search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    இறைவனின் பாடுகளையும், அது தருகின்ற மகிமையையும், இறைவனின் கிருபையையும் இதயத்தில் ஏந்துவோம். நமது வாழ்க்கையை தூயதாய் மாற்றுவோம்.
    விவிலியத்திலுள்ள நூல்களில் முக்கியமான ஒரு நூல் பேதுருவின் நூல். பேதுரு, ‘தன்னை இயேசு கிறிஸ்துவின் திருத்தூதன்’ என அடையாளப்படுத்துகிறார் (1 பேதுரு 1:1).

    அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதை திருத்தூதர் பணிகள் 4-ம் அதிகாரம் நமக்குச் சொல்கிறது. அதாவது முறையான கல்வியை அவர் பெற்றிருக்கவில்லை.

    முறையான கல்வியற்ற ஒருவராய் இருந்தாலும் ஆவியானவர் நினைத்தால் அவரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அறிவும், ஞானமும் உள்ளவராக மாற்ற முடியும் என்பதை பேதுருவின் வாழ்க்கை நமக்கு வெளிக்காட்டுகிறது.

    “கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்” என்கிறது விவிலியம் (1 கொரி 1:27).

    சீமோனாக இருந்த அந்த சீடரை ‘பேதுரு’ என இயேசு மாற்றுகிறார். இந்த இரண்டு பெயர்களும் கிறிஸ்தவனின் இரண்டு தன்மைகளைக் குறிக்கின்றன. பழைய மனிதன் சீமோன், அது தோல்வியடைகிற இயல்புடைய ஒன்று. புதிய சுபாவம் பேதுரு. அது வெற்றி தரக்கூடியது. அது ஆண்டவரால் கொடுக்கப்பட்ட பெயர்.

    சீமோன் ஒரு சாதாரண மனிதனாக, கடவுளால் களிமண்ணாக உருவானவன். அவனை கடவுள் ஒரு பாறையாக மாற்றுகிறார். இது சீமோன் பேதுருவின் வாழ்க்கையில் நடைபெறுகின்ற மாற்றம். இது பேதுருவின் வாழ்வில் மட்டும் நிகழ்கின்ற நிகழ்வு அல்ல. நம் எல்லாருடைய வாழ்விலும் நிகழ்கின்ற செயல். ஊனியல்பின்படி மனிதனாக பிறக்கின்ற ஒருவரை இறைவன் எடுத்து மிக உயரிய பாத்திரமாக மாற்றுகிறார்.

    பவுலும் பேதுருவும் அந்தக்காலத்தில் முக்கியமான திருத்தூதர்களாக இருந்தவர்கள். பவுல் பிற இன மக்களிடையே நற்செய்தி அறிவிக்க இறைவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பேதுருவோ யூத மக்களிடையே நற்செய்தி அறிவிக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சகோதரர்களை ஸ்திரப்படுத்துற ஒருவராகவும், மந்தையை மேய்க்கிறவராகவும் பேதுருவை இறைவன் மாற்றினார்.

    பேதுரு எழுதிய நூலானது ‘புத்தி சொல்வதற்காக எழுதப்பட்ட ஒரு கடிதம்’. பாடு அனுபவித்தலைப் பற்றிய சிந்தனைகள், இந்தக்கடிதம் முழுவதும் நிரம்பியிருப்பதை நாம் பார்க்கலாம். அத்துடன் மகிமையைப் பற்றிய கருத்தும் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

    சிலுவையை நாம் பார்க்கும்போது, சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்க்கும் போது, வலியின் எண்ணம் நமக்கு வருகிறது. ஏன் அவர் சிலுவையில் தொங்கினார் என்பதைத் தியானிக்கும் போது அது கொண்டு வருகின்ற மகிமையும் நமது சிந்தனையில் வருகிறது.

    பேதுருவின் நூல் முழுவதும் ‘கிருபை’ என்கிற வார்த்தை அழுத்தமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படைக் காரணம், பாடு அனுபவித்தல் கொண்டு வருகின்ற மகிமையை நமக்குப் பெற்றுத் தருவது இறைவனின் கிருபை என்பது தான். கிருபையினால் மட்டுமே இது நிகழ்கிறது.

    மாசு படிந்த உலகில் தூய்மையான வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நியாயத் தீர்ப்பு எனும் இறுதித் தீர்ப்பு நாளைக் குறித்த அச்சம் நமக்குத் தேவையில்லை. தூய்மையான வாழ்க்கை வாழ்வது மட்டுமே அவசியம் என்பதை பேதுரு வலியுறுத்துகிறார். இறைவன் பரிசுத்தமாகவும், நீதிமானாகவும் இருப்பதால் அவர் எப்போதும் பாவத்தோடு சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்.

    அவர் மன்னிக்கிறவர், இரக்கமுடையவர். ஆனால் மக்கள் பாவத்தில் அமிழ்ந்து வாழ அனுமதிக்காதவர். எந்தப் பாவியையும் ஏற்றுக்கொள்ள அவர் தயங்குவதில்லை. ஆனால் பாவத்தில் மகிழ்ந்து வாழ்வதை அவர் அனுமதிப்பதில்லை. அவர் பாவத்தை வெறுக்கிறவர், பாவிகளை நேசிக்கிறவர்.

    ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் குறித்த கணக்கைக் கொடுத்து, அதற்கான பலனை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நாள் தான் நியாயத் தீர்ப்பு. நாம் அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே நமக்கு அவர் இட்ட பணியை நிறைவேற்றி அதன் கணக்கை அவரிடம் கொடுக்க வேண்டும்.

    திருவிருந்தின் போது இறைவனுடைய பாடு, மரணம் போன்றவற்றை நினைவு கூருகிறோம். அப்போது நாம் மீட்கப்பட்டவர்கள் என்பதையும் நாம் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்தல் என்பது தூய்மையான வாழ்க்கை வாழ நம்மை தூண்டும் செயல்.

    ஒரு அடிமையை மீட்க வேண்டுமெனில் பணம் போதும். ஆனால் பாவத்துக்கு அடிமையாக வாழ்பவன் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், பாவத்தை பணத்தால் சரிசெய்ய முடியாது என்பது தான். இறைவனின் ஆவியினாலும், அவருடைய கிருபையினாலும் தான் நாம் மீட்கப்படுகிறோம். நமது செயல்களினாலோ, பணத்தினாலோ அல்ல.

    எகிப்தை விட்டு மோசேயினால் மீட்டுக்கொண்டு வரப்பட்ட மக்கள், தங்கள் சிந்தனைகளில் இருந்து எகிப்தை அழிக்கவில்லை. அதே போல நாமும் புதிய மீட்புக்குள் நுழையும் போது பாவ வாழ்க்கையை மனதை விட்டு அழிக்காமல் இருந்தால் நிலைவாழ்வை அடைய முடியாது.

    இறைவனின் பாடுகளையும், அது தருகின்ற மகிமையையும், இறைவனின் கிருபையையும் இதயத்தில் ஏந்துவோம். நமது வாழ்க்கையை தூயதாய் மாற்றுவோம்.
    இறைவனை ஆலயம், ஆலயமாகச் சென்று தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, கண்ணால் காண முடியாத கடவுளை அவர் சாயலில் விளங்குகின்ற சகமனிதரில் பார்த்து அன்பு செய்வோம்.
    இறைவனை ஆலயம், ஆலயமாகச் சென்று தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, கண்ணால் காண முடியாத கடவுளை அவர் சாயலில் விளங்குகின்ற சகமனிதரில் பார்த்து அன்பு செய்வோம். பல அர்த்தமிக்க உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் நமது வாழ்விலும் ஏற்பட்டிருக்கும். நாம் பஸ்சில் பயணம் செய்தபோது வயது முதிர்ந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்கலாம்.

