கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை: ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

Published On 2024-07-21 02:09 GMT   |   Update On 2024-07-21 02:09 GMT
  • வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
  • இலங்கையின் பிரபோதானி, பிரியதர்ஷினி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

வங்காளதேசம் அணியின் துவக்க வீராங்கனை திலாரா அக்தர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீராங்கனை இஷ்மா, இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருபாயா ஹைடர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா பொறுமையாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவரும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டமே சேர்த்தது.

 


இலங்கை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பிரபோதானி மற்றும் பிரியதர்ஷினி தலா 2 விக்கெட்டுகளையும் சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹாரி மற்றும் சமாரி அட்டப்பட்டு தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

112 எனும் எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீராங்கனையான விஷ்மி குனரத்ன 51 ரன்களை குவித்தார்.

இவருடன் களமிறங்கிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு 12 ரன்களையும் அடுத்து வந்த கவிஷா தில்ஹாரி 12 ரன்களையும் சேர்த்தனர். ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களை குவிக்க, இலங்கை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்களை குவித்தது. இதன் மூலம் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News