search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    நண்பர்களை இழந்துவிடுகிறோம். பதவிகளையும், பொருளையும் கூட இழந்து விடுகிறோம். எல்லோருக்கும் “தான்“ என்ற உணர்வு தலைக்குமேல் இருப்பதால் தலை கனத்துப்போகிறது.
    சில பல நேரங்களில் நாம் நம்மையே முன்னிலைப்படுத்திப்பேசுவதால் உறவை இழந்துவிடுகிறோம்.

    நண்பர்களை இழந்துவிடுகிறோம். பதவிகளையும், பொருளையும் கூட இழந்து விடுகிறோம். எல்லோருக்கும் “தான்“ என்ற உணர்வு தலைக்குமேல் இருப்பதால் தலை கனத்துப்போகிறது. நிலை தடுமாறுகிறது. நாம் பங்குபெறும் உரையாடல்களிலும்கூட விட்டுக்கொடுத்துப் பேசமாட்டோம். இத்தகைய மனப்பாங்கு நமக்கு வெற்றியைத் தருவதாக இல்லை. பெரும்பாலும் தோல்வியைத்தான் தழுவுகிறோம்.

    “என்னைப் பின்செல்பவன் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் ( மாற்கு 8:34)“ என்றார் ஏசு. முதலில் தன்னை மறுப்பவர்கள்தான் தலைமைப் பொறுப்புக்கும் தகுதியானவர்கள். தம்மைப் மறுப்பவர்கள்தான் கடவுளுக்கும் ஏற்றவர்கள்.

    இந்தப் பணிவு என்ற பண்பு இல்லாமல் போனதால்தான் ஆதியிலே ஆதாம் ஏவாள் சிங்கார வனத்தை இழந்தனர். பழைய ஏற்பாட்டில் சவுல் மன்னன் தன் அரசபதவியை இழந்தான். தாவீதின் மகன் அப்சலோம் தன் தந்தையை இழந்தான். இவ்வாறு தாழ்ச்சி இல்லாதவர்கள் பலவற்றை இழக்க நேரிடும். உறவுகளை, நண்பர்களை, பதவிகளை, பொருட்களை இழக்கநேரிடும்.

    ஏசு பலமுறை சொல்லியிருக்கிறார். தாழ்த்தப்படுபவன் உயர்த்தப் பெறுவான் என்று. தாழ்ச்சி என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல. மாறாக அது வீரத்தின் அடையாளம் ஏசுபிரான் பாடுகளின் மத்தியிலும் நிலைத்தடுமாறாமல் நெஞ்சுரத்தோடுதான் சிலுவை சுமந்தார். ஏசு கடவுளுக்கு பணிந்து வாழ்ந்தார். நாமும் தாழ்ச்சியுடன் வாழ்கின்றபோது கடவுள் நம்மை உயர்த்தவே செய்வார்.

    -அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு. 
    தேவன் அருளுகிற சமாதானத்தை அனுதினமும் பெற்றுக் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள். நிச்சயமாய் கர்த்தருடைய அளவற்ற சமாதானத்தைக் காண்பீர்கள்.
    தேவன் அருளுகிற ஆசீர்வாதங்களில் மிக மிக முக்கியமானது சமாதானம் ஆகும். இந்த சமாதானத்தைத் தேடி இன்று கோடிக்கணக்கான மக்கள் பல வழிகளை நாடுகிறார்கள். ஆனால் உண்மையான, நிரந்தரமான சமாதானத்தை அருளுகிறவர் நம் அருமை ஆண்டவராகிய இயேசு மட்டும் தான்.

    இந்த மெய்யான சமாதானத்தை பெறுவதற்கான ஆலோசனையை ஜெபத்தோடு வாசித்துப் பெற்றுக்கொள்ளுங்கள்.

    மீகா 5:5 சொல்லுகிறது, ‘கர்த்தர் சமாதான காரணர்’. மேலும் ஏசாயா 53:5 சொல்லுகிறது, ‘சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது’ என.

    எல்லாவற்றுக்கும் மேலாக ‘என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக’ என யோவான் 14:27 -ல் வாசிக்கிறோம்.

    எனவே சமாதானத்தை அருளுகிற நம் அருமை ஆண்டவரை விசுவாசத்தோடு நோக்கிப் பாருங்கள்.

    கூப்பிடுங்கள்

    ‘நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்கு என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்’. (லூக்கா 24:29)

    அன்றைக்கு எம்மாவூருக்குப் போன சீடர்கள் இயேசுவை வருந்திக் கூப்பிட்டபோது அவர்கள் வீட்டில் தங்கும்படி இயேசு உள்ளே போனார். அப்போது அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அவர்களுக்குக் கொடுக்கையில் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு இயேசுவை அறிந்தார்கள் என லூக்கா 24:29-31 வரையுள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

    அன்பானவர்களே, ‘அவரை நோக்கிக் கூப்பிடுதல்’ என்பது ஜெபத்தைக் குறிக்கிறது. உங்கள் வீட்டில் ஒரு சிலராய் இருந்தாலும் நீங்கள் கூடி தேவனை நோக்கிப் பாருங்கள். மத்தேயு 18:19,20-ன் படி ‘அவர் உங்கள் நடுவில் வருவார், ஆச்சரியமான சமாதானத்தைக் காண்பீர்கள்’. ஆகவே உங்கள் வீட்டை ஜெபத்தினால் கட்டி எழுப்புங்கள்.

    சத்தத்திற்குக் கீழ்ப்படியுங்கள்

    ‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்’. (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)

    அருமை ஆண்டவர் உங்கள் இதயக்கதவைத் தட்டும்போது அவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்து உங்கள் இருதயத்தில் அவருக்கு இடங்கொடுங்கள். அப்போது அவர் உங்களுக்குள்ளே பிரவேசிப்பார்.

    அன்றைக்கு மரியாள் தேவ சத்தத்திற்கு செவி கொடுத்து தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைப் பெற்றாள். அவள் சகோதரியாகிய மார்த்தாளும் அதே வீட்டுக்குள்ளே இருந்தாலும் சமாதானமின்றி தவித்தாள். காரணம், ஆண்டவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்காத காரியம் தான்.

    இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் தேவ சத்தத்திற்கு செவி கொடுக்க உங்களை அர்ப்பணியுங்கள். நிச்சயம் உங்கள் இருதயம் சமாதானத்தினால் நிரம்பும்.

    தேவனோடு ஐக்கியம்

    ‘நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும், அதினால் உமக்கு நன்மை வரும்’. (யோபு 22:2)

    தேவனுடைய அளவற்ற சமாதானத்தைப் பெற கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்தை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும். அந்த ஐக்கியம் தான் சமாதானத்திற்கு மூலகாரணம் ஆகும். தேவனோடுள்ள ஐக்கியம் பெலவீனப்படாதபடி உங்கள் ஆவியை மிகுந்த கவனமாய் காத்துக்கொள்ளுங்கள். முடிந்த அளவுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் நிரம்பி அடிக்கடி ஜெபம் பண்ணுங்கள்.

    ‘எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது’. (I யோவான் 1:3)

    ஆகவே, தேவன் அருளுகிற சமாதானத்தை அனுதினமும் பெற்றுக் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள். நிச்சயமாய் கர்த்தருடைய அளவற்ற சமாதானத்தைக் காண்பீர்கள்.

    ‘உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர், உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்’. (யோபு 5:24)

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

    இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்,

    சென்னை-54.
    ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவரின் வழிகாட்டுதலும் உற்சாகப்படுத்துதலும் உரமாக அமைகின்றன. ஒருவரின் வளர்ச்சியைக்கண்டு சாதாரணமாக நாம் மகிழவேண்டும். அதைவிட்டு நாம் பொறாமைப்படுகிறோம். சஞ்சலப்படுகிறோம்.
    ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவரின் வழிகாட்டுதலும் உற்சாகப்படுத்துதலும் உரமாக அமைகின்றன. இதைப்போல ஒருவரின் வீழ்ச்சிக்கும் மற்றொருவரின் வழிமறைத்தலும் பொறாமைகுணமும் விஷமாக அமைகின்றன. ஒருவரின் வளர்ச்சியைக்கண்டு சாதாரணமாக நாம் மகிழவேண்டும். அதைவிட்டு நாம் பொறாமைப்படுகிறோம். சஞ்சலப்படுகிறோம்.

    கவலைப் படுகிறோம். இது யாருடைய தூண்டுதல் என்றால் சாத்தானின் தூண்டுதல்தான். சாத்தான் மனிதனின் வீழ்ச்சியில் மகிழ்ச்சியடைகிறான். பொறாமைக்குணம் படைத்தவர்கள் பிறரின் வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்க இயலாமல் அவர்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். இந்த பொறாமை உணர்வு தான் ஏசுவின் சிலுவைச்சாவுக்கு காரணமாக இருந்தது. ஏசுவின் வளர்ச்சியைக் கண்டு அவருடைய பணியின் வேகத்தைக் கண்டு அவருடைய எதிரிகள் பொறாமைப்பட்டனர். “அவர்கள் பொறாமையால்தான் ஏசுவைத் தன்னிடம் ஒப்புவித்தார்கள் என்று ஆளுநன் பிலாத்துக்கு தெரியும் (மத் 27:18)”

    பிறந்த பாலன் ஏசு எங்கே தனக்கு எதிராக ஒரு அரசராக உருவெடுத்துவிடுவாரோ என்று ஏரோது மன்னன் பொறாமைப்பட்டான். பழைய ஏற்பாட்டில் காயின் பொறாமையால் தன் தம்பி ஆபேலைக் கொன்றான். உலக வரலாற்றில் நடந்த முதல் கொலை பொறாமையால்தான் என்று திருவிவிலியம் பதிவு செய்திருக்கிறது. யோசேப்பை அவருடைய சகோதரர்கள் பொறாமையால் துன்பப்படுத்தி எகிப்து வியாபாரிகளுக்கு விற்று விட்டனர்.

    இப்படி பொறாமை உலக வரலாற்றில் பல உயிர்களை எடுத்திருக்கிறது. பல பேரரசுகளை வீழ்த்தியிருக்கிறது. நம்மிடம் இந்த குணம் பதுங்கி இருக்கிறதா? பொறாமையை விரட்ட வேண்டும் என்றால் நமக்கு பரந்த மனப்பான்மை வேண்டும். பிறரின் நலனிலும் வளர்ச்சியிலும் மகிழ்ச்சியடைபவர்களாக இருக்கவேண்டும். இதனால் தான் ஏசுபிரான் சொன்னார். பிறருக்காக செபியுங்கள் என்று அதுவும் பகைவர்களுக்காகவும் மன்றாடுங்கள் என்றார். அன்பால்தான் பகையை அழிக்க முடியும். தீயதை நல்லதால்தான் வெல்லமுடியும் அன்பு செய்வோமா?

    - அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு 
    இயேசுவின் உயிர்ப்பில் உறுதிகொண்ட நம் விசுவாச பயணம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இறைவனை பற்றிய புரிதல் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
    கடவுள், அரவணைப்பவராக, இரக்கமே வடிவானவராக உள்ளார். இதனை நம்பி பிறரிடத்திலும் இறைவனின் இரக்கத்தை பதிவு செய்து வாழும் மக்களே இயேசுவின் தாகத்தை தணித்த மக்கள். இயேசு இந்த உலகத்திற்கு வந்தது நல்லவர்களை மீட்பதற்காக அல்ல. மாறாக, பாவிகளை அன்பு செய்து மீட்பதற்காகவே வந்தார்.

    சமாரிய பெண்ணுடனான உரையாடல் வழியாக தான் யூதர்களை மட்டுமல்ல, உலகத்தவர் அனைவரையும் அன்பு செய்யும் ஒப்பற்ற இறைவன் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, காணாமல் போன ஆட்டினை தேடியலைந்து கண்டு மகிழும் ஆயனாக இறைவன் தன்னை வெளிப்படுத்துகின்றார். (மத்தேயு 18:12-13) ஆம், இறைவன் பாவிகளை மட்டுமல்ல, பாவத்தையே வெறுப்பவராக உள்ளார்.

