search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • நல்லாரை காண்பது நல்லது, நல்ல சொற்கள் மட்டுமே பேசுவது நல்லது.
    • காலையில் கொஞ்ச நேரமாவது சூரிய ஒளி அவசியம் பட வேண்டும்.

    நாம் இருக்கும் சூழ்நிலை நல்லோர்கள் இருக்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டும். நல்ல வார்த்தைகள் பேசும் இடத்தில் இருக்க வேண்டும். நல்ல செயல்கள் நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். இதனை சத் சங்கம் எனலாம். இதன் பலன்கள் ஏராளம். இதனைப் பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையினை படிப்போம்.

    விஸ்வாமித்திர மாமுனி ஒரு யாகம் செய்ய நினைத்தார். அந்த யாகம் எப்படிப்பட்டது என்றால் யாகத்தின் முடிவில் தன்னிடம் இருப்பதை எல்லாம் தானம் செய்து விட வேண்டும் என்பதாகும். இதுவே அந்த யாகத்தின் முறை.

    அதன்படியே யாகத்தின் முடிவில் விஸ்வாமித்திர முனி தன்னிடம் இருந்ததை எல்லாம் தானம் வழங்கிக் கொண்டிருந்தார். இதனை கேள்வி பட்ட வசிஷ்ட முனி தானும் விஸ்வாமித்திரரிடம் தானம் பெற வேண்டும் என்று விரும்பினார்.

    வசிஷ்டரே வருகிறார். தானம் பெறுகிறார் என்பது விஸ்வாமித்திரருக்கு மிகுந்த மகிழ்ச்சி. சற்று கர்வத்துடன் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டர் அமைதியாய் தன் ஆசிரமம் திரும்பினார்.

    கொஞ்சம் நாட்கள் சென்று விஸ்வாமித்திரர் போல் தானும் யாகம் செய்ய வேண்டும் என வசிஷ்ட மாமுனியும் விரும்பினார். அதேபோல் யாகம் செய்து தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் செய்யத் தொடங்கினார்.

    இதனை அறிந்த விஸ்வாமித்திரர் தானும் வசிஷ்டரின் தானத்தினைப் பெற ஆசைப்பட்டார். வசிஷ்டர் யாகம் செய்யும் இடத்திற்கு தானும் புறப்பட்டு சென்றார். ஆனால் விஸ்வாமித்திரர் அங்கு செல்வதற்குள் வசிஷ்டர் அனைத்தையும் தானம் செய்து முடித்திருந்தார். விஸ்வாமித்திரருக்கு கோபம் வந்தது.

    'வசிஷ்டரே, நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் என்னை வெறும் கையுடன் அனுப்புகின்றீர்கள்' என வேகமாய் பேசினார்.

    வசிஷ்டர் அவரை அமைதிப்படுத்தினார். 'கோபப்படாதீர்கள். பொருட்கள் இல்லாவிட்டால் என்ன? நல்லவர்களுடன் சேர்த்திருந்த சத்சங்க பலனாக ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) என்னிடம் உள்ளது. அதில் கால் பங்கினை உங்களுக்குத் தருகின்றேன்' என்றார்.

    இதைக் கேட்டு விஸ்வாமித்திரர் கோபம் கூடி விட்டது. அப்போதும் வசிஷ்டர் கோபப்பட வில்லை.

    'விஸ்வாமித்திரரே, நீங்கள் போய் உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரியனையும், இந்த பூமியையே தாங்கும் ஆதிசேஷனையும்- நான் அழைப்பதாகக் கூறி அழைத்து வாருங்கள்' என்றார் வசிஷ்டர்.

    விஸ்வாமித்திரருக்கு சற்று குழப்பமாக இருந்தது. யோசித்தார். சரி போய்தான் பார்ப்போமே என்று சொல்லி சூரிய பகவானி டம் சென்றார்.

    சூரிய பகவானோ, 'விஸ்வா மித்திரரே, நான் வந்தால் இங்கு என் வேலையை யார் கவனிப்பார்கள். நான் வர மாட்டேன் என்றார்.

    இதே பதிலையே ஆதிசேஷனும் சொன்னார். விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம் சென்று நடந்தவற்றை கூறினார்.

    வசிஷ்டர் உடனே அப்படியா? சரி, இருவரிடமும் சென்று வசிஷ்டரிடம் ஒரு நாழிகை 'சத் சங்க சக வாச' பலன் இருக்கிறது. அதில் இருவருக்கும் கால், கால்பங்கு தருவதாக கூறினார் என்று கூறி அழைத்துப் பாருங்கள்' என்றார்.

    விஸ்வாமித்திரரும் மீண்டும் சென்று இருவரிடமும் அவ்வாறே கூறினார்.

    இருவரும் உடனே 'இதோ வருகிறோம்' என்று கிளம்பினர். முதலில் மறுத்த நீங்கள் இப்போது மட்டும் வருகின்றீர்களே என்று கேட்டார் விஸ்வாமித்திரர்.

    'வசிஷ்டர் அளிக்கும் சத்சங்க சகவாச பலன் எங்கள் வேலையினைச் செய்யும் என இருவரும் பதில் அளித்தனர்.

    விஸ்வாமித்திரருக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. வசிஷ்டரிடம் இருந்து கால் பங்கு சத் சங்க பலனைப் பெற்று திரும்பினார்.

    தன் ஆசிரமத்தினை அடைந்த போது ஆசிரமத்தில் இருவர் இவருக்காக காத்திருந்தனர். அவர்கள் விஸ்வாமித்திரரை வணங்கி நாங்கள் பகவான் நாராயணனின் காவலர்கள் என்றனர். அவர்கள் மேலும் தொடர்ந்தனர்.

    'பகவான் நாராயணன் ஸ்ரீ ராமராக அவதாரம் செய்யப் போகின்றார். அப்போது மகாலட்சுமியான சீதாதேவிக்கும், ஸ்ரீ ராமருக்கும் விஸ்வாமித்திரரே திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது என பகவானே கூறிவிட்டு வரச் சொன்னதாக சொன்னார்கள். மேலும் எல்லாம் சத் சங்க சகவாச பலன் என்றும் சொன்னார்கள். அவ்வாறே நிகழவும் செய்தது.

    எனவே நல்லாரை காண்பது நல்லது, நல்ல சொற்கள் மட்டுமே பேசுவது நல்லது. நல்ல செயல்களை மட்டுமே செய்வது நல்லது. இத்தகைய சூழ்நிலைக்கு சென்று விடுவோமே.

    இந்த கருத்தினை மனதில் பதிய வையுங்கள் எது நடந்து விடுமோ? நடந்து விடுமோ? என்று அடிக்கடி நினைத்து பயப்படுகின்றீர்களோ அது நடக்கும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும் என கூறப்படுகிறது. எனவே நல்லதை மட்டுமே நினையுங்கள்.

    மனம் தூங்கி எழுந்த 10 நிமிடத்திற்குள் ஓராயிரம் எண்ண அலைகளை ஏற்படுத்துகின்றது. அதை செய்ய வேண்டும், இதை முடிக்க வேண்டும் என்றும் ஓட்டமாய் ஓடும். அதனுடன் நம்மால் ஈடு கொடுத்து ஓட முடியவில்லை.

    இதனால் குழப்பம், மனச் சோர்வு மட்டும்தான் மிஞ்சுகின்றது. இதனை சரியாக்கா விட்டால் மனக் கட்டுப்பாடே இருக்காதே. ஆக காலை எழுந்தவுடன் அல்லது முதல் நாள் இரவு கூட அந்த நாளுக்கான வேலைகளை எழுதி விடுங்கள்.

    நன்கு புரியும்படி எழுதுங்கள். அதிலேயே பாதி தெளிவாகும், பாதையும் ஏற்படும். மனதில் முறையற்ற ஓட்டங்களே வராது. சிந்திக்கவும், செயல்படவும் எளிதாய் இருக்கும்.

    எந்த நிகழ்ச்சியிலும், பேச்சு வார்த்தையிலும் சுவற்றில் எரிந்த பந்து போல் வேகமாய் செயல்படவோ, பேசவோ வேண்டாமே. ஒரு சில நொடிகள் உங்களை கட்டுப்படுத்துங்கள். விளைவுகள் எந்த பிரச்சினையும் தராது.

    மாறாக வேகமான பேச்சு, வேகமான நிகழ்வு இவை இரண்டும் தீராத பிரச்சினைகளைத் தரும். தினமும் ஒரு பக்கமாவது ஏதாவது புத்தகமோ செய்தி தாளோ படியுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கான ஏதோ ஒரு செய்தியினை அதில் தந்திருக்கும்.

    காலையில் கொஞ்ச நேரமாவது சூரிய ஒளி அவசியம் பட வேண்டும். கடைக்கு போங்க, கோவிலுக்கு போங்க, நடை பயிற்சி போங்க. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீங்க.

    சோர்வாக இருந்தால் சற்று வேலையை நிறுத்தி விட்டு 5 நிமிடம் மனதிற்கு பிடித்தாற் போல் ஏதாவது செய்யுங்கள். சரியாகி விடும்.

    உங்கள் நேரம் முக்கியமானது. உண்மையில் இது ஒன்றுதான் மிக மிக முக்கியமானது. ஆகவே உங்கள் இலக்கினை சிறிது சிறிதாக பிரித்து வகுத்து விடுங்கள். படிப்படியாக செயல் படுத்துவது எளிது.

    அடிக்கடி சிறிது நேரம் 'ஹாபி' எனப்படும் மகிழ்ச்சியான உங்களுக்கு பிடித்த எதனையும் செய்து பாருங்களேன். மனம் சோர்வடையாது. வேலை செய்யும் பொழுது முடிந்தவரை செல்போனை தள்ளி வையுங்கள். காதில் போன், கையில் வேலை, வாயில் பேச்சு, கூடவே நடை என்ற அஷ்டாவ தானம் மூளைக்கு சோர்வினைக் கொடுக்கும்.

    அதிகம் குற்றம் கண்டு பிடித்தலை தவிருங்கள். மனதில் நிம்மதி ஓடிப்போய் விடும். ஒவ்வொரு வேலைக்கும் அதனை முடிப்பதற்கான கால நேரம் உண்டு. அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

    எனவே உபயோகப்படுத்தாத பொருட்கள், துணிகள் இவற்றினை தேவைப்படுபவருக்கு கொடுங்கள். ஒவ்வொரு வேளை உணவிற்கும் அதிக கவனம் கொடுங்கள்.

    மனதில் ஒரு விஷயத்தில் கடுப்பு தன்மை நிறைந்து இருக்கின்றதா. நீங்கள் உங்கள் மீதும் அடுத்தவர் மீதும் உள்ள காயத்தினை கண்டிப்பாய் ஆற்றிவிட வேண்டும். இல்லையெனில் காயம் புரையோடி இருவரது வாழ்வினையும் அழித்துவிடும்.

    கோபம், வெட்கம், வேதனை என்று இருந்தால் நடப்பவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்களை மாற்றிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் தெரியும்.

    உலகில் அநகேருக்கு நாம் பார்க்கும் ஒரு முகம் மட்டுமே கிடையாது. 2 முகங்களாவது இருக்கும். பார்த்து பழக வேண்டும்.

    உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் உங்களை விட்டு விலகவே மாட்டார்கள். உணவினை மருந்து போல் சாப்பிட்டால் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் வராது.

    • ஓய்வில் திளைப்போருக்கு உழைப்பு கடினமானது என்றும் கருதுகிறோம்.
    • ஒன்றில்லாமல் மற்ற ஒன்றில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

    நியாயமான உழைப்பிற்கும் நிம்மதியான ஓய்விற்கும் அன்றாடம் காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்!.

    கடுமையாக உழைக்கக் காத்திருக்கிறோமோ இல்லையோ நாம் எல்லோரும் கனிவாக ஓய்வெடுப்பதற்காக எப்போதும் ஆர்வத்தோடு காத்திருக்கத்தான் செய்கிறோம். ஆனால் பலருடைய வாழ்வில் நிம்மதியான ஓய்வும் தொந்தரவு இல்லாத உறக்கமும் வாய்ப்பதே இல்லை. உழைக்கத் தயங்குகிற நாம் உறங்கத் துடித்தாலும் அது வாய்க்காமல் போவதற்கு என்ன காரணம்?.

    பொதுவாக உழைப்பும் ஓய்வும் எதிர் எதிர் ஆனவை என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்கும் மனிதனுக்கு ஓய்வு பகையானது என்றும், ஓய்வில் திளைப்போருக்கு உழைப்பு கடினமானது என்றும் கருதுகிறோம். உண்மையில் உழைப்பும் ஓய்வும் ஒன்றிலொன்று பிணைந்திருக்கும் இணைகள்; ஒன்றில்லாமல் மற்ற ஒன்றில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

    உழைக்கத் தெரிந்தவர்களே உண்பதற்குத் தகுதியானவர்கள்! என்று கூறலாம். இதையே இன்னும் கொஞ்சம் மேம்படுத்திய சிந்தனையில் உழைக்கத் தெரிந்தவர்களே ஓய்வெடுக்கும் உரிமையும் உடையவர்கள் என்று உரக்கக் கூறலாம். ஏனெனில் உழைப்பும் ஓய்வும் ஒன்றையடுத்து ஒன்றாக நிகழ வேண்டியவை ஆகும்.

    இவற்றிற்கு இடையில் உணவும் உண்பதும் இணைந்து கொள்வதாக இருக்கட்டும். நல்ல உழைப்பு, நற்பொருள் ஈட்டல், நல்லுணவு சேகரித்து வயிறார உண்ணல், நிம்மதியான ஓய்வு... இவைதானே வாழ்வியலின் சிரமமான நிகழ்வாக இருக்க வேண்டும்.

    நமது உணவுக்கான உழைப்பை நாமே உழைக்காமல், யாரோ பிறரது உழைப்பில் வயிறுவளர்க்கப் பலர் முனைந்து செயல்படுகிறார் கள். ஆனால் திருடிப் பிழைத்த பிழைப்பாலும் உணவாலும் திருப்தியான உறக்கமும் ஓய்வும் கிட்டுமா?.

    வாழ்நாள் இரவும் பகலுமாகப் பகுக்கப் பட்டிருப்பதுபோல, அவை தொடர்ந்து மாறிமாறி வந்து காலத்தின் நீட்சி நிகழ்ந்து கொண்டிருப்பதுபோல, மனித வாழ்க்கையிலும் உழைப்பும் ஓய்வும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இடையறாத உழைப்பு உடற் சோர்வையே தரும்;

    அதுபோல விழிப்பில்லாத ஓய்வும் மனச் சோர்வைத் தந்துவிடும். உழைப்பும் ஓய்வும் மாறிமாறி வரும் வாழ்க்கை யிலேயே திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்து காணப்படும்.

    உடல் தளரும்வரை உழைத்துவிட்டு உறங்கப் போகிறவர்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறார்கள். நல்லபடியாக உறங்கி, ஓய்வெடுத்தபிறகு விழித்து, மீண்டும் உழைப்பில் ஈடுபட்டால், முன்னைவிடப் பன்மடங்குப் புத்துணர்வுடன் செயபட்டுச் சாதனைவெற்றி களை எளிதில் எட்டிப் பிடித்துவிடுகிறார்கள்.

    உழைக்கச் சோம்பேறித்தனப்படுவோர், எப்போதும் ஓய்வெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்; ஆனால் அவர்கள் எடுக்கிற ஓய்வென்பதும் உறக்கமென்பதும், நோய்ப் படுக்கையில், நோயாளிகள் பெறுகிறதைப்போல வலிகள் நிறைந்ததாகவே இருக்கும்.

    உலகில் ஒருவர் நினைத்தால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கடின உழைப்பைச் சொந்த முயற்சியில் மேற்கொண்டு விடலாம்; ஆனால் கனிவான ஓய்வு என்பதும், நிம்மதியான உறக்கம் என்பதும் தாமாக அமைந்தால் மட்டுமே உண்டு.

    காட்டின் ராஜா சிங்கத்திற்கு ஆறேழு மாதமாகச் சரியாகத் தூக்கம் வராத நோய் வந்துவிட்டது. பகலில் படுத்தாலும் உறக்கமில்லை. இரவில் படுத்தாலும் கண்மூடவே முடியவில்லை. ஓய்வென்பது இல்லவே இல்லை. உலகின் மிகச்சிறந்த பஞ்சுமெத்தைகள் மூலம் படுக்கைகள் வந்து சேர்ந்தன.