    உடல் ஊனமுற்றவர்கள் தேவையில் இருக்கும் போது நாமாக வந்து உதவியிருக்கலாம். படிக்கிற மாணவர்கள் தங்களோடு உள்ள பிற மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கலாம். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வேதனையோடு படுத்திருக்கும்போது, ஆறுதல் வார்த்தைகள் சொல்லியிருக்கலாம். இதுபோன்ற செயல்பாடுகளில் எல்லாம் நாம் கடவுளை பிரதிபலித்திருக்கிறோம். தவக்காலத்தில் இன்றைய நாள் சிந்தனை “கடவுளை ஆலயத்திலும், சட்ட திட்டத்திலும் காண்பதை விட சக மனிதரில் காண்போம்” என்றே அழைக்கின்றது.

    நாம் ஒவ்வொருவரும் நம்மை அன்பு செய்வதற்கு முயற்சி எடுக்கின்றோம். அதேபோன்று கடவுளையும் அன்பு செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். பிறர்மீது கொண்ட அன்பிலும், அக்கறையிலுமே இறை அன்பு வெளிப்படுகின்றது. ஆங்கிலக் கவிஞன் செஸ்டர்டன் இவ்வாறு கூறுவார், “நம்மில் பலருக்கு கடவுளை நேசிப்பதில் எவ்விதமான சிக்கலுமில்லை. மனிதர்களை நேசிப்பதில் தான் சிக்கல் இருக்கின்றது.

    அதிலும் குறிப்பாக அருகில் இருக்கின்ற மனிதர்களை அன்பு செய்வதிலே மாபெரும் சிக்கல் உள்ளது. கடவுளோடு கொண்டிருக்கின்ற அன்பு, சிந்தனைப் பூர்வமாக இருப்பதால் சிக்கல் தெரிவதில்லை. ஆனால் மனிதர்களை அன்பு செய்வது, அனுபவ பூர்வமாக இருப்பதால் சிக்கல் தெரிகின்றது” என்பார். ஆதலால் கடவுளோடு கொண்டுள்ள உறவை கண்ணால் காணுகின்ற மனிதர்களிடம் காட்டும் அன்பில், அக்கறையில் வெளிப்படுத்துவோம்.

    நமது அருகாமை இல்லங்களில் மாபெரும் நெருக்கடிகளுக்குள்ளும், மன இறுக்கங்களுக்குள்ளும் உள்ளாகி துன்புறும் மனிதர்களை தேடிச் செல்வோம். யாருக்கு என் அன்பு தேவைப்படுகின்றது என்பதனை குறித்துக் கொள்வோம். அப்படி வாடும் மனிதர்களை இனம் கண்டு அவரில் இயேசுவைக் காண்போம். பொருளைக் கொடுப்பதைவிட, நமது உடனிருப்பை அவர்களுக்கு அளிப்போம். “ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்” என்பதனை உதட்டளவில் உச்சரிக்காது, உள்ளத்தளவில் வாழ்ந்து காட்டுவோம். நாம் வாழும் இல்லம், இறைவனின் இல்லமாக, சக மனிதரில் இயேசுவைக் கண்டுபிடிப்போம்.

    அருட்பணி. குருசு கார்மல்,

    தூய சவேரியார் பேராலயம்,

    கோட்டார், நாகர்கோவில். 
    இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சம் பெற மனுமகனாய், உலகிற்கு ஒளியாய் வந்த இயேசு - தன் ஒளியை பிறர் பிரதிபலிக்க வேண்டுமென்றே விரும்புகிறார்.
    இறைவனைக் காண வேண்டும், அவர் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருக்க முடியும். அப்படி அவர் நம்மை சந்திக்கும் போது, நாம் அவரை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே அற்புதங்கள் நம் வாழ்வில் நடக்கின்றன.

    இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவரை சந்தித்தவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், அதனால் என்னவிதமான நன்மைகள் பெற்றுக்கொண்டார்கள் என்று வேதத்திலே ஏராளமான நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

    ஒருநாள் இயேசு கெனசரேத்து கடற்கரையில் நின்றுகொண்டிருக் கிறார், அநேக மக்கள் அவர் பேசுவதைக் கேட்க வந்திருந்தனர். அங்குமிங்கும் பார்க்கிறார் இயேசு. அருகிலிருந்த படகு ஒன்றை சற்று தள்ளும்படி சொல்லி அதில் அமர்ந்து மக்களோடு பேச ஆரம்பிக்கிறார்.

    அந்த படகு சீமோனுடையது, அந்த சீமோன் ராத்திரி முழுவதும் உழைத்தும் ஒன்றும் கிடைக்காத வெறுமை நிலையில் இருந்தார். எனினும், அதனை வெளிக்காட்டாமல் இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

    மக்களிடம் பேசி முடித்த இயேசு, சீமோனைப் பார்த்து “ஆழத்திலே உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொன்னார்.

    ராத்திரியின் ஏமாற்றம் ஒரு புறம். தச்சு தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்த இயேசுவை விட, கடலோடு தனக்குள்ள அனுபவம் பெரிது எனும் எண்ணம் மறுபுறம். எனினும், இயேசுவை இறைமகனாக கண்டு, அவர் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தையின் படி மீன் பிடிக்கச் சென்றார். வலைகள் கிழியத்தக்கதாய் மீன்களைப் பிடித்தார்.

    இப்பொழுது தான் சீமோனுக்கு ஒரு உண்மை உறைக்கிறது. இத்தனை ஆண்டுகள் நான் மீன் பிடித்த கடல், எனக்கு மிகவும் பழக்கமான கடலும் கூட, என்னால் ஒரு இரவு முழுவதும் உழைத்தும் ஒன்றும் பிடிக்கமுடியவில்லை. ஆனால், இவரால் என் வலைகள் கிழியக்கூடிய அளவுக்கு மீன்கள் இந்த கடலில் எங்கிருக்கிறதென்று சொல்ல முடிகிறது. அப்படியெனில் இவரால் என் மனதிலிருக்கும் அழுக்கையும் கண்டுபிடிக்க முடியும் என்று உணர்ந்தார்.

    இயேசுவின் கால்களில் விழுந்து “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். இயேசு சீமோனை நோக்கி “பயப்படாதே, இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்றார். தனக்கு கிடைத்த மீன்களையும், படகையும் விட்டுவிட்டு சீமோன் உடனடியாக இயேசுவைப் பின்பற்றினார்.

    இன்னொரு நாள் இயேசு அவரது சீடர்களோடு கெரசேனர் என்னும் பகுதிக்கு சென்றார். அங்கே பேய் பிடித்திருந்த ஒருவரைக் கண்டு, அவரிடம் பேசுகிறார். அவர் தன் பெயர் இலேகியோன் என்று கூறினார்.

    இலேகியோன் என்பது உரோமப்படையின் 6 ஆயிரம் போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப் பிரிவு - அவருக்குள் பல பேய்கள் புகுந்திருந்தன என்பதே அதன் பொருள்.

    தங்களை பாதாளத்துக்கு துரத்தவேண்டாம் என்றும், துரத்துவதென்றால், அருகில் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகளிடம் புக அனுமதிக்க வேண்டுமென்றும் பேய்கள் இயேசுவை கேட்டுக்கொண்டன. இயேசுவும் அனுமதிக்க, பேய்கள் பன்றிகளில் புகுந்தன. பன்றிக்கூட்டம் பாறையிலிருந்து கடலில் விழுந்து இறந்தது.

    இதை அறிந்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நடந்தவற்றை கேட்டு பயப்பட்டு, தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

    இரண்டு நிகழ்வுகள்- இரண்டிலும் இயேசு தாமாக சென்று அற்புதம் செய்கிறார். சீமோன், அந்த அற்புதத்தின் வழியாக தன் குறையை உணர்ந்தார். இவர் என்னருகிலிருந்தால் தொழில் ரீதியாக லாபமீட்ட முடியும் என்று நினைக்காமல், இவருக்கு அருகில் நிற்கவும் நான் தகுதியற்றவன் என்று அவரை போக சொல்கிறார்.

    ஆனால் இயேசுவோ, தன்னிலை உணர்ந்த சீமோனிடம் தன்னைப் பின்பற்றி வர அழைக்கிறார். தனக்குக் கிடைத்த பெரிய லாபத்தையும் விட்டு விட்டு இயேசுவுக்கு பின்சென்றார் சீமோன்.

