என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student death"

    • சிகிச்சை பலன் இன்றி சிறுமி பவினா பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள எடையூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் . இவரது மகள் பவினா (வயது 8 ). இவர் விருத்தாச்சலம் புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று விளங்காட்டூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன்பு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் திடீரென்று கற்கள் சரிந்து கீழே விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பவினா தலையில் விழுந்தது. இதில் சிறுமி பவினாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி பவினா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து விருத்தாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாட்டின் போது இரு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
    • தாக்கப்பட்ட நிலையில் பிளஸ் டூ மாணவன் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சக்கில் நத்தம் கப்பல்வாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் பள்ளியில் சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த தென்னம் பாளையால் மாணவன் கோபிநாத்தை உடன் படிக்கும் மாணவன் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோபிநாத் அங்கேயே சுருண்டு விழுந்தார். மேலும் மாணவன் கோபிநாத்திற்கு வலிப்பு நோய் ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். இதனை அறிந்த அங்கிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவனை அங்கிருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, வழியிலேயே மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவன் கோபிநாத்தை தாக்கிய மற்றொரு மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இறந்த மாணவன் மற்றும் அவனை தாக்கிய மாணவனும் அடுத்தடுத்த வீடுகளைச் சார்ந்தவர்கள் என்பதால் கிராமத்தில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசு இறந்தார்.
    • மினி லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு (வயது 17) ஐடிஐ மாணவர். இவர் கடந்த 22 ஆம் தேதி ஐடிஐ பாலிடெக்னிக் ஆசிரியர் தோட்டத்தில் தேங்காய் பறிக்க அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசு இறந்தார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் அரசிற்கு நீதி வழங்க வேண்டும் என்று ஒன்று திரண்டு பாலிடெக்னிக் முன்பு போராட்டம் நடத்தினர். இதை அறிந்த அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பொது மக்களை கலைந்து போக செய்தனர். இந்நிலையில் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக சுமார் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை விசாரித்து வந்த நிலையில் போராட்டம் நடத்துவதற்காக பொதுமக்களை வாணியம் பாளையத்திலிருந்து 2 மினி லாரிகளில் பண்ருட்டிக்கு அழைத்து வந்த மினி லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. 

    • மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கிருஷ்ணகிரி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருப்பதி (வயது 19). இவர் டிப்ளமோ கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

    திருப்பதி பொங்கல் பண்டிகையை கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலமரத்துபட்டியில் உள்ள தனது மாமா சின்னசாமி என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று திருப்பதியும், அவரது மாமா மகன் ஹரிஹரன் (10) என்ற பள்ளி மாணவனுடன் செம்மங்குளிகோட்டையில் உள்ள சின்னசாமியின் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கி திருப்பதி மற்றும் ஹரிஹரன் இருவரும் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீச்சல் பழக முயன்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது.
    • சாப்பிட்டு விட்டு தூங்கிய சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன்.

    இவன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்க மின்மையால் அவதிப்பட்டு வந்தான்.

    நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.

    • தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர்.
    • மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 64) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் நேற்று தனது மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பொங்கல் விடுமுறை முடிந்து தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் சென்ற போது எதிரில் வந்த கார் மோதியது. இதில் நீலமேகம், இவரது மனைவி சுதாலட்சுமி (48), விக்னேஷ் (35), இவரது மனைவி உமாமகேஸ்வரி (33), விக்னேஷ் மகள் சஹானா (6), எதிரே வந்த காரில் இருந்த விஸ்வா, இவரது நண்பர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (20) சின்னகள்ளி ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மகன் கிருஷ்ணராஜ்(20), அரும்பட்டு சமத்துவபுரம் பழனி மகன் முபின்ராஜ் (21), குமாரசாமி மகன் ஆகாஷ் (20), விழுப்புரம் ஆஸ்பத்திரி சாலை ரவிசங்கர் மகன் பிரசாந்த் (22) மற்றும் சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டி ருந்த ஏமப்பேர் காலனியைச் சேர்ந்த முனியன் மகன் கோவிந்தன் ஆகிய 12 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பிரசாந்த் என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். விபத்தில் பலியான பிரசாந்த் விழுப்புரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நீலமேகம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சஞ்சய் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
    • மகள் சஞ்சயுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி ரோட்டில் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (வயது 18). இவர் சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். அதே கல்லூரியில் கரூர் மாவட்டத்தை மாணவி தாய்-தங்கையுடன் கல்லூரி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மாணவன் சஞ்சய் மாணவியை பார்ப்பதற்காக அடுக்குமாடி சென்றுள்ளனர். இருவரும் மொட்டைமாடிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென மாணவியின் தாய் எழுந்து பார்த்தபோது மகளை காணாமல் திடுக்கிட்டார். இதனால் அவரை தேடி தேடி மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு மகள் சஞ்சயுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத சஞ்சய் அங்கிருந்து செல்வதற்காக 50 உயரமுள்ள மாடியில் இருந்து குதித்தார். இதில் படுகாயம் அடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் அஸ்தம்பட்டி சரக காவல் உதவி ஆணையாளர் லட்சுமி பிரியா ,இரவு ரோந்து பொறுப்பு காவல் உதவி ஆணையாளர் பாபு, கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் பயின்ற போதே சஞ்சய்க்கும் அந்த மாணவிக்கும் இடையே காதல் இருந்து வந்ததும், கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்ததும் தெரியவந்தது.

    மகன் இறந்தது குறித்த தகவல் அறிந்த சஞ்சையின் பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து சஞ்சய்யின் தந்தை சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சஞ்சய் இறந்த செய்தியை அறிந்த உடன் தங்கி இருந்த மற்றும் கல்லூரியின் சக மாணவர்கள் மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 40).

    இவர் கோவை உக்கடம் பகுதியில் தங்கியிருந்து தங்க துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி அதில் தங்க துகள்கள் இருந்தால் அதனை பிரித்து எடுத்து விற்பனை செய்கிறார்.

    கடந்த சில நாட்களாக பாலனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தங்க துகள்கள் சேகரிக்க செல்லவில்லை என தெரிகிறது.

    இதனையடுத்து தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக பாலனின் மகன் விக்னேஷ் (13)நாமக்கல்லில் இருந்து கோவை வந்தார்.

    இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விக்னேஷ் இன்று காலை தனது உறவினர்கள் சிலருடன் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி தங்க துகள்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சாக்கடையில் இருந்து விஷவாயு தாக்கியது. இதில் விக்னேஷ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    விசாரணையில், தங்க நகை பட்டறைகளில் பயன்படுத்தப்படும் சிலவகை கெமிக்கல்கள் சாக்கடை நீரில் கலந்ததால் அதன் மூலம் விஷவாயு பரவி சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜா மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
    • கார்த்திக்-மதன்குமார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் என்கிற ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் மதன்குமார். அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.

    ராஜா மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மகாலட்சுமி பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கும் வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மனம் திருந்திய மகாலட்சுமி மீண்டும் கணவர் ராஜாவுடன் சேர்ந்து வாழ திரும்பி வந்தார். காதலி மகாலட்சுமி பிரிந்து சென்றதால் கோபம் அடைந்த கார்த்திக், கடந்த 7-ந்தேதி, விருகம்பாக்கத்தில் உள்ள மகாலட்சுமியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதனை மகாலட்சுமியின் மகன் மதன்குமார் கண்டித்தார்.

    இதனால் கார்த்திக்-மதன்குமார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதன்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மதன் குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மதன்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெமினா உள்பட அனைவரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • பெமினா தங்களது கண்எதிரே, கண்இமைக்கும் நேரத்தில் மரக்கிளை விழுந்து உயிரை விட்ட சம்பவம் அவரது பெற்றோா் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    தேனி:

    சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன் (வயது 47). கார் டிரைவர். அவருடைய மனைவி கிருஷ்ணமாலா. இந்த தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர். பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிக்ஸன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு காரில் நேற்று சுற்றுலா சென்றார். அங்கு அருவியை சுற்றியுள்ள இடங்களை கண்டு களித்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஆனந்தமாய் குளித்தனர்.

