search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகம்"

    • பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது.
    • பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    கோவை:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் இன்று மெட்ரிகுலேஷன் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடங்களில் படிப்பவர்கள் 3 மொழி படிக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?.

    பணம் இருப்பவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பணம் இல்லாத ஏழை, எளிய மக்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கான மொழியை கற்கக்கூடிய வாய்ப்பை ஏன் இவர்கள் மறுக்கிறார்கள். 3 மொழி வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. அனைவரும் மும்மொழி கொள்கையை வரவேற்கின்றனர்.

    பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது. கூட்டணியில் இருப்பதால் இதை மட்டுமே கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவதற்காக மட்டுமே.

    கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டுக்காக, பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடுமையான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் கொண்டு வந்திருப்பது நரேந்திர மோடி தான்.

    நரேந்திர மோடி எடுத்திருக்கும் திட்டங்களால் பெண்களின் வளர்ச்சி ஒருபடி மேலே தான் சென்று இருக்கிறது. குறிப்பாக பாதுகாப்பு துறையில் பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் மகளிருக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும், முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், நரேந்திர மோடி செய்து கொண்டு இருக்கிறார்.

    ஆனால தமிழ்நாட்டில் தாய்மார்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை, பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கு இருக்கிறது. ரெயிலில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தமிழகம் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
    • தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.

    சென்னை:

    2022-23-ம் ஆண்டு சட்டமன்றத்தில் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 100 மரகதப் பூஞ்சோலைகள் (கிராம பசுமைக் காடுகள்) உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களை சார்ந்து இருப்பதை குறைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.இந்த பூஞ்சோலைகள் உள்ளூர் மக்களுக்கு தேவையான இயற்கை வளங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் இதன் மூலம் காடுகளின் மீதான உயிரின தாக்கமும் குறைகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.25 கோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி நிர்வாக ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கியது.

    ஒவ்வொரு மரகத பூஞ்சோலையும், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 639 சதுர அடி பரப்பில் உருவாக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் நுழைவுவாயில், நிரந்தர பார்வையாளர் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேஜைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

    இந்த பூஞ்சோலைக்குள் தடிமரம், எரிபொருள், தீவனம், காய்-கனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, செஞ்சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை நடவு செய்யப்பட்டு வருகின்றன.

    முதல்கட்டமாக மாநில அரசினால் 83 மரகத பூஞ்சோலைகள் அமைக்க 2 கட்டமாக ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இதுவரை 29 மாவட்டங்களில் 75 பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

    தற்போது மேலும் 5 மாவட்டங்களில் ரூ.4 கோடியே 25 லட்சம் செலவில் திண்டுக்கலில் 5 பூஞ்சோலைகள், பெரம்பலூரில் 4 பூஞ்சோலைகள், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா 3 பூஞ்சோலைகள், திருவண்ணாமலையில் 2 பூஞ்சோலைகள் என மொத்தம் 17 பூஞ்சோலைகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.

    • நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன.
    • தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன.

    சென்னை:

    'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பது சட்டத்தின் கோட்பாடு ஆகும். மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தின் 3-வது தூணாக விளங்கும் நீதி தேவதையின் கதவை தட்டுகிறார்கள்.

    அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடுக்கும் வழக்குகளை விசாரித்து, நீதியை நிலைநாட்டும் மகத்தான பணியை கோர்ட்டுகள் செய்துவருகின்றன.