    அன்று வரை மீன் பிடித்து, அது செத்தபின் அதை விற்று வாழ்க்கை நடத்தியவர். அன்றிலிருந்து, நடை பிணமாக, உயிரற்ற நிலையிலிருக்கும் ஆன்மாக்களை இயேசுவிடம் அழைத்து வருபவனாக மாற்றம் பெற்றான்.

    ஆனால் இரண்டாவது நிகழ்வில் வரும் கெரசேனர் பகுதி மக்களோ தங்களுக்கு இயேசுவால் இழப்பு என்று அறிந்ததும், இயேசுவையே தங்கள் ஊர் எல்லையிலிருந்து துரத்தி விட்டனர்.

    இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சம் பெற மனுமகனாய், உலகிற்கு ஒளியாய் வந்த இயேசு - தன் ஒளியை பிறர் பிரதிபலிக்க வேண்டுமென்றே விரும்புகிறார்.

    அப்படி நாம் ஒளியின் அருகில் செல்லும்போது, நம்மிலிருக்கும் அழுக்குகள் தெளிவாக தெரியத் தொடங்கும். அப்பொழுது, நாம் நம் அழுக்கை போக்குவதற்கான முயற்சியை எடுக்கிறோமா, அல்லது, இந்த ஒளி, என் அழுக்கை வெளிக்காட்டுகிறது, எனவே இந்த வெளிச்சம் எனக்கு தேவையில்லை என்று சொல்கிறோமா என்பதில் தான் நம் வாழ்க்கையின் குறிக்கோள் அடங்கிஇருக்கிறது.

    சகோ. ஹெசட் காட்சன், சென்னை. 
    இறைத்திட்டம் நம்மில் செயல்பட அனுமதித்து தந்தை கடவுளின் காக்கும் கரத்தில் நம்பிக்கை வைக்கும் போது எந்த தீங்கும் நம்மை அணுகாது. நம்புவோம்; வாழ்வு பெறுவோம்.
    காலம் காட்டும் கடிகாரத்தில், கடந்து செல்லும் நாட்களில் கடவுள் குறித்த நேரம் வரும்போதே காலச்செயல்கள் கனிகின்றன. ஆம், உருண்டோடும் கால ஓட்டத்தில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். மனிதனின் வாழ்க்கை பயணம் ஒவ்வொன்றும் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, வாழ்வு, சாவு என அனைத்தும் கடவுளின் துணையாலே, அவர் தீட்டிய திட்டத்தாலே நடக்கின்றன.

    “சிலர் இயேசுவை பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத்தொடவில்லை. (யோவான் 7:40-53) இது கடவுளின் திட்டம். மீட்புத்திட்டம். இவ்வுலகில் நிறைவேற, கடவுள் காலத்தை நகர்த்திட்ட திட்டம்.

    இயேசு இறையாட்சி பணிக்காக தன்னையே 30 ஆண்டுகள் தயாரித்த போது. தன் செபத்தால் தந்தையான கடவுளை நன்கு அறிந்திருந்தார். அனுபவித்திருந்தார். அவரது திட்டத்தை நன்கு உணர்ந்திருந்தார். அவரது பராமரிப்பில் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது சக்தியால் முழுவதும் நிரப்பப்பட்டிருந்தார்.

    அதனால் தான் யாரும் அவரை தொடவில்லை. அவர் தம் போதனையிலும் எந்தவொரு அச்சமில்லை; தயக்கமில்லை; சோர்வில்லை. அதிகாரத்தோடு போதித்தார். ஞானத்தோடு பரிந்துரைத்தார். இதற்கு மத்தியிலும், அவரது பணியில் ஆயிரம், ஆயிரம் தடைகள், எதிர்ப்பு குரல்கள். அனைத்திலும் கடவுளின் கரம் துணை நின்றது.

    “அவரின்றி ஓர் அணுவும் அசையாது என்ற வார்த்தைக்கேற்ப கடவுள் நினைக்கும் வரை, யாரும், யாருக்கும், எதையும், எப்போதும் செய்துவிட முடியாது.” “நான் உங்களை என் உள்ளங்கைகளில் பொறித்து வைத்துள்ளேன்” என்ற தந்தை கடவுளின் பராமரிப்பில் நம் மனதை பதிந்து, நம் வாழ்வில் இறைநம்பிக்கை என்னும் நங்கூரத்தை ஊன்றி விட்டால் போதும். வாழ்வு செழிப்பாகும்.

    இறைத்திட்டம் நம்மில் செயல்பட அனுமதித்து தந்தை கடவுளின் காக்கும் கரத்தில் நம்பிக்கை வைக்கும் போது எந்த தீங்கும் நம்மை அணுகாது. நம்புவோம்; வாழ்வு பெறுவோம்.

    அருட்சகோதரி. பாக்கியா, மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல். 
    கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
    நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ... 1 கொரி - 3:16

    நம்முடைய வாழ்க்கையின் மேல் கடவுள் வைத்துள்ள திட்டம் என்ன? இதனைச் சரியாக அறிந்துணர்ந்து , அதற்குள் நம்மை உட்படுத்துவதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஆகும். ஆனால் அநேகர் இவ்விதமான ஒரு சிந்தனைக்குள் ஒருபோதும் வருவதேயில்லை.

    பல நேரங்களில் நாம் நம்முடைய திட்டங்களையும், நம்முடைய ஆலோசனை சார்ந்த செயல்களையும் கடவுள் ஆசீர்வதித்து அவைகளை வாய்க்கச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றோமேயன்றி, நம்மிடம் கடவுளுடைய எதிர்ப்பார்ப்பு என்னவென்பதை கவனித்து அறிய விரும்புவதில்லை. இதன் விளைவாகவே அநேகர் கடவுளுடைய ஆசீர்வாதங்களை வாழ்க்கையில் கண்டடையாதவர்களாகப் போகின்றனர்.

    முதலாவதாக நாம் தேவனுடைய ஆலயங்களாக விளங்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். அதாவது கடவுள் தங்குமிடமாக நம்முடைய சரீரமும், சரீரப் பிரகாரமான வாழ்க்கையும் அமைந்திட வேண்டும். ஏனென்றால் கடவுள் யாரை ஆசீர்வதிக்க விரும்புகிறாரோ அவரோடு தங்க விரும்புகிறார். அவரோடு தங்கியிருந்துதான் கடவுள் அவரை ஆசீர்வதிக்க முடியும். இது தேவ நியமம்.

    எனவே முதலாவது நம்மோடு கடவுள் தங்கியிருப்பதற்கு ஏற்ற விதமாக நம்முடைய வாழ்க்கை பரிசுத்தமானதாக மாறுவதற்குத்தான் நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.

    அநேகர் எங்கோ போய் தரிசிக்க வேண்டிய ஒருவராக கடவுளைப் பார்க்கின்றார்களேயன்றி, தங்களோடு தங்க விரும்பும் ஒருவராக அவரைப் பார்ப்பதில்லை. எனவே அவர்கள் தாங்கள் எப்படியிருக்கின்றோம் என்பதைக் குறித்து அதிகமாக சிந்திக்காமல், ஜெபம், உபவாசம் வழியாக எப்படியாவது கடவுளுடைய அருளையும், உதவியையும் பெற்றுவிடவேண்டும் என்பதிலேயே தீவிரமாயிருக்கின்றார்கள். அங்கே தேவனுடைய திட்டமாகிய நம்முடன் தங்குதல் என்பது நிறைவேறாததால் நம்முடைய திட்டங்களையும், வாஞ்சை, விருப்பங்களையும் கடவுள் தந்தருளி ஆசீர்வதிக்கவில்லை. இன்று நாம் கடவுள் தங்கத்தக்கவிதமான ஒரு ஆலயமாயிருக்கிறோமா என்பதை சிந்தித்து பார்ப்போமா.

    “ஊர் ஊராய் போய் இறைவனை நீ தேடினாலும் உனக்குள்

    அவரை நீ தேடாதவரை உன் தேடல்கள் யாவும் வீணே.

