ஆன்மிகம்

‘வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி

Published On 2018-12-17 09:17 GMT   |   Update On 2018-12-17 09:17 GMT
கலியுகத்தில் பக்தி மார்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயநலமின்றி தர்ம, புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும் என்று அருளினார்.
மாதங்களில் நான் மார்கழி என்பது கிருஷ்ணரின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில் தான்.

கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் அவன் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார்.

அதன்படி போர்க்களத்தி லிருந்து விலகி, பத்ரிகா ஆசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்து கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான். அப்போது மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், ‘பெண்ணே, உன்னை கொல்ல ஓர் அம்பே போதும்‘ என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்த பெண், ஹூம் என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப்போனான்.

அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண் விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டினார். ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் என்று அருளினார். மார்கழி மாத தேய் பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும். மார்கழி மாதம் வளர் பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்

கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடுவதைக் கண்ட பெருமாள் காவலர்களிடம்‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டதால், மக்கள் மனதில் தர்ம சிந்தனை குறைந்து அதர்மம் தலைதூக்கும். பாவங்கள் பலவிதங்களில் பெருகும் சூழலில் மானிடர்கள் யாரும் வைகுண்டத்திற்கு வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.

அதற்கு பெருமாள், “கலியுகத்தில் பக்தி மார்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயநலமின்றி தர்ம, புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். ஏகாதசி விரதத்தை யார் ஒருவர் சிந்தனையில் பெருமானையும், மனதில் பக்தியையும் நிறுத்தி கடைப்பிடித்து பரமபத வாசலை கடக்கிறார்களோ அவர்களுக்கு வைகுண்ட வாசத்தில் கொடுத்தருளுவார் அரங்கன்.
Tags:    

Similar News