    சிங்க ராஜாவுக்குப் பிடித்தமான உணவுவகைகள் மிகுந்த சுவையுடன் சமைக்கப்பட்டு, மூன்றுவேளையும் பரிமாறப் பட்டன. கைகால் பிடித்துவிடப் பரிவாரங்கள்; நாலாபுறமும் நின்று இரவுபகலாக விசிறிவிடப் பணியாளர்கள்... எவ்வளவு இருந்தாலும் உறக்கம் மட்டும் ஒருபொட்டு வரவில்லை சிங்கராஜாவுக்கு.

    மந்திரி யானையார் அறிவிப்பும் செய்துவிட்டார்; எப்படியாவது நமது ராஜாவை உறங்க வைப்பவருக்குத் தக்க சன்மானங்கள் வழங்கப்படும். காட்டில் வாழும் மிருகங்கள் எல்லாமும் ஆளுக்கொரு மருந்துடன் ராஜாவுக்கு வைத்தியம் பார்க்க வந்துவிட்டன.

    ஒரு காட்டெருமை ஒரு பெரிய குடம் நிறையப் பாலைக் கொண்டுவந்து அரண்மனையிலேயே சுண்டக்காய்ச்சி, இரண்டு மூன்று இரவுகளுக்குக் கொடுத்துப் பார்த்தது; பயனில்லை; வயிறு உப்பிக்கொண்டதுதான் மிச்சம்.

    ஒரு குரங்கு எங்கிருந்தோ காட்டில் ஏதேதோ புற்கள், மூலிகைகளையெல்லாம் போட்டு ஒரு தைலத்தைத் தயாரித்துக் கொண்டுவந்து சிங்கராஜாவின் உடம்பு முழுவதும் தடவிவிட்டு வெந்நீர்க் குளியல் செய்ய வைத்தது; சிங்கராஜா முன்னைக்காட்டிலும் சுறுசுறுப்பானாரே தவிர உறக்கம் என்பது வரவில்லை.

    பலாப்பழ வைத்தியம், மாம்பழ வைத்தியம், வாழைப்பழ வைத்தியம் என ஏகப்பட்ட வைத்தியங்களோடு ஏகப்பட்ட மிருகங்கள் வந்தன; வயிறும் உடம்பும் புண்ணாயினவேயொழிய உறக்கம் வந்தபாடில்லை. ஒருகட்டத்தில் இனிமேல் வைத்தியம் என்று கூறிக்கொண்டு யார் உள்ளே வந்தாலும் அரண்மனைக்குள் விடாதீர்கள்! என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் சிங்கராஜா.

    அந்த நாட்டிலுள்ள புத்திசாலியான நரியொன்று ராஜாவுக்கு மருத்துவம் பார்க்கப்போகிறேன் என்று அரண்மனைக்குள் நுழைந்தது. வந்தால் வருகிறது! என அனுமதித்த சிங்கராஜா, ஒரு நிபந்தனை ஒன்றை விதித்தது. அதாவது இனிமேல் மருத்துவம் பார்க்க யார் வந்தாலும், நோய் குணமாகவில்லையென்றால், அவர்கள் தலை துண்டிக்கப்படும். பரவாயில்லை நான் தயார் என்று நரி அரசனிடம் சென்று நின்றது.

    "வணக்கம் அரசே! தங்களுக்கு உறக்கம் வராமலிருக்கும் நோய்க்கான மருந்து என்னுடைய தாத்தா நரியாரிடம் இருக்கிறது. அவர் நமது காட்டிற்கு அருகிலுள்ள மலைச் சிகரத்தின் உச்சியில் குடியிருக்கிறார். இப்போது நீங்கள் என்னோடு வந்தால் அவரிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். அவர் உங்களை நேரடியாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டுச் சரியான மருந்தை வழங்கி விடுவார். புறப்படுங்கள் செல்வோம்!" என்றது நரி.

    "நரியே! நோய்மட்டும் குணமாகவில்லை யென்றால், உன் தலையோடு உன் தாத்தா நரியின் தலையும் சேர்த்து துண்டிக்கப்படும் ஜாக்கிரதை!" என்று கூறிக்கொண்டே சிங்கராஜா நரியோடு மலைச்சிகரம் நோக்கிக் கிளம்பியது. காலையில் கிளம்பியவர்கள் நடந்தே மலைச்சிகரம் சென்று அடையப் பிற்பகல் மூன்று மணி ஆகிவிட்டது.

    அங்கே போனப்பிறகுதான் நரி சொன்னது," அரசே என்னை மன்னித்து விடுங்கள்! என்னுடைய நரியார் தாத்தா அவசர வேலை நிமித்தமாக அடுத்துள்ள மலைவரை சென்றுள்ளார்; அவர் நாளைதான் இங்கு வந்து சேர்வார்; நான் மறந்தே போய் விட்டேன்; இப்போதைக்குக் கீழே இறங்கிப் போவோம்; நாளை மீண்டும் வருவோம்!".

    கடும்கோபத்திற்கு ஆளான சிங்கம், "இதுவரை இவ்வளவுதூரம் சிரமப்பட்டு ஏறிவந்ததே மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்; இப்போது மீண்டும் இறங்கிப்போய், மீண்டும் நாளை ஏறி வர வேண்டுமா?" என்று சோகமாக கர்ஜித்தது. "ராஜா நோய் நிச்சயம் தீருமென்றால், சிரமப்படுவதில் தவறில்லையே!" பரிதாபமாகச் சொன்னது நரி.

    மறு நாள் காலை. அரண்மனை வாசலில் வந்து சிங்கராஜாவை மீண்டும் மலைச் சிகரத்திற்கு அழைத்துப் போவதற்காக நரி நின்றது. வாசலில் இருந்த காவலர்கள், 'அரசரை இன்னும் நாலைந்து மணிநேரத்திற்குப் பார்க்க யாருக்கும் அனுமதியில்லை; அவர் ஆழ்ந்த உறக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டி ருக்கிறார்' என்று கூறினர்.

    தனது புத்திசாலித்தனம் வேலைசெய்யத் தொடங்கி விட்டதை எண்ணி மனத்திற்குள் மகிழத் தொடங்கியது நரி. ஆமாம்! தனக்கான உணவுத்தேவைக்குக்கூட வேட்டையாடச் செல்லாத சிங்கத்திற்கு உறக்கம் எப்படி வாய்க்கும்? ராஜாவாக இருந்ததால் எந்தவொரு உடல் உழைப்பையும் மேற்கொள்ளா ததால் சிங்கத்திற்கு உறக்கம் வராத நோய் ஒட்டிக்கொண்டது;

    நேற்று மலைச் சிகரம் ஏறி இறங்கும் உடல் உழைப்பு மேற்கொண்டதால், இன்று காலைவரை சிங்கம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது; இனி அது விழித்துக்கொள்ளும்!. உழைத்தால் தான் உறக்கமும் ஓய்வும் சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ளும்.

    உழைப்பு என்பது இருவகை யில் நிகழும்; ஒன்று உடல் சார்ந்த உழைப்பு; மற்றொன்று மூளை சார்ந்த உழைப்பு. இந்த இருவகை உழைப்பிலும் மனம் சம்பந்தப்பட்டிருக் கும். மனம் சோர்ந்து போகாதவரை உடலும் மூளையும் இடைவிடாது உழைத்துக்கொண்டே இருக்கும்; மனம் சோர்வடையும்போது தேவைப்படும் அளவுக்கு ஓய்வை மேற்கொண்டால், பிறகு உடலும் மூளையும் மனமும் புத்துணர்வைப் பெற்றுப் புதுப்புது உழைப்பு முயற்சிகளில் வெற்றிகரமாக ஈடுபடத் தொடங்கும்.

    மனித வாழ்க்கை என்னும் வண்டி, திட்டமிட்டபடி வெற்றியை நோக்கிப் பயணிக்க உழைப்பு, ஓய்வு என்னும் இரண்டு மாடுகள் சமமான அளவிலும் பலத்திலும் இழுத்துச்செல்லத் தேவை.

    வாழ்க்கையென்னும் வண்டியை முன்புறமாக உழைப்பு என்னும் மாட்டையும், பின்புறமாக ஓய்வு என்னும் மாட்டையும் கட்டி இழுத்தால் வண்டி முன்னும்போகாது; பின்னும் போகாது!;

    மாறாக வண்டிதான் உடைந்து போகும். வாழ்க்கை என்னும் வண்டி சீராகவும் சுகமாகவும் நகர்ந்துசெல்ல உழைப்பும், ஓய்வும் வண்டியின் முன்னே பூட்டப்பட்ட இரட்டைமாட்டு வண்டிகள்போல ஒன்றற்கொன்று ஒத்தாசையோடு செயல்பட வேண்டும்.

    உடல் உழைப்பு சார்ந்ததாகவோ அல்லது மூளை உழைப்பு சார்ந்ததாகவோ நாம் பார்க்கும் வேலைகளில் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், உழைப்பு-ஓய்வு-உழைப்பு-ஓய்வு என உழைப்பிற்கும் ஓய்விற்கும் சரிவிகிதமான நேரங்களை ஒதுக்கக் கூடியதாக நமது அன்றாட வாழ்வியல் அமைந்திருக்க வேண்டும்.

    ஓய்வு என்பதும் உறக்கம் என்பதும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையிலிருந்து முழுமையாக விடுபடுவது ஆகும். இதுவரை பார்த்தவரை இந்த வேலை போதும்! என்கிற நிலையில் வேலையை நிறுத்திவிட்டு ஓய்வுக்குச் செல்லவேண்டும்.

    வேலை முடியும்வரை தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று நினைப்பது, நமது மனத்திற்கும் உடம்புக்கும் நாம் இழைக்கும் துரோகமாகும். கனத்தில் மிகவும் லேசான மயில்தோகையாக இருந்தாலும் அளவுக்குமீறி ஏற்றினால் வண்டியின் பாரம் தாங்கமாட்டாமல் அச்சு முறிந்து போகும் என்பார் வள்ளுவர். குறிப்பிட்ட ஓய்வு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வேலைப்பளு ஏறிக்கொண்டே போனால் அழுத்தம் தாங்காமல் மனிதமனமும் முறிந்து போகும்; உடலும் தளர்ந்து போகும்.

    உழைக்கும்போது உழைப்பிலும் ஓய்வின் போது ஓய்விலும் முழுக்கவனம் செலுத்தும் வித்தை கைவரப் பெற்றவர்களாக நாம் மாறவேண்டும். சிலர் வேலை பார்ப்பதிலேயே அடிமையாகிப் போனவர்களாக இருப்பார்கள்;

    ஈடுபாட்டோடு உழைப்பதன் மூலமாகவே அந்த உழைப்படிமைத் தனத்திலிருந்து அவர்களை வெளிக்கொணர முடியும். நன்றாக மனத் திருப்தியோடு உழைப்பவர்களாலேயே, நன்றாக மன அமைதியோடு உறங்கவும் ஓய்வெடுத்துக் கொள்ளவும் முடியும்.

    கடின உழைப்பு கனிவான ஓய்விற்கு உதவி செய்கிறது! கனிவான ஓய்வு கடின உழைப்பிற்குக் கதவுகள் திறக்கிறது!

    தொடர்புக்கு 9443190098

    • அரசின் பிரதான திட்டங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.
    • பயனாளிகளுக்கு கிடைக்காமல் போவதால், முடங்கும் அபாயம்.

    தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, `பிக்மி' எண் பெறப்படும்.

     கர்ப்பகாலத்தின் 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பேறு காலத்தில் 3-வது மற்றும் 6-வது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.

    அதில் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரீட்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர்துண்டு உள்ளிட்டவை இருக்கும். முன்பு 5 தவணையாக வழங்கப்பட்ட வந்து உதவித்தொகை, தற்போது 3 தவணையாக வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் இதில் பல பயனாளிகள் ஆரம்பம் முதல் முறையாக பதிவு செய்து, பிக்மி எண் பெறப்பட்டும், தற்போது குழந்தை பிறந்த நிலையிலும் உரிய முதல் தவணை உதவித்தொகை கூட கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

    கடந்த ஓராண்டுக்கு மேலாக பதிவு செய்து பயனாளிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது குழந்தை பிறந்த 3 மாதங்கள் ஆன நிலையில் கூட, திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் உதவித்தொகையின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை.

    ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் கணவன், மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இதனால் ஆதார் எண்ணில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பெறவோ, கைவிடப்பட்ட செல்போன் எண்ணுக்கு பதிலாக வேறு எண்ணை ஆதாருடன் இணைப்பதிலோ பெரும்பாடாகிவிடுகிறது என குற்றம் சாட்டுக்கின்றனர்.

    அதேபோல் வங்கியுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், உள்ளிட்ட குழப்பங்களால் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. தற்போது புதியதாக அஞ்சல் சேமிப்பு கணக்கு எண்ணையும் கேட்பதால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இன்றைக்கு குழந்தை பிறந்து 3 மாதங்களை கடந்த நிலையிலும் எங்களுக்கு வரவேண்டிய உதவித்தொகை தொடர்பாக, இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஊட்டச்சத்து பெட்டகமும், இரண்டுக்கு பதில் ஒன்று தான் வழங்கப்பட்டது.

    குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்காததால், வயிற்றுக்குள் வளரும் குழந்தைகளும் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் பாதிக்கப்படும் சூழலை பார்க்கிறோம். போதிய தெம்பின்றி குழந்தைகள் பிறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பின்னிப்பிணைந்துள்ளன.

    அரசின் பிரதான திட்டங்களுள் ஒன்றாக இந்த திட்டம் போற்றப்படுகிறது. ஆனால் அதேசமயம் இந்த திட்டம் தற்போது உரிய பயனாளிகளுக்கு கிடைக்காமல் போவதால், முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் பல கோடி கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெற்றுள்ள, முதன்மை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, அரசின் மீதான அனைவரின் நம்பிக்கையை காபாற்ற வேண்டும் என கர்ப்பிணி பெண்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஒரு சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இதுவரை மாநிலம் முழுவதும் டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 1.17 கோடி பெண்களுக்கு ரூ.11,702 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதன்படி, இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி இப்போது மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. கா்ப்ப காலத்தின் நான்கா வது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2,000 வழங்கப்படுகிறது.

    அதேபோன்று பேறுகாலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.

    ஊட்டச்சத்து பெட்டகங்களில் நெய், உலர் பேரிச்சம், இரும்புச்சத்து திரவியம், கர்ப்பிணி தாய்க்கான ஊட்டசத்து மாவு போன்றவை இருக்கும்.

    இதற்கென்று இப்போது 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தின்கீழ் இணையதளப் பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதால் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் உடனே மகப்பேறு நிதியுதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அது இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முருகனை அருணகிரிநாதரும் பாடியுள்ளார்.
    • மேரு மலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது.

    தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள், காவிரித் தென் கரையில் அமைந்துள்ள தலம், பெருவேளூர். திருப்பெருவேளூர் என்னும் தொன்மைப் பெயர் கொண்ட இவ்வூர், இன்று அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது.

    இதே மாவட்டத்தில் வேறொரு அய்யம் பேட்டை இருப்பதால் இவ்வூரை மணக்கால் அப்பம்பேட்டை என்றழைக்கின்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடப்பெற்ற பழம் பதி.

    சூரனை சம்ஹாரம் செய்தபின், அந்த தோஷம் நீங்குவதற்காக முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட சில தலங்களுக்குச் சென்றார். திருச்செந்தூரில் இருந்து கீழ்வேளூர், திருமுருகன்பூண்டி, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் இத்தலமாகிய திருப்பெருவேளூர் ஆகியன அத்தகைய தலங்கள்!

    இவ்வாலயத்து இறைவன் சுயம்புவானவர். இத்தலத்து முருகனை அருணகிரிநாதரும் பாடியுள்ளார். ஆலயத்தின் பின்புறம் உள்ள தீர்த்தம் சரவணப்பொய்கை என்றே அழைக்கப்படுகிறது.

    வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே 'யார் பெரியவர்? என்ற போட்டி நடந்ததாம். அப்போது மேரு மலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது. அதில் ஒன்று இந்த தலத்தில் விழுந்து அதுவே காலப்போக்கில் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டதாம். இந்த ஐதீகத்தின் காரணமாக, இத்தல இறைவனை வழிபட்டால், கயிலை மலையை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

    மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி கனகம்பீரமாக நிற்கிறது. கோபுர வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தால், தரை தளத்தில் பலிபீடம், வானளாவி நிற்கும் கொடிமரம், அடுத்து நந்தியம் பெருமான் அமர்ந்திருக்கும் நந்தி மண்டபம்.

    இது மாடக்கோவில் வகையைச் சேர்ந்தது. கோச்செங்கட் சோழன் கட்டியதாக வரலாறு. இறைவன், அபிமுக்தீஸ்வரர். இவருக்கு பிரியா ஈஸ்வரர் என்றும் பெயருண்டு.

    ஆலயத்து நந்தியம்பெருமானை வணங்கி விட்டு நிமிர்ந்தால், எதிரே இடதுபுறம் உள்ள வாசல் வழியே 18 படிகள், கட்டுமலை மேலே செல்கின்றன. படியேறி கோவிலுக்குள் நுழைகிறோம். எதிரே சோமாஸ்கந்த மூர்த்தம் அவரை வணங்கி, வலதுபுறம் உள்ள வாசல் வழியே நுழைந்தால், மகா மண்டபத்தில் தெற்குப் பார்த்து நடராஜர், சிவகாமி அம்மையுடன் அருள் தோற்றம் அளிக்கிறார்.

    கருவறையில் கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு லிங்கமாக அபிமுக்தீஸ்வரர். சுயம்புலிங்க ரூபங்களுக்கே அலாதியான ஒரு வசீகர சக்தி இருப்பதை உணர முடியும். இந்த ஈசனும் அதை நம் உள்மனதுக்கு உணர்த்துகிறார்.

    அவரை நெஞ்சார தரிசித்து, பரவசத்தோடு மீண்டும் படியிறங்கி கீழே தரை தளத்துக்கு வந்து பிரகாரத்தை வலம் வரத் தொடங்கினால், முதலில் கன்னி மூலையில் எதிர்ப்படுபவர் பிரதான விநாயகர். இவர் தனிச்சந்நதியில் வீற்றுள்ளார். அதுபோல் தெற்கு நோக்கிய தனிச்சந்நதியில் தட்சிணாமூர்த்தி பிரதான விநாயகருக்கு பக்கத்து சந்நதியில் வைகுந்த நாராயணப் பெருமாள்.

    தாருகா வனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு சென்றார் சிவபிரான். அப்போது விஷ்ணு மோகினி வடிவம் எடுத்துச் சென்றார். தன்னுடைய பெண் வடிவத்தில் இருந்து, ஆண் உருவம் பெற இத்தலத்து இறைவனை திருமால் வந்து வழிபட்டார். அதன் நினைவாக இங்கு திருமால் தனிச்சந்நதி கொண்டு எழுந்தருளி உள்ளார் என்கிறது, தலபுராணம்.

    கருவறை விமானத்தின் பின்புறம் சுப்பிரமணியர் வள்ளி - தெய்வானை சமேதராக விளங்குகிறார். இவர்தான் அருணகிரியாரால் பாடப்பெற்றவர்.

    இவ்வாலயத்தின் மற்றொரு விசேஷம், இங்கே பிரகாரத்தில் இரண்டு சண்டிகேஸ்வரர்கள். இருவருக்கும் தனித்தனிச் சந்நதியும்கூட. பிரத்யேக சண்டிகேஸ்வரர் கல்லில் வடிக்கப்பட்டு, யோக நிலையில் காணப்படுகிறார். இவருக்கு யோக சண்டிகேஸ்வரர் என்றே பெயர்.

    கோமுகியின் அருகே ஆகம விதிப்படி மற்றோர் சண்டி கேஸ்வரர் கோஷ்டத்தில் துர்க்கைக்கும் பெரிய அளவில் தனிச்சந்நதி உள்ளது.

    தரைதளத்தில் இறைவன் கருவறைக்கு நேர் இடது திசையில் அம்பாள் சந்நதி, அம்மையின் பெயர் - அபினாம்பிகை. இவருக்கு ஏலவார் குழலி என்றும் பெயருண்டு. ஆலய பிராகாரத்தில் மேற்கு நோக்கிய நிலையில் மகாலிங்கம், சரஸ்வதீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஐராவதீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என ஐந்து சிவலிங்கங்கள். இவற்றுள் சரஸ்வதி பூஜித்த லிங்கம், 'சரஸ்வதீஸ்வரர்' என்னும் பெயரில் அமைந்துள்ளது.

    இவர் தனி அலங்காரத்துடன் விளங்குகிறார். தனிச்சிறப்பு மிக்கவர். முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு சிவபக்தர், தன் புதல்வனின் பேச இயலாத குறைபாட்டை நீக்கும்படி தினமும் இந்த ஈசனை அபிஷேகம் செய்து ஆராதித்து வந்தார். அவரது குழந்தைக்குப் பேசும் திறனை அளித்து, அருள்புரிந்தார் ஈசன்.

    குழந்தைக்கு பேச்சுத்திறன் குறைபாடு இருந்தாலோ அல்லது பெரியவர்களாகியும் சிலருக்கு சரிவர பேச வராமல் கஷ்டப்பட்டாலோ, இந்த சரஸ்வதீஸ்வரரை வழிபட்டு பிரார்த்தித்துக் கொண்டால், விரைவில் பேச்சுக் குறைபாடு நீங்கி விடுகிறது.

    கிழக்கு பிராகாரத்தில் பைரவர், கால பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள்.

    இத்தலம் சுக்ர நீச நிவர்த்தித் தலம். ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைவாக இருந்தால் ஏற்படக்கூடிய முன்னேற்றத் தடையை இத்தலத்து ஈசனை வழிபட்டால், குறை நிவர்த்தியாகிறது.

    அசுர குருவான சுக்ராச்சாரியார் ஒருமுறை தனது ஆற்றல்கள் அனைத்தையும் இழந்தார். பின்னர், இந்தத் தலத்திற்கு வந்து, சரவண தீர்த்தத்தில் நீராடி, அம்பிகையை நோக்கித் தவமிருந்தார்.

    அன்னையின் அருட் கடாட்சம் கிட்டியதால், சுக்ராச்சாரியாருக்கு மீண்டும் அனைத்து ஆற்றல்களும் பூரணமாகக் கிடைத்தது.

    சுக்ராச்சாரியார் போலவே மிருகண்டு மகரிஷி, பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு நற்பேறு அடைந்துள்ளனர். இதன் அடையாளமாக இங்குள்ள கோஷ்டத்தில் மிருகண்டு முனிவருக்கும் சிலா ரூபம் வைக்கப்பட்டுள்ளது.

    மூன்று வயதிலேயே அதீத பேச்சுத்திறன், விவாதத்திறன், கவிபாடும் திறன் பெற்றிருந்த திருஞானசம்பந்தரே இத்தலத்து ஈசனை பிணியில்லார் தமக்கென்றும் கேடில்லார்' என மொழிகிறார். திங்கட்கிழமைகளில் இத்தலத்து சரஸ்வதீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட, பேச்சுக் குறைபாடுகள் நீங்குவது அனுபவ உண்மை.

    ஊரின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமான அய்யனார் கோவில்கள் உள்ளன. இதுவும் ஒரு சிறப்பு.

    கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, வள்ளி தெய்வானை திருமணம், கார்த்திகை சோமவாரம், ஆருத்ரா தரிசனம், நவராத்திரி, சிவராத்திரி, குரு, ராகு-கேது மற்றும் சனிப்பெயர்ச்சி தினங்கள், வைகாசி விசாகம் ஆகியன இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    சுக்ரதோஷம் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமையிலும், பவுர்ணமி திதியிலும் அம்பிகையை பிரார்த்தித்து வழிபடவேண்டும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் தேய்பிறை பஞ்சமியில் ஈசனை வந்து வழிபட்டு நலம் பெறலாம்.

    கும்பகோணத்தி இருந்து திருவாரூர் போகும் வழியில் குடவாசலை அடுத்துள்ளது, மணக்கால் அய்யம்பேட்டை. திருவாரூரில் இருந்து 15 கி.மீ. நன்னிலத்தில் இருந்து 10 கி.மீ.தொலைவு. பஸ் வசதி உண்டு.

    • நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
    • வன்னிமரம் சனி பகவானுக்கு உகந்த மரமாகும்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திறந்த வெளியில் சோலைகளின் நடுவில் வன்னி மரத்தடியில் காட்சி தருகிறார் விநாயகர். அவரைச் சுற்றிலும் வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது மரங்கள் காணப்படுகின்றன.

    ஒன்பது விருட்சங்களுடன் கூடிய இந்த விநாயகரை தரிசிப்பதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.

    வன்னிமரம் சனி பகவானுக்கு உகந்த மரமாகும். சனி தோஷம் ஏற்படாமல் இருக்க இவர் இந்த மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதாகவும் கூறுகிறார்கள்.

    சனி திசை, சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வன்னி இலையால் அர்ச்சனை செய்தால் நிவர்த்தியாகும்.

    மதுரை தெப்பக்குளம், வண்டியூர், அனுப்பானடி - ஆகிய 3 சந்திகள் கூடும் இடத்தில் குளம் தோண்டும்போது 7 அடி உயரமுள்ள ராட்சத விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதை மன்னர் திருமலை நாயக்கர் மீனாட்சி கோவிலில் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.

    முக்கு தெருக்களில் ஊரணி தோண்டும் போது கிடைத்ததால் முக்குருணி விநாயக ராக வணங்கப்பட்டார். 3 குருணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைத்து விநாயகர் சதுர்த்தியின்போது வழிபடுவதால் முக்குருணி விநாயகர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இவ்விநாயகர் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் கண் திருஷ்டி தோஷம் விலகும். இடையூறுகள் விலகி காரியம் ஜெயம் ஆகும்.

    மதுரை அருகே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புவனம். அங்கு வைகை ஆற்றுப்பாலத்தை கடந்து நடந்து சென்றால் மடப்புரம் விலக்கு, ஆர்ச் எதிரில் 4 கோட்டை சுவர் போன்ற அமைப்பு காணப்படும். அந்த பகுதியில் விசாலாட்சி ஜோதிட மந்த்ராலயத்தில் திசை மாறி தெற்கு முகமாக விசாலாட்சி விநாயகர் அருள் பாலித்து வருகிறார்.

    இங்கு செவ்வாய், வியாழன், வெள்ளிக் கிழமைகளிலும் சங்கடஹரசதுர்த்தி அன்றும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் வருகை தந்து 7 பெரிய தேங்காய் மாலையாக சமர்ப்பித்து 7 லட்டு, 7 எலுமிச்சம்பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

    இதனால் முன்னோர் சாபங்களால் உருவான தோஷங்கள் நீங்கி தொழில் வளம் பெருகும் என்கிறார்கள். அதோடு கடன் தொல்லை தீர்ந்து, திருமணத்தடையும் அகலும் என்பது ஐதீகம்.

    கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழியில் புகழ் பெற்ற வெள்ளை வர்ண விநாயகர் ஆலயம் உள்ளது. ஆவணி மாதம் சதுர்த்தி நாளில் வெள்ளை வர்ண விநாயகரை வணங்கினால் பாவ தோஷம் நீங்கப் பெறலாம் என்கிறது தல புராணம்.

    இவர் கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. கற்பூரப் பொடி அபிசேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இவருக்கு கமலாம்பாள், வாணி என இரு மனைவியர் உண்டு. இவரை வணங்கினால் திருமணத் தடைக்கான தோஷங்கள் இருந்தால் அவை நீங்கும், குழந்தை செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் மேலக் கோட்டையூர் இருக்கிறது. இந்த ஊரில் ஸ்ரீதலை வெட்டி பிள்ளையார் உள்ளார்.

    ஒரு காலத்தில், இந்த பிள்ளையாரின் சிரசில் "தன் தலையை நீக்கி தனத்தை எடு" என்று ஒரு வாசகம் இருந்ததாம்.

    அதன்படி விநாயகரின் தலை துண்டிக கப்பட்டதாம். அதுக்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து, ஊருக்கு குளம் வெட்டவும். கிணறு வெட்டவும் பயன்படுத்தினார்கள். இந்த பிள்ளையார் அன்றிலிருந்து தலை வெட்டி விநாயகர் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது.

    கல்யாணத்தடையால் கலங்கி தவிப்ப வர்கள் இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவித்து பச்சரிசி, எள், வெள்ளம் எனக் கலந்த கலவையைக் கீழே சிந்தி யபடி விநாயகரை மூன்று முறை வலம்வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும்.

    பிறகு விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். இந்த பரிகார வழிபாடு காரணமாக முன் வினை தோஷங்கள் விலகி, விரைவில் திருமண யோகம் தேடி வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஸ்ரீசர்ப்ப விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகருக்கு சர்ப்பம் தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது.

    விநாயகரின் உடலில் 5 பாம்புகள் இடம் பெற்றுள்ளன. அரை ஞான் கயிறாக ஒன்று, இடையில் கட்டிய ஆடையின் மீது ஒன்று, பூணுலாக ஒன்று, கைக்கடங்களாக இரண்டு என்ற முறையில் ஐந்து சர்ப்பங்களும் அமைந்துள்ளன.

    ராகு, கேது தோஷங்கள் இவரை வழி பட்டால் நீங்கும். நாக தோஷங்கள் நீங்கவும், நச்சுப்பிணிகள் தீரவும் இந்த சர்ப்ப விநாயகரைத் தரிசித்து பலன் பெறலாம்.

    தஞ்சாவூருக்கு அருகே உள்ள திருக்கண்டிய ஸ்ரீ பிரம்மசிரகண்டீசுவரர் ஆலயத்தில் சப்த விநாயகர் என்ற பெயரில் ஏழு விநாயகப் பெருமான்கள் அருள் பாலிக்கின்றனர்.

    "சப்த விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்கினால், ஏழேழு ஜென்மத்தின் பாவங்கள் மற்றும் தோஷங்களில் இருந்தும் விமோசனம் பெறலாம்" என்பது ஐதீகம்.

    திருச்சி பாலக்கரை சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இரண்டு பிள்ளை யார்கள் காட்சி தருகின்றனர். சதுர்த்தி நாளில் இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் தீராத கவலையும் தீரும்.

    வருடந்தோறும், இரண்டு முறை வரும் தூர்வர கணபதி விரத நாளும் இங்கு விசேஷம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் விநாயகர்களை தீபம் ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    'நாக சதுர்த்தி' அன்று விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்து, அருகம்புல்லால் ஆன கிரீடம் மற்றும் ஆபரணத்தை அணிவித்து வேண்டிக் கொண்டால் நாக தோஷம் விலகும். இதே போல் கேது தோஷம் உள்ளவர்களும் இரட்டை விநாய கர்களை பிரார்த்தித்தால் பலன் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

    இரட்டைப் பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு செய்து தரிசித்து வந்தால் கடன் தோஷம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் வில்வ தளங்களால் ஆன மாலையைச் சாற்றி வேண்டிக் கொண்டால், நோய்கள் தொடர்பான தோஷங்கள் தீரும். ஆரோக்கி யத்துடன் வாழலாம்.

    விசாக நட்சத்திரத்தில் பூப்பாவாடை சார்த்தி இந்த விநாயகரை வழிபட்டால் உறவுகளுக்கு இடையிலான கிரக தோஷங்கள் சரியாகி விடும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

    மதுரை தல்லாகுளம் பகுதியில் ஸ்ரீ இரட்டை விநாயகர் வீற்றிருக்கின்றனர். சுயம்பு மூர்த்தமாகத் தோன்றிய இந்த விநாயகரை தரிசித்தால், நல்லவை எல்லாம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    கல்யாண வரன் அமைய வேண்டும் என்று விரும்புவோர், குழந்தை பாக்கியம் கேட்டுப் பிரார்த்திப்போர், வழக்கில் நல்ல தீர்ப்புக்காக காத்திருப்போர் ஆகியோர் இங்கு வந்து, ஸ்ரீ இரட்டை விநாயகர்களுக்கும் தேங்காய் மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும்.

