search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    மண்ணுலகு சார்ந்தவற்றை மட்டுமே நாடாமல் விண்ணுலகு சார்ந்தவற்றையும் நாட இறை அருளை வேண்டி ‘‘வானகத்திலுள்ள எங்கள் தந்தாய் உமது அரசு வருக’’ என மன்றாடுவோம்.
    இயேசு இறையாட்சி பணியைத் தொடங்கியபோது விண்ணரசின் மாட்சியைப்பற்றி பறைசாற்றத் தொடங்கினார். அக்கால யூத சமுதாயத்தில் செல்வாக்குடன் செயல்பட்டுக் கொண்டிருந்த வெளி வேடக்காரர்களான மறைநூல் அறிஞரும், பரிசேயரும் தங்கள் சுயநலம் தழுவிய போதனைகளால் அப்பாவி மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர். அந்த எளிய மக்களை இறையாட்சிக்குள் கொண்டுவர அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் இயேசு விண்ணரசு பற்றிய பல உவமைகளை எடுத்துக் கூறினார். ஒரு உவமையில் இறைவன் விதை விதைப்பவராக உருவகப்படுத்தப்படுகிறார். பலதரப்பட்ட மக்கள் மனதில் இறை வார்த்தை விதைக்கப்படுகிறது.

    பாதையோரத்தில், பாறை நிலத்தில், முட்செடிகள் நடுவில் விழுந்த விதைகள் பலன் தராமல் போவதுபோல் தடுமாறும் மனம் கொண்ட மக்கள் இறை  வார்த்தைகளை கேட்டும் பயனற்று போகின்றனர். விண்ணரசை சார்ந்தவர் நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு சமமானவர்கள். இவர்கள் இறை வார்த்தைக்கு செவிமடுத்து அதை செயலாற்றுபவர்; அதனாலேயே இறை அரசுக்குள் வந்துவிடுபவர். இப்படித்தான் விண்ணரசு விரிவடைகிறது. கடவுளைத்தவிர உலகில் மற்றவை மனதை ஆதிக்கம் செலுத்துமேயானால் விண்ணரசுக்குள் நுழைய இயலாது. இன்னொரு உவமையில் கோதுமை பயிரிடப்பட்டது. இரவில் பகைவன் வந்து களைகளை விதைத்துவிட்டான்.

    கூலியாட்கள் வந்து நிலக்கிழாரிடம் தெரிவித்தபோது அவர் அறுவடை காலம் வரை களைகளை வளர விட்டு அறுவடை காலத்தில் அவற்றைக் கட்டாக கட்டி நெருப்பில் போடலாம் என்றார். இறையாட்சியில் நல்லவர்களோடு தீயவரும் இருப்பர். நன்மையும், தீமையும் இணைந்தே இருக்கும். பொறுமையுடன் கடவுள் தீமைகளை சகித்துக் கொள்கிறார். ஆனால்,  இறுதி காலத்தில் தீமை அழியும் நன்மை வெல்லும் என்பதை இயேசு எடுத்துக் கூறுகிறார். விண்ணரசுக்கு ஒப்பிட்டுக்கூறிய மற்றுமொரு உவமையில் கடுகு விதை மிகச் சிறியதாயினும் முளைத்தபின் மற்ற செடிகளைவிட பெரிதாகும் என்றார். இறையாட்சி படிப்படியாக விரிந்து பரந்து அனைத்துலக மக்களையும் அரவணைத்துக் கொள்ளும் என்பதையே இது குறிக்கின்றது.

    நிலத்தில் மறைந்திருந்த புதையலை கண்டவரும் விலை உயர்ந்த முத்தைக் கண்ட வணிகரும் தங்களுக்கு உள்ளதையெல்லாம் விற்று நிலத்தையும் முத்தையும் வாங்கிக்கொண்டதாக கூறப்படும் உவமையில் புதையலும், முத்தும் விண்ணரசுக்கு ஒப்பாகும் என்கிறார். நாம் பெறும் நல்ல வாய்ப்புகளை, இறை அனுபவங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நம்மிலும் பிறரிலும் இறையாட்சி வளர நாம் காரணமாக இருப்போம். மனம் மாறுங்கள் விண்ணரசு நெருங்கி விட்டது என்னும் இயேசுவின் குரலுக்கு செவிமடுப்போம். மண்ணுலகு சார்ந்தவற்றை மட்டுமே நாடாமல் விண்ணுலகு சார்ந்தவற்றையும் நாட இறை அருளை வேண்டி ‘‘வானகத்திலுள்ள எங்கள் தந்தாய் உமது அரசு வருக’’ என மன்றாடுவோம்.

    - கூட்டப்புளி சல்வதோர் விக்டர்
    நமது செயல்கள் பயனற்ற செயல்களாக இல்லாமல் இருக்க வேண்டும்எனில், நமது வாழ்க்கை இறைவனைப் பிரதிபலிக்கும் உயிருள்ள வாழ்க்கையாய் இருக்க வேண்டும்.
    ஆதி மனிதர்கள் ஆதாமும், ஏவாளும் இறைவனின் வாக்கை மீறிய பாவத்துக்காக இறைவனின் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு காயீன், ஆபேல் என இரண்டு புதல்வர்கள் பிறக்கின்றனர்.

    காலங்கள் கடந்தன. ஒரு நாள் இருவரும் காணிக்கை கொண்டு வந்தனர். அதை விவிலியம் இவ்வாறு சொல்கிறது:

    “காயீன் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான்.” (ஆதியாகமம் 4:3-5)

    இருவருமே காணிக்கை கொண்டு வந்தார்கள், ஒன்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒன்று நிராகரிக்கப்படுகிறது.

    ஒரு செயல் எப்போது பயனற்ற செயலாக மாறுகிறது?, சிந்தனையும், செயலும் நேர்கோட்டில் இல்லாத போது செயல்கள், பயனற்ற செயல்களாகின்றன என சுருக்கமாய் சொல்லலாம்.

    ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என இயேசு போலித்தனத்தின் மீது படுத்துறங்கிய நபர்களைப் பார்த்துக் கூறினார். அதாவது வெளிப்பார்வையில் அழகு, உள்ளிலோ உயிரற்ற தன்மை.

    காயீன், ஆபேல் காணிக்கை அளிக்கின்ற விஷயங்களிலும் இந்த சிந்தனையைப் பொருத்திப் பார்க்கலாம்.

    1. காயீன் மூத்தவன், ஆபேல் இளையவன். எனினும் இருவரும் ஒரே நேரத்தில் காணிக்கை எடுத்துக் கொண்டு வருகின்றனர், என்கிறது பைபிள். வழக்கப்படி காயீன் தான் முதலில் பலி செலுத்தத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இருவருமே காணிக்கை செலுத்த ஒரே நேரத்தில் வருகின்றனர்.

    ஒருவேளை காணிக்கை செலுத்த வேண்டும் எனும் ஆசை ஆபேலுக்கு தோன்றியிருக்கலாம். எனவே காயீனும் வேறுவழியின்றி காணிக்கை செலுத்த வந்திருக்கலாம்.

    இன்னொருவர் செய்கிறார் என்பதற்காக அதை பிரதியெடுக்க முயல்கின்ற செயல்களெல்லாம் பயனற்ற செயல்களாகவே இருக்கும். அது மனிதர்களைப் பிரியப்படுத்தும் வீணான முயற்சியே.

    2. காயீனின் காணிக்கை கடமைக்கானது. நிலத்தின் பயனிலிருந்து அவன் காணிக்கை கொண்டு வந்தான். செழிப்பானவற்றைக் கொண்டு வந்தான் என்றோ, பெரியவற்றைக் கொண்டு வந்தான் என்றோ பைபிள் குறிப்பிடவில்லை. “சிலவற்றை” என்கிறது.

    ஆபேலோ கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வருகிறான். தன்னிடம் இருப்பதில் சிறந்ததைத் தரவேண்டும் எனும் இயல்பான எண்ணம் ஆபேலிடம் இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

    ஏதோ ஒன்றைக் கடமைக்காகக் கொடுப்பது பயனற்ற செயல், இருப்பதில் சிறந்ததைக் கொடுப்பதே இறைவன் எதிர்பார்க்கிற செயல்.

