search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi"

    • மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
    • நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்ததால், தி.மு.க., பா.ம.க.விடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் அ.தி.மு.க.வினரின் ஓட்டுகளை பெற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி தொகுதி மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். அவை பின்வருமாறு:-

    விக்கிரவாண்டி தொகுதியில் நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது. இந்தத் திட்டம் முழுமை பெற்றால் இந்த தொகுதியில் சுமார் 40 ஏரிகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    இந்த தொகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைகளை தேடி வெளி மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்கின்ற நிலை உள்ளது. இந்த பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இங்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும்.

    விக்கிரவாண்டி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு புதிய கட்டிட வசதியோடு இயங்கி வருகிறது. இந்த தாலுகாவை இணைக்கும் வகையில் காணை ஒன்றிய பகுதிகளில் இருந்து இந்த தொகுதியின் கடைக்கோடி பகுதி அன்னியூர், நல்லாபாளையம், கண்டாச்சிபுரம், கடையம், லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் வழியாக விக்கிரவாண்டி தாலுகாவை அடையும் வகையில் பஸ் வசதி மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதற்கு லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் அல்லது நரசிங்கனூர், புதுப்பாளையம், விக்கிரவாண்டி, வழியாக வருவதற்கு பஸ் வசதிசெய்து தர வேண்டும்.

    முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகற்றப்படும் மருத்துவ கழிவுகள் மலை போல் குவிந்து பல்வேறு நோய்கள் பரப்பும் விதமாக உள்ளது. இந்த மருத்துவக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செஞ்சி பகுதியில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரத்தூர் முண்டியம்பாக்கம் வழியாக வரும் பொழுது முண்டியம்பாக்கம் ரெயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் ஆகவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

    சமீபத்தில் விக்கிரவாண்டி பேரூராட்சி காணை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் கடல் குடிநீர் ஆகும் திட்டம் மரக்காணம் பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை இருப்பினும் மேற்கண்ட பகுதிகள் பயன்பெறு வகையில் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் .

    தமிழகத்தின் தென்மாவட்டம் கன்னியாகுமரி முதல் தலைநகரான சென்னைக்கு விழுப்புரம் விக்கிரவாண்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். விக்கிரவாண்டியில் சென்னை செல்லும் அரசு பஸ்களும், சென்னையில் இருந்து திருச்சி வரைக்கும் செல்லும் அரசு பஸ்களும் புறவழிச் சாலையில் நின்று செல்வதில்லை.

    பயணிகள் விக்கிரவாண்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிடப்படுகின்றனர். நிரந்தரமாக விக்கிரவாண்டி புறநகர் பஸ்கள் கட்டாயம் நின்று செல்லும் வசதி செய்து தர வேண்டும் மற்றும் விக்கிரவாண்டியில் உள்ளஅரசு பஸ் பணிமனை விரிவாக்கப்பட்ட அரசு பணிமனையாக அமைக்க வேண்டும்.

    விவசாயம் மற்றும் விவசாய நிலத்தடி நீர் மற்றும் உயரம் வகையில் பம்பை ஆறு மற்றும் வராக நதி ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

    விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் குறு வட்டத்தைச் சேர்ந்த நல பாளையம், கடையம், புது கருவாச்சி , பழைய கருவாச்சி,டி.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு வரவேண்டும் என்றால் கண்டாச்சிபுரம் வந்து கண்டாச்சி புரத்திலிருந்து விழுப்புரம் வந்து, பின்னர் விக்கிரவாண்டி வரவேண்டிய நிலை உள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் 3 பஸ் மாறி வர வேண்டிய நிலை உள்ளது.

    தற்போது கண்டாச்சிபுரம் தாலுக்கா அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், இந்த தாலுக்காவை சேர்ந்த கிராமங்களை கண்டாச்சிபுரம் தாலுகாவில் இணைத்தால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தாலுக்கா சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இப்பகுதி மக்கள் காணை ஒன்றியத்திற்கு செல்வதற்கு நேரடி பஸ் வசதியும் செய்து தர வேண்டும்.

    இது மட்டுமல்லாமல் தாலுக்கா கருவூலம், மாவட்ட நூலகம், உட்கோட்ட காவல்துறை, அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையத்திற்கு தனி இட வசதி. அரசுதொழிற்கல்லூரி, கிராமங்களை இணைக்கும் கிராம சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இத்தொகுதி மக்களின் கனவு கோரிக்கைகளாகவே இருக்கிறது.

    • எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக்.
    • தி.மு.க., பா.ம.க., தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ள நிலையில் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே அங்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்கியுள்ள நிலையில் பா.ம.க. வேட்பாளராக வன்னியர் சங்க துணைத் தலைவரான சி.அன்புமணி நிறுத்தப்பட்டுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிட்ட போதிலும் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே தான் அங்கு நேரடி மோதல் ஏற்பட்டு உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் இந்த முடிவு தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் தேர்தல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க.வுக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 72 ஆயிரத்து 188 வாக்குகள் கிடைத்துள்ளன. இது 39.57 சதவீதமாகும்.

    அதேநேரத்தில் அ.தி.மு.க.வுக்கு 65 ஆயிரத்து 365 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது 35.83 சதவீதமாகும். இந்த தொகுதியில் பா.ம.க.வுக்கு 32,198 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது 17.54 சதவீதமாகும்.

    தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 6823 வாக்குகளே வித்தியாசமாகும். இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் தி.மு.க.வுக்கு கடும்போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்கிற கருத்தும் உள்ளது.

    இந்த தொகுதியில் வன்னியர்கள் ஓட்டு அதிகமாக இருப்பதால் பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து தேர்தலை சந்தித்தால் தி.மு.க.வை தோற்கடித்திருக்க முடியும் என்றே கூறப்படுகிறது.

    2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு விக்கிரவாண்டி தொகுதியில் 93 ஆயிரத்து 670 வாக்குகள் கிடைத்தன.பா.ம.க. உடன் இணைந்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. 84 ஆயிரத்து 157 ஓட்டுகளை பெற்றது. இதன் மூலம் பா.ஜ.க., பா.ம.க. அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இணைந்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் அது தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கும் என்பதும் கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 41,428 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலி லும் அதிக வாக்குகளை பா.ம.க. பெற்றுவிட்டால் அ.தி.மு.க. வுக்கு 3-ம் இடம் தான் கிடைக்கும் என்று கருதியும் அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் இது எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வாக்குகள் யாருக்கும் செல்லாமல் தடுக்கப்படும் சூழலில் பா.ம.க. குறைவான வாக்குகளையே பெற முடியும் என்பதும் அ.தி.மு.க.வின் கணக்காக உள்ளது.

    பா.ம.க.வால் வன்னியர்கள் நிறைந்த தொகுதியில் தடம் பதிக்க முடியவில்லை என்கிற பிரசாரத்தை அ.தி.மு.க.வால் முன்வைக்க வசதியாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இது வரும் காலங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதாயத்தை தேடித்தரும் என்றும் அவர் நம்புகிறார்.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலையும் அந்த கட்சிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    அதேநேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. எப்போதும் இல்லாத வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு தேர்தல் பணியாற்றி வருகிறது.

    இதனால் தி.மு.க.வுக்கும் பா.ம.க. வுக்கும் தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் எப்போதுமே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியிலும் அது நீடிக்குமா? இல்லை பா.ம.க. அதிரடி மாற்றத்தை ஏற்ப டுத்துமா? என்பதே இப்போது பலத்த கேள்வியாக எழுந்துள்ளது.

    பா.ம.க.வுக்கு நிகராக தி.மு.க. வினரும் வன்னியர் வாக்குகளை பிரிப்பதால் சாதி ரீதியிலான வாக்குகள் சிதறி அங்கு கடும் பலப்பரீட்சை நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    • பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார்.
    • 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில்தான் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது.

    ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழ்நாடு என்று சொல்லத்தக்க அளவில் தேர்தல் நடந்தது.

    ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் போக வேண்டும் என்பதற்கு ப.சிதம்பரம் குறிப்பிட்டது போல, ஒரு நொண்டி சாக்கை கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகிறது.

    ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பல இடங்களில் டெபாசிட் போய்விட்டது. இந்த தேர்தலிலும் டெபாசிட் போனால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலாகி விடும்.

    சசிகலா அ.தி.மு.க.வினரை ஒன்று சேர்க்க போவதாக கூறுகிறார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உங்கள் மூலமாக நான் சவால் விடுகிறேன். விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்புதாக கூறுகிறீர்களே? அப்படி புறக்கணிக்கிறது என்றால் அக்கட்சியில் உள்ள யாரும் ஓட்டு போடக்கூடாது. அதை அவரால் சொல்ல முடியுமா? நாங்களும் ஒரு கணக்கு எடுக்க போகிறோம்.

