும் முடிவோடு காத்திருந்தால், மற்றொரு கட்டத்தில் மிகப்பல நன்மைகளுக்கு பக்தன் சொந்தக்காரன் ஆகலாம்.

    -ஜெனட், சென்னை.
    இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்வதும், அதன்பின் அவர் சொன்ன புனித வாழ்க்கையை வாழ்வதும் எனும் இரட்டை ஆன்மிக நிலையை இது விளக்குகிறது.
    ‘லேவி’ எனும் குலத்தினர் இறைவனின் ஆலயப் பணிகளைச் செய்பவர்கள். இந்த நூல் பெரும்பாலும் இறைவனின் சட்டதிட்டங்களையும், இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்குகிறது.

    இது லேவியர்களுக்கு மட்டுமானதல்ல, ஆனாலும் லேவியர் பணி சார்ந்த விஷயங்களைப் பேசுவதால் இது ‘லேவியர் ஆகமம்’ என அழைக்கப்படுகிறது.

    எபிரேயத்தில் இந்த நூல் ‘வாயிக்ரா’ என அழைக்கப்பட்டது. அதற்கு ‘அவர் அழைத்தார்’ என்பது பொருள்.

    இந்த நூல்களை கிரேக்கத்தில் மொழிபெயர்த்த எழுபதின்மர் குழு இதற்கு ‘லேவியர் தொடர்பானது’ எனும் பொருளுடைய பெயரை வைத்தனர்.

    அன்றைய இஸ்ரயேல் மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது போன்ற சட்டங்களால் இந்த நூல் நிரம்பியிருக்கிறது. இந்த நூல் யூதர்களால் தவறாமல் படிக்கப்படும் ஒரு நூல்.

    யூதக்குழந்தைகள் சிறுவயதிலேயே இந்த நூலைப் படித்தாக வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம்.

    இந்த நூலை எழுதியவரும் மோசே தான். இறைவனை விட்டு மக்கள் விலகிச் செல்லக்கூடாது என்பதற்காக இதிலுள்ள சட்டங்கள் எழுதப்பட்டன. கி.மு. 1446 என்பது இதன் தோராய காலம் என கணிக்கப்படுகிறது.

    இந்த நூலில் ஐம்பது முறைக்கு மேல் வருகின்ற ‘ஆண்டவர் மோசேயிடம் கூறியது’ எனும் வாசகம்- ‘இவை கடவுளின் கட்டளைகள்’ என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதை மக்கள் தங்கள் மனங்களில் ஆழமாய் எழுதிக்கொள்ள வேண்டும் எனும் மோசேயின் எச்சரிக்கை உணர்வையும் இவை பிரதிபலிக்கின்றன.

    கடவுளுக்கு என்னென்ன பலிகள் செலுத்தவேண்டும், எப்போது செலுத்தவேண்டும், யார் செலுத்த வேண்டும், பலிப்பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என இந்த நூலில் பலிகள் குறித்து மிக விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதற்கு முந்தைய நூலான விடு தலைப்பயணத்தில், பலி பீடம் எப்படி இருக்க வேண்டும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில், அந்த பலி பீடத்தில் செலுத்தப்பட வேண்டிய பலிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது.

    இந்த நூல் உடல் சார்ந்த தூய்மையை அதிகம் பேசுகிறது. உதாரணமாக, இறந்த உடலை ஒருவர் தொட்டால் அவர் தீட்டுப்பட்டவர். அவர் எப்படி தன்னை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளன.

    அத்துடன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்கள், ஓய்வு ஆண்டு குறித்த சட்டங்கள் போன்றவையும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.

    எப்படிச் சாப்பிடவேண்டும், பாலியல் தூய்மையைக் காத்துக்கொள்வது எப்படி என்பது தொடங்கி, எப்படி கழிவுகளை வெளியேற்றுவது என்பது வரையிலான நுணுக்கமான சட்டங்கள் இந்த நூலை செறிவாக்குகின்றன.

    ஏழு எனும் எண்ணிக்கை முழுமையைக் குறிக்கிறது. ஏழாவது நாள் ஓய்வு நாள், ஏழாவது ஆண்டு ஓய்வு ஆண்டு, பாஸ்கா விழா ஏழு நாள் கொண்டாடப்படும் என தொடங்கி ஏராளமான ‘ஏழு’ களை இந்த நூலில் காணலாம்.

    ‘ரத்தம்’ எனும் குறியீடு இந்த நூலில் மிக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. எரி பலிகள், தானிய பலிகள், சமாதான பலிகள், பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி போன்ற பலிகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

    இறைவனின் அருகாமை அச்சம் தரக்கூடியது. அவரைத் தூய்மையுடன் மட்டுமே அணுக வேண்டும் எனும் சிந்தனை அழுத்தமாக விளக்கப்படுகிறது.

    தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மட்டுமே அன்றைய தினம் பாவ மன்னிப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தெரிந்தே செய்யும் பாவங் களுக்கு இறைவனின் தண்டனை நிச்சயம் எனும் போதனை நிலவியது.

    இந்த நூலில் தான் விவிலிய விழாக்களான பாஸ்கா விழா, புளிப்பற்ற அப்பப் பண்டிகை, முதற்பலன் பண்டிகை, பெந்தேகோஸ்தே விழா, எக்காளப் பண்டிகை, பாவ நிவாரணப்பண்டிகை, கூடாரப் பண்டிகை ஆகியவை பற்றிய சட்ட திட்டங்களும், வரைமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன.