    இயேசு தன் மந்தையை, அரவணைப்பை விட்டு தவிக்கும் ஆட்டினை தேடியலைந்து மீட்டெடுத்தார். அவ்வாறு மீட்டெடுத்த ஆட்டினை தண்டிக்காமல் அதனை தன் தோள் மேல் போட்டுக்கொண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். பிறரையும் தன் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள அழைத்தார். ஆம். ஒரு பாவி மனம் திரும்புதலை குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். (லூக் 15:7)

    இந்த புரிதல் இன்று நேற்று எழுந்தது இல்லை. மாறாக இறைவனின் அழைப்பிற்கு செவி சாய்த்து தன் ஊர், உறவை விட்டு, நிச்சயமற்ற நிலையில் அழைத்தவரின் மீது நம்பிக்கை கொண்டு அன்று தொடங்கிய ஆபிரகாமின் பயணத்தில் எழுந்தது. இயேசுவின் உயிர்ப்பில் உறுதிகொண்ட நம் விசுவாச பயணம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இறைவனை பற்றிய புரிதல் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

    நம் வானக தந்தையாக, இரக்கத்தின் தேவனாக, நண்பனுக்காக உயிர் தரும் நண்பனாக நம்மிடையே அறிமுகம் செய்து, அந்த இறைவனின் மகனாக தந்தையின் இரக்கத்தை எடுத்து கூறிய தன்னையே கையளித்த இறைவன்தான் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஆம், வானக தந்தையின் இரக்கத்தின் முகமாக நம்மோடு வாழ்ந்தவர் தான் இயேசு. அவர், இறை தந்தையின் இரக்கத்தை வாழ்ந்து காண்பித்தார். இன்று நம்மையும் இறை இரக்கத்தின் சாட்சியாக வாழ அழைக்கின்றார். இரக்கத்தின் திருமுகமான இயேசுவை போன்று பாவிகளை அல்ல, பாவத்தை வெறுத்து பிறரை ஏற்று அன்பு செய்து வாழ்வோம்.

    அருட்சகோதரர். செபஸ்டின் அருண் சிமியோன், சலேசியன் சபை, சவேரியார் பாளையம் பங்கு. 
    மத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. யூதர்கள் அல்லாத பிற இன மக்கள் வாழும் பகுதியில் நடந்த இந்த புதுமை நமக்கு சில படிப்பினைகளைத் தருகிறது.
    மத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. கனானேயப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார்.

    ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர்.

    அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

    ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார்.

    அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார்.

    உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.

    இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

    இந்த நிகழ்வு யூதர்கள் அல்லாத பிற இன மக்கள் வாழும் பகுதியில் நடந்த இந்த புதுமை நமக்கு சில படிப்பினைகளைத் தருகிறது.

    1. கனானேயப் பெண்ணின் அணுகுமுறை, எப்படி செபிக்க வேண்டும் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறது. அவள் முதலில் தனது சமூக, மத, கலாச்சாரக் கட்டமைப்புகளைத் தாண்டி இயேசுவின் முன்னால் வருகிறாள். அத்தகைய அணுகுமுறை நம்மிடமும் இருக்க வேண்டும்.

    2. இயேசுவின் மவுனம் நமது விசுவாசத்தைச் சோதிக்கும் ஆயுதம். அத்தகைய சூழல்களில் உடைந்து விடாத விசுவாசம் கொண்டிருக்க வேண்டியது அத்தியாவசியம். கனாேனயப் பெண்ணின் கதறலை, இயேசுவின் மவுனம், மவுனமாய் எதிர்கொள்கிறது. நமது விண்ணப்பங்களுக்கு பதிலாக வருகின்ற இறைவனின் மவுனம் நமது விசுவாசத்தை வலுப்படுத்த வேண்டும்.

    3. இயேசுவின் சீடர்கள் கனானேயப் பெண்ணுக்காக இயேசுவிடம் பரிந்து பேசவில்லை. ஆனாலும் அந்தப் பெண்ணின் பார்வை இயேசுவின் மீதே இருந்தது, சீடர்களின் மீது அல்ல. நாம் இயேசுவின் மீது வைத்த பார்வையை விலக்காமல் இருக்கிறோமா?

    4. கனானேயப் பெண்ணின் தொடர் வேண்டுதலை, இயேசுவின் பதில் தடுத்து நிறுத்தியது. அவள் இயேசுவின் முன்னால் வந்து பணிகிறாள். பின்னால் இருந்தபோது எழுந்த கதறல் ஒலி, இப்போது விண்ணப்பமாய் உருமாறிவிட்டது. இயேசுவை நெருங்க நெருங்க, நமது கதறல் மெல்லிய விண்ணப்பமாய், பணிவான வேண்டுதலாய் மாறிவிடுகிறது.

    5. “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” எனும் இயேசுவின் பதில் அந்தக் காலத்தில் பிரபலமாய் இருந்த ஒரு பழமொழி. இஸ்ரயேல் மக்களுக்காக வந்த மீட்பை பிற இனத்தாருக்குக் கொடுக்கும் காலம் வரவில்லை என்கிறார் இயேசு. கனானேயப் பெண்ணோ தாழ்மை கொண்டாள். இயேசுவை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் அந்தத் தாழ்மை இருக்க வேண்டியது அவசியம்.

    6. “தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என கனானேயப் பெண் இயேசுவிடம் சொல்கிறாள். தன்னை அடிமையாக, நாய்க்குட்டியாக பாவித்துக் கொண்ட அந்த பெண் உரிமையாளரின் கனிவை எதிர்பார்த்து நிற்கிறாள். நாம் அந்த மனநிலையோடு இறைவனை நாடுகிறோமா?

    7. “தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” எனும் பதிலின் வழியாக அந்தப் பெண் இயேசுவிடம் தனக்கு பதில் உடனே வேண்டும் என்கிறாள். “பிள்ளைகள் தின்ற பின்பு மிஞ்சுவது அல்ல, பிள்ளைகள் தின்னும் போதே சிந்துவது” என அவள் கேட்கிறாள்.

    8. அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும், என்கிறார் இயேசு. நாய்க்குட்டியாய் உருவகிக்கப்பட்டவள் விசுவாசத்தின் வலிமையால் ‘அம்மா’ என அழைக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்படுகிறாள்.

