search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl Kidnap"

    கன்னியாகுமரியில் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை கடத்தி சென்ற உறவினரை கைது செய்த போலீசார் மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது.

    அந்த சொகுசு காரை இன்னொரு கார் துரத்தி வந்தது. சன்செட் பாயின்ட் அருகே வந்த போது துரத்தி வந்த கார், சொகுசு காரை முந்தி சென்று வழிமறித்தது. இதனால் தொடர்ந்து செல்ல முடியாத சொகுசு கார், வேறுவழியின்றி நின்றது.

    உடனே துரத்தி வந்த காரில் இருந்து திபுதிபுவென சிலர் இறங்கி ஓடி வந்தனர். அவர்கள் சொகுசு காரில் இருந்தவர்களை வெளியே வரும்படி அழைத்தனர்.

    சொகுசு காரில் இருந்தவர்கள் வெளியே வர மறுத்து காரின் கண்ணாடிகளை மூடிக்கொண்டு சத்தம் போட்டனர். உடனே கும்பல் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்து காரை திறந்தனர். அதில் இருந்தவர்களை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர்.

    சொகுசு காருக்குள் ஒரு இளம்பெண் இருந்தார். அந்த பெண்ணை துரத்தி வந்த காரில் இருந்தவர்கள் அலேக்காக தூக்கி அவர்களின் காரில் போட்டப்படி சிட்டாக பறந்து விட்டனர். சில நிமிடங்களில் இந்த சம்பவம் சினிமா போல் நடந்து முடிந்து விட்டது.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் சொகுசு காரில் இருந்த 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் காயம் அடைந்தவர்கள் மயிலாடி பெருமாள்புரத்தை சேர்ந்த ஸ்டார்லின்(வயது 24) மற்றும் அவரது உறவினர்கள் சுரேஷ் (43), அருள் (58) என தெரியவந்தது.

    இது பற்றி ஸ்டார்லின் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதில் காதல் தகராறு காரணமாக மயிலாடி பகுதியை சேர்ந்த ஜெயபால், பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்பட 8 பேர் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்விபரம் வருமாறு:-

    மயிலாடி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் டிக்சோனா (22). ஜெயபால், பெயிண்டிங் காண்டிராக்டர். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஸ்டார்லின் தொழிலாளியாக வேலை பார்த்தார். வேலை வி‌ஷயமாக ஜெயபால் வீட்டிற்கு ஸ்டார்லின் அடிக்கடி செல்வார். அப்போது டிக்சோனாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் இருவரும் காதலர்கள் ஆனார்கள். தொடர்ந்து பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனியாக சந்தித்து பேசினர்.

    காதலர்கள் தனியாக சந்தித்து பேசும் விவரம் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிக்சோனாவை அவரது தந்தையும் உறவினர்களும் கண்டித்ததோடு, ஸ்டார்லினிடம் பேசக்கூடாது எனவும் எச்சரித்தனர்.

    இதனால் மனம் உடைந்த காதலர்கள் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு மாயமானார்கள். மயிலாடியில் இருந்து குலசேகரம் பகுதிக்கு சென்ற அவர்கள் அங்கேயே மறைந்து இருந்தனர்.

    இதற்கிடையே காதலர்களின் பெற்றோர், அவர்களை பல இடங்களிலும் தேடினர். இந்த தகவல் காதலர்களுக்கு தெரியவந்தது. இனியும் மறைந்திருந்தால் சிக்கல் என்பதை அறிந்த காதலர்கள், நேற்று கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து பாதுகாப்பு கேட்க முடிவு செய்தனர்.

    இதற்காக இருவரும் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டு, அந்த தகவலை பெற்றோருக்கு தெரியப்படுத்தினர். இதை அறிந்ததும் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    டிக்சோனாவின் தந்தை ஜெயபால் மற்றும் அவரது உறவினர்கள், டிக்சோனா கன்னியாகுமரி போலீஸ் நிலையம் செல்லும் முன்பு அவரை பிடித்துவிட வேண்டும் என்று கன்னியாகுமரி செல்லும் சாலையில் காத்திருந்தனர்.

    அவர்கள் எதிர்ப்பார்த்தபடி டிக்சோனாவும், அவரது காதலன் ஸ்டார்லினும் ஒரு காரில் கன்னியாகுமரிக்கு வருவதை கண்டனர். அவர்களை துரத்தி சென்று கோவளம் பகுதியில் மடக்கி பிடித்து டிக்சோனாவை மட்டும் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்.

    போலீஸ் விசாரணையில் தெரியவந்த இத்தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், காதல் தகராறில் வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை கடத்தி சென்றதாக டிக்சோனாவின் தந்தை ஜெயபால்,அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்பட 8 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 147, 148, 341, 294(பி), 323, 324, 506(2) உள்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்களில் துரைராஜ் கைது செய்யப்பட்டார். மற்ற 7 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண் டிக்சோனாவையும் போலீசார் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். #tamilnews
    ×