    இந்த நூலின் அடிப்படை சிந்தனை தூய்மை என்பதாகும். இறைவன் மக்களோடு வந்து தங்கும் போது மக்கள் எப்படி தங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எப்படிப்பட்ட பலிகளைச் செலுத்த வேண்டும். சக மனிதரோடு எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இயேசுவின் இரண்டாம் வருகையின் போது நாம் அகத்தூய்மையாய் இருக்கவேண்டும் என்பதன் நிழலாக இந்த நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    பலி பொருட்கள் பழுதற்றவையாக இருக்க வேண்டும் என்பதும், ரத்த பலி பாவங்களுக்காகச் செலுத்தப்பட வேண்டும் என்பதும் நேரடியாக இயேசுவின் மீட்புச் செய்தியோடு நெருங்கிய தொடர்புடையவை. இயேசு பாவமற்ற பலியாக ரத்தம் சிந்தியதன் மறை உண்மையே அது.

    எகிப்திலிருந்து இஸ்ரயேலர்கள் வெளியேறி வந்தது ‘மீட்பு’ என்பதன் குறியீடு. அதன்பின் இறைவனின் சட்டங்களின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பது புனித வாழ்க்கையின் குறியீடு.

    இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்வதும், அதன்பின் அவர் சொன்ன புனித வாழ்க்கையை வாழ்வதும் எனும் இரட்டை ஆன்மிக நிலையை இது விளக்குகிறது.

    வாசிக்க சுவாரஸ்யமற்ற நூல் என்றாலும், புரிந்து கொள்ளவேண்டிய பல ஆன்மிக விஷயங்களின் புதையலே இந்த நூல்.

    சேவியர்.
    விவிலியம் எனும் நூலைபுரிந்து கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் ஆதியாகமத்திலிருந்து தான் துவங்கவேண்டும். ஆதியாகமத்தை நம்புவதில் அடங்கியிருக்கிறது கிறிஸ்தவ ஆன்மிகத்தின் உயர் நிலை.
    எபிரேய ஏட்டுச்சுருள்களில் ஒரு வழக்கம் உண்டு. திறந்தவுடன் கண்ணில் படும் அதன் முதல் வார்த்தையையோ, முதல் சில வார்த்தை களையோ நூலின் பெயராக்கி விடுவார்கள்.

    அப்படித் தான் பைபிளின் முதல் நூலுக்கும் பெயர் வந்தது. எபிரேயத்தில் இந்தநூலின் முதல் வார்த்தை, ‘பெரிஷித்’ என்பது. அதன் பொருள் ‘தொடக்கத்தில் அல்லது ஆதியில்’ என்பதாகும். அதுவே நூலின் பெயராகி விட்டது.

    அது, ‘தொடக்க நூல் அல்லது ஆதியாகமம்’ எனப்பட்டது. இந்த நூலை எழுதியவர் மோசே. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மீட்டுக் கொண்டு வந்த விடுதலை வீரர் மோசே தான் இதன் ஆசிரியர்.

    ‘டென் கமான்ட்மென்ட்’ எனும் திரைப்படம் பார்த்தவர்களுக்கு மோசே கதாபாத்திரம் பற்றி தெரிந்திருக்கும்.

    பைபிளின் முதல் ஐந்து நூல்களையும் எழுதியவர் அவர் தான். இவற்றை ‘பென்டாடூச்’ என்பார்கள். அதற்கு ‘ஐந்து நூல்களின் தொகுப்பு’ என்பது பொருள்.

    யூதர்களும் இந்த ஐந்து நூல்களையும் ‘மோசேயின் சட்டங்கள்’ எனும் அடிப்படையில் பயன்படுத்துகிறார்கள். ‘தோரா’ என்று இந்த தொகுப்பு அழைக்கப்படுகிறது. இது யூதர்களுக்கும் புனித நூல்.

    கி.மு. 1406-க்கும் 1446-க்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுகள் தான் மோசே இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து மீட்டு பாலை நிலத்தில் வழிநடத்தினார் என்கிறது இறையியல் வரலாறு. அந்த காலகட்டத்தில் தான் இந்த ஐந்து நூல்களும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    மனித வரலாற்றின் முதல் 2000 ஆண்டு கால வாழ்க்கையை இந்த நூல் பதிவு செய்கிறது.

    தொடக்க நூலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இது மோசேயின் காலத்துக்கு முன்னால் ஆரம்பிக்கிறது. சொல்லப்போனால் உலகத்தின் தொடக்கத்திலிருந்து இந்த நூல் தொடங்குகிறது.

    உலகம் எப்படித் தொடங்கியது என்பதும், ஒளி, இருள், சூரியன், சந்திரன், நீர், நிலம், பறவைகள், விலங்குகள் என படைப்புகள் எப்படி உருவாகின எனும் அனைத்து செய்திகளும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

    கடைசியில் ஆதி மனிதன் ஆதாம் படைக்கப்படுகிறார், பின்னர் ஏவாள் படைக்கப்படு கிறார்.

    ஆதாமும், ஏவாளும் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்கின்றனர். இதனால் கடவுளின் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படு கின்றனர்.

    பின்னர் அவர்களுடைய சந்ததி வளர்கிறது. ‘மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களை எல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர் (ஆதி 6:2). மனுக்குலம் வளர்ந்தது, பூமியில் பாவமும் பெருகத் தொடங்கியது.

    நோவாவின் காலம் வந்தது. கடவுள் பூமியை வெள்ளப்பெருக்கினால் அழிக்கத் திட்டமிட்டார். நோவா கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒரு பேழையைச் செய்தார். அதில் அவரும் அவரது குடும்பமும், விலங்கின வகைகளும் தப்பின. மற்றவர்கள் எல்லாம் தண்ணீரால் அழிந்து போயினர். புதிதாய் உருவான அந்த சந்ததியும் பாவத்தில் விழுந்தது.

    வானுயர கோபுரம் கட்டி தங்களை கடவுளாகக் காட்டிக் கொள்ள மனிதர்கள் நினைத்தனர். அவர்களுடைய கர்வத்தை கடவுள் அழித்தார். ஒரே மொழி பேசிவந்த அந்த மக்கள் வேறுவேறு மொழி பேசும்படி செய்தார். கூட்டம் பிரிந்தது.