    -சாம்சன் பால் 
    பலிபீடம் சரியாக இருக்கும் போது, பலி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடவுளின் திருமுன் வரும்போது நமது பலிபீடங்கள் சரிசெய்யப்பட வேண்டும். அதற்கு பிறரோடு உள்ள ஒப்புரவு மிக முக்கியம்.
    விவிலியத்தில் ஒரு அற்புதமான நிகழ்வு சொல்லப்பட்டிருக்கிறது. இறைவாக்கினர் எலியாவுக்கும், 850 போலி இறைவாக்கினர்களுக்கும் இடையே ஆன்மிக யுத்தம் ஒன்று நடக்கிறது. அதைப்பற்றி பார்க்கும் முன் கொஞ்சம் பின்னணியைப் பார்க்கலாம்.

    தாவீது மன்னர் இறைவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கையை வாழ்கிறார். அவருக்குப் பின் அவரது மகன் சாலமோன் அரசராகிறார். அவர் கடவுளிடம் ஞானத்தை வரமாய்க் கேட்டு வாங்கியவர். கடவுள் தாவீது மன்னரிடம் சொன்னதன் படி சாலமோன் மன்னன் தேவாலயத்தைக் கட்டுகிறார். சாலமோன் மன்னனின் புகழ் எங்கும் பரவுகிறது.

    பின்னர், சாலமோனின் வீழ்ச்சிக்காலம் வருகிறது. சாலமோனின் வாழ்க்கை முடிகிறது. அவருக்குப் பின் ஒன்றாய் இருந்த இஸ்ரேல் நாடு இரண்டாகிறது. யூதா என்றும் இஸ்ரேல் என்றும் அது இரண்டாகிறது. இஸ்ரேலில் எரோபெயாமும், யூதாவிலே ரெகபயாமும் அரசாள்கின்றனர். அதன் பின் பல அரசர்கள் தொடர்ந்து அரசாள்கிறார்கள்.

    சாலமோனுக்குப் பின் அரசாட்சி செய்தவர்களில் ஆகாப் அரசாட்சி செய்த காலம், எலியா தீர்க்கதரிசியின் காலம். சிலை வழிபாட்டை பின்பற்றத் தொடங்கியதால் இறைவனின் கோபம் அந்த நாட்டின் மீது இருந்தது. வானம் அடைபட்டது. பஞ்சத்தால் மக்கள் மடியத் தொடங்கினர். ஆகாபுக்கு எலியா மீது பகை, அவரைக் கொல்ல தேடிக்கொண்டிருந்தார்.

    இந்த சூழலில் அரண்மனைக் கண்காணிப்பாளர் ஒபதியா மூலமாக ஆகாபைச் சந்திக்க எலியா முயல்கிறார். கொல்ல நினைப்பவன் முன்னால் போய் நிற்பது சாவை விரும்பி அழைப்பது போல என ஒபதியா நினைத்தார். இருந்தாலும் எலியாவின் கட்டாயத்தினால் ஒபதியா அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். அப்படித்தான் எலியாவும் ஆகாபும் சந்திக்கின்றனர்.

    எலியாவுக்கு பயம் இல்லை. இறைவன் அளித்த துணிச்சல் அவரிடம் இருந்தது.

    “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீ தானே?” என ஆகாப் கேட்கிறார்.

    “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நானல்ல; நீயும் உன் தந்தையின் வீட்டாரும் தான். ஏனெனில் நீங்கள் ஆண்டவரின் கட்டளைகளைப் புறக்கணித்துப் பாகால் பின்னே செல்கிறீர்கள்!” என்றார் எலியா.

    இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆகாப் அதிர்ந்து போனான். எலியாவுக்கும், ஆகாபுக்கும் இடையே, ‘உண்மையான கடவுளை வழிபடுவது யார்?’ எனும் கேள்வி வந்து நிற்கிறது.

    ‘நீ உன்னுடைய கடவுளுக்கு பலி கொடு, நான் என் கடவுளுக்கு கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்’ என்றார் எலியா.

    ஆகாபின் பக்கம் 850 போலி இறைவாக்கினர்களும், கடவுளின் பக்கம் ஒரே ஒரு தேவ மனிதரான எலியாவும் நிற்கின்றனர். பலிக்குரிய ஏற்பாடுகள் ஆயத்தமாயின. இப்போது காத்திருக்கும் நேரம். இறைவனின் பதிலுக்காகவும், அவரது செயலுக்காகவும் காத்திருக்கும் நேரம்.

    மனித முயற்சிக்கு கடவுளின் மறுமொழி என்ன? பாகாலின் காளை பலியிடப்படுகிறது. ஆனால் அந்த ரத்தம் மறுமொழி கொடுக்கவில்லை. 850 பேருமாய் சேர்ந்து கத்திப் பார்த்தும், ஆடிப்பாடியும் பாகால் வரவில்லை. செபத்தில் சத்தம் இருந்தால் தான் இறைவனுக்குக் கேட்கும் என்பது பொருளல்ல. ஆவியோடும் உண்மையோடும் செபிப்பதே உண்மை செபம். எலியாவின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    கெத்சமெனே தோட்டத்தில் ஆண்டவர் இயேசு செபித்தார். வேதனையோடு உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வியர்வை ரத்தத் துளிகளாய் விழுந்து கொண்டிருந்தது. அதை தந்தை கேட்டார்.

    அமைதியாய் செபிப்பது கேட்கப்படாது என்பது தவறான சிந்தனை. செபம் கேட்கப்பட வேண்டுமெனில் நமது பலிபீடங்கள் செப்பனிடப்படவேண்டும். எப்போது ரத்தம் பதில் கொடுக்கும்? பலிபீடம் செப்பனிடப்பட்டதாய் இருந்தால் மட்டுமே பதில் சொல்லும்.

    மனம் கசிந்து புலம்பி அழுது வேண்டினாள் அன்னாள். இறைவனோடு நெருக்கமாய் வேண்டிக்கொண்டிருந்தார். உள்ளத்தால் வேண்டிக்கொண்டிருந்ததால் அவர் உளறிக்கொண்டிருப்பதாய் ஏலி நினைத்தார். அவளோ தனது இதயத்தை இறைவனிடம் ஊற்றிக் கொண்டிருந்தார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. செப்பனிடப்பட்ட பலிபீடம் இறைவனோடு இறுக்கமான உறவைத் தரும். செப்பனிடாத பலிபீடமோ இறைவனிடமிருந்து பதிலைப் பெற்றுத் தராமல் போகும்.

    பலிபீடம் சரியாக இருக்கும் போது, பலி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடவுளின் திருமுன் வரும்போது நமது பலிபீடங்கள் சரிசெய்யப்பட வேண்டும். அதற்கு பிறரோடு உள்ள ஒப்புரவு மிக முக்கியம்.

    நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது? நமது பலிகளை இறைவன் ஏற்பதற்காய் நமது பலிபீடங்களை செப்பனிடுகிறோமா?

    இறைவன் நமக்காக மிக உயரிய திட்டங்களை வைத்திருக்கிறார். நாம் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும் போது அந்தத் திட்டங்களை அவர் செயல்படுத்துகிறார்.
    தந்தையோடு கடைவீதிக்குச் செல்லும் குழந்தை தந்தையின் சுண்டுவிரலைப் பிடித்துக் கொள்கிறது. அந்த சின்ன ஒரு பற்றுதல் குழந்தைக்கு அதீத நம்பிக்கையைத் தருகிறது. தந்தை தன்னைக் கைவிடமாட்டார், தந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என குழந்தை சந்தேகத் துக்கு இடமின்றி நம்புகிறது. தந்தை மீது அந்த குழந்தை வைக்கும் நம்பிக் கைக்குக் காரணம் என்ன? தந்தை யின் சுண்டு விரலின் வலிமையா? இல்லை, குழந்தை தந்தையை அறிந்திருக்கிறது என்பது தான்.