    3. காயீன் முதற்பலனைக் கொடுக்கவில்லை. ஆபேலோ தலையீற்றைக் கொடுக்கிறான். ‘தலையீறு’ என்பது விவிலியம் முழுவதும் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய வாழ்வோடு ஒப்பிடுகையில் நமது வாழ்க்கையில் எவையெல்லாம் முதன்மையானவையாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    ஏதோ ஒன்றைக் கொடுப்பதும், ஏனோ தானோ எனக் கொடுப்பதும் பயனற்ற செயலின் சான்றுகள்.

    4. காணிக்கை கொடுக்கவேண்டும் எனும் கட்டாயம் காயீனுக்கு பயத்தின் விளைவாய்க் கூட வந்திருக்கலாம். பூமியில் ‘பிறந்த’ முதல் மனிதன் அவன். அவனுடைய காணிக்கை இறைவன் மீதான பயத்தின் காரணமாக வந்திருக்கலாம். ஆபேலுக்கு இறைவன் மீதான அன்பினால் காணிக்கை கொடுக்கும் மனம் உருவாகியிருக்கலாம்.

    பயத்தின் விளைவாகவோ, பிறருடைய கட்டாயத்தின் விளைவாகவோ வெளிப்படும் செயல்களெல்லாம் பயனற்ற செயல்களே.

    5. “இவ்வளவு கொடுத்தும் எனக்கு அங்கீகாரம் இல்லையா?” எனும் எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது காயீனின் காணிக்கை. தன்னை இறைவன் நிராகரித்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    எவ்வளவோ செய்திருக்கிறேன் என கணக்கு பார்த்து செய்கின்ற செயல்கள் பயனற்ற செயல்களாகவே முடியும்.

    6. காயீனும் ஆபேலும் ஒரே நாளில் பலி செலுத்த வருவது, காயீன் காணிக்கை கொடுக்க தாமதித்தான் எனபதையே காட்டுகிறது.

    இறைவனுக்குக் கொடுக்க தாமதம் செய்வது என்பது உள்ளார்ந்த விருப்பத்தோடு செய்யவில்லை என்பதன் அடையாளம். தயக்கம் சுயநலத்தின் வெளிப்பாடு.

    நமது செயல்கள் தயக்கத்தோடும், தாமதத்தோடும், முழு விருப்பமின்றியும் வரும் போது அது பயனற்ற செயல் ஆகிவிடுகிறது.

    7. நமது வாழ்க்கை இறைவனுக்கு பிரியமான வாழ்க்கையாய் இருக்கும் போது தான் நமது காணிக்கைகளும் இறைவனுக்குப் பிரியமானதாய் மாறுகிறது. நமது காணிக்கைகளுக்காக நம்மை இறைவன் ஏற்பதில்லை. நம்மை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாகத் தான் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார்.

    “காணிக்கை செலுத்த வரும் முன் சகோதரனோடு ஒப்புரவாகச் சொல்கிறார் இயேசு”.

    காரணம் இது தான். நமது வாழ்க்கை இறைவனை விட்டு விலகிச் சென்றால் எந்த ஒரு காணிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அது கொழுத்த தலையீறுகளானாலும் சரி.

    நமது செயல்கள் பயனற்ற செயல்களாக இல்லாமல் இருக்க வேண்டும்எனில், நமது வாழ்க்கை இறைவனைப் பிரதிபலிக்கும் உயிருள்ள வாழ்க்கையாய் இருக்க வேண்டும்.

    சேவியர், சென்னை.
    தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்.
    லூக்கா 18: 9 முதல் 14 வரை

    தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

    “இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

    பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’

    ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.” இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

    இயேசு இந்த உவமை எதற்கானது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறார். “தாங்கள் நேர்மையானவர்கள் என நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும்” சிலரைப் பார்த்தே இயேசு இதைச் சொல்கிறார்.

    இங்கே ஆலயத்துக்குச் செல்பவர்கள் இருவர். ஒருவர் பரிசேயர். பரிசேயர்கள் கடவுளின் சட்டத்தை அறிந்தவர்கள். அதைத் தவறாமல் பின்பற்றுகிறோம் எனும் மமதை உடையவர்கள். தாங்கள் இறைவனின் சொந்த பிள்ளைகள் எனும் கர்வம் உடையவர்கள். மத ரீதியான செயல்களைச் செய்தால் போதும் நிலை வாழ்வு நிச்சயம் என கருதிக் கொண்டவர்கள். தங்களுடைய செயல்களுக்கான பலனைத் தரும் கடமை இறைவனுக்கு உண்டு என இறைவனை வியாபாரியாக்குபவர்கள்.

    இரண்டாமவர் வரிதண்டுபவர் அல்லது ஆயக்காரர். அவர் பாவி என மக்களால் இகழப்பட்டவர்கள். அவர்கள் ரோம அரசுக்காக தன் இன மக்களிடமே வரி வசூலிக்கும் சூழலில் தள்ளப்பட்டவர்கள். அவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சமூகத்தில் இழி நிலையில் உள்ளவர்களாகவும் கருதப்பட்டவர்கள்.

    பரிசேயர்கள் சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்கள். அவர் மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்கள் ஆன்மீகத்தில் பெரியவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றெல்லாம் மக்கள் கருதிக் கொண்டிருந்தவர்கள்.

    வரிதண்டுபவரோ சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர். புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பவர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர். பாவி என மக்களால் நம்பப்பட்டவர்.
    இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். னைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார்.
    நற்செய்தியில் இயேசுவை அன்பு செய்து அவரை பின்பற்றியது, பெத்தானியாவில் இருந்த மரியா, மார்த்தா, லாசர் என்பவர்களின் குடும்பம். இவர்கள் இயேசுவின் சீடர்களாக, நண்பர்களாக விளங்கினார்கள். ஆண்டவரே, உன் நண்பர் லாசர் நோயுற்று இருக்கின்றார் என்று இயேசுவுக்கு செய்தி மட்டுமே அனுப்பப்பட்டது. இயேசு அவர்களை அன்பு செய்ததால், நட்போடு பெத்தானியாவுக்கு சென்றார். ஆனால் அதற்குள் லாசர் இறந்து நான்கு நாள் ஆயிற்று.

    இயேசுவை கண்ட லாசரின் சகோதரிகள் அழுது புலம்பினார்கள். அவர்களின் துயரத்துக்கு செவி சாய்த்து, அவர்களோடு அழுது, துக்கத்தில் தோள் கொடுத்து, உள்ளம் குமுறி நொந்தார் இயேசு. இதுதான் அவருடைய அன்பு. இறைத்தந்தையால் நாம் வாழ்வு பெற அனுப்பப்பட்ட ஆண்டவர், நமக்கு செவிசாய்த்தார். நாம் விடுதலை பெற நமக்காக கண்ணீர் சிந்தினார். நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார்.

    இயேசுவின் நண்பனாக இருக்க, லாசர்களாக, நெருக்கமானவர்களாக நம்முடைய செயல்பாடுகள் மாற வேண்டும். லாசரின் கல்லறை கல்லை அப்புறப்படுத்தி, அவரை உயிர்த்தெழ செய்தார் இயேசு. ஆனால் நாம் கோபம், ஆணவம், பொறாமை உள்பட பல்வேறு காரணங்களால் பலருக்கு கல்லறை கட்டி, அவர்கள் வாழ்வை இழக்க காரணமாக இருக்கின்றோம்.

    இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். அத்துடன் பலருக்கு நாம் கட்டிய கல்லறைகளின் கல்லை அப்புறப்படுத்த துணை புரிவார். அனைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார். எனவே, இத்தவக்காலத்தில் மட்டுமல்ல என்றுமே இயேசுவின் நண்பனாக வாழ நாம் முற்படுவோம்.