    அதன் பின் கடவுள் ஆபிரகாம் எனும் தனி மனிதனை அழைத்து, அவர் மூலம் தனக்கு ஏற்புடைய ஒரு சந்ததியை உருவாக்க விரும்பினார். அந்த சந்ததி மூலம் உலகைத் தனக்குரியதாக மாற்ற விரும்பினார்.

    அப்படி ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யோசேப்பு என சந்ததிகள் இறைவனுக்குப் பிரியமான முற்பிதாக்களால் தலைமுறை தோறும் வளர்ந்தது. அந்த யோசேப்பின் மரணத்துடன் இந்த நூல் நிறைவடைகிறது.

    இந்த நூல் மோசே பிறப்பதற்கும் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவடைகிறது. இந்த நூலை மோசே இறைவனின் ஏவுதலால் எழுதினார், அல்லது முற்பிதாக்களின் வரலாறுகளைக் குறித்த பதிவுகளை யாரோ மோசேயிடம் கொடுத்துவிட அதை அடிப்படையாகக் கொண்டு இதை எழுதினார்.

    ஆதியாகமம் விவிலியத்தின் மிக முக்கியமான நூல். இறைவனுக்கு மனிதனோடு உள்ள அன்பு, மனுக்குலத்தின் மீதுள்ள அன்பு, தனக்குரிய மக்களாக மனிதர்களை மாற்றவேண்டும் எனும் ஏக்கம், தன் மக்களுக்காக இறங்கி வரும் இரக்கம் என இறைவனின் இயல்பை இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.

    ஒரே கடவுள் தான் உண்டு என்பதை இந்த நூல் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறது. அந்த இறைவனின் பிரமாண்டத்தையும், எளிமையையும் ஒரு சேர படம்பிடிக்கிறது. ‘ஏழு’ எனும் எண் சிறப்பானது என்பதை இந்த நூல் பல நிகழ்வுகளின் மூலம் விளக்குகிறது.

    ஆதியாகமத்தில் மனிதர்களுடைய வாழ்க்கை இறைமகன் இயேசுவின் வாழ்க்கைக்கு நிழலாக, பூடகமான இருப்பது கவனிக்கத்தக்கது. இறைமகன் இயேசுவிற்கு முன் அடையாளமான ‘மெல்கிசெதேக்’ ஆதியாகமத்தில் தான் வருகிறார்.

    இலக்கிய ரீதியாக இனிமையான, செழுமையான நூல் ஆதியாகமம். விவிலியம் எனும் நூலைபுரிந்து கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் ஆதியாகமத்திலிருந்து தான் துவங்கவேண்டும். ஆதியாகமத்தை நம்புவதில் அடங்கியிருக்கிறது கிறிஸ்தவ ஆன்மிகத்தின் உயர் நிலை.
    பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்மாவைக் காப்பார். (சங்கீதம் 121)
    இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் மீட்பிற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெத்லகேமில் மனிதனாக பிறந்தார். இப்பூவுலக மாந்தர்கள் சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழ்வதற்காகவும் நித்திய ஜீவனை, அதாவது பரலோக வாழ்வை அளிப்பதற்காகவுமே அவர் வந்தார்.

    அவருடைய இளமை பருவத்தை நாசரேத் என்னும் ஊரில் வாழ்ந்து, பின்னர் கலிலேயா, தீரு, சீதோன் போன்ற அநேக பட்டணங்களில் சொற்பொழிவு ஆற்றினார். ஜனங்களை நோயிலிருந்து சுகமாக்கி, பிசாசினால் பாதிக்கப்பட்டவரை விடுதலையாக்கி அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.

    எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. இந்த குளத்தை சுற்றி குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் படுத்திருப்பார்கள். அவர்கள் எப்பொழுது தண்ணீர் கலங்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

    ஏனெனில் சில சமயங்களில் தேவ தூதன் ஒருவன் வந்து அந்த குளத்தில் இறங்கி தண்ணீரை கலக்குவான். தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் குணமடைவான்.

    முப்பத்தெட்டு வருஷம் வியாதியஸ்தனாய் இருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு சொஸ்தமாக வேண்டும் என்று விரும்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன், ‘ஆண்டவரே, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுவதற்கு ஒருவருமில்லை. நான் குளத்திற்குள் இறங்குவதற்கு முன் வேறொருவன் இறங்கி சுகமாகி விடுகிறான்’ என்றான்.

    இயேசு அவனை நோக்கி, ‘எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்து கொண்டு போனான் என்று வேதாகமம் கூறுகிறது.

    இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார். (திருவிவிலியம், யோவான்-5:8,9).

    இவனை சுற்றிலும் வாழ்ந்த மனிதர்கள் சுயநலம் மிகுந்தவர்களாய் இருந்தனர். இவனுடைய கஷ்டத்தையும், கண்ணீரையும், வேதனையையும் கண்டும் ஒருவனுக்கும் உதவி செய்ய மனதில்லாதிருந்தது. ஆனால் இயேசு அவன் மேல் மனதுருகுகிறார். அவனை சொஸ்தமாக்க சித்தம் கொள்கிறார்.

    இன்றைக்கும் சுயநலமான மனிதர்கள் தான் பெரும்பாலும் நம்மை சுற்றி வாழ்கின்றனர். உதவி செய்யும் மனப்பான்மை, இரக்கம் காட்டும் மனப்பான்மை மனுக்குலத்தில் குறைந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்களும் ஜீவிக்கின்றீர்களா? ஐயோ எனக்கு உதவி செய்ய, என்னை கை தூக்கி விட, ஒருவருமே இல்லையென்று கலங்குகிறீர்களா?

    கவலைப்படாதிருங்கள், உங்களுக்கு உதவி செய்ய, உங்கள் துயரம் நீக்க, உங்களைக் கை தூக்கி விட ஒருவர் இருக்கிறார். அவர் நாமம் இயேசு. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.

    இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபிரேயர் 13:8).

    “பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார் (எபிரேயர் 13:5).