    அதே போல், தங்களுக்கு என்ன வயதோ, (25 வயது என்றால் 25 விரலி மஞ்சள்) அந்த வயதைக் குறிக்கும் வகையில் விரலி மஞ்சளைத் தொடுத்து மாலையாக விநாய கருக்கு சாற்றினால், எல்லாவித தோஷங்கள், வினைகள் நீங்கி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    விநாயகர் வழிபாட்டால் விலகும் தோஷங்கள் அடுத்த வாரம் தொடரும்...

    • காலத்திற்கேற்ற சில மாறுதல்கள் அவசிய மாகின்றது.
    • சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனியுங்கள்.

    காலத்திற்கேற்ற சில மாறுதல்கள் அவசிய மாகின்றது. நம் முன்னோர்கள் வளர்ந்த முறை, வாழும் முறை என்பது அதிக பண்புடன் கூடியவைகளாக இருந்தது. இன்னமும் இருக்கின்றது.

    ஆனால் நியாயமற்ற வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில் இவை எல்லாம் எடுபடாது. நட்பு என்ற வார்த்தைக்காக தன் உயிரைக் கூட கொடுப்பவர்கள் இன்றும் உள்ளனர். ஆனால் அந்த நட்பு இவர்களுக்கு கடைசியில் அநேகமாக துரோகத்தினைச் செய்கின்றது. இதை தாங்க முடியாமல் உடல், பொருள், ஆவி என அனைத்தும் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு வலியைக் கொடுக்கிறது.

    எனவே எதிலும் அதிக நட்பு என்பது இந்த காலத்தில் பிரச்சினைகளையும், மரியாதை இன்மையையுமே தருகின்றது. ஆகவே எந்த இடத்திலும் சற்று தள்ளி இருந்து பழகுவதே உங்கள் ஒளி சக்தியினைக் காக்கும். எதற்கும் ஒரு எல்லை கோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஆசையும், கனவும் மட்டுமே வாழ்வில் எதனையும் பெற்றுத் தராது. அதற்கான கடும் உழைப்பு வேண்டும். உழைப்பு தரும் பலனை பரம்பரை சொத்து கூட தராது.

    * உங்கள் உழைப்பிற்காக பிறர் உதவியினை எதிர்பார்க்க வேண்டாமே.

    * ரொம்ப ரொம்ப அதிகமாக யோசித்துக் கொண்டிருந்தால் பிரச்சினை தானே உருவாகி விடும். பிரச்சினைக்கென தினமும் 10 நிமிடங்கள் ஆய்வு செய்யுங்கள், செயல்படுத்துங்கள். அவ்வளவு போதும். பிரச்சினை தானாகவே கரைந்து விடும்.

    * சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனியுங்கள். இதுவும் ஒரு தவம்தான்.

    * தரமற்ற நட்பு, உறவு வேண்டாமே!

    * நீங்கள் உறுதி எடுத்தால் யாரால் உங்களை தடுக்க முடியும். வெற்றி உங்களுடையது மட்டுமே. இத்தோடு சில சின்ன சின்ன பழக்கங்களும் நமது வெற்றிக்கு கை கொடுக்கும்.

    * காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர்.

    * காலை வேலைகளை முடிக்கும் வரை செல்போனை தொடாது இருப்பது.

    * 20 நிமிட தியானம் செய்வது.

    * 20 நிமிட உடற்பயிற்சி செய்வது.

    * காலையில் கூட சிறிது நேரம் படிக்கலாம்.

    * பழக்கம் உள்ளவர்கள் 10 நிமிட பிரார்த்தனை செய்யலாம். சிறிய பழக்கங்கள்தான். ஆனால் பெரிய மாறுதல்களைத் தந்து விடும். சிலவற்றினை மனதில் செதுக்கி விடுங்கள்!

    * நாம் எதை நினைக்கின்றோமோ, எதனை செயல்படுத்துகின்றோமோ அது பிரபஞ்சத்தினை அடைகின்றது. பிரபஞ்சத்தில் இருந்து நாம் கொடுத்ததே நமக்கு திரும்பி வருகின்றது.

    * கடந்த காலத்தினையே திரும்பி பார்ப்பதாலும், அந்த நிகழ்வுகளில் மூழ்குவதாலும் மேலும் இழப்பே ஏற்படுகின்றது.

    * எதை செய்தாலும் சிறப்பாக மட்டுமே செய்ய வேண்டும்.

    * எப்போதும் ஒருவர் தன்னை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மனதால் பலவீனமாக இருக்கும் போது வாக்குவாதங்கள் செய்யக் கூடாது.

    * யார் எதிரிலும் அழக் கூடாது.

    * தன்னைத் தானே நொந்து, தன்னைத் தானே திட்டி, தன்னை தானே தாழ்த்தி பேசி, தன்னைத் தானே ஒருவர் காயப்படுத்திக் கொள்ளக் கூடாது.

    * அழிவுப்பூர்வமான சிந்தனை உடைய வர்களிடம் இருந்து ஓடி விடுங்கள்.

    * அதிக சோக படங்கள், சோக பாடல்களை பார்க்க, கேட்கக் கூடாது. அவ்வாறே ஒருவர் வாழ ஆரம்பித்து விடுவார். கவனம் தேைவ.

    * பிரபஞ்சம், பிரபஞ்ச சக்தி, பிரபஞ்ச இயக்கம் இவற்றினைப் பற்றி படிக்க வேண்டும்.

    * தனக்கு எது அவசியம் தேவையோ அதனை தயக்கமின்றி செய்து கொள்ள வேண்டும்.

    * எது நமக்குத் தேவையோ அதற்காக நாம் தினமும் 15 நிமிடமாவது பயிற்சி, முயற்சி செய்ய வேண்டும்.

    * தினமும் காலையில் 20 நிமிடமாவது நடந்து பாருங்கள். உடலில் பல நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

    * இன்று மாலையே நாளைய ஆரம்பத்திற்கான வேலை செய்வது பட படப்பினை நீக்கும்.

    ஒரு குட்டி கதையினை படித்தேன். பயனுள்ளதாக இருந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

    காட்டில் புலியிடம் கழுதை ஒன்று சொன்னது

    'புல் நீல நிறம்'

    புலி: இல்லை, இல்லை புல் பச்சை நிறம்.

    கழுதை: இல்லவே இல்லை. புல் நீல நிறம்தான்.

    புலி: 'ராஜாவே, இவன் (கழுதை) புல் நீல நிறம் என்கின்றான்.

    சிங்கம் பதிலளித்தது: 'ஆம், புல் நீல நிறம்தான்'

    கழுதை: இதைத்தான் நான் சொன்னேன். சிங்க ராஜாவே.

    ஆனால் புலி இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அவருக்கு தண்டனை கொடுங்கள்' என்றது.

    சிங்கம் புலிக்கு தண்டனை வழங்க சம்மதித்தது.

    பின் சிங்கம் சொன்னது. 'புலியே, நீ ஐந்து வருடங்கள் பேசக் கூடாது. மவுனமாக மட்டுமே இருக்க வேண்டும்' என்றது.

    கழுதை மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடியது.

    புலி தன் தண்டனையை ஏற்றுக் கொண்டது. இருப்பினும் அதன் மனம் வேதனைப்பட்டது.

    'சிங்க ராஜாவே, நான் உங்கள் தண்டனையினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் புல்லின் நிறம் பச்சை தானே' என்றது.

    சிங்கம்: 'ஆம், புல்லின் நிறம் பச்சைதான்'

    புலி: 'பின் ஏன் தண்டனை அளித்தீர்கள்?'

    சிங்கம்: இந்த தண்டனை புல் பச்சை நிறமா? நீல நிறமா? என்பதற்காக அல்ல. வீரமும், புத்திசாலி தனமும் நிறைந்த நீ ஒரு முட்டாள் கழுதையுடன் வாதிட்டாய். அதற்கு மேல் என்னிடமும் வந்து என் நேரத்தினை வீணடித்தாய். அதற்கான தண்டனையே இது' என்றது.

    இதன் மிகப்பெரிய பாடத்தினை அனை வரும் புரிந்து கொள்வோம்.

    நாம் நல்லவரா? என்பதை அறிந்து கொள்ள சில சுய பரிசோதனைகள் இதோ:-

    * நீங்கள் வீட்டிற்குள்ளோ, ஆபீசுக்குள்ளோ (அ) உறவினர் வீட்டிற்குள்ளோ நுழைகின்றீர்கள். அப்போது அங்கு அனைவரும் உங்களை பார்த்து சந்தோஷம் அடைகின்றனரா?

    * உங்கள் கருத்திற்கு அதிக கவனம் கொடுத்து வருகின்றனரா?

    * உங்கள் அறிவுரையும், வழி காட்டுதலும் தேவை என்று நினைக்கின்றனரா?

    * அனைவரும் உங்களை கண்டவுடன் இதயத்தில் இருந்து புன்னகைக்கின்றனரா?

    * நீங்கள் மன்னிக்கும் குணம் கொண்டவர், பழி வாங்க மாட்டீர்கள் என நம்புகின்றார்களா?

    * எதுவும் மன்னிக்கக் கூடிய விஷயங்களுக்கு மட்டுமே மன்னிப்பீர்கள் என்று அறிந்து வைத்திருக்கின்றார்களா?

    * மற்றவர் செய்யும் சிறிய உதவிகளுக்கு கூட நீங்கள் நன்றி உணர்வோடு இருக்கின்றீர்களா?

    * உங்கள் அருகில் இருக்க நண்பர்கள், உறவினர்கள் ஆசைபடுகின்றனரா?

    * கெட்ட நிகழ்வுகளை மனதில் தூக்கி அலை யாமல் உடனடியாக மறந்து விடுகின்றீர்களா?

    * உயர் சக்தி (அ) மனசாட்சி இதற்கு கட்டுப்பட்டு நடப்பவரா?

    * அமைதியை விரும்புபவரா?

    * தர்ம சிந்தனை உங்களிடம் இருக்கின்றதா?

    உங்களை நீங்களே முதுகில் தட்டிக் கொடுத்து இதே உணர்வோடு, குணத்தோடு, பண்போடு வாழ்வினை எளிதாய் தொடரலாம். இல்லையெனில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே.

    அடிக்கடி ஏதோ அழிவுப்பூர்வமான ஒன்றினை நினைத்து அது நடந்து விடுமோ என்று ரொம்பவும் பயப்படக்கூடாது. இப்படி பயந்தால் அது நிகழ்ந்து விடும் வாய்ப்புகள் அதிகம்.

    * ஏதாவது பிரச்சினையா? குழம்புகிறதா? அந்த பிரச்சினையை பற்றிய விவரங்களை ஒரு ேபப்பரில் எழுதத் தொடங்குங்கள். தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் எழுதுங்கள். இப்படி எழுதும் பொழுதே தெளிவு பிறந்து பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

    * அறிவு, புத்தி, நுண்ணறிவு- இதனை கூர்மையாக்குங்கள். பொருள் வந்து சேரும். சில முயற்சிகளை சற்று புதிதாக செய்து பார்க்கலாமே

    * ஒவ்வொருவருக்கும் சில இலக்குகள் இருக்கும். எத்தனை இலக்குகள் உங்களுக்குள் இருக்கும். சுமார் 20 அல்லது 25 இருக்குமா? பொதுவில் இவ்வளவு இருப்பது அதிகம்தான். எனவே 10 என்று வைத்துக் கொள்வோம். அதனை எழுத வேண்டும். தெளிவாக சுருக்கமாக எழுத வேண்டும்.

    அதில் முதல் மூன்றினை எடுத்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மனதில் அதிக முக்கியத்துவம் பெற்றதே முதல் மூன்றில் இடம்பெறும். அதற்கு அதிக முக்கியத்துவத்தினை கொடுங்கள்.

    * 3-க்கு மேல் எழுதியுள்ளவற்றை அடித்து விடுங்கள். சிறிது கூட அவற்றிற்கு கவனம் தர வேண்டாம். ஏனெனில் முக்கிய மூன்றில் கவனம் செலுத்தும் பொழுது மற்றவை அதனை சிதறச் செய்யும்.

    * எதனையும் எழுதுங் கள். கை, பேனா இவற் றின் பலம் மற்ற கருவி களை விட அதிகம் என்பதனை காலப் போக்கில் உணருவீர்கள்.

    * தினமும் 10 நிமிட மாவது உங்கள் இலக் குக்கு செலவழிப்பதால் காலப்போக்கில் இது வளரும். செய்வோமா?


     

    • நேர்த்தியாகப் பகுத்து வாழ்வதில்தான் திறமை இருக்கிறது.
    • கவனக்குறைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

    குடும்பத்தின் மீதும் அலுவலகக் கடமைகள் மீதும் அக்கறை கொண்டுள்ள அன்பின் வாசகர்களே! வணக்கம்!.

    குடும்பமாக வாழ்வது என்பது உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள சமூகக் கடமை ஆகும். அதே நேரத்தில், குடும்ப வாழ்வியலைச் செம்மையாக நடத்துவதற்கான அடிப்படைத் தேவையான பொருளாதாரத்தை ஒவ்வொரு மனிதனும் யாதானுமொரு தொழில் செய்தோ! அல்லது ஏதாவதொரு அலுவலகத்தில் பணிபுரிந்தோ ஈட்டியே ஆகவேண்டும் என்கிற கட்டாயமும் உண்டு.

    தனக்கு வாய்த்துள்ள ஒவ்வொரு நாளையும் குடும்பத்திற்கென ஒரு நேரம், பணியாற்றிப் பொருளீட்டுவதற்கென ஒரு நேரம், ஓய்விற்கும் பொழுதுபோக்கிற்கும் என சில போழுதுகள் ஆகியவற்றை நேர்த்தியாகப் பகுத்து வாழ்வதில்தான் திறமை இருக்கிறது.

    ஒவ்வொரு மனிதனும் குடும்பத்தையும் வேலையையும் சரிசமமாகப் பகுத்துக் கொண்டு, சமநிலை பிறழ்ந்துவிடாமல் வாழவேண்டும் என்றுதான் கருதுகிறான். நடந்து செல்ல இரண்டு கால்கள் இருக்கலாம்; ஆனாலும் நடக்கும்போது ஒருகால் முன்னே செல்லும்போது மற்றொருகால் பின்னே போவதைப் போலத்தான் இவ்விரண்டிற்குமான முக்கியத்துவங்கள் இருக்க வேண்டும்.

    சிலர், 'எனக்கு அலுவலக வேலைதான் முதல் மனைவி!' என்று அலுவலகங்களில் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். குடும்பத்தை மறந்து அலுவலகமே கதி எனக் கிடப்பவர்களும் உண்டு. சிலரை 'மதுப் பிரியர்கள்' என்று அழைப்பதைப் போல இவர்களை `வேலைப்பிரியர்கள்' என்று அழைப்பார்கள். நம்மை நம்பி வாழும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு இந்த வேலைதான் காரணம் என்றாலும், குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்கினால்தானே அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்?.

    சிலர் அலுவலகத்தில் இருந்தாலும் சதா குடும்ப நினைவாகவே இருப்பார்கள். அலுவலக வேலையைப் பார்க்காமல் குடும்ப வேலைகளையே திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். வேலைக்குத் தாமதமாக வருவது, நேரம் முடிவதற்கு முந்தியே சென்று விடுவது; அலுவலக வசதிகளைக் குடும்ப வேலை களுக்குப் பயன்படுத்துவது; தனது பணி அதிகாரங்களைச் சுயலாபங்களுக்காக மட்டும் பயன்படுத்துவது; மொத்தத்தில் வாங்குகிற சம்பளத்திற்கான வேலையைக்கூடப் பார்க்காமல் வெட்டியாய் அமர்ந்திருப்பார்கள்.

    சிலர், உண்மையிலேயே அலுவலகப் பணிச்சுமை, மிகுந்திருந்தாலும், வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மன அழுத்தத்துடன் வேலைபார்த்து வருவார்கள். ஒரு கட்டத்தில் குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் மீது அக்கறை காட்ட முடியாமலும், அலுவலகப் பணியைச் சரிவர முடிக்க முடியாமலும் மனவிரக்திக்கு ஆளாகி விடுவார்கள். இதுபோன்ற சமத்தன்மை இல்லாமல் அலுவலகத்தையும் குடும்பத்தையும் ஈடுகட்ட முடியாமல் தவிப்பவர்கள், ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் தோல்வி அடைந்து விடுகிறார்கள்.