    அருட்பணி. அ.ஜோசப் செல்வராஜ், முதன்மை செயலாளர்,

    திண்டுக்கல் மறைமாவட்டம்.  
    ஒவ்வொரு உயிர்ப்பு விழாவும் நம்மில் சில, பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவோடு உயிர்ப்போம்.
    இன்று இறைமகன் இயேசு மகிமையோடும் வல்லமையோடும் உயிர்த்தெழுந்த உயிரிப்புப் பெருவிழாவினை உலகனைத்தும் வாழ் கிறிஸ்தவ மக்கள் பெரு அக்களிப்போடு கொண்டாடுகின்றார்கள். சாவின் நின்று உயிர்த்து எழுதல் என்பது இறைவன் ஒருவரால் மட்டும் நிகழ்த்தக் கூடிய இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி. மானிட இனமானது பாவத்தில் வீழ்ந்து, சாவு, மரணம் என்ற சாபத்திற்கு ஆளானதால் இறைமகன் இயேசு தமது அற்புதமான உயிர்ப்பினால் சாவை வென்று வெற்றி வாகை சூடி மீண்டும் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் சாவை வென்ற சத்தியனானார்

    இன்று இறைமகன் இயேசு மகிமையோடும் வல்லமையோடும் உயிர்த்தெழுந்த உயிரிப்புப் பெருவிழாவினை உலகனைத்தும் வாழ் கிறிஸ்தவ மக்கள் பெரு அக்களிப்போடு கொண்டாடுகின்றார்கள்.

    உயிர்ப்புப் பெருவிழாவினைக் காணவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடவுமே கடந்த நாற்பது நாட்களாக நாம் நோன்பிலிருந்து மாபெரும் ஆயத்தம் செய்தோம்.

    உயிர்ப்பு இல்லையென்றால் சிலுவைக்கு எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விட்டிருக்கும். இயேசு வல்லமையோடு உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் தாங்கள் பறை சாற்றிய நற்செய்திகள் யாவுமே பொருளற்றதாய் போயிருக்கும் என்று புனித பவுல் கூறுகிறார். ஒழிந்திருக்கும்.

    இன்று நம் திருமறையானது உயிர் வாழ்கின்றனதென்றால், அதற்கு இயேசுவின் உயிர்ப்பே மூலகாரணம்.

    சாவின் நின்று உயிர்த்து எழுதல் என்பது இறைவன் ஒருவரால் மட்டும் நிகழ்த்தக் கூடிய இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி. மானிட இனமானது பாவத்தில் வீழ்ந்து, சாவு, மரணம் என்ற சாபத்திற்கு ஆளானதால் இறைமகன் இயேசு தமது அற்புதமான உயிர்ப்பினால் சாவை வென்று வெற்றி வாகை சூடி மீண்டும் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் சாவை வென்ற சத்தியனானார்.

    மத, இன, மொழி, நிற வேறுபாடின்றி மனுக்குலம் மீட்படைய தம்மையே கல்வாரியில், சிலுவையில் தியாகப் பலியாக்கி முன்னர் அவர் உரைத்தபடியே மூன்றாம் நாள் உயிர்த்த அவரின் அற்புதச் செயல் நம் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

    இயேசுவின் உயிர்ப்பு அவராலேயே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதொன்றாகும்.

    “மானிட மகன் மக்களின் கையில் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவனைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் அவர் உயிர்த்தெழுவார். (மாக் 9 : 31)

    கல்லறை மேட்டினின்று ‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே’ என்று கூறி தன் உயிர்த்தெழுதலின் அடையாளமாக இறந்த லாசாரை எழுப்பினார் இயேசு. “இத் தேவாலயத்தை இடித்துப் போடுங்கள். மூன்று நாட்களில் கட்டியெழுப்புவேன்” என்று கூறிய பொழுது தன் உடலாகிய பேராலயத்தையே அவர் குறிப்பிட்டிருந்தார்.

    தெய்வத் திருமகனாலன்றி வேறெவராலும் இப்படிக் கூற முடியாது.

    இயேசுவின் உயிர்ப்பு நமக்கெல்லாம் ஒரு முக்கியமான மறையுண்மையாகும். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியைக் கேட்ட அவர் கல்லறைக்கு வந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். தெய்வத் திருமகன் பிறந்தவுடன் வான தூதர் இடையர்களுக்குத் தோன்றி மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவித்தனர்.

    இயேசுவின் பிறப்பைப் போலவே அவரது இறப்பும், உயிர்ப்பும் நமக்கு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகும்.

    ஒவ்வொரு உயிர்ப்பு விழாவும் நம்மில் சில, பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவோடு உயிர்ப்போம். அன்புள்ளம், தியாக உள்ளம், பிறருக்குத் தன்னையே அளிக்கும் உள்ளம் வளர வேண்டும். 
    எனக்கன்பானவர்களே, கர்த்தருடைய கிருபையினால் உங்களுக்காக ஜெபத்தோடு எழுதுகிறேன். இதில் எழுதப்பட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் உங்களுக்காகவே என எடுத்துக்கொள்ளுங்கள்.
    எனக்கன்பானவர்களே, கர்த்தருடைய கிருபையினால் உங்களுக்காக ஜெபத்தோடு எழுதுகிறேன். இதில் எழுதப்பட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் உங்களுக்காகவே என எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் ‘உங்களை அழைக்கும் தேவன்’ என்ற செய்தியை கர்த்தர் உங்களுக்கு தந்திருக்கிறார்.

    இறைவனின் அழைப்பு

    ‘நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.’ (II தெச.2:14)

    தேவனுடைய பிள்ளையே, இந்த அழகிய உலகில் நீங்களும் நானும் ஒரே ஒரு முறைதான் பிறக்கிறோம். இவ்வுலகில் ஏராளமான மார்க்கங்களும், மதங்களும் உள்ளன. இருந்தாலும், வெற்றி, சமாதானம், நம்பிக்கை, விடுதலை, ஆரோக்கியம், எல்லாவற்றுக்கும் மேலாக நாம் மரித்த பிறகும் பரலோகத்தில் ஆண்டவரோடு நித்திய காலமாய் வாழ்கிற வாழ்க்கை என இத்தனை ஆசீர்வாதங்களையும் கொண்டது தான் கிறிஸ்தவ மார்க்கமாகும்.

    இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 130 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இத்தனை பெரிய தேசத்தில், நீங்கள் ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்படுவது மாபெரும் ஆசீர்வாதமாகும். அதே வேளையில் கடவுள் நம்மை அழைத்ததின் நோக்கத்தை நாம் அனைவரும் அறிய வேண்டும்.

    பாவமன்னிப்பு

    தெசலோனிக்கேயர்க்கு பவுல் எழுதும்போது ‘இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்’ என எழுதுகிறார். நீங்கள் தேவனிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான அற்புதம் இரட்சிப்பு ஆகும். ‘இரட்சிப்பு’ என்ற வார்த்தை ‘மனந்திரும்புதல்’, ‘பாவமன்னிப்பின் நிச்சயம்’, ‘மறுபடியும் பிறப்பது’ என கூறலாம்.

    இந்தச் செய்தியை நீங்கள் வாசிக்கும் இவ்வேளையில் உங்களுக்கு இரட்சிப்பின் அனுபவம் உண்டா? என்ற கேள்வியை நீங்களே கேட்டுப்பாருங்கள்.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பெரிதான இரட்சிப்புக்காக இயேசு ரத்தம் சிந்தினார். அவருடைய ரத்தத்தால் நம்முடைய பாவங்கள் முற்றிலும் கழுவப்படுவதற்குப் பெயர்தான் இரட்சிப்பு அல்லது மனந் திரும்புதல்.

    ஆண்டவர் உங்களோடு பேசுகிறார்

    ஒரு வேளை நீங்கள் இயேசுவை அறியாத நபராக இருந்தால் இந்த கட்டுரையின் வழியாக ஆண்டவர் உங்களோடு பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் ஒரு கிறிஸ்தவ நபராக இருந்தால் ‘நான் என் பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு, இயேசுவின் ரத்தத்தினால் கழுவப்பட்டு, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனா?’ என்று கேள்வி கேட்டுப்பாருங்கள்.

    நாம் கிறிஸ்தவர்களாகப் பிறந்தபடியினாலும், கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் செல்லுகிறபடியினாலும் பரலோக பாக்கியமடையலாம் என நினைத்துவிடக்கூடாது. நம் அருமை ஆண்டவர் சிந்திய விலையேறப்பெற்ற ரத்தத்தால் பாவங்களை அறிக்கையிட்டு கழுவப்பட அர்ப்பணிக்க வேண்டும்.