    அன்று கேட்பாரற்று, விசாரிப்பாரற்று கிடந்த ஒரு மனிதனைத் தேடிப்போய் அவனை விசாரித்து அவனுக்கு நன்மை செய்தவர் இன்றைக்கும் உங்களுக்கு அப்படியே செய்வார்.

    மனிதர்கள் கை விட்டு விட்ட கலக்கத்தில் துயரத்தில் ஜீவிக்கின்றீர்களோ இயேசு நிச்சயமாக கைவிட மாட்டார். அவர் உங்களுக்கு நன்மை செய்வார்.

    எப்படி அந்த குளக்கரை வியாதியஸ்தன் தன் சூழ்நிலைகளை இயேசுவிடம் சொன்னானோ, அதுபோல நீங்களும் உங்கள் மனதின் கவலைகளை பாரங்களை இயேசுகிறிஸ்துவிடம் தெரிவியுங்கள். நிச்சயமாய் அவர் உங்களுக்கு உதவி செய்வார்.

    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

    உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

    பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்மாவைக் காப்பார். (சங்கீதம் 121)

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

    சகோ. சி. சதீஷ், வால்பாறை.
    ‘விடுதலைப்பயணம்’ நூல் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாகவும், இறையியல் சிந்தனைகளின் அடித்தளமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    விவிலியத்தில் வருகின்ற இரண்டாவது நூல் ‘விடுதலைப் பயணம்’ அல்லது ‘யாத்திராகமம்’ என அழைக்கப்படுகிறது.

    ‘எக்ஸோடோஸ்’ எனும் கிரேக்க வார்த்தையில் இருந்து இது உருவானது. இதற்கு ‘வெளியேறுதல்’ என்று பொருள்.

    இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாகி, எகிப்தை விட்டு ‘வெளியேறுதலே’ இந்த நூலின் அடிப்படைச்செய்தி என்பதால் இதற்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.

    விவிலியத்தின் முதல் நூல் மனுக்குல வரலாற்றின் சுமார் 2000 வருடங்களைப் பதிவு செய்கிறது. அதன் பின் முன்னூறு ஆண்டுகள் இடைவெளி. அந்த காலகட்டத்தில் நடந்தது என்ன என்பதை விவிலியம் பதிவு செய்யவில்லை. அதன் பின்னர் மோசேயின் கதை வருகிறது, விடுதலைப்பயணத்தில்.

    விடுதலைப் பயணத்தை எழுதியவரும் ‘மோசே’ தான். முதல் நூலில், அவர் பிறப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளோடு முன்பு முடிவு பெற்ற விஷயங்களை எழுதியிருந்தார். இந்த நூலிலும் அதற்குப் பின் அவர் எழுதிய மூன்று விவிலிய நூல்களிலும் நேரடி அனுபவ விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

    கடவுளால் ‘இஸ்ரயேல்’ என பெயரிடப்பட்ட யாக்கோபு எகிப்தில் குடியேறுகிறார். சுமார் 70-75 பேராக முதலில் எகிப்தில் நுழைந்த அவர்கள் 430 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் வளர்கிறார்கள்.

    இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் 6 லட்சம் பேர். பெண்கள், குழந்தைகள் எல்லோரையும் சேர்த்தால் சுமார் 20 லட்சம் வரை வரலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதன் காலம் கி.மு. 1800-கி.மு. 1400 எனலாம்.

    யோசேப்பு இறந்தபின், அரசுகள் மாறிய பின், இஸ்ரயேல் மக்களின் சுதந்திர வாழ்க்கை களவாடப்பட்டது. அவர்கள் அடிமைகளாக மாற்றப்பட்டார்கள். எனவே தான் அவர்களுக்கு அங்கிருந்து விடுதலை தேவைப்பட்டது.

    ‘கடவுளை வழிபடவேண்டும்’ எனும் கோரிக்கையோடு அவர்களை மீட்க கடவுளால் அனுப்பப்பட்டவர் தான் மோசே. அவரோடு துணைக்கு வந்தவர் ஆரோன்.

    மோசே முதலில் எகிப்திய இளவரசி ஹெட்சிபாவால் தண்ணீரிலிருந்து கண்டெடுக்கப்பட்டவர். சுமார் நாற்பது ஆண்டுகள் அரசவையில் ஒரு அரசனைப் போல வளர்கிறார்.

    ‘தான் எகிப்தியர் அல்ல, எபிரேயர்’ எனும் உண்மை புரிந்ததும் தன் இன மக்களின் விடுதலைக்காக போராட நினைக்கிறார். ஆனால் அவரால் அது முடியவில்லை.

    எனவே அரண்மனையை விட்டு வெளியேறுகிறார். அரண்மனையை விட்டு வெளியேறி நாற்பது ஆண்டுகள் மீதியான் எனும் இடத்தில் வாழ்கிறார்.

    அதன் பின் கடவுளால் எகிப்துக்கு அனுப்பப்படுகிறார் மோசே, அப்போது அவருக்கு வயது 80.

    மோசே சென்று தனது இன மக்களை விடுவிக்குமாறு அரசரிடம் விண்ணப்பிக்கிறார். மன்னன் நகைக்கிறான், மறுக்கிறான்.

    அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக பத்து வாதைகள் எகிப்திய நாட்டை சூறையாடுகின்றன. கடைசி வாதையில் எகிப்தியர்களின் தலைச்சன் பிள்ளைகள் இறந்துபோகின்றனர். வேறு வழியில்லாமல் மன்னன் அடிமைகளை வெளியே அனுப்பி விடுகிறான்.

    மாபெரும் கூட்டமாக இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து கால்நடைகள், பொருட்கள், செல்வங்கள் எல்லாவற்றோடும் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

    சுமார் நாற்பது ஆண்டுகள் அவர்கள் பாலை நிலத்தில் நடக்கின்றனர். அவர்களை மோசே வழிநடத்துகிறார். பாலை நிலத்தில் கடவுள் பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்து மக்களைக் காக்கின்றார்.