    இதற்கிடையே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' வழக்குகள், பாலியல் குற்றங்கள், நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வரும் முக்கிய வழக்குகளை விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் 'போக்சோ' கோர்ட்டுகள் உள்பட சிறப்பு விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    நிலுவையில் உள்ள ஒவ்வொரு 65 முதல் 165 வழக்குகளுக்கும் ஒரு சிறப்பு விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் குறைவாக இருப்பதாக கூறி, அருணாசலபிரதேசம் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மேலும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்க இசைவு தெரிவித்திருந்தாலும், இன்னும் செயல்படுத்தவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் கோர்ட்டுகள் உள்பட 747 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கோர்ட்டுகளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 633 போக்சோ வழக்குகள் உள்பட 2 லட்சத்து 99 ஆயிரத்து 624 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக போக்சோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதில் 42 ஆயிரத்து 404 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன. இந்த கோர்ட்டுகள் மூலமாக 8 ஆயிரத்து 898 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வரும் போக்சோ கோர்ட்டில் 122 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.

    மத்திய அரசு 2019-20 முதல் 2024-25 நிதியாண்டு வரை (கடந்த மாதம் 3-ந்தேதி வரையிலான நிலவரப்படி) சிறப்பு விரைவு கோர்ட்டுகள் திட்டத்துக்காக மாநிலங்களுக்கு ரூ.1,008 கோடி விடுவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.281 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ.105 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.84 கோடி கொடுத்துள்ளது. தமிழகத்துக்கு ரூ.25 கோடியே 46 லட்சமும், புதுச்சேரிக்கு ரூ.55 லட்சமும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
    • மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    தமிழக காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளது. நாங்கள் மக்கள் பிரச்சனைக்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

    கவர்னர் நிகழ்ச்சி நடக்கும் போது தேசிய கீதம் பாட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள மரபு. இதை செய்யத்தவறிய அப்பாவு போன்றோர் கண்டனத்திற்குரியவர்கள். கவர்னர் நிகழ்ச்சியில் தேசியத்தையும், தேசத்தையும் அவமானப்படுத்துவதுபோல் நடந்துள்ளனர். மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். தேசியம் வருவதை எதிர்ப்பதால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கிறேன்.

    திமுக அரசு மிக மோசமாக செயல்படுகிறது. இதற்கு காவல்துறை, துணைபோகாமல் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். திமுக அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடன் வாங்கியது தவிர வேறு ஏதும் செய்யவில்லை. தமிழக அரசின் மொத்த கடன் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் கோடி உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் தமிழக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்த அரசை தூக்கி எறியாமல் தமிழகத்திற்கு விடிவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.
    • இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தற்போது பனி கொட்டி தீர்த்து வருகிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் பனி கொட்ட தொடங்கி விடுகிறது. பின்னர் இது நள்ளிரவு நேரங்களில் மழை போல கொட்டி தீர்க்கிறது. காலையில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    கோவை மாநகர போக்குவரத்து சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு மூடுபனியின் தாக்கம் உள்ளது. இதன்காரணமாக ரோட்டில் செல்லும் வாகனங்கள் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்று வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடந்து அங்கு தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் கொட்டி தீர்த்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்களில் உறைபனி கொட்டி வருவதால், அங்கு பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும் மலர்கள் தற்போது கருக தொடங்கி உள்ளன.

    மேலும் பூங்காக்களின் புல்வெளி பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தது போல உறைபனி படிந்து காணப்படுகிறது. இதனால் பூங்கா புல்வெளியில் படிந்து கிடக்கும் உறைபனியில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஒருசில பயணிகள் வெம்மை ஆடைகளுடன் பூங்காக்களுக்கு வந்திருந்து அங்குள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்து செல்கின்றனர்.

    நீலகிரியில் கொட்டி தீர்க்கும் உறைபனியால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவிகள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

    மேலும்இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.கோவை, நீலகிரி மாவட்டங்களில் பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் வியாபார கடைகளில் கம்பளி, போர்வைகள் உள்ளிட்ட குளிர்கால ஆடை கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதேபோல சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    • அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 683.62 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது.
    • காடும், மரங்களும் சேர்ந்துதான் பசுமைப் போர்வையை கட்டமைக்கிறது.

    சென்னை:

    2023-ம் ஆண்டுக்கான இந்திய மாநில வன ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 683.62 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது.