    உலக இன்பங்கள்

    சிலர் இவ்விதமாய் நினைக்கிறார்கள், அதாவது வேலை செய்கிறேன், பணம் சம்பாதிக்கிறேன், வீடு வசதிகளோடு வாழ்ந்து வருகிறேன். பிறருக்கு விரோதமாய் எந்த தவறான காரியங்களையும் செய்யவில்லை. அனுதினமும் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன்.

    அன்பானவர்களே, இவ்வுலக இன்பங்களுக்கு பெயர் சிற்றின்பமாகும். உங்கள் நடத்தையைக்கெடுக்கும் அனைத்து போதைகளும் பெயர் சிற்றின்பமாகும். அதாவது இதனால் நீங்கள் பெறும் இன்பம் நிரந்தரமற்றதாகும்.

    அதே வேளையில் நம் அருமை ஆண்டவர் கொடுக்கிற சந்தோஷம் நிரந்தரமாகும். அதற்குப் பெயர் பேரின்பம் என வேதம் கூறுகிறது.

    பேரின்பம்

    உங்களை ஆண்டவர் ஒரு நோக்கத்தோடு அழைத்திருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படிப்பட்ட இரட்சிப்பு என்று சொல்லப்படுகிற பேரின்பத்தைப் பற்றி ஒரு முறை கூட கேள்விப்படாத பல கோடி மக்கள் இந்தியாவில் உலகத்தை விட்டே போய் விட்டார்கள்.

    இன்னும் பல கோடி மக்கள் உண்மையுள்ள ஜீவிக்கிற இயேசுவை அறியாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே உங்களை அழைக்கிற தேவன் உங்களுக்குக் கூறும் அன்பான அழைப்பு உலக சிநேகத்திற்கும், சிற்றின்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து ஆண்டவராகிய இயேசுவை நம்புங்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேரின்பத்துடன் வாழ்ந்து சுகமாயிருப்பீர்கள்.

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

    சகோ.ஜி.பி.எஸ்.ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்,

    சென்னை-54.
    சாத்தானின் சோதனையை வென்று கடவுளின் திட்டத்துக்கு முற்றிலும் தம்மைக் கையளித்ததால், இயேசு தம்மை ‘இறைமகன்’ என்று நிரூபித்தார்.
    கிறிஸ்தவ சமயத்தில் ஒருவர் திரு முழுக்கு (ஞான ஸ்நானம்) பெறுகின்ற வேளையில், “சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டு விடுகிறீர்களா?” என்று குருவானவர் கேட்பது வழக்கம். இந்த வழக்கம் தோன்றியதன் பின்னணியில், இறை மகன் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று உள்ளது. அதுதான் இயேசுவை சாத்தான் சோதித்த நிகழ்ச்சி.

    ‘இயேசு திருமுழுக்கு பெற்றதும் பாலைநிலத்தில் நாற்பது நாள் இருந்தார். அப்போது அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டார்’ என்று மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தி நூல்களில் காண்கிறோம். “அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் இயேசு தோன்றினார்” (1 யோவான் 3:8) என்று கூறும் அதே விவிலியத்தில், இத்தகைய நிகழ்வு சொல்லப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பைத் தருகிறது.

    இயேசு இறைமகன் என்றால், அலகை (சாத்தான்) அவரை சோதிப்பது சாத்தியமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சாத்தானால் சோதிக்கப்பட்டார் என்றால், இயேசுவை இறைமகன் என்று ஏற்க முடியுமா என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், கடவுளுக்கு எதிராக மனிதரை செயல்படத் தூண்டுவதே சாத்தானின் வேலை என்பது நமக்குத் தெரியும். ஆகவே, மானிட மகனாகத் தோன்றிய இயேசுவையும் சாத்தான் சோதித்துப் பார்த்தது.

    “இறைமகனாகிய இயேசு எல்லா வகையிலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டவர். எனினும் பாவம் செய்யாதவர்” (எபிரேயர் 4:15) என்று விவிலியம் கூறுகிறது. இந்த உண்மையின் உருவகமாகவே இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்ட நிகழ்வு அமைந்துள்ளது. இயேசுவின் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு மனப் போராட்டங்களை அவர் எப்படி வெற்றி கொண்டார் என்பதை நாம் இந்நிகழ்வின் வழியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

    இயேசு ‘இறைமகன்’ என்பதற்கு, தந்தையாம் கடவுள் சான்று பகர்ந்த பிறகு, அலகை அவரை சோதிக்கிறது. இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் நோன்புஇருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அலகையின் பேச்சைக் கேட்டு, கல்லை அப்பமாக மாற்றி தம்மை இறைமகன் என்று இயேசு நிரூபித் திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.

    இயேசு மறுமொழியாக, ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என மறைநூலில் எழுதியுள்ளதே’ என்றார். (மத்தேயு 4:2-4).

    ‘கடவுளின் பிள்ளைகள், உணவுக்காக சாத்தானின் பேச்சைக் கேட்க வேண்டியதில்லை’ என்பதே இயேசுவின் பதிலடி. ‘கடவுளின் வார்த்தையாகிய தம்மாலேயே மனிதருக்கு வாழ்வு கிடைக்கும்’ என்று கூறி சாத்தான் மீது இயேசு வெற்றி கொள்கிறார்.

    இயேசு வாழ்ந்த காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கை ஏற் படுத்தின. ‘அப்பங்களைப் பெருகச்செய்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த வேளையில், இயேசுவை அரசராக்க யூதர்கள் முயற்சி செய்தாலும் அவர் விலகிச் சென்றார்’ (யோவான் 6:15) என்று வாசிக்கிறோம். தமது மகிமைக்காக அல்லாமல், மக்களின் நலனுக்காகவே அற்புதங்களைச் செய்து இயேசு சோதனையை வென்றார்.

    இரண்டாவது சோதனைக்காக, சாத்தான் அவரை எருசலேம் நகரத்திற்குக் கூட்டிச் சென்றது. “கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் கீழே குதியும். கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று சாத்தான் அவரிடம் சொன்னது.

    இங்கு இயேசுவின் மீட்புச் செயலைத் தடுப்பதற்காக, அவரை தற்கொலை செய்யுமாறு அலகை தூண்டுகிறது. இயேசு அதனிடம், ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் எனவும் எழுதியுள்ளதே’ என்று சொன்னார் (மத்தேயு 4:5-7).

    ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என இங்கு இயேசு பயன்படுத்தும் வார்த்தைகள் சாதாரணமானவை அல்ல. ஆண்டவராகியத் தம்மை சோதிக்க சாத்தானுக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்த்தும் விதத்தில் அவர் இப்படி கூறினார்.

    இயேசுவின் அதிகாரத்தை விமர்சித்து, அடையாளச் செயல்களை செய்து காட்டுமாறு கேட்ட பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்ற யூத சமயத் தலைவர் களுக்கு பதிலாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. ‘தேவையான நேரத்தில் கடவுள் அற்புதம் செய்வார் என்றாலும், அதிசயம் நிகழும் என நம்பி கடவுளை சோதிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது’ என்று கூறி சாத்தானை வெல்கிறார் இயேசு.

    மூன்றாவதாக, சாத்தான் அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ‘நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என்றது.

    இங்கு, அதிகாரமும் பதவியும் பெறுவதற்காக தன்னை வணங்குமாறு சாத்தான் சோதிக்கிறது.

    அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார் (மத்தேயு 4:8-10).

    அதாவது, இறைமகனாகிய தாம் அலகையின் காலில் விழுவது நடக்காத காரியம் என்று சொல்லி, இயேசு அலகையை விரட்டி விடுகிறார். இயேசுவை விட்டு அலகை அகன்றதும், வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். (மத்தேயு 4:11)

    இயேசுவின் இறைத்தன்மையின் மேன்மையைக் கண்ட சீடர்கள், அவர் உலகு சார்ந்த ஓர் அரசை அமைக்கப்போவதாக எண்ணினர். அவரது அரசாங்கத்தில் பதவி கிடைக்கும் என்ற எண்ணத்துடனே பலர் அவரது சீடர் களாக இருந்தனர். யூதர்களில் பலருக்கும் இத்தகைய எண்ணம் இருந்தது. ஆகவேதான் இயேசு எருசலேமில் நுழைந்தபோது, “ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக” (லூக்கா 19:38) என்று மக்கள் ஆர்ப் பரித்தனர்.