    9. ஒரு தாயின் பிரார்த்தனை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை கனாேனயப் பெண்ணின் பிரார்த்தனை நமக்கு சொல்லித் தருகிறது. மூன்று குணாதிசயங்கள் செபத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். பணிவு, விடாமுயற்சி மற்றும் விசுவாசம்.

    10. இந்த புதுமையில் இயேசுவே வானிலிருந்து இறங்கி வந்த உணவாகவும் காட்சியளிக்கிறார். இஸ்ரயேல் மக்களுக்காக வந்த மீட்பர், பிற இனத்தாரான நமக்கு மீட்பராகவும் மாறிய நிகழ்ச்சியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

    11. ஓய்வு தேடிச் சென்ற இயேசு ஓய்வை விட்டு விட்டு மனித நேயப் பணியைச் செய்கிறார். ஓய்வு எனும் தேவையை விட, பணி செய்தல் எனும் கடமை நம்மிடமும் இருக்க வேண்டும்.

    இந்த சிந்தனைகளை மனதில் கொண்டால், நமது விசுவாசமும் ஆழமாகும்.

    சேவியர், சென்னை.
    நம்முடைய துன்பங்களும் தோல்விகளும் கடவுளின் விருப்பம் என்று உணர்ந்து அவைகளை ஏற்றுக்கொண்டு வாழும்போது நாமும் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோம்.
    ஒரு விவசாயி பாடுபடுகிறார் என்றால் அவர் கடினப்பட்டு உழைக்கிறார் என்பது பொருள். ஒரு வீரன் பாடுபடுகிறான் என்றால் அவன் கடின பயிற்சிகளை மேற்கொள்கிறான் என்பது புலனாகிறது. இதேபோன்று ஒவ்வொரு தொழிலிலும் பாடுகள் உண்டு. பாடுகள் என்றால் இங்கே துன்பங்கள் அடங்கிய வெற்றி பாதைகள் என்பதை புரிந்துகொள்கிறோம்.

    ஏசு தன் பணியின் சூழலில் பல பாடுகளைபட்டார். பல அவமானங்களை மேற்கொண்டார். ஏசுவின் பாடுகள் அவருடைய பணிகளின் நிறைவாகவும், மீட்பின் வழிகளாகவும் அமைந்தன. கடவுளின் திட்டத்தை நிறைவேற்றவே அவர் பாடுகள் பட்டார். “தந்தை எனக்கு அளித்த துன்பக்கிண்ணத்தில் இருந்து நான் குடிக்காமல் இருப்பேனா? (யோவான் 18:11)” என்றார்.

    நாம் எவ்வாறு நம்முடைய துன்ப நேரங்களில் செயல்படுகிறோம்? துன்பங்களை கண்டு துவண்டு போகிறோமா? தோல்விகளைக் கண்டு ஓடி ஒளிந்து விடுகிறோமா? வறுமையையும், வியாதிகளையும் கண்டு வாடிவிடுகிறோமா? இந்த துன்ப நேரத்தில் கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மை கைவிடமாட்டார். ஏசுவின் பாடுகளும் மரணமும் பரமத்தந்தையின் விருப்பமாகவும் திட்டமாகவும் மீட்பின் வரலாற்றில் இடம் பெறுகின்றன.

    நம்முடைய துன்பங்களும் தோல்விகளும் கடவுளின் விருப்பம் என்று உணர்ந்து அவைகளை ஏற்றுக்கொண்டு வாழும்போது நாமும் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோம். துன்பங்களின் நேரங்களில் கடவுளைவிட்டு வெகுதூரம் சென்று விடாமல் அவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு பின்பற்றுபவர்களாக வாழ்வோம்.

    -அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு 
    நமது வாழ்க்கையில், நம்பிக்கையும் நடத்தையும் மிகவும் அவசியம். இறைவன் தருகின்ற பாக்கியத்தை இழக்காமல் இருக்க வேண்டுமெனில் இவை இரண்டும் நிச்சயம் வேண்டும்.
    உலகின் முதல் மனிதன் ஆதாமும், அவர் மனைவி ஏவாளும் இறை வனின் ஏதேன் தோட்டத்தில் இன்பமாக வாழ்கின்றனர். சாத்தானின் சூழ்ச்சியால் அவர்கள் பாவத்தின் வலையில் விழுந்து விடுகின்றனர்.

    ஏதேன் தோட்டம் அது ஒரு இன்ப வனம். ஆனால் இழப்புகளைச் சந்தித்த இடமும் அது தான். நீர்க்கால்களின் ஓரமாய் இருந்த மனித வாழ்வு, வறண்ட நிலத்தில் விடப்பட்ட அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட இடமும் ஏதேன் தான்.

    தேவ பிரசன்னத்தில் திளைத்திருந்த வாழ்வும் ஏதேனில் தான் நிகழ்ந்தது. துண்டு துணியோடு துண்டுபட்ட வாழ்வும் ஏதேனில் தான் நிகழ்ந்தது.

    ஆளுமையை கொடுத்த இடமும் ஏதேன் தான். பாவத்தினாலே ஆளுகையை இழந்த இடமும் ஏதேன் தான்.

    நாளாகமம் நூல் விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டு நூல்களில் மிக முக்கியமான நூல். ஏதேனுக்கும், நாளாகமத்துக்கும் என்ன தொடர்பு? ஏதேனில் இழந்த நம்பிக்கை, எருசலேமில் கட்டி எழுப்பப்படுகிறது. எருசலேம் தேவாலயம் எதிர்கால நம்பிக்கையின் அடையாளமாக உருவாகிறது.

    இந்த நூல் ஆதாமில் தொடங்கிய பயணத்தை மேசியாவை நோக்கி வழி நடத்துகிறது. எபிரேய வேதாகமத்தில் நாளாகமம் ஒன்று, இரண்டு என இரண்டு பாகங்களும் சேர்ந்து ஒரே நூலாகத் தான் இருக்கிறது. பழைய ஏற்பாட்டின் கடைசி நூலும் அது தான்.

    இதை ஒரு குட்டி பழைய ஏற்பாடு என்று சொல்வார்கள். காரணம், பழைய ஏற்பாட்டின் சுருக்கமும், புதிய ஏற்பாட்டின் ஒரு சின்ன அறிமுகமும் இதில் உண்டு.