    தேர்தலில் அன்றைய தினம் யார்-யார் ஓட்டு போடுகிறார்கள் என்பது ஏஜெண்டுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா? என்று கணக்கெடுப்போம்.

    அப்படி அவர்கள் ஓட்டு போட்டிருந்தால் அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டதாக அர்த்தம்.

    எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணியுங்கள் என்று கட்சிக்கு சொல்லி விட்டு அதையும் மீறி கட்சிக்காரர்கள் ஓட்டு போட்டால் என்ன செய்வீர்கள்? உங்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன். நடவடிக்கை எடுப்பேன் என சொல்ல எடப்பாடி பழனிசாமி தயாரா? ஆனால் அவர் அப்படி சொல்ல மாட்டார்.

    ஏதோ அவர் பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார். ஆனால் எதையும் சந்திக்கிற ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது.

    காரணம் வன்னிய பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் செய்தது போல வேறு யாரும் செய்யவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான். இதன் மூலம் எத்தனை பேர் டாக்டர் ஆனார்கள். என்ஜினீயர்கள் ஆனார்கள்.

    குரூப்-1 தேர்வு எழுதி பணியாற்றி அதன்பிறகு ஐ.ஏ.எஸ். ஆனார்கள். இதையெல்லாம் அங்குள்ள மக்கள் மறந்திடுவார்களா என்ன?

    ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கி வரும் நிகழ்வு தாய்மார்கள் எப்படி நன்றி உணர்வோடு வாக்களித்து வெற்றிபெற செய்தார்களோ அதேபோல் வன்னிய பெருமக்கள் இந்த ஆட்சியின் மூலமாக 20 சதவீதத்தால்தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றோம் என்பதை உணர்ந்து ஆயிரம் ராமதாஸ் சொன்னாலும், மனசாட்சி உள்ளவர்கள், நல்லவர்கள், இதயம் படைத்த வன்னியர்கள் அத்தனை பேரும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    எங்களுக்கு விக்கிரவாண்டியில் அடித்தளம் நன்றாக உள்ளது. நிர்வாகிகள் எழுச்சியோடு உள்ளனர். கூட்டணியும் ஒன்றாக உள்ளது. போன தேர்தலில் ஒரு சின்னத்தில் ஓட்டு கேட்டு விட்டு இந்த இடைத்தேர்தலில் இன்னொரு சின்னத்தில் ஓட்டு கேட்டால் அவர்களை மதிப்பார்களா? எங்களுக்கு அப்படி இல்லை.

    தி.மு.க. 2019-ல் இருந்து ஒரே அணியில் ஓட்டு கேட்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க.தான். ஆனால் இப்போது அவர்கள் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. அதனால் புறக்கணிப்பதாக கூறுவதற்கு தோல்வி பயம் மட்டுமின்றி வேறு காரணமும் உள்ளது.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    • ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    • தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பா.ம.க. மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா நிற்கிறார்.

    இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.

    ஆளும் தி.மு.க. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் என்பதால் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

    அ.தி.மு.க.வை தொடர்ந்து அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், `ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது. தொண்டர்களின் உைழப்பு, நேரம், பணம் என அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை.

    எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கிறது என்று கூறிவிட்டார். விக்கிர வாண்டி இடைத் தேர்தலை பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்து உள்ளதால் பா.ம.க. தலை வர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காரணம் அ.தி.மு.க. ஓட்டுகள் இம்முறை பா.ம.க.வுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிககையில் உள்ளனர்.

    இந்த தொகுதியை பொறுத்தவரையில், தி.மு.க. அ.தி.மு.க. சம பலத்துடன் உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் தி.மு.க. ஆதரவுடன் 39.57 சதவீத ஓட்டுக்களை பெற்றது. அ.தி.மு.க. 35.83 சதவீதம், பா.ம.க. 17.64 சதவீதம், நாம் தமிழர் கட்சி 4.57 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

    அதாவது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட 3.7 சதவீதம் மட்டுமே அ.தி.மு.க. குறைவாக பெற்றுள்ளது.

    எனவே இப்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    1996க்கு பிறகு தமிழ கத்தில் பெரும்பாலான இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்குகள் ஒட்டு மொத்தமாக பா.ம.க. வேட்பாளருக்கு சென்றால் அது தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பேசப்படுகிறது.