    இந்த பட்டியலில் தமிழ்நாடு கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் 30 சதுர கி.மீ. வனப் பரப்பை அதிகமாக கொண்டிருப்பது பட்டியலில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் ஒட்டுமொத்த பரப்பான 1,30,060 சதுர கி.மீட்டரில், 26,419 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்கள் பரப்பை கொண்டிருந்தது.

    அதுவே 2023-ம் ஆண்டில் 1,30,060 சதுர கி.மீட்டரில், 26,450.22 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்கள் பரப்பை கொண்டிருக்கிறது. அதில் 3,586.19 சதுர கி.மீ. அடர் வனப்பகுதி, 11,027.03 மிதமான வனப் பகுதி, 11,837 சதுர கி.மீ. திறந்த வனப்பகுதி வருகிறது. இவை அனைத்தும் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் இது 20.34 சதவீதம் ஆகும். கடந்த ஆய்வு அறிக்கையுடன் தற்போதைய ஆய்வை ஒப்பிட்டு பார்க்கையில், 30.99 சதுர கி.மீ. வனப்பரப்பு தமிழ்நாட்டில் அதிகரித்து இருப்பது தெரியவருகிறது.

    ஒட்டுமொத்த வனப்பரப்பு அதிகரித்து இருந்தாலும், பசுமைப் போர்வையை கணக்கிடும் போது தமிழ்நாட்டில் குறுகி வருவது ஆய்வில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காடும், மரங்களும் சேர்ந்துதான் பசுமைப் போர்வையை கட்டமைக்கிறது. அந்தவகையில் பசுமைப் போர்வை என்பது 13.97 சதுர கி.மீ. அளவுக்கு கடந்த 2021-ம் ஆண்டைய ஆய்வு அறிக்கை புள்ளி விவரங்களைவிட குறைந்து காணப்படுகிறது.

    • தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கூறியது.
    • மத்திய அரசு மாற்றங்கள் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.

    சென்னை:

    நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு பாகுபாடின்றி தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு சமக்ரா சிக்ஷா என்ற அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 8 வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதம் ஆகும். மாநில அரசு பங்களிப்பு 40 சதவீதம் ஆகும்.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.2,120.25 கோடி விடுவிக்க வேண்டும். ஆனால் அதில் ரூ.1,871.96 கோடி மட்டுமே விடுவித்தது. ரூ.248.29 கோடியை வழங்காமல் நிறுத்தி விட்டது. அதற்கு காரணம், தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையவில்லை என்று கூறியது.

    மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தினால், அது மத்திய அரசின் தேசிய கொள்கையை ஏற்று கொண்டது போல் ஆகிவிடும். மேலும் தமிழக அரசின் கொள்கையான 2 மொழி கொள்கைக்கு பதில் 3 மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டிய நிலை வந்துவிடும் என்றுகூறி எதிர்ப்பு தெரிவித்தது.

    எனவே தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கூறியது. ஆனால் அதனை மத்திய அரசு எற்று கொள்ளவில்லை. எனவே மத்திய அரசு, 2023-24-ம் ஆண்டில் விடுவிக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ரூ.248.29 கோடியை விடுவிக்கவில்லை. அதுமட்டுமின்றி 2024-25-ம் ஆண்டுக்கான ரூ.2,151.59 கோடியை வழங்காமல் உள்ளது. ஆக மொத்த மத்திய அரசு ரூ.2,399.88 கோடி நிதி ஒதுக்க வேண்டி உள்ளது.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசு, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை விடுவிக்க முடியும் என்று கூறியது.

    இந்த நிலையில் பாராளுமன்றத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்கம் நிதி குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு 2024-25 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பிஎம்ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமது உறுதிமொழியை கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அளித்தது. அதன்பின், பள்ளி கல்வி மற்றும் எழுத்துத்திறன் துறை, தமிழக அரசுக்கு ஒரு ஒப்பந்த வரைவு அனுப்பியது. ஆனால் கடந்த ஜூலை 6-ந்தேதி தமிழக அரசு ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை அனுப்பியது. அதில் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ முழுமையாக செயல்படுத்துவது தொடர்பான முக்கியமான பத்தி நீக்கப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மாற்றங்கள் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதாவது தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது தெரியவருகிறது.