    எல்லாருக்கும் நேரம் இருக்கிறது; எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது; நேரத்தைப் பகிர்ந்து கொள்வதில் திறமை; இயன்ற வேலையை மட்டுமே ஒத்துக்கொள்கிற நேர்மை; எதையுமே பரபரப்பின்றிப் பொறுமையோடு செய்கின்ற அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய இவற்றால் எத்தகைய பணியையும், வீட்டிலும் சரி! பணியிடத்திலும் சரி! சுணக்கமின்றிச் செய்து முடிக்கலாம்.

    அந்த காலத்தில் ஓர் ஆசிரியர் காலையில் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் எல்லா மாணவர்களையும் அடிஅடியென அடிக்கத் தொடங்கினால், மாணவர்களே பேசிக்கொள்வார்கள்,' வீட்டில் மனைவியிடம் வாங்கி வந்ததை இங்கே மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்!'.

    அதேபோல அலுவலகத்துக்குள் நுழைகிற மேலதிகாரி பார்க்கிற எல்லார் மீதும் எரிந்து விழுந்தால்,'வீட்டில் மேடம் நல்ல குடு குடுத்திருப்பாங்க போல' எனப் பணியாளர்கள் பேசிக்கொள்வார்கள். அதே போல அலுவலகம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிய அப்பா, பிள்ளைகள் மீது காரணமின்றிக் கோபம் கொள்வதும், மனைவி, கணவர்மீது எரிந்துவிழுவதும், அலுவலகம் தந்தனுப்பிய விரக்தித் தபால்களின் விளைவுகள்.

    சிலர் சொல்வார்கள், அலுவலகமும் குடும்பமும் எண்ணெயும் தண்ணீரும் போல; ஒட்டவே ஒட்டாது என்று. ஆனால் உண்மை அதுவன்று. ஒரு நல்ல குடும்பப் பாங்கான மனிதராலேயே நல்லபடியாக ஓர் அலுவலகத்தைக் கொண்டு செலுத்த முடியும். இதை அப்படியே திருப்பிப் போட்டும் சொல்லலாம்.

    ஆனால் கலந்து குழப்பிக்கொள்ளக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், ஒரு குடும்பத்தைப்போல அரவணைப்பு உணர்வோடு அலுவலகத்தை நடத்தலாம்; ஆனால் ஓர் அலுவலகத்தைப்போல விதிமுறைகளோடு குடும்பத்தை நடத்துவது கடினம். ஏனெனில் கோப்புகளைத் தாண்டியது குடும்பப் பாசம்.

    படிப்பிலும் திறமையிலும் சிறப்பான ஓர் இளைஞன் ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தான். இரண்டு மூன்று சுற்றுகளில் தேர்ந்துவிட்டான்; கடைசிச் சுற்று நேர்முகச் சுற்று; அதை அந்த நிறுவனத்தின் இயக்குநரே நேரடியாகக் கலந்துகொண்டு நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்ந்துவிட்டால் நேராக மேலாளர் பணியில் அமர்ந்து விடலாம்.

    அன்று நேர்முகத் தேர்வுக்காக இயக்குநர் அறையில் காத்திருந்தான் அந்த இளைஞன். இயக்குநர் வந்தார்; அவனது தன்விவரக் குறிப்புகளைக் கவனத்துடன் படித்தார். பள்ளிக் கல்வியிலிருந்து, பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு என எல்லாவற்றிலும் முதன்மை மதிப்பெண்களைப் பெற்றிருந்தான். எந்த ஆண்டிலும், எந்தப்படிப்பிலும் சோடை போகாத கல்விச் சாதனைகளை அவன் கொண்டிருந்தான்.

    நேர்முகத்தேர்வை ஆரம்பித்தார் இயக்குநர்," பள்ளிப் படிப்புப் படிக்கும்போது நீ கல்வி உதவித்தொகை ஏதேனும் பெற்றாயா?".

    "இல்லை. நான் ஆராய்ச்சிப்படிப்பை முடிக்கும் வரை எந்த உதவித் தொகையையும் பெறவில்லை" என்று பதிலளித்தான் இளைஞன்.

    "அப்படியானால் உன் படிப்புக்கான முழுச் செலவையும் உன் தந்தைதான் செய்தாரா?" இயக்குநர் கேட்டார்.

    " இல்லை. நான் ஒரு வயதுக் குழந்தையாய் இருந்தபோதே என் தந்தையார் காலமாகிவிட்டார். என் தாய்தான் என் படிப்புச் செலவைப் பார்த்துக் கொண்டார்.

    " உன் தாயார் என்ன வேலை செய்து வருகிறார்?"

    " வீடுகளில் அழுக்குத் துணிகளை வாங்கி அவற்றை எங்கள் வீட்டில் வெளுத்துத் தரும் வேலையைப் பார்க்கிறார்".

    இளைஞனின் அந்த பதிலைக்கேட்ட இயக்குநர், "எங்கே உன் கைகளைக் காட்டு!" எனக் கேட்டு அவனது இரண்டு உள்ளங்கைகளையும் தன்னுடைய கைகளால் தடவிப் பார்த்தார். இளைஞனின் உள்ளங்கைகள் பூப்போல மென்மையாக இருந்தன. "அப்படியானால் நீ துணிதுவைக்கும் பணியில் உன் தாயாருக்கு நீ உதவி செய்வதில்லையா?"கேட்டார் இயக்குநர்.

    "ஐயா! நான் எப்போது உதவி செய்யப்போனாலும், 'நீ உன் படிப்பை மட்டுமே கவனி! என் வேலையை நானே பார்த்துக்கொள்கிறேன்' என்று மறுத்து விடுவார். மேலும் என்தாய் என்னைவிட அதிவேகமாகவும் தூய்மையாகவும் துணி துவைப்பதில் கெட்டிக்காரர்!" என்றான் இளைஞன்.

    இயக்குநருக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களைப் பார்த்தால் இது ஏதோ மேலாளர் பணிக்கான நேர்முகம்போலத் தோன்றாதுதான். இயக்குநர் இளைஞனைப் பார்த்து, " நீ என்றைக்காவது உன் தாயாரின் உள்ளங்கைகளை, இப்போது நான் உன் உள்ளங்கைகளைப் பிடித்ததுபோலத், தொட்டுப் பார்த்திருக்கிறாயா?" எனக் கேட்டார்." இல்லை!" என்றான் இளைஞன்.

    "நான் இன்னும் ஒருநாள் தருகிறேன். நீ நேராக வீட்டுக்குப் போய், உன் தாயாரின் உள்ளங்கைகளை ஸ்பரிசித்துப் பார்!. நாளை மீண்டும் இங்கு நேர்முகம் வந்து உன் அனுபவம் சொல்!" என்று அனுப்பிவைத்தார்.

    வீட்டுக்குப் போனான் இளைஞன்; மலர்ந்த முகத்தோடு வந்த அம்மா, " என்ன வெற்றிதானே! வேலை கிடைத்துவிட்டதா?" என்று கேட்டார். எதுவும் பேசாமல், அம்மாவின் கரங்களை இறுகப் பற்றி உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தான்.

    சுருக்கம் சுருக்கமாய்க், காய்காய்த்துப் போய், சில இடங்களில் ஆறியும் சில இடங்களில் ஆறாததுமாய் ரணங்களோடு இருந்ததைப் பார்த்த மகன் "அம்மா!" என அலறிக் கண்ணீர் அருவிகொட்டச் செயலற்று நின்றுவிட்டான்.

    `எனக்காகத் தண்ணீரும் சோப்பும் நாள்தோறும் பட்டுப்பட்டுக் காய்த்துப்போய், மேடும் பள்ளங்களுமாய் நீங்கள் பெற்ற அந்த ரணங்கள்தாம் நான்பெற்ற பட்டங்களா அம்மா?' மனத்துள் ஆர்ப்பரிக்கும் அழுகைக் கேள்வி களை வெளிப்படுத்த முடியாமல் நின்றான்.

    மறுநாள், அதே நேர்முக அறை. இயக்குநர் வந்தார். "நேற்று நான் சொன்னதைச் செய்தாயா?; என்ன நடந்தது?" இளைஞனைப் பார்த்துக் கேட்டார். கொப்பளிக்கும் அழுகை யோடு, நேற்று அம்மாவிடம் பேசாத வார்த்தை களையெல்லாம் உணர்ச்சிப்பெருக்கோடு இயக்குநரிடம் கொட்டித் தீர்த்துவிட்டான் இளைஞன்.

    "என்னை இந்த அளவுக்கு உயர்த்து வதற்கு என் அம்மா பட்ட பாடுகளையும் என் அம்மா செய்த தியாகங்களையும் நான் உணரும்படி செய்ததற்கு உங்களுக்கு என் நன்றிகள். இந்த வேலையை எனக்கு நீங்கள் வழங்குகிறீர்களோ இல்லையோ, இனிமேல் நான் பணியமர்ந்து கடமையாற்றப் போகிற ஒவ்வொரு நொடிகளிலும் நான் என் அம்மாவுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்!" என்றான் இளைஞன்.

    "நல்வாழ்த்துகள்!; இன்றுமுதல் நீங்கள் இந்த நிறுவனத்தின் மேலாளராகப் பணியமர்த்தப் படுகிறீர்கள்!" என்று மகிழ்ச்சியோடு சொல்லி, இளைஞனுக்குப் பெருமிதத்தோடு கைகொடுத்தார்.

    இயக்குநர் மேலும் சொன்னார்," தனக்காகத் தனது குடும்ப உறுப்பினர்கள் எப்படிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணரத் தெரிந்த மனிதனாலேயே, அலுவலகத்தில் தன்னோடு பணிபுரியும் சக ஊழியர்களின் கஷ்ட நஷ்டங்களையும் உணர்ந்து செயல்படமுடியும். அப்படிப்பட்ட மனிதநேய உணர்வு, அலுவலக மேலாண்மைக்குக் குடும்பத்திலிருந்தே வரவேண்டும். அதனால்தான் நேர்முகத்தேர்வை நான் அந்தக் கோணத்தில் நடத்தினேன்".

    அலுவலகம் என்பது ஒரு குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளுக்கேற்ப இயங்குவதுதான்; அதில் பணிபுரியும் அலுவலர்கள், கொடுத்த பணியை முடிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டியவர்கள்தாம். ஆனாலும் சில ஏற்ற இறக்கங்கள், லாப நஷ்டங்கள், காலதாமதங்கள், கவனக்குறைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

    அலுவலகங்களில் இயந்திரங்கள் இருக்கும்; ஆனால் அவற்றை இயக்குபவர்கள் இயந்திரங்கள் அல்லவே!. மனிதர்கள்தாமே!. எனவே அலுவலக மேலாண்மையில் சட்டதிட்டங் களுக்கு இணையான முன்னுரிமையை மனித நேயத்திற்குத் தரவேண்டியதும் அவசியமாகிறது.

    அன்பு, கருணை, இரக்கம், கனிவு, இன்சொல், அடுத்தவர் துன்பம்கண்டு உதவத் துடிக்கும் பரோபகாரம் , நட்பு, உறவாய்ப்பேணும் சகோதரத்துவம் இவற்றையெல்லாம் தாள்களும், பேனாக்களும், கோப்புகளும் உள்ள அலுவலகத்திலிருந்து கண்டெடுக்க முடியாது.

    குடும்பம் என்னும் கோயில் தன்மையில் இருந்தே இவற்றை அலுவலிடத்திற்கு நாம் மடைமாற்றம் செய்ய வேண்டும்.

    எத்தனை துன்பங்கள், எத்தனை சண்டை சச்சரவுகள் இருந்தாலும் குடும்பமே அமைதி தவழும் நந்தவனம். அப்படி அலுவலகத்தையும் ஆக்குவதற்குக் குடும்ப மேன்மைகளைப் புகுத்திக் கொண்டாடக் கற்றுக்கொள்வோம்!.

    தொடர்புக்கு 9443190098

    • 1947ம் ஆண்டு நடிக்க வந்தவர்.
    • இந்திய உச்சரிப்பில் பாடுவது இயல்பிலேயே இவருக்கு கை வந்தது.

    மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடனான நடிகர் ஜெ.பி.சந்திரபாபுவுடைய அபூர்வ நட்பைப் பார்த்தோமில்லையா..?

    ஜெ.பி.சந்திரபாபு தூத்துக்குடியில் கிருத்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய அப்பா ஜெ.பி.ரோட்டரிக்ஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் என்பதால் அவரை கைது செய்து, விடுதலையானவுடன் இலங்கைக்கு நாடு கடத்தியதாம் பிரிட்டிஷ் அரசு.

    தனது கல்லூரி படிப்பை கொழும்புவில் முடித்தார் சந்திரபாபு. பின்னர் இந்தியா திரும்பியது அவரது குடும்பம். அந்தக் காலத்திலேயே கல்லூரியில் படித்தவர், கிருத்துவர் என்பதினாலும் ஜெ.பி. சந்திரபாபுவின் நடை, உடை, பாவனைகள் மிகவும் நவநாகரிகமாக இருந்தன.

    ஒரு படப்பிடிப்பு தளத்தின் உள்ளே சென்று நடிக்க வாய்ப்புத்தேட அனுமதிக்கப்படாததால் தற்கொலைக்கு முயன்றவர் இவர். திரைப்படத்துறையின் மீது அப்படியொரு ஈர்ப்பு! 1947ம் ஆண்டு நடிக்க வந்தவர்.

    1950ம் ஆண்டில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக ஆனார். நடித்த படங்களில் எல்லாம் சொந்தக் குரலில் பாடி நடித்தார். இவரது குரல் லேசான அதிர்வுடன் கூடிய ஒரு தனித்தன்மையாக இருக்கும். மேற்கத்திய இசையில் வந்த பாடல்களை ஆங்கிலோ-இந்திய உச்சரிப்பில் பாடுவது இயல்பிலேயே இவருக்கு கை வந்தது!

    எம்.எஸ்.வி. திரைப்படத்திற்கு இசையமைக்க வந்தபோது, கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் மட்டுமே பாடிக் கொண்டிருந்த நேரம். பாடல்கள் கர்நாடக சங்கீத பாணியில் தான் வர முடியும். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் கொஞ்சம் இசையை மெல்லிசைப் படுத்தினார். கே.வி.மகாதேவன் கர்நாடக அடிப்படையிலும், ஆதி நாராயண் ராவ் (நடிகை அஞ்சலி தேவியின் கணவர்) இந்துஸ்தானி மெட்டில் பாடல்தந்து புகழ்ப் பெற்றார்கள்.

    1953ல் "குலேபகாவலி" படத்தில் ஜெ.பி.சந்திரபாபுவுடன் மோதல் ஏற்பட்டாலும் பிறகு மிகவும் நட்பு பாராட்டிய எம்.எஸ்.வி. 'புதையல்' படத்தில் 1957ல் மீண்டும் ஒன்றாக வேலை செய்யும் வாய்ப்பு வருகிறது. சந்திரபாபுவின் மேற்கத்திய பழக்கம் புரியவந்ததில், அவருக்காகவே பொருந்துகிற மாதிரியானப் பாடல்களை தருகிறார்.

    முன்பு "ராக் ராக் ராக் & ரோல்" என்ற பாடலில் ராக் & ரோல் இசையும், கர்நாடக இசையும் சேர்ந்த இணைவு இசை வகைப் பாடலாக அமைந்ததைப் பார்த்தோம். 1957ல் வெளிவந்த "புதையல்"- என்றப் படத்தில் தஞ்சை ராமைய்ய தாஸ் எழுதியப் பாடல், "ஹல்லோ மை டியர் ராமி, எங்கம்மா உனக்கு மாமி"- என்றப் பாட்டு.

    இது ராக் & ரோல் உடன் கிராமியம் அதுவும் கானாப் பாடல் சேர்ந்த பாடல்! இதிலும் விசில், யோடிலிஸ், கைத்தட்டல்கள் என்று அந்தக் காலத்திலேயே புதுமையானப் பாடல்! வருடங்களை குறிப்பிட்டு சொல்லக் காரணம். அந்தக் காலக் கட்டத்திலேயே முதன் முதலில் பாடல்களில் பல்வேறு இசை வகைகளை கொண்டு வந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்பது தான்.

    இவர்கள் புதுமையாகவும், புரட்சியாகவும் பாடல்களை கொண்டு வர நினைத்தாலும், அந்த வகைப் பாடல்களை கற்றுக்கொண்டு, அதே வகையில் பாட சரியான பின்னணி பாடகர்களும் வேண்டுமில்லையா?