    நாற்பது ஆண்டுகள் அவர்களுக்கு ‘மன்னா’ எனும் உணவை வழங்கினார், இறைச்சிக்கு காடைகளை வழங்கினார். ஏன் நாற்பது ஆண்டுகளும் அவர்களுடைய காலணிகள் கூட அறுந்து போகாமல் பாதுகாத்தார்.

    மனித வாழ்க்கையை நெறிப்படுத்த இறைவனிடமிருந்து நேரடியாக பத்து கட்டளைகளைப் பெற்று மக்களுக்கு வழங்குகிறார் மோசே. அதைத் தவிரவும் மோசே ஏகப்பட்ட சட்டதிட்டங்களை இறையருளால் வகுத்து மக்களுக்கு வழங்குகிறார்.

    இந்த நூலில் கடவுள் தனது பெயரையும், தனது இயல்புகளையும், அவரது சட்டங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். தன்னை மக்கள் எப்படி வணங்கவேண்டும் எனும் வழிமுறைகளையும் இந்த நூலில் தான் இறைவன் வெளிப்படுத்துகிறார். எனவே இந்த நூல் இறையியல் ஆய்வுக்கு அடிப்படையான நூலாக அமைந்து விடுகிறது.

    விடுதலைப் பயண நூலின் நிகழ்ச்சிகள் இயேசுவின் வாழ்க்கையின் நிழலாக இருக்கின்றன. ‘பாஸ்கா’ எனும் விழாவில் ஒரு வயது நிரம்பிய ஆட்டுக்கடா பலி கொடுக்கப்பட்டது. அது முப்பது வயதான இயேசுவின் மரண பலியை குறிக்கிறது. ஆடானது பிற்பகல் மூன்று மணியளவில் வெட்டப்பட வேண்டும். அது இயேசுவின் மரண நேரத்தைக் குறிக்கிறது.

    எகிப்தை விட்டு வெளியேறிய மூன்றாம் நாள் செங்கடலைக் கடந்து முழு விடுதலை பெறுகின்றனர். அது இறைமகன் இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கிறது.

    ஐம்பதாவது நாளில் மலையில் சட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். அது இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் ஐம்பதாவது நாளில் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் பெந்தேகோஸ்தே நாளை குறிக்கிறது.

    ‘விடுதலைப்பயணம்’ நூல் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாகவும், இறையியல் சிந்தனைகளின் அடித்தளமாகவும் அமைகிறது. 
    தன் சகோதரனாகிய மோசேயின் வாயாக இருந்து இஸ்ரயேலரை வழிநடத்திய இந்த ஆரோனின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு.
    ஒரு தாய் பிள்ளைகளாய்ப் பிறந்து, ஒரே வீட்டில் வளர்ந்து, பின்னர் பகைவர்களாய் மாறி நிற்கும் சகோதரர்களை நாம் பார்த்திருக்கிறோம். இது ஏதோ தனிக்குடித்தனங்களாய் மாறிப்போன இன்றைய காலக்கட்டத்திலேயோ, கூட்டுக்குடும்பங்களாய் வாழ்ந்த நேற்றைய காலக்கட்டத்திலேயோ நடந்தது மட்டுமல்ல.

    திருமறையின் முதல் குடும்பமாகிய ஆதாம், ஏவாள் தம்பதியின் மக்களான காயீன், ஆபேல் தொடங்கி, முற்பிதாக்களில் ஒருவராகிய யாக்கோபு மற்றும் அவர் சகோதரர் ஏசா தொடர்ந்து தாவீதின் பிள்ளைகள் என காலம் காலமாக சகோதரர்களுக்கு இடையே பகைமையும் சண்டைகளும் இருந்தே வந்திருக்கிறது.

    இப்படிப்பட்டவர்களுக்கு நடுவிலே சகோதரர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியவர், ஆரோன்.

    தன் சகோதரனாகிய மோசேயின் வாயாக இருந்து இஸ்ரயேலரை வழிநடத்திய இந்த ஆரோனின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் சில...

    மகிழ்ந்த சகோதரன்

    இஸ்ரயேலர்கள் எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேண்டுமென இறைவனை நோக்கி முறையிடுகிறார்கள். கர்த்தர் முட்செடியின் நடுவிலிருந்து மோசேக்கு தரிசனமாகி இஸ்ரயேலரை விடுவித்து நடத்தி செல்லும் பெரும்பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார். அவரோ “நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன்” என்று சொல்லி மறுக்கிறார்.

    “நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்கு போதிப்பேன்” என்று கர்த்தர் சொன்னபோதும் மோசே சமாதானம் அடையவில்லை. இதனால் கோபமடைந்த கர்த்தர், “உன் சகோதரனாகிய ஆரோன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும் போது அவன் இருதயம் மகிழும்” என்று கூறுகிறார். (யாத்திராகமம் 4:12-14).

    அப்படியே இருவரும் சந்திக்கிறார்கள். ஆரோன், மோசேயை முத்தமிடுகிறார் (யாத்திராகமம் 4:27). இங்கே, இந்த சகோதரர்கள் முத்தஞ்செய்து கொண்டது, ஏதோ வெளிவேடமானதல்ல. மாறாக, ஆத்மார்த்த அன்பினால் ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. “அவன் இருதயம் மகிழும்” என்று கர்த்தரே சொல்லுமளவுக்கு அப்பழுக்கற்றது.

    தாங்கிய சகோதரன்

    மோசேயின் தலைமையில் இஸ்ரயேலர்கள் கடவுள் வாக்களித்த கானான் நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். வழியிலே அமலேக்கியர் இஸ்ரயேலர்களுடன் போரிடுகின்றனர். இஸ்ரயேலர்கள் சந்திக்கும் முதல் யுத்தம் இது. யோசுவாவிடம் யுத்தத்தை முன்னின்று நடத்த சொல்லிவிட்டு, ஆரோன் மற்றும் ஊர் என்பவருடன் அருகிலிருக்கும் மலையுச்சிக்கு சென்று கையில் உயர்த்திப் பிடித்த கோலுடன் நிற்கிறார் மோசே.