    • கலைஞர் முதலமைச்சர் ஆனவுடன் தண்டபாணி தேசிகருக்கு டாக்டர் பட்டம் அளித்தார்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று நடந்த வெள்ளி ரத தேர் வெள்ளோட்டத்தில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. ஆதீனங்களில் பொற்கால அருள் ஆட்சி நடத்தும் தருமபுரம் ஆதீனத்திற்கு நான் அடிமை. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு வந்துள்ளேன். அமைச்சர் பெயர் சேகர்பாபு, என்னுடைய பழைய பெயர் பகவதிபாபு.

    ஆதீனங்களை ஒன்று கூட்டிய பெருமை அமைச்சருக்குத்தான் சேரும். சிறப்பான முறையில் கோவில்களுக்கு அமைச்சர் திருப்பணிகள் செய்து வருகிறார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னதை சேகர்பாபு செய்து காட்டியுள்ளார். நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆட்சி வளர வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும்.

    எனக்கும், அவருக்கும் சண்டை மூட்டி விட்டுள்ளனர். தருமபுரம் ஆதீனத்தில் தேவாரம் சொல்லித்தரப்படுகிறது. ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் கலைஞரின் ஆசி பெற்றவர். கலைஞர் முதலமைச்சர் ஆனவுடன் தண்டபாணி தேசிகருக்கு டாக்டர் பட்டம் அளித்தார்.

    இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான். சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம். தருமபுர ஆதீனம், அமைச்சர் சேகர்பாபு உடன் நெருங்கி பேசியதற்கு என்னை தி.மு.க.காரன் என்று முத்திரை குத்துகின்றனர். எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவன் நான். நல்ல காரியம் யார் செய்தாலும் பாராட்டுவேன். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல்வேறு மாவட்டங்களில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்ட பெரியசாமியை போலீசார் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இடையகோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போவது வழக்கமாக இருந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் மேற்பார்வையில் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்மைதீன் தலைமையில் போலீசார் வேளாங்கண்ணி, கார்த்திக்ராஜன், ஜோசப்மோரிஸ்ராஜ், காங்குமணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார், திருட்டு நடந்த வீடுகளின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் திருட்டு நடந்த வீடுகளுக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டு வருவது போல காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சியில் உள்ள உருவத்தைக்கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் சாலையில் ரெட்டியார்சத்திரத்தை அடுத்து தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு மோட்டர் சைக்கிளில் போலீசாரை பார்த்தும் ஒரு வாலிபர் நிற்காமல் வேகமாக சென்றார். உடனே போலீசார் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று வாலிபரை மடக்கிப் பிடித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பெரியசாமி என்ற பொட்டுக்கடலை (வயது 25) என்பது தெரிந்தது.

    பிடிபட்ட பெரியசாமியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியபோது ரெட்டியார்சத்திரம் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு பணம், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    மேலும் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த 4 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய முகமூடி, கையுறை, அரிவாள், கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் மீது திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட பெரியசாமியை போலீசார் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உத்தரபிரதேசத்துக்கு 94 லட்சத்து 50 ஆயிரத்து 268 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது.
    • உணவு தானியம் அதிகம் பெற்ற பட்டியலில் பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    சென்னை:

    கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த கடந்த 2020-ம் ஆண்டின்போது மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு, 'பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா' என்ற உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை உள்பட உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கடந்த 2023-24-ம் ஆண்டில் இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 4 கோடியே 95 லட்சத்து 45 ஆயிரத்து 597 மில்லியன் டன் உணவு தானியம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    இதில், நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 94 லட்சத்து 50 ஆயிரத்து 268 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. உணவு தானியம் அதிகம் பெற்ற பட்டியலில் பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்த காலக்கட்டத்தில் 23 லட்சத்து 36 ஆயிரத்து 649 மில்லியன் டன் உணவு தானியம் பெற்றுள்ளது.