    புதுப்புது வகை இசைகளை எப்படி முயற்சித்துப் பார்க்கமுடியும்? தொழிலின் ஆரம்ப காலத்திலேயே மேற்கத்திய இசை நுட்பங்களை கொண்டு வர முடிந்ததில் சுந்திரபாபுவின் ஆங்கிேலா-இந்திய உச்சரிப்பு, ராப் பாடல் போல் பாடும் முறை ஒரு கூடுதல் பலம் என்றே சொல்லலாம்!

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,பாட்டாளிகளின் வாழ்க்கையை எல்லாப் பாடல்களிலும் வைத்து அக்கறையுடன் எழுதும், எளிய மனிதர்களுக்கான கவிஞர். நிறைய கண்திறப்புப் பாடல்களை "தூங்காதே தம்பி தூங்காதே", "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா" "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" போன்ற பல பாடல்களை எழுதியவர்.

    30 வது வயதுக்குள்ளேயே தனது வாழ்க்கையைக் கூட "ஹைக்கூ" கவிதைப்போல் சிறுவயதிலேயே முடித்துக் கொண்டவர். இவர் திரைத்துறைக்கு வந்ததும் ஒரு சுவாரஸ்யமான கதை!

    "பாசவலை" என்ற மார்டன் தியேட்டரின் படத்தில் கதையுடன் பொருந்திப் போகிற மாதிரி தத்துவப் பாடல் தேவை. அப்போதெல்லாம் ஒரே சூழலுக்கு இரண்டு பாடலாசிரியர்களைக்கூட எழுதச் சொல்வார்களாம். இரண்டில் இருந்து சிறந்த வரிகளை எடுத்துக்கொள்வார்களாம். அப்படி இரண்டு பாடலாசிரியர்களை வைத்து எழுதியும் எம்.எஸ்.வி. யோசித்திருந்த மெட்டுக்கு ஏற்ற பல்லவி வரிகள் அமையவில்லை.

    நான்கு நாட்கள் கடந்தபடியால் நிறுவன மேலாளர் சுலைமான் என்பவர் எம்.எஸ்.வியிடம் ஒரு புதிய பாடலாசிரியரை அறிமுகம் செய்யட்டுமா என்று கேட்கிறார். எம்.எஸ்.வி. "என்னங்க அனுபவமுள்ளவங்களே எழுதியும் பல்லவி சரியா அமையலைன்னு நாங்களே பதட்டமாயிருக்கோம். நீங்க புதுசா பாட்டு எழுதுறவரை அழைத்து வரட்டுமான்னு கேட்கறீங்க. புதியவங்களை இப்ப அவசரமான நேரத்திலே எழுத வைக்க முயற்சிப் பண்ண முடியாதுங்க" என்று மறுத்துவிடுகிறார்.

    பாடல் அமையவேயில்லை. சுலைமான் அப்போது ஒரு தாளை நீட்டுகிறார். "எதற்கும் இந்த பல்லவியை ஒருமுறை படிச்சு பாருங்க. பிடிக்கலேன்னா விட்டுடலாம்."

    'கொடுங்க, பாக்கலாம்' வாங்கிப்படிக்கிறார்..

    "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்கு சொந்தம்,

    குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம்,

    தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்,

    சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்தம்!"

    -படித்தவர், நெக்குருகிப் போகிறார்.

    "அடடா, யாருப்பா இந்தப் பாட்டு வாத்தியார். உடனே கூப்பிடுங்க". (திரைப்பட பாடலாசிரியர்களை பாட்டு வாத்தியார் என்றுதான் அழைப்பார் எம்.எஸ்.வி.)

    பல்லவி வரிகள் திரைக்கதைக்கு சரியாகப் பொருந்திப் போகிறவரிகள். மெட்டுக்குப் பொருந்தும் வீச்சமான வரிகள்!

    நான்கு நாட்களாக பாடலெழுத வாய்ப்புக்கு காத்திருந்த அந்த இளைஞனோ இதற்கு மேல் எங்கே கூப்பிடப் போகிறார்கள் என்ற விரத்தியில் போய்விட்டார். எப்படியோ தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தார்கள்.

    "இந்தப் பல்லவியை நீங்களா எழுதினீங்க தம்பி?

    ஆமாங்க..!

    இத்தனை நாளா எங்கிருந்தீங்க தம்பி?"என்று மகிழ்ந்து வாழ்த்திவிட்டு அடுத்த இருபது நிமிடங்களில் அந்த வரிகளுக்கு மெட்டும் போட்டுவிட்டார். எம்.எஸ்.வி. அந்த பாடலாசிரியர்தான் பட்டுக்கோட்டையார்.

    இன்னொரு முறை, இவரிடம் கேட்டார்..

    "அதென்ன தம்பி, எல்லோரும் ஆறடி என்று தானே சொல்வாங்க. நீங்க எட்டடி தான் சொந்தம்-னு ஏன் எழுதினீங்க?

    அண்ணே, நானே ஆறடி உயரம், அதனால் எட்டடி என்று எழுதினேன்.

    "குட்டி ஆடு தப்பி வந்தா"-பாடல் ஒலிப்பதிவு முடிந்த அன்று இரவு தூக்கம் பிடிக்காமல் தவிக்கிறார் எம்.எஸ்.வி. "எனக்கு கர்வம் வந்துவிட்டதோ? புதிய பாடலாசிரியரிடம் திறமை இருக்காது என்று எப்படி என்னால் தப்பாக முடிவெடுக்க முடிந்தது? எப்படிப்பட்ட ஒரு பாடலாசிரியரை திரைத்துறை இழக்க நான் காரணமாக ஆகியிருப்பேனே" - என்று இரவு புலம்பி அழுதாராம். இதை அவரே தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

    அன்று முதல் யாராவது புதியவர்கள் தன்னை சந்திக்க வந்தால் மறுக்காமல் அவர்களை சந்தித்து 10 நிமிடம் ஒதுக்கி பேச வேண்டும் என்பதை ஒரு பாடமாகக் கொண்டாராம்.

    இவர்கள் கூட்டணியில் உருவான இன்னொரு அழகானப் பாடல் 1957ல் வந்த "புதையல்" படத்தில் வரும் இசைப்பேரரசி பி.சுசீலா குழுவினருடன் பாடியப் பாடல் "சின்னச்சின்ன இழைப் பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலையடி, நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி". நெசவு நெய்துக் கொண்டே பத்மினி பாடுவதாக வரும் பாடல்! நெசவு செய்யும் இடத்திற்கே போய் நெசவு செய்யும் போது கட்டைகளில் ஏற்படும் ஒலிகளை கவனித்து, அந்த ஒலிகளுக்கு ஏற்ற தாளகதியில் தத்தகரம் சொல்லி பாடலை எழுதி மெட்டமைத்தப் பாடல் அது!

    பல்லவியில் 14 சொற்கள். தொடர்ந்து இடையில் நிறுத்தம் செய்யாமல் பாடப்படும்!! கையோடு "தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி"-என்று நெசவுத் தொழிலைப் போற்றியும் வரிகளை வைத்திருக்கிறார். பாடல் முழுக்க மெட்டுகள் மாறிக்கொண்டே போகும் அழகானப் பாடலில், பறவைகளின் கீச்சொலி, பெண்களின் கும்மி சத்தம், தைய்யா தைய்ய தான்னா என்ற 'வெற்று சொற்களும்' அமைந்தது. "இதை ஓட்டும் ஏழைக் கூட்டுறவாலே உலகில் தொழில் வளம் உயரும்" என்று உலகளவில் புகழ்வாய்ந்த நம் நாட்டு கைத்தறியின் சிறப்பை சொல்லும் வரிகள் உள்ளப் பாடல்!

    மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன போது, "எனது பதவி நாற்காலியின் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டையாரால் வந்தது" என்றார். எம்.ஜி.ஆருக்கு பட்டுக்கோட்டையார் எழுதிய தன்னெழுச்சி, தத்துவம் என எல்லாப் பாடல்களிலும் இருந்த வரிகள் மக்கள் மனதில் எம்.ஜி.ஆரை ஒட்ட வைத்தன! கட்டி வைத்தன என்பது உண்மை.

    "பதிபக்தி" படத்தில் பட்டுக்கோட்டையாரின் ஒரு பாடல். ரிக்ஷா இழுப்பவர்கள் பாடும் பாடலை எழுதியிருப்பார். எளிய நிலை மக்கள் தங்களின் துன்பங்களைக் கூட தாமே நையாண்டி செய்துக் கொண்டு துள்ளளலாகப் பாடுவதாக அமைந்தப் பாடல்! இப்போது சொல்கிற கானாப் பாட்டு, குத்துப் பாட்டுக்கான அத்தனை வேக தாளகதிப் பாடல்!

    எனக்குத் தெரிந்து தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலில் வந்த நீள கானாப் பாடல் இது! "தாந்துனக்கடி, தக்கடி, அஜக், என்றெல்லாம் கானாப்பாடலுக்கே உரிய வெற்று சொற்கள் எல்லாம் சேர்த்து வந்தப் பாடல். இன்று கேட்டாலும் நேற்று வந்தப் பாட்டு போல தோன்றும்! 1958-ல் வந்து 66 ஆண்டுகளான பின்பும் நவீனமாக இருக்கும்.

    வரிகளோ மனதை உலுக்கி கேள்வி கேட்கும். 1973க்கு முன் விலா எலும்பு துருத்தி தெரியும் ஒரு மனிதன், தொந்தி பருத்த மனிதனை உட்கார வைத்து கால்நடையைப் போல் இழுக்கும் அவலம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவேண்டுமென்றால், இந்தப் பாடலை அவசியம் பார்க்க வேண்டும்.

    இதில் சந்திரபாபு பாடிய விதமும், நடனமும் பாடலை எங்கோ கொண்டு சென்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஆடி ஒயிலாக நடித்திருப்பார்.

    பொதுவாகவே, சந்திரபாபுக்கு அசையாமல் துள்ளாமல் பாட வராது. இவர் பாடும் போது ஒலிப்பதிவில் நான்கு பக்கமும் சுற்றிலும் வெற்று மைக்கை வைத்தால்தான் பாடலை பதிவு செய்ய முடியுமாம்.

    "ஜெனோவா" என்றத் திரைப்படம் ஈ.பி.ஈச்சப்பன் தயாரித்தார். இதில் எம்.எஸ். ஞானமணி என்பவர் இசையமைத்தாலும், எம்.எஸ்.வியும் சிலப் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டுமென தயாரிப்பாளர் விரும்பினார். ஆனால் கதாநாயகனான எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.வி. இசையமைப்பதில் விருப்பமில்லை.

    வளர்ந்து வரும் புதியவரை சேர்க்கணுமா என நினைத்தாராம். தயாரிப்பாளரின் பிடிவாதத்தால் "ஜெனோவா"வில் எம்.எஸ்.வியும் இசையமைத்தார். பாடல் கேட்ட எம்.ஜி.ஆரே எம்.எஸ்.வி.யை நேரில் பாராட்டி வாழ்த்தினார், என்பதும் இனி நீ, என் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று சொன்னதும் வரலாறு!!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    இணைய முகவரி:

    banumathykrishnakumar6@gmail.com

    • தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இளைய தளபதியாக உயர்ந்துள்ளார்.
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அவதாரம் எடுத்துள்ளார்.

    நடிகர் விஜய், திரையுலகுக்கு வந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இளைய தளபதியாக உயர்ந்து, இன்று "தமிழக வெற்றிக் கழகம்" கட்சியின் தலைவராக அவதாரம் எடுத்துள்ள நிலையில் அவர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது இந்த சினிமா - அரசியல் பயணம் குறித்து பார்ப்போம்..

    நடிகர் விஜய் 1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி பிறந்தார் . அனைத்து குழந்தைகளுக்கும் தனது தந்தைதான் முதல் ஹீரோவாக இருப்பார். ஆனால் விஜய்யின் பயணத்தில், மகனை ஹீரோவாக பார்த்து பார்த்து செதுக்கினார் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். சென்னையில் பிறந்து வளர்ந்த விஜய், விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் முடித்தவர்.

    குழந்தை நட்சத்திரம்: எஸ்.ஏ. சந்திரசேகர் வெற்றிகரமான இயக்குநராக இருந்த காலகட்டத்தில் வெற்றி, குடும்பம், வசந்த ராகம், நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். இப்படித்தான் விஜய்யின் சினிமா பயணம் தொடங்கியது.

    1992-ம் ஆண்டு "நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்யை முதன்முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர். ஹீரோவாக அறிமுகமான போதும், அந்த படத்தில் விஜய்க்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

    இந்த சூழலில் நடிகர் விஜயகாந்துடன் விஜய்யை இணைத்து நடிக்க வைத்தது. எஸ்.ஏ.சி. இயக்கத்தில் விஜயகாந்த், விஜய் நடிப்பில் வெளியான "செந்தூரப்பாண்டி" திரைப்படம், எதிர்பார்த்தபடி விஜய்யை பிரபலமாக்கியது. விஜய் என்கிற நடிகனை தமிழ் ரசிகர்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றது.

    இதனைத் தொடர்ந்து, தந்தையின் பட்டறையிலேயே தொடர்ந்து பட்டை தீட்டப்பட்டார் விஜய். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்திலேயே "ரசிகன்", "தேவா", "விஷ்ணு" என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

    இந்த காலகட்டத்தில்தான் நடிப்பு, நடனம், பாடல், நகைச்சுவை, ரொமேன்ஸ், ஆக்சன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொண்டு மெறுகேறினார் விஜய்.

    இளைய தளபதி: தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான 'ரசிகன்' படத்தில்தான் விஜய்யின் பெயருக்கு முன்னால் "இளைய தளபதி" பட்டம் முதன்முதலில் போடப்பட்டது.

    சென்டிமெண்ட் இயக்குநர் விக்ரமன், விஜய்யை வைத்து இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியானது. நடிகர் விஜய்யின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் இதுதான்.

    அதுவரை, 4 ஃபைட், 5 பாட்டு என்று வழக்கமான கமெர்ஷியல் ஃபார்முலா வளையத்திற்குள், சாதாரண ஹீரோ கதாபாத்திரத்திற்குள் சுற்றிக் கொண்டிருந்த விஜய்யை ஓவர் நைட்டில் சூப்பர் நடிகர் என அடையாளப்படுத்தினார் இயக்குநர் விக்ரமன்.

    "பூவே உனக்காக" திரைப்படம்தான் விஜய்யின் குடும்ப வாழ்க்கைக்கு அச்சாரமிட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

    இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் படித்து வளர்ந்த ஈழத்தமிழர் பெண்ணான சங்கீதா சொர்ணலிங்கம், "பூவே உனக்காக" படத்தைப் பார்த்து விஜய்யின் தீவிர ரசிகை ஆனாராம். பின்னர் விஜய்யைப் பார்ப்பதற்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்தவர், ரசிகை என்று அறிமுகமாகி, தோழியாகி, காதலியாகி, பின் மனைவியும் ஆனார்.

    1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் நாள், குடும்பத்தினர் ஆசிர்வாதத்தோடு சங்கீதாவின் கரம்பிடித்தார் விஜய். திருமணம் ஆனவுடனேயே விஜய்யின் சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறினார் மனைவி சங்கீதா.

    ஸ்டார் நடிகர் அந்தஸ்து: 1998-ல் சங்கிலி முருகன் தயாரிப்பில், ஃபாசில் இயக்கத்தில் "காதலுக்கு மரியாதை" திரைப்படம் வெளிவந்தது. இதில், நடிகர் விஜய் மற்றும் ஷாலினியின் ஜோடி மக்களை பெரிதும் கவர்ந்தது.

    "காதலுக்கு மரியாதை" திரைப்படத்தைத் தொடர்ந்து, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வெளியான "லவ் டுடே" திரைப்படமும் ஹிட் அடித்ததால், ஸ்டார் நடிகர்கள் பட்டியலுக்குள் நுழைந்தார் விஜய். இளைஞர்களிடம் விஜய்க்கான தனி இடத்தை உறுதிப்படுத்தியது "லவ் டுடே".