    இதைத்தொடர்ந்து பெமினா உள்பட அனைவரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். வென்னியாறு பாலம் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது.

    இதில் தலையில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே பெமினா பரிதாபமாக இறந்தார். தங்களுடன் நடந்து வந்த பெமினா தங்களது கண்எதிரே, கண்இமைக்கும் நேரத்தில் மரக்கிளை விழுந்து உயிரை விட்ட சம்பவம் அவரது பெற்றோா் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி பெமினாவின் பெற்றோர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர். பின்னர் சென்னை கும்மிடிபூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் குடியிருந்த அவர்கள், தங்களது பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலையின் காரணமாக சென்னை நீலாங்கரையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    சுற்றுலா சென்ற இடத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்படியே தனக்கு முன்பு இருந்த சுடு தண்ணீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து விழுந்துள்ளார்.
    • ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மேலசேர்ந்தபூமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்தி ஆசிரியை ஆக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் கவுசல்யா (வயது 18).

    இவர் அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

    சில நாட்களாக சளி பிடித்து இருந்ததால் வெந்நீரில் மருந்தை போட்டு ஆவி பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்படியே தனக்கு முன்பு இருந்த சுடு தண்ணீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து விழுந்துள்ளார்.

    ஆவி பிடித்துக் கொண்டிருந்த தன் மகள் திடீரென அசைவற்று கிடப்பதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு உடனடியாக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • கெங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மின்னலுடன் கனமழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் சென்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    மழையால் சேலம் 5 ரோடு, 4 ரோடு, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலத்தின் கீழ் இருசக்கர வாகன ஓட்டிகள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    புது பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி நின்றதால், பஸ்கள் உள்ளே வர முடியாமலும் வெளியே செல்ல முடியாமலும் ஆங்காங்கே நின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனம் நின்றன.

    பாதாள சாக்கடை பணி நடக்கும் இடங்களிலும் மழைநீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக நெத்திமேடு ஜெயராணி மேல்நிலைப்பள்ளி, பாரதி மருத்துவமனை அருகே, உச்சிபாளையம் கருவாட்டு பாலம் அருகே, மழை நீர் ஆறாக ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. இதனால் அலுவலகங்களுக்கு சென்று வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.

    மேச்சேரியை சேர்ந்தவர் இளங்கோ மகன் அகிலன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை ஒட்டி, சேலம் கோட்டை அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை பாட்டி வேலைக்கு சென்ற நிலையில் அகிலன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மழை பெய்ததால், வீட்டுக்கு திரும்பிய மாணவன், வீடு பூட்டி இருந்ததால் நனையாமல் இருக்க மாடிப்படியில் நின்றார்.

    அப்போது மின்னல் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி, கரிய கோவில், காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. பனமரத்துப்பட்டியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது. இந்த மரங்களை ஊழியர் அகற்றி பின், மின்வினியோகம் சீரானது.

    கெங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மின்னலுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேல் பெய்த இந்த மழையில், அந்த பகுதிகளில் உள்ள 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எறிந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 31.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. தம்மம்பட்டி 25, கரியகோவில் 20, காடையாம்பட்டி 18, நங்கவல்லி 15, ஆத்தூர் 12, ஏற்காடு 7.2, எடப்பாடி 6.4, வீரகனூர் 6, ஓமலூர் 4, ஆனைமடுவு 3 என மாவட்டம் முழுவதும் 148 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேந்தமங்கலம் பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சேந்தமங்கலம்-நாமக்கல் சாலையில் மரம் ஒன்று வேருடன் முறிந்து விழுந்தது.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

    அதேபோல எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×