    மேற்கண்ட தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது.

    சென்னை:

    ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியம் ஆகும். பாஸ்போர்ட் இல்லாமல் செல்பவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுகிறார்கள். வேலை, படிப்பு மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியர்கள் நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு பறந்து வருகிறார்கள்.

    இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் 3 கோடியே 8 லட்சத்து 93 ஆயிரத்து 577 பெண்கள், 5 கோடியே 73 லட்சத்து 77 ஆயிரத்து 716 ஆண்கள் என மொத்தம் 8 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 293 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 42 லட்சத்து 17 ஆயிரத்து 661 பெண்கள், 56 லட்சத்து 75 ஆயிரத்து 179 ஆண்கள் என 98 லட்சத்து 92 ஆயிரத்து 840 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 40 லட்சத்து 75 ஆயிரத்து 512 பெண்கள், 57 லட்சத்து 35 ஆயிரத்து 854 ஆண்கள் என 98 லட்சத்து 11 ஆயிரத்து 366 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 89 பெண்கள், 70 லட்சத்து 58 ஆயிரத்து 703 ஆண்கள் என 87 லட்சத்து 85 ஆயிரத்து 792 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 28 லட்சத்து 7 ஆயிரத்து 509 பெண்கள், 55 லட்சத்து 47 ஆயிரத்து 383 ஆண்கள் என 83 லட்சத்து 54 ஆயிரத்து 892 பேர் பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார்கள்.

    • சிறந்த போக்குவரத்து அமைப்பு, வேலைவாய்ப்பு பரிமாற்ற செயல்பாடுகள் இவற்றை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
    • தொழில் முனைவோரின் கருத்துக்களின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    எளிதாக தொழில் தொடங்கும் தரவரிசையில் கேரளா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

    தொழில் துறைக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ள மாநிலத்தை தர வரிசைப்படுத்தும் பட்டியலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    வணிகத்தை மையமாக கொண்ட 2 வகை சீர்திருத்தங்கள் மற்றும் ஏழு வகை குடிமக்களை மையப்படுத்திய சீர்திருத்தங்களில் இந்தியாவிலேயே கேரளா முன்னணியில் உள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை.

    பரந்த அளவிலான தொழில்கள் செழிக்க ஏதுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் வாயிலாக வியாபாரத்தை எளிதாக்குவதில் கேரளா பெரும் முன்னேற்றமும் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான விருதை மத்திய மந்திரி பியூஸ்கோயலிடம் இருந்து கேரள தொழில் துறை மந்திரி ராஜீவ் பெற்றுள்ளார்.

    இந்த விருதில் ஆந்திரா 2-வது இடத்தையும், குஜராத் 3-வது இடம், ராஜஸ்தான் 4-வது இடம், 5-வது இடத்தில் திரிபுரா, 6-வது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது.

    தொழில் துறை மற்றும் குடிமக்கள் சேவை சீர்திருத்தங்கள், பயன்பாட்டு அனுமதி வழங்குதல், வரி செலுத்தும் சீர்திருத்தங்கள், ஆன்லைன் ஒற்றை சாரள முறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் சான்றிதழ் வினியோகம் செயல்முறையை எளிமைப்படுத்துதல், வருவாய்த் துறை வாரியாக வழங்கப்படும் சான்றிதழ்கள், சிறந்த பொது வினியோக அமைப்பு, உணவு வழங்கல் துறையின் செயல்பாடு, சிறந்த போக்குவரத்து அமைப்பு, வேலைவாய்ப்பு பரிமாற்ற செயல்பாடுகள் இவற்றை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    தொழில் முனைவோரின் கருத்துக்களின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×