    தொடர்ந்து காதல் கதைகளங்களில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்ற விஜய், அந்த வெற்றியைத் தக்கவைக்க திட்டமிட்டார். அதற்காக தெளிவாக வியூகம் அமைத்தவர், " நினைத்தேன் வந்தாய்", "துள்ளாத மனமும் துள்ளும்" உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ்நாட்டில் அனைவரும் கொண்டாடும் ஜனரஞ்சக நாயகன் ஆனார்.

    எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த "குஷி" திரைப்படத்தின் மூலம் கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்தார். அத்துடன் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமை யாளர்கள் என அனைவரிடமும் "மினிமம் கேரண்டி ஹீரோ" என்ற பட்டத்தையும் பெற்றார்.

    தமிழகத்தில் குழந்தைகளை கவர்ந்துள்ள முதன்மையான ஹீரோ யார் என்றால்? அது விஜய் என்றே சொல்லலாம். அதற்கு காரணம், பெரும்பாலான ஹீரோக்களுக்கு மிகவும் சிரமமான காமெடி மற்றும் நடனம், விஜய்க்கு கை வந்த கலை. சித்திக் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஃப்ரெண்ட்ஸ்.

    இதில் சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி உள்ளிட்டோருடன் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார் விஜய். மேலும் சச்சின், வசீகரா திரைப்படங்களில், வித்தியாசமான காமெடி சென்சை வெளிப்படுத்தியிருப்பார் விஜய்.

    இந்த படங்கள் முழுக்க நகைச்சுவை பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கும்.

    தொடர்ந்து "பிரியமானவளே", "பத்ரி", "ஷாஜகான்", "யூத்" என அடுத்தடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்து தனக்கான நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொண்டதோடு, ரசிகர்களின் எண்ணிக்கையையும் பெருக்கிக்கொண்டார்.

    நடனம் பாட்டிலும் அசத்தல்:

    மற்ற ஹீரோக்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களுக்கும் விஜய்யின் நடனம் கட்டாயம் பிடிக்கும். நடனத்தை போன்றே பாடலிலும் தனது தனி முத்திரையை பதித்துள்ளார் விஜய். தான் நடிக்கும் திரைப்படங்கள், நண்பர்களின் திரைப்படங்கள் என 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் விஜய்.

    நடிகனாக தன்னை நிலைநிறுத்தி மென்மையான காதல் கதைகளில் மட்டுமே நடித்துவந்த விஜய், ஆக்சன் ட்ராக்கிற்கு மாறி முதன் முதலில் நடித்த திரைப்படம்தான் "தமிழன்". இதனைத்தொடர்ந்து திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

    ஆக்சன் களத்தில் இறங்கியபோது "திருமலை" படத்தை இளம் அறிமுக இயக்குநர் ரமணா இயக்கிய நிலையில், அப்போதிலிருந்தே நிறைய புது இயக்குநர்களுடன் பணியாற்ற தொடங்கினார் விஜய். 'முதல்வன்', 'சாக்லேட்' ஆகிய படங்களை தயாரித்த ஆர்.மாதேஷ் 'மதுர' படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். 'திருப்பாச்சி' படம்தான் பேரரசுவின் முதல் படம்.

    மறைந்த பழம்பெரும் இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன், 'சச்சின்' படம் மூலம்தான் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். முன்னணி நடிகராக வலம் வந்த பிரபுதேவா 'போக்கிரி' படம் மூலம்தான் தமிழில் இயக்குநர் ஆனார். 'கில்லி', 'மதுர' படங்களுக்கு வசனம் எழுதிய பரதன், 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கினார். 'குருவி' படத்திற்கு வசனம் எழுதிய பாபுசிவன் 'வேட்டைக்காரன்' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

    "பாக்ஸ் ஆஃபிஸ் கிங்"

    இன்று விஜய் படம் ரிலீசாகிறது என்றால், வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று அதனை திருவிழா கூடமாக மாற்றிவிடுகின்றனர். அந்த அளவுக்கு நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்சன் என அனைத்திலும் சொல்லி அடிக்கும் கில்லியாக மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார் விஜய்.

    ஆனால் இதே விஜய்யைதான் ரசிக்க முடியவில்லை என ஆரம்ப கால கட்டத்தில் பெரும்பாலான ஊடகங்கள் விமர்சித்தன. அத்தனை விமர்சனங்களையும், பலவீனங்களையும் தனது பலமாக மாற்றி இன்று தமிழ் சினிமாவின் "பாக்ஸ் ஆஃபிஸ் கிங்"காக ஜொலிக்கிறார் விஜய்.

    இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை அப்லோட் செய்தவுடன் வெறும் 24 நிமிடங்களில் 4 மில்லியன் லைக்குகளைப் பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகவும் திகழுகிறார் அவர்.

    திரையில் அரசியல்: சினிமாவில் தனது மகனுக்கு "இளைய தளபதி" பட்டத்தை சூட்டி ஜெயிக்க வைத்த எஸ்.ஏ. சந்திரசேகர், அரசியலிலும் தன் மகனை தலைவனாக்க துடித்தார். அதன் வெளிப்பாடாகவே 2010-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியான தனது படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்களை மறைமுகமாக பேசி வந்தார் இளைய தளபதி விஜய்.

    2017ல் மெர்சல் படத்தில் நேரடியாக அரசியல் பேசினார். அதன்பிறகு வந்த தெறி, சர்கார் போன்ற படங்களிலும் பல அரசியல் கருத்துகளைப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    "என் நெஞ்சில் குடியிருக்கும்..": சினிமாவில் அரசியல் வசனங்கள் பேசுவதுடன், "என் நெஞ்சில் குடியிருக்கும்" என ரசிகர்களை அழைத்து குட்டிக் கதைகளை சொல்ல ஆரம்பித்த விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலமாக நேரடியாக சமூக பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

    மேலும், மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்க, கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10, 12 -ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு பரிசு தொகையுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். விஜய்யின் இந்த சமூக பணிகள், அவரது அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பைத் தூண்டின.

    "தமிழக வெற்றிக் கழகம்"

    விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக தனது கட்சி பெயரை 02.02.2024 அன்று அறிவித்தார்.

    "தமிழக வெற்றிக் கழகம்" என்று கட்சியின் பெயரை அறிவித்த விஜய், தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைத்தே தனது கட்சி செயல்படும் என அறிக்கை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், தீவிர அரசியலில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்தார்.

    தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T என்ற படத்தில் நடித்துகொண்டிருக்கும் விஜய், அடுத்ததாக விஜய் 69 படத்தில் நடிக்க உள்ளதாகவும், அத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இவருக்கெல்லாம் எதுக்கு சினிமா? ஹீரோவுக்கான தகுதியே இல்லை என்று தன் சினிமா என்ட்ரியின்போது தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு எல்லாம் பேச்சால் பதில் சொல்லாமல், தனது உழைப்பின் மூலம் பதில் அளித்தார். அதாவது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காவும் உயர்ந்து நெத்தியடி கொடுத்த இளைய தளபதி விஜய்யின் ஃபார்முலா, தற்போது அரசியல் களத்திலும் தொடர்வதால் அரசியல் களமும் பரபரப்பாக காணப்படுகிறது.

    -நிரா

    • ஆற்றல்தான் மனிதரின் பெரும்பாலான வெற்றி, தோல்விகளை உறுதிசெய்கிறது.
    • நினைவாற்றல் குறையும்போது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேர்கிறது.

    ஒரு நிகழ்வையோ அல்லது செய்தியையோ நம் நினைவில் வைத்து, அதை தேவையான நேரத்தில் பயன்படுத்துவதுதான் நினைவாற்றல். இந்த ஆற்றல்தான் மனிதரின் பெரும்பாலான வெற்றி, தோல்விகளை உறுதிசெய்கிறது. நினைவாற்றல் குறையும்போது அவர் தனது வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்க நேர்கிறது. எனவே நினைவாற்றலின் வகை, அதை எப்படி அதிகரித்துக் கொள்வது? என்பது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

    நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என்று 2 வகையாகப் பிரிக்கலாம்

    குறுகிய கால நினைவாற்றல்:

    உடனடியாகக் கூறும் நினைவாற்றல்: அதாவது இப்போது ஒருவர் கூறிய செய்திகளை, அடுத்த வினாடியே அப்படியே கூறு வதாகும், எடுத்துக்காட்டுக்குத் தொலைபேசி எண்களை ஒருவர் சொல்லி முடித்ததும், அடுத்தவினாடியே திரும்பி அதையே சொல்வது. இந்த நினைவாற்றல் மூளையின் பிரண்டல் (Frontal) பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.

    குறுகிய கால நினைவாற்றல்: இது 5 நிமிடங்கள் முதல் 1 மணிநேரத்திற்கு அல்லது ஒரு சில நாட்களுக்கு முன்னால் நடந்தவற்றை நினைவு கூர்வது. எடுத்துக்காட்டுக்குக் காலையில் என்ன உணவு எடுத்துக் கொண்டோம் என்பதை நண்பகல் வேளையில் நினைவு கூர்வது. இந்த நினைவாற்றல் மூளையில் ஹிப்போகாம்பஸ் (Hippocampus) என்னும் பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.

    நீண்டகால நினைவாற்றல்:

    சிறுவயதில் நடந்தவைகள் மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவைகளை நினைவுகூர்வது. எடுத்துக்காட்டுக்குத் தற்போது உங்கள் வயது 40 என்று வைத்துக்கொண்டால், நீங்கள் படித்த பள்ளியின் பெயர், அப்போதைய நண்பர்கள், ஆகியவற்றை நினைவுகூர்வது. இந்த நினைவாற்றல் பெருமூளையில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது. இவை தவிர இன்னும் சில நினைவாற்றல் வகைகள் உள்ளன.

    செயல் நடைமுறை நினைவாற்றல் :

    சில வேலைகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பழகி அதன்படி அதைத் திறம்படச் செய்து முடிப்பது. எடுத்துக்காட்டுக்கு: ஊர்தி ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, உடை அணிவது, சமையல் செய்வது ஆகியவையாகும். இந்த நினைவாற்றலைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது மட்டுமே கடினமாக இருக்கும். அதில் தேர்ச்சி பெற்று விட்டால் அந்தச் செயலைச் செய்வதற்கு, நாம் அதிகத் துயர்கொள்ளத் தேவையில்லை.

    நினைவுமறதி நோயின் முற்றிய நிலையில் கூட இந்த நினைவாற்றல் அவர்களுக்கு நிலைத்து நிற்கும். அதனால்தான் அவர்களால் ஊர்திகளை இயக்க முடியும், ஆனால் எங்குச் சென்று, எப்படித் திரும்பி வருவது என்பதை மறந்து விடுவார்கள். இந்த நினைவாற்றல் மூளையின் பேசல் கேங்கிலியா (Basal Ganglia) என்ற பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்ப டுகிறது.

    உணர்வுகளுக்கான நினைவாற்றல் :

    நம் வாழ்க்கையில், ஒரு சில நேரங்களில் நடக்கும் நிகழ்வுகளால் எதிர்மறை அல்லது நேர்மறை உணர்வுகள் பாதிக்கப்பட்டு, உணர்ச்சிகளின் உச்சத்திற்கு உந்தப்பட்டிருப்போம். இவை நம் நினைவில் எப்போதும் நீங்காமல் நிலைத்தி ருக்கும். அதே எதிர்மறையான நிகழ்வு மீண்டும் நடக்கும் போது, நம் மூளை, நம்மை எச்சரிக்கும் அல்லது நேர்மறையான (மகிழ்ச்சி) நிகழ்வாக இருந்தால் அதை அப்படியே செய்யத் தூண்டும். இந்த நினை வாற்றல் மூளையில் உள்ள லிம்பிக் வளையம் (Limbic Circute) என்ற தனிப்பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.

    காட்சிகளுக்கான நினைவாற்றல் :

    ஓர் இடத்தில் இருந்து, வேறு ஓர் இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும், எப்படித் திரும்பி நம் வீட்டுக்கு வரவேண்டும் என்று நினைவில் கொள்வது. எடுத்துக்காட்டுக்கு, திருச்சியிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று, மீண்டும் திருச்சியிலுள்ள நம் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றால், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோமோ, அதே வழியில் மீண்டும் திரும்பி வீட்டிற்கு வருவது இந்த நினைவாற்றல் கையில்தான் உள்ளது.

    ஒரு சில பாதைகளைத் தவற விடும்போது, இந்த நினைவாற்றல்தான் நம்மை எச்சரிக்கை செய்து மீண்டும், சரியான வழியைத் தேர்ந்தெடுக்கச் செய்கிறது. இந்த நினைவாற்றல் நம் மூளையில் பரைட்டல் (Patietal Lobe) பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது. நினைவாற்றலின் வகைகள் பற்றிப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து நினைவாற்றலை எவ்வாறு அதிகரிப்பது என்று பார்க்கலாம்.

    நினைவாற்றலை அதிகரிக்க:

    நாம் படிப்பதற்கும் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் எடுப்பதற்கும் ஒரு வேலையை விரைவாகச் செய்வதற்கும் என அனைத்திற்கும் இந்த நினைவாற்றல் மிகவும் தேவை. இதை அதிகரிக்கக் கண்டிப்பாக முயல வேண்டும். அதற்கான சில வழிமுறைகள் இதோ...

    1.இரவு நேர ஆழ்ந்த உறக்கத்தின் போது நினைவாற்றல் வலுவடைகிறது.

    2.வைட்டமின் "சி" உள்ள பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது.

    3.காய்கறி, கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது.

    4.வாதுமைக் கொட்டைகள் நினைவுத்திறனை அதிகரிக்கக் கூடியவை. எனவே தினமும் இரண்டு வீதம் காலையில் எடுத்துக்கொள்வது.

    5.விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பது.

    6.குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கெடுப்பது.

    7.காலையில் இருந்து இரவுவரை என்ன செய்தோம் என்பதை நினைவு கூர்வது.

    8.புதிய கலைகளைக் கற்றுக்கொள்வது, குறிப்பாக இசை மற்றும் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது.

    9.நாளும் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்வது.

    10.ஏதாவது ஒரு விளையாட்டில் அல்லது செய்யும் வேலைகளில் மனத்தை நிலைநிறுத்தி விளையாடுவது / செய்வது.

    11.மூச்சைக் கவனிப்பது.

    12.ஒவ்வொரு நாளும் 20- நிமிடமாவது தியானம் செய்வது.

    13.பல சிந்தனைகளை மனத்தில் கொண்டு, செய்யும் வேலையில் கவனம் இல்லாமல் இருப்பது மூளை நலனுக்கு நல்லதல்ல. ஒருநேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் முழுவதையும் ஒருங்கிணைத்துச் செய்வதைத்தான் Mindful Living என்று கூறுகிறோம்.

    14.மூச்சைக் கவனித்துக்கொண்டே தோப்புக்கரணம் போடுவது. தோப்புகரணத்தைச் சூப்பர் பிரைன் யோகா (Super Brain Yoga) என்று கூறுகிறோம்.

    இதில் வலக் கையைக் கொண்டு இடக் காதையும், இடக் கையைக் கொண்டு வலக் காதையும் மாற்றிப் பிடிப்பதால், மூளையின் இரண்டு அரைக்கோளங்களும் தூண்டப்படுகின்றன. மேலும் ஞாபகத்திறன், ஒருங்கிணைப்புத் திறன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதைப் படிக்கும் குழந்தைகள் அன்றாடம் செய்வது நல்லது.

    இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள், குழந்தைகள் தவறு செய்தால் அல்லது மதிப்பெண் குறைந்தால் தோப்புக்கரணம் போடவைத்தனர், கோவில் சென்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை பிள்ளையாரைப் பார்த்துத் தோப்புக்கரணம் போடுவது என்று நம் வாழ்க்கையோடு தோப்புக்கரணத்தை இணைத்திருக்கிறார்கள்.

    அவர்களின் கூர்த்தமதி போற்றத்தக்கது. மேற்கூறிய 14-வழி முறைகளைப் பின்பற்றுவதால், நம் மூளையில் உள்ள நினைவுத் திறனுக்கான பகுதிகள் தூண்டப்பட்டு, அனைத்து வகையான நினைவாற்றலையும் அதிகரித்து, வாழ்வை வண்ணமயமாக்கிக் கொள்ளலாம்.

    எனைத்தானும் நல்லவை கேட்க!

    மறதியை மறப்போம்!

    நினைவாற்றலை வளர்ப்போம்!

