ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கொடி மரத்துக்கு தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-04-01 05:59 GMT   |   Update On 2017-04-01 05:59 GMT
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி நெல்லையப்பர் சன்னதியில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 6.30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான வருகிற 3-ந் தேதி காலை 11 மணிக்கு வேணுவனத்தில் நெல்லையப்பர் தோன்றிய புராண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்று இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்திலும், விநாயகர் மூஞ்சிறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 9-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் விழா நடக்கிறது.

ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Similar News