கிரிக்கெட்

இறுதிப் போட்டி நடைபெறும் பார்படாஸ் ஆடுகளம் குட் பவுன்ஸ் உடன் வேகத்துக்கு ஒத்துழைக்குமாம்...

Published On 2024-06-29 11:12 GMT   |   Update On 2024-06-29 11:12 GMT
  • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பும்ரா, அர்ஷ்தீப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
  • தென்ஆப்பிரிக்கா பார்படாஸ் மைதானத்தில் தற்போதுதான் விளையாட இருக்கிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் பிரிட்ஜ் டவுண் கென்சிங்ஸ்டன் ஓவலில் நடைபெற இருக்கிறது.

இந்த மைதானத்தில் இதுவரை எட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஓமன்- நமீபியா இடையிலான போட்டி டையில் முடிந்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. ஸ்காட்லாந்து- இங்கிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

மற்ற ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், மற்ற 3 போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன.

பொதுவாக இந்த மைதானத்தின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்துள்ளன. கடைசியாக இங்கிலாந்து- அமெரிக்கா இடையிலான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினர். என்றாலும் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

அமெரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினர். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர் சேஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வேகப்பநது வீச்சாளர்கள் 4 விக்கெட் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்திய அணியில் பும்ரா அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். குல்தீப் யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

இன்று 4-வது ஆடுகளத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஆடுகளம் குட் பவுன்ஸ் உடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்கா நோர்ஜே, ரபடா, யான்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஷம்சி, மகாராஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. தேவை என்றால் கேப்டன் மார்கிராம் பந்து வீசுவார்.

தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் முதலிலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முனைப்பு காட்டுவார்கள்.

அதேவேளையில் இந்தியா அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா அவர்களுக்க துணையாக பந்து வீசுவார்கள். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் துருப்புச் சீட்டாக இருப்பார். அவருடன் அக்சர் பட்டேல், ஜடேஜா உள்ளனர்.

இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் அணி ஆதிக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா இந்த தொடரில் இதுவரை விளையாடியவில்லை. முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியுள்ளது.

Tags:    

Similar News