    அதே போல தான் இறைவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு அடிப்படையும் ‘அவர் எப்படிப்பட்டவர்’ என்பதை நாம் அறிந்து கொள்வதில் தான் அடங்கியிருக்கிறது. இறை வனின் தன்மைகளை முழுமையாய் அறிந்து கொள்ளாமல் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அறிந்து கொள்ளாமல் வைக்கின்ற நம்பிக் கை கள் வலுவிழந்து போய், வாழ்க்கைப் புயலில் சின்னாபின்னமாகி விடும்.

    இறைவன் எப்படிப்பட்டவர் என் பதை உணரவேண்டுமெனில் அவரது வார்த்தைகள் எப்படிப்பட்டவை என் பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவருடைய வாக்குறுதிகள் எப்படிப் பட்டவைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரது வார்த்தைகளையும், வாக்குறுதிகளை யும் தாங்கியிருக்கின்ற நூல் தான் விவிலியம். அந்த விவிலியத்தின் வார்த்தைகளை நாம் விளங்கிக் கொள் ளும் போது இறைவனை விளங்கிக் கொள்கிறோம்.

    கடவுளுடைய வார்த்தைகள் மாறா தவை. அவருடைய வாக்குறு திகள் மாறாதவை. ஆனால் அவை நமது வாழ்வில் தலைகீழ் மாற்றங்களை ஏற் படுத்தக் கூடிய வலிமை படைத்தவை.

    “அவரு சொன்னா சொன்னது தான்” என ஒருவரைப் பற்றி நாம் எப்போது சொல்வோம்? அந்த நபரு டைய குணாதிசயங்கள் எப்படிப் பட்டவை என்பதை அறியும் போது, இல்லையா?. அதே போல தான் இறை வனுடைய வார்த்தைகள் மாறாதவை என்பதைப் புரிந்து கொள்ள அவரு டைய குணாதிசயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    “அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறு கின்றவர்” என இறைவனின் குணாதிசயங்களைப் பற்றி யோவேல் (2:13) நூல் விளக்கு கிறது. அது மட்டுமல்ல நமது வாழ்வில் நாம் இழந்து போனவற்றை மீண்டும் நமக்குத் திரும்பத் தருகிறவர் அவர் என்கிறது விவிலியம்.

    “அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்”. (யோ வேல் 2:25) என்கிறது யோவேல் நூல்.

    இழந்ததை இறைவன் மீண்டும் தருகிறார். இங்கே இழப்பு என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்ததல்ல. வெறும் செல்வம் சார்ந்ததல்ல. மனித வாழ்க்கையை ஒட்டு மொத்தமாய் குறிப்பிடுகிறது. பாவத்தின் கோரக் கரங்களில் சிக்கி நமது வாழ்க்கை அழிவுக்குள் செல்லும் போது, நம்மை மீட்டுக்கொண்டு மீண்டும் நல்வாழ் வைத் தருபவராக இறைவன் பரிமளி க்கிறார்.

    “இறைவனிடத்தில் திரளான மீட்பு உண்டு” என விவிலியம் சொல்கிறது. அவரிடத்தில் திரளான செல்வம் உண்டு என சொல்லவில்லை. இறை வனுடைய சிந்தனை மனிதனுடைய மீட்பு என்பதில் தான் அடங்கியிருக்கிறது. இவ்வுலக வாழ்க்கை தற் காலிகமானது. அதன் கவலைகளில் அமிழ்ந்து விடாமல் மீட்பின் வழி களில் நாம் வரவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.

    நமது வெற்றிட வாழ்க்கையை, முழுமை யான வாழ்க்கையாய் மாற்ற இறைவனுடைய வார்த்தைகளால் முடியும். “அவருடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது” என்கிறது விவிலியம்.

    எகிப்து நாட்டில் அடிமைகளாக உழன்ற எபிரேய மக்களை இறைவன் மீட்டுக் கொண்டு வருகிறார். விடுதலை நாயகனான மோசேக்கு இறைவனின் வார்த்தைகள் தான் வழிகாட்டின. அந்த விடுதலைப் பயணத்தில் மோசேயின் வலிமையாக இருந்தவை இறைவனின் வார்த்தை கள் தான்.

    கடவுளுடைய ஆற்றல் இல்லாமை யிலிருந்து நிறைவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. கடவுளுடைய ஆற்றல் இழந்தவற்றை நமக்கு மீண்டும் திரும்பத் தருகிறது.

    இறைவன் நமக்காக மிக உயரிய திட்டங்களை வைத்திருக்கிறார். நாம் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும் போது அந்தத் திட்டங்களை அவர் செயல்படுத்துகிறார்.

    ‘நான் ஒரு முறை லண்டன் செல்ல ஆசைப்படுகிறேன் என்பதற்கும், நான் அடுத்த வாரம் லண்டன் செல்கிறேன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலாவது கூறியது ஆசை, விருப்பம். இரண்டாவது கூறியது வகுக்கப்பட்ட திட்டம். திட்டவட்டமான முன்னேற்பாடு.

    நம்முடைய வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது? வெறும் ஆசைகளின் அணிவகுப்பாக இருக்கிறதா? அல்லது தெளிவான திட்டங்களோடு பயணிக்கிறதா?

    “இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்” (எசாயா 32:1) என்கிறது இறை வார்த்தை. இங்கே நேர்மையுடன் அரசாள்வார் என்பது திட்டவட்டமான முன்னேற்பாடு. அது விருப்பம் அல்ல, இறை திட்டம்.

    “இறைவனை அன்பு கூர்பவராக, சேர்த்துக் கொள்பவராக, நம்மோடு இருப்பவராக...” (எபிரேயர் 12) பைபிள் சொல்கிறது. இறைவனின் மீது நம்பிக்கை வைப்போம். அதற்கு அவருடைய குணாதிசயங்களைப் புரிந்து கொள்வோம். அதற்காய் இறைவார்த்தையை ஆழமாய் நேசிப்போம். 
    தன்னை தாழ்த்தி, நாவை அடக்கி பெருமைகளை விட்டு, வேதத்தை படித்து, அதை நேசித்து, அதன்படி ஜீவித்தால் கர்த்தர் என்றென்றைக்கும் துணை நிற்பார். ஆமென்.
    ‘தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். பெருமையையும் அகந்தையையும் தீய வழியையும் புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்’ (நீதி.8:13)

    இயேசு கிறிஸ்துவில் பிரியமான வர்களே, தேவ ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கிற காரியங்களை நாம் வெறுத்தால்; இறைவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நாம் வெறுத்தால், பரலோகத்தின் ஆசீர் வாதங்களும், பூமியின் ஆசீர்வாதங் களும் நிறைவாக கிடைத்துக் கொண்டே இருக்கும். மனிதனின் தீமையையும், பெருமையையும் தேவன் வெறுக்கிறார்.

    இறைவனின் கண்கள் எவ்விடத்தி லுமிருந்து நல்லோரையும் தீயோரையும் பெருமைக்காரரையும் நோக்கி பார்க்கிறது. பணம், அழகு, படிப்பு, அந்தஸ்து இருந்தாலும் ஒன்றும் இல்லாதவனைப் போல் இருக்க வேண்டும். நான் உயர்ந்தவன், நான் பெரியவன், நான் சிறந்தவன் என்று யாரிடமும் பெருமை பேசாதே. ஒரு வருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத் தாழ்மையை அணிந்து கொள்வதுதான் தேவன் விரும்புவது.

    ஏனெனில் ‘மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும் ஜீவிதத்தின் பெருமையும் உலகத்திலிருந்து உண்டா னது. பிதாவிடனிடத்திலிருந்து உண் டாகவில்லை’.

    உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போகும். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே என்றென்றைக்கும் நிலைத்து இருப்பான். தன் இருதயத்தில் பெருமையாக பேசி நிர்விசாரத்தோடி ருக்கிற அநேகர் தேவமகிமையை காண்பதில்லை. பெருமையுள்ள வனைப் பார்க்கிலும் பொறுமையுள் ளவன் உத்தமன்.