    மோசேயின் கைகள் உயர்ந்திருக்கும் போது இஸ்ரயேலர்கள் வெற்றியடைந்தார்கள். மோசேயின் கைகள் தளரும் போது, அமலேக்கியர் வெற்றியடைந்தார்கள். உடனே ஆரோனும், ஊரும் ஒரு கல்லைக் கொண்டுவந்து, அதிலே மோசேயை உட்காரச்செய்து, இருவரும் ஆளுக்கொரு கையை தாங்கிக்கொண்டிருந்தார்கள். இதனால் மாலை சூரியன் மறையும் மட்டும் மோசேயின் கைகள் ஒரே நிலையாயிருந்தது (யாத்திராகமம் 17:8-13).

    ஆம், தளர்ந்த தன் சகோதரனின் கையை தாங்கிய பொறுப்பான சகோதரன் இந்த ஆரோன்.

    அழுத சகோதரன்

    மோசேயின் மனைவி பிற இனத்தவராகிய ஒரு எத்தியோப்பிய பெண். விடுதலைப் பயணத்தின் ஒரு கட்டத்தில், ஆரோனும், மோசேயின் சகோதரி மிரியாமும் மோசேயின் மனைவியை முன்னிட்டு மோசேக்கு எதிராக பேசினார்கள். கர்த்தர் அதைக்கேட்டார். உடனே, கர்த்தர் மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் ஆசாரிப்பு கூடாரத்திற்கு வரச் சொன்னார். மேகத்தூணில் நின்று, தனக்கும் மோசேக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தையும், தான் மோசேயை எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்பதையும் ஆரோனுக்கும், மிரியாமுக்கும் சொல்லி, அவர்கள் மேல் கோபம் கொண்டார்.

    மேகம் விலகியதும், ஆரோன் தன் சகோதரியாகிய மிரியாமின் முகத்தை பார்க்கிறார், அவளை தொழுநோய் பிடித்திருந்தது. உடனே ஆரோன் மோசேயை நோக்கி, “என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்த பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும். தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப் போல் அவள் ஆகாதிருப்பாளாக” (எண்ணாகமம் 12:11,12) என்று அழுதார்.

    மோசேயும் கர்த்தரிடத்தில் கெஞ்சினார். கர்த்தர் ஏழு நாட்களுக்குப் பிறகு அவள் நலமடைவாள் என்று சொன்னார். இங்கே ஆரோன் தன் சகோதரிக்காக தன் சகோதரனிடத்தில், அழுது வேண்டவும் வெட்கப்படவில்லை.

    இந்த காரணங்களால் தான், “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது” (சங்கீதம் 133: 1) என்று சொன்ன தாவீது, அடுத்த வசனத்திலேயே, “அது ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கு... ஒப்பாயிருக்கிறது” என்று பாடுகிறார்.

    நாமும் பேதங்கள் கடந்து, பிறருடன் சகோதரர்களாய்ப் பழகி, அவர்களோடு மகிழ்ந்து, அவர்கள் துயரங்களில் பங்கெடுத்து கர்த்தர் கட்டளையிடும் ஆசீர்வாதத்தையும், ஜீவனையும் பெற்று கொள்வோம்.

    சகோ. ஹெசட் காட்சன், சென்னை.
    பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம்.
    பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம். மீனவர்கள், மேய்ப்பர்கள் முதல் கவிஞர்கள், அரசர்கள் வரை இந்த நூல்களின் ஆசிரியர்களாக உள்ளனர்.

    இந்த நூல்களெல்லாம் தூய ஆவியானவரின் ஏவுதலால், வழிகாட்டுதலால் எழுதப்பட்டது என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை. விவிலியம் சொல்வதும் அது தான்.

    ‘பிப்லோஸ்’ என்னும் கிரேக்கச் சொல் மருவி ‘பிப்ளியோன்’ என்றானது. இதற்கு புத்தகம் என்பது பொருள். இது தான் ‘பைபிள்’ என்றானது.

    விவிலியம் தன்னை இரண்டாகப் பிரித்துக்கொள்கிறது. ஒன்று ‘பழைய ஏற்பாடு’. இன்னொன்று ‘புதிய ஏற்பாடு’.

    ‘ஏற்பாடு’ என்பது உடன்படிக்கை.

    ‘பழைய ஏற்பாடு’ ஆதி மனிதன் ஆதாமின் பிறப்பு முதல் இயேசு வின் பிறப்புக்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாற்றை, குறிப்பாக இறைவாக்கினர்களின் வரலாற்றை, இஸ்ரயேல் குல மக்களின் வாழ்க்கை முறையை விளக்குகிறது.

    ‘புதிய ஏற்பாடு’ இயேசுவின் பிறப்பு முதல் அவருடைய அப்போஸ்தலர்களின் ஆதி கால கிறிஸ்தவ மறை பரப்புதல் பணி வரை நீடிக்கிறது.

    பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 நூல்களும், இணை திருமறையில் 7 நூல்களும் உள்ளன. இந்த எழுபத்து மூன்று நூல்களின் தொகுப்பே திருவிவிலியம்.

    கி.மு. 750-ல் எழுதப்பட்ட ஆமோஸ் இறைவாக்கினரின் நூலே விவிலியத்திலேயே முதலில் எழுதப்பட்ட நூல். மற்ற நூல்கள் எல்லாம் அதன் பின்னரே எழுதப்பட்டன.

    காலம் காலமாக வாய்வழிக் கதைகளாகவும், பரம்பரையினரின் சிறு சிறு குறிப்புகளாகவும், படங்களாகவும் இருந்த பழைய ஏற்பாட்டுக் கதைகள், பாடல்கள் எல்லாம் பிற்காலத்தில் தான் எழுத்து வடிவம் பெற்றன.

