ஆன்மிகம்

இயேசு சொன்ன உவமைகள்: இரண்டு விதமான பிரார்த்தனைகள்

Published On 2018-12-22 04:33 GMT   |   Update On 2018-12-22 04:33 GMT
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்.
லூக்கா 18: 9 முதல் 14 வரை

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.” இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

இயேசு இந்த உவமை எதற்கானது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறார். “தாங்கள் நேர்மையானவர்கள் என நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும்” சிலரைப் பார்த்தே இயேசு இதைச் சொல்கிறார்.

இங்கே ஆலயத்துக்குச் செல்பவர்கள் இருவர். ஒருவர் பரிசேயர். பரிசேயர்கள் கடவுளின் சட்டத்தை அறிந்தவர்கள். அதைத் தவறாமல் பின்பற்றுகிறோம் எனும் மமதை உடையவர்கள். தாங்கள் இறைவனின் சொந்த பிள்ளைகள் எனும் கர்வம் உடையவர்கள். மத ரீதியான செயல்களைச் செய்தால் போதும் நிலை வாழ்வு நிச்சயம் என கருதிக் கொண்டவர்கள். தங்களுடைய செயல்களுக்கான பலனைத் தரும் கடமை இறைவனுக்கு உண்டு என இறைவனை வியாபாரியாக்குபவர்கள்.

இரண்டாமவர் வரிதண்டுபவர் அல்லது ஆயக்காரர். அவர் பாவி என மக்களால் இகழப்பட்டவர்கள். அவர்கள் ரோம அரசுக்காக தன் இன மக்களிடமே வரி வசூலிக்கும் சூழலில் தள்ளப்பட்டவர்கள். அவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சமூகத்தில் இழி நிலையில் உள்ளவர்களாகவும் கருதப்பட்டவர்கள்.

பரிசேயர்கள் சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்கள். அவர் மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்கள் ஆன்மீகத்தில் பெரியவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றெல்லாம் மக்கள் கருதிக் கொண்டிருந்தவர்கள்.

வரிதண்டுபவரோ சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர். புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பவர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர். பாவி என மக்களால் நம்பப்பட்டவர்.
Tags:    

Similar News