    ‘பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையு ள்ளவர்களுக்கோ கிருபை அளிக் கிறார்’ (1 பேதுரு 5:5).

    பெருமையுள்ளவர்களுக்கு தேவ கோப ஆக்கினை வருகிறது. பெரு மைக்காரர் அநேகர் விழுந்தார்கள். அவர்களால் எழுந்திருக்க முடியவி ல்லை.

    ‘நான் இச்சித்தத்தைப் பெற்றுக் கொண்டேன்’ என்று பெருமை பாராட்டி கேடான காரியம் வந்தது. கொள்ளை பொருளால் பெருமை பாராட்டி கொடுமையான தீங்கு வந்தது. எந்த காரியத்திலும் வீணாக பெருமை பாராட்டி வெட்கப்பட்டு போனார்கள்.

    வேதத்தில் பலர் பெருமையை தேடி, பொல்லாப்பை பெற்றார்கள், தேவ கிருபையை இழந்து போனார்கள். மனுஷருடைய பெருமையை அடக்குகிறவர் அவரே.

    தாழ்மையும், பொறுமையும் உடையவர்களுக்கு தேவ கிருபையை ஊற்று கிறார். அவன் நதி ஓரமாய் நடப்பட்ட மரத்தை போலிருக்கிறான். தன் காலத்தில் தன் கனியைத் தருவது போல் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அவன் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பான். அவன் கை செய்யும் வேலையிலெல்லாம் ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார்.

    தாழ்மை உள்ளவர்களை, நதியோரத்திலுள்ள தோட்டங்களை போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப் போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங் களைப் போலவும் உயர்த்துவார். பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின் மேல் அவனை ஏறி வரப் பண்ணுவார். அவன் இருதயம் மகிழ்ச்சியும், அவன் முகம் பிரகாசமுமாக இருக்கும்.

    ‘அப்படியே நாவானதும் சிறிய அவ யமாயி ருந்தும் பெருமையானவை களைப் பேசும் பாருங்கள். சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டை கொளுத்திவிடுகிறது’ (யாக்கோபு 3:5)

    நாவின் பெருமை நெருப்பை போன்றது. நாவு அநீதி நிறைந்து அநேக பெருமைகளை பேசும். பெரு மையை பேசி முழு சரீரத்தையும் கறைப் படுத்தி விடும். நாவை அடக்க ஒரு மனுஷனாலும் முடியவில்லை. அது அடங்காத பொல்லாத பெருமைகளை பேசி பின்பு இருதயத்தில் வேதனை களை தரும்.

    ஒரே நீர் ஊற்றிலிருந்து தித்திப்பும், கசப்புமான தண்ணீர் சுரக்குமா? மாம ரம் பலா பழத்தையும், பலா மரம் மாம் பழத்தையும் கொடுக்குமா? ஒருபோதும் அப்படி ஆகிறதில்லை. ஆனால் நாவானது ஆண்டவருக்கு பிரியமான காரியத்தையும், பின்பு பிரியமில்லாத காரியத்தையும் பேசுகிறது.

    பெருமைக்குரிய மகா பெரிய கப்பல்கள் சிறிதான சுக்கானாலே, நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு போகிறது. சிறிய நாவு பெருமையாக பேசி, பெரிய சரீரத்தை கறைப் படுத்துகிறது. குதிரைகளின் வாய்க ளில் கடிவாளம் போட்டு மனிதனுக்கு கீழ்ப்படிகிறது. குதிரைகளை அடக்கும் மனிதனின் நாவு தேவனுக்கு கீழ்ப் படியாமல் பெருமை பேசுகிறது.

    கர்த்தர் சமுத்திரத்தை பார்த்து ‘இம் மட்டும் வா, மிஞ்சி வராதே. உன் அலை களின் பெருமை இங்கே அடங்கக் கடவது’ என்றார். சமுத்திரத்தின் அலை அடங்கியது. இயேசு சென்ற படகில் பலத்த சுழல்காற்று உண்டாகி அலைகள் அதின்மேல் மோதியபோது, ‘இரையாதே அமைதலாயிரு’ என்றார். காற்று நின்றுபோய் மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

    தன்னை தாழ்த்தி, நாவை அடக்கி பெருமைகளை விட்டு, வேதத்தை படித்து, அதை நேசித்து, அதன்படி ஜீவித்தால் கர்த்தர் என்றென்றைக்கும் துணை நிற்பார். ஆமென்.

    ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் ஊ. பூமணி, சென்னை-50. 
    கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.
    மனிதர்கள் வாழும் குடும்பத்திற்குள் சென்று மனிதனை தேட வேண்டியிருக்கிறது. யார் இரக்கமுள்ள மனிதன்? யார் அன்புள்ளம் கொண்ட மனிதன்? யார் தாழ்ச்சி கொண்ட மனிதன் என தேடி அலைய வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவமே. நீயா, நானா என்ற போட்டியே எல்லா இடங்களிலும் காண கிடக்கின்றது.

    யார் பெரியவர்? கணவனா, மனைவியா, மாமியா, மருமகளா? என்பன போலவே போட்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த தவக்காலம் இந்த சிந்தனையை உடைத்துக்கூறு போட்டு, உண்மையான மனிதர்களாக நம்மை உருமாற்றட்டும். உண்மையான மனிதர்களிடம் நம்மை அழைத்துச் செல்லட்டும். புகழ்பெற்ற ஓவியன் தன் குடும்பத்தாரோடு திரைப்படத்துக்கு சென்றான். அரங்கில் கூட்டமே இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓவியர் உள்ளே நுழைந்ததும், நான்கு பேரும் கரவொலி எழுப்பினர். கலைஞனுக்கு ஒரே மகிழ்ச்சி.

    என் பெருமையைப் பார்த்தாயா? என் படைப்புகளை பாராட்டுவதற்கு மக்கள் இருக்கிறார்கள் என பெருமகிழ்ச்சியோடு தன் மனைவியிடம் கூறினார். அப்போது ஒருவர் ஓடிவந்து கை குலுக்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த கலைஞன் அவரிடம், நீங்கள் என் ரசிகரா? என கேட்டான். உடனே அவர் போங்க சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. இன்னும் 5 பேர் வந்தால் மட்டுமே படம் போடுவோம். இல்லையென்றால் கிடையாது என சொல்லி விட்டார்கள். அந்நேரத்தில் நீங்கள் வந்தீர்கள்? அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன், என்றார்.

    இந்த கலைஞனை போலவே நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம். ஆனால் கடவுளின் கண்களுக்கு அவை உகந்தவையல்ல. பிறரிடமிருந்து பாராட்டும், பரிசும் பெற வேண்டும் என்று செய்கின்ற எல்லா செயல்களுக்கும் உடனே கைம்மாறு கிடைத்துவிடும். ஆனால் இறைவனுக்கு உகந்தவற்றைச் செய்யும்போது உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மனநிலையோடு செயலாற்ற வேண்டும். இதையே இன்றைய நாள் சிந்தனையாக இயேசு நமக்கு கற்றளிக்கின்றார்.

    தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், என நாம் வாசிக்கின்றோம். தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள். இவர்கள் எப்போதுமே பிறரை உயர்வாகவே கருதுவர். ஆதலால் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பணிந்த உள்ளமே பரமனுக்கு ஏற்ற உள்ளமாகும். கிறிஸ்துவிடமிருந்து நம்மை அப்புறப்படுத்தும் அகந்தை உணர்வில் இருந்து விடுதலையடைந்து, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.

    -அருட்பணி. குருசு கார்மல்,
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    தியாகம் என்பது சுய விருப்பத்தினால் வருவது, கட்டாயத்தினால் அல்ல. நம்முடைய தியாகத்தின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து அந்த தியாகத்தை மேற்கொள்ளும்போதுதான் நாம் உண்மையான தியாகிகள்.
    தியாகம் என்பது சுய விருப்பத்தினால் வருவது, கட்டாயத்தினால் அல்ல. நம்முடைய தியாகத்தின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து அந்த தியாகத்தை மேற்கொள்ளும்போதுதான் நாம் உண்மையான தியாகிகள். நம் ஒவ்வொருவரின் வாழ்வும், அடுத்தவரின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டு இருக்கிறது என்பதனை நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் இறைமகன் இயேசுவின் வாழ்வு எடுத்து சொல்கிறது. தான் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு நொடிப்பொழுதும் தனக்கென சிந்திக்காதவர், மக்கள் சமூகம் என்பதிலே நிறைவு கண்டவர், அதற்கு பரிசுதான் சிலுவை மரணம். அச்சிலுவை மரணத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டார்.