    பாக்கியத்தை இழந்தவராக நாம் தாவீதைப் பார்க்கிறோம். உலகத்தில் லட்சியத்தோடு வாழ்பவருக்கு செய்து முடிக்க ஏராளமான காரியங்கள் உண்டு. லட்சியம் இல்லாமல் வாழ்பவர்களுக்கு பொழுது போகவும் வழியில்லை.

    தாவீது தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்டும் தனது லட்சியத்தை முழுமையாய் செய்து முடிக்க முடியவில்லை. அவரால் கடவுளுக்கான ஆலயத்தைக் கட்டி முடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அவரது கரங்கள் சிந்திய ரத்தம். ரத்தம் சிந்திய கைகளினால் இரக்கத்தின் அரண்மனையைக் கட்ட இறைவன் அனுமதிக்கவில்லை.

    ‘எனக்கான ஆலயத்தை உன் மகன் கட்டுவான்’ என கடவுள் தாவீதிடம் சொன்னார். தாவீது அதைப் பற்றி பொறாமைப்படவில்லை. ஆலயம் கட்டத் தேவையான அனைத்தையும் சேர்த்து வைத்தார். ஒரு லட்சம் தாலந்து பொன் அவர் சேகரித்தார்.

    அதாவது, சுமார் 37 லட்சத்து 50 ஆயிரம் கிலோ பொன், 3 கோடியே 75 லட்சம் கிலோ வெள்ளி, கணக்கில்லாத அளவுக்கு வெண்கலம், மரம், கல், இரும்பு போன்றவை.

    எல்லாவற்றுக்கும் மேலாக, கர்த்தரால் வரையப்பட்ட மாதிரி வரைபடம் என அனைத்தையும் சேகரித்து மகனிடம் கொடுத்தார் தந்தை.

    கட்டிடம் முழுவதும் சாலமோனின் ஞானத்தின் அழகு தெரியும். தாவீதின் ஆசையின் ஆழமும் தெரியும்.

    ஆலயத்தில் சாலமோனின் மூளையைக் கண்டு வியந்தவர்கள், தாவீதின் இதயத்தைக் காணாமல் இருக்க முடியாது. எப்படிப்பட்ட பெரிய காரியங் களுக்கெல்லாம் சொந்தக்காரர் தாவீது. ஆனால் அவரால் அதைக் கட்ட முடியவில்லை.

    ஆலயம் என்பது வாழ்வோடு தொடர்புடையது. நாமே கடவுளின் ஆலயம். அதில் தூய்மை அவசியம். பரிசுத்தம் அவசியம். எருசலேம் தேவாலயத்தைக் கட்ட பரிசுத்தம் தேவையென கடவுள் விரும்பினார்.

    அதே போல, கடவுள் வாசம் செய்யும் இந்த உடலாகிய ஆலயமும் மிகவும் பரிசுத்தமானது. தூய்மையாய் இருக்க வேண்டியது.

    எருசலேம் தேவாலயத்தைக் கட்டியெழுப்பும் பாக்கியத்தை தாவீது இழந்தது போல, கடவுள் வாசம் செய்யும் இந்த உடலாகிய ஆலயத்தை கட்டி யெழுப்பும் பாக்கியத்தை நாம் இழந்து போகக் கூடாது.

    அதற்கு இரண்டு விஷயங்கள் முக்கிய தேவை. ஒன்று விசுவாசம், நம்பிக்கை. இரண்டாவது நல்ல நடத்தை. ‘செயலில்லாத விசுவாசம் செத்த விசுவாசம், விசுவாசம் இல்லாத செயல் வீண்’ என விவிலியம் சொல்கிறது.

    நமது வாழ்க்கையில், நம்பிக்கையும் நடத்தையும் மிகவும் அவசியம். இறைவன் தருகின்ற பாக்கியத்தை இழக்காமல் இருக்க வேண்டுமெனில் இவை இரண்டும் நிச்சயம் வேண்டும்.

    அவர் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எவனும், அவர் தூயவராய் இருப்பது போல தம்மையே தூயவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் பாக்கியத்தை இழக்காமல் இருக்க முடியும். சுத்த ரத்தம் மட்டுமே நமக்கு தூய வாழ்க்கையை தர முடியும். தெளிந்த புத்தி, நீதி தேவ பக்தி உள்ளவர்களாய் வாழ முடியும்.

    நாம் அழிகின்ற இந்த உலகிலிருந்து, அழியாத கடவுளின் நாளுக்காகக் காத்திருக்க வேண்டும். அவர் வரும் போது நம் வாழ்வு தூய வாழ்வாக இருக்க வேண்டும் என்பது தான் நமது எண்ணம். அதற்காக பரிசுத்த நடத்தை உள்ளவர்களாய் நாம் இருக்க வேண்டும்.

    நமது வாழ்விலும், நமது உடலாகிய ஆலயத்தைக் கட்டி எழுப்புவோம். இறை விசுவாசமும், நடத்தையும் இருகண்களென பேணுவோம். 
    மனித உறவு இன்றி இறை உறவு சாத்தியமில்லை. இறை உறவின்றி மனித உறவு சாத்தியமில்லை என்பதே விவிலிய கருத்து.
    புதிதாக ஒரு மூங்கில் செடி முளைத்து மண்ணை விட்டு வெளிவர 5 ஆண்டுகள் ஆகும். அந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மூங்கில் செடியானது ஒரு நாளைக்கு 2 அடி வீதம் உயரமாக வளர்ந்து மரமாகும். அதன்பிறகு அந்த மூங்கில் மரமானது தனது உயரத்தை தக்க வைத்து கொள்ள 5 ஆண்டுகள் வரை தனது வேர்களை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும். அதுபோல நாமும் நம்முடைய உறவுகளை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, சமூகத்தில் வியக்க வைக்கும் மனிதர்களாக இருப்போம்.

    கிறிஸ்தவர்களே! நீங்கள் உண்மை கிறிஸ்தவர்களாக மாற வேண்டுமா? அப்படியானால் உங்கள் கருத்துகளில் சிலுவையை அணியாதீர்கள். மாறாக உங்கள் கருத்துகளை சிலுவையில் அணியுங்கள் என்றார் ஓஷோ. சிலுவை என்பது கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலம். கடவுள் ஒருவரே, மனிதர் அனைவருக்கும் சமம்.