    பா.ம.க. வேட்பாளரை ஆதரிப்பதற்காகவே அ.தி.மு.க., தே.மு.தி.க. மறைமுக மாக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக தி.மு.க. வினர் கூறி வருகின்றனர். அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் அவ்வாறு ஒருசேர பா.ம.க.வுக்கு செல்லாமல் தடுப்பதற்கு இப்போதே தி.மு.க. தேர்தல் வியூகம் வகுக்க தொடங்கி உள்ளது.

    அங்கு தேர்தல் பணி யாற்றுவதற்காக ஒன்றியம் வாயிலாக 9 அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர் களாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.

    ஒவ்வொரு அமைச்ச ருக்கும் 20 ஆயிரம் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கு வீடு எடுத்து தங்கி ஊழியர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஓட்டுக்களை கவனித்து யார்-யாரை நியமிக்க வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்து வைத்துள்ளனர்.

    இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கியதற்கு பா.ஜனதா வுடன் இருக்கும் மறைமுக உறவு தான் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து உள்ள நிலையில் தி.மு.க. இந்த தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

    ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இடையிலான ஓட்டு வித்தியாசம் மிக குறைவாகவே உள்ளது. தி.மு.க. (வி.சி.க.) 72,188 ஓட்டுகளும், அ.தி.மு.க. 65,365 ஓட்டுகளும் பா.ஜனதா 32,198 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

    4 முனை போட்டி நிலவினால் ஓட்டுகள் பிரிந்து எளிதில் தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று கருதப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி இடையே மும்முனைப் போட்டி தான் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு தான் செல்லும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதெல்லாம் மறைமுக காரணமாக இருக்கும் என்று அ.தி.மு.க. தொண்டர்களும் பேசி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தனி செல்வாக்கு உண்டு. அப்படிப்பட்ட நிலையில் அவரே தேர்தலை சந்திக்காமல் புறக்கணிக்கும் ஆலோசனையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி இருக்கிறார் என்றால் இதில் ஏதோ உள்குத்து இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதன் காரணமாக தி.மு.க. இந்த தேர்தலில் தான் தன் செல்வாக்கை நிலைநிறுத்த கடுமையாக போராட வேண்டி இருக்கும். இதற்காக 9 அமைச்சர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க.வினர் தேர்தல் பணியாற்ற விக்கிரவாண்டிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

    • தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.
    • இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த இந்த முடிவு சரியா? தவறா? கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதுதானா? என்று தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.

    ஏற்கனவே பாராளு மன்றத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்து இருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் புறக்கணிப்பு தொண்டர்களை சோர்வடையச் செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    கடந்த காலங்களில் சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை தி.மு.க.வும் புறக்கணித்த வரலாறு இருக்கிறது. எனவே இது ஒரு பிரச்சினையாக இருக்காது. எல்லாவற்றையும் வெற்றிகரமாக சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிறார்கள் அதி.மு.க.வினர்.

    பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறும் போது, `ஆளுங்கட்சியின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகத்தை பார்த்து ஒரு கட்சி இவ்வாறு முடிவெடுப்பது சரியாக இருக்காது.

    இப்போது போட்டிக் களத்தில் இருந்து அ.தி.மு.க. விலகி இருப்பதன் மூலம் பா.ஜ.க. மேலும் வளர வழிபிறக்கும். அதேநேரம் சமீபகாலமாக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு விவாதத்துக்குள்ளாகும்.

    தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கட்சிக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் தாக்கப்படுகிறது. கட்சிக்குள்ளும் ஒருங்கிணைப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.

    அதனால்தான் புறக்கணிப்பு முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பார் என்று கூறுகிறார்கள்.

    இதற்கிடையில் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும் கட்சியை ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

    இதை அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு சரியானது என்பது தொண்டர்களுக்கு புரியும். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல. தேவையில்லாமல் தொண்டர்களின் உழைப்பையும் பொருளையும் வீணடிக்க அவர் விரும்பவில்லை.

    அம்மா காலத்திலும் தேர்தல் புறக்கணிப்பு நடந்துள்ளது. 2009-ல் 5 தேர்தல்களை அவர் புறக்கணித்தார். எனவே இதனால் கட்சி பலவீனமாகி விடும் என்ற வாதம் சரியானதல்ல.