    தவக்காலத்தின் தியாகங்களை புரிந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள இந்நாளில், நமக்காக தியாகங்கள் பல புரிந்த மேன்மக்களை நினைத்து பார்ப்போம். நாம் உயிர் வாழ உயிர் கொடுத்த தாயையும், நமது வாழ்க்கைத்தரம் உயர கடுமையான தியாகங்களை மேற்கொண்ட தந்தையையும் நினைப்போம். நாம் நல் உடை உடுத்த வேண்டும் என்பதற்காக ஆடைகளை தயாரிக்கிற மனிதர்களையும், உணவு அளிக்கிற விவசாயிகளையும் நினைப்போம்.

    அவர்களின் தியாகத்துக்காக இந்நாளில் நன்றி சொல்வோம். நமது வாழ்வின் மிகச்சிறிய தேவைகளில்கூட அடுத்தவரின் தியாகம் அடங்கி இருக்கிறது. தியாகமே மனித சமுதாயத்தின் அச்சாணி. பல நல்மனிதர்களின் தியாகத்தால்தான் நாம் உயிர்துடிப்புடன் இயங்கி கொண்டிருக்கிறோம். நாம் பிறரிடமிருந்து பெற்று கொண்டதை பிறருக்கு அளிப்பதுதானே நீதி. உயிர் கொடுக்கும் தியாகங்களை செய்யவில்லையெனினும் உயிர் காக்கும் தியாகங்களை செய்ய முன் வருவோம்.

    வரலாற்றில் வாழ்ந்து மாமனிதர்களான புத்தர், அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்றோரெல்லாம் பிற உயிருக்கு தீங்கு நினைக்கக்கூடாது என்பதனையே மாபெரும் வாழ்வு விழுமியாக போற்றினர். தன்னைப்போல் அனைத்து உயிரினங்களையும் மதிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தனர். அதற்காக தங்கள் இன்னுயிரையும் இழக்க துணிந்த இவர்களின் தியாகம் நம்மை தொடட்டும். இதேபோன்று இறைமகன் இயேசுவின் தியாகத்தையும் ஆழமாக நினைத்து பார்ப்போம். வாரந்தோறும் இயேசுவின் சிலுவைப் பயணத்தில் பங்கெடுத்து ஜெபித்துக் கொண்டிருக்கிற நாம் பிற உயிரினங்களையும் நமக்கு சமமானவர்களாக பாவிப்போம்.

    உடல் ஒறுத்தல்கள் செய்து நம்மை தூய்மைப்படுத்துவது போன்று, உள்ளத்திலும் ஒறுத்தல்களையும் மேற்கொள்வோம். வார்த்தைகளில் கட்டுப்பாடு, வாய்ப்பு இருக்கும் சமயங்களில் கைவிடப்பட்டோரை சந்தித்தல், ஆலயத்தில் ஜெபம் பொருட்களை பகிர்தல், தேவைகளை குறைத்து கொள்ளுதல், உணவு, தண்ணீரை வீணாக்காமல் இருத்தல், இயற்கை உயிரினங்களை போற்றுதல், மரம் நடுதல் போன்ற செயல்பாடுகளில் அதிக அக்கறையுடன் இறங்குவோம். நமது செயல்பாடுகளும், தியாகங்களும் ஏராளமான மனிதர்களுக்கு இயேசுவை காண்பிக்கட்டும். நாள் தவறாது நல்லதைச் செய்ய முனைப்போடு இறங்குவோம். இயேசுவின் தியாகமான “சிலுவைமரணம்”நமது வாழ்வின் முகவரியாகட்டும்.

    அருட்பணி. குருசு கார்மல்.
    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.

    கர்த்தரோடு நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் எதிர்காலத்திற்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். உங்கள் வாழ்க்கையில் இனி தோல்வி இல்லை. வெற்றி நிச்சயம்.
    தேர்வு நாட்களில் தேவன் தாமே தம்முடைய ஞானத்தினாலும், ஞாபகசக்தியினாலும் உங்களை நிரப்பி இவ்வருடம் உங்களுக்கு வெற்றியை நிச்சயம் கட்ட ளையிடுவார். உங்களுக்காக ஜெபத்தோடு நான் எழுதியுள்ள தேவனுடைய செய்தியை ஜெபத்தோடு வாசியுங்கள். நிச்சயம் தேவனுடைய அற்புதங்களைக் காண்பீர்கள்.

    நம்புங்கள் நீரே என் நம்பிக்கை. சங்கீதம் 39:7

    இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கலாம் அல்லது தேர்வுக்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். தயவு செய்து உங்களுடைய சுய பெலத்தையோ, ஞானத்தையோ நம்ப வேண்டாம். உங்களுக்கு வெற்றியை அருளுகிற ஜீவனுள்ள தெய்வம் ஒருவர் இருக்கிறார். அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரை நீங்கள் முதலாவது நம்ப வேண்டும்.

    நம்புவது என்றால் என்ன? எனக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டார், தன் ஜீவனையே எனக்காக கொடுத்தார். மூன்றாம் நாள் கல்லறையிலிருந்து உயிரோடெழுந்தார். அவர் இன்றும் ஜீவிக்கிறார் என்ற மாறாத இந்த சுவிசேஷத்தை நம்ப வேண்டும். இவ்வாறு நீங்கள் நம்பிக்கையோடு இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.

    மேலும், ‘கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்’ (சங்கீதம் 40:4) என்று தாவீது ராஜா கூறுகிறார். எந்தச் சூழ்நிலையிலும் குறிப்பாக தேர்வு காலங்களில் எந்த மனுஷனுடைய ஞானத்தையும், அறிவையும் நம்பாமல் கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள்.

    விடாமுயற்சி

    ‘செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்’. பிரசங்கி 9:10

    மேற்கண்ட வார்த்தையை தேவன் அருளின ஞானத்தோடு சாலொமோன் ராஜா கூறுகிறார்.

    பிரியமானவர்களே, அற்புதங்களை செய்கிறவர் தேவன்தான் என்றாலும், நாம் செய்ய வேண்டியதை நாம் தான் செய்ய வேண்டும் அல்லவா? இந் நாட்களில் கர்த்தருடைய ஆவியின் ஏவுதலினால் உங்களுக்கு நான் கூறும் மற்றொரு முக்கிய ஆலோசனை உங்கள் பாடங்களை கருத்தோடு முயற்சி எடுத்துப் படியுங்கள். அதிக உணவுக்கும், அதிக நித்திரைக்கும் இடங்கொடாதிருங்கள். இவை இரண்டும் சோம்பலையும், அசதியையும் கொண்டு வரும்.

    உங்களால் முடிந்தவரைக்கும் முயற்சிபண்ணுங்கள். உங்கள் இயலாமையைக் குறித்து மனவேதனைப்படாமல் ஆண்டவரிடம் அர்ப்பணித்து விடுங்கள். தேவன் அதை பொறுப்பெடுப்பார். பிரயாசப்படும் போதுதான் அதின் பலனை அடையமுடியும்.