    ஆனால், சிலுவை சாவை ஏற்கும் தமது லட்சியத்தில் இருந்து இயேசு விலகவில்லை. “ஆண்டவரே, சிலுவை உமக்கு வேண்டாம்” என பரிந்துரைத்த பேதுருவிடம், “அப்பாலே போ சாத்தானே” என்று இயேசு கூறினார். “கடவுள் வடிவில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி மனிதராகத் தோன்றினார். சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்” (பிலிப்பியர் 2:6-8) என்ற வார்த்தைகள் இயேசுவின் மேன்மையை எடுத்துரைக்கின்றன.

    இவ்வாறு சாத்தானின் சோதனையை வென்று கடவுளின் திட்டத்துக்கு முற்றிலும் தம்மைக் கையளித்ததால், இயேசு தம்மை ‘இறைமகன்’ என்று நிரூபித்தார்.

    “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத்தேயு 16:24) என்றும் அவர் அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்று சோதனைகளை வென்று வாழ்ந்தால், நாமும் கடவுளின் பிள்ளைகளாக மாற முடியும்.

    டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
    நமது வாழ்க்கையில் நாம் தவறிய ஆட்டைப் போல இருக்கிறோம் என்பது இதயத்தால் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை வைத்தே கணக்கிடப்படும்.
    லூக்கா 15 : 4..7

    (புதிய மொழிபெயர்ப்பு )

    “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?

    கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

    அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

    ( பழைய மொழிபெயர்ப்பு )

    உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

    கண்டு பிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

    அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    ( இதே உவமை மத் 18:12 ‍ 14 பகுதியிலும் உண்டு )
    இயேசு வழக்கம் போலவே மக்களுக்குப் புரியக் கூடிய விஷயங்கள் மூலமாக, மக்களுக்குத் தெரிந்திராத இறை அன்பைக் குறித்துப் பேசுகிறார்.

    ஒருவரையும் சிறியவராய் எண்ணக் கூடாது, இறைவனின் பார்வையில் எல்லோரும் மதிப்பு மிக்கவர்கள். எந்த ஒரு மனிதனும் தனது மீட்பை இழந்து விடக் கூடாது என்பதே இறைவனின் விருப்பம். என்பதே இந்த உவமையில் இழையோடும் சிந்தனையாகும்.

    இந்த உவமையில் இயேசுவே மேய்ப்பனாக இருக்கிறார். அவரிடம் நூறு ஆடுகள் இருக்கின்றன. அவரிடம் இருக்கும் ஆடுகள், அவரை நம்பி அவரை மீட்பராக ஏற்றுக் கொண்ட மக்களைக் குறிக்கிறது. இயேசுவை விட்டு விலகி பாவத்தின் வழியில் நடப்பவர் தான் வழி விலகிப் போன ஆடு.

    விலகிச் சென்றது ஒற்றை ஆடுதானே என நினைக்காமல், மற்ற ஆடுகள் போதும் என அமைதிகாக்காமல், அந்த ஒற்றை ஆட்டைத் தேடிச் செல்கிறார் மேய்ப்பன். இங்கே இயேசுவின் அன்பு வெளிப்படுகிறது.

    வரி தண்டுவோரையும், ஏழைகளையும், நோயாளிகளையும் பாவிகள் என உதறி நடந்தது யூத சமூகம். அவர்களுக்கு மீட்பு இல்லை என அறிவித்துத் திரிந்தது. அந்த சூழலில் இயேசுவின் இந்த போதனை ஏழைகளுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது.

    விண்ணக மாட்சியை விட்டு, மண்ணுலகில் மனிதனாய் வந்து, சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு, நம் பாவத்தையெல்லாம் சுமந்து தீர்த்த இறைவன் அவர். “என் வேலை முடிஞ்சது, இனி வேணும்ன்னா நீயா மீட்பின் வழிக்கு வா” என விடவில்லை. விலகிச் செல்கைடுல் மீண்டும் அவர் தேடி வருகிறார். அதில் அவருடைய அளவில்லா அன்பும் கரிசனையும் தெரிகிறது.

    ஆட்டுக்கு ஒரு இயல்பு உண்டு. அது சும்மா வழிதவறி விடாது. அருகில் ஏதேனும் புல்லைப் பார்த்தால் அந்தப் பக்கம் தாவும், அங்கிருந்து இன்னொரு அழகிய புல் கூட்டத்தைப் பார்த்தால் அங்கே போகும், இப்படியே சென்று கொண்டிருக்கும் ஆடு, தாமதமாகத் தான் புரிந்து கொள்ளும் தான் வழி விலகிவிட்டோம் எனும் உண்மையை !

    ஊரில் ஆட்டுக்குட்டியைக் காணோமெனில் சொல்வார்கள், “பக்கத்து மரச்சீனித் தோட்டத்துல பாரு, இல்லேன்னா சானல் கரைல புல் கூட்டத்துல போய் பாரு” என்று. ஆடு புல்லைத் தேடியோ இலையைத் தேடியோ தான் செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

    உலக செல்வத்தையும், உடனடிச் சிற்றின்பங்களையும் நாடித் தேடி ஓடும் மக்கள் இப்படித் தான் வழி விலகுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு படி, இன்னொரு படி என தாவித் தாவி அவர்கள் உலக சிற்றின்பங்களில் சிக்கிக் கொள்கின்றனர். கடைசியில் மந்தையை விட்டு வெகு தூரத்தில் சென்று விடுகின்றனர்.

    ஒரு சின்ன கோணப் பிழை கப்பலை பல மைல் தூரம் வழிவிலகச் செய்து விடும். முதலில் சிறிதாக இருக்கும் இடைவெளி போகப் போகப் பெரிதாகிவிடும். கடைசியில் எங்கே நிற்கிறோம் என்பதே புரியாமல் வெலவெலக்கும் சூழல் உருவாகும்.

    ஆடு, நாயைப் போல மோப்பம் பிடிக்காது. வழி விலகிவிட்டால் பதறிப்போகும். மே..மே எனும் அபயக் குரல் மூலம் யாரையேனும் தொடர்பு கொள்ள முயலும். அந்தக் குரல் கொடிய விலங்குகளை அடைந்தால் மரணம் சர்வ நிச்சயம். மந்தையிலுள்ள ஒரு ஆட்டுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் தப்பிவிடலாம்.

    ஆடுகளின் தொடர்பு அப்படித் தான் இருக்கும். எங்கிருந்தோ குரல் கொடுக்கும் குட்டி ஆட்டின் குரலுக்கு அன்னையின் குரல் மறு முனையிலிருந்து வழிகாட்டும். அது தான் அந்த ஆட்டை மீண்டும் மந்தையில் சேர்க்கும். அல்லது மேய்ப்பனின் குரல் கேட்க வேண்டும்.

    இங்கே ஆடு, தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டது. அதைத் தேடி வருகிறார் மேய்ப்பன். ஆட்டைக் கண்டு பிடிக்கிறார்.

    ஆட்டைக் கண்டுபிடிக்கும் மேய்ப்பன் அடையும் மகிழ்ச்சி நமக்கு இறையன்பின் ஆழத்தைப் புரிய வைக்கிறது. ஒரு சின்ன பழிச் சொல் இல்லை, ஒரு சின்ன திட்டு இல்லை, அடி இல்லை, விசாரணை இல்லை. அள்ளி எடுத்து தோளில் போடுகிறார். நடக்கிறார்.

    ஒரு ஆடு எத்தனை கிலோ இருக்கும் என்பதெல்லாம் மேய்ப்பனுக்குக் கவலையில்லை. தனது குழந்தை எவ்வளவு எடையாய் இருந்தாலும் தூக்கிச் சுமக்கும் அன்னையைப் போல அவர் சுமக்கிறார். அவர் அடைகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாததாய் இருக்கிறது.