    கி.மு. 1300-ம் ஆண்டு முதல், கி.பி. 100-ம் ஆண்டு வரை உருவான படைப்புகள் திரு விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கணக்கு.

    இப்போது காணப்படும் விவிலியத்தின் வடிவம் ஆரம்ப காலத்தில் இல்லை. கி.பி. 1440-ல் இராபி நாத்தான் என்பவர் பழைய ஏற்பாட்டு நூலை ஆராய்ந்து அவற்றை அதிகாரம், வசனங்களாகப் பிரித்தார். இது வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கோடிடவும் மிகவும் வசதியாக இருந்தது.

    புதிய ஏற்பாட்டு வசனங்கள் கி.பி. 1550-ல் பிரிக்கப்பட்டன. ஏற்கனவே புதிய ஏற்பாட்டு அதிகாரங்களை பேராயர் ஸ்டீவ் லாங்டன் 1216-ல் பிரித்திருந்தார்.

    களிமண், ஓடுகள், பாப்பிரஸ் தாள்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவற்றில் மூல செய்திகள் எழுதப்பட்டிருந்தன.

    சீனாய்ச் சுவடி, வத்திக்கான் சுவடி இரண்டும் கி.பி. 350-ல் கண்டெடுக்கப்பட்டன.

    யூதேயா பாலை நிலப்பகுதியில் கி.பி 1947-ம் ஆண்டு பல ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

    பழைய ஏற்பாட்டின் 180 ஏடுகளும், எசேயா இறைவாக்கினர் நூலின் முழு வடிவமும் இங்கே களிமண் ஜாடிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இவை மும்ரான் குகைகளில் வாழ்ந்த எசேனியர் களால் பாதுகாத்து வைக்கப்பட்டவையாகும்.

    பழைய ஏற்பாடு பெரும்பாலும் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. பின்னர் இந்த நூல்கள் கிரேக்கத்திலும் மொழி பெயர்க்கப்பட்டன. புதிய ஏற்பாடு நூல் முழுவதும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.

    புனித ஜெரோம் முழு திரு விவிலியத்தையும் லத்தீனில் மொழிபெயர்த்தார். இது ஒரு மிகப்பெரிய பணி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் திருச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப்பட்டு வந்தது. லத்தீன் மொழியிலிருந்தே திருவிவிலியம் பல மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

    1450-ம் ஆண்டு விவிலியம் முதன் முதலில் அச்சிடப்பட்டது. அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த கூடன்பர்க் முதலில் அச்சடித்த நூல் விவிலியம் தான்.

    சீகன்பால்கு 1715-ம் ஆண்டு திருவிவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அது தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. ஆசியாவிலேயே முதலில் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது தமிழ் மொழியில் தான்.

    அதன் பின்னர் 1727-ல் முழு விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது. தற்போது உலக மொழிகள் 1848-ல் திருவிவிலியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன‌. ஆண்டுக்கு சுமார் 10 கோடி விவிலியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    விவிலியத்தின் மையமான இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை மத்தேயு, மார்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேரும் எழுதியிருக்கிறார்கள். இவர்களில் மத்தேயுவும், யோவானும் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் செயல்களை மையமாய் வைத்து மார்குவும், போதனைகளை மையமாய் வைத்து மத்தேயு லூக்கா ஆகியோரும், இயேசுவின் இறை தன்மையை மையமாய் வைத்து யோவானும் நூல்களை ஆக்கியுள்ளனர்.

    ‘ஆதியிலே தேவன்’ என ஆரம்பித்து ‘ஆமென்’ என முடிகிறது பைபிள்.

    சேவியர்
    நம் ஆண்டவர் இயேசுவால் உங்களை எப்பெரிய நோயினின்றும் நலம்பெறச்செய்ய முடியுமென்று விசுவாசியுங்கள். நிச்சயமாகவே நலம் பெறுவீர்கள்.
    இறைமைந்தன் இயேசு கிறிஸ்து தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கு விடுதலை அளித்து வந்தார். இத்தகைய வல்லசெயல்கள் மூலமாகவும் அநேக மக்கள் கடவுள் மீதும், தன் வார்த்தைகளிலும் நம்பிக்கைக் கொள்ளச் செய்தார்.

    குணமாக்கப்படுதலை குறிக்கின்ற ஆண்டவர் இயேசுவின் அற்புதங்களில் ஒன்று ‘ரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுகின்ற நிகழ்வு’ ஆகும்.

    இயேசுவின் வல்லமை

    மரணத்திலிருந்து மீட்கும் இயேசுவின் இரு வல்ல செயல்கள் தொடர்ச்சியாக தூய மாற்கு நற்செய்தி நூலில் (5:21-43) காணலாம். இந்த இரண்டு வல்லசெயல்களும் தொட்டு குணமாக்கப்படுதலைக் குறிக்கின்றது.

    இங்கு ஒரு பெண்ணின் நம்பிக்கை ‘ஆண்டவரைத் தொட்டால் நலம் கிடைக்கும்’. மற்றொரு ஆணின் நம்பிக்கை ‘ஆண்டவர் தொட்டால் நலம் கிடைக்கும்’. இந்த இரு நிகழ்வுகளும் நம் குறைவிசுவாசத்தை நிறைவாக்குகிறது.

    ஆண்டவர் இயேசு தம் சீடர்களுடன் சென்று கொண்டிருக்கின்ற பொழுது அவர் போதனை களைக் கேட்பதற்காக, பெருந்திரளான மக்கள் இயேசுவை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தபடி சென்றனர். அத்திரள் கூட்டத்தில் பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண்ணும் இருந்தார்.

    தனக்கிருந்த செல்வங்களையெல்லாம் செலவழித்துப் பார்த்தும், எந்த மருத்துவராலும் நலம் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். இயேசு ஆண்டவரைக் குறித்துக் கேள்விப்பட்டு, “அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்”; என்று எண்ணி, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையைத் தொட்டார். தொட்டதும், அவருடைய ரத்தப்போக்கும் நின்றது. தாம் நலமானதை அப்பெண் உணர்ந்தார்.