    மனித உறவில் தான் இறை உறவு வளர்கிறது என்பதே சிலுவை உணர்த்தும் ஆன்மிக சிந்தனை ஆகும். படுக்கை வசமான மரமும், செங்குத்தான மரமும் இணைகின்ற போது தான் சிலுவை தோற்றம் உருவாகிறது. அது முழுமை அடைகிறது. இதில் செங்குத்தாக இருக்கக்கூடிய மரம், இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவை வலுப்படுத்துகின்றது. படுக்கை வசமான மரம் மனிதர்களோடு நாம் கொண்டுள்ள உறவை குறிக்கிறது. இங்கு இறையுறவும், மனித உறவும் சங்கமிக்கின்ற போது தான் சிலுவை முழுமை அமைகிறது.

    கடவுள் ஒருவரே, வேறு கடவுள் உமக்கு இல்லாமல் போவதாக என்ற கிறிஸ்தவ விசுவாச கூற்றை இங்கு நினைவு கூறுவோம். படுக்கை வசமான மரம் உணர்த்த கூடிய செய்தி மாந்தர் அனைவரும் சமம். பிறப்பாலோ, வாழ்வாலோ யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக்கூடாது. கிறிஸ்துவுக்கு முன் அனைவரும் சமம். மனித உறவு இன்றி இறை உறவு சாத்தியமில்லை. இறை உறவின்றி மனித உறவு சாத்தியமில்லை என்பதே விவிலிய கருத்து. எனவே தவக்காலத்தில் இறை உறவோடு ஒன்றி வாழ்ந்து பயணிப்போம்.

    -சகோதரி.அமலஅன்னை.
    சிலுவையைப்பற்றி தியானிக்கிறதான நம் வாழ்க்கையில் பாடுகளுக்கும், துன்பங்களுக்கும் அப்புறமாக வாழ்க்கையில் நிரந்தரமான நித்திய சந்தோஷத்தை தேவன் தந்து அருள்வாராக.
    சிலுவை, சீடராய் மாறுவதற்குரிய அடையாளம்; தன்னை பின்தொடர்ந்து வந்த திரளான ஜனங்களை பார்த்த ஏசு, தம்முடைய சீடர்களை நோக்கி, ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். (மத்தேயு 16:24) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றாதவன் எனக்கு பாத்திரன் அல்ல. (மத்தேயு 10:38)

    தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்கு பின் செல்லாதவன் எனக்கு சீடனாய் இருக்க மாட்டான். (லூக்கா 14:27) பின்பு அவர் எல்லோரையும் நோக்கி, ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். (லூக்கா 9:23) மேற்கூறிய வேத வார்த்தைகள் எல்லாம் சீடராய் மாறுவதற்கான அடையாளமாக காணப்படுகிறது.

    சிலுவை-கீழ்படிதலின் தாழ்மையின் அடையாளம்; ஏசு கிறிஸ்து பிதாவினுடைய சமூகத்தில் சிலுவையின் மரணபரியந்தம் வரை தாழ்மையும், கீழ்படிதலும் உள்ளவராய் காணப்பட்டார். அவர் மனித ரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம்- அதாவது சிலுவையின் மரண பரியந்தமும், கீழ்படிந்தவராகி தன்னைத்தானே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:8).

    சிலுவை-சாத்தான் மேலுள்ள வெற்றியின் அடையாளம்; நமக்கு எதிராகவும், கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும், இருந்த கையெழுத்தை குலைத்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து சிலுவையின் மேல் ஆணியடித்து துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்து கொண்டு வெளியரங்கமான கோலமாக்கி அவைகளின் மேல் சிலுவையில் வெற்றி சிறந்தார். (கொலோசெயர் 2:14,15) ஆதலால் கல்வாரி சிலுவை ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தான் மேலுள்ள வெற்றியின் அடையாளமாய் காணப்படுகிறது.

    சிலுவை-பொறுமையின் அடையாளம்; ஏசு தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு அவமானத்தை எண்ணாமல் சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.(எபிரெயர் 12:2) சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்து சொன்னதான 7 ஜீவ வார்த்தைகளும் இன்றைக்கும் அனேகருடைய வாழ்வில் ஆறுதலையும், ஆனந்தத்தையும், நித்திய நம்பிக்கையையும், வாழ்க்கையில் மறு ரூபத்தையும் தந்து கொண்டிருக்கிறது.

    அது மட்டுமின்றி ஏசு சிலுவையில் அறையப்படும் போது பின் வரப்போகின்ற சந்தோஷத்தைபற்றி நினைத்ததின் மூலமாக அவமானத்தையும், பாடுகளையும் நினைக்காமல் சிலுவையை பொறுமையாக சகித்தார். சிலுவையைப்பற்றி தியானிக்கிறதான நம் வாழ்க்கையில் பாடுகளுக்கும், துன்பங்களுக்கும் அப்புறமாக வாழ்க்கையில் நிரந்தரமான நித்திய சந்தோஷத்தை தேவன் தந்து அருள்வாராக.

    -பாதிரியார், ஜெய்சன் டி.தாமஸ்.
    நமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார்.
    ஆயுட்காலம் நீடித்திருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது. அதற்கேற்ற வகையில் உடல், சுற்றுச்சூழலை போன்றவற்றை மனிதன் பராமரித்துக் கொண்டிருக்கிறான். இதற்காக பல்வேறு பயிற்சிகள், உணவுப்பழக்க வழக் கங்களை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பழக்கங்கள் மூலம் அதிக வயது வாழ்ந்தவர்களை முன்னுதாரணமாக வைத்துக்கொள்கின்றனர்.

    நீண்ட நாட்கள் வாழ்வதற்கு எடுக்கும் இந்த முயற்சிகள் ஒரு அளவுக்கு பலனை அளித் தாலும், ஆயுள்காலம் என்பது இறைவனின் கையில் உள்ளது என்பதை பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. ஒரு வயதான நோயாளி நீண்டகாலம் வாழ்ந்துகொண்டிருப் பதும், ஒரு இளைஞன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு இறப்பதும், ஆயுள் விஷயத்தில் இறைவனின் செயல்பாட்டை அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றன.