    ஆட்டைச் சுமந்து வரும் மேய்ப்பன் நேரடியாக வீட்டுக்குச் சென்று அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து விருந்து வைத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார். வழிவிலகிச் செல்லும் ஒரு மனிதர் மீண்டும் இறைவனிடம் வரும்போது விண்ணகம் சிலிர்க்கிறது, மகிழ்கிறது. கொண்டாடுகிறது.

    99 ஆடுகளையும் மேய்ப்பன் உதாசீனம் செய்யவில்லை, அவர்களை மந்தையாய் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஆட்டைத் தேடிச் செல்கிறார்.

    நமது வாழ்க்கையில் நாம் தவறிய ஆட்டைப் போல இருக்கிறோம் என்பது இதயத்தால் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை வைத்தே கணக்கிடப்படும். நூறு பேர் இருக்கின்ற ஒரு திருச்சபையில், ஒருவர் மட்டும் இதயத்தால் மற்றவரை விட தொலைவில் இருக்கலாம். ஆங்காங்கே சிதறி இருக்கும் நூறு பேர் இதயத்தால் இணைந்தே இருக்கலாம். பாவ வழியினால் இயேசுவின் இதயத்தை விட்டு விலகி இருக்கும் மக்களை இறைவன் தேடிவருகிறார்.
    அன்பான தேவ பிள்ளைகளே, நம் ஆண்டவர் நமக்கென்று ஒரு சித்தம், திட்டத்தை வைத்திருக்கிறார். நாம் ஜெபத்தோடு காத்திருக்கும்போது நிச்சயம் ஆண்டவர் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.
    பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நாம் நம் குடும்ப காரியங்கள், தேவைகள் ஆகியவற்றுக்காக அதிகமாக ஜெபிக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் பதில் கிடைப்பதில்லையே என கலங்குகிறோம்.

    ‘கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்’. (ஏசா.53:10)

    மேற்கண்ட வசனத்தை வாசித்துப் பாருங்கள். கர்த்தருடைய சித்தத்தை ஆண்டவர் நிச்சயம் நிறைவேற்றுவார். அப்படியானால் அவருக்குச் சித்தமில்லாத காரியங்களை அவர் வாய்க்கப் பண்ண மாட்டார்.

    வேதம் சொல்லுகிறது, ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’. (I யோவான் 5:14).

    எனவே அவருடைய சித்தத்தின்படி ஜெபித்தால் நிச்சயம் அற்புதம் நடக்கும்.

    தேவ சித்தம் அறிய ஜெபம்

    ஆதியாகமம் 24:12-14 வரையுள்ள வசனங்களை வாசித்துப் பார்ப்பீர்களேயானால், ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு ஒரு நல்ல பெண்ணைத் தேடிக்கொண்டு வர எலியேசரை அனுப்புகிறார். அப்பொழுது எலியேசர் தன் எஜமானின் குமாரனுடைய வாழ்வில் தேவசித்தம் நிறைவேற வேண்டும். தன் காரியத்தை கர்த்தர் வாய்க்கப் பண்ண வேண்டும் என்பதற்காக தேவசித்தத்தை அறிய ஒரு ஜெபம் ஏறெடுக்கிறதை நாம் காணலாம்.

    பிரியமானவர்களே, உங்கள் எதிர்காலம் மற்றும் பிள்ளைகளின் திருமணம், வேலை, படிப்பு காரியங்களில் அற்புதத்தை எதிர்நோக்கியிருக்கிற இந்நாட்களில், முதலாவது நம் வாழ்வில் தேவசித்தம் என்ன என்பதை அறிய ஜெபிக்க வேண்டும்.

    ஆண்டவரிடமிருந்து ஒரு அடையாளத்தைக் கேட்கலாம், கர்த்தரின் சித்தத்தை நமக்கு வெளிப்படுத்தும்படி ஜெபிக்கலாம். இப்படி ஜெபிக்கும் போது, அவரே தம் சித்தத்தை வெளிப்படுத்தி, காரியங்களை வாய்க்கப் பண்ணுவார்.

    தேவ சித்தம் நிறைவேற காத்திருக்க வேண்டும்

    ‘அந்த மனிதன் அவளைக் குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பயணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்’. (ஆதி.24:21)

    பிரியமானவர்களே, எலியேசர் தேவசித்தத்தை அறிய ஜெபம் பண்ணியபடியே காரியங்கள் நடந்தாலும், அவர் அவசரப்படாமல், அது தேவசித்தம் தானா என்பதை அறியும்படி காத்திருந்தான்.

    ஆனால் இன்று அநேகருக்கு காத்திருக்க பொறுமையில்லை. அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். அது முடிவில் ஏமாற்றத்திலும் பிரச்சினையிலும் கொண்டு போய்விடும்.

    ஆகவே பொறுமையோடு தேவசித்தம் நிறைவேற காத்திருங்கள். கண்டிப்பாக உங்கள் நம்பிக்கை வீண்போகாது. அன்பான தேவ பிள்ளைகளே, நம் ஆண்டவர் நமக்கென்று ஒரு சித்தம், திட்டத்தை வைத்திருக்கிறார். நாம் ஜெபத்தோடு காத்திருக்கும்போது நிச்சயம் ஆண்டவர் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார். உங்கள் குடும்ப வாழ்வில் அற்புதங்களைக் காண்பீர்கள்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    அநேகர் பாவம் போக்க பல புண்ணிய தேவாலயங்களுக்கும், புகழ் பெற்ற ஸ்தலங்களுக்கும் போகிறது உண்டு. காரணம், ‘எங்கள் பாவம் மாற வேண்டும், பாவ தோஷம் நீங்க வேண்டும்’ என்பது தான்.
    ஆசைகள் மிகுந்த இந்த உலகில் வாழும் மனிதர்கள் கூட்டத்தில் பாவம் செய்யாத நபரே இல்லையென்று கூறினால் அது மிகையாகாது.

    கடவுள் சிருஷ்டித்த முதல் மனிதன் ஆதாம் முதல், இந்த நிமிடம் வாழும் மனிதன் வரையும், இனி உலகம் இருக்க போகும் கடைசி நிமிடம் வரையுள்ள மனிதர்கள் ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒரு வகையில் பாவம் செய்கின்றனர்.

    பாவம் செய்யும் பொழுது சந்தோஷமாக இருக்கும், அதை செய்து முடித்தவுடன் நம் மனசாட்சியே நம்மை வாதிக்கும். ஆகவேதான் அந்த வேதனை தாங்காமல், மனசாட்சி நாளுக்கு நாள் வாதிப்பதினால், அநேகர் தற்கொலை செய்து மாண்டு போகின்றனர்.

    அநேகர் இந்த பாவம் போக்க பல புண்ணிய தேவாலயங்களுக்கும், புகழ் பெற்ற ஸ்தலங்களுக்கும் போகிறது உண்டு. காரணம், ‘எங்கள் பாவம் மாற வேண்டும், பாவ தோஷம் நீங்க வேண்டும்’ என்பது தான்.

    ‘மனுக்குலத்தின் பாவங்களை போக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் பலியானார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்’ (1 யோவான் 1:7) என்று வேதம் கூறுகிறது.

    ஒரு புகழ் பெற்ற ஓவியருக்கு ஒரு முறை ஒரு ஆசை வந்தது. இயேசு கிறிஸ்துவையும், அவருடைய பன்னிரண்டு சீடர்களையும் ஓவியம் தீட்ட வேண்டும் என்று.

    இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் பலியாவதற்கு முன்னர் தன் பன்னிரண்டு சீடர்களுடன் ஒரு மேல்வீட்டறையில் இராப்போஜனம் பண்ணினார் என்று வேதம் கூறுகிறது.

    இந்த சம்பவத்தை ஓவியமாய் வரைய அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இயேசுவின் சீடர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்து, யூகித்து, ஒவ்வொரு மனிதனாய் தேடிப்பிடித்து அவனை அமரவைத்து ஓவியம் தீட்டினார்.