    உடனே இயேசு வல்லமை வெளியேறியதை உணர்ந்து, மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.

    அதற்கு அவருடைய சீடர்கள், “இம்மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும் என்னைத் தொட்டவர் யார்? என்கிறீரே” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்ட வரைச் சுற்றிலும் தேடினார்.

    அப்போது அப்பெண் அஞ்சி நடுங்கியபடி, ஆண்டவர் இயேசுவின் முன் வந்து விழுந்து, நிகழ்ந்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார்.

    அவர் அப்பெண்ணிடம் “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.

    பழங்கால முறை

    இடைவிடாத ரத்தப்போக்கு நோயை இது குறிக்கிறது. இது கடவுளின் சாபம் என்றும், இதைக் குணப்படுத்துதல் என்பது மனித தன்மைக்கு அப்பாற்பட்டது என்றும் யூதர்கள் கருதினர். லேவியர் நூலில் (15:19-33) ரத்தப்போக்குக் குறித்த சட்டங்களைக் காணலாம். ரத்தப்போக்கு ஏற்படுகிற பெண் தீட்டானவள். அவளைத் தொடுகிறவள் தீட்டானவன். அவள் படுக்கைத் தீட்டு. அவள் படுக்கையைத் தொடுகிறவன் தீட்டானவன். அவள் உட்காருமிடம் தீட்டு. அவள் வாழும் வீடு தீட்டு. இது பாவ நிவிர்த்தி செய்யப்படவேண்டியப் பாவமாகும்.

    ‘ஆடையின் ஓரத்தைத் தொடுதல்’ என்பது பழங்கால குணப்படுத்தல் முறைகளில் ஒன்றாகும். பொதுவாக, வல்லமைப் பெறுவோருக்கே அதன் உணர்வு தெரியும். ஆனால் இங்கு வல்லமை தன்னிடமிருந்து சென்றதை ஆண்டவர் உணர்கிறார். இப்பெண்மணிக்கு நலம் அளித்ததோடு, அவர் இப்பெண்ணின் மாபெரும் நம்பிக்கையைக் கண்டு வியப்படைகின்றார்.

    ‘குணமாக்கிற்று’ என்று ஆண்டவர் கூறிய வார்த்தையின் கிரேக்க மூல வார்த்தை “செஸோகன்” என்பதாகும். இது ‘நலம் பெறுதல், மீட்பு பெறுதல்’ என்ற இரு பொருள்களைத் தருகிறது. அப்படியானால், ஆண்டவர் இப்பெண்ணுக்கு உடலளவிலும், மனதளவிலும் விடுதலை அளித்ததாகக் கூறுகிறார்.

    உண்மையான இறைநம்பிக்கை இருந்தால், எப்பெரிய நோயுற்ற மனிதனாலும் நலம் பெற முடியும் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. இப்பெண்ணுக்கு ஆண்டவர் இயேசுவைக் குறித்த அனுபவம் சார்ந்த அறிவு குறைவு. ஆனால் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையோ மிகவும் பெரிது.

    உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கும்

    பன்னிரு வருடங்களாக நோயினால் தன் செல்வங்கள் அனைத்தையும் தொலைத்தவர். பிறரால் தீட்டானவராக கருதப்பட்டு, வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட நிலையில் மிகவும் வருத்தத்தோடே வாழ்ந்து வந்தவர். ஆண்டவர் இயேசுவை தன் இறுதி நம்பிக்கையாகக் கருதி, அவரை நாடி வந்தார். “மகளே தைரியமாயிரு” என்று தைரியப்படுத்துகிறார். முழுமையான விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்.

    நீங்களும் நெடுநாள் நோயினால் மிகுந்த வருத்தத்தோடே, பிறரால் ஒதுக்கப்பட்டவர்களாக, நேசத்துக்குரியவர்களின் வெறுப்புக்கு உள்ளானவர்களாக வாழ்ந்து வரலாம். உங்கள் நோயினிமித்தம் உங்கள் செல்வங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கலாம், கலங்காதீர்கள்! அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார் (விப 23:25) என்று நமக்கு வாக்களித்திருக்கிறார்.

    ஆதலால் நம் ஆண்டவர் இயேசுவால் உங்களை எப்பெரிய நோயினின்றும் நலம்பெறச்செய்ய முடியுமென்று விசுவாசியுங்கள். நிச்சயமாகவே நலம் பெறுவீர்கள்.

    ஆண்டவர் இயேசுவையே உங்கள் இறுதி நம்பிக்கையாக உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் எகிப்தியருக்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன் மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் (விப 15:26).

    அருட்பணி. ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம்,

    உண்ணாமலைக்கடை.
    நெல்லையில் புத்தாண்டு நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    2019-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நள்ளிரவு 11 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆலயங்கள் முன்பு பட்டாசு வெடித்து புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர்.

    பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயத்தில் முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் புத்தாண்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் குருமட அதிபர் சேவியர் டெரன்ஸ், பங்கு தந்தை ராஜேஷ் ஆகியோர் தலைமையிலும், இலந்தைகுளம் அந்தோணியார் ஆலயத்தில் அந்தோணிகுரூஸ் அடிகளார் தலைமையிலும் புத்தாண்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    புத்தாண்டை கொண்டா டும் வகையில் நெல்லை மாநகரில் சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் இளைஞர்கள் தயார் நிலையில் இருந்தனர். இரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்து, கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் குடும்பத்தினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    புத்தாண்டு கொண்டாட் டம் முடிந்த பிறகு இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் களில் வலம் வந்து வாழ்த்துக்களை கூறியவாறு சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ஒரு சில இளைஞர்கள் ரோட்டில் வாகனங்களில் அணிவகுத்து சென்றவாறு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    ×