    சசிகலாவும் பேசி பேசி பார்க்கிறார். ஆனால் யாரும் அவர் பக்கம் போகவில்லை. எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் அ.தி.மு.க.வுக்கு தலைமை வகிப்பது எடப்பாடி பழனிசாமிதான் என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றார்.

    எழுத்தாளர் துரைகருணா கூறும்போது, ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்கள் இருந்தாலும் அதை எதிர்த்து நின்று ஆளும் கட்சிக்கு எதிராக இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் மூலம் வெளிப்படுத்தினால் தான் கட்சி வலுப்பெறும். மக்கள் நம்பிக்கையை பெறும் என்றார்.

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சமரசம் இந்த கருத்துக்களை மறுத்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பது சரியான முடிவுதான். அ.தி.மு.க.வின் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். இடைத்தேர்தல் அல்ல.

    திருமங்கலம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்கள் எப்படி நடந்தது என்பது தொண்டர்களுக்கு தெரியும். எனவே தேவையற்ற சிரமத்தை தொண்டர்களும் விரும்பமாட்டார்கள் என்றார்.

    மேலும் சில கட்சி நிர்வாகிகள் கூறும்போது, `ஒரு தொகுதி இடைத்தேர்தலை வைத்து கட்சி பலவீனமாகிவிடும் எனறு கணிக்க முடியாது. தொண்டர்களை பொறுத்தவரை கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை ஆதரிப்பார்கள்.

    முக்கியமாக தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வால்தான் முடியும் என்பது கட்சியினரையும் தாண்டி பொதுமக்களுக்கும் தெரியும். எனவே செல்வாக்கு எந்த வகையிலும் குறையாது' என்றனர்.

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. தெரிவித்தது.
    • தே.மு.தி.க. போட்டியிடுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா மற்றும் பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாகவும் தெரிவித்தது.

    இந்த நிலையில், அந்த தொகுதியில் தி.மு.க., பா.ம.க. மற்றும் நா.த.க. என மும்முனை போட்டி ஏற்பட்டது. மேலும், தே.மு.தி.க. போட்டியிடுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது."

    "இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள் இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது."

    "இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது."

    "ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

    • விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன்.
    • தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொடடி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

    நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பே ரவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்று வது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன்.

    வன்னியர்களுக்கு தமிழகத் தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ம் ஆண்டு நடந்த போது பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது.

    அப்போதும் கொலைப் பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தி யாகம் செய்தனர்.

    தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகு தியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பி னராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ம் நாள் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும்.

    இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தி.மு.க. அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் வன்னி யர்களுக்கான இட ஒதுக் கீட்டை வென்றெடுக்க விக்கி ரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
    • தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க.வோ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக் கணிப்பதாக அதிரடி அறி விப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக" தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. விலகி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. களத்தில் இல்லாத நிலையில் தி.மு.க.-பா.ம.க. இடையிலேயே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. வைத்துள்ள ரகசிய உடன்பாடு இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் இது மறைமுக ஆதரவு என்றும் அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கணிசமாக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் போட்டியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளதால் அது பா.ம.க.வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப் பதாகவே கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி போட்டியில் இருந்து விலகியுள்ள போதிலும் தி.மு.க. வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. நிச்சயம் உறுதியாக இருக்கும்.

    அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வினரின் செயல் பாடுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க., பா.ம.க. வேட்பா ளர்களோடு நாம் தமிழர் கட்சியின் அபிநயாவும் தனித்து போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ம.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் வழக்கம் போல கணிசமான ஓட்டுகளை வாங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 3 பேர் மட்டுமே களத்தில் நிற்பதால் நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் பிரிக்கும் ஓட்டுகளும் விக்கிரவாண்டி தொகுதி யில் முக்கியத்துவம் பெறும் என்றே எதிர்பார்க்கப்ப டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத ஓட்டுகளை வாங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்சி யாக மாறி இருக்கும் நாம் தமிழர் கட்சியும் விக்கிர வாண்டி தொகுதியில் உற்சாகமாக களம் இறங்கியுள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் அதிக வாக்குகளை நாங்கள் வாங்குவோம் என்று அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு, தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிக ஓட்டு கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெறுவோம் என்று தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் பெரிய வெற்றியை பெறுவதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. வேகம் காட்டி வருகிறது. அந்த கட்சி நிர்வாகிகளும் சுறுசுறுப்போடு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    பா.ம.க., நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    • இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
    • இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க கூடாது என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி வருமாறு:-

    ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதற்கான விழிப்புணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டின் 2-ம் பெரிய கட்சியான அ.தி.மு.க.வே தேர்தலை புறக்கணிக்கிறது என்பது எனக்கு ஏற்புடையது இல்லை. அவர்கள் போட்டியிட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்பது தமிழ்நாட்டில் இது முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். எனவே இது எனக்கு ஏற்க முடியாத ஒரு அறிவிப்பாக இருக்கிறது. இதை எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற பலரது விருப்பமாக இருக்கிறது.

    தி.மு.க. இருக்கும் இடத்தில் அ.தி.மு.க. அதை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் அது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய ஒரு அ.தி.மு.க.வாக இருக்கும். அவர்கள் ஒதுங்கிப்போவது என்பது கண்டிப்பாக பா.ஜ.க. தான் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி, நாங்கள் 3-வது இடத்துக்கு வந்து விட்டோம் என்று அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல் இருக்கிறது. என்னாலும், என்னைப்போல் இருப்பவர்களாலும் அதை ஜீரணிக்கவே முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.
    • அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான, அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார்.

    இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.

    இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    • நாளை மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
    • வெற்றி பெறுவதற்கான வியூகத்தை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க தி.மு.க. சுறுசுறுப்புடன் தயாராகி உள்ளது.

    தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. சார்பில் 10 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் 9 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஒவ்வொரு ஒன்றியத்தையும் தனித்தனியாக கவனிப்பதற்காக தேர்தல் பணிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தேர்தல் பணிக்குழுவினர் நாளை விக்கிரவாண்டியில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். அங்குள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நாளை மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் 9 அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை மேற்கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக பிரசாரங்களை மேற்கொள்வது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    • வருகிற 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.
    • பா.ஜனதா கட்சியின் ஆதரவை பா.ம.க. கோர முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள பா.ம.க. தனது கூட்டணியில் உள்ள பா.ஜனதாவின் ஆதரவை கோரி வருகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலி இடமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப் படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வருகிற 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.

    மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாள். இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

    கடந்த 2019-ல் அ.தி.மு.க. ஆட்சியின் போதும் விக்கிரவாண்டி தொகுதி யில் இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 ஓட்டுகள் பெற்று 44,924 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க. 68,842 ஓட்டு வாங்கி தோல்வி அடைந்தது. அடுத்து 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.

    இப்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பெற்ற ஓட்டுகளை விட அ.தி.மு.க. 6,823 ஓட்டுகள் மட்டுமே குறைவாக பெற்றிருந்தது.

    தொடர் தோல்வியாலும், பாராளுமன்ற தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு கீழே போனதாலும் அக்கட்சிக்கு விக்கிரவாண்டி சோதனை களமாக மாறி உள்ளது.

    சோர்ந்திருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்த இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில், அ.தி.மு.க. களம் இறங்க உள்ளது.

    இம்முறையும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்ச் செல்வன் போட்டியிடுவார் என தெரிகிறது.

    பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. அங்கு போட்டியிட முடிவு செய்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத நிலையில் 2026 சட்டசபை தேர்தல் வரை பா.ம.க. பா.ஜனதாவுடன் கூட்டணியில் நீடிக்கும் என தெரிகிறது.

    அதற்கு ஏற்ப பா.ம.க. அங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பா.ஜனதா கட்சியின் ஆதரவை பா.ம.க. கோர முடிவு செய்துள்ளது.

    இது குறித்து முடிவு செய்வதற்காக பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என தெரி கிறது.

    இதற்கிடையே பா.ம.க. விருப்பத்தை ஏற்று அக் கட்சிக்கு தொகுதியை விட்டுக்கொடுப்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைமை இன்று முடிவெடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனால் பா.ஜனதா தலைமை இன்று முடி வெடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பா.ஜனதா வின் ஆதரவை கேட்டு பா.ம.க. பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 8.14 சதவீத ஓட்டுகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து களம் காண உள்ளது.

    இதன் காரணமாக விக்கிரவாண்டியில் 4 முனை போட்டி ஏற்படுவது உறுதியாகி உள்ளது.

    ×