- கௌதம புத்தரின் கருத்துகள் பலவும் உபநிடதங்களில் சொல்லப்பட்டவையே.
- அதனால் ஆதிசங்கரர் உபதேசித்தவற்றில் பல அம்சங்களில் கௌதம புத்தரின் கருத்துக்களின் சாயல் இருந்தன.
வேதாந்த தத்துவ விளக்கங்கள் எல்லாம் மெத்தப் படித்த பண்டிதர்களுக்குத் தான் விளங்கும் என்ற அபிப்பிராயம் பல ஆன்மிகவாதிகளுக்கு இருக்கிறது.
ஆனால் அந்த தத்துவங்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளும் போது தான் ஆன்மிகம் அறிவார்ந்ததாக அமைகிறது.
அவை புரியாத வரை ஆன்மிகம் கண்மூடித்தனமான பின்பற்றுதலாகவே மாறி விடுகிறது என்பதே உண்மை.
நம் பாரத நாட்டைப் பொருத்த வரை மற்ற பல நாடுகள் உருவாகும் முன்பே நம் முன்னோர்களின் ஆன்மிக அறிவு சிகரங்களை எட்டி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
அந்தந்த காலத்தின் தேவைக்கு ஏற்ப உயர்ந்த ஆன்மிக தத்துவ சிந்தனைகள் பெரியோர்களால் சிந்திக்கப்பட்டும் உபதேசிக்கப்பட்டும் வந்திருக்கின்றன.
அப்படிப்பட்ட மிக முக்கிய வேதாந்த தத்துவங்களையும், அவற்றை உபதேசித்த மகான்களையும், உபதேசிக்கப்பட்ட காலத்தின் தன்மையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அப்படிப் பார்த்தால் மட்டுமே அந்த தத்துவங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். முதலில் ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதம் பார்ப்போம்.
அத்வைதம் என்றால் சம்ஸ்கிருதத்தில் இரண்டு என்று பொருள். அத்வைதம் என்றால் அ+த்வைதம், அதாவது இரண்டில்லாதது என்று பொருள்.
அத்வைதம் நம் உபநிடதங்களின் ஞான சாராம்சம் என்று சொல்லலாம்.
அந்த சாராம்சத்தை மறந்து விட்டு ஒரு கால கட்டத்தில் பாரத மக்கள் உலக வாழ்க்கை சுகங்களுக்காகவும், செல்வங்களிற்காகவும் வேண்டி சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.
அவற்றை மறுத்து கௌதம புத்தர் உபதேசித்த கருத்துகள் பிரபலமாகி பாரதத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் பின்பற்றப்பட ஆரம்பித்தன.
அப்படிப்பட்ட காலத்தில், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வேதாந்தக் கொள்கையை நிலை நாட்ட வந்தவர் ஆதிசங்கரர்.
கௌதம புத்தரின் கருத்துகள் பலவும் உபநிடதங்களில் சொல்லப்பட்டவையே.
அதனால் ஆதிசங்கரர் உபதேசித்தவற்றில் பல அம்சங்களில் கௌதம புத்தரின் கருத்துக்களின் சாயல் இருந்தன.
அதனால் அவரை "கௌதம புத்தரின் இன்னொரு நகல்" என்று வைதீகர்கள் கடுமையாக விமரிசித்தனர்.
ஆனால் கண்மூடித்தனமான சடங்குகள், சம்பிரதாயங்களை கௌதம புத்தரைப் போலவே ஆதிசங்கரரும் எதிர்த்தாரே ஒழிய மற்றபடி கௌதம புத்தரைப் போல அல்லாமல் கடவுள் ஒன்றே என்ற வேதாந்தப் பேருண்மையைப் போதித்து இந்திய ஞான மார்க்கத்தை மீட்டு நெறிப்படுத்தியவர் ஆதிசங்கரர்.
இனி அவர் உபதேசித்த அத்வைத சாராம்சத்தைப் பார்ப்போம்.