    ஆனால் காரணமில்லாமல் இறைவனால் ஒருவரது ஆயுள்காலம் குறைக்கப்படுவதும், கூட்டப்படுவதும் இல்லை. அந்தக் காரணத்தை உணர்ந்தறியும் ஞானம் இல்லாததால் மனிதன் தனக்கு தோன்றிய அறிவின்படி ஆயுளைப்பற்றிய கருத்தை ஏதோ ஒரு கணிப்பில் கூறுகிறான். இறைவனின் சித்தம் இல்லாமல், எந்தப் பயிற்சியின் மூலமாகவும் ஆயுள்காலத்தை யாருமே நீட்டித்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் நிஜம்.

    ‘மகாஅயோக்கியனாய் இருக்கிறான், நல்ல ஆயுட்காலத்தை அவன் அடைந்திருக்கிறானே’ என்று சிலரைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ‘அயோக் கியனாக மனிதர்களால் கருதப்படுகிறவர்க ளுக்கும் இறைவனின் கருணை உண்டு’ (சங்.25:8).

    அப்படிப்பட்ட நபர்களால் வேறு சிலருக்கு நன்மைகள் கிடைப்பதற்காகவோ அல்லது முன்பு செய்திருந்த பாவங்களுக்கான பிரதிபலனை அவனது பிள்ளைகள் அனுபவிப்பதை பார்ப்பதற்காகவோ அல்லது ஏற்கனவே செய்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவர்த்திகளை செய்வதற்காகவோ அல்லது மனந்திரும்பி இறைப்பாதையை நோக்கி வருவதற்கான வாய்ப்பாகவோ, அவர்களின் ஆயுளை இறைவன் நீட்டிக்கச் செய்திருக்கலாம். காலங்கள்தான் அதை நமக்கு வெளிப்படுத்தும்.

    ஆயுள்காலத்தில் அளவு எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அந்த நாட்களை எப்படி அனுபவித்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பல நல்ல அம்சங்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் நியாயமான முறையில் அவற்றை அனுபவிக்கும் தகுதியை நமக்கு இறைவன் அளித்திருக்கிறாரா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

    அப்படிப்பட்ட தகுதி இல்லை என்றால், ஏன் அதை இழந்துவிட்டோம்? எதனால் அதற்குத் தடை வந்தது? என்பதையும் வேத வசனங்கள் மூலம் ஆராய்வது அவசியம். வறுமை, வியாதி போன்ற தகுதி இழப்புகள் என்பது தனது பாவங்களினால் ஏற்பட்ட தண்டனையா? மூதாதையரின் முன்வினைகளினால் வந்த தடையா? என்பதை அறிய முற்படுவது அவசியம்.

    ஏனென்றால், நாம் மேலும் பாவங்களை செய்யாமல் இருப்பதற்கும், செய்த பாவங்களுக்கான நிவர்த்திகளை செய்து இறைவனின் வழிக்குள் வருவதற்கும் இந்த சுய ஆராய்ச்சிகள் தூண்டுகோலாக இருக்கின்றன. மேலும், பாவங்களினால் வந்த சாபங்களில் இருந்து நீங்குவதோடு, வாரிசுகளின் வாழ்க்கையில் பல்வேறு சாப இடற்பாடுகள் வருவதையும் தவிர்க்க உதவுகின்றன.

    ஆயுள்காலத்தின் அடிப்படை பற்றி வேதம் ஒரு விளக்கத்தை அளிக்கிறது (யோபு 11:13-17). 14-ம் வசனம், ‘உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்’ என்று போதிக்கிறது. ஆயுசு காலங்கள் பட்டப்பகலைப் போல பிரகாசிப்பதற்கு இது காரணமாக உள்ளது என்பதை அந்த வசனம் மூலம் இறைவன் வலியுறுத்துகிறார்.

    ஆயுட்காலம் பிரகாசிக்காமல் போவதற்கு இரண்டு அம்சங்களை அந்த வசனத்தில் இறைவன் சுட்டிக்காட்டுகிறார். முதலாவது, நமது கையினால் செய்யப்படும் அக்கிரமங்கள் அல்லது பாவங்கள் அல்லது குற்றங்கள். இரண்டாவதாக சுட்டிக்காட்டப்படுவது, அப்படிப்பட்ட அக்கிரமங்களால் வீட்டுக்குள் நுழைந்து கொண்ட அநியாயங்கள் அல்லது நியாயத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்பாடுகள் ஆகிய வையே.

    ஒரு குடும்பத்தில் ஒருவர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி நல்ல வாழ்க்கையை அடையாமல் போவது, கொலை, கொள்ளை, விபசாரம் போன்றவை அந்தக் குடும்பத்தில் நடப்பது ஆகியவையெல்லாம், யாருக்கோ எங்கேயோ ஏற்கனவே செய்யப்பட்ட அநியாயங்களின் நுழைவுதானே தவிர வேறல்ல.

    தகுதியுள்ள ஒருவருக்கு உதவி செய்யாமல் போனதினால் அவருக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும், உதவி செய்யாதவன் வீட்டுக்குள் அநியாயங்களாக நுழையும் என்பது நிஜம். பணமிருந்தும் சமாதானமில்லாத குடும்பங்கள் பல உள்ளன. இவர்களெல்லாம் அநியாயத்தை வரவழைத்துக் கொண்டவர்கள்.

    இதுபோன்ற அநியாயங்களில் இருந்து நிவர்த்தி பெறுவது எப்படி? இதற்கு வேதம் மட்டுமே வழிகாட்டியாய் உள்ளது. மூதாதையர் செய்த பாவங்களில் ஒருசிலவற்றை நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். மற்றவர்களின் சொத்துகள், பொருட்கள் எதுவும் மூதாதைகள் மூலம் அநியாயமாய் நம்மிடம் வந்திருந்தால் அதை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம்.

    இதுபற்றி இயேசுவும் நேரடியாகவே போதித்துள்ளார். அவர், ‘நீ பலி பீடத்தினிடத்தில் (ஆலயத்தில்) உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து’ என்று கூறியிருக்கிறார் (மத்.5:23,24).

    நமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார். இல்லாவிட்டால், எல்லாம் இருந்தும் திருப்தியற்றே வாழ்க்கை முடியும்.