    • 63 நாடுகளின் மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் சேர்ந்து படிக்கிறார்கள்.
    • நுழைவுத் தேர்வில் 680 மதிப்பெண்கள் வரை பெற வேண்டியது அவசியமாகும்.

    உலக அளவில்மிகவும் பிரபலமான பெருமை வாய்ந்த பல்கலைக்கழகமாக திகழ்வது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகும்.

    இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க இடம் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

    இங்கு 350க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்புகளும் 53க்கு மேற்பட்ட பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகின்றது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு, பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 90 முதல் 93 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பில் சேருவதற்கு, மேல்நிலைப்பள்ளி தேர்வில் எல்லா பாடங்களையும் சேர்த்து குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல படிப்புகள் நடத்தப்பட்டாலும், பயோ கெமிஸ்ட்ரி (BIO-CHEMISTRY), கம்ப்யூட்டர் சயின்ஸ் (COMPUTER SCIENCE ), இன்ஜினியரிங் சயின்ஸஸ் (ENGINEERING SCIENCES), மருத்துவம் (MEDICINE) பொருளாதாரம் (ECONOMICS) , எம்.பி.ஏ. (M.B.A.) நிதி

    (FINANCE) போன்ற பாடங்களை அடிப்படையாகக் கொண்ட படிப்புகளுக்கு மிகவும் மதிப்பு அதிகம் .

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக எம்.பி.ஏ. படிப்பு

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களது படிப்பு விவரங்களை முதலிலேயே சரி பார்த்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே தங்கள் மதிப்பெண்களை சரியாக கணக்கிட்டு கொள்வது நல்லது.

    இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 334 மாணவ, மாணவிகள் எம்.பி.ஏ. படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். உலகில் உள்ள சுமார் 63 நாடுகளின் மாணவ, மாணவிகள் இந்த படிப்பில் ஆண்டுதோறும் சேர்ந்து படிக்கிறார்கள்.

    இந்த படிப்பில் சேர்வதற்கு Graduate Management Admission Test (ஜி.எம்.ஏ.டி) (GMAT) என்னும் நுழைவுத் தேர்வில் 680 மதிப்பெண்கள் வரை பெற வேண்டியது அவசியமாகும். இவைதவிர, பணி அனுபவம் சுமார் ஆறு வருடங்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்தும் இன்னும் சில படிப்புகள்:

    1.எம்.எஸ்.சி. இன் பைனான்சியல் எக்கனாமிக்ஸ் (M.Sc., in பைனான்சியல் ECONOMICS)

    2.எம்.எஸ்.சி குளோபல் ஹெல்த்கேர் லீடர்ஷிப் (M.Sc., GLOBAL HEALTH CARE LEADERSHIP)

    3.எம்.எஸ்.சி. லா அண்ட் பைனான்ஸ் (M.Sc. LAW AND FINANCE)

    4.எம்.எஸ்.சி. இன் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ் (M.Sc. in ADVANCEDCOMPUTER SCIENCE)

    5.எம்.எஸ்.சி. இன் எக்கனாமிக் அண்ட் சோசியல் ஹிஸ்டரி (M.Sc. in ECONOMIC AND SOCIAL HISTORY)

    மேலே குறிப்பிட்டுள்ள படிப்புகளில் எம்.எஸ்.சி இன் பைனான்சியல் எக்கனாமிக்ஸ் (M.Sc. in FINANCIAL ECONOMICS) படிப்பில் சேர்வதற்கு கண்டிப்பாக ஜி.எம்.ஏ.டி. தேர்வில் 742 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். பணி அனுபவம் விரும்பத்தக்கது.

    ஆனால், இந்த படிப்பை தவிர மற்ற படிப்புகளில் சேர்வதற்கு Graduate

    Management Admission Test (ஜி.எம்.ஏ.டி)(GMAT) நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.

    இருந்தபோதும், எம்.எஸ்.சி. குளோபல் ஹெல்த் கேர் லீடர்ஷிப் (M.Sc., GLOBAL HEALTH CARE LEADERSHIP) படிப்பில் சேர கண்டிப்பாக ஐந்து வருட பணி அனுபவம் தேவை.

    மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பட்ட மேற்படிப்புகளிலும் சேர்வதற்கு பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும்

    பொதுவாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அக்டோபர் மாதம்வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால், பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் மாறுதலுக்கு உட்பட்டது.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்தும் பிரபலமான படிப்புகள்:

    ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்...

    1.எம்.பி.ஏ. (M.B.A.)

    2.எம்.எஸ்சி. பயோ கெமிஸ்ட்ரி (M.Sc Bio-Chemistry)

    3.எம்.எஸ்சி. கெமிக்கல் பயாலஜி (M.Sc Chemical Biology)

    4.எம்எஸ்.சி அட்வான்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் (M.Sc., Advanced ComputerScience)

    5.எம்.இன்ஜினியரிங் சயின்ஸ் (M.Eng Engineering sciences)

    6.எம்.எஸ்சி இன்ஜினியரிங் சயின்ஸ் -சிவில் அண்ட் ஆப்சோர் இன்ஜினியரிங் (M.Sc Engineering Science - Civil and Offshore Engineering)

    7.எம்.எஸ்.சி. லா அண்ட் பைனான்ஸ் (M.Sc Law and Finance)

    8.எம்.எஸ்சி., மேத்தமேட்டிக்கல் அண்ட் கம்ப்யூடேஸ்னல் பைனான்ஸ் (M.ScMathematical and Computational Finance)

    9.எம்.எஸ்சி., சோசியல் டேட்டா சயின்ஸ் (M.Sc Social Data Science)

    10.எம். எஸ்சி., பைனான்சியல் எக்கனாமிக்ஸ் (M.Sc., Financial Economics)

    11.பி.எஸ். மெடிசின் (B.S Medicine)

    12.எம்.பி.பி.எஸ் (M.B.B.S)

    13.பி.எஸ். கெமிஸ்ட்ரி (B.S. Chemistry)

    14.பி.ஏ. கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.A.Computer Science)

    15.பி.ஏ. பயோ மெடிக்கல் சயின்ஸ் (B.A Biomedical Sciences)

    ஆகிய படிப்புகள் இங்கு பிரபலமான படிப்புகளாக உள்ளன.

    பட்ட மேற்படிப்பில் சேர்வது எப்படி?

    ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு கீழ்கண்ட சான்றிதழ்களும் ஆவணங்களும் கண்டிப்பாக தேவை.

    1.OFFICIAL ACADEMIC TRANSCRIPT

    2.OFFICIAL CERTIFICATES OF PREVIOUSLY ATTENDED INSTITUTIONS.

    3.ACADEMIC AVERAGE REQUIRED: 3.5-3.7GPA or 90-93%

    4.7.0 IELTS (6.5 per component)

    5.STATEMENT OF PURPOSE AND RESEARCH PROPOSAL.

    6.WRITTEN WORK

    7.GRE CERTIFICATE

    8.SCHOLARSHIP SUPPORTING STATEMENT.

    9.PORTFOLIO

    10.THREE LETTERS OF RECOMMENDATION

    11.COPY OF PASSPORT

    12.CV/RESUME

    ஆக்ஸ்போர்ட்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை:

    பொதுவாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் மிகவும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களையும் சிறப்பு திறமை கொண்டவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளுகிறார்கள்.

    குறிப்பாக, மாணவர் சேர்க்கையின்போது, மாணவர்களின் தலைமை பண்பு, படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், படிப்போடு தொடர்புடைய மற்ற திறமைகள், படிப்போடு தொடர்புடைய அறிவு போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

    எனவே, படிப்பில் மிக சிறந்து விளங்கு பவர்களும், சிறந்த தனித்திறமைகள் கொண்டவர்களும், பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் தகுதி கொண்டவர்களும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சிறந்த கல்வி பெறலாம்.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி:

    https://www.ox.ac.uk/

    E-Mail:nellaikavinesan25@gmail.com

    • சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழவே சங்கடஹர சதுர்த்தி.
    • விநாயகப் பெருமானுக்கு திருமஞ்சனம் செய்வித்து வழிபடலாம்.

    ஒருவரது வாழ்வில் அடுத்தடுத்து சங்கடங்கள் வந்து கொண்டே இருந்தால், சந்தேகமே வேண்டாம். அவை தோஷங்களின் பாதிப்புதான்.

    இந்த சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழவே விநாயகருருக்கு உரிய சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை தோற்றுவித்ததாக வரலாறு கூறுகின்றது. இவ்விரதத்தை தொடங்கும் நாளில் சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து சங்கல்பம் செய்து கொண்டு நீராடி விநாயகப் பெருமானைத் தியானம் செய்ய வேண்டும். அன்று உபவாசம் இருப்பது நல்லது.

    விநாயக புராணத்தை பாராயணம் செய்தல், சதுர்த்தி விரதம் போன்று இதற்கும் விநாயகப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வித்து வழிபடலாம். மாலையில் சந்திரனை வழிபட்டு, கோவிலுக்கு சென்று அபிஷேகம் பார்த்து கவசம் படித்து முடித்து கொள்ளலாம். இதனால் கடன் தொல்லை, நோய், பகை, தோஷங்கள் மறைந்து நல்லன எல்லாம் விரைவிலேயே அடையலாம்.

    சில தோஷங்கள் நிம்மதி இழக்க செய்து விடும். அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழ மையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும்.

    சுக்ல சதுர்த்தி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் வெற்றி பெறும்.

    வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கினால் தோஷம் நீங்கி நல்லருள் பெறலாம்.

    மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமண தோஷம் விலகி தாலி பாக்கியம் விரைவில் வரும்.

    நவக்கிரக தோஷமுள்ளவர்கள் விநாய கருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.

    வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை தோஷம் விலகி விடும்.

    சதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளை யார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.

    உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்பில் தடை ஏற்பட்டு தோஷத்தால் கல்வி தடை ஏற்பட்டால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் தாருங்கள். பேச்சு தாமதமாகும் குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாய கரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானமாகத் தாருங்கள்.

    விநாயகர் ஜாதகத்தை ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வழிபடுவது சிறப்பு தரும். அவருடைய ஜென்ம நட்சத்திரம் அஸ்தம் - ஜென்ம ராசி கன்னி. ஜென்ம லக்கினம் விருச்சிகம்.

    இந்த ஜாதகத்தை வளர்பிறை சதுர்த்தி நாளில் தொடங்கி 48 நாட்கள் பூஜை செய்து வர திருமணத் தோஷங்கள் நீங்கும். கணபதி மூல மந்திரத் திரிசதி வாசிக்க வியாபார தோஷம் விலகி லாபம் கிடைக்கும்.

    விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்றவற்றைப் படிக்க படிக்க நீங்கள் நினைத்தது நடக்கும்.

    சென்னையில் உள்ள திருநீர்மலை புராணகால முக்கியத்துவம் பெற்று அங்குள்ள மணி கர்ணிகா தடாகம் என்ற திருக்குளத்தின் கரை யில்தான் ராகு-கேது தோஷங்களை போக்கும் தூமகேது விநாயகர் ஆலயம் உள்ளது.

    "தூமம் என்றால் ராகு என்றும், கேது என்றால் ஞானகாரகன் கேதுவை யும் குறிக்கும்". இந்த இரண்டு ரூபமும் சேர்ந்த வர்தான் தூமகேது கணபதி.

    மேலும் ஆகம வரிசைப்படி, புகை வடிவ தூமராசன் என்ற அரக்கனை அழித்த ரூபமான தூமகேது என்றும் புகழப்படுகிறார்.

    ஒரு பெண் ஜாதக அமைப்பில் ராகு-கேதுவால் தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்பட்டாலும், மற்ற கிரக தோஷங்களால் தடை ஏற்பட்டாலும், இந்த ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் விலகி திருமணம் நடைபெறும்.

    திருமணம் நீண்ட நாட்களாக தடைபட்டால், அதற்குரிய பரிகாரத்தை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் செய்யலாம்.

    ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று காலை எட்டு மணி முதல் பதினோரு மணி வரை, நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்காக, சந்தான கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.

    விசேஷ திராவிய ஹோமம் முடிந்ததும் மிகப்பெரிய வலம்புரி சங்கால் பால் அபிஷேகம் தூமகேது கணபதிக்கு நடத்தப்பட்டு, அன்று வரும் அனைத்து கணவன்-மனைவிக்கும் சங்கு பால் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    முதன்முதலாக கணபதியின் கல்யாண வைபோக விழாவை மிகச்சிறப்பாக நடத்திய பெருமை திருநீர்மலை அடிவாரத்தில் உள்ள தூமகேது விநாயகர் ஆலயத்தையே சேரும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கும், காரைக்குடிக்கும் இடையே அமைந்துள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் அருள் பாலித்து வருகிறார். ஆறடி உயரத்தில் பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கும் இந்த விநாயகர் வலது கையில் சிவலிங்கத்தினை வைத்து யோக நிலையில் உலக நன்மைக்காக ஞானத்துவம் புரிந்து கொண்டிருப்பதாக ஐதீகம்.

    கேட்டவருக்கு கேட்டவரம் தரும் இவ்விநாயகர் வலஞ்சுழித்த நிலையில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பதால் இவரை வழிபடுவோருக்கு தோஷங்கள் விலகி வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    புதுச்சேரியில் உள்ள விநாயகரை மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக போற்றி பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    தாமரை, அருகம்புல்லுடன் தேங்காய்களை மாலையாக கோர்த்து மணக்குள விநாயக ருக்கு அணிவித்து வணங்கினால் அவர் முன்வினை தோஷங்களை மறைய செய்து மனம் குளிர வைப்பார் என்று பக்தர்கள் கூறுகின்றனர். எனவே மன அமைதியை பெற விரும்புபவர்கள் மணக்குள விநாயகரை தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

    திண்டிவனம் அடுத்த தீவனூரில் பொய்யா மொழி விநாயகர் கோவில் உள்ளது. நெல்லுக்குத்தி விநாயகர்: நெல்லுக்குத்த பயன்பட்ட கல் இங்கு விநாயகராக மாறியதால் இவருக்கு நெல்லுக்குத்தி விநாயகர் என்றும் பெயர் வந்தது. ஒரு நாள் மிளகு வியாபாரி ஒருவரிடம் விநாயகருக்கு பொங்கல் படைக்க சிறிது மிளகு வேண்டும் என கேட்க, அதற்கு மூட்டையில் உளுந்து உள்ளதாக பொய் கூறினார்.

    ஆனால் அந்த மூட்டைகளுடன் உளுந்தூர்பேட்டை சந்தைக்கு சென்று மூட்டைகளை பிரித்தவர் உளுந்து இருப்பது கண்டு திடுக்கிட்டார். உடனே அங்கிருந்து தீவனூர் வந்த விவசாயி விநாயகரிடம் முறையிட்டார். பின்னர் கோவில் பிரசாதம் பெற்று உளுந்தூர்பேட்டை சென்றவர் மூட்டை யில் இருப்பது மிளகாக மாறி இருந்ததை கண்டார். எனவே இவர் பொய்யா மொழி விநாயகர் என பெயர் பெற்றார்.

    இந்த கோவில் தலவிருட்சம் விழுதில்லா ஆலமரம் ஆகும். மும்மூர்த்திகள் இங்குள்ள விநாயக ரிடம் வரம் கேட்க வந்து ஆலமரமாக ஆன தாக வரலாறு. இந்த ஆல மரம் விழுதில்லாதது தனிச்சிறப்பாகும். இந்த மரத்தை சுற்றி நூல் சுற்று வோருக்கு 90 நாட்க ளுக்குள் மாங்கல்ய தோஷங்கள் விலகி பாக்கியம் கிடைக்கும்.

    சுயம்பு மூர்த்தியாக விளங்கும் இந்த பொய்யாமொழி விநாயகர் சன்னதியில் திருமணம் நடைபெறும் அனைவருக்கும் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக பிறக்கும் என்பது ஐதீகம்.

    மேலும் குழந்தை வரம், மாங்கல்ய பாக்கியம், வியாபாரம் தழைக்க என பலவித தோஷ நிவர்த்தி வேண்டுதல்கள் இங்கே நிறைவேறுகின்றன.

    விநாயகர் வழிபாட்டால் தோஷங்கள் விலகும் அடுத்த வாரம் தொடரும்....

    ×