    முதலாவது சீடரை தீர்மானித்து வரைந்தார். பதினோரு சீடர்களை வரைந்து முடித்தார். கடைசியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும்படி காட்டிக் கொடுத்த யூதாசை வரைய வேண்டி இருந்தது.

    பல நபர்களை தேர்ந்தெடுத்து பார்த்தார் அவருக்கு திருப்தியே வரவில்லை. இறுதியாக அவர் அந்த ஊரின் சிறைச்சாலைக்குச் சென்று கொலை, திருட்டு, கொள்ளை, போன்ற குற்றங்களில் ஈடுபட்ட ஒரு சிறை கைதியை தேர்ந்தெடுத்து வரைய எத்தனித்தார். அப்படியே வரைந்து முடித்தார். அவருக்கு மிகுந்த சந்தோஷம். மிகவும் நன்றாக பொருத்தமாக அந்த கைதியின் முகம் இருந்தது.

    இறுதியாக அவர் ஏசு கிறிஸ்துவை வரைய, அதற்கேற்ற நபரை தேடி அலைய ஆரம்பித்தார். நாட்கள் கடந்தன, யாரை அவர் பார்த்தாலும் அவருக்கு திருப்தி வரவில்லை. இயேசு கிறிஸ்துவைப் போல வரைய அவர் நபர்களை தேடித்தேடி அலைந்தார். நாட்கள் உருண்டோடின. எவரும் அவருக்கு தென்படவில்லை. அவரும் திருப்தியாகவில்லை.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு ஒரு செய்தி வருகிறது. ஒரு பிரசங்கியார், அவர் இருந்த ஊருக்கு அருகாமையில் ஊழியம் செய்ய வந்திருக்கிறார். அவருடைய முகத்தில் அவ்வளவு பிரகாசம், சாந்தம், அன்பு. ஜனங்களெல்லாரும் அவரிடம் பிரார்த்தனை செய்ய போகின்றனர் என்று.

    இவரும் அவரை காண விரைந்தோடினர். அவரை கண்டவுடன் இவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இயேசு கிறிஸ்துவாக வரைவதற்கு இவரே பொருத்தமான நபரென்று எண்ணி தன் ஓவிய திட்டத்தை அவரிடம் விவரித்து அவரை வரையவேண்டும் என்று பணிவுடன் கேட்டார்.

    அந்த ஊழியரும், ‘வரைந்து கொள்ளுங்கள்’ என்று அவருக்கு முன் அமர்ந்தார். அந்த ஓவியர் வரைய ஆரம்பித்தார்.வரைந்து முடித்தவுடன் இவருக்கு மிகுந்த சந்தோஷம். அந்த ஊழியருக்கு சந்தோஷத்தோடே நன்றி கூறும் வேளையில் அந்த ஊழியர் இப்படியாக கேட்டார்: ‘என்னை இதற்கு முன்னால் பார்த்திருக்கின்றீர்களா, என்னை அடையாளம் தெரிகிறதா?’.

    ‘இல்லையே, நான் இதற்கு முன்பு உங்களை பார்த்தது இல்லையே’ என்று ஓவியர் பதிலளித்தபோது: அந்த ஊழியர் ஒரு புன்முறுவலுடன் கேட்டார், ‘சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊரின் சிறைச்சாலைக்கு நீ சென்றிருந்தாயா?’

    ‘ஆம், சென்றிருக்கிறேன்’ என்று இவர் பதிலளித்திருக்கிறார். ‘அப்பொழுது யூதாசை வரைய கைதிகளைப் பார்த்தாயல்லவா?’ என்றார். ‘ஆம், பார்த்தேன், நான் அதில் ஒரு கைதியை தேர்ந்தெடுத்து யூதாஸாக வரைந்தேன்’ என்றார்.

    ‘அந்த கைதி வேறு யாரும் இல்லை, நான் தான்’ என்றார் இந்த ஊழியர்.

    ஓவியருக்கு பிரமிப்பு வந்தது.

    ‘நான் சிறைச்சாலையில், இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். என் தண்டனைக் காலம் முடிந்ததும் நான் விடுதலையாகி ஊழியம் செய்து வருகிறேன்’ என்றார்.

    ஆம், அவருடைய பாவங்களை நீக்கி இரட்சித்த இயேசு கிறிஸ்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். அதுபோல இதை வாசிக்கின்ற அனைவரையும் மன்னித்து, இரட்சித்து, ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.

    சகோ. சி சதீஷ், வால்பாறை.

    திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல் அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.
    பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: ‘தபீத்தாளே, எழுந்திரு’ என்றான். (அப்.9:40)

    உலகம் கற்பனை செய்துபார்க்க முடியாத அதிசயமான காரியங்கள் ஜெபத்தினால் நடப்பிக்கப்படுகின்றன. யோப்பா பட்டணத்தில் தபீத்தாள் என்ற ஸ்திரி இருந்தாள். அவள் மிகுதியான நற்கிரியைகள், தான தருமங்கள் செய்துகொண்டு வந்தாள். அவள் திடீரென்று வியாதிப்பட்டு மரணமடைந்தாள். மேல் வீட்டில் கிடத்தி வைத்தார்கள்.

    இயேசுவின் சீஷரான பேதுருவை அழைத்துச்சென்று தபீத்தாள் செய்திருந்த நல்ல காரியங்களை எல்லாம் பேதுருவுக்கு தெரிவித்தார்கள். பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து; முழங்காற்படியிட்டு இறைவனிடம் ஜெபம் பண்ணி பிரேதத்தை பார்த்து: ‘தபீத்தாளே எழுந்திரு’ என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்தாள். பேதுரு அவளை உயிருள்ளவளாக ஜனங்களுக்கு முன்பாக நிறுத்தினான். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

    தானியேல் தான் முன் செய்துவந்த படியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணினான் (தானி.6:10).

    தரியு ராஜா அரசாண்ட காலத்தில் தானியேல் பிரதான மந்திரியாக இருந்தார். ‘ராஜா, என் ஜனங்கள் எனக்கு கீழ்படிகின்றவர்களா என்று சோதிக்கும்படியாக முப்பது நாள்வரை எந்த தேவனையாகிலும் யாதொரு மனிதர்களும் வேண்டுதல் செய்து ஜெபம் செய்யக்கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்தான். மீறினால் அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட கட்டளை பிறப்பித்து கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்து வைத்தான்.

    தானியேல், தரியு ராஜாவின் உத்தரவை தள்ளி, தான் முன் செய்து வந்தபடியே தினம் மூன்று வேளையும் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்செய்து பரலோக தேவனை பணிந்து கொண்டான்.

    ராஜா, தானியேலை சிங்கங்களின் கெபியிலே போட்டார். ஒரு இரவு முழுவதும் சிங்கங்களின் கெபியிலே இருந்தான். கர்த்தர் சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். காலையில் சிங்கங்களின் கெபியிலிருந்து உயிரோடு வெளியே வந்தான். அவன் உடலில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

    ராஜா, தானியேலை பார்த்து ‘நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவித்தார்’ என்றான். தானியேலின் ஜெபம் ஜெயமாக மாறியது.

    வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரியின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. (1 இரா.17:17)

    தேவனிடம் நெருங்கி உறவாடும் தனி மனிதனாகிய எலியா என்ற தேவ மனிதன் சாறிபாத் ஊரில் ஒரு விதவை வீட்டில் தங்கி இருந்தான். விதவைக்கு ஒரு மகன் இருந்தான். அவன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் வியாதி அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவன் செத்துப் போனான்.

    எலியா அந்த குமாரனை வாங்கி தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் படுக்கவைத்து, ‘என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனை சாகப்பண்ணினதினால் விதவை ஸ்திரிக்கு துக்கத்தை வருவித்தீரோ’ என்று ஜெபம் செய்தான்.

    எலியா அந்த பிள்ளையின் மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து, ‘என் ஆண்டவரே, இந்தப் பிள்ளையின் உயிர் அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும்’ என்று ஜெபம் செய்தான்.

    அவன் உயிர் திரும்பி வந்து அவன் பிழைத்தான். எலியா பிள்ளையை தாயினிடத்தில் கொடுத்து, ‘உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்’ என்றான். அந்த ஸ்திரி, ‘நீர் தேவனுடைய மனுஷன். உமது வாயிலிருந்து பிறக்கும் வார்த்தை தேவ வார்த்தை என்று அறிந்தேன்’ என்றாள்.

    ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்’. (பிலி.4:6)

    நீயோ ஜெபம் பண்ணும் போது உன் அறை வீட்டினுள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

    தேவனுக்கு பிரியமில்லாத படி ஜீவிக்கிறவர் ஜெபம் அருவருப்பானது. செம்மையானவர்கள், பரிசுத்தமானவர்கள், நீதிமான்கள் ஜெபத்தையோ கேட்கிறார். பதில் கொடுக் கிறார்.

    வேதத்தையும் தேவனுடைய எச்சரிப்பு களையும் பொருட்படுத்தாதவர்களின் ஜெபம் கேட்கப்படுதல் அரிது. வேதத்தை படிக்காதவனுடைய ஜெபம் தேவனுக்கு பிரியமில்லாத ஜெபம்.

    திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல் அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். இயேசு அதிகாலையில் வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் பிதாவை நோக்கி ஜெபம் செய்தார். நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.

    சகல யூத ஜனங்களையும் அழித்து நிர்மூலமாக்க ஆமானின் சதியால் அகாஸ்வேரு ராஜா உத்தரவு போட்டபோதும், எஸ்தர் உபவாசம் செய்து ஜெபித்ததால் சகல யூதர்களின் உயிர் பாதுகாக்கப்பட்டது. பவுல் எருசலேம் தேவாலயத்திலே ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கையில் ஞான திருஷ்டியடைந்து அவரைத் தரிசித்தான். ஜெபம் நமக்கு ஜெயத்தைத் தரும். ஆமென்.

    சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
    உங்கள் ஊழியத்திற்கும் விரோதமாய் எழும்புகிற எல்லா ஆவிகளையும், சத்துருவின் கிரியைகளையும் முறியடித்து ஜெயத்தோடு ஓட ஆண்டவர் நிச்சயம் கிருபை பாராட்டுவார்.
    ‘என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது’. சங்.23:5

    இந்த உலகத்திலே நமக்கு இருக்கிற ஒரே எதிரி சாத்தான் தான். அவன் தான் பலவிதங்களில் பலவிதமான மனுஷர்கள் மூலமாக கிரியை செய்து யுத்தங்களையும், சண்டைகளையும், வேதனைகளையும் கொண்டு வருகிறான்.

    ஆனால் இன்றும் கூட நம் குடும்ப வாழ்விலும், வேலை ஸ்தலத்திலும், ஊழியப்பாதையிலும் பலவித குழப்பங்களையும் போராட்டங்களையும் ஏற்படுத்தி நம்மை அலைக்கழிக்கிற எல்லாவிதமான சத்துருவின் கிரியைகளையும் தேவன் முறியடித்து நம் வாழ்விலே ஜெயத்தைக் கட்டளையிட வல்லவராயிருக்கிறார்.

    குடும்ப வாழ்வில்...

    பிசாசின் முக்கிய குறிக்கோளே குடும்பங்களைப் பிரிப்பது ஆகும். ஆதியில் ஏவாளுக்குள் நுழைந்து அவள் மூலமாய் அந்த குடும்பத்திற்குள் சாபத்தைக் கொண்டு வந்தான். இன்றைக்கும் சண்டைகள், வாக்குவாதங்கள், வியாதிகள், தரித்திரங்கள், கடன் பிரச்சினைகள், குழந்தை இல்லாமை... போன்ற போராட்டங்களைக் கொண்டு வந்து நம் குடும்பத்திலே குழப்பங்களையும், வேதனைகளையும் கொண்டு வரப்பார்ப்பான். தேவ பிள்ளைகள் அவனுடைய தந்திரங்களை அறிந்து செயல்பட வேண்டும்.

    தேவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதமே குடும்ப வாழ்க்கை தான். எனவே கவனமாயிருங்கள். வீணான வார்த்தை, கோபம், ஞானமற்ற நடத்தை, பொறாமை, பெருமை, மேட்டிமை, கோள் சொல்லுதல், கசப்பு, வைராக்கியம், பண ஆசை... இதுபோன்ற பிசாசின் செயல்களுக்கு இடம் கொடுத்து உங்கள் குடும்ப வாழ்வு பாதிக்க சாத்தானுக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.

    ஆவிக்குரிய வாழ்வில்...

    ‘பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்’. யோவான் 8:34

    ஆவிக்குரிய வாழ்வில் பரிசுத்தமாய் வாழ விடாதபடி தடுப்பதே பிசாசின் தலையாய நோக்கம். தேவனுக்கும் நமக்கும் பிரிவினையை உண்டாக்கி தேவனோடு உள்ள உறவை எப்படியாகிலும் பிரிக்கப்பார்ப்பான். ஜெபிக்க விடாதபடி, வேதத்தை வாசிக்க விடாதபடி சோர்வுகளையும், உலகக் கவலைகளையும் கொண்டு வரப்பார்ப்பான். அப்பொழுதே புரிந்து கொள்ளுங்கள் பிசாசின் தந்திரங்களை. உடனே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, விழித்திருந்து ஜெபம் பண்ணி அவனை எதிர்த்து நில்லுங்கள். (I பேதுரு 5:8,9) அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

    நம் தேவன் பரலோக வாழ்வுக்கென்று நம்மைத் தேர்ந்தெடுத்திருக்க, நாம் ஏன் நித்திய நரகத்தை சுதந்தரிக்க வேண்டும்? எனவே ஒருநாளும் பிசாசு நம்மை வஞ்சிக்க இடம் கொடாதிருங்கள். உபவாசமிருந்து, ஜெபம் பண்ணுங்கள். சத்துருவின் கிரியைகள் அழிக்கப்படுவது நிச்சயம்.

    ஊழியப்பாதையில்...

    ஒரு காலத்தில் தேவனுக்காக வல்லமையாகப் பிரகாசித்த அநேக தேவமனிதர்களை சாத்தான் இன்று வஞ்சித்து, சோர்வையும், பெலவீனத்தையும் கொண்டுவந்து, உலக ஆசை, செல்வம் இவற்றால் பரிசுத்தத்தைக் கெடுத்து தேவனுக்காக எழும்பவிடாதபடி முடக்கி வைத்திருக்கிறான். ஆகவே ஊழியம் செய்கிற தேவபிள்ளைகளே, எந்த விதத்திலாவது சாத்தான் நுழையாதபடி ஜெபத்தினாலும், அபிஷேகத்தினாலும் நிரம்பியிருங்கள். தேவனுக்காக வைராக்கியத்தோடு எழும்புங்கள். சாத்தான் நம்மை மேற்கொள்ளவே முடியாது.

    எனவே தூக்கம், கர்த்தருடைய ஊழியத்தில் அசதி, வீண் பேச்சு, மற்ற ஊழியர்களோடு ஒப்பிடுவது, காணிக்கையே குறிக்கோள், சோர்வு, பெலவீனம், குடும்பப் பிரச்சினை, இச்சை, பொருளாசை... போன்ற சாத்தானின் ஆயுதங்களை அடையாளம் கண்டுபிடித்து அவற்றை மேற்கொள்ள தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்.

    ‘நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்’. எபே.6:11

    வானத்திலிருந்து அக்னியையும் மழையையும் இறக்கி, வைராக்கியமாய் ஆண்டவருக்காக ஊழியம் செய்த எலியாவையே யேசபேலின் ஆவி சோர்வுக்குள்ளாக்கவில்லையா? அவரை ஆண்டவர் தட்டி எழுப்பி, அவர் செய்து முடிக்க வேண்டிய ஊழியத்தை அவரை வைத்தே செய்து முடித்து அக்னி ரதம் மூலம் மகிமையான முடிவை கொடுத்தாரல்லவா?

    உங்கள் ஊழியத்திற்கும் விரோதமாய் எழும்புகிற எல்லா ஆவிகளையும், சத்துருவின் கிரியைகளையும் முறியடித்து ஜெயத்தோடு ஓட ஆண்டவர் நிச்சயம் கிருபை பாராட்டுவார்.

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54
    ×