ஆன்மிக களஞ்சியம்

சிற்றின்பங்களை துறந்து பேரின்பத்தில் மூழ்குங்கள்!

Published On 2024-09-12 11:56 GMT   |   Update On 2024-09-12 11:56 GMT
  • செல்வர்களாய் இருப்பவர்களிடம் பணிவு வேண்டும்.
  • செடிகளில் பழங்கள் அதிகமானால் அவை வளைந்து கொடுக்கின்றன. அதுபோலத்தான் வாழ வேண்டும்.

செல்வர்களாய் இருப்பவர்களிடம் பணிவு வேண்டும். செடிகளில் பழங்கள் அதிகமானால் அவை வளைந்து கொடுக்கின்றன.

அதுபோலத்தான் வாழ வேண்டும்.

தாழ்மையாய் இருக்க வேண்டும் என்று நான் சொல்வதால் அனைவரிடமும் பணிவாய் இருக்க வேண்டும் என்று பொருள் அன்று. கொடியவர்களிடம் கடுமையாகத்தான் இருக்க வேண்டும்.

அறவழிகளில் பொருளைச் செலவு செய்ய வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாய் பொருளை தானம் செய்து ஆண்டியாகி விடக் கூடாது. வாழ்க்கைக்கு ஓரளவு செல்வம் அவசியமே. அதன் பொருட்டு கஞ்சனாகவும் இருக்கக்கூடாது.

சிறியதை பெரிது செய்யாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அதற்காக அதிலேயே மூழ்கி கடவுளை மறந்து விடக்கூடாது.

மனம் கட்டுக்கு அடங்காது. அதை அடக்க முயல வேண்டும். மனிதனது நிம்மதி என்பது அதில் தான் இருக்கிறது.

ஈயானது எல்லா பொருட்கள் மீதும் உட்காருகிறது. ஆனால் தீயை அணுகும் போது பறந்து விடுகிறது.

அது போலத்தான் மனமானது சிற்றின்பங்களில் மயங்கி பேரின்பமான கடவுளை நெருங்கும் போது வேறு புறம் போய்விடுகிறது.

பிறவிகளில் மானுடப் பிறவியே மிக மிக உயர்ந்தது. அந்த பிறவி தான் தன்னை படைத்தவனை நினைத்து ஆராதித்து ஆனந்தம் அடைகிறது.

வழிபாடுகளுள் உருவ வழிபாடு மிகவும் உயர்ந்தது. அந்த உருவத்தை மனத்தில் எண்ணி வழிபடும் போது மனம் ஒரு நிலையை அடைவது எளிதாகிறது.

கடவுளின் திருவிளையாடல்களை எண்ணினாலும், தியானம் செய்வதாலும், புராணங்களை பாராயணம் செய்வதாலும் கடவுளை நெருங்குவதற்கு மேலும் வழி பிறக்கிறது.

சித்தர்களையும் சாதுக்களையும் வழிபடுவதும் நன்மையே பயக்கும். வாழ்வில் ஆசைகளை குறைத்துக்கொண்டே வந்தால் நிம்மதி பெருகிக்கொண்டே போகும்.

ஹரி யார் என்று அறியாதவர்கள் பண்டரிபுரத்திற்கு யாத்திரை சென்று பலன் என்ன? இப்படி யாத்திரை போகிறவர்கள் பலர் உண்மையான பக்தியால் போவதில்லை.

பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவே போகிறார்கள்.

ஆத்மாவை தூய்மையாய் வைத்திருப்பவன் என்றும் நிம்மதியாய் வாழ்கிறான்.

Similar News