    ஆயத்தம்

    ‘குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும்’. நீதிமொழிகள் 21:31

    எந்த ஒரு அற்புதங்களையும், வெற்றியையும் நாம் அடைவதற்கு ஆயத்தம் அவசியம் தேவை. அதைப்போல தேர்வு நாட்களில் உங்கள் பாடங்களை கருத்தோடு படிக்க நேரத்தை ஒதுக்குங்கள். படிக்க வேண்டிய நேரங்களில் டெலிவிஷன், நண்பர்கள், உறவினர்களை சந்தித்தல் இவையனைத்தையும் முற்றிலுமாய் தவிர்த்து தேர்விற்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

    மேலே குறிப்பிட்ட வசனத்தை கவனித்தீர்களா? குதிரையை யுத்தம் செய்வதற்கு ஆயத்தப்படுத்தினால் தான் வெற்றியை கர்த்தர் அருள முடியும். ஆயத்தமாயிருக்க வேண்டிய காலங்களில் ஏனோதானோ என்று வீணாக காலங்களைக் கழிக்காதீர்கள்.

    நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்

    ‘நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்’. எபேசியர் 5:16

    எனக்கன்பான மாணவ, மாணவியரே! உங்கள் வாழ்க்கையில் காலங்களும் நாட்களும் மிகவும் முக்கியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலங்களை கர்த்தர் வைத்திருக்கிறார்.

    நம்முடைய கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தைக் கொடுக்கவும், ஞானத்தையும், அறிவையும் அருளவும் வல்லவராயிருக்கிறார் என்றாலும் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் உண்டு, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வதுதான் அந்த முக்கியமான காரியம்.

    முதலாவது வேத வசனத்தை வாசித்து ஜெபிப்பதற்கு சற்று நேரத்தை ஒதுக்குங்கள். அதன்பிறகு உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை வீணாகக் கழிக்காமல் முயற்சி எடுத்துப் படியுங்கள். இந்நாட்களில் உங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொரு மணி நேரமும் மிகவும் முக்கியம். டெலிவிஷன் பார்ப்பது, சமூக தளங்களில் நேரத்தை வீணடிப்பது, நண்பர்களை சந்திப்பது... இவையனைத்தையும் முற்றிலும் தவிர்த்து படிக்க வேண்டிய காலங்களில் படித்து, ஓய்வு எடுக்க வேண்டிய நேரங்களில் ஓய்வெடுத்து கர்த்தரையே முற்றிலும் சார்ந்திருங்கள்.

    கர்த்தரோடு நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் எதிர்காலத்திற்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். உங்கள் வாழ்க்கையில் இனி தோல்வி இல்லை. வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    “ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்வதே நான் தரும் கட்டளை” என்றார் இயேசு. கடவுள் தரும் கட்டளை என்பது எல்லோரிடமும் அன்பாய் இருப்பது என புரிந்து கொள்ளலாம்.
    ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய (இயேசுவின்) சதையை உண்டு அவருடைய ரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்’ என்கிறது யோவான் 6:53.

    படிக்கும் போது ஒரு அதிர்ச்சியை உருவாக்கும் வாசகம் இது. ஆனால், ஆழமான ஆன்மிக அர்த்தங்களைக் கொண்டது.

    “நான் விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு” என்றார் இயேசு. யூதர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?” என அவர்கள் முணுமுணுத்தனர்.

    ‘தன்னுடைய உடலை எப்படி இவர் உண்ணத் தரமுடியும்? இதென்ன போதனை...’ என இயேசுவுக்கு எதிராக அவர்கள் சிந்தித்தார்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டு சட்டங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர்கள்.

    ‘ரத்தம் என்பது உயிர், அதை யாரும் சாப்பிடக் கூடாது’ என்பதை விவிலியம் சொல்கிறது. ‘ரத்தத்தைப் பருகக்கூடாதெனில் எப்படி இயேசுவின் ரத்தத்தைப் பருகுவது? இவர் எப்படி இதைச் சொல்லலாம்’ என அவர்கள் சிந்தித்தனர்.

    பாவத்தைக் கழுவத்தான் ரத்தம் பயன்பட்டு வந்தது. ஆனால் அது உணவாக உட்கொள்ளக் கூடியது அல்ல. இறைவனின் சமூகத்தில் சிந்தப்பட வேண்டியது மட்டுமே என்பதே வழக்கம்.

    இப்போது அது, “எனது ரத்தத்தைக் குடியுங்கள்” என மாறுகிறது. அதன் பொருள் என்ன? விலங்கின் ரத்தம் நம்மை பாவத்திலிருந்து கழுவியது எனும் நிலை, இன்று இயேசுவின் ரத்தம் பாவத்தைக் கழுவியதுடன் மீட்பும் கொடுத்தது என மாறியது.

    “அவர் பலியாகப் படைத்த ரத்தம்... அவரது சொந்த ரத்தமே” (எபி 9:12) என்கிறது விவிலியம். இது நித்திய மீட்பு. இந்த ரத்தத்தின் வழியாக நாம் கடவுளின் மீட்பில் இணைகிறோம்.

    அது நாம் என்றென்றைக்கும் பிழைக்கும்படியான ரத்தமாய் மாறுகிறது. இந்த ரத்தம், தொலைவில் இருந்த நம்மை அருகில் கொண்டு சேர்க்கிறது. அது நம்மை இயேசுவோடு இணைக்கிறது.

    ஆலயத்தில் திருவிருந்தில் பங்கு பெறும் முன் நாம் தாழ்மையின் செபத்தைச் சொல்கிறோம். அதன் பொருள், நாம் இறைவனை விட்டுத் தொலைவில் இருக்கிறோம், இப்போது இறைவனுக்கு சமீபமாய் வருகிறோம் என்பது தான்.

    நாம் திருச்சபையில் சேர்வதன் அடையாளம் திருமுழுக்கு. சுயமாய் இறைவனோடு இணைவதன் அடையாளம் திரு விருந்து.

    இயேசுவின் ரத்தம் நம்மை இறைவனின் அருகில் கொண்டு வருவதுடன், அவரில் நிலைத்திருக்கவும் செய்கிறது.

    நிலைத்திருத்தல் நமக்கு எதையெல்லாம் தருகிறது?

    1. பிதாவோடு உறவு

    “உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்” (யோவான் 15:1) என்கிறார் இயேசு.

    உயிர்த்தபின், “என் பிதாவும் உங்கள் பிதாவும்” என விண்ணகத் தந்தையை நமது தந்தையாய் அவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.

    அதனால் நம்மை அவர் சகோதரர், சகோதரியர் என அழைத்து மிகப்பெரிய பாக்கியத்தை அளிக்கிறார். கடவுளுடைய சகோதரர்களாய் உருமாறும் பாக்கியம் வேறெங்கும் கிடைக்காதது.

    2. வார்த்தையோடு உறவு

    “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும்” (யோவான் 15:7 ) என நிலைத்திருப்பது என்பது இறைவார்த்தையோடு நிலைத்திருப்பது என விளக்குகிறார். அப்படி இருக்கும் போது தான் நாம் கனி கொடுப்பவர்களாக மாற முடியும்.

    3. சீடரெனும் உறவு

    “நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” (யோவான் 15:8) என நம்மை அவரது சீடர்களாக மாற்றுகிறார். நிலைத்திருத்தல் என்பது சீடராதல் எனும் புரிதலை நமக்குத் தருகிறது.

    4. அன்பில் இணையும் உறவு

    “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்” (யோவான் 15:9) என நிலைத்திருத்தல் என்பது அன்பில் நிலைத்திருத்தல் என இயேசு புரிய வைக்கிறார். அப்படி நாம் அவரில் பெற்றுக்கொள்ளும் அன்பை பிறருக்குப் பகிர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

    5. கட்டளைகளோடு உறவு

    “நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10) என நிலைத்திருத்தல் என்பது கட்டளைகளைக் கடைபிடித்தல் என இயேசு விளக்கம் சொல்கிறார்.

    “ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்வதே நான் தரும் கட்டளை” என்றார் இயேசு. கடவுள் தரும் கட்டளை என்பது எல்லோரிடமும் அன்பாய் இருப்பது என புரிந்து கொள்ளலாம்.

    “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” என இயேசு (யோவான் 15:11) சொல்லி இறைவனின் நிலைத்திருத்தலே மகிழ்ச்சியில் நிலைத்திருத்தல் என்பதையும் விளக்குகிறார்.

    அவரில் நிலைத்திருப்போம். 
    ×