    அநியாய பொருட்களை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம். ஆனால் சரீர ரீதியான கள்ள உறவுகளை எப்படி நிவர்த்தி செய்வது? அதுபற்றி இறைவனிடம் மட்டுமல்ல, தனது வாழ்க்கைத் துணையிடமும், கள்ள உறவில் இணைந்தவரின் வாழ்க்கைத் துணையிடமும் மன்னிப்பு கேட்டாக வேண்டும். எனவே அநியாயங்களை செய்து அநியாயங்களுக்கு பலியாக வேண்டாம். 
    தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள்.
    மனிதர்கள் வாழும் குடும்பத்திற்குள் சென்று மனிதனை தேட வேண்டியிருக்கிறது. யார் இரக்கமுள்ள மனிதன்? யார் அன்புள்ளம் கொண்ட மனிதன்? யார் தாழ்ச்சி கொண்ட மனிதன் என தேடி அலைய வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவமே. நீயா, நானா என்ற போட்டியே எல்லா இடங்களிலும் காண கிடக்கின்றது. யார் பெரியவர்? கணவனா, மனைவியா, மாமியா, மருமகளா? என்பன போலவே போட்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த தவக்காலம் இந்த சிந்தனையை உடைத்துக்கூறு போட்டு, உண்மையான மனிதர்களாக நம்மை உருமாற்றட்டும். உண்மையான மனிதர்களிடம் நம்மை அழைத்துச் செல்லட்டும்.

    புகழ்பெற்ற ஓவியன் தன் குடும்பத்தாரோடு திரைப்படத்துக்கு சென்றான். அரங்கில் கூட்டமே இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓவியர் உள்ளே நுழைந்ததும், நான்கு பேரும் கரவொலி எழுப்பினர். கலைஞனுக்கு ஒரே மகிழ்ச்சி. என் பெருமையைப் பார்த்தாயா? என் படைப்புகளை பாராட்டுவதற்கு மக்கள் இருக்கிறார்கள் என பெருமகிழ்ச்சியோடு தன் மனைவியிடம் கூறினார்.

    அப்போது ஒருவர் ஓடிவந்து கை குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கலைஞன் அவரிடம், நீங்கள் என் ரசிகரா? என கேட்டான். உடனே அவர் போங்க சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. இன்னும் 5 பேர் வந்தால் மட்டுமே படம் போடுவோம். இல்லையென்றால் கிடையாது என சொல்லி விட்டார்கள். அந்நேரத்தில் நீங்கள் வந்தீர்கள்? அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன், என்றார்.

    இந்த கலைஞனை போலவே நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவை உகந்தவையல்ல. பிறரிடமிருந்து பாராட்டும், பரிசும் பெற வேண்டும் என்று செய்கின்ற எல்லா செயல்களுக்கும் உடனே கைம்மாறு கிடைத்துவிடும். ஆனால் இறைவனுக்கு உகந்தவற்றைச் செய்யும்போது உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மனநிலையோடு செயலாற்ற வேண்டும். இதையே இன்றைய நாள் சிந்தனையாக இயேசு நமக்கு கற்றளிக்கின்றார்.

    தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், என நாம் வாசிக்கின்றோம். தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள். இவர்கள் எப்போதுமே பிறரை உயர்வாகவே கருதுவர். ஆதலால் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பணிந்த உள்ளமே பரமனுக்கு ஏற்ற உள்ளமாகும். கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.

    -அருட்பணி. குருசு கார்மல், 
    “கடவுளின் அன்புச்செயலை செய்ய எந்த தடை வந்தாலும் அதைத்தாண்டி சென்று பிறரன்பு பணி செய்வேன்” என்கிறார் அன்னை தெரசா.
    தவக்காலம் என்பது மனித-இறை உறவுக்கு நம்மை அழைத்து செல்லும் காலம். இது அருளின் காலம், நம் மனமாற்றத்தின் காலம். நற்செயல்கள் செய்ய நம்மை தூண்டுகிற காலம். இந்த அரிய தவக்காலத்தில் தவம், ஜெபம் போன்ற நற்செயல்களில் தவறாமல் நாம் ஈடுபட வேண்டும்.

    “செத்துப்போன குதிரையை விட நொண்டியான கழுதையே மேல்” என்று இத்தாலி நாட்டில் ஒரு பழமொழி உண்டு. உடலின் ஊனம் என்பது பிறரன்பு பணிக்கு எப்போதும் தடையில்லை. இதனை நாம் உணர்ந்து சிந்தித்து செயல்பட இந்த தவக்காலம் நம்மை தூண்டுகிறது. கடவுளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும், கடவுள் நம்மில் செயலாற்றுகிறார் என்ற நம்பிக்கை உண்டு.

    உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே (யாக்கோபு 2:26) கடவுள் எப்போதும் நம்மில் செயலாற்றுகிறார். “கடவுளின் அன்புச்செயலை செய்ய எந்த தடை வந்தாலும் அதைத்தாண்டி சென்று பிறரன்பு பணி செய்வேன்” என்கிறார் அன்னை தெரசா.

    சட்டங்கள் மனிதருக்காக; மனிதர் சட்ட திட்டங்களுக்காக அல்ல. ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அல்ல. ஆயினும் மனிதன் எப்படியும் வாழலாம் என்றல்ல; மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்டவன் ஆகிறான். அந்நியதியின் படி வாழ்கின்றவர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.

    எனவே கடவுள் நம்மில் செயலாற்றுகிறார் என்பதை நம்பும் அனைவரும் கடவுளின் அன்பு செயலை செய்ய வேண்டும். எப்படி? உனக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூர்வாயாக! உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள் (மத் 5:43) என்ற இயேசுவின் பொன் மொழிகளை கடைபிடித்து வாழ வேண்டும். அதன் மூலம் கடவுள் நம்மில் எப்போதும் செயலாற்றுவார்.

    இந்த நம்பிக்கையுடனும், துணிவுடனும் பயணித்திட முயற்சிப்போம். இந்த தவக்கால வாழ்நாளில் சாதனையாளர்கள் ஆவோம்.

    அருட்திரு. எஸ்.செந்தூரியன், வக்கம்பட்டி. 
    ×